ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 30 நவம்பர், 2022

இசையோடு ஒரு பயணம்

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி.. இன்று யார்? பொறுத்து இருங்கள்.. தெரிந்து கொள்ள 😊.

கீழேயுள்ள உள்ள லிங்கில் இணைந்து பயணிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

தற்போது இந்திய நேரம் (8:00pm to 9:00pm)எட்டு மணி முதல் ஒன்பது மணி வரை நாளிதழில் இன்று வெளியான முக்கியமான செய்திகளை கேட்கலாம்..

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

காலத்தின் கண்டுக் கொள்ளாத பயணம்


வாழ்க்கை எதையும் 

கண்டுகொள்ளாமல் 

பயணிக்கிறது;

நாம் பல இடங்களில்

தேங்கி நிற்கும் போது

அது பல மைல் தூரம்

கடந்து கொஞ்சம் திரும்பி பார்த்து

நாம் எங்கோ தேங்கி

தடுமாறி நிற்பதை பார்த்து

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் 

பயணிக்கிறது..

நான் அந்த இரக்கமற்ற தன்மையை 

நேசிக்கிறேன்..

இங்கே இரக்கத்தால்

ஆவது ஒன்றுமில்லை..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 29 நவம்பர், 2022

இரவின் கதகதப்பில்


அத்தனை நட்சத்திரங்களையும்

ரசிக்கிறேன்..

இந்த இரவு இதமான 

அமைதியை தந்து 

எனது செயலை வேடிக்கை

பார்க்கிறது..

நட்சத்திரங்களோ குதூகலிக்கிறது

எனது நேசத்தை பார்த்து...

நாங்கள் அமைதியாக

எங்கள் காதலை

பரிமாறிக் கொண்டோம்...

இதோ விடிவெள்ளி வந்து விட்டது

நான் விடைபெற 

எத்தனைக்கும் போது 

ஒரு நட்சத்திரம் 

என்னை தழுவ

வேகமாக விழுகிறது..

இதோ இந்த ஆத்மார்த்தமான

காதலின் அருமை

எவருக்கு புரியக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு 🐦 பறவை நான்


சூரியனின் ஆதிக்கத்தில்

பிறந்து

சந்திரனின் ஆதிக்கத்தில்

அமைதியாக நகரும்

இரவை ரசித்து

தனது சிறகை விரித்து பறக்கும்

இரவு பறவை நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 28 நவம்பர், 2022

எதையும் கண்டுகொள்ளாமல் பயணியுங்கள்

 


ஆங்கிலத்தில் ஒரு அழகான கவிதை உள்ளது..அதை நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது எனது பாடத் திட்டத்தில் வாசித்த ஞாபகம்..Men May come; Men May go; but I go on forever..

இந்த கவிதையில் வரும் வரிகள் இந்த வரிகள் மட்டும் நான் அடிக்கடி முணுமுணுக்கும் வழக்கம் உண்டு..

இங்கே நமது வாழ்வில் பல மனிதர்கள் வரலாம் போகலாம்.. ஆனால் எப்போதும் நமது பயணம் மட்டும் உற்சாகமாக தொடர்ந்து நடைபெறும் போது எந்தவித அதிர்வுகளையும் உணராமல் பயணிக்க முடியும்..இது ஒரு அழகான வாழ்வியல் தானே நேயர்களே 🎻🙏🎻.

#இளையவேணிகிருஷ்ணா.

நதியும் நானும்

 

சிறு நதி போல

நகர்கிறேன்...

நகரும் தொலைவில்

எங்கே தொலைந்தேன் என்று யோசிக்கிறேன்...

இங்கே எவரும் நதியின் போக்கை பற்றி

கவலைப்படாதபோது

நான் அதில் மூழ்கி

சுவாரஸ்யமான நிகழ்வொன்றை நடத்த

சாத்தியமாயிற்று...

இங்கே போக்கிடத்தை பற்றி

கவலைக் கொள்ளாமல்

பயணிப்பது ஒரு சுகம்..

எனக்கும் நதிக்கும்

அது பழக்கம்...

எத்தனை கசடுகளை

நாங்கள் சுமந்த போதும்

போகிற போக்கில்

வீசி எறிந்து விட

கரையொன்று அங்கே உண்டு...

சுமையற்ற பயணிகளாக

நானும் அந்த நதியும்

நெடுந்தூரம் பயணிப்போம்

இங்கே எவரும் 

கண்டுக் கொள்ளாமல் 

இருப்பது எங்களுக்கு

நிம்மதியாக போயிற்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் இந்த இரவும்

 


இரவெனும் வெளியில்

சத்தம் இல்லாமல் பயணிக்கிறேன்..

இங்கே எதிர்பார்ப்பு இல்லாத

அரவணைப்பை

இரவை தவிர எதுவும்

தர இயலாது..

சல்லி காசு பயன் ஏதும்

என்னிடம் எதிர்பார்க்காமல்

ஒரு அரவணைப்பு

இயற்கையால் கொடுக்கப்பட்டு இருக்கிறது..

இன்றைய நிகழ்வை

மீட்டி பார் என்கிறது

என்னோடு உறவாடும்

இந்த இரவு...

நானோ அதை செல்லமாக

கோபிக்கிறேன்..

போன பொழுதின் நினைவுகளை அப்படியே

விட்டு விடு இரவே...

இங்கே நீ நான் மட்டும்

போதும்..

நமக்கிடையே இன்று நடந்த

நிகழ்வை ஏன் சேர்த்துக் கொண்டு குளிர் காய வேண்டும்?

நாம் நாமாக பயணிப்போம்

சத்தம் போடாதே..

இங்கே எவரும் வந்து விடக் கூடும் 

உன் குரல் கேட்டு..

நம் தனிமையின் ஆனந்தத்தை விட்டு

விலகி விட அனுமதிக்காதே

உன்னோடு கலந்து விடும்

இந்த நேரத்தின் இனிமையை 

பெரும் காதலின் 

உணர்வற்றவர்கள் புரிந்து கொள்ள 

முடியாது என்றேன் 

அதை இரவும் ஆமோதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

என்னை நேசிக்கும் நிழல்

 


உண்மையில் 

என் நிழல் மட்டும் தான் 

என்னை 

தொந்தரவு செய்யாமல்

என்னோடு பயணிப்பதில்

ஆர்வம் காட்டுகிறது..

என் மீது பெரும் காதலோடு

சலனமற்று பயணிக்கும் 

அந்த நிழலை

நான் நேசிக்கிறேன்.

#இளையவேணிகிருஷ்ணா.

இருள் எனும் காதலன்

 


எனக்கான நேரத்தில்

நான் இரவை நேசிக்கிறேன்

இருளின் சாயலை

இங்கே எவரும் பெற

விரும்பாத போதும்

நான் அதை நேசித்து கைப்பிடித்து

ஆள்அரவமற்ற அந்த சாலையில் 

பயணிக்கிறேன்..

இருளின் மௌனத்தை

நான் புரிந்துக் கொள்ள

சிறிதும் முயற்சி செய்யவில்லை..

நானும் அதே நிலையில்

இருக்கும் போது

அந்த புரிதல் தேவையற்றது..

ஏன் நீ என் கரம் பிடித்து

பயணிக்கிறாய்

என் மீது கொண்ட அனுதாபமா 

என்றது இருள்...

இல்லை இல்லை

உன் ஆழ்ந்த அமைதியின்

காதலை புரிந்துக் கொண்டு

உன் கரம் பிடித்து

நடக்கிறேன் என்றேன்..

அந்த வெளிச்சமற்ற தனிமையில்

தேகத்தின் மீது துளி மோகம்

இல்லாமல் பயணிக்கும்

நாங்கள் யார் என்று

அங்கே இரவின் நிசப்தத்ததை

தனது குரலால்

தாலாட்டும் இரவு பூச்சிகள்

ஆச்சரியமாக தங்களுக்குள்

பேசிக் கொண்டதை

எதேச்சையாக கேட்டு

நாங்கள் அந்த நெடுஞ்சாலையில் 

பயணிக்கிறோம்..

இன்னும் விடியலுக்கு

நேரம் இருக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 27 நவம்பர், 2022

சுந்தரி கார்டன் திரைவிமர்சனம்

 


இன்று சுந்தரி கார்டன் என்கின்ற படம் பார்த்தேன்.. மிகவும் அருமையான மெல்லிய உணர்வை நமக்குள் பிரதிபலிக்கும் படமது.. ஒரு விவாகரத்து ஆன பெண்ணின் கதை.. மிகவும் அழகாக எடுத்து சென்று இருக்கிறார் இயக்குனர்..

கதாநாயகி படம் முடிந்த பிறகும் நம் மனதில் மெல்லிய உறவாடுவார்.. ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு மெல்லிய எண்ணம் கொஞ்சம் கதாநாயகி மனதில் உதித்து அது கூடி வருவது போல கூடாமல் இறுதியில் கதாநாயகன் கதாநாயகியை சென்று பார்த்து உரையாடும் போது சொல்லும் வார்த்தைகள் அழகு.. ஒரு வாழ்வை வாழ துணை அவசியம் இல்லை தான்.. உனக்கு நான் தேவையில்லை.. ஆனால் எனக்கு நீ இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று சொல்லி முடியும் அந்த படத்தின் கதை..

