ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

சுவாரஸ்யம் அவசியம்

 

ஏதோ வாழ்கிறேன் என்பதற்கும்

வாழ்வை நகர்த்துதல் என்பதற்கும்

பெரும் வேறுபாடு கிடையாது

இங்கே....

இரண்டையும் விட்டு விட்டு

புது விதமாக வாழ்தல்

சுவாரஸ்யமான

வாழ்வியல் நகர்தல்

என்பேன்...

ஏதோ ஒரு சொட்டு சுவாரஸ்யமான நிகழ்வொன்று

என்னை இங்கே

தழுவுதலை விட்டு விடவில்லை...

அப்படியே அது தழுவவில்லை என்றாலும்

நான் அதை வாரி அணைப்பேன்...

இங்கே எனக்கு சுவாரஸ்யம்

அவசியம்...

சலிப்பல்ல...

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 28 ஜனவரி, 2023

காலத்தின் பெருந்தன்மை

 

காலம் என்னை

சிரிக்க வைக்கிறது;

காலம் என்னை அழ வைக்கிறது;

காலம் என்னை சஞ்சலப்படுத்துகிறது;

காலம் என்னை

கொல்கிறது...

இப்படி அங்கே பல கோடி பேர் 

பிதற்றுவதை கேட்டு

காலம் எந்தவித கோபமும் இல்லாமல்

கொஞ்சம் புன்னகைத்து

அவர்களை கடந்து செல்கிறது...

காலத்தின் பெருந்தன்மை 

குணத்தை பார்த்து

கொஞ்சம் சிலிர்த்து தான்

போகிறேன் நான்...

#காலம்

#இளையவேணிகிருஷ்ணா.

கானல் நீர்

 

அந்த கானல் நீருக்கு தெரியாது

இன்னும் சிறிது நேரத்தில்

நாம் வசைப்பாடப்பட போகிறோம் என்று...

மாயையை உணர மறுக்கும்

மனதை வசைப்பட மறுக்கும்

உலகில்...

கானல் நீரின் உண்மையை

இங்கே யார் உணரக்கூடும்?

#கானல்நீர்.

#இளையவேணிகிருஷ்ணா.

நதியும் நானும்

 

அந்த வறட்சியான எண்ணங்களுக்கிடையே

நடக்கிறேன்...

பாதை பழகிய பாதங்கள்

எந்தவித தடையும் இன்றி

நடக்கிறது...

என் மனமெனும் திரையில்

ஏதோவொரு காட்சி படம்

ஓடி என்னை கவர பார்க்கிறது...

நான் அதை கண்டுக் கொள்ளாமல் பயணிக்கிறேன்...

வாழ்வின் சுவை என்று

ஏதேதோ சொல்லிக் கொண்டே 

இருப்பவர்களை கூட இப்போது

நான் ஒரு வெறுமையான

பார்வையோடு கடந்து செல்கிறேன்...

எந்த சந்தர்ப்பத்தையும்

நான் தேடி 

அலையவில்லை...

அமையும் சூழலை கூட

தவிர்க்கிறேன்...

காலியான மனம் ஒன்றை

வேண்டும் போது

ஆயிரம் ஆயிரம் விசயங்கள் அத்தனையும் என்னை

வெறிக் கொண்டு தாக்குகிறது...

நான் அந்த தாக்குதலில்

மறைந்துக் கொள்ள போராடும் போது

அங்கே ஒரு நதியின்

இலேசான சலசலப்பு

என்னை அருகில் அழைத்து

கரையோரம் அமர வைத்தது

நானும் நதி சொல்லி தந்த

பாடத்தை கடத்திக் கொண்டேன் என் மனதிற்குள்...

நான் ம்ம் என்று தலையசைத்ததை பார்த்து

என் காதில் ஏதேனும் ஒலிக் கருவி வைத்து இருக்கிறேனா என்று

பக்கத்தில் வந்து ஆராய்ந்து

ஏமாற்றம் அடைகிறார்கள் சிலர்..

அந்த இருள் சூழ்ந்த வேளையில்...

நானும் நதியும்...

பேரன்பில் அமைதிக் கொள்கிறோம்...

வாழ்வின் சுவை என்று

சொல்லால் சொல்லி விட

முடியாது என்று

இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?

