ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 30 செப்டம்பர், 2023

இரவு கவிதை 🍁

 


ஊமைகள் அங்கே

ஆத்மார்த்தமான 

ஒரு பெரும் விஷயத்தை

பேசிக் கொண்டு

இருக்கிறார்கள்...

நீங்கள் கொஞ்சம் அமைதியாக 

இருங்கள்...

உங்கள் உப்பு பெறாத சலசலப்பை 

பிரிதொரு சமயத்தில்

வைத்துக் கொள்ளலாம்...

#இரவுகவிதை.

நாள்:30/09/2023.

நேரம் இரவு 10:15.

#இளையவேணிகிருஷ்ணா.

பயணத்தில் ஒரு சந்திப்பு (16)

 


✨இங்கே ஏதோவொரு நாளை ஏதாவது காரணம் ஏற்படுத்திக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.. கொண்டாட்டங்கள் தேவை தான் எப்போதும்.. ஆனால் அதை ஏன் குறிப்பிட்ட நாளில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குள் ஆழ்ந்த சிந்தனை மற்றும் கேள்வி..


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அமிர்தத்தை தாங்கியே பயணிக்கிறது..நாமோ அதை முழுமையாக பருகாமல் ஏனோதானோ என்று சிந்தி சிதறி வீணடித்து விடுகிறோம்..


ஏதோவொரு நாளில் அனைத்து மகிழ்வான தருணங்களையும் முழுவதும் வடித்து விட்டு மீதி நாட்களை வறண்ட பாலையாக பரிசளித்துக் கொள்கிறோம் நமக்கு நாமே..அப்படி தானே!


தொடர் நிகழ்வுகளில் உணர்வற்ற பயணத்தில் நம்மை இணைத்து கொண்டு அதை நாம் பெரிதாக வாழ்ந்ததாக காட்டிக் கொள்கிறோம்..


ஏதோ பெரிதாக சம்பாதித்து உணர்வற்ற பொருட்களை வீடு நிறைய நிறைத்து விட்டு இங்கே பார்..என்னை போல வாழ்ந்தவர்கள் இந்த உலகில் இல்லை என்று பெருமைப்பட்டு கொள்கிறோம்..உண்மைதானே.

ஏதோ சில நேரங்களில் சில மணித்துளிகளில் மட்டும் முழுமையாக நாம் வாழ்ந்தததற்கான அடையாளத்தை விட்டு விட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம்..


வாழ்க்கை என்பது ஏதோவொரு உணர்வற்ற பயணம் அல்ல..அது நமக்கு பல ஆனந்தத்தை பரிசளித்து இருக்கிறது.. ஆனால் நாம் அதனிடம் சலிப்பையே வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறோம்..


எல்லா சலிப்புகளும் நம்மை ஒன்றாக சேர்ந்து அழுத்தும் போது இறைவனிடம் கெஞ்சுகிறோம்.. ஏன் எனக்கு மட்டும் வாழ்வை சலிப்பாக வைத்தாய் என..அவரோ நம் மேல் கோபம் கொள்ளாமல் மிகவும் நிதானமாக உனக்கு நான் எங்கே சலிப்பை பரிசளித்தேன்..அமிர்தத்தை தானே பரிசளித்தேன் என்கிறார் புன்முறுவலோடு..

நாம் கொண்டாட்டத்தை சிறு பாத்திரத்தில் அடைத்து விட்டு பெரிய அளவில் ஆனந்தத்தை தேடுகிறோம்..இது எப்படி சாத்தியமாகும்..

இந்த பிரபஞ்சம் மிகவும் பெரியது.. நாம் அதில் சிறுதுளியை மட்டும் பருகி விட்டு வாழ்க்கை சலிப்பானது என்று ஓர் முடிவுக்கு வந்து விடுகிறோம்.. இல்லையா..

நாம் கொண்டாட்டத்தை அந்த சிறு பாத்திரத்தில் இருந்து விடுவித்து விடுவோம்.. ஏனெனில் வாழ்க்கையின் கொண்டாட்டத்திற்கு நாம் வைத்திருக்கும் சிறு பாத்திரம் எப்போதும் போதாது..

ஓர் பறவையை போல இந்த பிரபஞ்சத்தின் மொத்த பகுதியிலும் சுற்றி திரிவோம்..

ஒவ்வொரு மணித் துளியும் சுமந்து வரும் அமிர்தத்தை பருகி கொண்டாடி திரிவோம்..

இந்த வாழ்க்கை எல்லா நேரங்களிலும் கொண்டாட்டத்திற்கானது..

மீண்டும் சந்திப்போம் நேயர்களே

..🧚💃🐒🦋🦚🚵💫🥳

#பயணத்தில் ஒரு சந்திப்பு (16).

#இளையவேணிகிருஷ்ணா.


இரவு சிந்தனை ✨

 


ஒவ்வொரு இழப்பும்

நாம் நினைப்பது போல

வாழ்வின் சுவாரஸ்யத்தை

குறைக்க அல்ல!

வாழ்வின் நிலையாமையை

உணர்த்தி

அந்த இழந்த நொடியையும்

அந்த இழப்பையும் 

ஈடு செய்ய 

அடுத்த நொடிக்கு நம்மை

தயார் செய்து புத்துணர்வோடு 

வாழ்க்கையை 

எதிர்கொள்ள வைப்பதேயன்றி 

வேறு இல்லை...

இங்கே நீர் குமிழியை 

நாம் ரசிப்பதில்லையா 

தன்னை மறந்து...

பிறகு ஏன் மனம் 

அயற்வுற வேண்டும்??

கொஞ்சம் யோசியுங்கள் ✨.

#இரவுசிந்தனை.

#இளையவேணிகிருஷ்ணா

#இசைச்சாரல்வானொலி.

#கிருஷ்ணாவானொலி.

நாள்:30/09/2023.

நேரம்: இரவு 9:24.

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

இரவு கவிதை 🍁


நொடிகளில் நகர்கிறது

எனக்கான தேடல்...

நான் நொறுங்கி போகிறேன்...

தேடலின் தாபத்தில்...

நொடிகளோ

கண்டுக் கொள்ளாமல்

சத்தம் இல்லாமல்

நிச்சலனமாக பயணிக்கிறது...

இருந்து விட்டு போகட்டும்...

நொறுங்கல்களை சத்தம் இல்லாமல் என்னால்

சேகரித்து வைத்துக் கொள்ள

முடியாதா என்ன?

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

நாள்:29/09/2023.

நேரம் 11.06.

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (15)

 


✨அந்த அதிகாலை நேரம் அவ்வளவு இனிமையானது.. நான் அந்த பொழுதை அவ்வளவு எளிதாக ரசிக்காமல் விட்டு விடவில்லை.எப்போதும் ஓடி ஓடி களைத்து விட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அது.. ஆனால் எத்தனை பேர் அதை அனுபவிக்கிறார்கள் என்று நிச்சயமாக தெரியவில்லை.நான் ஒவ்வொரு மணித்துளியையும் அனுபவித்து வாழ துடிப்பதால் எனக்கு அது மிகவும் பிடித்ததாக கூட இருக்கலாம்..

அந்த விடியற்காலை நான்கு மணி என்பது பலபேருக்கு நடுநிசி என்று கேலியாக எனது நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்..

இறைவன் இத்தனை அழகை ஏன் இந்த விடியல் நெருங்கும் வேலையில் மட்டும் கொட்டிக் கொடுத்து இருக்கிறான் என்று எனக்கு தெரியவில்லை..

நேற்றைய சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட வேண்டும்.. ஏன் நேற்றைய பொழுதையே மறந்து விட வேண்டும்.. அப்போது தான் இந்த விடியலை ரசிக்க முடியும்..


பொருளாதாரத்தை மட்டுமே தேடி அலைபவர்களுக்கு நிச்சயமாக இதை ரசிக்க முடியாது.மேலும் இன்றைய வாழ்வியல் சூழலில் பலபேர் இரவு பனிரெண்டு மணிக்கு தான் உறங்க செல்கிறார்கள்.. அந்த இரவையும் சுகமாக ரசித்து உறங்க முடியவில்லை ; இந்த விடியலை நெருங்கும் இந்த பொழுதையும் ரசிக்க முடியவில்லை;அது அவர்கள் தவறா இல்லை நமது அரசாங்கத்தின் தவறா என்று தெரியவில்லை..

ஒவ்வொரு மனிதனும் வாழ்வை வெறுத்து வெறும் சுவாசம் மட்டுமே இயங்கும் கதியில் தான் இருக்கிறார்கள்..

ஏன் அப்படி என்றால் அதற்கு அவர்கள் பொருளாதார சூழ்நிலை தான்..குடும்பத்தை காப்பாற்ற ஓடி ஓடி ஓய்ந்து விடும் நேரத்தில் கூட அவர்களால் வாழ்வை ரசிக்க முடியவில்லை..

ஏன் ஒரு மனிதன் இறக்கும் போது கூட அவன் உடலை ஏதோவொரு அவசரம் உந்தி தள்ளுகிறது.இப்போது அவன் ஓய்வெடுக்கிறான்.. அவன் குடும்பம் அவசரகதியில் இருக்கிறார்கள்.. ஏன் இந்த அவல நிலை என்று நினைக்கக் கூட எவருக்கும் நேரம் இல்லை..

அந்தளவுக்கு நேரத்தை மிதித்து ஓடுகிறார்கள் ஓடுகிறார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்..


வாழ்க்கை என்பது மிகவும் ரசனையானது.. உண்மையிலேயே.. நாம் நமக்கான கௌரவத்தை அதே வெற்று கௌரவத்திற்காக தொலைத்து விடுகிறோம்.. வெறும் ஆசைகளால் வாழ்வது தான் வாழ்க்கையா? வெறும் உணர்வற்ற ஜடம் போல இயந்திர கதியில் இயங்குவது தான் வாழ்க்கையா??

இங்கே பலருக்கு தமக்கு என்று ஓர் தேடல் இருப்பதையே மறந்து விடுகிறார்கள்;தமக்கான ஆனந்தத்தை தொலைத்து விட்டு வாழ்வதில் என்ன சுகம் இருக்க முடியும்?? என்னுள் ஆயிரம் கேள்விகள்..

ஒவ்வொரு மனிதனும் ஏதோவொரு வகையில் தம்மை சுமைதாங்கியாக எண்ணிக் கொள்கிறார்கள்.அந்த சுமைகளை சுமப்பதே ஆனந்தமயமானது என்று வீண் கற்பனை செய்து கொள்கிறார்கள்.. உண்மையில் நாம் சுமைதாங்கியா ? இல்லை நீங்கள் உண்மையில் சுமைகளற்றவர்கள்.. ஆயிரம் ஆயிரம் சுமைகளை பகிர்ந்து கொள்ள தெரியாமல் சுற்றி அந்த சுமைகளின் அழுத்தத்தில் ஆனந்தத்தை உணர்வதாக கற்பனை செய்து கொண்டு திரிபவர்கள்.. உண்மையான ஆனந்தத்தை அறியாதவர்கள்..

ஆமாம் இந்த விடியற்காலையில் எனக்கு ஏன் இந்த வேண்டாத சிந்தனை என்று எனக்கு நானே சிரித்துக்கொண்டே கொல்லைப்புற தோட்டத்தில் உள்ள மலர்ந்தும் மலராத அந்த மலர்களை பறிக்க சென்றேன்..

மலர்களோ நானும் இந்த விடியற்காலையை ரசிக்கிறேனே ஏன் என்னை பறிக்கிறாய் என்று கேட்பது போல இருந்தது.. ஆம் அதன் கேள்வி நியாயமானதே..இயற்கையை இறைவனாக பார்க்க தெரிந்தவனுக்கு ஏன் அதை பறிக்க தோன்றியது என்று ஆச்சரியப்பட்டேன்..அதை அப்படியே விட்டு விட்டு கொல்லைப்புற தோட்டத்தில் கொஞ்ச நேரம் செலவிட்டேன் அந்த திண்டுவில் அமர்ந்து கொண்டு..எனை மிகவும் மெலிதாக வருடி சென்றது அந்த அதிகாலை காற்று..அதை முழுமையாக அனுபவித்தேன்..

அப்படியே அங்கே மலர் துடிக்கும் பூக்களை ரசித்த படி எவ்வளவு நேரம் இருந்தேன் என்று எனக்கே தெரியாது.. திடிரென ஓர் 🐦 பறவையின் சிறு ஒலி எனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது..

இதோ இன்னும் சில நிமிடங்களில் சூரிய பகவான் இங்கே மக்களுக்கு ஒளி கொடுத்து இயங்க வைத்து விடுவார்..

மீண்டும் ஓட்டம் ஓட்டம் ஓட்டம்..நானோ ஓடி வெகுநாட்கள் ஆகி விட்டது.. சுற்றுலா வழிகாட்டியாக இருப்பதால் இப்போது எனக்கு ஓட அனுமதி இல்லை..

ஆனால் இந்த லௌகீகத்தை நோக்கி  இயங்காமல் இருப்பது வரமே என்று நினைக்கிறேன்..

நீயோ பிரம்மச்சாரி.. உனக்கு என்ன பிரச்சினை என்று இங்கே ஆயிரம் பேர் ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்.. ஆனால் நானும் சாப்பிட வேண்டும் அல்லவா.. இப்படி சொல்வதால் சாப்பிட உனக்கு அவ்வளவு செலவா என்று கேட்க தோன்றும்.எனது தேவைகள் குறைவு தான்.. ஆனால் நான் வாழ்வதோ நகரத்தினை ஒட்டிய பகுதியில்.. அரசாங்கம் தான் எனது சம்பளத்தில் பாதியை சாப்பிடுகிறது.. நான் இந்த அரசாங்கத்திற்காகவாவது ஓட வேண்டும் தானே 😊..

ஆனால் விரைவில் எனது வாழ்வை ஓர் அழகிய கிராமத்தில் தொடர இருக்கிறேன்.. அதுவரை இந்த நகரத்தின் கோடிகோடி துகள்களில் ஓர் துகளாய் நானும் ஓட தான் வேண்டும்..

மீண்டும் சந்திப்போம் வாசக நெஞ்சங்களே!🙏⛱️🧚🦋⛵🌊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (15).


திங்கள், 25 செப்டம்பர், 2023

Krishna fm கிருஷ்ணா இணையதள வானொலி..🎻

 


இணைந்துக் கொள்ளுங்கள் கீழேயுள்ள லிங்கில் 

இது இடைவிடாத இசைப் பயணம் மற்றும் பல வாசிப்பு அனுபவங்களை பெற...

புதியதோர் இசைப் பயணம் இது நேயர்களே 🎻 🙏 ✨.

https://whatsapp.com/channel/0029Va4hWhh5Ejxuj7cLrn2S

பயணத்தில் ஒரு சந்திப்பு(14)

 


✨விடியற்காலை பயணங்கள் எப்போதும் இனிமை தான்.எனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.அங்கே எனது நட்பு வட்டாரத்தில் அவர்கள் லாவண்யா மகள் திருமணம்.. லாவண்யா பள்ளி கால தோழி.. ரொம்ப அமைதியானவள்.. படிப்பில் சுட்டி..பள்ளியில் எந்த போட்டி என்றாலும் இவள் முதல் ஆளாக பெயரை கொடுத்து விடுவாள்..ஆனால் என்ன..பையன்களாகிய எங்களிடம் பேச மிகவும் கூச்சப்படுவாள்.. அதுதான் பிரச்சினையே..ஏதேனும் நோட்ஸ் கேட்டால் கூட பயந்து கொண்டு தருவாள்.. ஓரிரு வார்த்தைகள் பேசலாம் என்று பார்த்தால் கூட அவள் கண்ணில் தெரியும் பயத்தில் வந்து விடுவோம் நாங்கள்.. ஏனெனில் அவள் அழுது ஊரை கூட்டி விட்டால் என்ன செய்வது..அதனால் தான் நமக்கு ஏன் வம்பு என்று..

அவள் மகள் திருமணம் தான் தற்போது.

இருள் விலகாத இந்த நேரத்தில் எனது பயணம் எனது தோழன் புல்லட்டில் தான்..

ஏனோ இருசக்கர வாகனம் என்றாலே கல்லூரி காலங்களில் இருந்து இந்த வாகனத்தின் மீது ஓர் கண் இருந்து விடுகிறது..எங்களை போன்ற இளைஞர்களுக்கு..

மிகவும் ரம்மியமான சூழல்.இந்த விடியற்காலை பொழுதை எத்தனை வர்ணனை செய்தாலும் தகும்..இதமான குளிர் காற்று என்னை வருடியது.. வழியில் அந்த விடியற்காலை இருளில் தெரிந்த அத்தனை காட்சிகளையும் ஒன்று விடாமல் ரசித்தேன்..எனது மனதால் பருகினேன்..அதில் அப்படியே லயித்து போன நான் எனது பயணத்தை மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டி பயணித்தேன்.. என் வேகம் குறைவாக இருப்பதை பார்த்து எனது தோழன் கோபம் கொண்டான்.தோழனா நீ மட்டும் தானே வண்டியில் பயணிப்பதாக இதுவரை சொல்லி வந்தாய் என்று சண்டைக்கு வராதீர்கள்..அந்த தோழன் எனது புல்லட் தான்..என்னை நீ மெதுவாக ஓட்டி அசிங்கப்படுத்துகிறாய் என்று வழிநெடுகிலும் என்னோடு சண்டை போட்டு வந்தது..ஓர் காதலியை எனது வண்டியில் ஏற்றி வந்து இருந்தால் கூட இவ்வளவு சண்டை வந்து இருக்காது..அப்படி ஓர் சண்டை என்னோடு எனது தோழன் போட்டுக் கொண்டே வந்தான்..நானோ அதை சமாதானப்படுத்தும் விதமாக சிரித்து கொண்டே சொன்னேன்.உன்னையும் இந்த உலகத்தை ரசிக்க வைக்கிறேன் தோழா.. ஏன் இந்த கோபம் என்னிடம்  என்றேன்.. உன்னிடம் பேசி வெற்றி பெற முடியுமா என்று சொல்லி அமைதியானது..சரி தோழனின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் தானே என்று நினைத்து கொஞ்சம் வேகத்தை கூட்டினேன்..எனது புல்லட் சத்தம் காற்றை கொஞ்சம் சலனப்படுத்தி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..என் மேல் அந்த இளந்தென்றல் காற்று  திடீரென வேகமாக மோதியது.அதன் அறைதலை தாங்கிக் கொண்டேன் புன்முறுவலோடு.

