ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 29 மார்ச், 2023

ஆழ்மனக் கடலின் தோணியின் துணைக் கொண்டு..


 அத்தனை சலசலப்புகளும்

ஆளுக்கொரு பக்கம் இழுக்க

நான் எவ்வித சலனமும் 

இல்லாமல்

எதன் பக்கமும் நகராமல் 

இருக்கிறேன்...

எனது ஆழ்மன கடலில்

பயணிக்கும்

தோணியை

துணைக் கொண்டு..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 28 மார்ச், 2023

பிரபஞ்சத்தின் ஆறுதல்..

 

ஆயிரம் விசயங்கள்

என்னோடு பயணிக்கிறது...

ஆயிரம் விசயங்கள்

எனக்கு புன்னகையோடு

விடை கொடுக்கிறது...

என்னோடு 

பயணிக்கும் விசயத்தில் 

நான் ஒட்டாமல் 

கொஞ்சம் தள்ளியே 

பயணிக்கிறேன்....

விடை பெறும் விசயங்களுக்கு கூட

மிகவும் நிதானமாக ஒரு கபடமற்ற 

புன்னகையோடே

கையசைத்து விடை கொடுக்கிறேன்...

காலம் கொஞ்சம் எனை 

சீண்டி பார்க்கிறது..

நீயென்ன அவ்வளவு

பெரிய ஞானியா என்று

சற்றே கோபத்துடனே...

அதன் கோபத்தை கூட

ஒரு புன்னகையோடு 

கடக்கிறேன் 

ஒரு தலையசைப்போடே...

இங்கே எதை பற்றியும் 

கவலைப்படாமல் பயணிப்பது 

ஒரு குற்றமா என்று 

என்னை இயக்கும்

பிரபஞ்சத்திடம் மெதுவாக

கிசுகிசுத்து கேள்வி கேட்கிறேன்...

இல்லை என்று பேரன்போடு 

அது தந்த பதிலில்

நான் கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்...

இல்லை இல்லை

இளைப்பாறிக் கொள்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவின் ரகசியம்

 

இரவின் ரகசியத்தில்

என் ரகசியம் எங்கே

என்று கொஞ்சம் நிதானமாக

தேடியலைகிறேன்...

மெலிதான வெளிச்சம்

என்னை நினைத்து

கவலைக் கொள்கிறது...

எந்த ரகசியமும் வெளிப்பட்டவுடன்

சுவாரஸ்யமாக இருக்க போவதில்லை

என்றாலும் அந்த ரகசியத்தின் 

சுவையை

விட்டு விட மனமில்லாமல்

பயணிக்கிறேன்...

இரவின் துணைக் கொண்டு

அந்த ரகசியம் வெளிப்பட்டு விடுமா

இல்லை இரவின் இருளில்

புதைந்து போகுமா?

விடை தெரியாத பயணம் ஒன்றின்

சுவாரஸ்யம் மட்டும் 

குறையாமல் பயணிக்கும்

என்னை பார்த்து இந்த இரவு

ஆச்சரியம் அடைகிறது!!

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 27 மார்ச், 2023

நான் எழுதிய முதல் நூல் கிடைக்கும் இடம் இணையத்தில்

 நேயர்களே வணக்கம் 🙏.

நான் எழுதிய புத்தகம் வாங்கி வாசிக்க நிறைய பேர் கேட்டு இருந்தார்கள்.. அவர்களின் ஆவலுக்காக நான் கீழேயுள்ள இணையதளத்தை பகிர்கிறேன்... வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழேயுள்ள இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்..

இது எனது புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று பெரும் ஆவலோடு இருப்பவர்களுக்கான தகவல்.. மற்ற படி விளம்பர நோக்கம் இல்லை நேயர்களே 🎻✨🎉. நன்றிகள் 🙏.

#இளையவேணிகிருஷ்ணா.


https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://


www.commonfolks.in/books/d/ellaam-avan-seyal&ved=2ahUKEwi86KO43vz9AhW3XWwGHfoGBb8QFnoECAgQAQ&usg=AOvVaw1LsTdBcIoE3ajB8Ji5JRNphttps://www.commonfolks.in/books/d/ellaam-ava


n-seyal

சனி, 25 மார்ச், 2023

யாருமில்லாதவனா

 

நேற்று கடந்த அந்த நொடியில்

என் இளைப்பாறுதல்

தாண்டி எனக்கான வெறுமையை 

நேசிக்கிறேன்...

இங்கே எனக்கென 

யாருமில்லை என்று உணர்ந்த 

தருணத்தில் எல்லாம்

அந்த உணர்வு சத்தமாக கேட்கிறது...

நீ யாருமில்லாதவனா

நான் உன் கூட பயணிக்கிறேனே 

என்று

கலகலவென சிரித்தபடி...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 24 மார்ச், 2023

துயரமற்ற பயணம்...

 


உங்களை ஒன்றும் இல்லாமல் செய்துக் கொள்வதில் உங்களுக்கு ஏன் அச்சம் ஏற்படுகிறது என்று தெரியவில்லை... வாழ்வின் மொத்த சுகத்தையும் வாழ்வின் மொத்த துக்கத்தையும் இழந்து விடுவதில் உங்களுக்கு என்ன சிக்கல் வந்து விட போகிறது?

வாழ்வில் சுமை இல்லாமல் பயணிக்க ஆசைப்படுகிறீர்கள்... ஆனால் அதை செயல்படுத்த பயம் கொள்கிறீர்கள்? இப்படி இரட்டை வேடங்கள் போட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு ஆன்மீக பயணம் மேற்கொள்வதாக தம்பட்டம் அடித்துக் கொள்வதால் யாருக்கு இலாபம்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் மக்களே 🙏.

