ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

இந்த நிமிஷம் என் நிமிஷம்...

 

இன்று இருந்த அதே பொழுது நாளை 

வரப்போவதில்லை...

ஒவ்வொரு நாளும்

ஒவ்வொரு நொடியும்

புது வித அனுபவங்கள்

புது வித கதைகள்...

புது வித பயண அனுபவங்கள்...

புது வித மனிதர்கள்

சாலையை கடக்கும் போது

நம்மை பார்த்து 

புன்னகைக்கிறார்கள்...

ஏன் இன்று மாலையில்

எனது காலை நனைத்த 

கடல் அலைகள் கூட

நாளை வரப்போவதில்லை...

இப்படி எத்தனை எத்தனையோ 

விடயங்களை

கடந்து கடந்து

செல்லும் போது

நாளை புதிதாக ஒரு நாட்காட்டி வர போகிறது

அது ஒரு பல மாதங்களை

உள்ளடக்கிய பல காகிதங்களின்

உணர்வற்ற அசத்தில்

காலம் காலமாக

தேடிக் கொண்டு இருக்கிறோம்...

நமக்கு ஏதோ புதுமையை நிகழ்த்த போகிறது என்று...

ஒன்றை நீங்கள் நம்புங்கள்...

நீங்கள் இந்த நொடியை

ரசிக்காத வரை எதுவும் இங்கே 

புதுமையையோ

மாற்றத்தையோ 

நிகழ்த்த போவதில்லை என்று...

#இந்தநிமிஷம்என்நிமிஷம்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் #டிசம்பர் 31/12/23.

#ஞாயிறு

#நேரம் 8:30.

காலம் நகர்கிறது...

 


மெது மெதுவாக என்னை

தின்றுக் கொண்டு

காலம் நகர்கிறது...

நான் அதன் ஆக்ரோஷமான

விழுங்கலில் சிக்கிக் கொண்டு

அல்லல்பட்டு காலத்தில் இருந்து

விடுப்பட்டு ஜீரணம் ஆகும் போது

எஞ்சி இருக்கும் எச்சத்தில்

எது மிஞ்சும் என்று

எவரேனும் தெரிந்தால் 

சொல்லுங்கள்...

#காலம் நகர்கிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 29 டிசம்பர், 2023

போற்றுவார் போற்றட்டும்;தூற்றுவார் தூற்றட்டும்...

 


#இன்றைய #தலையங்கம் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இறப்பதற்கு கூடிய கூட்டம் சத்தம் இல்லாமல் இங்கே உணர்த்தி இருப்பது தர்ம சிந்தனை உள்ளவர்கள் தான் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து இருப்பார்கள் என்பது தான்...

இங்கே ஒரு கட்சியை தாக்கி தாக்கி பேசுவதால் அரசியலில் வெற்றி பெற்று விடலாம் என்பது முட்டாள்தனம்... சத்தம் இல்லாமல் மக்கள் சேவையில் தன்னலம் இல்லாமல் அர்ப்பணித்து கொண்டவர்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்து நீங்கா புகழ் அடைய முடியும்...

இங்கே ஒரு விசயத்தை கவனிக்க வேண்டும்... எவ்வளவு அகங்காரம் கொண்ட மனிதர்களும் ஒருவரின் தர்ம செயல்களால் தலை வணங்க வைக்கப்படுவார்கள் என்று மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்சம் நிரூபித்து உள்ளது.. அதற்கு அந்த மத்திய நிதி அமைச்சர் பெண்மணி தலை வணங்கி விஜகாந்திற்கு அஞ்சலி செலுத்தியதே சாட்சி... இங்கே கர்ணனுக்கு முன் பகவான் கிருஷ்ணரே அவர் செய்த தர்மங்களை பிச்சையாக இடுமாறு கேட்கவில்லையா... எப்போதும் இந்த பிரபஞ்சம் தர்ம சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே நிம்மதியாக சுழல்கிறது என்பதை மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்...

ஆவணி மாதத்தில் சூரியன் ஆட்சி... அந்த மாதத்தில் உதித்து அந்த சூரியன் போல விருப்பு வெறுப்பின்றி கள்ளம் கபடம் இல்லாமல் ஒரு ஜீவன் இங்கே நம்மில் பயணித்து மறைந்து இருக்கிறது...

அவரின் கோபத்தில் எழுந்த அந்த உணர்ச்சி பிரபாவங்களை மட்டும் வெட்டி ஒட்டி தகிடுதத்தம் செய்தவர்கள் வெட்கப்படுங்கள்...கர்ணனை அவமானம் செய்ததால் அந்த கர்ணனின் புகழ் இங்கே பூமியில் குறையவில்லையே... அப்படி தான் விஜகாந்திற்கு தன்னலம் இல்லாமல் கூடிய கூட்டம் அவரது புகழை அந்த சூரியன் போல எப்போதும் சுடர் விட்டு பிரகாசித்து கொண்டு இருக்கும்...

உண்மையில் தர்ம சிந்தனை கொண்டவர்கள் புகழை சில மக்களின் கீழ்த்தரமான செயல்களால் தோற்கடிக்க முடியாது என்பதை இன்று நிச்சயமாக நிறைய பேர் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறேன்...

#கேப்டன்விஜயகாந்த்

#புகழாஞ்சலி.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 28 டிசம்பர், 2023

இரவு கவிதை 🍁

 


இறப்பு பல சூட்சமங்களை

உள்ளடக்கி பயணிக்கிறது..

அந்த சூட்சமத்தில் ஆன்மா

இருள் உலகத்தை அடைகிறதா

இல்லை பேரொளி கொண்ட

உலகத்தில் பயணிக்கிறதா

என்பதை இங்கே நம்மோடு

பயணிப்பவர்கள் தான்

நமக்கு பிறகு இந்த பிரபஞ்சத்திற்கு

எடுத்து செல்லும் தூதுவர்கள்...

#இரவுகவிதை.

நாள்:28/12/23.

வியாழக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- எத்தனை பேருக்கு சத்தம் இல்லாமல் உதவி இருக்கிறார் அந்த மனிதர்.... உண்மையில் அவரை பற்றிய தகவல்களை கேட்க கேட்க நம்மையும் அறியாமல் கண்கள் கலங்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தவே செய்தது...

ஒரு மனிதர் வாழ்ந்து முடித்த பிறகு அவரிடம் எவ்வளவு கோடியில் சொத்து இருக்கிறது என்பது அடையாளம் அல்ல... தர்ம சிந்தனை உள்ள மனிதர் தான் தனது அடையாளத்தை இந்த பூமியில் புகழாக மக்கள் மனதில் நீங்காத செல்வமாக விட்டு செல்ல முடியும் என்பதை மீண்டும் சத்தம் இல்லாமல் நிரூபித்து இருக்கிறார் கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்... இவரிடம் இருந்தாவது இன்றைய அரசியலில் கால் பதிக்க நினைக்கும் இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்... சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உள்ளன... ஆனால் தயைக் கூர்ந்து அரசியலை தேர்ந்தெடுக்காதீர்கள்... 🙏. அரசியல் என்பது மக்கள் மனதில் ஏதோவொரு நல்ல வகையில் எப்போதும் நினைவு கூறும் வகையில் அமைத்துக் கொள்வதே நல்ல அரசியல்வாதிகளுக்கு அழகு...அதை தான் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு அமைதியாக உணர்த்தி காற்றோடு கலந்து இருக்கிறார் அந்த கள்ளம் இல்லாத மனிதர்...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 27 டிசம்பர், 2023

இரவு கவிதை 🍁

 


கரைந்து செல்லும்

அந்த கணங்கள்

என் வாழ்வின் சுவையையும்

சுவைத்து செல்வது தான்

வேடிக்கை நிறைந்த சுவாரஸ்யமான 

தருணம் எனக்கு...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏✨🙏.

