ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஜூலை, 2026

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

 



வாழ்வெனும் 

நெடும் பாதையில் 

வஞ்சிக்கப்பட்ட 

பலரோடும்...

உண்மையான 

நேசத்தை கொட்டி 

எதையும் 

என்னிடம் எதிர்பாராமல் 

பயணிக்கும் 

பலரோடும் 

தொடர்கிறது 

நிழல் போல வாழ்க்கை...


அந்த பாதையின் 

இரு பக்கத்திலும் 

நன்மை தீமையெனும் 

சிறகுகள் என்னை 

சுமந்து செல்கிறது...

கடந்து செல்ல வேண்டிய 

பாதையை மிகவும் 

இலகுவாக....


சில சமயங்களில் 

வாழ்வெனும் தோட்டத்தில் 

மலர்ந்து மணம் வீசும் 

சுகந்த மலர்களின் 

நறுமணத்தை நுகர்ந்து 

தென்றலாக

செல்கிறது...


பல சமயங்களில் 

வழியில் சக மனிதர்கள் 

நடத்தும் வேடிக்கை 

நிகழ்வுகளை

மிகவும் நிதானமாக 

ரசித்தபடியே கடந்து 

செல்கிறது...


ஏதோ பிறந்து வளர்ந்து 

இங்கே எதையோ செய்து 

அதன் மூலமாக 

சமூக மரியாதையை தேடி 

அலைபவர்கள் 

மத்தியில்...


நான் நானாக 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

என் வாழ்க்கைக்கு 

அர்த்தத்தை தேடி தேடி 

சோர்ந்து போகாமல் 

அந்த நெடும் பாதையில் 

கையில் ஜீவித்து இருக்க 

வழி துணையாக 

எந்தவித உணவையும் 

எடுத்துக் கொள்ளாமல் 

ஏதோவொரு நம்பிக்கையில் 

பயணிக்கிறேன்...


இயற்கையோ 

எனக்கு 

தேவையான பொழுதில் 

தேவையான அமிர்தத்தை 

அங்கங்கே கொடுத்து 

என் கரங்களை குலுக்கி 

புன்னகையோடு 

பயணிக்க வைப்பதை 

பார்த்து கொஞ்சம் 

ஆச்சரியமாக பார்த்து 

பெருமூச்சொன்று 

உதிர்த்து 

கொஞ்சம் 

திரும்பி பார்க்கிறேன்...


கண்ணுக்கு எட்டிய 

தூரம் வரை 

என் பாதையில் 

நான் மட்டுமே 

இன்னும் 

அங்கே பயணிக்கிறேன்...

வேறு எவரையும் 

காணவில்லை...


அந்த நெடும் பாதை 

என்னிடம் 

மெதுவாக சொல்கிறது...

அவர்கள் அவர்களை 

நம்பி எடுத்து வந்த 

உணவு தீர்ந்து போய் ...


எங்கோ வேறு பாதையில் 

காலத்தின் கைகளில் 

அடைக்கலமாகி

அந்த காலத்தை 

திட்டிக் கொண்டே 

அதனோடு 

பெரும் குரலெடுத்து 

அதை சபித்துக் கொண்டே 

பயணிப்பதாக சொல்லியது...


இங்கே இலகுவான பாதை 

இங்கே இருக்க 

அவர்கள் எப்படி 

வழி தவறினார்கள் என்று 

எனக்கு நானே கேள்வி 

எழுப்பிக் கொண்டே 


மீண்டும் அந்த சுகமான 

நெடும் பாதையில் 

பயணிக்கிறேன்...

நான் அடைய வேண்டிய 

இடம் இன்னும் 

கொஞ்ச தூரம் தான் 

உள்ளது என்று 

அந்த காலம் சூட்சமமாக 

என் காதில் சொன்னதை 

குதூகலத்துடன் 

ரசித்துக் கொண்டே 

பயணிக்கிறேன் 

கொஞ்சம் வேகமாக 

நடை போட்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/07/26.


கர்ணன் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும்...


ஜனநாயகம் 

சற்றே விலகி நின்று 

வேடிக்கை பார்க்கிறது 

நடக்கும் கூத்தை...