வேறு என்ன செய்ய இயலும்.. நான் வேகமாக செல்வது அதற்கு பிடிக்கவில்லை போலும்.இங்கே ஒருவரை சமாதானப்படுத்தினால் இன்னொருவர் கோபித்துக் கொள்கிறார்..எனது நிலை கூட பரவாயில்லை.. இங்கே மனிதர்கள் பலபேருக்கு சமாதானப்படுத்துவதிலேயே வாழ்க்கை தொலைந்து விடுகிறது..அது மிகவும் மோசமான விசயம்.. அவர்கள் நிலை நினைத்து இப்போது கலங்குகிறேன்.. எப்படி அவர்கள் வாழ்க்கையை இந்த சமாதானப்படுத்துதலோடு ஓட்டுகிறார்கள்..என்று..


இப்படி அதிகாலை பயணம் செய்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது.பயணத்தின் எதிர் படும் எந்த விசயத்தையும் நான் அப்படியே கடந்து செல்லவில்லை.மிகவும் ரசித்தேன்.. ரசித்தேன் என்று சொல்வதை விட மெல்ல மெல்ல பருகினேன்..

நான் ரசித்து இயற்கை காட்சிகளை பருகியதை பார்த்து மெல்ல மெல்ல விடியலை எனக்காக அந்த இறைவன் பரிசளித்தான்.அந்த விடியலில் 🐦 பறவைகள் மிகவும் அழகாக சிறகடித்து வானில் பறந்தது.. பறவைகள் எப்போதும் தனது உற்சாகத்தை கைவிடுவதில்லை..சோர்ந்து எப்போதாவது நாம் இருந்தாலும் கூட நம்மை அதன் உற்சாகத்தால் சோர்வை விரட்டி விடுவது தான் விந்தை..அது தனது உயிரை நீட்டித்து கொள்வதற்கான உணவை தேடி பறந்தது இந்த அதிகாலை பொழுதில்.. அதற்கான உணவை எத்திசையில் மறைத்து வைத்து இருக்கிறானோ அந்த இறைவன்.அதை பற்றி எல்லாம் கவலை இல்லாமல் தனது உணவை தேடுதலில் மும்முரமாக சிறகடித்து வானில் பறந்து திரிந்தது..அது மிகவும் அழகாக இருந்தது.. வானில் வரிசை மாறாமல் அமைதியாக பறந்து நமக்கு ஏதோ சொல்கிறது..அது இந்த இயற்கை ஆழ்ந்த அமைதியை இழந்து தவிக்கிறது.மனிதர்களே நீங்களோ அதை பற்றி கண்டுக் கொள்ளாமல் உங்கள் சுயநல பயணத்தை விடாமல் தொடர்கிறீர்கள் என்பது போல இருந்தது. அதற்கு தேவையான அமைதியை நீங்கள் பறித்து கொண்டு வேதனைப் படுத்தலாமா என்பது போல இருந்தது.

இயற்கை தாம் படைத்த எதுவும் படைப்பின் ஒழுங்கில் இருந்து மாறாமல் பாதுகாத்து அதே ஒழுங்கில் பயணிக்க வைக்கிறது.நாமோ நம் ஆக்ரோஷமான பேராசை எனும் பயணத்தை மூர்க்கத்தனமாக அதன் மேல் திணித்து திக்கு முக்காட வைக்கிறோம்.


விடியலின் அடையாளமான சூரிய பகவான் அடி வானத்தில் இருந்து எட்டி பார்த்தது.இந்த உலகம் இரவின் மடியில் ஓய்வெடுத்தது  போதும் என்பது போல..தனது முகத்தில் பாதி தெரியும் படி.. கொஞ்சம் அப்படியே பார்வையை செலுத்தியது..இன்றேனும் சில மனிதர்கள் மாறி இருக்கிறார்களா என்கின்ற ஆவலோடு.. ஆனால் எதுவுமே மாறப்போவது இல்லைஎன்பது நன்கு உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்..அந்த சூரிய பகவானை அப்படி பார்க்கும் போது பரிதாபமாக தான் இருந்தது.

அதன் உதிப்பின் அழகை ஓர் ஓரமாக ரசனையோடு நின்று கவனிக்க சாலையில் எவரும் இல்லை.அந்த இனிய காலைப்பொழுதிலும் சாலையில் தனது சுயத்தை இழந்து பரபரப்போடு கூடிய பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்.. வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வும் ரசிக்கப் படக் கூடியது..என்பதை அவர்களிடம் சொல்லி எவரும் இல்லை..அப்படியே எவரேனும் அவர்கள் கையை பிடித்து நிறுத்தி சொன்னாலும் அவர்கள் வெறுப்போடு கையை உதறி விட்டு ஓர் எரிச்சல் பார்வையை அவர்கள் மேல் வீசி விட்டு செல்வார்கள் என்பதில் ஐயம் ஏதுமில்லை..இவர்கள் எல்லாம் எதற்காக ஓடுகிறார்கள்..என்று புரியவில்லை.. இயற்கை தரும் அமிர்தம் பருகாமல் ஓடி ஓடி அலுத்து கொண்டு தனது வாழ்வை தொலைத்து விட்டு பின்பு புலம்புபவர்கள் தான் இங்கே அதிகம்..


கடந்து செல்லும் நிமிடங்கள் நிலையாமையை உணர்த்துகிறது மிகவும் மௌனமாக.. வாழ்க்கை பயணிகளோ அந்த மௌனமொழி புரியாமல் அலைகிறார்கள் தனது வாழ்வை சுமையாக்கி..அவர்களை எல்லாம் மாற்ற முடியாது.. ஆனால் நான் எனது ரசனையை விடுவதாயில்லை..

நான் சாலையின் ஓரத்தில் எனது வண்டியை நிறுத்தி விட்டு கொஞ்ச நேரம் அந்த கதிரவன் எழும் அழகை ரசித்தேன்.. நான் ரசிப்பதை பார்த்து அந்த கதிரவன் கொஞ்சம் நிம்மதி அடைந்தது..ஏதோ இவனாவது தனது உதயத்தில் மனதை பறிக்கொடுக்கிறானே என்று..அது முழு முகம் எப்போது வந்தது என்று எனக்கு தெரியவில்லை.நான் அந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது என்று நிகழ்ந்த நொடிப் பொழுதை தேடுகிறேன் மிகவும் சுவாரஸ்யமாக.. சூரியன் ⛅ அழகாக சிரித்தது..எனது தேடுதலை பார்த்து..உனது தேடலை நான் ரசிக்கிறேன் என்று நட்போடு ஒளியால் ஆசீர்வதித்தது.

மீண்டும் எனது தோழனை இயக்கி சாலையில் இறங்கினேன்.. கடந்து செல்லும் மனிதர்கள் எல்லாம் எனக்கு ரோபாக்களாகவே காட்சி அளித்தார்கள்..

அதை புன்முறுவலோடு ரசித்து கொண்டே சென்றேன்..

ரசனை பயணத்தில் திருமணம் நடைபெறும் கோயிலும் வந்தது.

அங்கே திருமண சடங்குகள் நிறைவேறிக் கொண்டு இருந்தது.என்னை பார்த்த பள்ளி கால நட்புகள் வந்து கைக்குலுக்கி வரவேற்றார்கள்.அவர்களை பார்த்தவுடன் மீண்டும் உற்சாகம் என்னை தொற்றிக் கொண்டது..ஒவ்வொருவரும் என்னை பார்த்தவுடன் நலம் விசாரித்தார்கள் மிகவும் ஆவலோடு..நானும் அவர்கள் நட்பில் கரைந்து திக்குமுக்காடி போனேன்.அங்கே கொஞ்ச நேரம் எங்கள் பள்ளி கால பழைய  கதைகளை பேசி சிரித்து கொண்டு இருந்தோம்..

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.. என்ற பாடல் இன்றும் கூட மிகவும் பொருத்தமாக இருக்கிறது..என்பதை உணர்ந்தோம்..

பலபேரின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது..சிலபேரின் கதை வேடிக்கையாக இருந்தது..

லாவண்யா திருமண சடங்குகள் வேலை முடிந்தவுடன் எங்களோடு கொஞ்ச நேரம் பேசினாள்.அவள் கண்ணில் தனது மிகப்பெரிய கடமை முடிந்ததாக நினைத்த நிம்மதி உணர்ந்தேன்.பிறகு இருக்காதா பின்னே..ஒரு பெண்ணை நல்லபடியாக வளர்த்து நல்ல பண்புள்ள பையனின் கையில் ஒப்படைப்பது சாதாரண காரியமா என்ன.. கண்டிப்பாக மிகப் பெரிய சாதனை தான்..

நான் அப்படியே லாவண்யாவை பார்க்க சென்றேன்.. அவள் மிகவும் இயல்பாக நன்றாக இருக்கிறாயா மதி என்று கேட்டாள்.. என் கண்களை நேருக்கு நேராக பார்த்து..எந்தவித பதட்டமும் இல்லாமல்..அந்த பள்ளி கால பயத்தை தேடினேன் அவளிடம்.அது சுத்தமாக அவளிடம் இல்லை..அவளை பற்றி இங்கே அவர்கள் உறவினர்களிடம் நான் சொல்லலாமா என்று நினைத்தேன்.. (அதாவதுஅவளுடைய பயந்த சுபாவத்தை பற்றி..)அதை பற்றி நான் இங்கே சொன்னால் என்னை வேடிக்கையாக தான் பார்ப்பார்கள்..அது மட்டும் இல்லை.சிரித்து மகிழ்வார்கள்..அப்படி இருந்தது அவள் நடவடிக்கை.. காலம் தான் எல்லோரையும் எப்படி மாற்றுகிறது பாருங்கள்!

திருமண விருந்தை வெளியே ஓர் உணவகத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அங்கே சென்று சாப்பிட்டு விட்டு எனது பள்ளி கால நட்புகளிடம் விடைபெற்று லாவண்யாவிடமும் சொல்லி விட்டு செல்ல வந்தேன்..

அங்கே அவளது கணவரை லாவண்யா ஏதோவொரு தவறுக்காக திட்டிக் கொண்டு இருந்தாள்.. நான் அவளிடம் வந்தேன்.. அவள் திட்டுவதை கொஞ்ச நேரம் ஒத்தி வைத்து விட்டு சொல் மதி.. சாப்பாடு நன்றாக இருந்ததா என்றாள் சிரித்துக்கொண்டே.. நன்றாக இருந்தது லாவண்யா..நீ என்னை மறக்காமல் திருமணத்திற்கு அழைத்தது மகிழ்ச்சி என்றேன்.. அவளும் உன்னை எவ்வாறு மறக்க முடியும்?.உனது பள்ளிகாலமிரட்டல் பார்வை தான் உன்னை எனக்கு ஞாபகம் வைத்திருக்க உதவியது என்றாள் வேடிக்கையாக..

எந்த நிகழ்வுகளும் இங்கே மறக்கப்படுவது இல்லை..எங்கோ ஓர் மூலையில் தேக்கி வைத்து அழகு பார்க்கப்படுகிறது என்று நினைத்து கொண்டு விடைபெற்றேன் அவளிடம் இருந்து.. மறக்காமல் இருக்கும் நினைவுகள் ஆனந்தம் தான் அது எந்த ரூபத்தில் இருந்தாலும் இல்லையா ..என்று யோசித்தபடியே எனது தோழனை நோக்கி சென்றேன்.அது இப்போதேனும் என்னை அசிங்கப்படுத்தாமல் வேகமாக இயக்கு என்றது மிரட்டலாக.. ஏனெனில் இது விடியற்காலை இல்லை..பல மனிதர்கள் சாலையை நிரம்பி வழிகிறார்கள் என்றது கூடுதல் தகவலோடே..

நான் சரி என்று தலையசைத்தேன்..வேறு வழி? இங்கே ஜடப் பொருட்கள் கூட கௌரவத்தை எதிர்பார்க்கிறது.தனது சுயத்தை விட்டு விடாமல் பயணிக்கிறது..மனிதர்களோ தனது சுயத்தை இழந்து ஜடமாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது..

என்ன அங்கே முணுமுணுப்பு.வா விரைவாக என்றது புல்லட்..இதோ வந்து விட்டேன் என்று வேகமாக அதன் மேல் ஏறி காற்றை கிழித்து பறந்தேன் படுவேகமாக.. என் முகத்தை வேகமாக அறையும் காற்றிடம் மன்னிப்பு கேட்டு கொண்டே..

மீண்டும் ஓர் பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (14).


சனி, 23 செப்டம்பர், 2023

துரத்தி செல்லும் எண்ணம் இல்லை...

 


நம்மில் பலரும் எதையோ தேடி தேடி தொலைந்து கொண்டு தான் இருக்கிறோம்.. நானும் அப்படி தான்... தேடிக் கொண்டே இருக்கிறேன்.. எனக்கான விசயத்தை எங்கே புதைந்து இருக்கிறது என்று.. நான் தேடும் போதே அந்த பொருள் என்னை பார்த்து விட்டு நழுவி நழுவி போய் விடுகிறது.. துரத்தி செல்லும் எண்ணம் எப்போதும் இல்லை எனக்கு.. நான் இருக்கும் விசயத்தில் அனுபவிக்கிறேன்..தொலைந்த விசயமோ கொஞ்சம் கொஞ்சமாக புதைந்த இடத்தில் இருந்து மேலே வந்து என்னை கொஞ்சம் தலை திருப்பி பார்க்கிறது..

நானோ அதன் பக்கம் பார்வையை திருப்பாமல் திரும்பிக் கொள்கிறேன்..

அது சோர்ந்து போய் விட்டது.. நமக்கான அங்கீகாரம் பறிக்கப்பட்டு விட்டதோ என்று.. நம்மில் பலரும் இப்படி தான் பலபேரின் தேடலுக்கு காரணம் ஆகி பிறகு கண்டுக் கொள்ளாமல் சிதறி போய் விடப்படுகிறார்கள்..

#இசைச்சாரல்வானொலி.

பயணத்தில் ஒரு சந்திப்பு (13)

 


✨குளிர் காற்று என்னை வருடியபடி இருக்க நான் இந்த இரவை ரசித்தபடி எனது வீட்டின் மாடியில் மெதுவாக நடக்கிறேன் எனது அலைபேசியில் சுசீலாவின் இசையை ரசித்தபடி..இரவு தான் எவ்வளவு அழகு.. இந்த இருள் இவ்வளவு அழகை சேர்க்க முடியுமா இரவுக்கு என்று ஆச்சரியப்படுகிறேன் நான்..

இயற்கை ஒவ்வொன்றும் ஒப்பனை இல்லாமலேயே இவ்வளவு அழகாக இருப்பதை பார்த்து வியக்கிறேன்..


இரவின் வெறுமை தான் அழகை சேர்க்கிறது.. பகலின் ஒலி இரவை ஆக்கிரமிக்காமல் இருப்பது தான் இரவின் அழகை கூட்டுகிறது.. நீங்கள் எல்லாம் நகரத்தில் இருந்து கொண்டு இந்த இரவின் அமைதியை ரசிக்க முடியாது..இது உண்மை தானே..😊

இரவின் அழகில் மயங்கிய எனக்கு அலைபேசியின் ஒலி கலைத்தது..எடுத்து பார்த்தேன்.. கயல் தான் அழைத்து இருந்தாள்.கயல் எனது அத்தை மகள்.. இந்த நேரத்தில் என்னவாக இருக்கும் என்று யோசித்து சொல்லு கயல் என்றேன்..

மதி நலமா.. என்ன ரொம்ப நாளாக அழைக்கவே இல்லை.. அதுதான் அழைத்தேன் என்றாள்.

நான் நலம்..நீ நலமா என்று கேட்டு விட்டு நீயாக அழைத்தால் பேசிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன் கயல்.. ஏனெனில் எனக்கு வேலை இல்லை என்பதற்காக சம்சாரி களை தொந்தரவு செய்ய வேண்டாமே என்று தான்..என்று சொன்னேன்.. சிரித்தபடி..

அதற்கு அவள்,நீ சொல்வடா ஏன் சொல்ல மாட்டாய்..நீ திருமண பந்தத்தில் இணையாமல் தப்பித்து விட்டாய்.. நாங்கள் இந்த சாகரத்தில் நீந்தி நீந்தி சோர்ந்து விட்டோம்.. கண்ணுக்கு தெரியும் வரை கரையை தான் காணோம் என்றாள் ஆவேசமாக..

அட.. ஏன் இவ்வளவு அலுத்து கொள்கிறாய் கயல்.. இன்னும் எவ்வளவு நிகழ்வுகளை உன் வாழ்வில் கடக்க வேண்டும்..இப்போதே சோர்ந்து விட்டால் எப்படி என்றேன் கிண்டலாக..

உனக்கு எப்போதும் நகைச்சுவை தான் ..மதி என்றாள்..

சரி அங்கே அனைவரும் நலமா.. குட்டி செல்லம் கீர்த்தி நலமாக இருக்கிறாளா என்றேன்..

இங்கே அனைவரும் நலம்..மதி..

நீ அங்கேயே இருந்து கொண்டு என்ன செய்கிறாய்.. இங்கே கொஞ்சம் வந்தால் தான் என்ன என்றாள்.

நான் இப்போது கொஞ்சம் படிக்க வேண்டி உள்ளது.. நிறைய புத்தகங்கள் வாங்கி விட்டேன்..அதை எல்லாம் எனது விடுமுறை நாட்களான இப்போது படித்தால் தான் உண்டு.. அங்கே வந்து என்ன செய்ய போகிறேன் என்றேன்.

இங்கே நீ வந்தால் எனக்கு கொஞ்சம் நன்றாக இருக்கும்.. ஏனெனில் உன்னிடம் நிறைய பேச வேண்டும்.. தினம் தினம் ஒரே மாதிரி வேலை மற்றும் மற்ற பணிகளில் நான் கொஞ்சம் சோர்ந்து விட்டேன்.. இங்கே எனக்கு பேசக் கூட எவரும் இல்லை மதி..சக்தி வீட்டில் இருந்து வேலை செய்கிறார் என்று தான் பெயர்.காலையில் இருந்து இரவு வரை அவர் இருக்கும் அறையை விட்டு சாப்பிட தவிர வெளியே வருவதே இல்லை.. எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது.. உன்னை போல புத்தக புழுவாக இருந்தால் பிரச்சினை இல்லை... இங்கே எனது பேச்சை கேட்க ஆள் இல்லை..இப்படியே போனால் பைத்தியம் பிடித்து விடும் போல உள்ளது மதி என்றாள்..