#ஆத்மஞானசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

இறப்பெனும் தேநீர் கோப்பை


இறப்பெனும் தேநீர்

பருகியவுடன்...

உடைந்து சுக்குநூறாகிறது

அந்த தேநீர் கோப்பை...

#இறப்புகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 23 மார்ச், 2023

எனக்குள் இருக்கும் அந்தரியாமி பாவம்

 

முடிவற்ற தேடலில்

தொலைந்து போகிறேன்...

தொலைதல் இங்கே

துன்பமானதில்லை...

எனக்கு!

எனைத் தேடி அலையும்

எனக்குள் இருக்கும் 

அந்தரியாமிக்கு தான் 

துன்பம்!

எனை தேடி அலைந்து

சோர்வுற்று களைத்த போது

பருக கொஞ்சம் தண்ணீர் தர

யாருமில்லாமல்

தவிக்கும் தவிப்பு

இங்கே எவர் அறியக் கூடும்?

#ஆத்மஞானம்.

#இளையவேணிகிருஷ்ணா.


மெய் நிகரி

 


பொய்யென நினைக்க

முடியாது...

மெய் போல

நீ தழுவி சென்ற

அந்த தழுவலின் சுகந்தம்

இன்னும் என்னை விட்டு

நீங்கவில்லை...

மெய்யோ மெய் நிகரியோ

எனக்கு தெரியாது...

உன் தழுவலின் சுகந்தம்

என்னை விட்டு நீங்கும் போது

உணரக் கூடும்

அது மெய் நிகரி என்று...

அதுவரை இந்த குழப்பம் தீராது...

#இளையவேணிகிருஷ்ணா.



ஆத்ம ஞானம் ✨

 


எனக்குள் இருக்கும்

அமிர்தத் தாரையில் 

மீட்டெடுக்க போராடுகிறேன்...

பிறகு தான் புரிந்துக் கொண்டேன்..

போராடாமல் விசய சுகங்களை

துறந்தாலே போதும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 22 மார்ச், 2023

அந்த வெயில் கால மதிய வேளையில்..


பொழுது போகாத 

வெயில் கால

அந்த மதிய வேளையில்

என் உள்ளே 

வெப்பக் காற்றை போல

வெகுண்டெழுந்த உன் நினைவுகள்

இத்தனை நாள் 

எங்கே இருந்தது ??

என் நினைவுக் களஞ்சியத்தில்

நானறியேன் அந்த இரகசியத்தை...

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 21 மார்ச், 2023

இரவெனும் கோப்பையில்...


மழைக்கு ஒரு சூடான தேநீர் 

தயாரிக்க வேண்டும் 

என்கிறார்கள் 

அங்கே சிலர்...

நானோ இரவெனும் கோப்பையில் 

மழை எனும் தேநீரை 

பருகிக் கொண்டே

அவர்களிடம் சில கோப்பைகளை தருகிறேன்..

அவர்களோ இதை எப்படி

பருகுவது குளிர்ந்து இருக்குமே 

என்கிறார்கள்..

நான் ஒன்றும் சொல்லாமல்

அவர்களை விட்டு விலகி

அந்த கோப்பை தேநீர் 

ஒவ்வொன்றாக பருகி

முடிக்கும் போது

மழையும் நின்றது...

என் கோப்பையில் உள்ள 

தேநீரும் தீர்ந்தது...

#மழைக்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

பேரின்ப நிலை..

 

மழையை

நான் ரசிக்கிறேன்..

அது எனது கவிதையை

ரசிக்கிறது... 😊

இருவரும் ஒருவரையொருவர் ரசித்து

கொண்டாடி தீர்க்கும் போது

நடுநிசி எங்கள் இருவரையும் 

ரசிக்கிறது...

ரசனையோடு இரண்டற கலப்பதை 

இங்கே

வார்த்தைகளால் நிரப்பி விட 

முடியாது...

அது ஒரு பேரின்ப நிலை...

#மழைக்கவிதை...

#இளையவேணிகிருஷ்ணா.

மழை இரவு..

 


மழைச் சாரலோடு

இதமான குளிர் காற்று வருட...

கொஞ்சம் கூட இதயம் இல்லாமல் 

அந்த மின்னல் கீற்று எனை

வீட்டின் உள்ளே துரத்த முயல..

நான் வீட்டின் முற்றத்தில்

அந்த மின்னலின் மிரட்டலை

கண்டுக் கொள்ளாமல்

மழையை ரசித்துக் கொண்டு

இந்த இரவை நொடி நொடியாக 

அனுபவிக்கிறேன்...

இங்கே கிடைத்தற்கரிய விசயங்கள் 

எப்போது வேண்டுமானாலும் 

நடக்கலாம்..

தயாராக இருங்கள்...

#மழைஇரவு..

#இளையவேணிகிருஷ்ணா.

சற்றே விலகி இருங்கள்..

 


இயற்கையின் ரசத்தை

அமைதியாக

பருகுகிறேன்...

அதன் தித்திப்பு திகட்டாத

புத்துணர்வில் புகுந்துக் கொண்டு 

அடைக்கலமானேன்..

தேகமெங்கும்

தீண்டி செல்லும்

தென்றலில் கொஞ்சம்

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கொஞ்சம் தலை உயர்த்தி

பார்க்கிறேன்...

மேகங்கள் என்னை வா என அழைப்பது போல 

உணர்ந்தேனா இல்லை

உண்மையோ நான் அறியேன்...

அந்த மேகங்கள் என்னை

இதமாக தூக்கிக் கொண்டு

வானவீதியில் பயணிக்கிறது...

கீழேயுள்ள காடுகள்

எங்களை விட்டு ஏன் போகிறாய் 

என்பது போல

சோகமாக தலையசைக்க...