தற்போது இந்திய நேரம் இரவு 9:10 மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவை

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 26 டிசம்பர், 2023

இசையோடு ஒரு பயணம்

 


நேயர்களே இன்று இரவு ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் ✨🎻.

கீழேயுள்ள லிங்கில்

https://zeno.fm/radio/krishna-fma76ufetpuy8uv/

செவ்வாய், 19 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🙏🤝💐🎻.

எப்போதும் உறங்குவதற்கு முன் நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள்.. அப்போது தங்களது உறக்கம் நிர்மலமாக இருக்கும்..

கீழேயுள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கேட்டு ரசிக்கலாம்.

https://youtu.be/wTDpuNGTwec?si=5ty3wSzp0scWE8eU

என் வாழ்வின் பெரும் சுமை...


எனக்கென்று 

யாரும் இல்லை என்று

நான் எப்போதும் 

கவலைப்பட்டதே இல்லை...

எனக்கென்று யாரோ

இருக்கிறார்கள் என்பது தான்

என் வாழ்வின்

பெரும் சுமையாக எப்போதும்

கருதுகிறேன்...

ஏனெனில் நான் எந்த சுமைகளும்

இல்லாமல் பயணிக்க

இந்த பிரபஞ்சத்திற்கு அனுப்பப்பட்டு

இருக்கிறேன்...

#இரவு சிந்தனை ✨

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 18 டிசம்பர், 2023

பாவம் அவள் என்ன செய்வாள்?

 


உலகம் முழுவதும்

செய்த தவறுகளுக்காக

சாதாரண மக்கள்

இங்கே அடி மேல் அடி வாங்குகிறார்கள்..

ஒரு புண்ணியம் செய்தவர்கள் இருந்தால் கூட போதும்..மழை பொழிய என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டு இருக்கிறோம்... இங்கே இயல்பான வாழ்க்கையை மொத்த உலகமும் தொலைத்து விட்டு வேறு பாதையில் பயணிப்பதற்கான தண்டனையை நாம் அனைவரும் சேர்ந்து தானே அனுபவிக்க வேண்டும்... உலகம் முழுவதும் இந்த பூமி தாயை கொடுமை மேல் கொடுமை செய்துக் கொண்டே இருந்தால் பாவம் அவள் என்ன செய்வாள்.. ஒரு நாள் சில மணித்துளிகளில் கதறி அழுது புரண்டு விடுகிறாள் பெரும் மழையாக நமது மடியில்...

#இரவுசிந்தனை.

#பெரும்மழை.

#இளையவேணிகிருஷ்ணா.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🎻💐🎻.

உறங்கும் முன் நல்ல சிந்தனை இருந்தால் நிர்மலமான உறக்கம் வரும்... அதற்கு கதைகள் மூலம் நல்ல சிந்தனைகளை அந்த காலத்தில் மூதாதையர்கள் சொல்லி வந்தார்கள்.. இப்போதும் இதற்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது..இதோ கீழேயுள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் நேயர்களே 🙏🎻🙏.

https://youtu.be/DcOwjWFy4Pc?si=Mj7fjkbd-tJNgXsU

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

மார்கழி அனுபவம் (2)

 


அந்த வேடிக்கை மனிதன் மிக மிக மெதுவாக அந்த இளங்குளிரை அனுபவித்தபடியே

சாலையில் இறங்கி நடக்கிறான்...

எத்தனையோ வீட்டில் இருந்து வெளியே வந்த பெண்மணிகள் கொஞ்சம் சுவாரசியமாக வாசலுக்கு தண்ணீர் தெளித்து கோலம் இட்டார்கள்...

இன்னும் சில பேர் கடனே என்று வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு பயந்து எழுந்து அந்த குளிரை மனதிற்குள் திட்டிய படியே

வாசல் தெளித்து கோலம் இட்டார்கள்...

அப்போது ஒரு வீட்டின் வாசலில் ஒரு நாய் அந்த இளங்குளிரை தாங்க முடியாமல்

தன் உடலுக்குள் தலையை இறுக்கமாக புதைத்து படுத்து இருந்தது...

அந்த வீட்டில் உள்ள பெண்மணியோ ஏற்கனவே மிகவும் எரிச்சலாக இந்த இளங்குளிரில் சலிப்பாக

எழுந்தவள்...

அந்த நாயை அவள் வாசலில் பார்த்ததும் தமது வாளியில் உள்ள தண்ணீரை

வேகமாக அந்த நாயின் மீது தெளித்தாள்...

இதை பார்த்த அந்த வேடிக்கை மனிதனுக்கு கொஞ்சம் கோபம் வந்தது...

பிறகு இயல்பாகி தனக்குள் இப்படி பேசிக்கொண்டு சென்றான்...

அந்த இளங்குளிருக்கு இதமாக இந்த பெண்மணி

இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி விட்டு வந்து இருந்தால்

குளிருக்கு இதமளிக்கும் என்று நினைத்து படுத்து இருந்த 

ஒரு ஜீவனுக்கு அவள் வாசலில் இடம் கொடுத்த புண்ணியமாவது அவள் கணக்கில் சேர்ந்து இருக்கும்..

இப்போது அவள் கணக்கில் அந்த இளங்கலைப் பொழுதில் எழுந்து வாசலுக்கு தண்ணீர் தெளித்து அழகாக உள்ளூர வெறுப்போடு இட்ட அந்த கோலத்தோடு

வீட்டின் இரு புறமும் ஏற்றிய விளக்கு இட்டது புண்ணியம் சேர்க்குமா பாவம் சேர்க்குமா என்று யோசித்தப்படியே

அந்த வேடிக்கை மனிதன் தனது நடையை தொடர்ந்தான்... அப்போது அவன் காலருகே அந்த நாயின் மூச்சு காற்றின் வெப்பம் வந்து தீண்ட

நான் அந்த தேநீர் விடுதி அருகே நின்று இருந்தான்..

இதோ அந்த பெண்மணி செய்த பாவ கணக்கிற்கு சில ரொட்டி துண்டுகளை அதற்கு பசியாற கொடுத்து விட்டு

மறக்காமல் பிரார்த்தனை 

செய்துக் கொண்டான்...

மறக்காமல் இந்த புண்ணிய கணக்கை அந்த பெண்மணி கணக்கில் சேர்த்து விடுமாறு அந்த இறைவனை....

#மார்கழிஅனுபவம்.

நாள்: டிசம்பர் 18/12/23.

#இளையவேணிகிருஷ்ணா.

#இசைச்சாரல்வானொலி.

மார்கழி அனுபவம்


அந்த இளங்குளிரும் 

சாரக்காற்றையும்

அனுபவித்துக் கொண்டே 

போர்வையை தலை வரை போர்த்தி

மனதுக்குள் அந்த கிருஷ்ணரை

எங்கோ இருந்து தவழ்ந்து வரும்

திருப்பாவையை காதின் வழியே

சுவைத்து கண்மூடி பேரானந்தத்தை

அனுபவித்து விடுவதை விடவா

நிர்பந்தமாக எழுந்து வாசலுக்கு 

தண்ணீர் தெளித்து கோலம் இட்டு

கோயிலுக்கு சென்று தீபம் இட்டு

வந்து விடுவதில் இருந்து விட

போகிறது?

#மார்கழி அனுபவம்.

நாள் டிசம்பர் 18/12/23.

#இளையவேணிகிருஷ்ணா.


சனி, 16 டிசம்பர், 2023

அவன் அந்த மாய இருளில் என்ன செய்துக் கொண்டு இருக்கிறான்?