பொறு பொறு.. ஏன் இப்படி மூச்சு விடாமல் பேசுகிறாய்..உனது தினசரி பணிகளை செய்து செய்து சோர்ந்து விட்டாய்.. அவ்வளவு தானே.. இதற்கு ஏன் இவ்வளவு பதட்டம்.. என்றேன்..

"ஏதோவொரு வெறுமை வாழ்க்கையில் தோன்றுகிறது மதி.. வாழ்க்கை ஓர் அர்த்தமும் இல்லாமல் போகிறது என்று தோன்றுகிறது."என்றாள்.

சில சமயங்களில் அப்படி தான் தோன்றும் கயல்.. அதெல்லாம் பெரிதாக நினைக்காதே.‌

உனக்கு தான் வீணை வாசிக்க தெரியுமே என்றேன்..

ஆமாம் மதி.. ஆனால் அதை எல்லாம் வாசித்து எத்தனை வருடங்கள் ஆகிறது தெரியுமா.. என்றாள்..

அந்த வீணையை தற்போது கையில் எடு என்றேன்..

மதி அதை வாசித்து வருட கணக்கில் ஆகிறது.. இப்போது சத்தியமாக எனது விரல்கள் தடுமாறும் என்றாள்..

அதெல்லாம் தடுமாறாது.. இப்போது நீ போய் அதை எடுத்து வா.. என்றேன் பிடிவாதமாக..

அவளும் கொஞ்ச நேரம் தொடர்பில் இரு என்று சொல்லி விட்டு பூஜை அறையில் உள்ள அந்த வீணையை எடுத்து வந்தாள்..

இப்போது வாசி என்றேன்..

அதை எடுத்து சில ராகங்களை வாசித்து பார்த்தாள்.ஒன்றும் வழிக்கு வரவில்லை சில நிமிடங்கள்.. கொஞ்ச நேரம் பிடிவாதமாக அதனோடு போராடி குறையொன்றுமில்லை என்று வாசிக்க தொடங்கினாள்.. அவள் அங்கே வாசித்தது அலைபேசி வழியே கசிந்து இங்கே இருக்கும் என் செவிகளுக்கு மட்டும் இல்லை..என்னை வருடிக் கொண்டு இருக்கும் காற்றுக்கும் தீனி போட்டது.

அதை தொடர்ந்து அலைபாயுதே வாசிக்க தொடங்கினாள்.. அந்த காற்றில் கண்ணனே ஊடுருவி தவழ்ந்து வந்தது போல் இருந்தது.. மெய் மறந்து கேட்டு கொண்டே இருந்தேன்..

அவளும் இன்னும் பல கீர்த்தனைகளை வாசித்து கொண்டே இருந்தாள் இடைவிடாமல்.. அந்த இசை எங்கள் இருவருக்கும் ஆறுதல் தந்தது..

இப்படி ஒரு மணிநேரத்திற்கு மேல் எங்களை கட்டிப் போட்ட இசை கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது..

எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதி.. நானும் அந்த அமைதியை அப்படியே ரசித்தேன்..ஹலோ மதி இருக்கிறீர்களா என்றாள் கயல்.

நான் இங்கே தான் இருக்கிறேன் கயல்.. ரொம்ப அருமையான இசை..வீணை இசையை நீ வாசித்து நான் கேட்ட அந்த நாட்கள் எனக்கு ஞாபகம் வருகிறது.. நான் அடிக்கடி உன்னை வாசிக்க சொல்லி கேட்பேன்.. உனக்கு ஞாபகம் இருக்கிறதா என்றேன்.

ஆம் மதி.. அதெல்லாம் ஓர் இனிமையான தருணங்கள் நிறைந்த நாட்கள்..

நான் உன்னை நேசித்தேன்..நீ என்னை நேசித்தாயா என்று எனக்கு ஞாபகம் இல்லை..

எனது தந்தை பிடிவாதமாக சாஃப்ட் வேர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பேன் என்று சொன்னார்..அதை உன்னிடம் ஓர் தகவலாக சொன்னேன்.. உன் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை அப்போது என்றாள்..

அதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய் என்றேன்.

இல்லை இந்த தருணத்தில் எனக்கு அந்த ஞாபகம் வந்தது.. அதனால் சொன்னேன்.

இப்போது சற்று முன் உன்னிடம் சொன்னேனே ஏதோவொரு ஓர் வெறுமை..அது இப்போது இல்லை மதி.. நான் ரொம்ப ஆனந்தமாக உணர்கிறேன் ரொம்ப நாளைக்கு பிறகு.. என்னோடு எனது உயிர் மூச்சாக வீணை இருப்பதை நான் எவ்வாறு மறந்தேன் என்று எனக்கு தெரியவில்லை என்றாள்..

காலம் நம்மை உயிர்ப்போடு வைத்திருக்க துடிக்கும் போது நாம் அதை உதாசீனப்படுத்தி விலகி விடுவதால் வரும் வினை என்றேன்..

"ஆம் மதி..நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.." என்றாள்..

நீ காலத்தில் ஆனந்தமாக கரைந்து கொண்டு இருக்கிறாய் இப்போது அப்படி தானே என்றாள்..

ஆம் கயல்.. எப்போதும் காலத்தில் லயமாகி ஆனந்திக்கும் தருணங்கள் தான் என்னை உற்சாகமாக வைத்து இருக்கிறது என்றேன்..

அந்த மாதிரி தருணங்களை ஆராதிக்கும் பாக்கியம் உனக்கு கிடைத்து இருக்கிறது..மதி.நான் காலத்தின் புயலில் சிக்கிய மரத்தை போல வாழ்வோடு போராடுகிறேன்.என்றாள்.

அப்படி சொல்லாதே கயல்.. வாழ்க்கை எவரையும் வெறுப்பது இல்லை..நீ உனக்கு வாய்த்த தருணங்களில் ஆனந்திக்க கற்றுக் கொள்.இப்போது இருந்தாயே இசையில் லயித்து.இதேபோல என்றேன்..

நிச்சயமாக முயற்சி செய்கிறேன் மதி.. உன்னை போல ஓர் மனிதனை எனது தந்தை அவமானப்படுத்தியதற்கு நான் வெட்கப்படுகிறேன்.. இப்போது மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் மதி அவர் சார்பாக என்றாள்..தழுதழுத்த குரலில்..

அட அந்த மாதிரி எல்லாம் பேசாதே கயல்.. வாழ்வியல் முடிச்சுகளின் சூட்சுமத்தை நம்மால் அறிய முடியாது.. அந்த மாதிரி நடந்தது தான் நமது வாழ்வின் நிகழ்வுகள்..

கடந்து சென்ற அந்த நினைவுகளை அசை போட்டு உனது வாழ்வை ரணமாக்கிக் கொள்ளாதே.. கடந்து போன நிகழ்வுகள் எப்போதும் நம்மை ரணமாக்க அனுமதிக்கக் கூடாது..நிகழ்கால நிகழ்வுகளில் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்.. கடந்த ஒருமணி நேரம் எவ்வளவு ஆனந்தத்தை அள்ளித் தெளித்தது அந்த அமுத ஊற்றில் மெய் மறந்த தருணங்கள் தான் இனிமையானது இல்லையா என்றேன்..

ஆம்.. உண்மை தான் மதி..நீ வாழ்வை நேசிக்கிறவன் அணுஅணுவாக.உன்னை காயப்படுத்த விரும்பவில்லை..

இவ்வளவு நேரம் என்னோடு நீ இருந்தாய் என்கின்ற ஆனந்தம் போதும்..என் வீணையின் ஒலி இனி என் வாழ்வியல் தருணங்களில் ஆனந்த தேனை பருக கொடுக்கும்.. மறந்து விட்ட எனது ருசியை மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி என்றாள்.. இனிமையான இரவு வணக்கம் என்றாள்..

நானும் தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாடி வைத்தேன்..எதிரே மௌன புன்னகை ஒலி ரகசியமாக கேட்டது எனது செவிகளுக்கு மட்டும்..

அலைபேசியை அணைத்து விட்டு உறங்க கீழே செல்வதற்கு முன் இருளுக்கு வணக்கத்தை சொல்லி பிரியா விடை பெற்றேன்.. இருளும் புன்னகைத்தது என்னை நோக்கி...

மீண்டும் சந்திக்கலாம் பிரிதொரு பயணத்தில் ⛵🌊🧚😊

#பயணத்தில் ஒரு சந்திப்பு (13).

#இளையவேணிகிருஷ்ணா.


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

மறக்காமல் ஒரு கோரிக்கை...

 


சுவை நிறைந்த வாழ்க்கையை ரசிக்க வேண்டும்.ஆனால் நாம் அதை சுவைக்காமலேயே வெறுப்புடன் எறிந்து விடுகிறோம்.. ஒரு தேடலில் எல்லாமே வாய்த்து விடுமா என்ன என்று எவரும் தமக்கு தாமே கேள்வி கேட்பதில்லை..எல்லாமே நமக்கு எளிதில் மிகவும் விரைவாக வேண்டும் என்கின்ற மனப்போக்கிலேயே வாழ பழக்கப்பட்டு விட்டோம்..அதோ அங்கே மிகவும் மெதுவாக சிறகை அசைத்து பறக்கும் அந்த பறவையை ரசிக்க மனம் இல்லாமல் எதையோ துரத்தி ஓடுவதில் என்ன ருசி இருந்து விட போகிறது என்று எவரும் தமக்கு தாமே கேள்வி கேட்பதில்லை.. ஆனால் எமன் வரும் நேரத்தில் மட்டும் மறக்காமல் ஒரு கோரிக்கை நம்மில் பெரும்பாலானவர்கள் வைக்கிறோம்... உனக்கு என்ன அவ்வளவு அவசரம்.. நான் இன்னும் வாழ்க்கையை வாழவே தொடங்கவில்லை என்று...

#வாழ்வின்சுவை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

பயணத்தில் ஒரு சந்திப்பு (12)

 


✨இன்று விடியற்காலை பொழுதில் வழக்கமான தேநீர் கோப்பை சுவையோடு தொடங்குகிறது..வாழ்க்கை என்பது என்ன என்பதை மிகவும் சுவாரஸ்யமாக சிந்தித்து கொண்டே ஒவ்வொரு தேநீர் பருகலிலும் அதன் சுவையை அறிய முற்பட்டு கொண்டே நடக்கிறேன் எனது புழக்கடையில் உள்ள தோட்டத்தில்..

ஏதோவொரு தேடலில் நாம் தொலைந்து கொண்டே தான் இருக்கிறோம்.. தேடல் எப்போதும் சுவையை அதிகரிக்கிறது.. ஆனால் அந்த சுவையும் வெறுத்து விடுகிறது நாட்கள் செல்ல செல்ல..


ஏதோவொன்றில் ஆனந்தத்தை தேடி அலையும் மனதிற்கு மட்டும் அந்த ஆனந்தம் மட்டும் பிடிபடவே இல்லை.. ஆனந்தம் எங்கே உள்ளது?மனதிலா உடலிலா? புற விசயங்களிலா?விசய சுகங்களிலா .... இப்படி கேள்விகள் ஆயிரம் ஆயிரம் என்னை துரத்தி அடிக்கிறது.. ஆனால் இதில் எதிலும் இல்லை என்று உணர்ந்த மனம் அது எங்கே என்று தேடி அலைவதை மட்டும் நிறுத்தவே இல்லை.


பல சமயங்களில் பிறவி என்பது ஏதோவொரு வரம் என்று தோன்றி வந்த வேகத்திலேயே மறைந்தும் விடுகிறது..ஏனோ பிறவிவேரின் மூலம் மட்டும் பிடிபடவே இல்லை..

இந்த பிரபஞ்சம் ஆயிரம் ஆயிரம் விசயங்களை தன்னுள் புதைத்து உள்ளடக்கி உள்ள போதும் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஆன்மாவை எது திருப்திப்படுத்த இயலும்??


சுகங்களை தேடி தேடி அலையும் மனதோ அது தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்தும் தேடி அலைவதை பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது..

தேடல் ஓர் சுகம் தான்.. இளமைப் பருவத்தில் காதலுக்கானதாக இருக்கும் போது..

திருமணத்திற்கு பின் பிள்ளைகள் ஏதேனும் சாதித்து வந்து காட்டாதா என்று நினைத்து கொண்டு கனவினை சுமந்து தேடி அலைந்துக் கொண்டு இருக்கும்போது..

நடுத்தர வயதில் குழந்தை பருவ நினைவுகளை மட்டுமே இனிமை என்று சேர்த்து வைத்த பழைய ஞாபகங்களை தேடி அலையும் போது..

முதுமையில் இறப்பு நம்மை நோக்கி நெருங்கி வராதா என்று..எல்லா தேடல்களும் சுகமே.. ஆனால் ஏதோவொரு வலியும் ஏக்கமும் அதில் புதைந்து கொண்டு நம்மை வருத்தாத வரை...


ஏதோவொரு வலையில் அகப்பட்ட உணர்வு தான் தலைதூக்குகிறது.. அந்த வலை அவ்வளவு எளிதில் பலருக்கு விடுவதாக இல்லை..

என் வாழ்க்கை என் பயணம் என்று தனித்து இயங்குவதில் ஓர் அலாதி சுகம்.. அந்த சுகத்தை அனுபவித்து ருசித்து வாழ எல்லோருக்கும்ஆசைதான்.. எல்லோருக்கும் என்று சொல்வதை விட சொற்பமான வர்களுக்கு இருக்க தான் செய்கிறது..

இப்படி நான் சிந்தனை செய்து கொண்டு நடக்கும் போதே மிக அருகில் அந்த சிட்டுக்குருவி யின் சிறகு என்னை தீண்டியதை சடாரென பார்த்து புன்னகை பூத்து கொண்டேன்.. ஒவ்வொரு விடியலிலும் ஓயாமல் உற்சாகமாகபறந்து பறந்து இரையை தேடி அவைவது அதற்கு சுகமாக இருக்கிறது என்று நாம் நினைக்கக் கூடும்.. ஆனால் அவ்வாறா என்று உணவை தேடி வெகுதூரம் அலைந்து திரியும் அந்த பறவைக்கு தான் தெரியும்..என்று யோசித்து கொண்டே அந்த சிட்டுக்குருவி பறந்த திசையை பார்வையை செலுத்த தொடங்கினேன்..

மெல்ல மெல்ல இருளுக்கு விடைக் கொடுத்து கைக்குலுக்கி அனுப்பி வைத்தது விடியல்..இது எனது தருணம் என்று..

தருணங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.. அதாவது அந்த இருள் பூசிய இரவும் ஒளி கிரணங்களை பாய்ச்சி இந்த பிரபஞ்சத்தை பொழிவூட்டும் பகலும்..

அதன் தன்மையில் ஓர் அழகிய உண்மை ஒளிந்து உள்ளது..

அதுதான் இந்த உலகியலில்

பயணிக்கும் எந்த ஜீவராசிகளின் வாழ்வியலிலும் ஒட்டாமல் தனது பயணத்தை தொடரும் அந்த பொழுதுகள்..

நமக்கு வாழ்வியலை ஆழ்ந்த அமைதியில் இயங்கி கற்றுக் கொடுக்கிறது..

இந்த தெளிவான சிந்தனை வந்தவுடன் நானும் இன்றைய நிகழ்வுகளில் பயணிக்க ஆயத்தம் ஆனேன் மிகவும் உற்சாகமாக...

மீண்டும் சந்திப்போம் நேயர்களே ஓர் அழகான பயணத்தில் 🧚🦋🙏😊🧚

#பயணத்தில் ஒரு சந்திப்பு (12).

#இளையவேணிகிருஷ்ணா.


வியாழன், 21 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (11).

 


✨நெருங்கி கொண்டிருந்த மாலை நேரத்தில் கொல்லைப்புறம் சென்று செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினேன்.. நான் எப்போது வருவேன் என்று காத்திருந்ததை போல செடிகளும் என்னை கண்டதும்  அழகாக தலையசைத்து வரவேற்றது.. இன்றாவது நீ எங்களுக்கு நீர் ஊற்றுவாயா என்பது போல இருந்தது அதன் அசைவதில்.. ஏனெனில் நேற்றே நீர் பாய்ச்சி இருக்க வேண்டும்..சிலபல வேலைகளில் விட்டு விட்டேன்.

இப்போது அது அசைந்து கேட்பதை உணர்ந்து இதோ வந்து விட்டேன் என்று மோட்டார் போட்டு ஓஸ் குழாயில்  தண்ணீர் பாய்ச்சினேன்...

மது கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தாள்.. என்ன அண்ணா நீர் பாய்ச்சுகிறீர்களா என்றாள்.ஆமாம் மது..நேற்றே செய்ய வேண்டிய வேலை என்று சொல்லி கொண்டே நீர் பாய்ச்சினேன்..

அண்ணா இங்கே எனக்கு உன்னோடு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. ரொம்ப அமைதியான தருணங்கள் இங்கே கிடைக்கிறது.. நிறைய புத்தகங்களை வாசிக்க எனக்கு ஓர் வாய்ப்பு.. மேலும் நீ இசையில் ஓட விடும் வீணையின் ஒலி..மனதை ஆழ்ந்த அமைதிக்கு எடுத்து செல்கிறது..

எவரை பற்றிய பேச்சும் இங்கே இல்லை.. மாறாக உன்னிடம் ஆறுதல் தேடி வரும் அழைப்புகள்..நீ பொறுமையாக அவர்களுக்கு சொல்லும் பக்குவமான பதில்கள்.. இங்கே வருபவர்களுக்கு அடைக்கலம் தந்து நீ கவனித்து கொள்ளும் அந்த வாழ்வியல்..எல்லாமே எனக்கு வாழ்க்கையை பற்றிய புரிதலை தந்து இருக்கிறது என்றாள்..

அப்படியா மது.. மிகவும் மகிழ்ச்சி.. வாழ்க்கை என்பது சிக்கலான விசயமே இல்லை..மது..அதை நாம் தான் மேலும் மேலும் சிக்கலாக்கி விட்டு அந்த சிக்கலை தீர்க்க வழியும் தேடுகிறோம்..