இது ஜனநாயகமா 

இல்லை 

சல்லியன் நாடகமா

என்று...


என்ன கூத்து வேண்டுமானாலும் 

இந்த தமிழ் நாட்டில் 

அரங்கேற்றம் செய்யலாம் 

என்ற துணிவு இங்கே 

எவருக்கும் வருகிறது...


ஒரு காலத்தில் 

தரம் நிறைந்த மக்களால் 

இந்த மண் 

பெருமையடைய... 

இந்த மண்ணால் 

மக்கள் பெருமையடைய...


அது ஒரு பொற்காலம் என்று 

கிசுகிசுத்து பெருமூச்சு 

விடுகிறார்கள் 

அங்கே ஒரு சில மனிதர்கள்...


தற்போதோ

கொஞ்சமும் மண் மீதான 

பிணைப்பு இல்லாமல் 

இங்கே மக்கள் அனைவரும்

ஒன்று சேர்ந்து 

மகா சல்லியன் 

ஆனதால் ....


இங்கே தமிழ் நாடு 

கர்ணனை போல 

கதி கலங்கி நிற்கிறது...

என்ன செய்வது என்று 

தெரியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/07/26.


செவ்வாய், 21 ஜூலை, 2026

காலத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படும் மனிதர்கள்...


காலம் எந்தவித இரக்கமும் 

இல்லாமல் பல மனிதர்களை 

வலுக்கட்டாயமாக இழுத்து 

செல்கிறது...

அவர்கள் தன் சுயத்தை 

தொலைத்து  

எல்லா உணர்வுகளையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஆழத்தில் 

புதைத்து விட்டு 

அதனோடு பயணிக்கிறார்கள்...

நானோ அந்த காட்சியை 

இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

அமர்ந்து 

தேநீரை மிடறு மிடறாக 

பருகிய படியே 

ரசித்து வேடிக்கை பார்க்கிறேன்... 

பிரபஞ்சமோ நின்று நிதானமாக 

என்னை சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்த்து ரசிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.

இந்த பிரபஞ்சம் மூச்சை நிறுத்தாமல் பயணிக்கும் சூட்சமம்...

 

 


தினம் தினம் 

ஓடி ஓடி களைப்பது

இந்த வயிற்றுப் பாட்டிற்கு தான் 

என்று போலியாக 

சொல்லிக் கொண்டு 

ஓடும் மனிதர்களை 

பார்த்து பெரும் வியப்பில் 

ஆழ்கிறது இந்த காலம்...


அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 

ஆஸ்தியோ கோடியில் 

கொடி கட்டி பறக்க 

அந்த ஆஸ்தியின் ஒரு மூலையில் 

அவர்கள் அஸ்திக்கு அங்கே 

இடம் இல்லை அங்கே என்ற போதும்...

பொருளற்ற ஓட்டத்தில் 

ஏன் இந்த பொக்கிஷமான 

வாழ்க்கையை 

தன் சுயநலத்திற்காக பலியிட்டு 

படையலிட்டு

அதை வேகமாக வேகமாக

உண்கிறார்கள் ...


அவர்கள் மென்று 

உமிழ்ந்த பொய்களின் 

எச்சத்தில்

இந்த பிரபஞ்சம் கறைப்பட்டு 

அசிங்கப்படுவதை

கொஞ்சம் அருவருப்போடு

அந்த விடியல் 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் வேளையில்...


அங்கே சூரிய கிரணகங்களின் 

மெல்லிய ஒளியில் 

தன் சோம்பலை 

கணப் பொழுதில் முறித்து 

உண்மையில் 

தன் பசியெனும் 

பெரும் தீயை அணைக்க

எந்த அகங்காரமும் 

இல்லாமல் ...

 

தினம் தினம் 

வானில் ஒரு முறையான 

வரிசையோடு...

ஒற்றுமையோடு...

நிலை மாறாமல் பறந்து 

ஒரே மாதிரி விடியலை 

உற்சாகமாக வரவேற்று 

உண்மையாக 

தன் வயிற்றுப்பாட்டிற்காக

நெடுந்தூரம் 

இரை தேடும் பறக்கும் 

அந்த பறவைகளுக்காக...