நான் கொஞ்சம் சற்றே 

மிரண்டு தான் போனேன்..

அங்கே நிகழும் ஒவ்வொன்றின் 

பேரன்பிலும்..

இங்கே எனக்கென்று ஒரு உலகம் 

சிருஷ்டிக்கப்பட்டுள்ளதை

கொஞ்சம் தாமதமாக உணர்ந்தது யார் குற்றம் என்று 

என்னை நானே 

கேள்விக் கேட்டுக் கொண்டே

வானவீதியில் இருந்து 

இறங்கி வந்த போது

நீ பசி பொறுக்க மாட்டாயே

என்று அங்கே ஒரு மரம்

என் மடி மீது சில சுவை தரும்

கனிகளை பேரன்போடு 

போட்டு விட்டு

புன்னகை செய்ததை

மறக்காமல்

என் மனதில் 

பத்திரப்படுத்திக் கொண்டேன்...

இங்கே நான் வேடிக்கை 

மனுஷி தான்...

பல பேர் கண்களுக்கு...

நான் நானாக பயணிக்கும் போது 

இங்கே

ஒரு பித்தரை போல 

அனுமானிக்கப்படுகிறேன்...

அது எதுவோ இருந்து விட்டு போகட்டும்...

நான் இந்த நொடி ஆனந்தத்தை 

இழக்க விரும்பவில்லை...

காடும் நானும் பிரியாமல்

பயணிக்கிறோம்...

இங்கே எங்களை வேடிக்கை 

பார்ப்பதை விட்டு விட்டு

தங்கள் தங்கள் சம்சார கடமைகளை 

விரைந்து சென்று பாருங்கள்...

நாங்கள் இங்கே 

உங்களிடம் இருந்து 

சற்றே விலகி இருக்க 

விரும்புகிறோம்...

#கவிதைதினகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாம் வாழும் நாட்டில்...


 தாராளமயமாக்கல் பொருளாதாரமயமாக்கல் மற்றும் வல்லரசு மற்றும் பணத்தின் பின்னே சென்று கொண்டே இருங்கள் என்று மக்களை இடைவிடாமல் துன்புறுத்தும் அரசாங்கம்... அரசாங்கத்தின் மோசமான கொள்கை முடிவுகள்... இப்படி மக்கள் மகிழ்ச்சியை பாதிக்கும் விசயங்கள் இங்கே நாம் வாழும் நாட்டில் ஏராளம் ஏராளம்...

அரசாங்கம் சொல்வது ஒன்று செய்வது ஒன்று... நமது அமைதியான வாழ்வியலை விட்டு வெகுதூரம் வந்து விட்டோம்...மன அமைதி மகிழ்ச்சி எங்கே இந்த பாரதத்தில் கிடைக்கும்...கோவிந்தா கோவிந்தா தான்...

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 20 மார்ச், 2023

சம்சார நீட்சி...

 


நமது வாழ்க்கை பயணம் நெடுந்தூரமானது.இதில் நாம் ஒரு தவறை செய்கிறோம்.எதுவமே எந்த உறவுகளுமே கூட வராது என்று தெரிந்தும் தேவையில்லாத சுமைகளாக அவர்களை சுமந்து திரிகிறோம்.நான் சொல்வதை நீங்கள் கவனமாக புரிந்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளுக்கான கடமைகளை செய்து விட்டீர்கள் என்றால் அவர்களை விட்டு விலகி சென்று விடுங்கள். உங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.அந்த காலத்தில் வானபிரஸ்தம் என்று ஒன்று இருந்தது. அதாவது பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இறைவனை தேடி ஆன்மாவை உணர காடுமலைகளுக்கு சென்றார்கள்.இன்று அப்படியா?இறுதி மூச்சு வரை சம்சார பந்தத்தில் சிக்கி சீரழிகிறார்கள்.குடும்பத்தில் பலபெரியவர்கள் பிள்ளைகளை நம்புவதே இல்லை. இதனால் பல பிள்ளைகள் வாழ தெரியாமலே வாழ்ந்து விட்டு போகிறார்கள்.அன்பான பெரியோர்களே உங்களுக்கு பின் அவர்கள் வாழ்க்கை எப்படி வாழ்வார்கள். பொறுப்பை நீங்கள் சிறிது சிறிதாக துறந்து அவர்களிடம் ஒப்படைத்து நம்பிக்கை ஒளியை ஏற்றி நீங்களும் ஆனந்தமாக வாழ்ந்து அவர்ஙளையும் ஆனந்தமாக வாழ விடுங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

மிதத்தல் எனும் அனுபவம்...


 'மிதப்பது'_இந்த வார்த்தையை கேட்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது. மிதப்பது என்பது ஒரு இனிமையான அனுபவம்.அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். சிலர் மிதப்பது அதிகார போதையில் இன்னும் சிலர் மிதப்பது புகழ் போதையில் மற்றும் சிலர் மிதப்பது உறவு போதையில் ஆளடிமை போதையில் இப்படி எத்தனையோ போதைகள்.இந்த போதைகளில் சில போதைகளால் பலருக்கு தொல்லை இல்லை. ஆனால் சில போதைகளால் பலர் வாழ்வு நாசம் அடைவதுடன் பலரையும் மிரள வைக்கிறது.இதுதான் பெரிய சிக்கல். அடுத்தவருக்கு தொல்லை இல்லாத போதை ஒரு வகையில் அவரை முன்னேற்றுகிறது.மேலும் மேலும் காரியத்தை செய்ய ஊக்கப்படுத்துகிறது.ஆதலால் போதைகளில் படுகவனமாக இருந்தால் நமது வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும். என்ன உறவுகளே.

#இளையவேணிகிருஷ்ணா.