இதோ இங்கே மலர்ந்து இருக்கும் மலர்களை பார்..பல மலர்கள் இன்னும் சில கணங்களில் உதிர்ந்து விடும் தன்மை கொண்டது.. ஆனால் இப்போது கூட அது தலையசைத்து இருக்கும் நிமிடங்களில் தன் ஆனந்தத்தில் மூழ்கி திளைக்கிறது.. பார்.. கொஞ்சம் கூட சோர்வில்லாமல்.. என்றேன்..

ஆம் அண்ணா.. நீங்கள் சொல்வது சரிதான்.. ஆனால் வாழ்க்கை என்பது நமக்கு அப்படி அல்லவே.. இந்த பூக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது.. நமக்கு அன்றாட நிகழ்வுகள் மற்றும் நாம் சந்திக்கும் மனிதர்கள் பொருளாதார ரீதியாக குடும்ப ரீதியாக நிறைய பிரச்சினைகளை எதிர் நோக்குகிறோம் அல்லவா.. இந்த மாதிரி பிரச்சினை இந்த பூக்களுக்கு இல்லையே என்றாள்.. என்னோடு நடந்து கொண்டே சில பூக்களை வருடியபடி..

உண்மை தான்.. ஆனால் இந்த படைப்புகளை போல தானே நம்மையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படைத்து இருப்பான்.. ஆனால் நாம் ஏன் எப்போதும் பிரச்சினைகளை சுமந்து செல்கிறோம் எங்கே போனாலும் என்று யோசித்தாயா மது? என்றேன்..

இல்லையே..அது ஏன் நமக்கு மட்டும் பிரச்சினை துரத்தி துரத்தி வருகிறது என்றாள் யோசித்தவாறே!

அது ஏன் என்றால் இங்கே இறைவன் படைப்பில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் இறைவன் படைப்பிலேயே இன்புற்று வாழ்க்கையை கழிக்கிறது.. நாம் மட்டுமே நமது அகங்காரத்தால் இறைவன் படைப்பை விஞ்ஞான வளர்ச்சி என்கிற பெயரில் மற்றும் நமது பேராசை எனும் உணர்வில் சின்னாபின்னமாக்கி பிறகு உட்கார்ந்து அந்த பிரச்சினையை தீர்க்க போராடுகிறோம்.. மேலும் சக ஜீவராசிகளின் வாழ்வியல் இடங்களை ஆக்கிரமித்து அதன் நிம்மதியை கெடுத்து அந்த விலங்குகள் ஊருக்குள் வரும் போது ஏதோ எதிராளியை போல அதன் உயிரை பறித்து..இத்தனை விசயங்கள் எதனால் நடக்கிறது.. அரசியல் . இந்த அரசியல்வாதிகளின் சுயநலம் மற்றும் மக்களின் இன்னும் இன்னும்.. சேர்த்து வைக்க வேண்டும் என்கின்ற பேராசை.. எல்லாம் தான் காரணம்.. என்றேன்.

ஆம் அண்ணா.. உண்மை தான் என்றாள்..

நகரங்களை இணைத்து புதிய புரட்சி செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளும் அரசாங்கம் அந்த புரட்சி எனும் தணலில் எத்தனை ஜீவராசிகளின் வாழ்விடம் மற்றும் அதன் வயிற்றில் கை வைத்தது ஞாபகம் வருமா? வனத்தின் ஆக்கிரமிப்பில் கமிஷன் பார்க்கும் நேர்மையற்ற ஒரு சில அதிகாரிகளுக்கு தெரியாது வனம் என்பது பலகோடி ஜீவராசிகளின் புகலிடமாக இறைவன் அளித்த கொடை வீடு என்று..

இவர்கள் செய்த ஒவ்வொரு தவறுகளும் மொத்தமாக திருப்பி இயற்கை பரிசாக கொடுத்து கொண்டு இருக்கிறது நமக்கு..ஒரு போரில் ஏதும் அறியாத ஜீவன்களும் கொல்லப்படுவது போல இந்த நவீன யுகத்தில் ஒன்றும் அறியாத ஜீவராசிகளும் மனிதாபிமான மனிதர்களும் நரக வேதனை அடைகிறார்கள்..

ஆம் அண்ணா.. மிகவும் வேதனையான விஷயம் தான்.. ஆனால் இதை தடுத்து நிறுத்த முடியாதா அண்ணா.. என்றாள் அப்பாவியாக..

தடுத்து நிறுத்த முடியும்.. ஆனால் அது இயற்கையை நேசிக்கும் மக்கள் தீவிரமாக இருக்கும் போது..இயற்கையை மட்டும் பாதுகாத்து மக்கள் இழந்த அழகான வாழ்வியலை மீட்டு தர மென்மையான மனதுடைய அரசனை நாம் பெறும் போது.. மேலும் இந்த வல்லரசு வல்லரசு என்று கிறுக்கு தனமாக சுற்றி திரியும் மனிதர்கள் இல்லாமல் போகும் போது இதெல்லாம் நடக்கும் என்றேன்.

நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக உள்ளது.. ஆனால் இதெல்லாம் நடக்காதே அண்ணா என்றாள் பாவமாக..

ஆம்..நடக்காது.. அதனால் தான் நான் அதை பற்றி எல்லாம் அதிகம் யோசிக்காமல் எனக்கான உலகத்தில் ஆனந்தித்து இருக்கிறேன்..புற விசயங்களை நோக்கி ஓடுவதால் தேவையில்லாத விகாரங்கள் தான் குப்பைகளாக சேர்கிறது.. அந்த குப்பைகளை அள்ளி வெளியே கொட்டுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது..

சாலை குப்பைகளை கூட்டி பெருக்கவே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆள் வருகிறது.. இதில் மனகுப்பைகளை நீக்க எங்கே ஆள் தேடுவது? அப்படி கிடைத்தாலும் நாம் தானே சுத்தம் செய்ய முடியும்..வெளி ஆள் எவ்வாறு உதவ முடியும் என்று கேட்டேன்.. சிரித்து கொண்டே..

உண்மை தான் அண்ணா என்றாள் அவளும் சிரித்துக்கொண்டே..

நாங்கள் பேசி முடிக்கவும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ஞ்சி முடிக்கவும் சரியாக இருந்தது..

மது போய் மோட்டாரை நிறுத்து என்றேன்..

இதோ அண்ணா என்று ஓடி போய் நிறுத்தி விட்டு வந்தாள்..

அண்ணா தற்போது உங்கள் கைபக்குவத்தில் தேநீர் கிடைக்குமா என்றாள் சிரித்துக்கொண்டே..

இதோ அதற்கு தான் தயாராகிறேன் நானும் என்று சொல்லி கொண்டே நாங்கள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தோம்..

சிறிது நேரத்தில் எங்கள் கைகளில் தேநீர் கோப்பையை ஏந்தி சுவைத்து பருகிறோம் கொல்லைப் புறத்தில் உள்ள திண்டில் உட்கார்ந்து..

அந்திநேர சூரியன் எங்களை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்தது..

நாங்களும் அதன் அழகையும் சேர்த்து பருகிய படியே தேநீரையும் சுவைத்தோம்..

மீண்டும் பிரிதொரு சந்திப்பில்

 சந்திக்கலாம் வாசகர்களே 😊

#பயணத்தில் ஒரு சந்திப்பு (11).

#இளையவேணிகிருஷ்ணா.


புதன், 20 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (10)

 


✨மாலை நேரத்தில் சூரியன் மெல்ல மெல்ல தன் ஒளியை இரவுக்கு பலிக் கொடுப்பது ஓர் அழகு தான்.தன்னை வசப்படுத்தவும் ஒருவர் இருக்கிறார் என்று நினைக்கும் போது கொஞ்சம் ஆச்சரியம் கூட தோன்றும்.அது எவ்வாறு எனில் அதுவரை கட்டுக் கடங்காது திரிந்த ஆண் ஓர் பெண்ணிடம் காதல் வயப்படும் போது தனது திமிரை கொஞ்சமேனும் இழக்கிறான் அல்லவா.. அதுபோல..

அந்த இரவு நெருங்கும் நேரத்தில் நான் கொஞ்ச நேரம் அந்த நிகழ்வை ரசிப்பது எனது வழக்கம்.அப்படி ரசித்து முடித்து விட்டு கொல்லைப்புற தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் சென்றேன்.வரவேற்பறையில் விளக்கை போட்டுவிட்டு இரவு உணவை தயாரிக்க சமையலறை சென்றேன்..

அப்போது காலிங் பெல் சத்தம் கேட்டு யாராக இருக்கும் என்று போய் கதவை திறந்தேன்.அங்கே எனது பக்கத்து வீட்டு பத்மநாபன் நின்று கொண்டு இருந்தார்.உள்ளே வரலாமா என்று கேட்டார் சிரித்தபடியே.நானும் அவருக்கு வழி விட்டு வாங்க வாங்க என்று உள்ளே அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்தேன்.


கொஞ்ச நேரம் இந்த புத்தகத்தை படித்து கொண்டு இருங்கள்.நான் இதோ வந்து விடுகிறேன் என்று சமையலறை நோக்கி சென்றேன்..

பரவாயில்லை நீங்கள் உங்கள் வேலையை முடித்து நிதானமாக வாருங்கள்.உங்களோடு கொஞ்சம் உரையாடலாம் என்று தான் வந்தேன் என்றார்.

நான் இரவு உணவாக நான்கு கோதுமை ரொட்டி தயார் செய்து விட்டு அவருக்கும் எனக்கும் கொஞ்சம் எலுமிச்சை 🍋 இஞ்சி கலந்த தேநீர் கொண்டு வந்து அவர் கையில் ஒன்றை கொடுத்து விட்டு அவரருகில் அமர்ந்தேன்.. கொஞ்சம் மாடிக்கு போய் அங்கே காற்று வாங்கி கொண்டு பேசலாமா என்றேன் அவரிடம்.

ஓ.. நிச்சயமாக..என்று எழுந்தார்.


நான் அவரிடம் இருந்து தேநீர் கோப்பையை வாங்கி கொண்டு அவரோடு நடந்தேன்.மேலே இருவருக்கும் இருக்கையாக அங்கே இருந்த மர சாய்வு நாற்காலி அவருக்கு கொடுத்து விட்டு நான் சாதாரண நாற்காலியில் அமர்ந்தேன்.அவர் கையில் தேநீர் கோப்பை கொடுத்தேன்.. மிகவும் நிதானமாக பருகி விட்டு இவ்வளவு சுவையான தேநீர் தயாரிக்க எவரிடம் கற்றுக் கொண்டீர்கள் என்றார் ஆவலாக.

எல்லாம் ஓர் கைப்பக்குவம் அவ்வளவு தான் ஐயா என்றேன்..

அதுவும் சரிதான் என்று சிரித்தபடியே சொல்லி விட்டு கொஞ்ச நேரம் அண்ணாந்து வானத்தை பார்த்தார்..கண்சிமிட்டிய நட்சத்திரங்கள் அவரை கவர்ந்து இருக்கக்கூடும்.சிறு புன்முறுவல் அவரிடம்..

ஏதோ பேச வேண்டும் என்று சொன்னீர்களே என்று அவரிடம் ஞாபகப்படுத்தினேன்.


ஆமாம்.. வீட்டில் எவ்வளவு நேரம் தொலைக்காட்சி பார்ப்பது தம்பி..மனைவியோடு பழைய கதைகளை பேசினால் சலிப்பாக பார்த்து விரட்டி விடுகிறாள்.. அதுதான் உங்களை தேடி வந்து விட்டேன் என்றார்.. சிரித்தபடி.

கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு அவரே ஆரம்பித்தார்.. இவ்வளவு நாட்கள் வாழ்ந்து முடித்து விட்டேன் தம்பி.எனக்கு தற்போது எழுபது வயதாகிறது.ஆனால் ஏனோ தற்போதெல்லாம் இனி இருக்கும் வாழ்க்கை வீண் என்று தோன்றுகிறது என்று சொன்னார் மிகவும் நெகிழ்வாக..

அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் ஐயா.. எவ்வளவு காலம் இருந்தாலும் நமக்கான பயணம் முடியும் வரை ரசிப்பு தன்மையை மட்டும் விட்டு விடக்கூடாது என்றேன்.. உங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி சென்று பாருங்கள் ஐயா.அவர்களோடு கொஞ்ச நேரம் விளையாடுங்கள்.. அவர்களுக்கு நல்ல நல்ல கதைகளை சொல்லுங்கள் என்றேன்.

அதற்கு அவர் அதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஆசைதான்.ஆனால் அவர்களுக்கு நேரம் இல்லை தம்பி.. நான் உரையாடியே பல நாட்கள் ஆகிறது என்றார் சோகமாக.

எனக்கு அதை கேட்டு வருத்தம் அதிகமாகிவிட்டது.

சரிங்க ஐயா உங்கள் இளமை கால பள்ளி கால நட்பை பற்றி கொஞ்சம் என்னிடம் பேசலாமே என்றேன்..

அதை கேட்டவுடன் அந்த இரவில் கூட அவர் முகம் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நான் பார்த்தேன்..

அவர் பள்ளி காலத்தில் செய்த அந்த குறும்புகள் மற்றும் கணிதம் வராமல் ஆசிரியரிடம் அடி வாங்கியது.. நண்பனுக்காக இவர் பொய் சொல்லி பெற்றோரிடம் அடி வாங்கியது என்று நீண்டு கொண்டே போனது அவர் பேச்சு.. அந்த பேச்சை மிகவும் நிதானமாக கேட்டு அங்கங்கே கேள்வி எழுப்பி அவர் அதற்கு உற்சாகமாக பதில் தந்து என்று மிகவும் நன்றாக சென்றது எங்கள் உரையாடல்.

அவர் அத்தனை விசயத்தையும் பேசி முடித்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டார்.

கொஞ்ச நேரம் ஓர் பேரமைதி எங்கள் இருவருக்கும் இடையே நிலவியது..

பிறகு அவர் என்னிடம் மணி கேட்டார்.. நான் எட்டு மணி ஆகப்போகிறது என்றேன்..

சரிங்க தம்பி மிகவும் மகிழ்ச்சி.. இந்த மாதிரி பேசி பேசி சிரித்து மகிழ்ந்து வருட கணக்கில் ஆகிறது.. தினமும் சிரிப்பேன்.ஆனால் அதில் எந்தவித உணர்வும் இருக்காது.. இன்று நான் பேசியது மகிழ்ந்து சிரித்தது.. எல்லாம் என் ஆழ்மனதில் இருந்து ஆத்மார்த்தமாக வந்தது.. இப்படி எல்லாம் என் மகனிடம் பேசி மகிழ வேண்டும் என்று ஓர் ஆசை அவ்வபோது வந்து போகும்.. ஆனால் அந்த ஆசை கானல் நீராக தான் போகும்..

அவர்கள் அமெரிக்காவில் அவர்களுக்கு என்று ஓர் வாழ்க்கை குடும்பம் என்று நிம்மதியாக வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு அந்த தேசம் பிடித்து விட்டதாம்.. இங்கே வர விருப்பம் இல்லையாம்..

அது அவர்கள் விருப்பம்.அதில் நான் தடையேதும் சொல்லவில்லை.. வருடத்தில் ஓர் முறை இங்கே இரண்டு மாதங்கள் வந்து இருந்து எங்களை மகிழ்விக்க அவனுக்கு மனம் இல்லை என்று நினைக்கும் போது தான் மனம் வலிக்கிறது தம்பி.. என்றார்..

பேரக்குழந்தைகளுக்கு நமது கலாச்சாரம் பண்பாடு வரலாறு என்று அவர்களிடம் சொல்ல ஆயிரம் விசயங்கள் என்னிடம் பொக்கிஷமாக உள்ளது.. ஆனால் அவர்களுக்கு அதற்கென தனியாக டியூஷன் போட்டு இருக்கிறார்களாம்.நான் சொல்லி தர அவசியம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்..

இதெல்லாம் பார்க்கும் போது தான் தோன்றுகிறது பந்தம் பாசம் எல்லாம் மாயை என்று.. என்றார் விரக்தியாக..

ஐயா நான் உங்களிடம் ஒன்று சொல்லட்டுமா என்றேன்..

சொல்லுங்கள் தம்பி.. என்றார்.

இங்கே பலபேருக்கு பிரச்சினை எது என்றால் பரந்த மனப்பான்மை இல்லாது போவது தான் என்றேன்..

என்ன தம்பி சொல்கிறாய்.. புரியவில்லை என்றார்..

இங்கே பாருங்கள்... இத்தனை நாட்கள் நீங்களும் நானும் இங்கே அருகில் தான் இருக்கிறோம்.. இருவரும் வெறும் சிரிப்பை மட்டுமே பரிமாறி கடந்து சென்று வந்தோம்.. இருவரும் எப்போதேனும் பேசினால் நலமா என்று விசாரிப்போடு முடிந்து விடும்..

இப்போது தானே நீங்கள் என் வீட்டு கதவை தட்டினீர்கள்.. இப்போது கூட நீங்கள் பக்கத்து வீட்டுக்காரராக தான் நீங்கள் என்னை பார்க்கிறீர்கள்.ஆனால் நான் உங்களை என் வீட்டில் பார்த்தவுடன் எனது தந்தை என்ற உணர்வு தான் வந்தது.. என்றேன்.. உங்களுக்கு மகன் என்ற உணர்வு இருந்ததா என்றேன் சிரித்தபடி.

கண்டிப்பாக தம்பி.நீங்கள் சொல்வது உண்மை.. ஆனால் இப்போது உங்களை எனது பெற்ற மகனாக தான் பார்க்கிறேன்... வயதான காலத்தில் எவர் ஒருவர் தனது தந்தைக்கு ஒப்பான மனிதரின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்கிறாரோ அவர் நிச்சயமாக மகன் தான் என்றார் உணர்ச்சி பொங்க..

நான் சிரித்தபடி அவர் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்து கீழே போகலாமா என்றேன் அவர் தோளை பிடித்து கொண்டு..

போகலாம் என்று தலையசைத்தார்.

நாங்கள் இருவரும் கீழே வந்து அவரை சாப்பாடு மேசைக்கு அருகே உள்ள நாற்காலியில் அமர வைத்து அந்த கோதுமை ரொட்டியை பரிமாறினேன்.அதை அவர் ருசித்து சாப்பிடும் அழகில் லயித்து போனேன்..

வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் காம்பினேஷன் ரொம்ப அருமை தம்பி ரொட்டி..என்று கை கழுவினார்..

அவர் சாப்பிட்டு முடித்தவுடன் மெதுவாக அழைத்து சென்று அவர் வீட்டில் விட போனேன்..