இந்த படத்தில் அந்த கதாநாயகியின் விவாகரத்து வலியை கதாநாயகனிடம் விவரிக்கும் போது இதோ இன்று சரியாகிவிடும் நாளை சரியாகிவிடும் என்று நம்பினேன்.. ஆனால் எதுவும் சரியாகவில்லை என்று சொல்லும் போது ஒரு பெண்ணாக என்னால் அவள் வலியை உணர முடிந்தது.. ஆனால் அதையும் தாண்டி வாழ்க்கையை மிகவும் சுவாரஸ்யமாக வாழும் அவளின் மன வலிமை தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.. ஆமாம்.. வாழ்வில் திருமண பந்தம் முடிந்து விட்டால் தனிப்பட்ட முறையில் வாழ்நாள் முழுவதும் சோக கீதம் வாசிக்க வேண்டுமா என்ன? வாழ்வின் ஒரு துளியின் ஸ்பரிசத்தில் சமுத்திரத்தை உணர முடியாது.. வாழ்க்கை சமுத்திரம் போன்றது.. வாழ்வில் ஏற்படும் வலி ஒரு சிறு துளி போன்றது..

படத்தை பார்த்து விட்டு எழும் போது ஏனோ அந்த கதாநாயகியின் கதாபாத்திரம் மட்டும் அப்படியே மனதில் ஒட்டிக் கொள்கிறது.. நீங்களும் பாருங்கள்.. இப்படியான வாழ்வியலின் மறுபக்கத்தை உணர்த்தும் படங்கள் தமிழில் எப்போது வருமோ 😔..

#சுந்தரிகார்டன்

#திரைவிமர்சனம்

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 26 நவம்பர், 2022

நானும் இந்த ஞாயிறும்

 


அந்த அற்புதமான காலை நேரம்

கணங்கள் தோறும்

அலைபோல மோதி மோதி

என்னை காயப்படுத்தும் 

நினைவுகளை

கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு

எனக்கான ஆனந்த பயணமாக

என் மனதின் சாலை வழியே

இறைவனின் கொடையான

இயற்கையை ரசித்துக் கொண்டே

பயணிக்கிறேன்...

நான் நானாக...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 25 நவம்பர், 2022

எலிகளுக்கு வந்த சோதனையும் நீதிபதிகள் அடைந்த வேதனையும்

 


இன்றைய சுவாரஸ்யமான செய்தி:-🐀🐁🐀.

உத்திர பிரதேச மாநிலம் மதுராவில் 2018-19ம் ஆண்டுகளில் போலீசார் நடத்திய வேட்டையில் 581கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கஞ்சா கடத்தியவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. கைப்பற்றப்பட்ட கஞ்சாவை 2போலீஸ் ஸ்டேஷகளில் உள்ள குடோன்களில் வைத்திருந்தனர்.. இந்த வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது..சரி விசயத்திற்கு வருவோம்..

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நீதிமன்றத்தில் நீதிபதி சமர்ப்பிக்க சொன்னால் அதை எலிகளும் சுண்டெலிகளும் சாப்பிட்டு விட்டது என்று போலீசார் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் பதில் அளித்து உள்ளதை பார்த்து நீதிபதி அதிர்ச்சி அடைந்து விட்டார்.. வடிவேலு காமெடியில் சொல்ல வேண்டும் என்றால் #ஏதே என்ற நீதிபதியின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கும் கேட்கிறதா?

சரி சரி 581கிலோ கஞ்சாவை அப்படி எலி சாப்பிட்டதற்கான ஆதாரத்தை வழக்கு விசாரணைக்கு வரும் 26ம்தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

கொசுறு செய்தி:-இதே உத்திர பிரதேச மாநிலத்தில் எடாவா மாவட்டம் கோட்வலி போலீசாரால் கைப்பற்றப்பட்ட 35லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1400பெட்டிகளில் இருந்த மதுவை எலிகள் குடித்து விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்..இது தொடர்பாக மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

பின் குறிப்பு:-ஏன்டா எங்களுக்கு சாட்சி சொல்ல முடியாது என்பதற்காக இன்னும் எத்தனை எத்தனை பழிகளை என் மீது சுமத்துவீர்கள்.. நீதிபதி ஐயா இப்படிப்பட்டவர்களுக்கு அப்பாவிகள் மீது வீண் பழி சுமத்தியதற்கான வழக்கையும் சேர்த்து போடுங்கள் ஐயா என்று சொல்லும் எலிகளின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறதா..🏃🐀🐁🐀.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 23 நவம்பர், 2022

யாசித்தல் கொடுமையானது


 யாசித்தல் கொடுமையானது

அதிலும் இறப்பை யாசித்து கிடப்பது மிகவும் மோசமான துன்பமான விசயம்.. அந்த அகங்காரம் கொண்ட மனிதனின் அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக சரணடைகிறது இறப்பிடம்.. இறப்பின் காலடியை பிடித்து கெஞ்சுகிறது..என்னை உன் காலடி நிழலில் அடைக்கலம் ஆக்கிக் கொள் என்று.. பார்க்க பாவமாக இருந்தது.. ஆனால் இறப்பு அவரை கண்டுக் கொள்ளவே இல்லை..நீ இதே நிலையில் இன்னும் கொஞ்ச காலம் இருக்க வேண்டும்.. என் காலடியை உனது கண்ணீர் கழுவ வேண்டும்.. ஒவ்வொரு நொடியும் அகங்காரம் எவ்வளவு மோசமானது என்று நீ உணர வேண்டும்.. பிறகு அடுத்த பிறவியில் கூட உன்னை அகங்காரம் சூழாமல் இருக்க வேண்டும்... இதற்காக தான் இந்த தண்டனை..யாசித்துக் கொண்டே இரு.. நான் நீ கேட்ட யாசித்தலை நேரம் வரும் போது தருவேன்..

யாசித்தல் கொடுமையானது தான்..உன்னை போன்றவர்கள் உணர வேண்டாமா என்றது காலன்..

அந்த அகங்கார மனிதனோ கண்ணீர் சிந்தி சிந்தி காலனின் காலடியில் மயங்கி கிடக்கிறான்..நலனுக்கான நேரத்திற்காக...

#யாசித்தல்கொடுமையானது..

#இளையவேணிகிருஷ்ணா.

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் காலத்தோடு நான்.. என்ன சௌக்கியமா என்று கேட்டது காலம்..சௌக்கியம் என்று சொல்ல முடியாது.. ஆனால் சௌக்கியமாக இருக்கிறேன் என்றேன்.. என்ன வழக்கம் போல குழப்புகிறாய் என்று கடிந்து கொண்டது காலம்.. உடல் அளவில் கொஞ்சம் அசௌகரியம்.. ஆனால் மனதளவில் எப்போதும் ஆனந்தம் என்றேன் புன்னகைத்து..அது சரி.. அப்படி இருப்பது வாழ்வின் ஒரு கலை என்றது காலம்.. அதன் பதிலை உள் வாங்கி கொண்டே எழுந்து சமையலறையில் ஒரு சூடான இஞ்சி தேநீரை தயாரித்து அதனோடு வெங்காய பக்கோடா எடுத்துக் கொண்டு வந்து காலத்திடம் கொடுத்து விட்டு எனக்கான பங்கை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன்..

காலம் மிகவும் ஆவலாக அந்த பக்கோடாவை ரசித்து சாப்பிட்டு கொண்டே அந்த சூடான தேநீரை ருசித்து பருகியது.. எப்படி இருக்கிறது சுவை என்றேன் காலத்திடம்.. அதற்கென்ன மிகவும் அருமையாக உன்னை போல வித்தியாசமாக என்றது சிரித்து கொண்டே.. இந்த வானிலை ஏமாற்றி விட்டது இந்த முறை என்றது..

நானோ கடலோர மாவட்டங்கள் தப்பி விட்டது என்று சந்தோஷப்படுவதா இல்லை சம்பா பயிருக்கு கொஞ்சமேனும் மேல் மழை வேண்டும் என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை காலமே என்றேன்..நீ சொல்வது சரிதான்.. ஆனால் வானிலை நமது கைகளில் இல்லையே என்றது வருத்தமாக..

ஆமாம் உன்னை போல என்றேன் சிரித்துக்கொண்டே..

சரி சரி அதை விடு.. உன்னிடம் ஒரு கேள்வி என்றது காலம்..

கேள் காலமே.. எப்போதும் என்னிடம் மட்டும் நீ கேள்விகணைகளை கொடுப்பதும் ஏனோ என்றேன் கேலியாக..

அது ஏனென்றால் நீ எனது சாயல் என்றது..

சரி கேள்விக்கு வருகிறேன்..

இறப்பை நேசிக்கிறேன் என்று பல பதிவுகளில் சொல்கிறாய்.. அப்பொழுது நீ நேசித்த இறப்பை நாடி செல்வாயா அல்லது இறப்பே உன் நேசிப்பில் ஓடோடி வர வேண்டும் என்று நினைப்பாயா என்றது..