 


அவன் அந்த

மாய இருளில்

என்ன செய்துக் கொண்டு 

இருக்கிறான் என்று

தெரியவில்லை...

ஆனால் ஏதோவொன்று 

தொலைந்து விட்ட பொருளை 

தேடிக் கொண்டு 

இருக்கிறான் என்று மட்டுமே

புரிகிறது நமக்கு...

இருளில் தேடினால் எப்படி 

கிடைக்கும் 

என்று நாம் இங்கே 

யோசித்துக் கொண்டு இருக்கும் 

நொடியில்

அவன் அந்த பொருளை 

கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் 

அதை இறுக பற்றிக் கொண்டு

ஓடி விடுகிறான்...

அவன் ஓடும் போது சில சருகுகள் 

சடசடவென மிதிப்படும் ஓசை மட்டும்

நமது காதுகளில் எட்டுகிறது..

அவன் கையில் கிடைத்த அந்த 

பொருள் எதுவாக இருக்கும் என்று

யோசித்து யோசித்து

இந்த இரவை தொலைக்கிறோம் 

நாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 13 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை

 


நேயர்களே வணக்கம் 🙏 நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுத்து உறக்கம் கண்களை தழுவும் போது ஒரு நல்ல சிந்தனை தூண்டும் கதைகளை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் 🙏.

நாள் 13/12/2023.

கீழேயுள்ள லிங்கில்:- https://youtu.be/Wk-8nyy3a8Y?si=yLNeHUTY5Owu-MUG

செவ்வாய், 12 டிசம்பர், 2023

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் ஒரு அழகான வாழ்வியல் கதையை கேட்டு விட்டு நிம்மதியாக உறங்குங்கள் நேயர்களே 🎻🙏😊.

நாள்:12/12/2023.

செவ்வாய் கிழமை.

https://youtu.be/RNT4RVs2Q2g?si=iHFHIrAHOF4ldpam

திங்கள், 11 டிசம்பர், 2023

கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் வரைகலை ✨

 

எனது கைவண்ணத்தில் ஒரு ஓவியம்.. கொஞ்சம் மனதிற்கு ஆறுதல் தருகிறது..☔🌿🦋.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨

 


வணக்கம் நேயர்களே 🙏🎻🙏.

நாம் உறங்கும் முன் ஒரு நல்ல சிந்தனை கதைகளை கேட்டு விட்டு உறங்கும் போது நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் வரும்.. மேலும் மனமும் அமைதியாக இருக்கும் போது நல்ல சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு செயல்பட எத்தனிக்கும்..

இதோ கீழே உள்ள லிங்கில் சென்று நீங்கள் உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை கேட்டு ரசிக்கலாம் நேயர்களே 🎻✨🎉🦋.

https://youtu.be/la9cBuA9qKI?si=Y9BOtYTf2tK5fnCW

இரவின் ரகசியங்கள்...


 இரவின் ரகசியங்கள்

எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது?

அதன் ஆழ்ந்த அமைதியில்

புதையுண்டு கிடப்பதை தவிர

அதற்கு வேறேது போக்கிடம்?

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

சனி, 9 டிசம்பர், 2023

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

நான் அப்படியே அமர்ந்து இருந்தேன் முற்றத்தில்...கொஞ்சம் வெங்காய பக்கோடா கொறித்து கொண்டே இடையிடையே இஞ்சி தட்டி போட்ட தேநீரையும் சூடாக பருகிக் கொண்டே... குளிர் காற்றை மெய்மறந்து ரசிக்கிறேன்..வானிலையின் தன்மை அப்படி..எல்லோரும் குளிர்கிறது என்று போர்த்திக்கொண்டு படுக்கையில் விழுந்து இருக்க நான் மட்டும் ஏனோ இந்த காலநிலையில் ரசிகையானேன்..என் தோளை பற்றி பிடித்தது யார் என்று திரும்பி பார்த்தால் காலம்..அட என்ன இப்போதெல்லாம் நீ என்னை தேடி அடிக்கடி வந்து விடுகிறாய் என்று கேட்டேன்...எனக்கும் ரசனை இருக்காதா..உன்னோடு சேர்ந்து கொஞ்ச நேரம் இந்த காலநிலையை ரசித்து விட்டு போகலாம் என்று வந்தேன் என்றது..ஒரு நிமிடம் இதோ வருகிறேன் என்று சொல்லி விரைவாக அதற்கு சூடான வெங்காய பக்கோடாவோடு தேநீரை மும் கொண்டு வந்து கொடுத்தேன்..அது மிகவும் ஆர்வமாக வாங்கிக் கொண்டு ரசித்து வெங்காய பக்கோடாவை ருசித்து தேநீரை ரசித்து பருகியது.. இருவரும் அமைதியாக அந்த காலநிலையை ரசித்தோம்..எங்கோ இருந்து வந்த மழைக் கால மேகம் ஒன்று பாடல் இந்த காலநிலையில் கேட்க இதமாக இருந்தது... இப்படியான பாடல்கள் கேட்க கேட்க இனிமை தான் இல்லையா என்றது காலம் என்னிடம்..ஆமாம் காலமே..சில நேரத்தில் சில பாடல்கள் நாம் எநிர்பாராத நேரத்தில் இப்படி வந்து மகிழ்விக்கும் போது கிடைக்கும் சுகமே தனி தான் என்றது..திடீரென வேகமாக வீசிய காற்று நின்றது..ஆழ்ந்த இந்த இரவின் அமைதி ஏதோவொரு ஆவலை எங்களை தூண்டியது..நாங்கள் இருவருமே இதை பார்த்து கொஞ்சம் ஆச்சரியம் அடைந்தோம்..என்ன நடக்கிறது இங்கே காலமே என்றேன் ஆவலாக..நானும் உன்னை போல தான் ஆச்சரியமாக பார்க்கிறேன் எனது ஆருயிர் தோழியே என்றது..கொஞ்ச நேரம் நாங்கள் நடக்கும் அந்த காலநிலை மாற்றங்களை ரசித்து இருந்தோம்..திடீரென காலம் என்னிடம் ஏதாவது இந்த சூழலுக்கு தகுந்தார் போல ஒரு கவிதை சொல்லேன் என்றது..கவிதையா..மீண்டும் மீண்டும் மீண்டும் ஏன் இந்த சோதனை உனக்கு என்றேன் சிரித்துக்கொண்டே 😊?அட சொல்லேன்..என்றது.. கொஞ்சம் கொஞ்சலாக..சரி சரி சொல்கிறேன்.. என்றேன்.. புயல் வரும் நேரத்தில் நிகழ்கால கவிதை 🍁

இதோ இன்னும் சில மணிநேரங்களில்

கரை கடந்து விடும்

அந்த புயல்...

என் மனதில் சுற்றிக் கொண்டு இருக்கும்

உனது காதல் எனும் புயலை

கடக்க தான்

கரை தேடி அலைகிறேன்...

எக்காலம் கரை சேருமோ...

அட எவ்வளவு அழகான கவிதை இது என்று கைத்தட்டி சபாஷ் சொன்னது..

மீண்டும் நாங்கள் இருவரும் அமைதியானோம்..