#வாழ்வின்சுவை.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 21 ஜனவரி, 2023

காலமெனும் நதி

 

காலமெனும் நதி

என்னை கடத்தி செல்கிறது

நான் அதில் சும்மா

மிதக்கும் மிதவையாக...

எதையும் செய்யாமலேயே

நான் கரையேறுகிறேன்...

அங்கே பல கோடி பேர்

அந்த காலத்தோடு போராடி

மூழ்கிக் கொண்டு

இருப்பதை பார்த்து

நான் கரையில் நின்று

ஆச்சரியமாக பார்த்து

புன்னகைக்கிறேன்...

போராடாதீர்கள்...

வாழ்வெனும் நதி

உங்களை எதையும் செய்யாமல் இருக்க தான்

வலியுறுத்துகிறது என்று

முணுமுணுத்து

மெல்லமாக நகர்கிறேன்...

நான் அந்த காலமெனும் நதிக்கு அமைதியாக

நன்றி சொல்லி விட்டு....

#காலமெனும் நதி.

#இளையவேணிகிருஷ்ணா.

இறப்பை கொண்டாடுங்கள்

 

இங்கே எல்லாமே

ஒரு நிகழ்வு தான்...

இறப்பை கொண்டாட

தெரியாத எவரும்

வாழ்வை ரசனையோடு

வாழ தெரியாதவர்கள் என்று தான் 

சொல்வேன்...

இதை நீ சொல்ல 

என்ன தகுதி என்று

அங்கே நாலு பேர்

கேட்கிறார்கள்..

என்னை தவிர

இதைப் பற்றி

எவராலும் இதை 

அவ்வளவு தைரியமாக 

சொல்ல முடியாது

ஏனெனில் நான் எமனோடு

அடிக்கடி போராடியவள்...

#இறப்பைகொண்டாடுங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

எனை தழுவும் போதை

 

இங்கே எனை தழுவும்

ஒரு போதையொன்று

உள்ளது என்றேன் காலத்திடம்...

அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டு

அது ஆவலோடு நிற்க

நான் இதோ உன்னை நேசித்து கிடக்கும்

போதை தான்

என் வாழ்வில் நான் 

எப்போதும் விரும்பும்

ஒரு போதை என்றேன்

புன்முறுவலோடு...

காலமோ நானும் தான்

உன்னை நேசித்து கிடக்கும்

போதையாகிறேன் என்றது

சற்றும் சலிக்காமல்...

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

நொடியின் நேசம்

 

நீங்கள் சோர்வுறும் போதெல்லாம்

உங்கள் அருகில் கண்ணுக்கு 

தெரியாத நொடி

உங்களை ஆரத்தழுவி

ஆசுவாசப்படுத்திக் கொள்ள

காத்திருக்க

நீங்களோ அந்த நொடியின்

பெரும் காதலை புறக்கணித்து

வேறொன்றில் காயப்பட்டு

நிற்கும் போது

உங்களை பேரன்போடு 

நேசித்த நொடி

உங்கள் மீது கொண்ட பிரியத்தை 

தனது கண்ணீரில் கரைக்கிறது...

#நொடியின்நேசம்.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 20 ஜனவரி, 2023

அத்தனையும் துறந்து விடு

 

அத்தனையும்

துறந்து விடு

துறந்து விடு என்கிறார்கள்

அங்கே...

நானோ வெற்று பாத்திரம் கூட 

இல்லாமல் சுற்றுகிறேன்...

என் ஊண் உடம்பை பற்றிய

நினைவுகள் கூட

பாரமென உணர்வற்று

திரிகிறேன்...

என்னை பார்த்து

அத்தனையும் துறந்து விடு

என்கிறார்கள் அங்கே...

எதை என்று

யோசிக்கும் போதே

புரிகிறது...

இதைத் தான் என்று...

#தத்துவகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த அசாதாரண நிகழ்வு

 

அந்த அசாதாரண நிகழ்வொன்றில்

நானும் தனிமையும்

பேசாமல் பேசிக் கொள்கிறோம்...

எவ்வளவு நேரம் கணக்கில்லை...

காலம் தான் தொணதொணவென பேசி

எங்களை ஒரு நிகழ் கால உணர்வு நிலைக்கு

கொண்டு வந்தது...