நான் சிறிதும் யோசிக்காமல் நான் அதை நேசித்து ஓடுவது என்பது காலங்காலமாக நேசித்த காதலனை தேடி எப்போதும் நேசித்த குடும்பத்தை மதிக்காமல் ஓடுவதற்கு சமம்..அது எனது பாரம்பரியத்திற்கு அழகல்ல..அதுவே என்னை நேசித்து ஓடோடி வந்து ஆரத் தழுவிக் கொள்ளும் போது நாங்கள் எவரும் பிரிக்க முடியாத பிணைப்பில் கலந்து நேசித்து கிடப்போம் என்றேன்..

காலமோ நான் எதிர்பார்த்ததை போலவே சுவாரஸ்யமான பதிலை சொல்லி விட்டாய் என்று சொல்லி இதோ இந்த காலி தேநீர் கோப்பையை உனது சிறந்த பதிலுக்கு பரிசளித்து விட்டு விடை பெறுகிறேன்.. மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது என்றது..

நானும் சிரித்துக்கொண்டே அந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்கிறேன்..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

நேசம் பெரிது

 


நேசம் பெரிது...

இந்த பிரபஞ்சத்தில்

நேசிக்க ஆயிரம் ஆயிரம்

விசயங்கள் உள்ளது..

ஆயிரம் ஆயிரம் ஸ்தூல விசயங்கள்

உள்ளது..

நேசித்துக் கொண்டே

இருங்கள்...

எதிர்பார்ப்புகளற்ற நேசத்திற்கு

எப்போதும் வலிமை அதிகம்..

அந்த ராதையின் நேசத்தை போல..

நேசத்தை மட்டும் நேசியுங்கள்..

அவள் கண்ணன் மீது கொண்ட

நேசத்தை போல...

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 22 நவம்பர், 2022

அவளோடு ஒரு பயணம்

 


அவளோடு ஓர் பயணம்(4):-

அன்று மாலை நதியை பார்த்தது தான்.. கொஞ்சம் வேலை காரணமாக மீண்டும் அவளை அலைபேசியில் கூட தொடர்புக் கொள்ளவில்லை.எனக்கும் கொஞ்சம் வேலை அதிகம். நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகிறோம் என்றாலும் வெவ்வேறு கட்டிடங்கள். அதனால் அவளை சந்தித்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை. அவளை போய் பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்து பிற்பகலில் அவள் வீட்டுக்கு சென்றேன் எனது புல்லட்டில்..இந்த வண்டியில் போவதே ஓர் கெத்துதான்..என்று மகிழ்ந்து கொண்டே சாலையில் இலகுவாக பயணித்து அவள் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அழுத்தினேன்.

  அவள் ஏதோ கர்னாடிக் பாடிக்கொண்டே கதவை திறந்தாள்.என்னை பார்த்தவுடன் ஓர் வழக்கமான புன்னகை உதிர்த்து விட்டு உள்ளே வர அனுமதித்தாள்.


நான் என்ன பாடல் எல்லாம் பலமாக உள்ளது இந்த மதிய நேரத்தில் என்றேன்.. ஆமாம் கிருஷ்.எனக்கு முத்துசாமி தீட்சிதர் கிருதி மிகவும் பிடிக்கும் என்றாள்.எப்போதாவது அந்த கிருதியை ஸ்வரம் மாறாமல் பாடும் போது மனதில் ஓர் அமைதி நிலவும். அதுதான் அந்த பாடல்.. பாடினேன்.

  சரி நாளை சோமவாரம் எங்கள் குடும்பம் பூசை கொடுக்கிறது நமது ஏரியாவில் உள்ள சிவன் கோயிலில். நீ வருகிறாயா..உன்னை நாளை பூசைக்கு அழைப்பு விடுக்கதான் வந்தேன்.. என்றேன்.

 அவளோ பூசையா..அதெல்லாம் நான் வரவில்லை கிருஷ்.நீ பூசை முடித்து சுண்டல் பொங்கல் பிரசாதம் மட்டும் கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எடுத்து வந்து கொடுத்து விடு என்றாள்..தனது துவைத்த துணிகளை மடித்தபடி..

 நானோ இந்த பதிலை எதிர்பார்த்து இருந்தேன். ஆனாலும் காரணம் தெரிந்து கொள்ள மட்டும் ஆவல்.. ஏன் வரமாட்டாய் கோவிலுக்கு. அதுதான் இவ்வளவு பக்தியாக தீட்சிதர் கிருதியெல்லாம் பாடுகிறாயா என்றேன்.

 எனது கேள்வியை கேட்டு விட்டு ஏதோ வேண்டாத நகைச்சுவை சொன்னது போல விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் அவளை புரியாமல் பார்த்து கேட்டேன் ஏன் சிரிக்கிறாய்.நான் காரணத்தைதானே கேட்டேன் என்றேன்.

அவள் அதற்கு தீட்சிதர் கிருதி பாடினால் கோவிலுக்கு வர வேண்டும் என்று ஏதாவது உள்ளதா என்ன என்று என்னையே திருப்பி கேள்வி கேட்டாள்.

 நான் அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். அவளே எனது நிலையை பார்த்து தொடர்ந்தாள்.

கிருஷ் நீ கோவிலுக்கு நாளை சென்று என்ன செய்வாய் என்று கேட்டாள்.

நான் அங்கே சென்று இறைவா இந்த வருடத்தில் எனக்கு புரோமஷன் வரனும். மேலும் எனக்கு விரைவில் நல்ல வாழ்க்கை துணையை அமைத்து கொடு என்று கேட்பேன் என்றேன்.

 அதற்கு அவள் அப்படி நீ கேட்டு விட்டால் அவர் தந்து விடுவாரா என்று நக்கலாக கேட்டாள். நானோ தெரியவில்லை ஆனால் தந்தால் மகிழ்வேன் என்றேன்.


 அவள் புன்னகைத்தபடியே வேண்டுதல் எதுவும் இல்லாமல் இறைவனை வழிபட இயலாதா உன்னால் என்றாள்.நானோ என்னால் இயலாது..ஏனெனில் எனக்கு ஏதாவது கிடைக்க வேண்டும் நான் பூசை செய்தால் என்றேன். அவ்வாறு கிடைக்காவிட்டால் இறைவனை திட்டுவாயோ என்றாள் நகைத்தபடியே..வேறு என்ன செய்ய சொல்கிறாய் என்றேன் கொஞ்சம் கோபமாக.

கிருஷ் கொஞ்சம் பொறுமையாக நான் சொல்வதை கேள்.நீ பூசை செய்ய சொல்லி அந்த இறைவன் உன்னிடம் கேட்டாரா என்றாள்.இல்லை என்றேன்.

 பிறகு நீ இறைவனை ஏன் குறை சொல்கிறாய்.அவர் கேட்காமலேயே நீ பூசை செய்து படையல் போட்டு விட்டு அவரிடம் ஓர் கோரிக்கை வைப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றாள்.மேலும் அவள் தொடர்ந்தாள்.நீ செய்வது எப்படி இருக்கிறது தெரியுமா.தெருவில் நாம் பாட்டுக்கு போகும் போது உன்னை வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து ஓர் பொருளை கொடுத்து விட்டு நீ வாங்கிய இந்த பொருளுக்கு நீ விலை கொடுத்து தான் போக வேண்டும் என்று சொல்வது போல உள்ளது.. அவ்வாறு செய்தால் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலுமா என்று கேட்டாள்.அதெப்படி முடியும் என்றேன் மிகவும் அவசரமாக. உன்னால் முடியாது என்றால் வலுக்கட்டாயமாக நீ ஓர் பூசையை செய்து இறைவனிடம் கோரிக்கை ஒன்றை அவர் அனுமதி இல்லாமல் வைத்து அதை நிறைவேற்று என்று எவ்வாறு ஆணையிட முடியும் என்றாள் மிகவும் தெளிவாக.

இதற்கு என்னால் பதில் சொல்ல இயலவில்லை.அமைதியாக இருந்தேன்.

 கிருஷ் பிரார்த்தனை என்பது இல்லாமல் அந்த இறைவனை மானசீகமாக பூசை செய்து பார்..உன் வாழ்க்கையில் நீ கேட்காமலே கோரிக்கை வைக்காமலே இறைவனுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கலாம். நீ ஏதோ பிரார்த்தனை என்று வைத்தால் அந்த பிரார்த்தனை ஏதேச்சையாக நடந்தும் விடும் போது அடுத்த பிரார்த்தனை என்ன வைக்கலாம் என்று உனது மனது தேடும்.அப்புறம் பிரார்த்தனை மட்டுமே உனது செயலாக இருக்கும்.. அது ஓர் இயந்திரதனமானது.