இங்கே கொஞ்சம் கொஞ்சமாக சாரலாக மழை வர தொடங்கியது.. இப்போது இன்னும் ஆழ்ந்த அமைதியில் அந்த காலநிலையில் லயித்து கிடந்தோம் எங்களை மறந்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் இங்கே கடந்து சென்ற புயலால் மக்கள் பெரும் அவதிக்கு காரணம் நேர்மையான அதிகாரிகள் இல்லாமல் போனது தான்... ஒரு சமயோசிதமான அதிகாரி எவ்வளவு மோசமான அரசியல்வாதிகளையும் யோசித்து திருந்த வைக்க முடியும்... இங்கே அதிகாரிகள் தான் மெத்த படித்தவர்கள்.. பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு நிறைய விசயங்கள் தெரியாது..தொலைநோக்கு பார்வையுடன் எல்லா அரசியல்வாதிகளும் இருக்க வாய்ப்பே இல்லை.. ஆனால் ஒரு நல்ல அதிகாரி பொறுமையாக எடுத்து சொல்ல முடியும்.. அப்படி எடுத்து சொல்லியும் கேட்கவில்லை என்றால் அவர்கள் சட்ட ரீதியாக அணுகலாம்... அரசியல்வாதிகள் தான் செலவு செய்த பணத்தை எடுக்கத் தான் பார்ப்பார்கள்.. அப்படி அவர்களை செயல்பட தூண்டியது மக்களாகிய நாம்.. ஒவ்வொரு முறையும் தேர்தல் வந்தால் ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று யோசிக்க வேண்டும்.. இப்படி ஒவ்வொரு விசயமும் சங்கிலி தொடர் போல ஏதோவொரு வகையில் நாம் அனைவரும் குற்றவாளிகள்... எப்படியோ ஒரு வீடு வேண்டும்.. அது ஏரியாக இருந்தால் என்ன குளமாக இருந்தால் என்ன என்று யோசிக்காமல் வாங்க எடுக்கும் முடிவு... இந்த இயற்கைக்கு நாம் என்ன செய்து இருக்கிறோமோ அதைத் தான் சரியான நேரத்தில் சரியான முறையில் நமக்கு கொண்டு வந்து சத்தம் இல்லாமல் சேர்த்து விட்டு நாம் படும் அல்லலை பார்த்து கவலை இல்லாமல் அமைதியடைகிறது... நாம் அந்த இயற்கைக்கு அமைதி இல்லாததை தான் கடந்த காலங்களில் கொடுத்து இருக்கிறோம்..அவரை விதைத்து விட்டு துவரை எதிர்பார்த்தால் துவரையா கிடைக்கும்?

இனியேனும் மக்கள் நிம்மதியாக வாழ என்ன தேவை என்று புரிந்துக் கொண்டு வாழ்க்கையில் சில முடிவுகளை எடுக்க வேண்டும்.. விழித்துக் கொள் மானிடனே.. நமது அரசியல்வாதிகள் நம்மை நமது வாழ்வியலை விட்டு வெகுதூரம் இழுத்து சென்று விட்டார்கள்..அதற்கான பலனை தான் நாம் அனுபவிக்கிறோம்..இங்கே ஆழ்ந்த அரசியல் விமர்சகர்கள் மிகவும் குறைவு.. நாம் நமது வாழ்க்கையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று நாம் முடிவெடுக்க இறைவன் நமக்கு அதிகாரம் கொடுத்து இருக்கிறார்.இனியேனும் யோசிக்க வேண்டும் மக்கள்!

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

நிரந்தரமற்ற நொடிகளில் நிரந்தரமாக நான்..

 


தீராத காதல்

இந்த வாழ்வின்

நகர்வில்...

எந்த நிகழ்வும் என்னை துவம்சம்

செய்து விடக் கூடாது என்று

கொஞ்சம் என்னை 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

கண் மூடி சுற்றுப்புறம் மறந்து

தனிமையை நேசிக்கிறேன்...

ஆறுதல் சொல்ல என்று எவரும்

நெருங்க வேண்டாம்...

இதோ இந்த வஸ்துவின் வெப்பத்தில்

எல்லாம் பொசுங்கி விடும்...

தீராத காதலை 

இந்த வாழ்வில் இருந்து

விடுவித்து விடவும் கூடும் நான்

இன்னும் சில நொடிகளில்...

நிரந்தரமற்ற நொடியில்

நிரந்தரமாக நான்

என் இருப்பை உறுதி 

செய்துக் கொள்கிறேன்...

கொஞ்சம் நீங்கள் விலகி இருங்கள் 🙏.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 7 டிசம்பர், 2023

அந்த அறிவிக்கப்பட்ட மழைக்கால இரவொன்றில்......

 


அந்த அறிவிக்கப்பட்ட மழைக் கால

இரவொன்றில்

அறிவிக்கப்படாத

எதிர்பாராத உன் நினைவுகளை

கொஞ்சம் அகற்றுங்கள் என்று 

ஆணை இடுவதை

என் மனம் கொஞ்சம் வேடிக்கையாக

சிரித்து விட்டு

அந்த செயலை செய்யாமலேயே

என்னை வெறுப்பேற்றி

ரசிப்பதில்

நான் இன்னும் கோபம்

அடைந்து

மன கதவின் தாழ்தனை

விலக்கி சற்றே வெளியே

பார்க்கிறேன்..

பெய்துக் கொண்டிருந்த மழை ஏனோ

என்னை அது பங்கிற்கு கேலி செய்து 

சிரித்து வைத்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 6 டிசம்பர், 2023

நாயொன்று மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது...

 

அங்கே ஒரு வெள்ளம்

பெருக்கெடுத்து

நகரை சத்தம் இல்லாமல் 

விழுங்கிக் கொண்டு

இருக்கிறது...

இங்கே வெள்ளத்தால்

விழுங்கப்பட்ட நகரில் உள்ள

ஜீவன்களின் கணக்கெடுப்பு மட்டும் 

சத்தம் இல்லாமல்

நிகழ்த்தி விட்டு

உணர்வற்று கடக்கிறார்கள்

சில பல அரசியல் நியாயஸ்தர்கள்...

இவர்கள் நியாயத்தை

அங்கே அந்த வெள்ளப் பெருக்கில் 

இருந்து தப்பி பிழைத்த 

நாயொன்று பெரும் பசியோடு 

சாட்சியாக

மெல்ல முனகி வேடிக்கை பார்க்கிறது....

#நகரை சூழ்ந்த வெள்ளம்.

நேரம் அந்தி மாலை 6:50.

நாள்: #டிசம்பர் 6/23.

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

ஒரு கொண்டாட்டமும் தேவையில்லாத இரவொன்றில்...


ஒரு கொண்டாட்டமும்

தேவையில்லாத இரவொன்றில்

நான் இந்த பிரபஞ்சத்தின்

எல்லையில் இருந்து

மௌனமாக விலகிச் செல்கிறேன்...

இந்த பிரபஞ்சமோ

பிடிவாதமாக என் இறப்பை

துக்க நாளாக அறிவித்து

இந்த பிரபஞ்சத்தின் 

ஏதோவொரு மூலையில்

சிரித்து மகிழ்ந்து 

கொண்டாடிக் கொண்டு

இருந்த அந்த பொருளற்ற 

விழாவையும் நிறுத்தி விட்டது தான்

எனது விடை தெரியாத

இந்த பிரபஞ்சத்தின் இறுதி மூச்சின் 

வெற்றியா என்று

என்னை நானே 

கேட்டுக் கொள்கிறேன்...

அதே சமயத்தில் என் சூட்சம ஆன்மா 

காற்றோடு காற்றாக

கலந்து மிதக்கிறது

அந்த வெட்டவெளியில்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

இதமான இரவொன்றில்...

 


இதமான இரவொன்றில்

கரைகிறேன்

எனை மறந்து...

குளிரும் இல்லா

வெப்பமும் இல்லா

இந்த காலநிலை

ஒரு வித பேரமைதியை

தருகிறது...