நாங்கள் பிரிய மனமில்லாமல் பிரிந்து

செல்கிறோம்...

அங்கே ஒரு கூட்டம்

என்னை பார்த்து

ஹோவென சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறது...

ஏன் இவ்வளவு நேரம் என்று...

நானும் அமைதியும்

பேசாமல் பேசி மகிழ்ந்த ரகசியத்தை

சொல்ல தோன்றாமல்

ஒரு மெல்லிய சிரிப்புடன்

அவர்களோடு கலக்கிறேன்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

காட்சி பிழை

 

சாதாரணமாக வாழ

உனக்கென்ன கஷ்டம்

என்று என்னை சூழ்ந்துக் கொண்டு 

கேட்கிறார்கள்...

எனக்கு அசாதாரணத்தை தவிர 

வேறு எப்படியும்

வாழ தெரியாது என்கிறேன் நான்..

இங்கே எனக்கு இயல்பென

இருப்பது அவர்களுக்கு

இயல்பில்லை...

இங்கே ஒரே நிகழ்வு

பல பேருக்கு பல வகைகளில் காட்சி

தருவது யாருடைய பிழை?

பதில் இங்கே வெறும் 

ஆழ்ந்த அமைதி மட்டுமே...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

காற்றினூடே கலந்த நேசத்தின் வாசம்

 

நனைக்கும் மழைத்துளியொன்றின்

ஈரத்தில் 

உன் பேரன்பு மட்டுமே 

தனித்து என்னை

குளிர்விக்கிறது...

அந்த குளிரின் தன்மை

நீடித்து இருக்கக் கூடாதா என்று 

ஏங்கி தவிக்கும்

மனதை கொஞ்சம் 

அமைதிப்படுத்தி செல்கிறது

அந்த காற்றினூடே கலந்த

உன் நேசத்தின் வாசம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

காதலும் ஜென்னும்

 

உனக்கு காதல்

இயல்பில்லை என்று

சொல்கிறது மனது...

ஆம்... இயல்பில்லை தான்..

என்கிறேன் நான்...

பிறகெப்படி காதல் கவிதை

என்று கேட்கிறது...

அது ஒரு ஜென் நிலை என்கிறேன் நான்...

என்ன குழப்புகிறாய்

என்றது மனது...

ஆம் நீ கொஞ்சம் அமைதியாக விலகி இரு..

நான் தற்போது அந்த ஜென் நிலையில்

நான் தொலைத்த அந்த காதல் நிலையை

தற்போது உணர்ந்துக் கொள்கிறேன் என்றேன் நான்...

மனதோ சரியான பைத்தியமோ என்று

கொஞ்சம் என்னை பார்த்து

மிரட்சியோடு விலகி செல்கிறது...

இப்போது முழுமையாக உணர்கிறேன் நான்

அந்த ஜென் நிலையை...

#காதலும்ஜென்னும்.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 16 ஜனவரி, 2023

ஜீவனோடு பயணிக்கும்

 

மாடு என்று சொல்லும் போதே

வேக வேகமாக வாசற்படியை

தாண்டி பார்க்கிறேன்..

அது நான் வளர்த்த மாடாக கூட இருக்கலாமோ என்று

இல்லை என்று பார்த்து விட்டு 

வீட்டின் உள்ளே நுழையும் போது

ஏனோ தெரியவில்லை

அது தற்போது உயிரோடு இல்லை 

என்றாலும்

பரவாயில்லை...

எவரின் கூர்மையான ஆயுதத்திற்கு மட்டும்

பலியாகி இருக்கக் கூடாது என்று 

நினைக்க தோன்றுகிறது...

கூடவே கண்களின் ஓரம்

கண்ணீர்...

அந்த பந்தம் முடிந்து

கிட்டத்தட்ட

இருபது வருடங்களுக்கு 

மேலாகிறது...

இதோ இப்போது இந்த நொடியில் 

நான் அதனோடு

மகிழ்ந்திருந்த தருணத்தை

மீட்டி பார்க்கிறேன்...

அந்த நினைவுகள் ஏனோ

எனக்கு சுகம் கொடுக்கவில்லை...

மேலும் மேலும்

வலியை தான் கொடுக்கிறது..

பந்தம் பெரிதென நான் எப்போதும் 

நினைப்பதில்லை...