இந்த பிரபஞ்சம் இன்னும் 

மூச்சை நிறுத்தாமல் 

இயங்கி கொண்டிருக்கிறதோ 

என்று பெருமூச்சுடன் 

காலமும் அந்த பறவைக்கு 

துணையாக 

எந்தவித சத்தமும் இல்லாமல்

பெரும் நன்றியுணர்வோடு

உடன் பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.


வாழ்வெனும் இடிபாடுகளில் சிக்கி...

 


தினம் தினம் 

வாழ்வெனும் இடிபாடுகளில் 

சிக்கி சிதறி 

கிடக்கிறேன்...


எந்தவித தற்காப்பு வித்தையும் 

இது வரை நான் 

கற்றுக் கொள்ளப்படாததன் 

விளைவை நான் அனுபவித்து 

அந்த விதி எனும் 

பெரும் பாறாங்கல் 

என் முதுகில் ஏறி 

இங்கும் அங்கும் 

நர்த்தனம் ஆடுகிறது...


அந்த நர்த்தனத்தின் வலியில் 

நான் முனகி ஓலமிடுவதை 

அந்த காலமெனும் பைரவனோ

எனக்கும் இதுக்கும் 

சம்பந்தம் இல்லை என்று 

ஒரு ஒற்றை பார்வை 

பார்த்து விட்டு 

கொஞ்சம் மனமிரங்கி 

ஓலமிடுகிறது...


அங்கே என் இரத்த சொந்தங்களும் 

தெரிந்தவர்களும்

என்னை தேடும் வேட்டையை 

சிறிது நேரம் நடத்தி விட்டு 

அவரவர் வேலைக்கு 

முகத்தில் வலுக்கட்டாயமாக 

வரவழைக்கப்பட்ட கவலையோடு 

தன் வீட்டுக்கு 

திரும்புகிறார்கள்... 


சும்மா என்று நினைத்து விடாதீர்கள்...

அவள் ஆடிய திமிர் பிடித்த 

ஆட்டத்திற்கு இந்த காலம் 

முன்னமே நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று 

மனதிற்குள் 

முனகுவதாக நினைத்துக் கொண்டு 

சற்றே குறைந்த குரலில் முணுமுணுத்துக்கிறார்கள்...


நான் அந்த முணுமுணுப்பு 

குரலை உற்று கேட்டு விட்டு 

இவர்களுக்கு அந்த காலமெனும் 

பைரவனே பரவாயில்லை 


எந்தவித அலங்கார பூச்சும் 

இல்லாமல் வெளிப்படையாக 

தன் இயலாமையை 

சொல்லி விட்டு 

கொஞ்சம் 

கருணையோடு 

ஓலமிட்டு சென்று 

இருக்கிறானே என்று 

அவனுக்கு மானசீகமாக 

நன்றி செலுத்தி 

கொஞ்சம் கொஞ்சமாக 

அந்த இடிப்பாடுகளில் 

புதைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/26.


சனி, 18 ஜூலை, 2026

விசுவாசம்...


ஒரு பறவையின் 

தாகத்தை தீர்க்க 

அந்த மனிதர்கள் 

கழிவு நீரை 

கொஞ்சம் கூட 

இரக்கமே இல்லாமல் 

பரிசளித்து விட்டு 


நவீன நாகரீகத்தின் 

படிமங்களில் 

புதைந்து கொள்கிறார்கள் 

கொஞ்சமும் கருணை 

இல்லாமல்...


இங்கே இயற்கையும் 

மௌன சாட்சியாக 

அவர்கள் ஜீவ காருண்யத்தின்

அளவை மதிப்பிட்டு 

பரிசொன்று கொடுப்பதற்காக 


நெடு நேரம் காத்திருப்பதை 

உணர்ந்து 

சிறிது அலட்சியமாக 

திரும்பி பார்க்கும் போது 

அங்கே இயற்கை 

இத்தனை நாள் நாம் தந்த 

பெரும் பரிசிற்கு 

நிகராக இல்லை என்றாலும் 

சிறியதாக 

நிலநடுக்கம் எனும் 

புதைமண்ணில் நேசத்தோடு 

புதைத்துக் கொண்டது 


அதுவும் தாய் தானே 

அந்த அரவணைப்பின் 

கிடுக்கி பிடியில் 

உணர்ந்து கொண்ட தருணத்தில் 

அவர்கள் உயிர் அங்கே 

அதன் கைகளிலேயே 

பிரிந்ததில்... 