இங்கே துணையின்றி

பயணிப்பது

ஆனந்த சொரூபமே என்று

இந்த கடற்கரை நிலவொளி

எனக்கு பாடம் நடத்துகிறது

தனது ஒளிவெள்ளத்தில்..

அத்தனை நினைவுகளையும்

அலையில் கரைத்து

அமைதிக் கொள்ள

துடிக்கிறது மனது..

பேரண்டத்தின் அமைதியை

இங்கே யார் புரிந்துக் கொள்ள கூடும்..

சம்சாரம் எனும்

தணலில் அமைதியின் தேடலை துவங்கி

முடிவற்ற பயணத்தில்

தனது இருப்பை தேடி

அலைகிறது பொல்லா மனது

அதற்கான இருப்பை

எவரும் களவாடவில்லை என்று இங்கே எவரேனும்

சொல்லுங்கள்...

களவாடப்பட்டது முற்றிலும்

வடிவமற்று பயணிக்கும் 

ஆன்மாவின் பேரானந்த பெருநிலை என்று..

#இரவும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 30 நவம்பர், 2023

காலமும் நானும்...

 


காலமும் நானும்:-

நான் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்து விட்டு என்னருகே வந்த காலம் ஏன் இப்படி சிரிக்கிறாய் என்றது.. நான் அதனிடம் காரணம் கூட சொல்ல முடியவில்லை.. என் சிரிப்பை அடக்கி..காலமோ பொறுமையிழந்து முதலில் சிரிக்காமல் சொல் என்றது கொஞ்சம் செல்லமாக கோபித்து..

நான் அதனிடம் சாலையில் அலைபேசியை காதில் வைத்துக் கொண்டு செல்லும் ஒரு இளைஞனை காட்டி அவன் தான் காரணம் என்றேன்.. அப்படி என்ன தான் செய்தான் அவன் நீ இப்படி விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு என்றது காலம்..

அவன் அலைபேசியில் அவன் காதலியின் பெயரை குறிப்பிட்டு நீ ஒரு அமிர்த கடல் என்றான்.. எதிர் முனையில் என்ன சொன்னார்களோ தெரியவில்லை.. அவன் மீண்டும் மீண்டும் காதல் கவிதைகளை சொல்லிக்கொண்டே இருக்கிறான் அவளை சமாதானம் செய்ய என்றேன்..

இதற்கு போய் இப்படி ஏன் நீ சிரிக்கிறாய்.. அவன் காதலி அவன் ஏதேதோ சொல்லி விட்டு போகிறான்.. அதில் உனக்கு என்ன சிரிப்பு என்றது..

எனக்கு இப்போது கோபம் வந்து விட்டது காலத்தின் மேல்..நீ எவ்வளவு பெரிய ஆள்... இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது....

இதை எல்லாம் விட்டு விட்டு காதல் மயக்கத்தில் அமிர்த கடல் அமிர்த ஆறு என்று சொல்லி பிதற்றுகிறானே..பிதற்றுவதில் ஒரு நியாயம் வேண்டாம் என்றேன்..

ஓ அதுவா செய்தி.. அவன் திருமணம் செய்து கொண்ட பிறகு இப்படி பிதற்றுகிறானா பார்க்கலாம் என்றது சிரித்துக் கொண்டே..

அதற்காக தான் விழுந்து விழுந்து சிரித்தேன்..

இந்த மோகம் இருக்கிறதே அது மிகவும் மோசமானது என்றேன்..

ஆமாம் ஆமாம்.. எல்லோரும் உன்னை போல தத்துவம் பேசி திரிந்தால் எனக்கு பொழுது போக வேண்டாமா என்றது நகைச்சுவையாக..

அதுவும் சரிதான் என்று சொல்லி விட்டு நான் உள்ளே செல்வதை பார்த்து நான் எதற்காக செல்கிறேன் என்று புரிந்து கொண்டு எனக்கு தற்போது கொஞ்சம் பிளாக் காபி போதும் என்றது காலம்..

கண்டிப்பாக இதோ எடுத்து வருகிறேன் என்று சொல்லி விட்டு நகர்ந்தேன் சமையலறையை பார்த்து..

#காலமும்நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 28 நவம்பர், 2023

ஆறுதல்...

 


ஒரு ஆறுதல் தேடி

அலைந்து சோர்வாக

நாற்காலியில் சாய்ந்து

கண் மூடி தளர்வாக

அமரும் போது

என்னையும் அறியாமல்

சிறு தீண்டலில்

அந்த மேசை மீது உள்ள

எழுது கோல் உருண்டோடி

என் கைகளை உராய்ந்து

கீழே விழும் ஓசையில்

நான் 

உயிர்ப்பிக்கப்படுகிறேன் ...

#ஆறுதல்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் முன்னிரவு 7:30.

என் நிலை...

 


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பைத்தியம் பிடித்து விடுகிறது.. உங்களுக்கும் ஏதோவொரு வகையில் பைத்தியம் பிடித்து இருக்கும் நிகழ்வு இருக்கும் தானே அது என்ன என்று நேசமிகுந்த தோழி ஒருவர் கேட்டார்... நிச்சயமாக எனக்கும் அப்படி ஒன்று உள்ளது.. அது நான் எழுதாமல் இருக்கும் போது நிகழ்ந்து விடுகிறது.. ஆனால் அந்த பைத்தியக்காரத்தனம் எழுதி முடித்தவுடன் மறைந்து விடுகிறது எனக்கு.. ஆனால் அதை என்னையும் அறியாமல் வாசிப்பவர்கள் மத்தியில் கடத்தி விடுவது தான் பெரும் தொல்லையாக போய் விடுகிறது..இதை தடுக்க என்ன வழி என்று யோசித்து எனக்கு ஏதேனும் வழி சொல் தோழி என்றேன்.. அந்த தோழி இவ்வளவு எழுதுகிறாய் உனக்கு தெரியாத வழியா எனக்கு தெரிந்து விட போகிறது என்று நழுவி விட்டார்... நான் இறுக பற்று சினிமாவில் தம்பதிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் அந்த மன நல ஆலோசனை மருத்துவராக என் நிலை அந்தோ பரிதாபமாக... என் செய்வேன் நான் பாவம்..😌.

#இளையவேணிகிருஷ்ணா.

இது முதன் முறையல்ல எனக்கு...

 


எழுதுவதை தவிர

வேறென்ன தெரியும் என்று 

கேட்கிறார்கள்...

சிந்தாமல் சிதறாமல்

இந்த நொடியை ரசித்து புன்னகைக்க 

தெரியும் என்றேன்...

கேட்டவர்கள் கொஞ்சம்

எனக்கு மனம் பேதலித்து விட்டது போல என்று

சைகையால் சொல்லி செல்கிறார்கள்...

அந்த சைகை மொழியில்

ஆயிரம் ஆயிரம் ரசனைகளை நான் 

கண்டு களித்து கொஞ்சம் மெதுவாக 

நகர்கிறேன்

என் இதழில் புன்னகை 

சிந்தியபடியே...

இங்கே ரசனை என்பது

மனம் பேதலித்து விட்ட மனிதராக 

அடையாளம்

கண்டுக் கொள்ளப்படுவது

எனக்கு இது முதன் முறையல்ல...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 28/11/23.

நேரம் அந்தி மாலையும் இரவும் 

சந்திக்கும் 7:00.மணி..

இருளின் சாயலை நேசிப்பவர்...


எனக்கான நேரத்தில்

நான் இரவை நேசிக்கிறேன்

இருளின் சாயலை

இங்கே எவரும் பெற

விரும்பாத போதும்

நான் அதை நேசித்து கைப்பிடித்து

ஆள்அரவமற்ற அந்த சாலையில் 

பயணிக்கிறேன்..