அவர் வீட்டில் அவர் மனைவி வாசலில் உள்ள படிக்கட்டில் உட்கார்ந்து இருந்தார் இவர் வருகைக்காக.. இவ்வளவு நேரமாக என்ன தான் செய்தீர்கள் என்றார் கோபமாக..

நான் சொன்னேன்.. அம்மா கோபம் வேண்டாம்.. அவர் அவருடைய மகனிடம் பேசிக்கொண்டு இருந்ததால் நேரமாயிற்று என்றேன்.. அமைதியாக..

அந்த தாயின் கண்கள் என்னை உற்று பார்த்து விட்டு கண் கலங்கியதை அந்த இரவின் வெளிச்சம் காட்டி கொடுத்தது..

நான் இருவரிடம் கையசைத்து விடை பெற்றேன்.. மிகவும் திருப்தியான மனநிலையில் எனது வீட்டுக்கு..

அங்கே எப்போதும் போல காத்திருந்தது எனது வருகைக்காக அன்று நான் சந்தித்த தெருநாய்..

அதற்கு ஓர் புன்னகை பரிசளித்து வேகமாக உள்ளே சென்று மதியம் வைத்திருந்த சாதத்தில் தயிர் போட்டு எடுத்து வந்து போட்டேன்.. அதன் தட்டில்.. நிம்மதியாக சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டி நன்றி சொல்லி வெளியே உள்ள திண்ணையின் அடியில் படுத்துக் கொண்டது..

நான் முன் வாயில் கதவை மூடி விட்டு வீட்டுக்கு உள்ளே சென்று கதவை தாழிட்டு வீணை இசையை கசிய விட்டு எனது படுக்கையில் படுத்தேன் .. ஏதோவொரு ஆனந்தம் என்னை தாலாட்டியது மெலிதாக.என்னுள்ளே..கண்கள் உறக்கத்தை பரிசாக பெற்று மகிழ்ந்தது.

மீண்டும் ஓர் பயணத்தில் சந்திப்போம் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (10).



செவ்வாய், 19 செப்டம்பர், 2023

உடைப்பட்ட மனதின் துகள்..


அத்தனை நாகரிகத்திற்குள்ளும்

உடைப்பட்ட 

மனதின் துகள் ஒன்று கீறி 

ரத்தம் கசிய வைக்கிறது...

ஏனோ எத்தனையோ வலிகளை 

கடந்த மனதிற்கு

இந்த காயத்தின் வலி மட்டும்

பொறுக்க இயலாமல்

உயிர் வலி தந்து செல்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி

#கிருஷ்ணாஇணையதளவானொலி.

நேரம் காலை 8:36.

செப்டம்பர் 20.

பயணத்தில் ஒரு சந்திப்பு (9).

 


✨இந்த இரவு எப்போதும் எனக்கு ஏதோவொரு அமைதியை தருகிறது.பலருக்கு இரவு என்பது கவலைகளை அசைபோட வைக்கிறது; பழைய நினைவுகளை அசைபோட வைக்கிறது; இன்னும் பலருக்கு அன்றைய தினத்தில் எவரோ மனதை நோகடித்த அந்த நேரத்தை ஞாபகப்படுத்துகிறது; இளைஞர்களுக்கு காதலை அனுபவிக்க தருகிறது; இன்னும் எத்தனை எத்தனை நிகழ்வுகளை இந்த இரவு சுமக்க வேண்டி உள்ளது.. ஆனால் அந்த இரவோ அதில் எதிலும் ஒட்டாமல் என்னோடு பயணம் செய்யவே விரும்புவதாக எனக்கு பல சமயங்களில் தோன்றுகிறது.ஏனெனில் எந்தவித சுவடுகளையும் அதன் மேல் திணிக்காமல் அதை மட்டும் ரசிப்பதால் கூட இருக்கலாம்..

இரவு உணவை முடித்துக் கொண்டு அப்படியே காலாற மொட்டை மாடியில் நடக்கிறேன்.தென்றல் எனது அனுமதி பெறாமலேயே என்னை தீண்டி மகிழ்ந்தது.


வானொலியில் பிபி சீனிவாசன் குரல் வசீகரிக்க கேட்டு கொண்டே நடக்கிறேன்.. இசையோடு பயணம் செய்வதில் தான் எவ்வளவு சுகம்..என்று நினைத்துக் கொண்டே..

இரவின் சுகத்தில் திளைக்கும் என் மேல் எவரோ பொறாமை கொண்டார்கள் போல..

எனது அலைபேசி அழைத்தது.. நான் அதை எடுத்து பார்த்தேன்.. பள்ளி கால தோழன் சுரேஷ் தான் அழைத்து இருந்தான்.. காதில் வைத்து வணக்கம் மாப்ளே.. என்றேன்..

வணக்கம் மதி..நீ நலமா என்றான்.நான் நலமே நீ எவ்வாறு இருக்கிறாய் என்றேன்.நானும் நலமே.என்ன செய்கிறாய்.. ஏதேனும் வேலையாக இருந்தால் பிறகு அழைக்கவா என்றான்..

அதெல்லாம் ஒன்றும் இல்லை..மாப்ளே..இங்கே நானும் இந்த இரவும் மௌனமாக பேசிக் கொண்டு இருக்கிறோம்.இதில் என்ன பிரச்சினை என்றால் எப்போது நான் உன்னோடு சுகமாக உரையாடும் போதும் எவரோ நமது தனிமையை கெடுக்க வந்து விடுகிறார்கள் என்று இரவு முணுமுணுக்கும்..வேறு ஒன்றுமில்லை..இரவெனும் தோழியை நான் பிறகு சமாதானம் செய்து கொள்கிறேன்..நீ பேசு என்றேன்..கலகலவென சிரித்தபடியே..

இதை கேட்ட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..ஏதோ எனக்கு ஆகிவிட்டது என்று நினைத்துக் கொண்டான் போலும்..

என்ன சொல்கிறாய் மதி.. ஒன்றும் புரியவில்லை என்றான்.

அது ஒன்றும் இல்லை.இரவும் நானும் மௌனமொழியை பகிர்ந்து பேசிக் கொண்டு இருந்தோம்.இப்போது நீ அழைத்து விட்டதால் அதற்கு கோபம் வந்து விட்டது.அதுதான் அப்படி சொன்னேன் என்றேன்.

அடடா..நீ இரவோடு எல்லாம் பேசும் அளவுக்கு உனக்கு நேரம் இருக்கிறது போலும்.. அவனவன் வாழ்க்கை எப்படி நடத்துவது என்று நொந்து போய் இருக்கிறான்..நீ இரவோடு சாவுகாசமாக உரையாடல் நடத்தி கொண்டு இருக்கிறாய்.வாழ்க்கையை ஓர் ரசனையோடு வாழ வேண்டும் என்று நீ புரியாத வயதில் ஏதேதோ சொன்னது எல்லாம் இப்போது தான் ஞாபகத்துக்கு வருகிறது..நீ மட்டும் எப்படி அப்போது இருந்து இப்போது வரை மாறாமல் அப்படியே இருக்கிறாய்..ஆச்சரியம் தான் டா..என்றான்..நீகொடுத்து வைத்தவன் கூட தான் என்றான்.

அதெல்லாம் ஓர் கொடுப்பினை தானே மாப்ளே.. நீ சொல்வது போல் ஒருவரின் இயல்பு எல்லாம் அவ்வளவு எளிதில் மாறாது..நாம் நமது குணாதிசயத்தை மாற்றாமல் எப்படி மாறும் என்றேன்..அதுசரி.நீ என்ன காரணத்திற்காக அழைத்தாய்..அதை சொல் என்றேன்..

ஒன்றும் இல்லை..மதி... சும்மா தான் அழைத்தேன்..பேசி நாட்கள் ஆகிவிட்டது என்று தான் அழைத்தேன்.. ஏன் உன்னை அழைக்க கூடாதா என்றான்..

அப்படி எல்லாம் இல்லை..நீ எனது நண்பன் தானே..நீ அழைக்காமல் வேறு யார் இப்படி ஞாபகத்தோடு அழைப்பார்கள்..என்று அவனை நகைச்சுவையாக கலாய்த்து விட்டு தொடர்ந்தேன் எனது பேச்சை..

அதுசரி மகிழ்ச்சி.. வீட்டில் அனைவரும் நலமா.அம்மா மனைவி குழந்தைகள்.. எல்லோரும் நலமா.. என்றேன்.

அனைவரும் நலம் மாப்ளே.. என்ன குழந்தைகள் தான் எது வேண்டும் என்றாலும் உடனே வாங்கி தர சொல்லி ஒரே பிடிவாதம்.. அவர்களை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது..இதை எனது வீட்டில் கூட கேட்டு விட்டேன் எனது தாயாரிடம்..நான் கூட சிறுவயதில் இப்படி தான் இருந்தேனா என்று..அதற்கு எனது தாயார் சொன்ன விசயம் தான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது..அவர்கள் நான் உனக்கு பொம்மை எல்லாம் எங்கடா வாங்கினோம்..ஒரு டம்ளர் கரண்டி கொடுத்து விடுவோம்..அதை தட்டிக் கொண்டே இருப்பாய்..நான் எனது வேலையை முடித்து வரும் வரை என்றார்களே பார்க்கலாம்..எனக்கு தலை சுற்றியது..மாப்ளே என்றான்..

இப்போது என்னடா என்றால் கடைவீதியில் கண்டதையும் கேட்கிறார்கள்..வாங்கி தரவில்லை என்றால் ஒரே அழுகை அழுது மானத்தை வாங்கி விடுகிறார்கள்...

அதுதான் எனக்கு இப்போது மன உளைச்சல் என்றான்..

மாப்ளே நீ மட்டும் இல்லை.நிறைய பேர் இப்படி தான் தவிக்கிறார்கள்.குழந்தை எதை கேட்டாலும்உடனே  வாங்கி தந்தால் தான் நம் மேல் பாசம் இருக்கும் என்று நம்புபவர்கள் இங்கே அதிகம்..இது ஓர் உளவியல் நோய்.இதை சொன்னால் எவரும் கேட்பதே இல்லை.. என்றேன்.. மேலும் இதை பற்றி அவர்களுக்கு எடுத்து சொன்னாலும் புரிந்து கொள்ளாமல் பெரும்பாலும் பெற்றோர்கள் சொல்வது ஒரே விசயம் தான்..அது என்ன என்றால்  குழந்தைகளுக்காக தானே இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்..என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்கள்.. என்றேன்..

ஆம் மாப்ளே.அதை நான் இப்போது உணர்ந்து கொண்டேன்.. ஆனால் இப்போது இதை சமாளிக்க முடியாமல் தவிக்கிறேன்.கோபம் கோபமாக வருகிறது என்ன செய்ய.. என்றான் மிகவும் பரிதாபமாக.

நீயும் நானும் எவ்வாறு வளர்ந்தோம் ஞாபகம் உள்ளதா.நமது தலைமுறைக்கு வருடத்தில் இரண்டு உடைகள் கிடைப்பதே அதிகம்.அதை ஆவலோடு அனுபவித்து போடுவோம்.. இப்போது உடை கடையே ஒவ்வொரு வீட்டிலும் வைத்து விடலாம்.அந்தளவுக்கு ஆடை குவியல்கள் அதிகம்.. இப்படி தேவையில்லாத செலவுகள் நம்மையும் மீறி நமது குடும்பத்தில் நடப்பதை நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகிறது இல்லையா என்றேன்.

ஆமாம் மதி.மனைவி ஜவுளி கடைக்கு போனால் இந்த உடை நன்றாக உள்ளது அந்த உடை நன்றாக உள்ளது என்று ஜவுளிக்கடையை மொத்தமாக விலை பேசாத குறையாக வாங்கி வருகிறார்கள்.. கேட்டால் இதைத் தானே உங்கள் சம்பாத்தியத்தில் அனுபவிக்க முடிகிறது.. அதற்கும் தடை போட்டால் எப்படி என்று கேட்கிறார்கள்.. மேலும் எதையும் அளவுக்கு அதிகமாக அனைத்தையும் வாங்கி அதை பாதியிலேயே பயன் படுத்தாமல் தூக்கி எறிந்து விடுவது சாதாரண விசயமாகி விட்டது..

உலகம் வேகமாக ஓடுகிறது.நாமும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு ஓட வேண்டும் என்று நாம் மன கற்பனை செய்து கொண்டு உள்ளோம்.அதன் விளைவு ஒருமுறை பயன் படுத்தி தூக்கி எறியும் பொருட்கள் இங்கே அதிகம்...நமது வீட்டில் கூட.உதாரணமாக முக சவரம் செய்யும் பொருள்.. நாம் அதற்கு ஓர் செட் வைத்து பயன் படுத்தி வந்தோம்.. மீண்டும் மீண்டும் பிளேடை மட்டும் மாற்றி பயன் படுத்தி வந்தோம்.நமது பிள்ளைகள் அப்படியா.. நடக்கிறது.. இங்கே இதை ஓர் சின்ன விசயமாக கடந்து சென்று இயற்கை அன்னையை சீரழிக்கிறோம் என்பது எவருக்கும் ஏன் புரிய மாட்டேன் என்கிறது.. இந்த ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் சமாச்சாரம் ஓர் வியாபார உத்தி..அதை இந்த சோம்பேறிகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்..எல்லாமே இங்கே நாகரிகம் என்கின்ற போர்வையில் நடப்பது தான் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்றேன்.

ஆம்.. உண்மை தான் மாப்ளே.. வாழ்வியலை பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் நாகரிகம் என்கின்ற ஒற்றை சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு நமது தலைமுறையை ஒழுங்குப்படுத்த மறந்து விட்டு நாம் நமது இயற்கை எனும் தாயை குறை சொல்கிறோம் அல்லவா என்றான்.

நாமும் நமது குழந்தைகளுக்கு நிறைய இயற்கை பற்றிய புரிதலை சொல்லி கொடுக்க வேண்டும்.. இயற்கை பற்றி

பலவிசயங்களை நமது குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.அதாவது பொருட்கள் பின்னால் போவது ஒன்று தான் வாழ்க்கை என்று அவர்கள் புத்தியை மழுங்கடித்து விட்டோம்.நாமே தவறு செய்து விட்டு பழியை பிள்ளைகள் மேல் போட முயற்சி செய்யக் கூடாது.இல்லையா..எப்போதும் குழந்தைகளை இயற்கையோடு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.. இப்போது இந்த இரவை ரசிக்க கற்றுக் கொடுப்பவர்கள் எத்தனை பேர்?? விடியற்காலை பொழுதை அழகாக துதித்து அந்த இனிமையை அணுஅணுவாக ரசிக்க கற்றுக் கொடுப்பவர்கள் எத்தனைபேர்? இங்கே நமக்கு பொறுமை சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும் இல்லையா.. என்றேன்.

ஆம் மிகவும் உண்மை.நமக்கு பிள்ளைகள் தொல்லை கொடுக்கும் போது தற்காலிக தொந்தரவு தள்ளி போடலுக்காக அலைபேசியை கொடுத்து விட்டு அதற்கு அந்த குழந்தைகளை அடிமையாக்கும் குற்றவாளிகள் நாம் தான்.. என்றான்..

இப்போது உணர்கிறாயா.. வாழ்வியல் ஓர் கலை..அதை நாமே மறந்து எதையோ தேடி ஓடிக் கொண்டு இருக்கிறோம்.. அந்த மாயவலையில் நமது பிள்ளைகளையும் ஓட ஊக்குவிக்கிறோம்.. அதன் விளைவாக அவர்கள் பிடிவாத போக்கை ஊக்குவிக்கிறோம்.. ஒரு பொருளை கேட்டால் அதை உடனே வாங்கி கொடுக்காமல் தேவை என்றால் வாங்கி தரலாம்.. இல்லை என்றால் கண்டிப்பாக கிடையாது என்று சொல்லி விடலாம்..அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்லி புரிய வைத்து..

வாழ்க்கை ஓர் அரிய கலை.. அதில் குழந்தை வளர்ப்பது அதிலும் சிறந்த கலை.. இந்த கலையை அழகாக கையாள்பவர்கள் புன்முறுவலோடு வாழ்வை ரசித்து கடக்கிறார்கள்.இந்த கலையை கையாள தெரியாதவர்கள் வாழ்வியல் சுழல் எனும் சுழலில் மாட்டிக் கொண்டு திணருகிறார்கள்.. அவ்வளவு தான் என்றேன்.

அதுசரி மாப்ளே.. இவ்வளவு அழகாக குழந்தை வளர்ப்பு பற்றி சொல்கிறாயே.நீயோ பிரம்மச்சாரி.. இதில் இவ்வளவு நுணுக்கங்கள் எவ்வாறு கற்றாய் என்றான் ஆச்சரியமாக..

நான் அதற்கு எல்லாம் அனுபவம் தான் வேண்டும் என்று அவசியம் இல்லை .. சுற்றுப்புற சூழலில் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகள் எனும் நாடகங்களை கூர்ந்து கவனித்தாலே போதும் என்றேன்..

மிகவும் அருமை..மாப்ளே.. நான் குழந்தை வளர்ப்பில் இனி கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என்றான்.

நிச்சயமாக.. வாழ்க்கை ரொம்ப ஆனந்தமயமானது..அது ஜடபொருட்களில் இல்லை என்று சொல்லி வளர்க்க முயற்சி செய்.. வாழ்த்துக்கள் என்றேன்.

மிகவும் மகிழ்ச்சி மாப்ளே.. உன்னோடு பேசியதில் மகிழ்ச்சி இனிய இரவாகட்டும்..என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டு மீண்டும் வானொலி கேட்டு கொண்டே நடந்தேன்..

இரவு என் மேல் கோபத்தை மறந்து என்னை ரசித்தது.

நான் அதனிடம் ஏன் கோபம் கொள்ளவில்லை என்றேன்.

என்னை ரசிக்க இருக்கும் ஒரே மனிதனையும் நான் கோபித்துக் கொண்டு இழக்க விரும்பவில்லை என்றது புன்னகைத்து கொண்டே.

நானும் மகிழ்வோடு அதனிடம் விடை பெற்றேன்.. கொஞ்ச நேரம் அதனோடுஉரையாடி விட்டு..

மீண்டும் சந்திப்போம் அடுத்த சந்திப்பில் வாசகர்களே 😊

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (9).