அந்த பறவை அங்கே 

அவர்களுக்காக

அந்த இடிப்பாடுகளின் 

நடுவில் துக்கம் 

அனுசரிக்கும் 

கருணையில் தான் 

இந்த பிரபஞ்சம் 

தனது அச்சில் பிறழாமல் 

சுற்றிக் கொண்டு இருக்கிறது

என்று சூட்சமமாக 

உணர்ந்து ...

இந்த பிரபஞ்சம் 

பெரு மூச்சொன்று

உதிர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/07/26.


புதன், 15 ஜூலை, 2026

பிறந்து பிறந்து சலித்து விட்ட என் ஜீவனோட்டத்திற்கு..


உன் நடனத்தில் 

இந்த பிரபஞ்சத்தை 

மிகவும் நுட்பமான 

நேர்த்தியால் 

சுழல வைக்கும் 

தந்திரத்தில் 

நான் எத்தனையோ நாட்கள் 

அதை நினைத்து அசந்து 

போவதுண்டு...


காலத்தின் பசிக்கு இரையாகும் 

ஜீவன்களை நீ பக்குவப்பட்ட 

ஆன்மாக்களை மட்டும் 

பிரித்தெடுத்து 

உன்னுள் மிகவும் பத்திரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்...


மீதி ஆன்மாக்களை 

உன் நடனத்தினை நிறுத்தாமல் 

அவரவர் வினைக்கேற்ப 

கருப்பை தொட்டிலில் 

அமைதியாக 

அந்தந்த ஆன்மாவின் 

பக்குவ நிலைக்கு ஏற்ப 

சேர்த்து விட்டு 

உன் புன்சிரிப்பு கூடிய 

முகத்தோடு கூடிய 

நடனத்தை 

அதே அதிர்வலையில் தொடர்கிறாய்...


இங்கே நான் எத்தனையோ 

கருப்பையில் புகுந்து வந்து 

புகுந்து வந்து....

களைத்து விட்டதை 

நீ உணராமல் 

இருந்திருக்க மாட்டாய் என்று 

எனக்கு தெரியும்...


இருந்தும் நான் உனக்கு 

போட்டியாக மிகவும் 

மோசமான நடனத்தை 

தாள லயம் பிசகி 

நடத்திக் கொண்டு 

இருக்கிறேன்...

உன் கவனத்தை 

ஈர்ப்பதற்காக...


அந்த நடனத்தை 

சகிக்க முடியாமல் 

நீ என்னை உன் பாதத்தில் 

சேர்த்து கொண்டு 

பிறவா நிலையை 

கொடுப்பாய் என்ற 

பெரும் நம்பிக்கையோடு....


பிறந்து பிறந்து 

சலித்து விட்ட 

என் ஜீவனின் ஓட்டத்திற்கு 

நிரந்தரமாக ஓய்வு கொடுத்து 

எனக்கு ஒரு அடைக்கலம் 

கொடுத்து 

அணைத்துக் கொள் 

என் ஆத்மநாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/26.


செவ்வாய், 14 ஜூலை, 2026

பயணிகள் கவனத்திற்கு...

 



விடியலை 

உணர்த்தும் பறவைகளின் 

ஒலியை கேட்பதற்கு 

முன்பே ....


சூரியனின் கிரணங்கள் 

இந்த பிரபஞ்சத்தை 

ஊடுருவுவதற்கு 

முன்பே....


எழுந்து நீராடி 

அந்த புகைவண்டி 

நிலையத்தை அடைந்து 


ஒரு தேநீர் கோப்பையை 

கையில் ஏந்தி 

அங்கே 

இங்கும் அங்கும் 

நடமாடும் பயணிகளை 

வேடிக்கை 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது...