இருளின் மௌனத்தை

நான் புரிந்துக் கொள்ள

சிறிதும் முயற்சி செய்யவில்லை..

நானும் அதே நிலையில்

இருக்கும் போது

அந்த புரிதல் தேவையற்றது..

ஏன் நீ என் கரம் பிடித்து

பயணிக்கிறாய்

என் மீது கொண்ட அனுதாபமா 

என்றது இருள்...

இல்லை இல்லை

உன் ஆழ்ந்த அமைதியின்

காதலை புரிந்துக் கொண்டு

உன் கரம் பிடித்து

நடக்கிறேன் என்றேன்..

அந்த வெளிச்சமற்ற தனிமையில்

தேகத்தின் மீது துளி மோகம்

இல்லாமல் பயணிக்கும்

நாங்கள் யார் என்று

அங்கே இரவின் நிசப்தத்ததை

தனது குரலால்

தாலாட்டும் இரவு பூச்சிகள்

ஆச்சரியமாக தங்களுக்குள்

பேசிக் கொண்டதை

எதேச்சையாக கேட்டு

நாங்கள் அந்த நெடுஞ்சாலையில் 

பயணிக்கிறோம்..

இன்னும் விடியலுக்கு

நேரம் இருக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

இரவெனும் வெளியில்...

 


இரவெனும் வெளியில்

சத்தம் இல்லாமல் பயணிக்கிறேன்..

இங்கே எதிர்பார்ப்பு இல்லாத

அரவணைப்பை

இரவை தவிர எதுவும்

தர இயலாது..

சல்லி காசு பயன் ஏதும்

என்னிடம் எதிர்பார்க்காமல்

ஒரு அரவணைப்பு

இயற்கையால் கொடுக்கப்பட்டு இருக்கிறது..

இன்றைய நிகழ்வை

மீட்டி பார் என்கிறது

என்னோடு உறவாடும்

இந்த இரவு...

நானோ அதை செல்லமாக

கோபிக்கிறேன்..

போன பொழுதின் நினைவுகளை அப்படியே

விட்டு விடு இரவே...

இங்கே நீ நான் மட்டும்

போதும்..

நமக்கிடையே இன்று நடந்த

நிகழ்வை ஏன் சேர்த்துக் கொண்டு குளிர் காய வேண்டும்?

நாம் நாமாக பயணிப்போம்

சத்தம் போடாதே..

இங்கே எவரும் வந்து விடக் கூடும் உன் குரல் கேட்டு..

நம் தனிமையின் ஆனந்தத்தை விட்டு

விலகி விட அனுமதிக்காதே

உன்னோடு கலந்து விடும்

இந்த நேரத்தின் இனிமையை பெரும் காதலின் 

உணர்வற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாது என்றேன் 

அதை இரவும் ஆமோதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 26 நவம்பர், 2023

கடந்து வந்த பாதையை கொஞ்சம் அசைப்போடுகிறேன்...


 முடிய போகும் இந்த ஆங்கில வருடத்தில் கடந்து வந்த பாதையை கொஞ்சம் அசைப்போடுகிறேன்... ஒன்றும் புதிதாக செய்யவில்லை... வழக்கம் போல காலண்டரில் உள்ள காகிதங்கள் கிழிப்பட்டு குப்பைக்கு போனது.. நான் மட்டும் குப்பைக்கு போகாமல் தப்பித்து கொண்டே இருக்கிறேன்...

உருண்டோடி போகிறது காலம்... ஆனால் இனி இலட்சியம் என்று ஒன்றும் இல்லாமல் பயணிப்பதே வாழ்க்கை சுகம் கொடுக்கும்.. ஏனெனில் மீதி இருக்கும் காலத்தில் ஒவ்வொரு நொடியும் அது என்னை எப்படி நகர்த்துகிறதோ அப்படியே செல்வதே ஆனந்தம் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

இது வரையும் அப்படி தான் இருந்து இருக்கிறேன்.. ஏதேனும் நான் கடந்த காலத்தில் சாதித்து இருந்தால் அது என் ஆழ் மன தேடலின் வெளிப்பாடாக தான் இருந்திருக்கும்..இனி அப்படி எதுவும் இல்லாமல் காலத்தின் போக்கில் திட்டமிடாமல் புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு நொடியிலும் கலந்து அனுபவிக்க போகின்றேன்... புதுமையான ஒரு பயணத்தின் தொடக்கம்... இன்னும் நெடுந்தூர பயணம் என்றே நினைக்கிறேன்... களைப்படைந்து விடாமல் இறுதி வரை பயணிப்பேனா என்று காலம் கவலைக் கொள்கிறது... அப்படி ஒன்றும் வயதாகவில்லை காலமே என்று காலத்தின் கேள்விக்கு புன்னகையோடு பதில் அளித்து பயணிக்கிறேன்...

பார்க்கலாம்... எத்தனை சுவாரஸ்யம் மற்றும் ரகசியங்கள் எதிர் வரும் ஆங்கில புத்தாண்டில் எனக்கு காத்திருக்கிறது என்று...🎉🌿🎉.

#கரைந்துசென்றகாலங்கள்.

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் இந்த பேரமைதி கொண்ட பௌர்ணமி நிலவும்..


 பேச்சற்ற அந்த நொடிகளை

சில பேர் சுவாரஸ்யமே 

இல்லாமல் 

கடந்து செல்கிறார்கள்...

அப்படி செய்பவர்களை பார்த்து 

நானும் இந்த பேரமைதி கொண்ட 

பௌர்ணமி நிலவும்

கொஞ்சம் வியந்து தான் 

போகிறோம்...

இந்த சூட்சம அமைதியின் துகள்கள் 

ஓராயிரம் தத்துவங்கள் பேசாமல் 

எனக்குள் கடத்தி செல்வதை

அந்த பௌர்ணமி நிலவும்

இந்த இரவும் வேடிக்கை பார்த்து 

தனக்குள் மௌன சிரிப்பொன்றை 

பரிமாறிக் கொள்வதை தவிர 

அவர்களால்

வேறென்ன செய்ய இயலும்?

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:26/11/23.

நேரம் #கார்த்திகைபௌர்ணமி

#முன்னிரவு.

இரவின் பெரும் தாகம்...


இரவின் பெரும் தாகம்

இசை ஒன்றை

மீட்டிக் கொண்டு

இருக்கிறது...

அந்த மெல்லிசையில்

என் ஆன்மா பேரொளியாக

உருகி ஆறாக வழிய

அது இறையெனும்

சமுத்திரத்தை தேடி

அலைகிறது...

நான் வழக்கம் போல வெறுமனே வேடிக்கை

பார்க்கும் மனுஷி ஆகிறேன்...

எந்தவித நிகழ்வின் பாதிப்பும் பெரும் தொல்லையாக ...

நான் கருதுவதால் கூட அப்படி இருக்கலாம்...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 24 நவம்பர், 2023

ஜென் நிலை...

 


வாழ்க்கையை

வாழ்ந்துக் கொண்டு

இருக்கிறோம் என்று

நினைப்பது கூட

ஒரு சுமையே...

வாழ்க்கை மிகவும் தெளிவான 

நீரோடையில்

என்னை அப்படியே மிதக்க செய்து 

எங்கே சேர்க்க வேண்டுமோ அங்கே 

சேர்த்து விடுகிறது...

நான் அது சேர்த்த இடத்தில்

இறங்கிய போது ஒரு பேரமைதி 

அங்கே குடிக் கொண்டு இருந்தது...

அது என்னை பயமுறுத்தாத 

பேரமைதி...

ஆம் நான் வாழ்ந்து 

முடித்து விட்டேன்....

அது ஒரு இரைச்சல் இல்லாத 

மென்மையான இசை மூலம்

காலம் எனக்கு உணர்த்தியது...