திங்கள், 18 செப்டம்பர், 2023

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- திரைப்பட நடிகர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று வழக்கம் போல சொல்லி விட்டு போக மனம் இல்லை... மிகவும் மனம் வேதனை அடைகிறது.. இன்றைய நமது கல்வி முறை சரியா என்கின்ற கேள்வி நமக்குள் நிகழ்கிறது.. எப்போதெல்லாம் இப்படியான நிகழ்வுகள் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இதை பற்றி பேசி விட்டு கடந்து சென்று விடுகிறோம்.. பள்ளியில் சேர்த்து விட்டு நமது கடமை முடிந்து போய் விடுகிறது என்று சில பேர் இருக்கிறார்கள்.. இன்னும் பல பேர் குழந்தைகள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்று கண்டுக் கொள்ள நேரம் இல்லாமல் அவரவர் பணி சூழல் அவர்களை சிறைப்படுத்துகிறது.. சில குழந்தைகள் வாய் விட்டு பாட திட்டம் கடுமையாக உள்ளது என்று சொல்லி விடுவார்கள் பெற்றோரிடம்..அப்போதே சுதாரித்து நாம் அவர்களை அந்த சூழலில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.. இந்த பாட திட்டம் தான் சிறந்தது இந்த பாடத்திட்டத்தில் படித்தால் தான் மதிப்பு என்று நாம் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வரைமுறைகள் வகுத்து விடுவது தான் தீராத வேதனை நமக்கு தந்து விடுகிறது..இதை இனியாவது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.. அரசு பள்ளிகளில் படித்து நிறைய விஞ்ஞானிகள் உருவாகி இருக்கிறார்கள்.நிறைய பேர் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.. ஏன் என்னோடு படித்த தோழிகள் நிறைய பேர் நல்ல நிலையில் தான் இருக்கிறார்கள்.. இங்கே எந்த பள்ளி என்பது விசயம் இல்லை.. குழந்தைகள் கற்றல் திறன் மற்றும் கற்றலுக்கு சுதந்திரம் தான் முக்கியம் இங்கே...இதை பற்றி ஆழ்ந்த புரிதலோடு பெற்றோர்கள் இனியேனும் பயணிப்பார்களா என்பது தான் இங்கே நம் கண் முன்னே தொக்கி நிற்கும் ஆயிரம் ஆயிரம் கேள்வி...

கற்றல் என்பது ஒரு உயிரோட்டமான நிகழ்வே தவிர மரணத்தை நோக்கிய பயணம் அல்ல... யோசியுங்கள் பெற்றோர்களே🙏.

#இன்றையதலையங்கம்.

#கற்றல்

#மாணவமாணவிகள்தற்கொலை.

#இளையவேணிகிருஷ்ணா.

என் தேடலுக்கான வரம்..


முழுமையாக சுகப்படவும்

நேரமில்லை.. 

முழுமையாக சோகப்படவும்

நேரமில்லை...

ஏதோவொரு வெளிச்சம் மட்டும் 

துணையாக நகர்கிறது 

வாழ்க்கை..

கொஞ்சமும் சுவாரஸ்யம் 

இல்லாமல்...

எதுவும் மாற வேண்டாம்.. 

என் பயணத்தில் 

இந்த வெளிச்சத்தை மட்டும் 

காலம் பறிக்காமல் இருந்தால் 

போதும்...

அதுவே என் வாழ்வின் தேடலுக்கான 

வரமாக பெற்றுக் கொள்வேன்..

#இளையவேணிகிருஷ்ணா



பயணத்தில் ஒரு சந்திப்பு (8)


 வெகுநேரம் உறக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்து நேரத்தை விரயமாக்க எண்ணம் இல்லை.. அப்படியே காலாற நடந்து வரலாம் என்று சாலையில் இறங்கினேன்.

என்னை ஓர் நாய் 🐕 பின்தொடர்ந்தது.நான் ஓர் தேநீர் கடையில் தேநீர் குடிக்க அதுவும் எனதருகே உட்கார்ந்து நான் பருகும் தேநீர் கோப்பையை பார்த்தது ஏக்கமாக.. வீட்டில் 🏡 இருப்பவர்களுக்கே இங்கே வெகுமரியாதையோடு ?உணவு கிடைக்கும் போது தெருநாய்களை கண்டுக் கொண்டு உணவிடுபவர்கள் வெகு சிலரே.. அதன் பார்வையில் பசி இருப்பது அது எனது தேநீர் கோப்பையை பார்க்கும் போதே தெரிந்தது.. நான் அந்த தேநீர் கடையில் உள்ள ரொட்டி இரண்டை வாங்கி போட்டேன்.ஒருசில நொடிகளில் ரொட்டியை காலி செய்து விட்டு இன்னும் ஏதேனும் போடுவேனா என்று பார்த்ததில் தெரிந்தது அதன் பசி அடங்கவில்லை என்று.. நான் தேநீர் குடித்து முடித்து விட்டு எனது வீட்டுக்கு செல்ல மீண்டும் சாலையில் இறங்கி நடந்தேன்.சாலையில் வெகு சில வாகனங்களே ஆக்கிரமித்து ரொம்ப வேகமாக பயணித்தது.. அந்த வாகனங்களுக்கு தெரியாது இரவின் அமைதியை சீர்குலைக்கிறோம் என்று..சாலைகள் மிகவும் பொறுமையாக அந்த வாகனத்தின் சீற்றத்தை தாங்கி இருக்கக்கூடும்..தனது சீற்றத்தை வெளிப்படுத்தாமல் பயணிப்பவர்களின் சுமைதாங்கியாக இருந்தது..


நான் சாலை விளக்குகளின் வெளிச்சத்தில் நனைந்து பயணித்தேன் இரவை ரசித்தபடி.. என்னுடன் யாரோ பயணிப்பதை உணர்ந்து சற்று திரும்பி பார்த்தேன்.அதே நாய் 🐕 வாலை ஆட்டியபடி பவ்யமாக என் பின்னால் ஓடி வந்தது.


நான் சற்றே புன்னகை பூத்து நடக்க துவங்கினேன்..சிறிது நேர நடைக்கு பின் வாசல் கதவை திறந்து உள்ளே போனேன்.. நாய் உள்ளே வரவில்லை.. வாசலுக்கு வெளியே நின்றது..அது ஏன் அதற்கோர் எல்லை வகுத்து கொண்டது தெரியவில்லை.. அப்படி அது செயல் பட எவரும் கற்றுக் கொடுக்கவில்லை..இரண்டோர் இடத்தில் அடி வாங்கி இருக்கலாம்.. அந்த பயம் அதை ஆட்கொண்டு இருக்கலாம்..


  நான் வாசலை கடந்து உள்ளே இருக்கும் மெயின் கதவை திறந்து வேக வேகமாக சமையலறைக்கு சென்றேன்.. அங்கே நான் இரவு சாப்பிட்டு விட்டு வைத்திருந்த சாதம் இருந்தது.. பிரிட்ஜில் இருந்து தயிர் எடுத்து அதில் ஊற்றி நன்றாக பிசைந்து வெளியே வந்தேன்..


அந்த நாய் அங்கேயே உட்கார்ந்து இருந்தது.. நான் ஏதேனும் தருவேன் என்று அதற்கு தோன்றி இருக்கக்கூடும்.நான் தட்டில் இருந்து ஓர் பீங்கான் தட்டிற்கு மாற்றி அதனருகில் வைத்தேன்.. கொஞ்சம் தயக்கமாக உண்ண ஆரம்பித்தது..அது மிகவும் வேகமாக பின்பு பயம் இல்லாமல் உண்டு முடித்து என்னை ஏறெடுத்துப் பார்த்தது.அதன் பார்வையில் பசி தணிந்த மலர்ச்சி தெரிந்தது.பின்பு என் கையை தனது நாக்கால் சிநேகமாக வருடியது..பின்பு நான் அங்கே அதனோடு கேட்டுக்கு வெளியே நான் அமர்வதற்கு வைத்திருந்த திண்ணையில் அமர்ந்து கொண்டேன்.அதுவும் எனது காலடியில் அமர்ந்து கொண்டது.

அது ஏதோ முனகி என்னிடம் பேசியது.. நானும் அதனோடு பேசினேன்.. அதற்கு என் பாஷை புரிந்ததா தெரியவில்லை.அதன் பாஷையும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.ஆனால் நாங்கள் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. எங்கள் உரையாடலில் எவரை பற்றிய குறைகளும் இல்லை.புறம் பேசவே இல்லை நாங்கள் பேசிய அந்த நெடிய உரையாடலில்.. ஆனால் நாங்கள் இருவரும் மிகவும் உற்சாகமாக இருந்தோம்.

அந்த இரவும் கூட எங்கள் உரையாடலில் அகம் மகிழ்ந்து இருக்கக் கூடும்.. எங்கள் உரையாடலில் அதிக நட்சத்திர 🌟 காட்சிகளை பரிசளித்து கொண்டு இருந்தது.

மனிதர்களின் உரையாடல் ஏதோவொரு வகையில் புறம் கூறுவதாகவே போட்டி பொறாமையாகவே இருந்து விடுகிறது.. அகங்காரம் எப்படியேனும் ஒருவரை ஆக்கிரமித்து அந்த உரையாடல் சலிப்பில் சங்கடத்தில் ஆழ்த்தி விட்டு விடுகிறது.

எங்கள் உரையாடலில் அந்த பேச்சிற்கு இடமில்லை.. அந்த ஜீவன் என்னோடு வெகுநேரம் பேசி அதன் ஏக்கத்தை பூர்த்தி செய்து கொண்டது..போலவே இருந்தது அதன் செயல்பாடு..

அதன் இனத்தோடு பேச நினைத்த பல விசயங்களை என்னோடு பேசி இருக்கலாம்.. ஓர் உணவுக்கே ஆயிரம் போட்டிகள் நிறைந்த உலகில் வேறு எந்த விசயத்தையும் பேச கூட நேரம் இருக்க போவது இல்லை.. அந்த ஜீவனை எத்தனையோ பேர் கடந்து இருப்பார்கள்.அதுவும் அவர்களோடே கொஞ்ச நேரம் பயணித்து இருந்து ஏமாற்றம் மட்டுமே பெற்று இருக்கக் கூடும்.

வெகு வேகமாக ஓடும் போட்டி உலகத்தில் ஓர் ஜீவனின் பசியை நிதானமாக கண்ணில் அறிந்து உணவு கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரமயமாக்கல் நிறைந்த நாட்டில் கருணை கிடைக்காது என்று அதற்கு தெரிய நியாயம் இல்லை தானே.அதனால் உணவும் கிடைத்து தன்னோடு பேசவும் ஒருவர் இருக்கிறார் என்று அது நினைத்து இருக்கக்கூடும்..

பல நாய்களுக்கு ஏசி மற்றும் பல மருத்துவ வசதிகள் பேரன்பு கிடைக்கும் போது இந்த தெருநாய்களுக்கு குறைந்த பட்சம் கருணை இல்லாமல் பசி போக்க உணவு கிடைப்பதே பெரும்பாடாவதை நினைத்து வேதனை தான் மேலோங்குகிறது.

எங்கள் உரையாடல் முடிந்தது.. முடிந்தது என்று சொல்வதை விட முடித்துக் கொண்டோம்.. நான் அதற்கு கையசைத்து விடை பெற்றேன்.. அதுவும் மெல்ல தனது வாலை அசைத்து நான் அமர்ந்த திண்ணை அடியில் படுத்துக் கொண்டது..அது அவ்வாறு செய்தது எனக்கு நன்றி கடன் செலுத்துவதாக நினைத்து கொண்டேன்.. பெரிய பல உதவிகள் செய்தாலும் ஓர் நன்றி உணர்வை கூட வெளிப்படுத்த தெரியாத உலகில் இன்னும் அந்த உணர்வை தனது கொள்கையில் இருந்து தளர்த்தாத இந்த ஜீவராசிகளும் கூட ஓர் அதிசயம் தான் என்று நினைத்து படுத்தேன்.. படுத்தவுடன் மனநிறைவில் உறக்கம் என்னை ஆட்கொண்டது ஆக்ரோஷமாக.. வெளியே இருக்கும் அந்த ஜீவராசிகளும் உறங்கி இருக்கக்கூடும் மனிதர்களின் இத்தனை வகையா என்று ஆச்சரியப்பட்டு கொண்டே..

மீண்டும் பிரிதோரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (8).

#இளையவேணிகிருஷ்ணா.


இரவு சிந்தனை ✨

 


நம்மை யாரோ மோசமானவர்கள்

இயக்குகிறார்கள் என்றால் 

நாம் அந்தளவுக்கு

பலவீனமானவர்கள் என்று

அர்த்தம்!

சுயத்தை நேசிக்கும் எவரும்

பலவீனமாக விரும்புவதில்லை!.

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுசிந்தனை.

நேரம் 9:35.

செப்டம்பர் 18.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (7)

 


அந்த பௌர்ணமி நிலவு என்னை பார்த்து ஈர்ப்பு பார்வையை வீசியது.. நான் அதை கண்டுக் கொள்ளவே இல்லை..அதை அப்படியே ரசித்தேன்.. நான் ரசிப்பதை அது காதல் என்று எடுத்துக் கொண்டு விட்டது போலும்..

காதல் இந்த வார்த்தையை நான் யோசித்து கொண்டே இருக்கும் போது கீழே எவரோ காலிங் பெல்லை அழுத்தி என்னை கூப்பிட முயற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.. நான் கீழே இறங்கி கதவை திறந்து பார்த்த பொழுது அங்கே அடுத்த தெரு வினோதன் நின்று இருந்தான்.. அவன் ஓர் ஐடி துறை ஊழியன்.. நான் அவனை பார்த்து கூட ரொம்ப நாளாகி விட்டது.. எங்கள் அறிமுகம் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அந்த அண்ணா பூங்காவில் வழக்கமாக இருந்து வந்தது.தற்போது இந்த சூழல் அமைந்துள்ளது..

நான் அவனை பார்த்து உள்ளே வா வினோதன் என்றேன்.. அவன் புன்னகைத்து கொண்டே சார் எப்படி இருக்கிறீர்கள்.. நலம் தானே என்றான்.. நான் அவனை பார்த்து இப்படி சார் எல்லாம் போட்டு என்னை அந்நியமாக்க வேண்டாம் என்றேன்.சிரித்தபடியே..

அவனோ பிறகு சரிங்க அண்ணா என்றான் சிரித்தபடியே..

நான் இதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை..நீ மதி என்றே கூப்பிடலாம்.. என்றேன்..

அவனோ அதெல்லாம் அப்படி உங்களை கூப்பிட முடியாது என்று சிரித்தபடியே சொல்லி விட்டான்..

சரி உன் விருப்பம் என்று சொல்லி விட்டு வேலை எவ்வாறு போகிறது என்றேன்..

அதற்கென்ன அண்ணா மிகவும் நன்றாக போகிறது.. தற்போது வீட்டில் இருந்து வேலை என்பதால் எங்கேயும் போக முடியவில்லை.. எந்த நேரத்தில் மீட்டிங் எந்த நேரத்தில் மேலதிகாரி அழைப்பார்கள் என்று ஓர் பதட்டத்தோடு அலுவலகத்தில் இருந்ததோடு கொஞ்சம் மன உளைச்சலோடு போகிறது என்றான்..

அது சரி.. இந்த நிலை விரைவில் மாறும் என்று நம்புவோம்..என்று சொல்லி கொண்டே அவனை மாடிக்கு போகலாமா என்றேன்..

கண்டிப்பாக அண்ணா என்றான்..

நான் ஓர் நிமிடம் என்று சொல்லி விட்டு அவனுக்கு மாடிக்கு செல்லும் வழியை காட்டி விட்டு கொஞ்ச நேரம் அங்கேயே இரு..இதோ வந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்றேன்..

இரண்டு கப்பிற்கு மணமான இஞ்சி தேநீர் தயாரித்து கொண்டு சில பிஸ்கட் தட்டில் எடுத்து கொண்டு சென்றேன்.

அவன் அங்கே உலாவிக் கொண்டு இருந்தான் அந்த நிலவை பார்த்தபடியே..

நான் அவனை அழைத்து இதோ இதை பிடி வருகிறேன் என்று அவன் கையில் தேநீர் கோப்பையை திணித்து விட்டு எனது தேநீர் கோப்பை மற்றும் பிஸ்கட் தட்டை  அங்கே இருந்த கைப் பிடி சுவரில் லாவகமாக வைத்து விட்டு மேலே உள்ள அறையில் இருந்து இரண்டு நாற்காலிகள் மற்றும் ஓர் டேபிளை கொண்டு வந்து அவன் முன் வைத்தேன்.

அந்த டேபிளில் பிஸ்கட் தட்டை வைத்து விட்டு நான் தேநீரின் சுவையில் மூழ்கினேன்..

அவனும் சில பிஸ்கட் எடுத்து அதில் மூழ்க வைத்து சாப்பிட்டுக்கொண்டே இடைஇடையே தேநீரையும் பருகிக் கொண்டே அந்த நிலவை ரசித்து கொண்டு இருந்தான்..

நான் இயல்பாக எனது தேநீர் காதலியை பருகிக் கொண்டே அந்த நிலவை ரசித்து கொண்டு இருந்தேன்..

சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு விநோதன் தான் அந்த மௌனத்தை உடைத்தான்.

அண்ணா உங்களிடம் ஓர் விசயம் சொல்ல வேண்டும் என்றான்..

ஓ தாராளமாக சொல்லலாமே.. என்றேன் புன்னகைத்தபடி..

நான் தேநீர் பருகி முடித்து விட்டு கோப்பையை டேபிளில் வைத்து போது அவன் ஏதோ சொல்ல தயங்குவதாக எனக்கு தெரிந்தது..

ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு இப்படி தயங்கினால் எப்படி? அந்த நிலாவுக்கு கோபத்தை மூட்டுகிறாய்..நீ என்றேன்..

நான் தயங்குவதால் அதற்கு என்ன கோபம் அண்ணா என்றான் சிரித்தபடியே..

இல்லை.. அதுவும் எவரேனும் காதல் கதையை சொல்வார்களா என்று வெகுநேரமாக ஆவலாக உள்ளது.. என்னிடம் கூட காதல் சொல்ல கெஞ்சியது சற்று முன் கூட..நானோ அதை நிராகரித்து விட்டேன்.. அந்த கோபத்தை உன்னிடம் திருப்பி விட போகிறது என்றேன் கிண்டலாக..