அந்த புகைவண்டி நிலையத்தில் 

பயணிகள் கவனத்திற்கு 

என்று சொல்லி...


நீ வரும் 

புகைவண்டியின் 

பெயரை சொல்லி...

ஒரு மணி நேர 

தாமத அறிவிப்பு 

ஒன்று காற்றோடு கலந்து 

என் செவிகளை அடைந்தது...


அந்த அறிவிப்பில் 

நான் இன்னும் ஒரு யுகம் 

காத்திருக்க வேண்டுமா 

உன் முகம் காண என்று 


என் முகத்தில் சோகம் 

அப்பிக் கொண்டதை

அங்கே என்னை கடந்து 

செல்லும் 


பட்டாம்பூச்சி ஒன்று 

இலேசாக உராய்ந்து 

இத்தனை காலம் 

ஊடலில் 

பிரிந்து இருந்த நீ...


இந்த ஒரு மணி நேரத்தை 

ஒரு யுகமாக யோசிக்கிறாயே 

என்று கேலி செய்து செல்ல 


நானோ மிகுந்த ஆச்சரியத்துடன் 

அது போகும் வழியை 

மெய் மறந்து பார்க்கிறேன்...


என் மனதில் ஓடுவதை 

உன்னால் படிக்க முடியும் போது

அவளால் படிக்க 

முடியாமல் போனதே என்று 

ஒரு பெருமூச்சு ஒன்றை 

உதிர்த்து விட்டு 

யோசிக்கிறேன்..


இந்த பிரிவின் துயரத்தின்

வலியை அந்த பட்டாம்பூச்சி 

சிறகின் உரசலில் 

சிறிது மறந்து 

காத்திருக்கிறேன்...


நீ வரும் அந்த 

புகைவண்டியின் சத்தத்தை 

உற்று நோக்கி 

காத்திருக்கிறேன்...

என் நெஞ்சம் முழுவதும் 

நிறைந்த பெரும் காதலோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/26.


செவ்வாய், 7 ஜூலை, 2026

எந்தவித ரசனையும் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களே....

 





ஒரு மெல்லிய 

திரித்து விட்ட 

வெள்ளி கயிறை போல 

நீ கவர்ந்து இழுக்கிறாய்...


அங்கே சூரிய கிரணத்தின் 

வெப்பத்தால் 

உன் ஒளி சிதறல்கள் 

சிதறிடிக்கப்பட்டு

வண்ணமயமாக...


பல வண்ணங்களில் பூக்களை 

நொடி தோறும் உருவாக்கி...

இந்த பிரபஞ்சத்திற்கு 

எந்தவித எதிர்பார்ப்பும் 

இல்லாமல் 

பரிசளித்துக் கொண்டே 

இருக்கிறாய்...


அந்த அழகில் 

நான் இங்கே அசையாமல்

மயங்கி கிடப்பதை 

இந்த மொத்த பிரபஞ்சமும் 

வேடிக்கை 

பார்த்து லயிக்கிறது...


அங்கே எந்தவித ரசனையும் 

இல்லாமல் 

ஓடிக் கொண்டே இருக்கும் 

மனிதர்களே 

கொஞ்சம் உங்கள் ஓட்டத்தை 

நிறுத்தி விட்டு 

இந்த அழகியலை 

இந்த அதி அற்புதமான 

பொக்கிஷத்தை 

ரசிக்காமல் 

அங்கே எந்த பொக்கிஷத்தை 

தேடி நிற்காமல் 

ஓடிக் கொண்டே 

இருக்கிறீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/07/26.


காலத்தோடு கலந்த அவளின் உடலில் புனையப்பட்ட கதைகள்...

 





ஏதோவொரு சூழலில் 

அவள் 

இந்த சமூக வாழ்வெனும் 

நிகழ்வில் இருந்து 

மரணத்தின் அரவணைப்பில் 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத 

தோரணையில் 

அதை இறுக 

கட்டிப்பிடித்துக் கொண்டு

கிடக்கிறாள்...