வாழ்க்கை கற்றுத் தந்த பாடம்


 இன்று நாம் வாழும் வாழ்க்கை இந்த படத்தை போலத்தான் இருக்கிறது.அனைவரும் நம்முடன் இருந்தும் ஒருவரும் இல்லை என்பது போன்ற தோற்றம். நாம் தனித்து விடப்பட்டதாகவே பலசமயம் உணர்கிறோம்.அது உண்மையும் கூட.நாம் சோர்ந்து போகும்போது கை கொடுக்கவேண்டிய உறவுகள் கை கொடுக்காவிட்டாலும் காயப்படுத்தாமையாவது இருக்கலாம்.உடல் உறுப்புகளில் ஏற்படும் காயத்தால் ஏற்படும் வலியைவிட உறவுகள் தரும் காயத்திற்கு வலி அதிகமாக படைத்துவிட்டான் அந்த இறைவன் .உறவுகள் ஊதாசீனப்படுத்தினால் களங்காதீர்கள்.அதற்கு பதில் சொல்வதற்கான காலத்தை இறைவன் நிச்சயம் உண்டாக்குவான்.உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் உயர்ந்த நிலைக்கு வரும்போது உங்களை அவர்கள் கவனிப்பார்கள்.ஆனால் நீங்கள் அதே தவறை செய்யாதீர்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று காட்டுங்கள். அதுவே அவர்களை கூனிகுறுக செய்து விடும்.நாம் ஆனந்தமாக இருக்கும் போது அடுத்தவர்களை ஆனந்தப்படுத்தி பார்ப்பதில் தான் நமது ஆனந்தம் பலமடங்காக பெருகும். இதை உணராதவர்கள் உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. என்ன உறவுகளே நான் சொல்வது உண்மைதானே?

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த கணம் நழுவி செல்கிறது...


அந்த கணம் நழுவி செல்கிறது...

நான் சேர்த்து வைத்த

ஆனந்தமும் அதனோடு

சத்தம் இல்லாமல்

பயணிக்கிறது...

இவை அத்தனையையும்

நான் சிறு சலனம் இல்லாமல் ரசித்து

முடித்த போது

என் கையில் உள்ள

கோப்பையில் கடைசி சொட்டு தேநீர்

ஆறுதலாக

என் உதட்டில் ஒட்டிக் கொண்டது..

அந்த சுவையை

ஏனோ ஒதுக்க முடியாமல்

என்னோடு பயணிக்க 

அனுமதித்தேன்...

அதுவும் ஆறுதல் தேடி இருக்கலாம் 

என்னிடம்

எவர் அறிய முடியும்??

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 18 மார்ச், 2023

கனவெனும் நீரோடையில்...

 


கனவெனும் நீரோடையில்

கனத்து ஓடுகிறது

ஏதேதோ நினைவுகள்...

அந்த நினைவுகள்

எந்த பாறையிலும் மோதாமல் 

காத்து நிற்கிறேன்...

என் இமைகளை 

கரைகளாக கொண்டு...

இரவெனும் தாயின் 

பேரன்பில் கரைகிறது

நான் நேசித்த இந்த நொடி

கூடவே சத்தம் இல்லாமல்

அந்த நினைவுகளும் தான்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நான் கேட்கும் வரம்..


தேடிக் கொள்கிறேன் என்னை!

தேடல் எனக்கு புதிதல்ல!

தேடி அலைந்து விடும் நேரத்தில்

கொஞ்சம் இந்த நிலவின் நிழலில்

இளைப்பாறுகிறேன்...

என்னை கொஞ்ச நேரம்

கண்டுக் கொள்ளாமல்

பயணியுங்கள்...

அதுவே நான் உங்களிடம்

கேட்கும் வரம்...

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 16 மார்ச், 2023

எதை தருவாய்...


 என் அன்பே

உன் விழிகளில்

வழிவது

கண்ணீர் என்று

நினைத்தால்

அது பிழை

எனக்கு மட்டும்தான்

தெரியும்

அது கண்ணீர்

அல்ல காதலென்று

உன் காதலை

கண்ணீரில்

கரைத்து விட்டால்

எனக்கு

எதை தருவாய்

அன்பே

காதலின் வலி

என்னவென்று

உன் கண்ணீர்

சொல்கிறது

என் காதலின்

வலியை

எதன் மூலம்

கரைப்பேன் நான்

உன் கண்ணீரை

துடைப்பதற்கு

என் கைகளை

அனுமதிப்பாயா

நம் காதலின்

உணர்வுகளை

இதயத்தால்

இணைந்து கரைப்போம்

என் அன்பே...

#இளையவேணிகிருஷ்ணா.

ஆனந்தத்தை அசைபோடுவோம்...


 நமது வாழ்க்கையில் எத்தனையோ ஆனந்தமான தருணங்கள் இருக்கின்றன.அவை எல்லாம் உண்மையிலேயே நாம் சோர்வடையும் போது உற்சாகத்தை கொடுக்கும்.சிலசமயம் நம்மால் நம்மை தேற்றவே முடியாத தருணங்கள் இருக்கும். அப்போது சாய்ந்துக்கொள்ள ஒரு தோள் தேடும் மனது.அரவணைக்க கைகளை தேடும். துரதிருஷ்ட வசமாக நாம் தேடும்போது அவைகளால் நமக்கு உதவ இயலாது. அப்போது துணைகொடுப்பவை நமது இனிமையான நினைவுகள் இனிமையான கடந்த கால நினைவுகள் மட்டுமே.ஆதலால் இனிமையான அந்த தருணங்களை சேமியுங்கள்.அதுவே உங்களுக்கு தோள் கொடுக்கும் அதுவே கைகளாக அரவணைக்கும்.என்ன நமக்குள்ளே ஆனந்தத்தை தேடுவோமா உறவுகளே.🎉🐾💃

#இளையவேணிகிருஷ்ணா.