எந்த பிரார்த்தனையும் இல்லாமல் எல்லாமே முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்று. இதில் நாம் ஏன் தலையிட்டு மாற்றத்தை வேண்டி அந்த இறைவனை கெஞ்ச வேண்டும்?நடப்பதை ஏற்றுக்கொள்ளும் போது உன் பூர்வஜென்ம கர்மா கழியும் தானே..மேலும் இறைவனை மட்டும் நாடும் நெஞ்சில் அந்த இறைவன் திருக்காட்சியில் உன்னை மறந்து ஆனந்தம் அடையலாம். கொஞ்சம் யோசித்து பார் என்று சொல்லி கொண்டே சமையலறையில் சென்று வெங்காய பக்கோடா சூடாக போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.நானும் அதை ருசித்து கொண்டே அவள் சொன்ன விசயத்தை சிந்தித்தேன்.. இதை வீட்டில் போய் சொன்னால் என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள்.. ஆனால் அவள் சொன்ன விசயம் எனக்கு பிடித்து இருந்தது.. கூடிய விரைவில் தனது குடும்பத்திலும்புரிந்து கொள்ள கூடும்..என்று நினைத்தபடியே சரி நதி நான் கிளம்புகிறேன்..அம்மா கேட்டால் அவளுக்கு வேலை என்று சொல்லி கொள்கிறேன் என்று சொல்லி விட்டு வாசற்புறத்தை அடைந்தேன். அவளும் பின்னாடியே வந்து வழியனுப்பி வைத்து ஒரு கையசைத்து புன்னகையோடே உள்ளே சென்றாள்..

நானும் இவளிடம் நான் எப்போது வந்தாலும் எதையோ ஒன்றை கற்பித்து அனுப்பி விடுகிறாள் என்று மனதில் எண்ணிக்கொண்டே வண்டியில் பயணித்தேன் எனது வீடு நோக்கி...

#மீண்டும்பயணிக்கலாம்அவளோடுகாத்திருங்கள்.

திங்கள், 21 நவம்பர், 2022

சொல்லாமலே விடை பெறும் வலி

 

அந்த காய்ந்த சருகு

கீழே விழுவதற்கு முன் 

இறுதி நினைவு என்னவாக இருக்கும்?

இவ்வளவு நாள் அடைக்கலம் தந்த

அந்த மரத்தை பற்றியா?

இல்லை குழந்தையை போல சுமந்த

அந்த கிளையைப் பற்றியா?

இல்லை தன் வலியை எவருக்கும்

சொல்லாமல் உயிரூட்டி வளர்த்த

வேரை பற்றியா?

விடை பெறும் தருணத்தில்

ஆயிரம் நினைவுகள் நீந்தி செல்கிறது

ஒவ்வொருவரின் உள்ள கிடக்கையிலும்

சொல்லாமலே விடை பெறும் வலி

இங்கே யாருக்கு புரியும்?

#இளையவேணிகிருஷ்ணா.

ஒன்றும் அறியாத வங்கி வாடிக்கையாளர் அவஸ்தை


அந்த நடுத்தர வயது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பணம் ஐநூறு ரூபாய் சலானில் எழுதிக் கொண்டு செல்கிறார்.. அங்கே கேஷியர் அவர் கணக்கை பரிசோதித்து விட்டு உங்கள் கணக்கில் ஐநூறு ரூபாய் சற்று முன்பு வரை இருந்தது.. இப்போது உங்கள் கணக்கில் இருந்து சில கட்டணங்களுக்காக வங்கி எடுத்துக் கொண்டது.. இன்னும் இருநூறு ரூபாய் நீங்கள் கட்டி விட்டு போங்கள் என்று சொன்னார்.. வாடிக்கையாளர் அந்த கணக்கை அப்படியே வைத்திருங்கள்..இனி இந்த கணக்கில் நான் பணத்தை போட போவதில்லை..
வேறொரு கணக்கை வேறொரு வங்கியில் துவங்க போகிறேன் என்றார்.. அங்கேயும் இதே விதி தான் இருக்கும் என்றார் வங்கி கேஷியர்.. பரவாயில்லை... நான் அங்கே தொடங்கிக் கொள்கிறேன் என்றார் பிடிவாதமாக..
அப்பொழுது இந்த கணக்கின் அபராதம் எப்போது செலுத்துவீர்கள் என்று கேட்டார்.. அது வரை பொறுமையாக பதில் அளித்து வந்தவர் இந்த கணக்கின் அபராதம் தானே அடுத்து வரும் எனது ஏழாவது ஜென்மத்தில் செலுத்துவேன் போ ஐயா என்று வேக வேகமாக வங்கியை விட்டு வெளியே வந்து விட்டார்.. அந்த நாட்டு நடப்பின் சாயல் எதுவும் படியாத நடத்தர வயது முதியவர்...
#வங்கிஅலப்பறைகளும்
#வங்கிவாடிக்கையாளர்களின் #அவஸ்தையும்.
#இளையவேணிகிருஷ்ணா. 

வங்கிகளோடு ஒரு போராட்டம்

 


இன்றைய தலையங்கம்:- வங்கியில் பணம் இருந்தால் நாம் அனுபவிப்பதற்குள் ஏதேதோ சொல்லி தொகையை வங்கிகள் எடுத்து விடுகிறது.. ஏடிஎம் கார்டு ஒரு முதியவர் பயன்படுத்துவோர் மிகவும் குறைவான நேரத்தில் தான் பயன்படுத்துகிறார்.. ஆனால் அதற்கு வருடாவருடம் பராமரிப்பு செலவு என்று வங்கி எடுத்துக் கொள்கிறது.. இன்னும் இன்னும் எதற்காக பணம் போகிறது என்றே தெரியவில்லை பலபேருக்கு.. அன்றொரு நாள் வங்கிக்கு சென்ற போது ஒரு பெண்மணி கொஞ்சம் செலவுக்கு பணம் எடுத்து கொண்டு போகலாம் என்று வந்திருந்தார்.. ஆனால் அவர் கணக்கில் இருந்த சொற்ப பணத்தையும் ஏதேதோ செலவு கணக்கு காட்டி கழித்து இருக்கிறார்கள்... சொல்ல போனால் நீங்கள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்று சொல்லாத குறையாக... அந்த பெண்ணிற்கு மயக்கமே வந்து விட்டது..ஏழை மக்கள் பாவம் கூலி வேலைக்கு போய் வங்கியில் சிறிது சிறிதாக சேமித்து வங்கியில் போட்டு வைத்தால் அந்த பணத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டிய வங்கியே கொள்ளையடித்தால் பாவம் மக்கள் என்ன செய்வார்கள்.. அதனால் அந்த காலத்தில் வயதான பாட்டிகள் வைத்திருக்கும் #சுருக்குபை தான் சிறந்த பாதுகாப்பு பெட்டகம் என்று உணர்ந்து விடுவதே நல்லது.. ஆனால் அதுவும் கொள்ளை போகும் என்பது வேறு விசயம்..
அதற்கு தான் எதற்காக பணத்தை சம்பாதித்து அதற்கு வரி ஒன்று கட்டிக் கொண்டு தேசாந்திரியாக மக்கள் அனைவரும் கையில் ஒரு திருவோடு எடுத்துக் கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை..
எனக்கென்னவோ மக்கள் சிறிது காலத்தில் அதை பற்றி யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று தான் தோன்றுகிறது..
நான் ஏற்கனவே அந்த மனநிலைக்கு வந்து விட்டேன் 😜.
#வங்கிகளோடு #ஒரு #போராட்டம்
#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 20 நவம்பர், 2022

ரசித்து ருசித்து சாப்பிடுகிறேன்

 

அத்தனை போராட்டங்கள்

நடந்து கொண்டிருந்த சமயத்திலும்

நான் எனக்கான உணவை மிகவும்

ரசித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு

இருக்கிறேன்..

என்னை சுற்றி இருப்பவர்கள்

உனக்காக தானே இங்கே

நாங்கள் இவ்வளவு போராடுகிறோம்

நீ என்னவென்றால் கொஞ்சம் கூட

மனசாட்சி இல்லாமல் உணவில்

கவனம் செலுத்தி வருகிறாயே என்றார்கள்..

நானோ தற்போது எனக்கு

தேவையானது உணவு...

அடுத்த நொடி எனக்கானது

என்று நீங்கள் நம்புவது உங்கள் நம்பிக்கை

அதற்கு நான் பொறுப்பல்ல

அதனால் நீங்கள் தொடர்ந்து போராடலாம்

அல்லது விலகி செல்லலாம் என்றேன்.....