அந்த இளம் பெண்ணின் 

மரணத்தின் உடலில் 

ஆயிரம் ஆயிரம் கதைகள் 

நிகழ்வாக புனையப்பட்டு 

அங்கிருந்த மக்களால் 

எழுதி எழுதி 

அழிக்கப்படுகிறது...


ஏதோவொரு நிலையில் எழுந்து 

இத்தனையையும் அவள் 

சூட்சம நிலையில் 

கேட்டு பரிதவிக்கிறாள்...


அவள் எதை காரணமாக நினைத்து 

காலத்தோடு கலந்தால் என்று 

எவரும் சரியாக புரிந்து கொள்ள 

மனமில்லாமல் 


அங்கே திரை இயக்குநர்கள் பலர் 

உடனடியாக உருவாகி 

ஒத்திகை பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது... 


தன் கதாபாத்திரத்தில் 

பொருத்திக் கொள்ள 

அங்கே யாரை நியமிக்கிறார்கள் 

அவர்கள் என்ற ஆவலில் 

அங்கே நோக்குகிறாள்...


அப்போதைக்கு அங்கே 

அவளை தவிர 

எவரும் இல்லை என்ற சூழலில் 


மரணித்த தன் உடலுக்கு 

அவர்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் தாங்க 

உயிர் கொடுக்கும் முயற்சியில் 

அத்தனை பேரும் ஈடுபட்டு 

வருவதை தவிர ...


அங்கே அவளின் இல்லாத 

அந்த வெறுமையை 

அங்கே உள்ளவர்கள் எவரும் 

கவலைப்படாமல்

எல்லா உறவுகளும் வந்ததை 

உறுதி செய்துக் கொண்டு 

தன்னை தீக்கு இரையாக்க தூக்கி 

செல்வதை பார்த்து 

அவள் அங்கே 

வாழ்வின் நிலையாமையை 

உணர்ந்து 

திருப்தியோடு அந்த தீக்கு 

தன்னை உணவாக கொடுத்து 

அமைதிக் கொள்கிறாள்...


இங்கே 

அடுத்த இளம் பெண்ணின் 

இறப்பு கதை 

எப்போது கிடைக்கும் என்று... 


அங்கே இருந்த மக்கள் 

சுடுகாட்டில் இருந்து 

இருள் சூழ்ந்த அந்த நிலத்தில் 

அந்த நெருப்பின் 

வெளிச்சத்தில்...


ஒருவருக்கொருவர் விடாமல் 

அவள் கதையை 

வேறொரு கோணத்தில் 

விவாதித்து கொண்டே 

அவளிடம் இருந்து விடை பெற்று 

செல்கிறார்கள்...


இன்னும் சில நாட்களுக்கு 

அவளின் கதையை 

வயல் ஏரி குளம் என்று 

எல்லா இடத்திலும் 

பேசி பேசி 


அவள் இறந்து விட்டால் 

என்பதையும் மறந்து... 

மீண்டும் மீண்டும் 

அவளுக்கு உயிர் கொடுத்து 

கொன்று ரசிக்கும் 

குரூரமான உலகம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/07/26.


ஞாயிறு, 5 ஜூலை, 2026

பெரும் பித்து நிலை...

 


இயற்கையின் மீதான 

பெரும் காதலோடு கூடிய 

பித்து நிலையில் நான் 

லயித்து கிடப்பதில் 

அங்கே என்னோடு பேசுவதில் இருந்து 

பலபேர் தள்ளி இருக்கிறார்கள்...

நானும் இயற்கையும் அது பற்றிய 

கவலை இல்லாமல் 

பெரும் காதலோடு 

பின்னி பிணைந்து கிடக்கிறோம்...

ஏன் இந்த பித்து நிலை 

உங்கள் இருவருக்கும் என்று 

முணுமுணுப்பவர்களுக்கு 

தெரியாது......

அது என்னிடம் எவ்வளவோ பொக்கிஷத்தை 

அள்ளி அள்ளி கொடுத்து விட்டு 

அது பற்றி எங்கேயும் 

மனிதர்கள் போல தம்பட்டம் அடித்து விடுவதில்லை...