வலி...

 


வலி_இந்த சொல்லை கேட்டவுடனேயே உங்களுக்கு அவரவர் வலிகள் வந்து நெஞ்சில் நிழலாடும்.ஆமாம் நானும் பெரும்பான்மையான நேரங்களில் இந்த வலியை அனுபவித்து இருக்கிறேன்.அனைவருக்கும் வலியோட தன்மை ஒன்றாக இருப்பதில்லை.அது நடக்கும் நிகழ்வை பொருத்து.ஏற்றுக்கொள்பவரின் மனபக்குவத்தை பொருத்து.சிலபேருக்கு அடுத்தவர்கள் வார்த்தையால் தரும் வலிகளையே வைராக்கியமாகக் கொண்டு வாழ்வில் முன்னேறுவார்கள்.மற்றும் சிலர் வார்த்தைகள் தரும் வலியில் அப்படியே உடைந்து அமர்ந்து விடுவார்கள். இதில் வார்த்தைகள் தரும் வலியை உரமாக இட்டு முன்னேற வேண்டும் என்றே நான் சொல்வேன்.நீங்கள் இடிந்து அமர்ந்து விட்டால் அது எதிராளிக்கு பலத்தை ஏற்படுத்தி கொடுத்துவிடும்.அதனால் இனி அப்படி செய்யாதீர்கள் உறவுகளே.ஆனந்தமாக வாழ்வதற்கு இதுவும் ஒரு வழி.

#இளையவேணிகிருஷ்ணா.

மனக்குதிரை..

 


ஓ மேக குதிரையே

உன்னை போல

என் மனகுதிரையும்

குதிக்கிறது

அது குதித்து குதித்து

படுகுப்புற குழியில்

விழுவதற்கு முன்னால்

தடுக்க எனக்கு

திராணி இல்லை

திமிரும் அதன்

குணத்தை

கடிந்து அடக்கியும்

அது அடங்க

மறுக்கிறது

வெறுத்துப்போய்

அதை அப்படியே

விட்டால்

அக்கம்பக்கம்

இருப்பவர்கள்

என்னை அழவைக்கிறார்கள்

ஏ மனக்குதிரையே

நீ செய்யும்

சேட்டைக்கு

நான் ஏன்

தண்டனை அனுபவிக்க

வேண்டும்

தடுமாறாமல்

நீ என்னுடன் வந்தால்

தடம் மாறாமல்

உன்னை அழைத்துச்

செல்வேன் நல்வழிக்கு

அடங்காமல் நீ

அலைந்தால்

ஊரில் அடி

வாங்கியே சாவாய்

எது வேண்டும் என்று

நீ முடிவெடுத்துக்கொள்

என் அகங்கார

மனகக்குதிரையே...

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 14 மார்ச், 2023

களவு போன நிமிடங்கள்..

 


நீ களவாடிய நிமிடங்களை

தேடி அலைகிறேன்...

ஒரு காற்றாக..

கடந்து செல்வது 

காலம் மட்டுமல்ல...

நம்முள் புதைந்த 

அந்த காதலும் தான்...

#இளையவேணிகிருஷ்ணா.

14/03/2023.

இரவு சிந்தனை ✨

 


அண்டத்தில் உள்ளது தான்

பிண்டத்தில் உள்ளது..

நாம் அதை பிரதிபலிக்காமல்

பிறழ்ந்து போவது தான்

வாழ்வின் சுவை குறைய காரணம்...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 13 மார்ச், 2023

பேனா முனை


 மனம் மௌனமாக

பேசுவதை

சத்தமாக உலகிற்கு

அறிவிக்கும் கருவி இது..

அது வடிக்கும் சொல்லில்

ஓராயிரம் மனங்கள்

ஒடுங்கி விடும்...

அது தான் பேனா முனை...

#இளையவேணிகிருஷ்ணா.



சனி, 11 மார்ச், 2023

என் பாதை.. என் பயணம்...

 

என் பாதை..

என் பயணம்... 

எப்போதும் அடுத்தவரை 

ஒத்து இருக்காத 

ஒரு வித்தியாசமான பயணம்...

நீங்களும் அப்படி பயணியுங்கள் 

உங்களுக்கான 

பிரத்யேகமான தேடலோடு...

வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்...

#காலைசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

வணக்கம் நேயர்களே 🎻🙏🎻

இன்று இரவு இந்திய நேரம் (9:00pm-10:00pm)ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் தனது 65வது வயதை கொண்டாடும் என் மீது பேரன்பு கொண்ட ரேவதி அம்மா சென்னை ... அவர்களை சிறப்பிக்கும் வகையில் இன்றைய நிகழ்ச்சி அமைய உள்ளது.. கேட்டு மகிழலாம் அவர்களின் விருப்ப தேர்வு பாடல்களோடு... 🎻🎻🎻🎻

லிங்க் கீழே உள்ள கமெண்ட்டில் நேயர்களே 🎻🙏🤝😊

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்னொரு லிங்க்:-

https://liveradios.in/krishna-fm.html

வெள்ளி, 10 மார்ச், 2023

ஒவ்வொரு நாளின் முடிவிலும்

 

ஒவ்வொரு கோப்பை தேநீர்

பருகி முடிக்கும் போதும்

அடியில் தங்கும்

சில துளி தேநீர் போல

ஒவ்வொரு நாள் முடியும்

அந்த பொழுதின் எச்சத்திலும்

உன் நினைவுகள் 

படிமமாக படிந்து 

உன் பிரிவின் துயரத்தை

எனக்கு ஞாபகப்படுத்துவதை

தவறுவது இல்லை...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவின் பயணத்தில்

 

நீங்காத இரவொன்றில்

ஆயிரம் ஆயிரம் நினைவுகள் ஆக்கிரமித்து

என் உறக்கத்தின் நெரிசலில் சிக்கி தவிக்கிறது...