அவர்கள் வசை பாடி விட்டு 

சென்றதை கண்டுக் கொள்ளாமல்

மீதம் உள்ள உணவை 

ரசித்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 19 நவம்பர், 2022

Unfriend day

 


இன்றைய தலையங்கம்:- ஏதோ unfriend day என்று நவம்பர் 17அன்று கொண்டாடப்படுகிறது என்று செய்தி.. தற்போது இதை பற்றி இந்த இணையத்தளம் வந்த பிறகு தான் ஏற்பட்டு இருக்கிறது..இதை பற்றி பேசும் போது நான் பள்ளியில் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது என்னோடு ஒரு படித்த ஒரு தோழி ஒரு பொய் சொன்னதற்காக அப்போதே நான் unfriend செய்து இருக்கிறேன்... அந்த தோழி ஒரேயொரு சின்ன விசயத்திற்கு தான் பொய் சொன்னாள்.. ஆனால் நான் பல மாதங்கள் பேசாமல் இருந்தேன்.. அதை நினைத்து அந்த தோழி அழுதே விட்டாள்.பிறகு எனது சக தோழிகள் என்னிடம் சமாதானம் பேசி என்னை அந்த தோழியிடம் பேச வைத்தார்கள்.. நான் முதன் முதலில் unfriend செய்தது அந்த தோழியை தான்.. ஆனால் இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது.. 😊

இப்போது கூட அந்த தோழியை நினைக்க நேரும் போது மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொள்வேன்.

இதை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால் இங்கே நாம் எப்படி நடந்துக் கொள்கிறோமோ அப்படி தான் நம்மை சுற்றி நமது நட்புகள் அமையும்.நாம் நல்ல அதிர்வலையோடு முடிந்த வரை எல்லோருடனும் இணக்கமாக செல்வோம்.. இந்த பரந்த உலகத்தில் எவரும் இங்கே பகை வேண்டாம்..சக நாடுகளுக்கும் இது பொருந்தும்..

எதற்காக unfriend day? யோசியுங்கள்..

#நண்பரல்ல

#இளையவேணிகிருஷ்ணா.

ஆழ் மனதின் ஓசை


ஆழ்மனதின் ஓசைகளை
கொஞ்சம் கூர்ந்து
கவனித்தால் தெரியும்..
நாம் நமது ஆழ்ந்த தேடலை
 பலி கொடுத்து
எதற்காகவோ இங்கே
பல அபத்தங்களோடு
வீண் சச்சரவு செய்து 
பயணித்துக் கொண்டு 
இருக்கிறோம் என்று ...
#இளையவேணிகிருஷ்ணா.

 

கிரஷை பற்றி ஒரு கிரஷ்

 


கிரஷ் இதற்கு ஈடான தமிழ் வார்த்தை என்ன என்று கடந்த சில நாட்களாக விவாதம் நடக்கிறது..இதை நன்கு ஆராயும் போது அதீதமான ஈடுபாடு என்று சொல்லலாம்.. அதீத பேருணர்வு என்று சொல்லலாம்.. ஆனால் இங்கே கிரஷ் என்றால் வெறும் ஆண் பெண் காதலுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள்..கிரஷ் என்றால் ஏதோ சில காலங்கள் மட்டும் இருந்து விட்டு மறைந்து விடும் உணர்வல்ல.. இங்கே நாம் வாசிக்கும் எழுத்தின் மீது ஒரு கிரஷ்.. நாம் நேசிக்கும் குரலின் மீது ஒரு கிரஷ்.. நாம் மனம் விட்டு பாடும் போது அந்த இசையின் மீது ஒரு கிரஷ்... பாடலின் மீது பாடலின் வரிகளின் மீது... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. இதன் மீது நாம் கொண்ட பேருணர்வு எப்போதும் மறையாது.. சமீபத்தில் நான் யூடியூப் மூலமாக தத்துவவாதிஆல்பர்ட் காம்யூ மற்றும் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி இவர்கள் மீதான கிரஷ் அதிகமானது.. ஆச்சரியமான மனிதர்கள் மீது நம்மையும் அறியாமல் கிரஷ் வந்து விடுவதை தடுக்க முடிவதில்லை.. ஒரு வேளை அவர்கள் வாழ்வை பற்றிய புரிதலும் நமது புரிதலும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டில் இருப்பதாக கூட இருக்கலாம்..

எது எப்படியாயினும் கிரஷ் என்பது குறுகிய உணர்வல்ல..அது பேருணர்வு என்பதை மறுக்க முடியாது..

#கிரஷ்

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 18 நவம்பர், 2022

சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள் 💐


 சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துக்கள் 💐

என்னடா இது ஒரு நாளும் ஒரு தினத்தையும் கொண்டாடி வாழ்த்து சொல்லாதவர் இன்று சொல்கிறாரே என்று கூட நீங்கள் யோசிக்கலாம்.. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளது.. ஒரு பெண்ணை ஒரு ஆண் ஏமாற்றி விட்டான் என்று சொன்னவுடனேயே அங்கே எந்த கேள்வியும் எழாமல் அந்த ஆண் தண்டிக்கப்படுகிறான்.. எந்தவித கருத்துக்களையும் சொல்ல விடாமலேயே...பல ஆண்கள் பெண்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்று நினைக்கலாம்.. ஆனால் அங்கே நேர்மையான ஆணையும் ஏன் தண்டிக்க வேண்டும்...

மேலும் அன்று சென்னையில் பேருந்து பயணத்தில் எனது சகோதரி பயணித்து இருக்கிறார்கள்.. அங்கே பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து நிறுத்தப்படவில்லை.அதற்கு அங்கே எந்த பயணியும் கை நீட்டவில்லை..பேருந்தை நிறுத்த சொல்லி.. அங்கே ஒரு பெண் அந்த பேருந்தை துரத்தி வருகிறார்.பார்த்து விட்டு நடத்துநர் நிறுத்த சொல்லி இருக்கிறார் ஓட்டுநரிடம்.அவர் நிறுத்தியவுடன் அந்த பேருந்தில் ஏறிய அந்த பெண் பயணி ஓட்டுநர் நடத்துநரை பார்த்து மிகவும் கடுமையான சொற்களால் வசைப் பாடி இருக்கிறார்.. உங்களுக்கு பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதால் மதிக்க மாட்டீர்களா அவமானம் செய்வீர்களா என்று.. இன்னும் இன்னும் அச்சில் ஏற்ற முடியாத சொற்கள்.. ரிப்போர்ட் அடித்து விடுவேன் என்று மிரட்டல் வேறு.. பேருந்தில் பயணம் செய்தவர்கள் எவரும் இந்த சண்டையை கண்டுக் கொள்ளவில்லை.நமக்கேன் வம்பு..அதுவும் சண்டை போடுபவர் பெண் வேறு..🤦 இதை கவனித்த சகோதரி நீங்கள் பேருந்தை நிறுத்த சொல்லி கை காட்டவில்லை.. நானும் கவனித்தேன் என்று சொல்லி இருக்கிறார்.ஆனால் அவர் சகோதரியை அடக்கி விட்டு ரிப்போர்ட் செய்வதிலேயே குறியாக இருந்து இருக்கிறார்.பொறுத்து பொறுத்து பார்த்த எனது சகோதரி.. உடனே அவரிடம் கடுமையாக பேசி இருக்கிறார்.. நீங்கள் மனசாட்சி படி நடந்து கொள்ளுங்கள்.. நீங்கள் இந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநருக்கு செய்யாத தவறுக்காக ரிப்போர்ட் அடிக்க எவ்வளவு நேரம் பிடிக்கும்.. அதற்கு பிறகு அவரை நம்பி இருக்கும் குடும்பம் அவர்கள் குழந்தைகள் என்ன ஆவார்கள் என்று யோசித்து பார்த்தீர்களா..இலவச பயணம் என்றால் நீங்கள் இந்த பேருந்தில் ஏறுகிறீர்கள் என்று தெரியாமல் கூட பேருந்து ஓட்டுனர் ஏதோ உள்ளுணர்வு மூலம் அறிந்து ஏற்றிச் செல்ல வேண்டும் என்று நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்று யோசியுங்கள் என்று சொல்லி விளக்கம் தந்து இருக்கிறார்.. பிறகு அந்த பெண் இறங்கியவுடன் நடத்துநர் மற்றும் ஓட்டுநர் எனது சகோதரியிடம் வந்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக நன்றி சொல்லி இருக்கிறார்கள்.. இங்கே பெண்கள் எப்படி நடந்து கொண்டாலும் நியாயம் என்று சொல்பவர்களுக்காக இந்த பதிவை தருகிறேன்..

நியாய தர்மத்திற்கு ஆண் பெண் என்கின்ற பாகுபாடு கிடையாது..

இங்கே கூட ஆண்களை காப்பாற்ற பெண் தான் தேவைப்படுகிறார்.😌

#சர்வதேசஆண்கள்தினவாழ்த்துக்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

சுயத்தை தொலைத்து


 காலத்தின் காலடிசுவடை
அடியொற்றி நீந்துகிறேன்
எனக்கான சுயத்தை தொலைத்து
ஏன் சுயம் வேண்டும் என்கின்ற
எனது ஆழ்மன கேள்விக்கு
இங்கே பதில் இல்லை
சுயத்தை தொவைக்க 
விரும்பாத நான்
காலத்தின் நீந்துதலில்
என்னையும் அறியாமல்
தொலைத்து விட்டு
பயணிக்கிறேன்...
நீந்துதல் ஒரு சுகம்
அதுவும் தன்னை மறந்து..
நீந்துதல் ஒரு சுகம்..
இங்கே சுயம் எங்கே என்று
நான் தேட மறந்தேன்
அதுவும் தான் மறந்தது
என்னை..
#இளையவேணிகிருஷ்ணா.