அதனால் தான் 

ஒருவர் மீது ஒருவருக்கு 

பெரும் பித்து நிலை 

எங்கள் இருவருக்கும் என்றேன்...

சரிதான் அங்கே மக்கள் 

பேசிக் கொள்வது 

உண்மை தான் போலும் 

பெரும் கிறுக்கு பிடித்து விட்டது 

இந்த பெண்ணிற்கு என்று 

மீண்டும் முணுமுணுத்து 

செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.

வாழ்வின் அந்த பெரும் தீஞ்சுவை கொண்ட அமிழ்தத்தின் நிலை...

 





வாழ்வின் பெரும் அமிழ்தத்தை 

இந்த இயற்கை பருகுவதற்காக 

அங்கே போவோர் வருவோரிடம் 

கெஞ்சி கூவி கூவி 

அழைக்கிறது...


அதன் அற்புதத்தை உணராத 

மக்களோ அதை கொஞ்சம் கூட 

திரும்பி பார்க்காமல் 

அதற்கு சரியான பித்தர் என்ற பட்டத்தை 

அதற்கு கொடுத்து விட்டு 

திட்டி தீர்த்து விட்டு 

வேகமாக நகர்கிறார்கள்...


அதை பேரமைதியோடு 

கவனித்து விட்டு அதன் அருகில் சென்று 

அந்த அமிழ்தத்தை 

வாங்கி பருகி ...

நிலைத்த பேரானந்தத்தில் 

அங்கும் இங்கும் அலைவதை 

பார்த்து விட்டு 


அதே மக்கள் எனக்கும் 

இவரும் அந்த இயற்கையோடு சேர்ந்த 

பெரும் பித்தர் என்று 

நான் கேளாமலேயே பட்டத்தை 

சூட்டி விட்டு வேகமாக 

அங்கிருந்து நகர்கிறார்கள்...


நானும் இயற்கையும் 

அவர்கள் கொடுத்த பட்டத்தை 

மிகவும் பத்திரமாக 

வைத்துக் கொண்டு 

அவர்கள் நிலையை பேசி 

வாய் விட்டு கலகலவென்று 

சிரிக்க ....


அங்கே அந்த பிரபஞ்சம் மட்டும் 

எங்களை மௌனமாக 

சிறுமுறுவலோடு 

ரசித்து மகிழ்ந்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.


நான் நடத்தும் வேள்வி தீ..


 


தினம் தினம் 

ஒரே மாதிரியான காரியம் 

ஒரு வேள்வியை போல 

தோய்வின்றி நடத்துகிறேன்...


அங்கே ஆகூதியில் 

தினமும் 

என் ஆசைகளை பலியிட்டு 

இதோடு என்னை 

நிர்மலமான மனிதராக 

மாற்றி விடும் என்று 

மிகுந்த ஆவலோடு...


அந்த தருணத்தை 

தரிசிக்க காத்திருந்து 

ஏமாந்து போன நாட்கள் 

இங்கே எத்தனை என்றால் 


இதோ கடந்து செல்ல...

என்னிடம் இருந்து 

விடை பெற காத்திருக்கும் 

இந்த நாள் வரை தான்...


அந்த வேள்வி தீ 

அணையாமல் 

கனகனவென்று 

பெரும் வெப்பத்தால் 

என் மனமெங்கும் பரவி 

என்னை தகிக்க 

வைத்து நோகடிக்கிறது...


நான் அந்த வேள்வி 

நடத்துவதை நிறுத்தி விட 

எத்தனிக்கும் போதெல்லாம் 

என் மனம் என்னோடு 

கோபித்துக் கொண்டு 

பெரும் ஆக்ரோஷத்துடன் 

சண்டைக்கு தயாராகி விடுகிறது...


நானோ அதன் ஆக்ரோஷத்திற்கு

அஞ்சியே அந்த வேள்வியை 

நடத்தி வருகிறேன்...

போதுமடா சாமி இந்த 

மானிட ஜென்மம் என்று...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.










 

 

வியாழன், 2 ஜூலை, 2026

அந்த நடுநிசி பிரியாணி பிரியனும் அந்த ஏழை விவசாயியின் துயரமும்......