தேடுதலுக்கும் தேடாமல்

இருப்பதற்கும் எப்படியோ பழக்கி வைத்து இருக்கிறேன்...

பெரும் சிரமத்திற்கு இடையில் என் மனதை...

ஒன்றும் ஆகி விடப் போவதில்லை என்று தெரிந்தும் படபடப்பு அடங்காமல்

என்னை படுத்தும் ஒரு நினைவின் நீட்சியை மட்டும்

விலகி இருக்க சொல்லி இருக்கும் அந்த நொடியில்

நான் அந்த நினைவிடம்

கெஞ்சி கூத்தாடியபோது

அது என் வலியை புரிந்துக் கொள்ளாமல்

இரவை திருடி..

என் உறக்கத்தை திருடி

என்னை பித்தனாக்கி

ஒரு வித குறும்போடு

நகர்வதை நான் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழி இல்லாமல் தவிப்பதை

இளம் விடியலின் கீற்றொன்று இரக்கப்பட்டு

ஆறுதல் தந்து அணைத்துக் கொண்டதை தவிர

வேறு எதுவும் மிஞ்சவில்லை..

மீண்டும் இரவை சந்திக்க

இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது என்று

என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு பயணிக்கிறேன்

வெளிச்சம் நிறைந்த இந்த பகல் பொழுதில்...

#கொஞ்சம்தேநீர்

#கொஞ்சம்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 9 மார்ச், 2023

எதிர் நீச்சல் வேண்டாமே...

 

எதுவாக இருந்தாலும்

பார்த்துக் கொள்ளலாம்...

இப்படியே சூழல் இருந்து விடப்போவது இல்லை...

போன போக்கில் நமது வாழ்வின் சுவடை விட்டு செல்கிறோம் அவ்வளவே...

இதில் தேவையில்லாத மனசுமைகளை ஏன் சுமந்து செல்கிறீர்கள்...

இங்கே எல்லாவற்றையும் விட வாழ்வது ரசனையோடு

அந்த நிகழ்வை நகர்த்துவது

இது தான் வாழ்க்கை...

எதிர் நீச்சல் போட வேண்டும் என்று சொல்வதெல்லாம்

வாழ்க்கையை சிக்கலாக்கும் செயல்...

அந்த நொடியை அப்படியே வாழ்வது இதுதான் வாழ்க்கை...

தேவையில்லாத மனசோர்வு

மனக்கலக்கம்...

பயம்...இவை எல்லாம் எதற்காக???

வாழ்க்கையை கொஞ்சம் 

அதன் போக்கில் வாழ்ந்து தான் 

பாருங்களேன்..

அதனோடு சண்டை போடுவதை 

கொஞ்சம் 

நிறுத்தி விட்டு...

யோசியுங்கள்...

இங்கே மீண்டும் சொல்கிறேன் வாழ்வது என்பது அந்த நிகழ்வு எப்படியாயினும் ரசனையோடு வாழ்வது...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

மோனத்தில் திளைத்திருப்போம்...


 இங்கே புற உலகில்

அத்தனை சலசலப்புகள் 

அதை எல்லாம்

கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு

நாம் பயணிப்போம்...

நமக்கான இசையுலகில்...

உனது இசை மீட்டலில்

எனது இதயம் கொஞ்சம்

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

புத்துணர்வில் லயித்துக் கிடக்கிறது 

இங்கே நம்மை கடந்து செல்லும்

அந்த சம்சாரிகள்

கொஞ்சம் பொறாமைத் தீயில் 

நம் மீது கோபப்படவும் கூடும்

அதையும் உனது இசைத்தலில்

கரைத்து இளைப்பாற

வைத்து விடலாம்...

இங்கே கொண்டாட்டங்கள் மட்டுமே

நிலைத்து நிற்கும்...

நாம் புரிந்துக் கொண்டு

மௌனத்திலும் இசை மீட்டி

மோனத்தில் திளைத்திருப்போம்...

#இளையவேணிகிருஷ்ணா.



 




அந்த சின்னசிறு கோப்பையில்


அந்த சின்னஞ்சிறிய 

கோப்பையில்

என் மொத்த வாழ்வெனும்

திரவத்தை ஊற்றி

என் பெரும் பசியின் 

ஜுவாலையை அணைக்க

முயன்று தோற்றுவிடும் போது

புரிகிறது...

இது அவ்வளவு எளிதானது அல்ல 

என்று...

#இளையவேணிகிருஷ்ணா.



புதன், 8 மார்ச், 2023

அது என் வீடு அல்ல...


அந்த பாழடைந்த 

என் வீட்டின் கதவை 

திடீரென திறந்த போது 

கிறீச்சிட்ட சத்தத்தை

கேட்டு ஓடுகிறது ...

இங்கும் அங்குமாக

அந்த எலிகள்...

ஓட்டின் வழியே

ஊடுருவி வரும் வெளிச்சத்தில் 

நிழலாடும்

அந்த துகள்களும்

அந்த வீட்டின் உரிமையாளர்

நானும் கூட என்று

சொல்லாமல் சொல்கிறது...

இந்த நிகழ்வில் நான்

எனது கண்களில் வழியும்

கண்ணீருக்கு மட்டும்

என்ன பெயர் வைக்கலாம் என்று 

யோசித்து

விடை கிடைக்காமல்

சோர்வோடு

மிகவும் மெதுவாக 

அந்த கதவை மூடி விட்டு

சாலையில் பயணிக்கிறேன்

அது என் வீடு அல்ல என்று

உறுதியாக நம்பும்படி

எனது மனதிற்கு

சொல்லிக் கொண்டு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 7 மார்ச், 2023

நான் நானாக....