 

வியாழன், 17 நவம்பர், 2022

அவளோடு ஒரு பயணம்


 அவளோடு ஓர் பயணம்:-

அந்திமாலையில் நதியின் வீட்டை நோக்கி என்கால்கள் நகர்ந்தது..என் அலுவலக பணி முடித்துவிட்டு..

சாலையில் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.. எவரும் நிதானமாக சாலையை கடந்து செல்லவில்லை. இந்த நேரத்தில் நதி என்னோடு இருந்திருந்தால் ஏதாவது தத்துவ ஆராய்ச்சி செய்ததை சொல்லி இருப்பாள் மக்கள் இவ்வாறு ஓடுவதை பார்த்து. நல்ல வேளை அவள் தற்போது தன்னோடு இல்லை என்று ஓர் புன்னகை செய்தபடி சாலையை கடந்து நதியின் வீட்டை அடைந்தேன்.

  கொஞ்சம் ஆவலாக இருந்தது என்ன தான் இன்று அலுவலகம் வராமல் செய்து கொண்டு இருப்பாள் என்று.

  வீடு முழுவதும் தேடினேன் அவள் எங்கும் காணவில்லை. நான் வந்ததை கவனித்து இங்கே வா கிருஷ் என்றாள். அவள் அழைத்த திசையை நோக்கினேன். ஏதோ செடி ஒன்று நட்டு வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் வீட்டு பின்புறம் உள்ள சிறுநந்தவனத்தில்.

நான் ஆவலாக என்ன செடி இது நதி என்றேன்.

அவளோ இது ஓர் ரோஜா செடி என்றாள்..உனக்கு தான் ரோஜாவே பிடிக்காதே..நீ தலையில் எந்த பூவையும் சூடி நான் பார்த்ததே இல்லை..என்றேன் ரொம்ப பாவமாக.

 அவள் நான் இந்த ரோஜாவை இப்போது வைத்தது நான் சூடிக்கொள்ள அல்ல.. நான் இங்கே இந்த தோட்டத்தில் வந்து உலாவும் போது இது காற்றில் அசைந்து என்னை வரவேற்கும். அந்த வரவேற்பு என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இப்போது எல்லாம் நீ எவர் வீட்டுக்கு சென்றாலும் பெரும்பாலும் அவர் அழைக்காமல் இருக்கும் போது நீ சென்றால் வரவேற்பு ஏதோ வேண்டாவெறுப்பாக இருப்பதை கவனித்து இருப்பாய் அல்லவா..எனக்கு அந்த அனுபவம் நிறைய நடந்து உள்ளது. ஒருவேளை உனக்கு அந்த அனுபவம் நிகழாமல் கூட இருக்கலாம் என்று சொல்லி கொண்டே அதற்கு நீர் நிற்பதற்கு கரை கட்ட தொடங்கினாள்..என் பதிலை எதிர்பார்க்காமலேயே.

  நான் அவ்வாறு எனக்கும் நடந்து இருக்கிறது எனது உறவுகள் மத்தியில். ஏனெனில் நான் அப்போது ஓர் வேலை இல்லா பட்டதாரி.. என்றேன் புன்னகைத்து கொண்டே.

அதற்கு அவள் சிரித்து கொண்டே சொன்னாள் இப்போது கூட நீ வேலை இல்லாமல் எங்கேயேனும் போனாய் என்றாலும் அதே கதிதான்..கிருஷ்.அது எப்போதும் மாறப்போவது இல்லை என்றாள் புன்னகை மாறாமலேயே..

சரி அதற்கும் இப்போது நீ இந்த ரோஜா செடி நடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றேன் புரியாமல்.

அதுவா நீ எப்போது இங்கே வந்தாலும் உனக்கு வேலை இருக்கிறதா எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று எல்லாம் இந்த ரோஜா செடி கேட்காது.தனது மலர்ந்த புன்னகை மாறாத முகத்தோடு உன்னை வரவேற்கும்.. இதற்கு இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு தெரியாது என்றாள்.கரைகட்டி முடிக்க உதவிய அந்த மண்வெட்டியை எடுத்து சென்று கழுவிக்கொண்டே.

நான் ஆமோதித்து அந்த செடியை கொஞ்சம் வருடிக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதுவும் தனது பாசத்தாலேயே என்னை முள்ளால் கொஞ்சம் கீறியது.இதுவும் ஓர் அன்பு கீறல் தான் என்று நினைத்து நகர்ந்தேன்.கீறிய கையை தடவியபடியே.

  அதற்குள் அவள் அழைப்பு வர இதோ வந்து விட்டேன் என்று நகர்ந்தேன்.. கையில் தேநீர் கோப்பையோடு தோட்டத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.

  நான் அவள் போட்ட தேநீரை பருகினேன். இன்று கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கிறது நதி என்றேன் புன்னகைத்து.

 தேநீர் எப்போதும் சுவைதான். நாம் தான் அதை ரசித்து பருக நேரம் இல்லாமல் வேகமாக பருகி அதன் மரியாதையை குறைக்கிறோம் என்றாள்.

   நான் புன்னகைத்து கொண்டே சரிதான் என்று தலையாட்டினேன்.

 அவள் என்னருகில் அமர்ந்து பறவைகளின் ஒலியில் இசையை கேட்டு ரசித்தாள்.தோட்டத்தில் பறக்கும் பறவைகளின் ஒலியில் தன்னை மறந்து தலையாட்டிக்கொண்டே நடந்தாள் மிகவும் மெதுவாக.

கொஞ்ச நேரம் நான் அவள் மென்னடையை ரசித்து கொண்டே அவளிடம் நாளை அலுவலகத்தில் பார்க்கலாம் என்றேன். இனிமையான அந்த தருணத்தில் இருந்து விடைபெற்றபடியே.

பார்க்கலாம் என்றாள் பறவைகளிடம் இருந்து தன் கண்களை விலக்காமலேயே..

இவள் ஓர் அதிசயம் தான் என்று என் வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.

மீண்டும் அவளோடு பயணம் நாளைக்கு .

#அவளோடுஓர்பயணம்

புதன், 16 நவம்பர், 2022

ஆசைப் படு துறந்து விடு

 

அத்தனைக்கும் ஆசைப்படு

என்று சொன்னால்

பெரும்பாலும் அனைவரும்

உற்சாகம் அடைவார்கள்..

அத்தனையும் ஆசைப்பட்டு

அதை அனுபவித்துக் கொண்டு

இருக்கும் போதே துறந்து விடு

என்று சொல்லி பாருங்கள்..

எல்லோரும் ஓடிவிடுவார்கள்..

ஆசைப்படு அடைந்து விடு;

அடைந்து அனுபவிக்கும் போதே

துறந்து விடு..

இதுதான் ஜென் நிலை..

#இளையவேணிகிருஷ்ணா.

சுமைகளற்ற பயணம்

 

அந்த காரிருள் நேரத்தில்

மின்சார விளக்குகள் என் மீது

பாச மழை பொழிய இரவை ரசித்து

பயணிக்கிறேன்..

எந்தவித சத்தமும் இல்லை

 அந்த நெடுஞ்சாலையில்

ஆச்சரியம் தான் எனக்கு..

திடீரென என்னை பின்தொடர்ந்து நடப்பவர்

நீங்கள் யார் என்று கேட்கிறார்..

நான் ஒரு கால பயணி என்றேன் சிரித்தபடியே

அப்பொழுது நான் சாலை பயணியா என்றார்

பதிலுக்கு பலமாக சிரித்தவாறே..

அப்படி இல்லை

நீங்கள் ஆசைகளை சுமந்து பயணிக்கும்

கால பயணி..

நான் எந்தவித சுமைகளுமற்ற கால பயணி என்றேன்...

நானும் கூட அந்த நிலையை அடைய

பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறேன்

என்றார்.. முயற்சி செய்யுங்கள்..

இங்கே எல்லாமே சாத்தியம் தான்..

வெறுமை ஒன்றே நிலையானது என்றேன்..

உண்மை தான் என்றார் புன்னகைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 15 நவம்பர், 2022

எது தான் வாழ்வின் தாத்பரியம்?

 

இருவரின் உணர்வு பெருக்கிலோ..

தீராத காதலிலோ..

இங்கே ஜனனம்

நடந்து விட்டது..

நான் இங்கே

புரியாமல் திகைத்து

நிற்கிறேன்..

அங்கே ஒருவரை கூப்பிட்டு

உங்களுக்கு வாழ்வின் தாத்பரியம் புரிகிறதா என்கிறேன்..

அவரோ எனக்கு தற்போது

மிகுந்த பசி

நான் சாப்பிட செல்லவா

என்று

மிகவும் பரிதாபமாக 

கேட்கிறார் ...

இங்கே எது தான் வாழ்க்கை

என்று தேடி அலைந்து

சோர்ந்து போகும் போது

என்னோடு வந்து விடு

உனக்கான தேடல்

இந்த ஜென்மத்தில்

நிறேவேறப் போவதில்லை என்று மிகவும் பாசமாக

அரவணைத்து கூட்டி

செல்கிறான்...