அந்த ஏழை விவசாயியின் 

உழைப்பில் விளைந்த 

விலை மதிக்க முடியாத 

நெல் மணிகள் 

இந்த பிரபஞ்சத்தின் 

பசியை தீர்த்து 

அந்த மனங்கள் நிறைவடைய 

அதிகாலையில் எழுந்து 

ஓடி ஓடி களைத்து விடும் போது 

அவனுக்கான அங்கீகாரம் 

எங்கே என்று 

ஏழு உலகிலும் 

தேடி அலைந்தாலும் 

கிடைப்பதில்லை...


இங்கே எந்த உடல் உழைப்பையும் 

மதிக்காமல் 

வெட்டி கதைகளை பேசி 

அந்த விவசாயியின் உழைப்பை 

மதிக்காமல் நடு இரவில் 

பிரியாணி சாப்பிட்டு விட்டு 

அங்கே சாலையில் 

தனது இரு சக்கர வாகனத்தில் 

அதி வேகமாக 

அந்த நடுநிசி இரவை 

கிழித்துக் கொண்டு பறக்கிறான் 

அந்த ஒருவன்...



அங்கே பகலில் 

மும்முனை மின்சார சரியாக 

கிடைக்காத காரணத்தால் 

எரிபொருளால் நிரப்பிய 

வண்டியில் சென்றால் கூட 

இந்த இயற்கை நோகுமே என்று 

சைக்கிளில் 

அந்த நான்கு வழி சாலை வழியாக 

சென்று கொண்டிருந்த 

அந்த ஏழை விவசாயியின் 

இரேழு உலகிலும் விலை 

சொல்ல முடியாத உயிரோ 

அந்த நடுநிசி பிரியாணி பிரியன் 

ஒருவனால் காவு வாங்கப்படுகிறது ...


அங்கே அந்த உயிர் 

துடித்து துடித்து 

இறப்பதை கொஞ்சமும் 

சட்டை செய்யாமல் 

அவன் மட்டும் அல்ல 

அந்த நான்கு வழி சாலையில் 

அதி அற்புதமான சொகுசு சிற்றுந்தில் 

போகிறவர்கள் 

அந்த விபத்தை கண்டும் 

காணாதது போல 

சிற்றுந்தின் உள்ளே 

தன் சக பயணியிடம் 

அங்கே பாருங்கள் 

ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டது என்று 

உணர்வற்ற மொழியில் 

கடத்திக் கொண்டே 

அந்த விவசாயியின் இரத்தத்தில் 

தன் சிற்றுந்தின் டயரை 

ஏற்றி கடந்து செல்கிறார்கள்...


இங்கே அந்த சொகுசு சிற்றுந்தில் 

செல்பவனின் ஜீவனுக்கும்

ஜீவித்து இருக்க 

அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த 

அந்த ஏழை விவசாயியின் 

ஒரு பருக்கை சோறு 

அவன் தட்டில் ஏதோவொரு நாள் விழுந்து அவனும் சாப்பிட்டு இருக்கலாம்... 

அவனுக்குரிய மரியாதை இப்படி கிடைத்து இருக்கக் கூடாது என்று 

அங்கே இரவு பறவைகள் சிறகடித்து 

தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி

தனது இறுதி அஞ்சலியாக 

தான் அமர்ந்து இருந்த மரத்தில் இருந்து 

பூக்களை தனது அலகால் 

கொய்து அவன் உடலில் தூவி 

தனக்காக தானியங்கள் விளைவித்து

தன் ஜீவனை காப்பாற்றியவனுக்கு

கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை 

அந்த இருள் கருணையோடு 

அந்த பறவைகளுக்கு 

தன் விழிகளில் கண்ணீர் மல்க 

கைகூப்பி நன்றி தெரிவித்து கொண்டு 

இருந்ததை 

இந்த பிரபஞ்சம் மௌன சாட்சியாக 

மனம் கனத்து 

வேடிக்கை பார்த்தது 


தன் கண்களில் வழியும் 

கண்ணீரை துடைக்க மறந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/07/26.



வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...