எனினும் இந்த மாட்டோடு

நான் கொண்ட பந்தத்தை மட்டும் 

மறக்க முடியவில்லை...

கொன்றால் பாவம்

தின்றால் தீரும் என்று

எவர் சொன்னாலும்

உங்கள் முகம் சிவப்பது 

மட்டுமில்லை..

ஓங்கி நாலு அறை விடத் தோன்றும்...

ஒரு மாடை வளர்த்து பாருங்கள்...

அந்த ஜீவனின் பந்தம்

உங்கள் ஜீவனோடு

பயணிக்கும் அல்லது

பிரிந்து உங்கள் ஜீவனை

சுட்டெரிக்கும்...

#மாட்டுப்பொங்கல்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 11 ஜனவரி, 2023

துயரம் வெறும் தோசையிலா

 

அங்கே

பெரும் துயரத்தில்

நடுங்கி கதறுகிறான் 

ஒருவன்...

இங்கே காலை உணவில்

தினமும் தோசை தானா என்று துயருற்று

சினந்துக் கொள்கிறான்..

இன்னொருவன்

தன் மனைவியிடம்...

அதுசரி ...

துயரங்கள் இங்கே

துயரங்கள் தானே..

ஆனால் ஒரு விசயம்...

துயரங்களில் ..

அதன் இயல்பில்...

கரைய நினைப்பவர்கள்

யோசியுங்கள்..

அதன் இயல்பை

மாற்ற முயற்சி செய்யாதீர்கள்...

துயரத்தின் மகிமை

நீங்கள் நினைப்பது போல

வெறும் தோசை தானா

என்று உப்புசப்பு இல்லாமல்

அடங்கி விடுவது இல்லை...

#வாழ்வியல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

ஒரு எழுத்தாளனின் வலி

 

ஒரு எழுத்தாளனின் வலியை

எவரிடமும் பகிர

அவ்வளவு எளிதாக

அவன் கற்பனை மனம்

இடம் கொடுப்பதில்லை..

அத்தனை வலிகளையும்

தனது கவிதைகளில்

கரைத்து விட்டு போய் விடுகிறான்...

வாசிக்கும் யாரோ தான்

அத்தனை வலிகளையும்

சுமக்க முடியாமல் சுமந்து

திரிகிறார்கள்...

என்னவாக இருக்கும்

அந்த எழுத்தாளனின் வலி

என்று...

அவர்கள் அதிலேயே திளைத்திருக்க

இங்கே எழுத்தாளனுக்கு

எழுதுவதற்கு இன்னும் பல பல கவலைகள் வரிசைக் கட்டி நிற்கிறது...

அவன் அந்த வலிகளிடம் கெஞ்சுகிறான்...

கொஞ்சம் பொறுங்கள் ...

இதோ இந்த வலியை

இந்த கவிதையில் கரைத்து விட்டு வருகிறேன் என்று..

அவன் பொழுதுக்கு

எப்படியோ இரை கிடைத்து விடுகிறது...

பாவம் அந்த கவிதையை

வாசிப்பவர்கள் தான்...

#வாழ்வியல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நான் அப்படி தான்

 

பல தருணங்கள்

என்னை உதாசீனப்படுத்தி

கடந்து விடுகிறது

பின் விளைவுகளை

எண்ணாமல்...

நான் அதை பொருட்படுத்தாமல்

கடந்து செல்கிறேன்

கொஞ்சமும் தயக்கமோ

கலக்கமோ இன்றி...

தொலைதூரம் சென்ற பிறகு

என்னை நினைத்து

ஏங்கி அழுகிறது

அந்த தவற விட்ட தருணங்கள்...

நான் அப்போதும்

சிறிதும் இரக்கமின்றி

நிற்காமல் கடந்து செல்கிறேன்...

எப்போதும் ஒன்று அல்லது இரண்டு முறை தான்

நான் வாய்ப்பு கொடுப்பேன்

என்பது என்னை நன்கு

அறிந்தவரை தவிர

எவர் அறியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 9 ஜனவரி, 2023

காலத்தின் புரிதல்


இங்கே நான் வகுத்து வைத்த 

எந்த விதியிலும்

நீ பொருந்தவில்லையே

என்று

என்னை இழுத்துச் சென்ற

காலம் களைத்து போய்

சொன்னது...