எமன் எனும் கால தலைவன்

நானும் பலி ஆடாக

அவனோடு செல்கிறேன்..

இவ்வளவு தான்

வாழ்வின் சுவையா என்று

யோசித்தபடியே..

#இளையவேணிகிருஷ்ணா.


காலத்தின் கைகளில் நான் ஒரு குழந்தையாக

 

மாயம் நிறைந்த வாழ்வின்

சுவடுகளை

அவ்வளவு எளிதாக

புரிந்துக் கொண்டு

கடந்து விட தெரிவதில்லை

எனக்கு...

காலத்தின் கைகளில்

புரியாமல் அழுது புலம்பும்

குழந்தையாக

நொடி தோறும் ஆறுதல்

தேடும் குழந்தை மனமாக

சத்தம் இல்லாமல்

நகர்கிறது வாழ்க்கை...

மாயத்தின் திரையை

இங்கே எவர் விலக்கக் கூடும் என்ற புதிருக்கு மட்டும்

இன்னும் விடை கிடைக்காத

சுவாரஸ்யமான

கால பயணியாக நான்...

#இளையவேணிகிருஷ்ணா. 

மனதின் வெறுமையை கடந்தவர்

 


தினமும் என்னை கவனித்து

வந்தான் அங்கே ஒருவன்

நானும் அவனும் சாலையில்

ஒரு புன்னகையோடு

கடந்து விடுவோம்..

ஒரு நாள் என்னிடம் தயங்கி தயங்கி

வந்து உங்களிடம் ஒரு கேள்வி 

என்றான்

ஓ.. தாராளமாக கேளுங்கள் 

என்றேன்..

நீங்கள் மட்டும் எப்படி இவ்வளவு உற்சாகமாக

தினமும் இருக்கிறீர்கள் என்று கேட்டான்..

நானோ அதுவா.. 

நான் மனதின் வெறுமையை

கடந்தவர் என்றேன்..

யோசித்தபடியே தலையாட்டி 

சென்று விட்டான்...

#இளையவேணிகிருஷ்ணா.

அவளோடு ஒரு பயணம்

 

அவளோடு ஓர் பயணம்:-

அவள் கலாச்சாரத்தை பின்பற்றுபவளா இல்லை முறியடித்து நடப்பவளா தெரியாது.ஆனால் அவளை பார்க்கும் போது ஏதோவொரு ஈர்ப்பு வந்து விடும். அவள் தன்னை கவனிப்பவர்கள் பற்றியோ கவனிக்காதவர்கள் பற்றியோ கவலைப்படாதவள்.அவள் தனது பயணத்தில் தொடர்ந்து பயணிப்பவர்கள் பற்றியோ பயணத்தை தொடர மறுத்தவர்களையோ பற்றி எந்த கவலையும்படாதவள்.ஏனெனில் அவள் எப்போதும் அவள் சுயத்தை நேசித்தவள்.

  சில சமயங்களில் அவள் அவ்வாறு நடந்து கொள்வது சரியா என்று தோன்றும் எனக்கு மற்றும் அவளை நேசித்தவர்களுக்கு.அவளிடம் கேட்டால் நிச்சயமாக பதில் சொல்ல மாட்டாள்..ஓர் புன்னகை மட்டுமே கிடைக்கும். அதனால் எவரும் கேட்க மாட்டார்கள்.

  வாழ்க்கை என்றால் ஏதோவொரு வட்டத்தில் அடங்குவதாக அவள் நினைத்தது இல்லை.. வாழ்க்கை மிகவும் எளிமையானது என்றே அவள் என்னிடம் சொல்லி வந்தாள்.

   வாழ்க்கையை எப்போதும் படிக்க தொடங்கியதே இல்லை..அதில் ஓர் இனிமையான ஆனந்தமான அனுபவத்தையே விரும்பினாள்.விரும்பினாள் என்று சொல்வதை விட அதை அப்படியே ஏற்றுக்கொண்டாள்..

  எதற்காகவும் அவள் கலங்கியதே இல்லை.. அவளோடு இருக்கும் போது எவ்வளவு நேரம் சென்றாலும் தெரிவதில்லை..அவள் தான் என்னை கட்டாயமாக அனுப்பி வைப்பாள் இல்லத்திற்கு.அவளோடு சேர்ந்து தான் நான் வாழ்க்கை என்றால் என்ன அதை எப்படி அனுபவித்து வாழ்வது என்று கற்றுக்கொண்டேன்.

  நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள நினைக்கவில்லை என்று ஒருநாள் கேட்டேன்.. அதற்கு அவள் ஓர் புன்னகையோடே சொன்னாள்..வாழ்க்கை என்பது திருமணம் செய்து கொள்வதால் நிறைவடையும் என்று நினைக்கவில்லை என்று.. திருமணம் என்பது காமத்தை ஓர் கட்டுக்குள் வைத்திருக்க சமுதாயம் ஒழுங்கு மாறாமல் இருப்பதற்காக ஏற்பட்டது.நான் காமத்தை பெரிதாக நினைக்காதபோது அது எனக்கு தேவையில்லாத விலங்குதானே என்று என்னை நோக்கி பாயும் தோட்டா போல கேள்வி கேட்கும் போது நான் பதில் சொல்ல தோன்றாமல் அவள் சொல்வதை ஆமோதித்து தலையசைத்தேன்.


அவளோடு பயணப்பட ஆசையா உங்களுக்கு.. காத்திருங்கள்..😊

#அவளோடுஓர்பயணம்


#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் படைப்பாளி எழுத்தாளர் பிரியா அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻.

கீழேயுள்ள லிங்கில்:-

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

அந்த பேரொளியின் தாபம்


 அந்த பேரொளியின்

தன்னலம் இல்லாத

வெளிச்சத்தில் மகிழ்ந்து

கொண்டாடி தீர்ந்த நொடியில்

அதன் தாபத்தை இங்கே

அடுத்து வந்த நொடியில்

புரிந்துக் கொண்டு

ஆழ்ந்த அமைதியில்

மௌனமாக கண்ணீர்

வடித்து கடந்து செல்கிறேன்..

என் கண்ணீருக்கு இங்கே

காதல் என்று போவோர் வருவோர்

சொல்லி செல்வதை பார்த்து

பலமாக சிரித்து வேகமாக

கடந்து செல்கிறேன் லாவகமாக 

அந்த தாபத்தை மட்டும்

எவருக்கும் சொல்லாமல்..

#இளையவேணிகிருஷ்ணா.

தானத்தின் மீதான தாபம்

 

சூழ்ச்சிகளின் வலையில்

சிக்கி விட்டாலும்

சூரியனின் ஞானம்

உன்னை பொசுக்காது

காத்திருக்கிறது..

கால சக்கரம் சுழன்று சுழன்று ஓடிவிட்ட போதும்

உன் தானத்தின் மகிமை

மட்டும் சுடர் விட்டு ஒளிர்கிறது...

துரியோதனின் 

பெண் தாபத்தின் தீர்க்கத்தை...

நில மகள் மீதான

மோகத்தை

இங்கே நீ உணர்த்தி விட 

ஒரு நாடகம் அரங்கேற்றம்

செய்தாய்..

கண்ணனுக்கு நிகராக..

உன்னை அஞ்ஞானி என்று

மூடர்கள் சொல்லக் கூடும்

ஆதவனின் பேரொளியில்

எப்படி மூடர்கள் தோன்றக் கூடும்??

நீயும் அந்த கண்ணனும்

எனக்கு ஒரே அம்சத்தின்

இரு வடிவமே...

தாபம் எதில் என்பதில்

ஆயிரம் கேள்விகள்

இங்கே?

தேகத்தின் 

தாபத்தை தேடி அலைபவர்களுக்கு

இது புரிய போவதில்லை..

தானத்தின் மீதான தாபத்தை

தவிர வேறெதுவும்

எனக்கு இங்கே 

ஞாபகம் இல்லை...

வாக்குறுதிகள் மீதான

தாபத்தின் தகிப்பை

இங்கே முழுமையாக 

உன்னை பார்த்து

தெரிந்துக் கொண்டபின்

வாழ்வின் தாத்பரியம்

வெகுசிலரே உணர்ந்து

பயணிக்கக் கூடும்..

அதில் நானும் ஒருவர் என்று

ஆனந்த கூத்தாடி

மகிழ்கிறேன்..

#கர்ணன்.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 14 நவம்பர், 2022

என் இதயத்தின் காதல் ஒலி


 ஓ அன்பே

நான் தனியாய்

தன்னிரக்கத்துடன்

உன் நினைவுகளில்

கனவை காற்றாய்

சுமந்து சுழலவிடுகிறேன்

என் விழிகளை

உன்னை எதிர்பார்த்து

ஊன்உறக்கம் இல்லை

உன்னை எதிர்பார்த்து

காற்றை மட்டும்

உணவாய் புசித்து

உலவுகிறேன்

உன்னை காண

அதோ அங்கு

தெரிவது நீதானா

அலைகிறது

என் மனம்

அந்தோ பரிதாபம்

அது நீயில்லை

மௌனமாய்

அழுகிறேன்

என் அழுகை

அங்கே உணர்கிறாயா

திடிரென்று

பறவைகளின் ஒலி

வரும் திசையை

பார்க்கிறேன்

பித்துபிடித்ததுப்போல்

நீதானோ என்று

இல்லை நீ

அங்கில்லை

என்றோவொருநாள்

என் இதயத்தின்

காதல் ஒலியை

கேட்டு

அனைத்தையும்

கடந்து வரும்

நாளை நோக்கி

நம்பிக்கையுடன்

நான் என் உயிரே!