இது ஒரு அற்புதமான நிகழ்வு...

நீங்களும் முயன்று பாருங்கள்...

வாழ்வின் சூட்சமங்கள்

இங்கே ரொம்ப ஆழமாக 

புதைக்கப்படுவதில்லை...

கடற்கரை அருகே மணற் பாங்கில் 

தோண்டும் போது

கிடைக்கும் நீரின் ஆழமே

அந்த பொக்கிஷம் இங்கே மறைந்து 

உள்ளது...

#ஜென்நிலை.

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 23 நவம்பர், 2023

எழுத்தாளனும் எழுத்தும்

 


எழுதி சம்பாதிக்கலாம் என்று இங்கே ஒரு டிரெண்ட் தற்போது... இப்படி நிறைய இணைய தளங்கள் தற்போது வருகிறது..நிச்சயமாக அப்படி அழைக்காதீர்கள்...

ஒரு உண்மையான எழுத்தாளன் நிச்சயமாக

அதை விரும்ப மாட்டான்.. ஏனெனில் இங்கே எழுத்தாளனுக்கு பார்க்கும் காட்சிகள் தமது வாழ்வியலில் இருந்து எடுத்த துளிகள் இப்படி அவன் மனம் பாதித்த விசயத்தை எழுதி விட்டு போய் விடுவான்... ஆனால் இப்படி குறிப்பிட்டு இந்த நேரத்தில் இத்தனை மணிக்குள் இத்தனை வார்த்தைகளில் இந்த மாதிரி எழுதுங்கள் என்று நீங்கள் நெருக்கடி கொடுத்தால் அதில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் எழுத்தில் நிச்சயமாக உயிரோட்டம் இருக்காது.. வெறும் வார்த்தை குவியல்களால் வாசிப்பாளனும் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது..சுருங்க சொல்ல போனால் வெறும் சக்கையாக தான் பெரும்பாலும் அந்த எழுத்து இருக்கும்.. இதில் மிக சொற்பமான விதிவிலக்குகள் இருக்கலாம்...

அதனால் ஒரு சின்ன திருத்தம் அப்படி இணைய தளம் ஆரம்பிப்பவர்களுக்கு...

உயிரோட்டமாக எழுத வாருங்கள்..என்று அழையுங்கள்..

அதுவே சரியாக இருக்கும்..

#எழுத்தாளனும்எழுத்தும்.

#இளையவேணிகிருஷ்ணா.

காலத்தின் சுவரின் மீது அமர்ந்துக் கொண்டு...

 


அந்த பற்றற்ற காலத்தின் சுவர் மீது

அமர்ந்துக் கொண்டு

என் துயரங்களுக்கு எல்லாம் காரணம் யார் தெரியுமா 

அந்த நாசமாய் போன காலம் தான் என்று வாய்க்கு வந்தபடி வசைப்பாடி ஆக்ரோஷமாக அழுது அந்த காலத்தின் சுவரிலேயே புரண்டாலும்...

உங்கள் பொல்லாத சுமைகளையும் தாங்கி 

நீங்கள் எங்கேயும் கீழே விழுந்து விடாமல் இருக்க

தாங்கி பிடிக்கும்

அந்த காலத்தை விட

பெரும்தன்மையாளர்கள்

இங்கே ஒருவரையேனும்

கை காட்டி விடுங்கள்...

நான் காலத்தின் பக்கம்

ஆதரவாக இருப்பதில் இருந்து 

விலகி விடுகிறேன்...

#காலம்

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 23/11/23.

நேரம் #அந்தி மாலை

கார்த்திகை மாதம் 7:11.

அந்த நதி ஏன் நகர்கிறது?

 


அந்த நதி

ஏன் நகர்கிறது என்று கேள்வி 

கேட்காதீர்கள் ...

அதன் நகர்வில் 

ஆயிரம் ஆயிரம் விருப்பங்கள் 

சோகங்கள்...

இப்படி எல்லாவற்றையும்

ஒரு பற்றோடு

அணைத்துக் கொண்டு

சாகரத்திலோ.. அல்லது

 கண்ணில் தென்படுகின்ற 

கரைகளிலோ.. அல்லது 

ஏதோவொரு பாறை இடுக்கிலோ... 

இப்படி ஏதோவொன்றில்

பற்றற்று தொலைத்து விடவே 

பயணிக்கிறது...

நீங்களோ சம்சாரம் எனும் பெரும் சாகரத்தில் உங்களோடு பயணிப்பவர்களை மூழ்கடித்து காயத்தை ஏற்படுத்தி மூச்சடக்கி

அவர்கள் பயணத்தை 

நீர்த்து போகவே 

செய்து விடுகிறீர்கள்...

நீங்கள் நதியை பார்த்து பிரமிக்க வேண்டுமே தவிர

அதை பார்த்து ஆயிரம் ஆயிரம் கேள்விகள் கேட்டு

அதன் கோபத்தை போகிற போக்கில் தூண்டி விடாதீர்கள்...

அதுவே போதுமானதாக இருக்கும் அந்த நதிக்கு...

#நதி

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி:23/11/23.

நேரம் 6:54.

எனது ஞாபகமாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்...


வாழ்ந்தது சில காலம்

வாழப் போவதும் சில காலம்

இதில் உணர்வுப்பூர்வமான

நிகழ்வுகள் சில காலம்;

தொலைந்த நினைவுகள்

சில காலம்;

தொலைக்க வேண்டிய நினைவுகள்

சில காலம்;

இப்படி பல பல....

சற்றே அமைதியாக

என்னை விட்டு 

கொஞ்சம் தொலைவிலே

இருங்கள்;

நான் எனது மொத்த வாழ்வையும்

இந்த புகைத்தல் எனும்

வஸ்துவின் துணைக் கொண்டு

வேடிக்கை பார்த்து 

கொஞ்சம் பலமாக

சிரித்து விட்டு

போகிறேன்...

வாழ்தலின் புரிதல்

நான் கடந்து வந்த பாதைகளில்

எங்கேனும் சிதறி இருந்தால்

அதை எனது ஞாபகமாக

நீங்கள்

பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் ...

அதுவே எனது வாழ்விற்கான

பெரும் ஆறுதல் ...

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 23/11/23.

நேரம் மாலை4:48.

காலமும் நானும்

 


காலமும் நானும்:-

ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் காலத்தோடு நான்.. என்ன சௌக்கியமா என்று கேட்டது காலம்..சௌக்கியம் என்று சொல்ல முடியாது.. ஆனால் சௌக்கியமாக இருக்கிறேன் என்றேன்.. என்ன வழக்கம் போல குழப்புகிறாய் என்று கடிந்து கொண்டது காலம்.. உடல் அளவில் கொஞ்சம் அசௌகரியம்.. ஆனால் மனதளவில் எப்போதும் ஆனந்தம் என்றேன் புன்னகைத்து..அது சரி.. அப்படி இருப்பது வாழ்வின் ஒரு கலை என்றது காலம்.. அதன் பதிலை உள் வாங்கி கொண்டே எழுந்து சமையலறையில் ஒரு சூடான இஞ்சி தேநீரை தயாரித்து அதனோடு வெங்காய பக்கோடா எடுத்துக் கொண்டு வந்து காலத்திடம் கொடுத்து விட்டு எனக்கான பங்கை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன்..

காலம் மிகவும் ஆவலாக அந்த பக்கோடாவை ரசித்து சாப்பிட்டு கொண்டே அந்த சூடான தேநீரை ருசித்து பருகியது.. எப்படி இருக்கிறது சுவை என்றேன் காலத்திடம்.. அதற்கென்ன மிகவும் அருமையாக உன்னை போல வித்தியாசமாக என்றது சிரித்து கொண்டே.. இந்த வானிலை ஏமாற்றி விட்டது இந்த முறை என்றது..