அதைத் தான் நான்

உன்னிடம் பலமுறை

சொல்ல முயற்சி செய்தேன்

நான் பேசும் போதெல்லாம்

உஸ்.. பேசாமல் வா

என்று அதட்டி உருட்டி

இழுத்து வந்து விட்டு

இப்போது என்மீதே

பழி போடுகிறாய்...

நான் என்ன செய்ய இயலும் என்று

நான் காலம் இழுத்து வந்த

களைப்பில் முனகுகிறேன்...

#வாழ்வியல்கவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

தோற்றது இங்கே இருவரும்

 

சராசரி வாழ்வியலை

கற்றுக் கொள்ள

காலம் வற்புறுத்துகிறது..

நானோ மிக குறைந்த மதிப்பெண் கூட

வாங்க முடியாமல்

சராசரி வாழ்வியல் எனும்

பாடத்திடம் தோற்கிறேன்..

நான் தோற்கிறேன்...

சரி ஏற்றுக் கொள்ளலாம்..

காலம் ஏன் தோற்க வேண்டும் என்னிடம்?

இருவருமே தோற்கிறோம்

இங்கே...

இது ஒரு விசித்திரமான

வாழ்வியல் என்று

கண்டவர்கள் கேலி செய்து

போகிறார்கள்...

நானும் காலமும்

எங்கள் தோல்வியை நினைத்து நினைத்து

அழுகிறோம் சிரிக்கிறோம்

அழுகிறோம் சிரிக்கிறோம்...

இப்படி இருப்பது

எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல...

#வாழ்க்கை

#இளையவேணிகிருஷ்ணா.

நான் கொஞ்சம் உறங்க வேண்டும்

 

விடை தெரியாத கேள்விகள்

ஆயிரம் ஆயிரம்

மனதில் அலைபோல

வந்து வந்து போகிறது...

ஒரு கேள்விக்கேனும்

விடை கிடைத்தால் போதும்

நான் கொஞ்சம் ஆறுதல் அடைவேன்...

விடைகளை தேடி தேடி

ஓய்ந்தது மனது...

கேள்விகளெனும் அலைகளே...

கொஞ்சம் அமைதியடையுங்கள்...

நான் கொஞ்சம் உறங்க வேண்டும்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

நானும்பேரமைதியும்

 

ஆழ்ந்த அமைதியும்

நானும் எப்போதும்

போரிட்டுக் கொள்வதில்லை

மாறாக நாங்கள் நேசித்து கிடக்கிறோம்...

எவரின் தொந்தரவும் இல்லாமல்...

இங்கே இணைபிரியா

விசயங்கள் ஆயிரம் ஆயிரம்

இருக்கும் போது

நானும் அமைதியும்

ஒரு தனிவகை...

இல்லை இல்லை தனிசுவை....

#இரவுகவிதை

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த விசித்திரமான வழக்கு

 

அப்படி ஒரு விசித்திரமான வழக்கொன்றை போல பல வழக்குகளை அந்த நீதிபதி பார்த்து இருக்கிறார் என்றாலும் இது அதனிலும் விசித்திரமான வழக்கு.. அந்த வழக்கு சபைக்கு விசாரணைக்கு வந்தது..நீதிபதி வழக்கை விசாரிக்க தொடங்கினார்..

என்னம்மா பிரச்சினை என்று நீதிபதி கேட்டார்..

நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லை நீதிபதி அவர்களே..சென்ற வேலை தங்களுக்கு முடிந்ததா என்று தான் கேட்டேன் கணவரிடம்.. அதற்கு அவர் என்ன சொல்லி இருக்க வேண்டும் நீங்களே சொல்லுங்கள் ஐயா என்றார் அந்த மனைவி...

நீதிபதியோ சென்ற வேலை முடிந்தது இல்லை என்று தான் பதில் சொல்லி இருக்க வேண்டும் அம்மா என்றார்..

அதைத் தானே சொல்லி இருக்க வேண்டும்..அதை சொல்லாமல் பயங்கரமாக என்னை திட்டி விட்டார் ஐயா.. இவரோடு எல்லாம் என்னால் வாழ இயலாது ஐயா என்றார்..