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 


நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு இந்திய நேரம் (9:00pmto10:00pm) ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஓர் பயணம் நிகழ்ச்சியில் கவிஞர் எழுத்தாளர் பிரியா அவர்களின் படைப்புகளை கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻

கீழேயுள்ள லிங்கில் :-

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

சனி, 12 நவம்பர், 2022

மன சிறையில்...


அந்த மழைக் கால

இரவொன்றில்

என் மனக் கதவு

திறந்தது...

உன் நினைவுகளை

சிறைப்பிடிக்க...

நீயோ அங்கே சாலையில்

நனைந்துக் கொண்டு

இருந்தாய்...

உன் நினைவுகள்

என் மன சிறையில்

கிடப்பதை பற்றி

கொஞ்சமும்

கவலைக் கொள்ளாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.



இறப்புகள் வேடிக்கை பார்க்கிறது

 

இவ்வளவு விரைவாக

அந்த நிகழ்வு அவனுக்கு

நிகழ்ந்து இருக்கக் கூடாது என்றே

அங்கே பலபேர் அவனுடைய

இறப்பை பற்றி உணர்ச்சி பிரவாகத்தில்

பேசிக் கொண்டு இருந்தார்கள்..

இதை கவனித்த 

அவனுடைய சூட்சம ஆன்மா

இறப்புகள் வேடிக்கை பார்த்து

கவலைப்படுகிறது என்று

சிரித்தபடியே சொல்லிக்கொண்டே

இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லி

பரந்த வெளியில்

கலந்து விடைபெற்றது...

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 11 நவம்பர், 2022

கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🙏🎻🙏

இன்று இரவு ஒன்பது மணிக்கு அதாவது இந்திய நேரம் 9:00pmto10:00pmக்கு எழுத்தாளர் பிரியா அவர்களின் கவிதை தொகுப்பில் இருந்து கவிதைகளோடு இனிமையான பாடல்கள் இந்த மழைக் கால நேரமொன்றில் மனதிற்கு இதமாக இணைந்து இருங்கள் உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் நேயர்களே 🎻🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

மனித மனநிலையின் குரூரம்

 


காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல இயலாததால் பல கோடி ரூபாய் வருமான இழப்பு என்று இன்று மாலை சன் தொலைக்காட்சி செய்தியில் வாசிக்கப்பட்டது அந்த செய்தி தயாரிப்பாளரின் குரூர தன்மையையே காட்டுகிறது.. இங்கே அந்த மழை நாளில் அவர்கள் பசியை பற்றி யோசிக்க தெரியாத மனிதர்கள் மனித வடிவில் இருக்கும் வேறொரு ஜீவ ராசி என்று தான் சொல்ல தோன்றுகிறது..

பொருளாதாரமயமாக்கலின் தாக்கத்தை இன்னும் கொஞ்சம் காலத்தில் மோசமான விளைவுகளை அனுபவிக்க போகிறார்கள் உலக நாடுகள்...

பசியின் தீவிரத்தை உணர தெரியாத வரை இங்கே மனிதர்கள் எல்லாம் மனிதர்களாக நடமாட போவதில்லை..

அந்த செய்தி இப்படி வந்து இருக்க வேண்டும்..

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.. அவர்கள் அன்றாட பசியை போக்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று அந்த செய்தி தயாரிப்பு இருந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

தற்போது செய்திகள் எல்லாம் பெரும்பாலும் குரூரத் தன்மையை வெளிப்படுத்தும் விதமாகவே தயாரிக்கப்படுவது வேதனையின் உச்சம்..

#செய்திகளின் #குரூரம்

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 10 நவம்பர், 2022

மழை கவிதை ☔

 நான் மழையை ரசிக்கிறேன்!

மழை என்னை ரசிக்கிறது!

இந்த தேநீர் கோப்பை

எங்கள் இருவரையும்

வேடிக்கை பார்க்கிறது

கொஞ்சம் ஏக்கமாக

என் சுவையை

இணைத்துக் கொள்ளுங்கள்

ரசனையின் சுவை அலாதியாக

இருக்கும் என்று..

#இளையவேணிகிருஷ்ணா



கிருஷ்ணா இணையதள வானொலி

 

நேயர்களே வணக்கம் 🎻🙏🎻

இன்று உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இந்திய நேரம் இரவு 9:00மணி முதல் 10:00மணி வரை எழுத்தாளர் பிரியா அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻 கீழேயுள்ள லிங்கில் இணைந்து கொள்ளுங்கள் நேயர்களே 🎻🙏🎻

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/


செவ்வாய், 8 நவம்பர், 2022

அந்த மழைக் கால மாலைநேரத்தில்


அந்த மாலை நேரத்தில்

அமைதியாக அமர்ந்து இருக்கிறேன்

சும்மா போவோர் வருவோரை

வேடிக்கை பார்த்து

என்னை கடந்து சென்றவர் 

ஏதோ நினைவு வந்ததை போல 

என்னருகே வந்து 

நீங்கள் 

எமனை பார்த்து இருக்கிறீர்களா 

என்று கேட்டார்.

நானோ அவரை ஆச்சரியமாக பார்த்து

ஏன் பார்க்காமல் 

இதோ இப்போது கூட

அவர் அணைப்பில் தான் 

இருக்கிறேன்

அவரோடு காதலோடு 

செல்லவும் முடியாமல்

அவரிடமிருந்து 

விலகவும் முடியாமல்

தவிக்கும் தவிப்பை 

நீங்கள் அறிய மாட்டீர்கள் 

என்றேன்.. 

அவர் என்னை 

ஒரு மாதிரி பார்த்து விட்டு

சென்று விட்டார் 

ஒரு வித யோசனையோடே..

நான் என்ன செய்ய இயலும்?😌

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த எமன் எனும் ஒரு தலை காதலன் 🍁


அந்த மழைக் கால 

இரவொன்றில்

என்னை 

கொஞ்சம் கொஞ்சமாக

இறப்பு தழுவிக் கொள்ள

முயற்சி செய்கிறது..

நானோ அதன் பிடியில் இருந்து

பிடிவாதமாக 

விடுவிக்க முயன்று

தோற்று சரணடைந்த போது

என்னை ஒரு தலை காதலாக

இழுத்து செல்கிறான்

அந்த காலனின் தலைவன்

எமன் 😔

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த வீடற்ற ஒருவருக்காக

 

அனைவரும் நிம்மதியாக

தன்னை மறந்து

உறங்கும் அந்த மழை இரவில்

அங்கே அந்த வீடற்ற ஒருவனுக்கு

சாலை விளக்குகள்

அமைதியாக பாடம் 

நடத்திக் கொண்டு

இருக்கிறது...

அவனும் எந்த சலனமும் 

இல்லாமல்

அதை உள்வாங்கி கொண்டு

இருக்கிறான்

அந்த மழைக்கு தன் ஜீவனை

அர்ப்பணித்து...

#இளையவேணிகிருஷ்ணா.

ஆத்ம தத்துவம்


காலம் என்னிடம்

கேட்டது..

நாசத்தில் சிறந்தது எது?

நாசத்தில் சிறந்தது

மனோநாசம் என்றேன்..

சற்றே ஆமோதித்து

புன்னகைத்து கடந்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 7 நவம்பர், 2022

நாளை எனும் மாயா


நாளை எனும் மாயா 

நினைவுகள் பாதை

நம்மை தடுமாற செய்ய

காத்திருக்கிறது என்று

தெரிந்த நான்

இன்று

பூங்கொத்து கொடுத்து

புன்னகையோடு வரவேற்கும்

இதோ இப்போது நடக்கும்

இந்த பாதையில்

என் வாழ்வை அதன் கைகளில்

ஒப்படைத்து

தெளிவான மனதோடு

நடந்து செல்வதை பார்த்து

காலம் ஓடோடி வந்து

கைகுலுக்கி

என் பயணத்தில்

துணைக் கொண்டு

நடந்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

கிருஷ்ணா இணையதள வானொலி

 

இன்று ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் எனது பாசமிகு நேயர் மற்றும் சகோதரி திருமதி உமா ராஜேந்திரன் அவர்களின் திருமண நாளை சிறப்பிக்க அவரது தேர்வு பாடல்கள் ஒலிபரப்பாகும் நமது கிருஷ்ணா இணையதள வானொலியில் நேயர்களே 🎻🙏🎻. கேட்டு மகிழுங்கள் 🙏

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🙏🎻.

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...