 

எனக்கு தெரிந்ததெல்லாம் 

கொண்டாட்டம் தான்...

வெளியுலக கவனத்தை ஈர்க்க 

எப்போதும் நான் முயன்றதில்லை...

நான் என் பணி எப்போதும் 

எதையோ செய்துக் கொண்டே 

இருப்பது...

ஒன்றும் செய்ய தோன்றவில்லை 

என்றால்

காலநேர வரையறையின்றி

உறங்குவது...

இங்கே நான் இப்படி தான் என்று 

ஒருவரும் மதிப்பிட 

முடியாத அளவுக்கு 

தனித்துவமாக வாழ்கிறேன்

நான் நானாக...

என்னை 

பெண்ணாக பாவிப்பதை விட 

ஆண் பெண் பேதமில்லாத 

சூட்சம ஆன்மாவாகவே உணர்வதில்

பெரும் ஆனந்தம் கொள்கிறேன்...

நான் பேருணர்வோடு

இந்த பிரபஞ்சத்தை அணுகி

கழிக்கிறேன்...

மீண்டும் சொல்லிக் கொள்வதில் 

பெருமை அடைகிறேன்...

நான் நானாக பயணிப்பதில்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 5 மார்ச், 2023

வாழ்வெனும் நெரிசல்

 

வாழ்வெனும் நெரிசலில்

அகப்பட்டு நசுங்குகிறேன்...

அந்த நசுங்கலில் பிறந்த

துன்பத்தை இனிப்பெனும் 

சுவையாக நினைக்க

இங்கே எனக்கு 

அறிவுறுத்தப்படுகிறது எனக்கு..

கொஞ்சம் இதழோரம் 

வலுக்கட்டாயமாக சிரிப்பை 

வரவழைத்து பயணிக்கும் எனக்கு 

கொஞ்சம் ஆறுதலாக

என் அருகில் வந்து

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

இங்கே எதை தேடுவது என்பதில்

என் நெரிசல் எனும் நசுங்குதல் 

கொஞ்சம் நகர்ந்து போகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

தன்னிரக்கம்

 

அந்த வெற்றுச் சாலையில்

பயணிக்கிறேன்...

வாழ்வின் கடும் போராட்டம்

சொல்லி சொல்லி

அலுத்து விட்டது எனக்கு...

என்னை பற்றி இங்கே

சொல்லி தீர்க்கும் நேரத்தில்

அவர்கள் அதை உள்ளுக்குள்

கொண்டாடி தீர்க்கிறார்கள்..

தன்னிரக்கம் கூடாது என்று

அங்கே என் கதையை

கேட்டவர்கள் சொல்லிக் கொண்டு 

இருக்கும்போதே

நான் அதே தன்னிரக்கத்தை

துணைக் கொண்டு பயணிக்கிறேன்...

இன்னும் கொஞ்ச காலத்தில்

அதற்கும் எனக்கும்

ஒரு புரிதல் கூட

இருக்க வாய்ப்பு உள்ளது...

சில அற்ப மானிடர்கள்..

அதை என்னிடம் இருந்து

வலுக்கட்டாயமாக பிரிக்க 

முயல்கிறார்கள்...

நான் அவர்களிடம் கேட்பது

ஒன்றேயொன்று தான்...

என்னையும் என் மீது 

தீராத பாசம் கொண்ட 

அந்த தன்னிரக்கத்தையும் 

பிரித்து விடாதீர்கள்...

நான் ஒற்றை ஆளாக 

பயணிப்பதில் உங்களுக்கு

என்ன அற்ப சுகம் அதில்?

#இளையவேணிகிருஷ்ணா.



வாழ்க்கை பயணி யார்?

அந்த சாலையோரத்தில்

வருவோர் போவோரின் 

பரபரப்பான பயணத்தை 

எந்தவித சலனமும் இல்லாமல்

இங்கே நான் வேடிக்கை

பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..

பரபரப்போடு இயங்கும் 

அவர்கள் வாழ்க்கை பயணியா

இல்லை

எந்தவித சலசலப்பும் இல்லாமல்

பயணிக்கும்

நான் வாழ்க்கை பயணியா என்று

விடை தெரிந்தவர்கள்

கொஞ்சம் நின்று சொல்லி விட்டு

செல்லுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.




 

பந்தமெனும் விலங்கு

 

பந்தம் எனும்

விலங்கிட்ட பின் தான்

தெரிந்தது 

சுதந்திரத்தின் அருமை!

#இளையவேணிகிருஷ்ணா.

மனோவலிமை

 

ஏ எதிரியே!

நரசிம்மரின்

கர்ஜனையை

கண்டால்

காததூரம்

ஓடிவிடும் நீ

என்னிடம் மோத

என்ன தைரியம்?

என் பிடரி சிலிர்ப்பில்

உன்னை

சுற்றி அடித்து

அதில் சுகம்

காணும் என்னிடமே!

உன் விளையாட்டா?

நீ என்னை எதிர்க்க

கூட்டத்தோடு வா

நான் என்றுமே

ஏகாந்தத்தில்!

எளிமை கண்டு

எகிறினால்

ஏறிமிதித்து

நசுக்கி விடுவேன்!

நேர்த்தியாக!

என் வீரத்திற்கு

முன்னால்

உன் வீரம்

வீழ்ந்து

வணங்கி போகும்

என் காலடியை!

மோதுவதற்கு

தகுதியை வளர்த்து வா!

பிடறிமயிர் சிலிர்க்க

காத்து நிற்கிறேன்

களத்தில்

உன் வீரத்தை காண!🦁🦁🦁✍️இளையவேணிகிருஷ்ணா.