உடனே நீதிபதி கொஞ்சம் பொறு அம்மா என்று சொல்லி விட்டு கணவர் பக்கம் திரும்பி நீங்கள் அதற்குரிய பதிலை சொல்லாமல் ஏன் அவர்களை சம்மந்தமே இல்லாமல் ஏன் திட்டினீர்கள் என்று கேட்டார்..

கணவரோ ஐயா நானே அப்போது தான் உள்ளே நுழைந்தேன்..உடனே எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்று எத்தனை முறை அவளிடம் சொல்வது ஐயா? இப்போது இங்கே தான் தெரிந்துக் கொண்டேன்.அவள் என்ன கேள்வி கேட்டாள் என்றே என்றார்..

உடனே நீதிபதி அந்தளவுக்கு நீங்கள் ஏன் உணர்ச்சிவசப்பட்டு கோபம் அடைகிறீர்கள் என்று கேட்டு விட்டு அந்த மனைவியிடம் திரும்பி அம்மா நீ கேட்ட கேள்வியையே அவர் இப்போது தான் தெரிந்துக் கொண்டார் என்று சொல்கிறார்.. அதனால் இதை வழக்காக விசாரிக்க முடியாது.. நீங்கள் அவரை மன்னித்து விடுங்கள் என்றார்..

சரிங்க ஐயா..இனி அப்படி நடக்காது என்று அவரிடம் வாக்கு மூலம் வாங்கிக் கொடுங்கள் ஐயா என்றாள்.

உடனே கணவரோ அதெல்லாம் முடியாது ஐயா அவளோடு இனி சேர்ந்து வாழ இயலாது என்றார்..

நீதிபதி ஏன் சேர்ந்து வாழ முடியாது என்று சொல்கிறீர்கள்.அவர் தான் மன்னித்து விட்டேன் என்று சொல்கிறாரே.. நீங்கள் தான் இனி கோபத்தை குறைத்து ஒழுங்காக அவரோடு ஒத்து வாழ வேண்டும் என்றார்..

உடனே அந்த கணவரோ ஐயா அவள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை என்று என்னை முட்டாள் என்று திட்டி விட்டாள்.. அதனால் இப்படி கணவரை மோசமாக நடத்தும் அவளோடு வாழ முடியாது என்று சொன்னான்.

நீதிபதி இப்போது பெருமூச்சுடன் ஏன் அம்மா நீங்கள் இப்படி அவரை முட்டாள் என்று திட்டினீர்கள் என்று கேட்டார்..

உடனே அந்த மனைவி அதற்கு அவர் தான் உடனே நானா முட்டாள் நீதான் முட்டாள் என்று சொல்லி விட்டாரே.. அதற்கும் இதற்கும் சரியாக போய் விட்டது ஐயா என்றார்..

உடனே நீதிபதி அந்த கணவரிடம் அதுதான் சரி என்று நினைத்து நீங்கள்தான் பதிலுக்கு அதே வார்த்தை கொண்டு அவரை திட்டி விட்டீர்களே.. அதனால் இதனோடு தொடர்புடைய இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்று சொன்னார்..

உடனே அந்த தம்பதிகள் அதெல்லாம் முடியாது நீங்கள் இந்த பிரச்சினைக்கு பஞ்சாயத்து செய்து அனுப்பி வையுங்கள் ஐயா என்றார்கள்..

அது தான் வழக்கு முடிந்தது என்று சொன்னேனே..

வழக்கு எங்கே ஐயா முடிந்தது.... எங்கள் பிரச்சினையை முடித்து வையுங்கள் என்றார்கள்..

விவாகரத்து எல்லாம் தர முடியாது என்றார் நீதிபதி.

உடனே அந்த தம்பதிகள் விவாகரத்து யார் ஐயா கேட்டார்கள்.. என்று கேட்டார்கள்..

இப்போது நீங்கள் தானே கேட்டீர்கள் விவாகரத்து என்றார் கணவரை பார்த்து..அவள் மன்னித்து சேர்ந்து வாழ ஒப்புக் கொண்டு நான் வாழ்வதா அதனால் தான் ஐயா அப்படி சொன்னேன் என்றார்..

 என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இது நீதிமன்றம்.. உங்கள் விளையாட்டு மன்றம் இல்லை என்றார் கொஞ்சம் கோபமாக.. நாங்களும் அப்படி நினைக்கவில்லை ஐயா.. அதனால் தான் இங்கே வந்தோம். எங்கள் சண்டையை தானே தீர்க்க சொன்னோம் என்றார்கள் கோரஸாக..