அண்ணா ஏன் இந்த கொலவெறி என்றான் பலமாக சிரித்தபடியே..

சரி விசயத்திற்கு வா.. விநோதன்.. உனக்கும் கூட காதல் பிரச்சினையா என்றேன் மிக இயல்பாக..

அவன் உடனே ஆம் அண்ணா என்றான் மிகவும் பரபரப்பாக..

அப்படியா.. அந்த கொடுத்து வைத்த காதலி யார் என்றேன் நான் மிகவும் ஆவலாக..

அண்ணா அவள் ஓர் இலக்கியவாதி.. நிறைய கவித்துவமான படைப்புகள் படைத்து நிறைய வார மாத இதழ்களுக்கு அனுப்பி வைப்பவள்.. மேலும் இரண்டு நாவல்களும் எழுதி உள்ளாள்.. மேலும் அவள் முதுகலை தமிழ் பட்டதாரி.. வேலைக்கு எல்லாம் போகவில்லை.. எந்த அரசு போட்டி தேர்வும் எழுதவில்லை.

நாங்கள் அறிமுகம் ஆனது ஓர் இலக்கிய வட்டாரத்தில்.. நான் எதேச்சையாக அவள் படைப்புகளை ஓர் தளத்தில் படிக்க ஆரம்பித்து அதன் பிறகு அவள் எழுத்தின் காதலனாகி இப்போது அவள் மேல் ஏதோவொரு ஈர்ப்பு..அது காதல் தான் என்று எனக்கு தோன்றுகிறது.. ஆனால் எங்கள் வீட்டில் வேலைக்கு அதுவும் அரசாங்கம் உத்தியோகம் போகும் மணமகளை தான் தேடுகிறார்கள்..

மேலும் எங்கள் வீட்டில் காதலுக்கு எப்போதும் அவர்கள் எதிரி தான் என்று மடமடவென சொல்லி விட்டு என்னை பார்த்தான்..

நான் அவனை பார்த்து ரொம்ப பலமாக சிரித்தேன்..

அவன் பயந்து விட்டான் போலும்.. அண்ணா ஏன் இப்படி சிரிக்கிறீர்கள்.. என் காதல் கதை உங்களுக்கு நகைச்சுவையாக இருக்கிறதா என்றான்..

நான் மிகவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு சொன்னேன்..

விநோதன் இந்த காதல் எல்லாம் எப்போதும் இப்படி தானா.. இல்லை காதலிக்கும் நீங்கள் இப்படி தானா.. என்றேன்..

என்ன அண்ணா சொல்கிறீர்கள்.. ஒன்றும் புரியவில்லை என்றான்.

இல்லை எப்போதும் காதலித்து முடித்து விட்டு தீர்மானமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லாமல் பிறகு இது சரி வருமா என்று யோசிக்கிறீர்களே அதை கேட்டேன் என்றேன்..

அதுசரி நீ அவளிடம் உன் காதலை சொன்னாயா என்று கேட்டேன்..

நேற்று முன்தினம் தான் சொன்னேன் அண்ணா என்றான்..

சரி உன் காதலை ஏற்றுக் கொண்டாளா என்று கேட்டேன்..

இல்லை அண்ணா.. அவள் அதற்கு பதில் சொல்லாமல் கலகலவென்று சிரித்தாள் என்றான் விநோதன்.

ஏன்..உன்னை பைத்தியக்காரனாக பார்க்கிறாளோ என்றேன் நான் சிரித்தபடியே..

இல்லை அண்ணா..நீ யோசித்து கொள்..ஒரு இலக்கியவாதியோடு குடும்பம் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல என்று சொல்லி விட்டு ஆனாலும் உன் காதலை ரசிக்கிறேன் என்றாள்.

அதென்ன காதலை ரசிக்கிறாள் இதெல்லாம் இலக்கியவாதிகளின் தனித்தன்மை என்று சொல்லி விட்டு உன் காதலை ரசிக்கிறாள் ஒருவேளை உன் காதலை என்றேனும் ஏற்றுக் கொள்ளவும் கூடும்.நீ காத்திரு.. என்றேன்.

அண்ணா என் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.. இவள் எப்போது என் காதலை ஏற்றுக் கொள்வது.. நான் இவளோடு எப்போது திருமணம் செய்வது என்றான் மிகுந்த வேதனை கொண்ட காதலோடு..

கவலைப்படாதே விநோதா.. காதல் என்றால் அப்படி தான்..

நீ உன் வீட்டில் பேசி புரிய வை..

அவர்கள் ஒருவேளை உன் காதலை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.. ஆனால் அதற்கு முன் உன் காதலை ரசிக்கும் காதலி எப்போது உன்னை ரசிப்பாள் என்று தெரியவில்லையே என்றேன் கிண்டலாக..

அதுதான் அண்ணா பிரச்சினை..

அது நிகழலாம் நிகழாமலும் போகலாம் என்றான் சோகமாக..

நான் நம்பிக்கையோடு இரு.. எந்த உண்மையான காதலும் தோற்பது இல்லை..காத்திருப்பது என்பது இங்கே மிகவும் அவசியம்..

எவ்வளவு காலம் ஆனபோதும் காத்திருந்து தன் காதலியை அல்லது காதலனை அடைவது என்பது அவரவர் வைராக்கியம் பொறுத்த விஷயம்..

காதல் எப்போதும் எல்லாவற்றையும் தாண்டி பயணிக்கும்.. அதற்கு காதல் மட்டும் தான் தெரியும்.. காதல் உள்ள எவரோடும் அது பயணிக்கும்.. அதற்கு வயதோ காலமோ தேவையில்லை..

எல்லாம் கடந்த பிறகும் காதல் ஒளியோடு பயணிக்கும்.. காதல் ஓர் புரிந்து கொள்ள முடியாத ஓர் உணர்வு..

அந்த உணர்வின் உச்சத்தை அடைந்தவர்களை அந்த காதல் கொண்டாடி மகிழ்கிறது..

ஆனால் அந்த கொண்டாட்டத்தை அனுபவிக்க இங்கே எவருக்கும் பொறுமை இல்லை.. அதனால் காதலை குறை சொல்லி திரிகிறார்கள் என்று நீண்ட சொற்பொழிவை அவனுக்கு பரிசளித்தேன்..

அவனும் உன்னிப்பாக என் பேச்சை கேட்டு விட்டு ஆமோதித்து தலையசைத்தான்..

ஆமாம் அண்ணா.. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரியே.. அதில் என் காதல் என்னை கொண்டாடுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. அதில் எனது செயலும் அவளது செயலும் அடங்கி உள்ளது.. இருவரில் ஒருவர் அந்த காதலை வெற்றி பெற செய்தாலும் கூட காதல் என்னை கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ளும்.. என்றான் உற்சாகமாக..

இந்த நம்பிக்கை உன் காதலை வெற்றி பெற வைக்கும்..விநோதா.. உற்சாகமாக இரு.. என்றேன் நான்..

சரி அண்ணா... உங்களோடு பேசியதில் எனக்கு ஓர் தெளிவு வந்து விட்டது.. நான் கிளம்புகிறேன்.. மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் போது நான் உங்களை வந்து பார்க்கிறேன் என்று கைக்குலுக்கி விடை பெற்றதை பார்த்து வானில் உள்ள நிலவு நான் வேண்டும் என்றால் தூது செல்கிறேன் அவர்கள் காதலுக்கு என்று என் காதில் இரகசியமாக சொன்னது..

நானோ அந்த தேவை வரும் போது உன்னிடம் சொல்கிறேன் என்றேன் சிரித்தபடியே..

நான் சிரிப்பதை பார்த்து என்ன அண்ணா சிரிக்கிறீர்கள் என்றான்..

அதுவா..அது எனக்கும் நிலவுக்கும் உள்ள இரகசியம் என்று சொல்லி விட்டு அவனை வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு இரவு உணவை தயார் செய்ய ஆயத்தம் ஆனேன்..

எனக்கு பிடித்த வானொலியில் பாடலை ஒலிக்க விட்டபடியே..

அதில் காதல் காதல் உன் கண்ணில் மின்னல் மோதல்.. ஒலித்துக் கொண்டு இருந்ததை நானும் முணுமுணுத்தபடியே சப்பாத்தி மாவை பிசைந்தேன்..

மீண்டும் பிரிதொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசக நெஞ்சங்களே🙏💫😊🤝💖🦋🐦🦚🦚🌴💫🙏

பின்குறிப்பு :-

இந்த பயணத்தில் ஓர் சந்திப்பு அத்தியாயங்கள் பற்றி தங்கள் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் வாங்க நெஞ்சங்களே 🙏. இதில் வரும் கதாபாத்திரங்கள் பற்

றிய தங்கள் மேலான எண்ணங்களை பதிவு செய்யுங்கள்.. நன்றி 🙏

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சிந்திப்பு.

✨✨✨✨

✨✨✨.


சனி, 16 செப்டம்பர், 2023

அந்த பறவையின் சீண்டல்..

 


எவரின் உருகுதலும்

வேண்டாம் என்று

சுதந்திரமாக பயணிக்கும் போது

வலுக்கட்டாயமாக வம்பிழுக்கிறது..

அந்த பறவையின் சிறகு

என் மேனியை மோதி...

#இளையவேணிகிருஷ்ணா.

செப்டம்பர் 17/2023.

நேரம் காலை 8:40.


இந்த மழைக் கால தொடக்கத்தில்..

 


ஒரு கோப்பை தேநீரோடு

இந்த மழைக் கால தொடக்கத்தில்

இளம் காலை வேளையில்

எழுதிக் கொண்டு

சில இதமான இசையோடு 

 இருக்கும் நொடிகளில் 

உருகிக் கொண்டே இருக்கிறது 

வாழ்வின் சுவை...

அதை அப்படியே பருகி முடித்து 

மீண்டும்

எழுதிக் கொண்டே இருக்கிறேன் ...

சில தூறல்கள் 

மெல்லிய இசையோடு 

இந்த பூமியை

குளிர்விக்கும் நேரத்தில்

அதோ அங்கே சிறகடித்து 

பறக்கும் பறவை

அந்த தூறலில் 

நனைந்துக் கொண்டே 

எனது அறையின்

சாளரத்தின் வழியே

என்னை தலை உயர்த்தி 

பார்க்கிறது...

நான் அதை பார்த்து 

புன்னகைக்கும் நேரத்தில்

அது தனது மெல்லிய குரலில் 

பிரியத்தோடு

ஒரு சுவாரஸ்யமான இசையை 

என் செவிகளுக்கு விட்டு 

சென்றது தான்

இந்த நாளின் பொக்கிஷமாக..

#ஞாயிறுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

பயணத்தில் ஒரு சந்திப்பு (6)


 நேற்று கடற்கரை பக்கம் கொஞ்சம் காலாற நடந்து கொண்டு இருந்தேன்..இது ஓர் கதை.. அந்த காட்சியை மனக்கண் முன் விரிய விடுங்கள்.. இப்போது நீங்கள் கூட கடற்கரை மணலில் சிறு குழந்தையாக மாறி விளையாடுவீர்கள்..சரியா..😊


  அப்படியே அலைகளை ரசித்தபடி மணலில் கால் புதைய புதைய நடந்து கொண்டே இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும் இல்லை என்றே எனக்கு தோன்றும்.. அந்த கடற்கரை காற்று என்னை கொஞ்சம் வம்புக்கு இழுத்து என்னை தழுவி ஒருசில நிமிடங்களில் விடுவித்து செல்லும் அந்த விந்தை எப்போதும் ரசிக்கக் கூடியதே..இதை எல்லாம் அணுஅணுவாய் ரசிக்க ஓர் மனம் வேண்டும்.. நல்ல வேலையாக இறைவன் அந்த நல்ல மனதை எனக்கு அளித்திருக்கிறார்.. நன்றி இறைவா உனக்கு 🙏


கொஞ்ச தூரம் அந்த ஆனந்தத்தை அனுபவித்தபடியே நடந்து கொண்டு சென்ற போது கடல் அலையின் ஓசையையும் மீறி ஓர் விசும்பல் ஒலி எனது காது அருகே கேட்டது போல் இருந்தது.கொஞ்சம்தூரம் சென்று சற்று திரும்பி பார்த்தேன்.. அங்கே எனது தெருவிலேயே கடைசி வீட்டில் குடி இருக்கும் ஓர் இளம் பெண்ணின் விசும்பல் ஒலி அது.எனக்கு ஆச்சரியம்.இப்படி பொது இடத்தில் தனியே அழும் அளவுக்கு அவளுக்கு என்ன நேர்ந்தது என்று கொஞ்சம் குழம்பி போய் அவளிடமே கேட்டு தெரிந்து கொள்ள விரைந்தேன்..

மெல்ல அவள் பெயரை சொல்லி அழைத்தேன்.அட அவள் பெயர் உங்களுக்கு சொல்ல மறந்து விட்டேன்..அல்லவா.அவள் பெயர் மலர்.. அவள் பெற்றோர் கண்டிப்பாக தமிழ் ஆர்வாளராக இருக்க வேண்டும்..சரி இப்போது அதுவா முக்கியம்.. அவளை நோக்கி மலர் ஏன் இப்படி அழுகிறாய் என்றேன்.. அவள் அவசரம் அவசரமாக தனது துப்பட்டாவால் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தாள்.. இவ்வளவு நேரம் இதே பொதுவெளியில் தன்னை மறந்து அழுது இருக்கிறோம் என்று இப்போது தான் உணர்ந்தாள் போலும்.ஒன்றும் இல்லை மதி..என்றாள்..


நான் அவளை விடாமல் கேட்டேன்.. ஒன்றும் இல்லை என்றால் நீ ஏன் இங்கே வந்து தன் நிலை மறந்து அழ வேண்டும்.. உனக்கு என்ன பிரச்சினை என்று சொல்.உனக்கு என்னிடம் சொல்ல விருப்பம் இல்லை என்றால் கடந்து சென்று விடுவேன் என்று மட்டும் நினைக்காதே.. நான் அப்படி ஒன்றும் செல்ல மாட்டேன்.நீ சொல்லும் வரை என்றேன்..

அவள் சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தாள்..


நான் ஒருவரை உயிருக்கு உயிராக நேசித்தேன் மதி.. எங்கள் காதல் கடந்த ஏழு வருடங்களாக பயணிக்கிறது.தற்போது எங்கள் காதலில் பிரச்சினை நான் அதே நேசத்தை காட்டிய வேலையினால் தான் என்றாள்..

என்ன மலர் சொல்கிறாய் புரியவில்லை என்றேன்..


நான் நேசித்த அந்த வேலையை விட்டுவிட்டு வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று எனது காதலன் சொல்கிறான் என்றாள்..

எனக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.. ரொம்ப சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் என்னை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு.. ஒருசிலர் ஒரு கோபபார்வை பார்த்து கடந்து சென்றார்கள்.. அதில் கணல் தெரித்தது.. எனக்கு வேடிக்கை பார்த்தவர்கள் மேல் கூட கோபம் வரவில்லை.கோபத்தோடு கடந்தவர்கள் மேல் தான் கோபம் வந்தது.. அவர்களுக்கு என்னை பார்த்து பொறாமையாக கூட இருக்கலாம்.. ஏனெனில் இந்த காலத்தில் வாய் விட்டு சிரிக்கும் அளவுக்கு பெரும்பாலும் வாழ்வியல் சூழல் இல்லை.. இந்த சூழலிலும் இவனால் மட்டும் எவ்வாறு இப்படி சிரிக்க முடிகிறது என்று கோப பார்வை பார்த்து இருக்கலாம்..சரி நாம் மலரிடம் செல்வோம்..


  என்ன மலர் வேடிக்கை இது..நீ இதே வேலையை பார்த்து கொண்டு இருந்தபோது தானே உன்னை அவன் காதலித்தான்.இப்போது என்னவாம் அவனுக்கு.என்று கேட்டேன் சிரித்தபடியே..

அதற்கு காரணம் நான் ஐடி துறையில் இருப்பது தான் மதி.. என்றாள்.

அதனால் என்ன இப்போது ?

இந்த வேலையில் நிறைய ஆண் நண்பர்கள் எனக்கு இருக்கிறார்கள்.. அனைவரும் என்னோடு நாகரிகத்தோடு இருப்பவர்கள்.. ரொம்ப நல்ல மனிதர்கள்.. ஆனால் இப்போது இவர்களை பார்த்து சந்தேகம் வந்து விட்டது அவனுக்கு..என்றாள்..


இத்தனை நாள் அதே நட்போடு தானே பயணித்தாய்.அந்த நட்போடு இருக்கும் போது தானே உங்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது.இப்போது திருமணம் என்றவுடன் அந்த நட்பு எவ்வாறு இடையூறாக இருக்கும் ..ஒன்றுமே புரியவில்லையே என்றேன் கன்னத்தில் கை வைத்தபடி..


அதுதான் எனக்கும் புரியவில்லை மதி.. ஏன் இயல்பான விசயத்தை இவ்வளவு சிக்கலாக்கி பார்க்க வேண்டும் என்றாள் 


இது தான் சுயநலம்..உன் மேல் ஓர் அதிகார கயிற்றை வீசி கட்டி வைப்பது.இது தான் திருமண பந்தத்தின்  முதல் படி என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கும் தவறை உனது காதலனும் செய்கிறான் என்றேன்.. மேலும் பெண் என்றால் ஏதோ ஓர் அடிமை என்று அவர்களுக்கு தெரியாமலேயே மனதில் பதிந்து விட்டது .. அவர்கள் வளர்ந்த சூழல் கூட ஓர் காரணமாக இருக்கலாம் என்றேன்.

இப்போது இதை எவ்வாறு சரி செய்வது மதி..என்று என்னிடமே யோசனை கேட்டாள்..

நீ அவனை விட்டு விலகி இரு.. எல்லாவகையிலும்.. சமூக வலைத்தளம் மற்றும் அலைபேசி குறுந்தகவல் என்று எல்லாவிதத்திலும்.. என்றேன்..


எவ்வளவு காலம் மதி அப்படி இருப்பது.. அப்படி இருந்தால் பிரச்சினை மேலும் மேலும் அதிகமாகும் என்றே தோன்றுகிறது.. மேலும் அவன் என்னை மறந்து விட கூட வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னாள். 

அதை கேட்ட எனக்கு அவள் மீது கோபம் வந்தது.. பிறகு சமாளித்து கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னேன்..

இதற்கு எல்லாம் சண்டை போட்டால் உங்கள் காதல் காதலே அல்ல.என்றேன்..