கம்பீரமே அழகு

 

மேலேயுள்ள வயது முதிர்ந்த 

சிங்கத்தை பாருங்கள்!

அது தனது கம்பீரத்தை 

மீட்டெடுக்க போராடுகிறது...

அது உணர்த்துவது ஒன்று தான்..

அத்தனையும்

இழந்து விட்ட போதும்

தமது கம்பீரத்தை இழந்து விட 

துணியாதவனே

மொத்த வாழ்வின் அர்த்தத்தை 

உணர்ந்தவன்..

இங்கே உன்னை

இழிவு செய்ய

எத்தனையோ காரியங்கள்..

எத்தனையோ மனிதர்கள்..

எத்தனையோ சூழல்கள்...

இருந்திருக்கலாம்.

அத்தனையும் தூக்கி 

எறிந்து விடுங்கள்...

எல்லாமே உங்கள் கம்பீரத்திற்கு 

முன்பு தூசியே...

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா.

இசைச் சாரல் வானொலி

 

நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏🎻🙏

கீழேயுள்ள லிங்கில் ஓஷோவின் உயர் வேதம் மற்றும் இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻

மயக்கும் மாலை வேளையில் ✨🔥🦋📻

https://radiopublic.com/-WxOkEV/s1!3e9d6#t=2

இசைச் சாரல் வானொலி

 


ஓஷோவின் உயர் வேதத்தை கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் அழகான திரையிசை பாடல்களோடு.. இணைந்து பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉

https://anchor.fm/elaiyaveni-k/episodes/ep-e8cdf8

சனி, 4 மார்ச், 2023

மன நிர்வாணம் பழகு...

 




நீயோ ஆடையின்றி

வெளியே வர தவிக்கிறாய்!

கூச்சம் உன்னை தின்ன

ஏதோவொரு மறைவிடம்

கிடைத்தால் போதும்

என்று அமர்ந்து விட்டாய்!

அடிக்கடி எவரும்

வருகிறார்களா என

உனது கண்கள் அலைபாய்ந்ததை

என்னால் தூரத்தில் இருந்து

உணரமுடிந்தது உன்நிலையை!

உலகில் பலபேர் தனது மோசமான

செய்கைகளுக்கு சப்பைக்கட்டு

கட்டி வெட்கம் இல்லாமல்

அலைந்து திரிந்திருக்க!

எதற்காக வெட்கப்பட்டு

தலைகுனிந்து நீ மறைவிடத்தில்

இருக்கிறாயோ நான் அறியேன்!

நிர்வாணம் என்பது

வெட்கப்பட வேண்டிய

விசயமா ?

சமூகத்தில் நடக்கும் அவலங்களை

பார்க்கும் போது!

மனநிர்வாணம் பழகிக்கொண்டால்

எந்த நிர்வாணமும் யாரையும்

பாதிப்பது இல்லை

வேதவியாசரின் மகனைபோல!



என் பிரத்யேகமான உலகம்

 

எந்த சலசலப்புகளும்

இல்லாமல் பயணிக்கிறேன்

அத்தனை ஆர்ப்பாட்டத்திற்கு

இடையிலும்..

என்னை சுற்றி 

ஒரு தீ 🔥 ஜுவாலை 

கொழுந்து விட்டு

எரிகிறது...

அதன் தாக்கத்தை சிறிதும்

உணராமல் 

எந்த சலனமும் இல்லாமல்

என் பயணம் தொடர்கிறது..

அந்த சூறாவளி 

பல மனிதர்களை பதம் பார்த்தது

நானோ தென்றல் காற்றின்

தீண்டலை தவிர வேறெதுவும்

அனுபவிக்கவில்லை...

இங்கே இதெல்லாம் 

சாத்தியமா என்று அந்த இயற்கையே

என்னை பார்த்து வியந்து

கிடக்கிறது...

அங்கே சில பல மனிதர்கள்

என் மீது ஆவேசம் கொண்டு

பொறாமையெனும் பார்வையால் 

பொசுக்குகிறார்கள்...

அதற்கு நான் என்ன செய்ய இயலும்??

என் உலகம்

என் உலகமாகவே இருந்து விட்டு 

போகட்டுமே...

இங்கே அதை பற்றி

உங்களுக்கு என்ன கவலை?

நான் உங்கள் உலகத்தில்

நுழையவில்லை...

நீங்கள் என் உலகத்தில்

நுழைய இயலாமல்

துன்பம் அடைகிறீர்கள்...

இங்கே வாழ்தல் என்பது

விசித்திரமான ஒன்று

என்பதை உங்களுக்கு

எவர் புரிய வைக்கக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.



விடை கொடுக்கிறேன்

 


ஏதோவொன்றை திருப்திப்படுத்த...

ஏதோவொன்றில் மூழ்கி

பரிதவிக்கிறேன்...

அந்த பரிதவிப்பு நிலையை

பார்க்கும் என் ஆழ்மனமோ

எந்தவித சலனமும் இல்லாமல்

வேடிக்கை பார்த்து

தன்னுள் அமிழ்வதை

இங்கே நான் 

அறிந்திடும் வேளையில் 

என் பரிதவிப்பிவிற்கு

விடைக் கொடுக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.



வெள்ளி, 3 மார்ச், 2023

வாழ்வியல் (4)

 

ஏமாற்றங்களை வெறுக்காதீர்கள்.ஏனெனில் ஏமாற்றங்களில்தான் ஏற்றத்திற்கான தீர்வுகள் கிடைக்கும். ஆயிரம் முறை ஏமாந்தாலும் ஒருமுறை கண்டிப்பாக ஜெய்ப்போம் என்று நம்புங்கள்.அந்த நம்பிக்கை தான் நீங்கள் வெற்றி அடைவதற்கான வழி.

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...