நீதிபதி மைண்ட் வாய்ஸில் ஸ்வப்பா இப்பவே கண்ணக் கட்டுதே 🙄😟 என்று நினைத்து அப்படியே அமர்ந்து விட்டார்...

இப்போது என்ன செய்ய வேண்டும் என்று மிகவும் பொறுமையாக கேட்டார்.. எங்கள் பிரச்சினையை தீர்த்து வையுங்கள் அதுதான் வேண்டும் என்றார்கள்..

நீதிபதி இந்த ஒரு வழக்கை நாம் எப்படி கையாள்வது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.. பிறகு வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து வீட்டுக்கு சென்று விட்டார்..

வீட்டில் நுழையும் போதே நீதிபதி மனைவி ஏன் இன்று இவ்வளவு தாமதம்.. அவ்வளவு பணிகளா உங்களுக்கு இன்று என்று கேட்டார்...

ம்ம் என்று சொல்லி விட்டு உள்ளே மிகவும் அமைதியாக நுழைந்து விட்டார்.ஏனோ இன்றைய வழக்கில் வந்த அந்த பெண்மணி ஞாபகத்துக்கு வந்து வந்து போனாள்..நீதிபதிக்கு...

#ஞாயிறு #குட்டி

#நகைச்சுவைகதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 6 ஜனவரி, 2023

தோல்வி என்பது மாயா

 

வாழ்வின் வெகுசில சமயங்களில்

எனக்கும் நான் மேற்கொள்ளும் 

நிகழ்வுகளில் 

சறுக்கல்கள் 

நிகழ்ந்து இருக்கிறது...

அது வெறும் சறுக்கல்கள் தான்..

தோல்வியல்ல...

நான் உற்சாகமாக 

பயணித்துக் கொண்டே

இருப்பேன்...

தோல்வி என்பது

என்னை பொறுத்தவரை மாயை...

வாழ்வின் அழகிய தருணங்கள் 

எத்தனையோ

இருக்கும் போது

ஒரு சில நிகழ்வுகள்

எப்படி தோல்வி என்று

எடுத்துக் கொள்ள முடியும்??

#காலைசிந்தனை

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 5 ஜனவரி, 2023

விடை தெரியாத பயணத்தில்

 

விடை தெரியாத 

பயணத்தில் தொடங்கி

தொடர்ந்து பயணித்து

விடை தெரியாமலேயே

விடை பெறுகிறோம்

இந்த பிரபஞ்சத்தை விட்டு...

தொடர்ந்து பயணிக்கும்

ஆன்மாவோ

ஓடி ஓடி களைத்து விடுகிறது

மீண்டும் ஒரு கருசிறையில்

அகப்பட்டு ஆழ்ந்த துயரத்தில் துவள வேண்டுமே என்று..

#இளையவேணிகிருஷ்ணா.

ஆருத்ரா தரிசனம்

 

அவ்வபோது வரும்

மூச்சு திணறலில்

நீ உன் கொவ்வை செவ்வாயின் 

புன்முறுவல் பூத்து 

காட்சி கொடுப்பது பெரிதல்ல...

எமன் வந்து மூச்சறுக்கும் போது நீ பேரொளி கொண்டு

உன் தூக்கிய திருவடியில்

மறைத்துக் கொண்டால் போதும்...

வேறெதுவும் வேண்டாம்

என் ஆத்ம நாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

#ஆருத்ராதரிசனம்

அமைதி தொடர்கிறதா?

 

ஆசுவாசத்தை தேடி

அலைகிறீர்கள்

மனிதர்களே...

இங்கே 

இந்த இயற்கையை

பாருங்கள்...

இயல்பான அமைதியில்

பயணிக்கிறது...

இயல்பில் இருந்து வெகுதூரம் பயணம் செய்து

கொண்டே

தேடி அலைகிறோம்

தொலைத்து விட்ட

தொலைந்து விட்ட

இயல்பை இங்கே..

பயணங்கள் இங்கே

முடிவடையவில்லை

தொடரும் பயணத்தில்

நம் அமைதி நம்மோடு

தொடர்கிறதா என்பதே

இங்கே கேள்வி...

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...