என்னது ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?என்று பதட்டத்தோடு கேட்டாள்..

அவள் பதட்டத்தை பார்த்து எனக்கு பாவமாக இருந்தது.. இருந்தாலும் இப்படி ஓர் அப்பாவி பெண்ணை அவன் ஏன் இப்படி கஷ்டப்படுத்தி பார்க்கிறான் என்று அவன் மேல் இன்னும் கோபம் அதிகமானது..

மேலும் இந்த காதல் படுத்தும் பாட்டை நினைத்தால் சிரிப்பும் கூட வந்தது..

நான் ரொம்ப நிதானமாக கடலை ரசித்தபடியே சொன்னேன்.. எப்போதும் இந்த கருவி சாதனங்கள் துணையோடு தான் உங்கள் காதல் பயணிக்கிறது என்றால் அது காதலே இல்லை என்று மீண்டும் வலியுறுத்தி கூறினேன்..

நீங்கள் சொல்வது சரிதான்..

உண்மையான காதல் கருவிகளினாலே எப்போதும் வளர்வது இல்லை.. கருவிகள் இல்லாமல் கூட அமைதியாக எத்தனையோ காதல் கதைகள் அந்த காலங்களில் இருந்து தானே இருக்கிறது மதி..என்றாள்..

சரி மதி.. இதற்கு நான் சம்மதித்தாலும் அவன் சம்மதிக்க வேண்டுமே.. என்றாள்.

நீ எடுத்து சொல்லி புரிய வை.இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் உன்னை நிச்சயமாக உளவு பார்க்க கூடும்.அதை ஓர் டிடெக்டிவ் வைத்து அவனை கண்காணி.. அவன் உன்னை உளவு பார்ப்பது தெரிந்தால் நீ விலகி விடு உன் காதலை தியாகம் செய்து.. என்றேன்..சாவகாசமாக.

என்னது விலகுவதா என்றாள் பரபரப்போடு..விலகுவது எல்லாம் என்னால் முடியாது மதி.. நான் அவனை மிகவும் ஆழமாக நேசித்து தொலைத்து விட்டேன்.. இப்போது விலகி விடு என்று நீங்கள் மிகவும் சாதாரணமாக சொல்கிறீர்கள்.. எனக்கு அந்த வார்த்தையை கேட்டதும் அமிலத்தை உருக்கி என் காதில் ஊற்றியதை போல இருந்தது என்றாள்..

இவளை சமாதானம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று புரிந்து கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன்.ஆனால் அதை கொஞ்சம் அழுத்தமாக சொல்வது தான் சரி என்று எனக்கு பட்டது..

ஆமாம் விலகுவது தான்.. என்றேன் இன்னும் அழுத்தமாக.

என்னால் இயலாது.நான் அவனை நேசித்தது எவ்வளவு ஆழமாக என்பது உங்களுக்கு புரியாது என்றாள்..

நான் அவளிடம் சொன்னேன்..நீ மட்டும் நேசிப்பது என்பது சரியான வாழ்க்கைக்கு ஒத்து வராது..திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால் ஒத்து வரும்.. ஆனால் திருமண பந்தத்தில் நீ அவனோடு இணைவது சரியாக இருக்காது.. என்றேன்.

அப்படி என்றால் நான் அவனை தவிர எவரையும் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை மதி.. அவன் என்னை உளவு பார்த்தால் நான் அவனை திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ளாமல் நேசிப்பேன்.. என் காதல் எப்போதும் அவனோடு மட்டுமே என்றாள் தீர்க்கமாக..

அது உன் விருப்பம்.. காதல் என்பது ஒருவரை நாம் தீர்க்கமாக நேசிக்கும் போது சம்பந்தப்பட்ட நபரோடு சேர்ந்து வாழ முடியவில்லை என்ற ஏக்கம் எல்லாம் இருக்காது.. அந்த பந்தம் எப்போதும் புனிதமானது.. மானசீக பூஜை செய்வது போல.. என்றேன்.. ஆனால் உன் காதலன் ஓர் சந்தேக பேர்வழியாக இருக்கும் போது அந்த காதல் தோற்று விடுகிறது.திருமண பந்தத்தில் இணையும் போது.. அப்போது திருமணம் ஆன புதிதில் எதுவும் தோன்றாமல் கூட இருக்கலாம்.நாள் நாளாக உனது காதல் அங்கே வலுவிழந்து விடுகிறது.. அதேசமயத்தில் நீ திருமண பந்தத்தில் இணையாத போது அந்த காதல் ஓர் வசந்தம் போல சுவை கூட்டுகிறது.. என்றேன்..

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை மதி.. எனக்கு தேவையான தெளிவை தந்து விட்டீர்கள்.. இப்போது மனம் இலேசாகிவிட்டது..தங்களை போன்ற நட்பும் கூட புனிதமானது தான் என்று கைக்குலுக்கி விடைபெற்றாள்.

நான் அப்படியே கடற்கரை மணலில் அமர்ந்து அலையிடம் கேட்டேன்.. எவ்வளவு விந்தையான காதல் மனிதர்கள் என்று.. அதற்கு அலை ஆமாம்.. விந்தையான மனிதர்கள் தான் உன்னை போல இங்கே எவரேனும் வருகிறார்களா என்று தினம் தினம் தேடி அலுத்து விட்டேன் மதி..உன்னை ஏன் எவரும் நேசிக்கவில்லை மதி என்றது எனது கால்களை இரகசியமாக வருடியபடி..

அதற்கு நான் இதோ நீ தான் என்னை நேசித்துக் கொண்டே இருக்கிறாயே..எனது ஒவ்வொரு வருகையிலும் எனது கால்களை வருடியபடி என்றேன்..

அலையோ புன்னகைத்து உள்வாங்கியது.ஆமாம் உன்னை போல தந்திரகாரனை நேசித்து ஏமாந்து விடவில்லை என்று செல்லமாக கோபித்துக் கொண்டு..

எங்கள் ஊடலோடு விடைபெற்றேன் கடற்கரையில் இருந்து..இரவு மெல்ல மெல்ல மனிதர்கள் சுகங்களை சோகங்களை தன்னுள் புதைத்து கொள்ள துடித்தது..மனிதர்களோ பிடிவாதமாக எதையும் இரவிடம் எதையும் இழக்காமல் பத்திரப்படுத்தி கொண்டார்கள் மிகவும் இறுக்கமாக..

#மீண்டும் இன்னொரு பயணத்தில் சந்திக்கலாம் வாசகர்களே 😊⛱️🌺🌷⛱️ 

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு ( 6)

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

பயணத்தில் ஒரு சந்திப்பு (5)

 


அன்றொரு நாள் பௌர்ணமி நிலவில்✨✨✨✨✨ சாலையில் தனியே நடந்து சென்று கொண்டு இருக்கிறேன்.நான் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்.சாலையில் நடந்து செல்ல சக்தி உள்ளவர்கள் அத்தனை பேரும் தான்.எல்லோரும் ஏதோவொரு பரபரப்பு தொற்றிக் கொள்ள வேகமாக நடந்து தங்கள் இல்லத்தை அடைய செல்கிறார்கள்.அது இல்லம் என்று அப்படி சொல்லி விட முடியாது நிறைய பேருக்கு.அது புறா கூடு போல என்று வைத்துக் கொள்ளுங்கள்.. நான் மட்டும் மிகவும் நிதானமாக நடந்து செல்கிறேன்.. ஏனெனில் என்னை தேடி எனது இல்லத்தில் வேறு எவரும் இல்லை.அதனால் கூட இருக்கலாம்.ஆனால் அப்படி எவரேனும் இருந்தாலும் நான் இவ்வளவு பரபரப்போடு நடக்க மாட்டேன்.. ஏனெனில் நடை என்பதும் ஓர் ஆனந்தம்.அந்த ஆனந்தத்தை சாலையில் சிதறடித்து நடக்க எனக்கு மனமில்லை.. என்று தான் சொல்ல வேண்டும்.


  அவ்வாறு நடந்து செல்லும் போது ஒருவர் மிகவும் பதட்டத்தோடு என்னை நெருங்கி உங்கள் வீடு அருகே உள்ளதா சார் என்று கேட்டார்.நானும் ஆமாம் இன்னும் பத்து நிமிடங்களில் சென்று விடலாம் என்று சொல்லி விட்டு ஏன் கேட்கிறீர்கள் என்றேன்.உங்களை பார்த்தவுடன் உங்களிடம் எனது ஆதங்கத்தை சொல்லி அழ வேண்டும் என்று ஏனோ தோன்றியது.அதனால் தான் என்றார்.. நானும் ஒன்றும் புரியாதவனாக அவரை பார்த்து கேட்டேன்.என்னை நீங்கள் பார்ப்பது இப்போது தான்.அதற்குள் என்னிடம் உங்கள் ஆதங்கம் சொல்லி அழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. நான் அவ்வளவு நல்லவன் என்று உங்கள் மனதிற்கு எவ்வாறு தோன்றியது என்று கேட்டேன் புன்னகைத்து கொண்டே!

அதற்கு அவர் நீங்கள் என்னை பார்ப்பது இது முதல் முறை..ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும்..இதே சாலையில் எத்தனையோ மனிதர்கள் பயணிக்கிறார்கள்..அத்தனைபேரும் எனக்கு நினைவில் இல்லை..ஆனால் எப்படியோ உங்கள் முகம் மட்டும் எனக்கு ஆழமாக பதிந்து விட்டது.உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்ம பந்தமாக தோன்றும்.. சரி சரி.அதனை விடுங்கள்.. நீங்கள் விசயத்தை நீங்கள் காது கொடுத்து கேட்பீர்களா மாட்டீர்களா என்றார் மிகவும் கலக்கத்தோடு.


சரி சரி வாருங்கள் என்னோடு என்றேன்.. அவரும் அதற்கு மேல் எதையும் பேசாமல் கூட நடந்து வந்தார்.எனது வீடும் வந்தது.நான் பாக்கெட்டில் உள்ள சாவியை தேடி எடுத்து எனது இல்லத்தின் கதவை திறந்தேன்.அவரை உடனடியாக எனது கொல்லைப்புறத்திற்கு அழைத்து சென்று கைகால் அலம்ப சொன்னேன்.. நானும் கைகால் சுத்தம் செய்து கொண்டு அவரை அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.அவர் வீட்டை ஆவலாக பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.நீங்கள் வீட்டை மிகவும் நேர்த்தியாக வைத்து இருக்கிறீர்கள் என்றார்.. மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு அவரை ஹாலில் அமர வைத்துவிட்டு நான் சமையலறை நோக்கி சென்றேன்.பிரிட்ஜ்ல் இருந்து தோசை மாவை எடுத்து வெளியே வைத்து விட்டு அவருக்கு பருக தண்ணீர் கொடுத்து விட்டு அவர் அருகில் அமர்ந்தேன்.என்ன விசயம் சொல்லுங்கள்.. என்றேன்.அதற்கு முன்னே உங்களை பற்றி சொல்லுங்கள் முதலில் என்றேன்..

அவரும் சொல்ல ஆரம்பித்தார்.. நான் இங்கே ஓர் சின்ன பெட்டி கடை ஒன்று நடத்தி வருகிறேன்.எனக்கு ஓர் மனைவி சத்யா மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் என்றார்.. அவர்கள் இருவரும் படிப்பை முடித்து தற்போது ஒரு சின்ன கம்பெனிக்கு வேலைக்கு செல்கிறார்கள் என்றார்.

ஓ.. அப்படியா.மிகவும் மகிழ்ச்சி.. தற்போது உங்களுக்கு என்ன பிரச்சினை என்றேன்..

எனக்கு கடந்த சில நாட்களாக எனது பெண் பிள்ளைகள் பற்றி தான் கவலை.. சார்.அவர்களில் மூத்தவள் எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்கிறாள்.அப்படியே எப்படி பெண் பிள்ளையை விட்டு விட முடியும்.அவள் எவரையும் விரும்பவில்லை என்று வேறு சொல்கிறாள்.இதில் தான் பிரச்சினை ஆரம்பித்து தற்போது கோபித்துக் கொண்டு போய் தோழி வீட்டில் தங்கி விட்டாள்..அவளை நான் எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை சார்.மாப்பிள்ளை வீட்டில் இருந்து நாளை மறுநாள் வருவதாக சொல்கிறார்கள்..இவளோ மிகவும் பிடிவாதமாக வர மாட்டேன் என்கிறாள்.. எனக்கு வாழ்க்கை பெரும் சுமையாக தோன்றுகிறது சார்.. என்றார்..


இவ்வளவு தானே இதற்கு போய் ஏன் பதட்டம் அடைகிறீர்கள்.திருமணம் என்பது கட்டாயம் செய்துக் கொள்ள வேண்டும் என்று இல்லையே..அவளை அவள் விருப்பப்படி வாழவிடுங்கள்.. அதற்கு அவளுக்கு உரிமையும் உள்ளது என்றேன்..


அவர் என்னை பார்த்த பார்வையில் ஓர் கலக்கம் தெரிந்தது.. போயும் போயும் இவரிடம் வந்தோமே என்று நினைத்து இருக்கக் கூடும்.. தொடர்ந்து அவரிடம் பேசினேன்.. தற்போது அவளை கட்டாயப்படுத்தாதீர்கள்.அது உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினையை கொண்டு வந்து விடும் என்றேன்..

பிறகு என்ன தான் நான் செய்வது என்றார்.. மிகவும் சோகமாக..


அவள் திருமணத்தை தற்போது தள்ளி வைப்பது தான் என்று சொன்னேன்..

அவர், அவள் மனம் எதிர்காலத்தில் மாறாமலேயே போய் விட்டால் எனது இரண்டாவது பெண்ணின் கதி என்ன ஆவது சார் என்றார்.


இப்போது நிறைய சிந்தித்து உங்கள் மனதை காயப்படுத்தாதீர்கள்..என்று சொல்லி கொண்டே அவருக்கு படிக்க சில புத்தகங்களை அவர் கைகளில் கொடுத்து விட்டு சமையலறையில் சென்று தேங்காய் சட்டினிக்கு தேங்காய் துருவ சென்று விட்டேன்.. அவர் அதை ஆர்வமில்லாமல் வாங்கி ஒரு புத்தகத்தை எடுத்து சில பக்கங்களை புரட்டி பார்த்து படித்து கொண்டு இருக்கும் போதே தோசை ஊற்றி இரண்டு தட்டுகளிலும் தேங்காய் சட்டினியோடு எடுத்து வந்து அவரிடம் ஒரு தட்டை நீட்டி சாப்பிட சொன்னேன்.உங்களுக்கு எதற்கு சார் சிரமம் என்றார் சங்கோஜமாக.

அட இதில் என்ன சிரமம்.. அடுத்தவர் பசியை தீர்ப்பது எவ்வாறு சிரமம் ஆகும்.. நீங்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது என்றேன் சிரித்தபடி.


நீங்கள் பெரிய தத்துவாதியா என்று நான் கொடுத்த தோசையை வாயில் ருசித்தபடியே   கேட்டார்..


நான் தத்துவவாதி எல்லாம் இல்லை.. வாழ்வின் ரகசியங்களில் அமிழ்ந்து ஆனந்தத்தை அனுபவிப்பவர் என்றேன் புன்னகைத்து கொண்டே..

ரொம்ப நன்றாக பேசுகிறீர்கள் சார்.. உங்களோடு இருந்தால் ஏதோ மனம் இலேசானதாக உள்ளது என்று சாப்பிட்டு முடித்த கைய தட்டில் கழுவி விட்டு அப்படியே மீண்டும் புத்தகத்தில் சில பக்கங்களை படிக்க தொடங்கினார்.. நான் அவர் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைத்து விட்டு கொஞ்சம் மிளகு பாலை அவருக்கு கொண்டு வந்து கொடுத்தேன்.. அவர் ஆச்சரியம் கலையாமல் அதை வாங்கி ருசித்து விட்டு சொன்னார்.. நான் உங்களிடம் ஆதங்கத்தை சொல்லி அழ தான் வந்தேன்.ஆனால் நீங்களோ சாப்பிட உபசரித்து எனக்கு ஆறுதல் சொல்லி நெகிழ்வடைய வைத்து விட்டீர்கள்.. இப்போது நீங்கள் சொல்வது போல பெண்ணின் திருமண பேச்சை எடுக்கவில்லை சார்.. ரொம்ப நன்றி.. இந்த விசயத்தை எனது சொந்தக்காரர்களிடம் சொல்லி இருந்தால் பெண் பிள்ளைக்கு நீ ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாய்.. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று சொல்லி அவள் பேச்சை கேட்டு நல்ல சம்பந்தத்தை கெடுத்து கொள்ளாதே என்று சொல்லி என் பெண்ணின் உணர்வுகளை தீயிட்டு பொசுக்கி இருப்பார்கள்.. நல்ல வேலையாக இறைவன் உங்களிடம் அனுப்பி வைத்தார்.. மிகவும் நன்றி சார்.. நான் உங்களை மீண்டும் எப்போது சந்திக்கலாம் சார்.. என்றார் மிகவும் ஆவலாக..

அதற்கு நானோ உனக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போது எல்லாம் என்றேன் புன்முறுவலோடு..

மிகவும் சந்தோஷமாக உள்ளது சார்.. நான் உங்களை எப்போதும் மறக்க மாட்டேன்.சார்...இந்த புத்தகம் நான் எடுத்து செல்ல ஆசை தான் சார்.. ஆனால் இதை படித்து புரிந்து கொள்ள எனக்கு புத்தி இல்லை.. இதன் கருத்துக்களை உங்களிடம் அவ்வபோது கேட்டு தெரிந்து கொள்கிறேன் சார் என்று சொல்லி விடைபெற்று செல்ல எத்தனித்த வரை வாசல் வரை வந்து கையசைத்து வழி  அனுப்பி வைத்து விட்டு கதவை தாழிட்டு வந்து படுத்தேன் அலைபேசியில் ஓர் வீணை இசையை உலாவ விட்டேன் எனது செவிகளுக்காகவும் அந்த அறையில் நிரம்பி வழிந்த காற்றுக்கு உணவிடுதல் பொருட்டும்...

#மீண்டும் ஓர் பயணத்தில்

 சந்திக்கலாம் ..🏜️🏖️⛱️🙋

#இளையவேணிகிருஷ்ணா.

#பயணத்தில் ஒரு சந்திப்பு (5).


இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...