நானோ கடலோர மாவட்டங்கள் தப்பி விட்டது என்று சந்தோஷப்படுவதா இல்லை சம்பா பயிருக்கு கொஞ்சமேனும் மேல் மழை வேண்டும் என்று கவலைப்படுவதா என்று தெரியவில்லை காலமே என்றேன்..நீ சொல்வது சரிதான்.. ஆனால் வானிலை நமது கைகளில் இல்லையே என்றது வருத்தமாக..

ஆமாம் உன்னை போல என்றேன் சிரித்துக்கொண்டே..

சரி சரி அதை விடு.. உன்னிடம் ஒரு கேள்வி என்றது காலம்..

கேள் காலமே.. எப்போதும் என்னிடம் மட்டும் நீ கேள்விகணைகளை கொடுப்பதும் ஏனோ என்றேன் கேலியாக..

அது ஏனென்றால் நீ எனது சாயல் என்றது..

சரி கேள்விக்கு வருகிறேன்..

இறப்பை நேசிக்கிறேன் என்று பல பதிவுகளில் சொல்கிறாய்.. அப்பொழுது நீ நேசித்த இறப்பை நாடி செல்வாயா அல்லது இறப்பே உன் நேசிப்பில் ஓடோடி வர வேண்டும் என்று நினைப்பாயா என்றது..

நான் சிறிதும் யோசிக்காமல் நான் அதை நேசித்து ஓடுவது என்பது காலங்காலமாக நேசித்த காதலனை தேடி எப்போதும் நேசித்த குடும்பத்தை மதிக்காமல் ஓடுவதற்கு சமம்..அது எனது பாரம்பரியத்திற்கு அழகல்ல..அதுவே என்னை நேசித்து ஓடோடி வந்து ஆரத் தழுவிக் கொள்ளும் போது நாங்கள் எவரும் பிரிக்க முடியாத பிணைப்பில் கலந்து நேசித்து கிடப்போம் என்றேன்..

காலமோ நான் எதிர்பார்த்ததை போலவே சுவாரஸ்யமான பதிலை சொல்லி விட்டாய் என்று சொல்லி இதோ இந்த காலி தேநீர் கோப்பையை உனது சிறந்த பதிலுக்கு பரிசளித்து விட்டு விடை பெறுகிறேன்.. மீண்டும் சந்திப்போம் நேரம் கிடைக்கும் போது என்றது..

நானும் சிரித்துக்கொண்டே அந்த காலி கோப்பையை வாங்கிக் கொண்டு நகர்கிறேன்..

#காலமும்நானும்

மீள் பதிவு.

#இளையவேணிகிருஷ்ணா.

யாசித்தல் கொடுமையானதே..

 


யாசித்தல் கொடுமையானது

அதிலும் இறப்பை யாசித்து கிடப்பது மிகவும் மோசமான துன்பமான விசயம்.. அந்த அகங்காரம் கொண்ட மனிதனின் அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக சரணடைகிறது இறப்பிடம்.. இறப்பின் காலடியை பிடித்து கெஞ்சுகிறது..என்னை உன் காலடி நிழலில் அடைக்கலம் ஆக்கிக் கொள் என்று.. பார்க்க பாவமாக இருந்தது.. ஆனால் இறப்பு அவரை கண்டுக் கொள்ளவே இல்லை..நீ இதே நிலையில் இன்னும் கொஞ்ச காலம் இருக்க வேண்டும்.. என் காலடியை உனது கண்ணீர் கழுவ வேண்டும்.. ஒவ்வொரு நொடியும் அகங்காரம் எவ்வளவு மோசமானது என்று நீ உணர வேண்டும்.. பிறகு அடுத்த பிறவியில் கூட உன்னை அகங்காரம் சூழாமல் இருக்க வேண்டும்... இதற்காக தான் இந்த தண்டனை..யாசித்துக் கொண்டே இரு.. நான் நீ கேட்ட யாசித்தலை நேரம் வரும் போது தருவேன்..

யாசித்தல் கொடுமையானது தான்..உன்னை போன்றவர்கள் உணர வேண்டாமா என்றது காலன்..

அந்த அகங்கார மனிதனோ கண்ணீர் சிந்தி சிந்தி காலனின் காலடியில் மயங்கி கிடக்கிறான்..நலனுக்கான நேரத்திற்காக...

#யாசித்தல்கொடுமையானது..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 21 நவம்பர், 2023

உங்கள் மனதிற்கு நெருக்கமான நண்பன்...


 நாளை நடப்பதை யார் அறியக் கூடும் என்று தெளிவாக தெரியாத முட்டாள் மனிதர்கள் தான் எது எதற்காகவோ கலக்கம் அடைவார்கள்... ஆனால் எதன் மீதும் அவ்வளவாக ஆர்வம் இல்லாத மனிதர்களுக்கு இங்கே எந்த இலாபமும் இல்லை; இழப்பும் இல்லை... ஒரு சமநிலையான மனதை எப்படியாவது பெற்று விடுங்கள்..அதுவே உங்கள் மனதிற்கு நெருக்கமான ஆறுதலான நண்பன்...

#வாழ்வியல்.

#இசைச்சாரல்வானொலி.

வேடிக்கை பார்த்துக் கொண்டு செல்லும் வழிப்போக்கனாக...


ஒரு வேடிக்கை பார்த்துக் கொண்டே 

கடந்து செல்லும் 

வழிப்போக்கனாக

இருந்து விடுவதில்

இருக்கும் நிம்மதி

எதையாவது பற்றிக் கொண்டு 

பொறுப்போடு

திரிவதில் இருப்பதில்லை...

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

தேதி 22/11/23.

நேரம் காலை 8:36.

யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்...

 


யாரும் இல்லாத தீவொன்று வேண்டும் வேண்டும்... அதில் என்னோடு நீ மட்டும் வேண்டும் என்று ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு பிடித்த பாடலை நான் நினைத்து பார்த்தேன்... ஆனால் அந்த இருமலை கூப்பிட்டதாக நினைத்து என்னை இறுக பற்றிக் கொண்டு போக மாட்டேன் என்கிறது... நான் இந்த நிலையில் அதன் நேசத்தை உதாசீனப் படுத்தினால் அது எங்கே தஞ்சம் அடையும் பாவம்... அதனால் அடைக்கலம் கொடுத்து இருக்கிறேன்.. நான் அதன் அதீத நேசத்தால் துடிப்பதை பார்த்து அது பற்றற்று விலகி விட்டால் எனக்கு தற்போது அதை விட மேலான சொர்க்கம் வேறெதுவும் இல்லை...😒.

#இருமல்எனும்காதலன்.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 17 நவம்பர், 2023

சிறைப்படுதல்....

 



சிறைப்படுதல்

எனக்கு பிடிக்காது என்கிறேன்...

அப்படி என்றால் நீ காற்றா 

என்கிறார்கள்...

இல்லை நான் நதி என்கிறேன்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:35.

தேதி கார்த்திகை-1.

இழந்து விடுதல் ஒரு வரம்...

 


இழந்து விட ஏன்

பயப்படுகிறீர்கள்?

காலத்தின் ஒவ்வொரு நொடியும் 

இழக்கும் போது பயப்படுவதாக 

தெரியவில்லை...

மேலும் காலம் உங்கள்

அனுமதி கேட்டா தன்னை 

இழக்கிறது...

இழந்து விடுதல் என்பதில்

ஒரு புதுப்பித்தல் இருப்பதே

ஆக சிறந்த வரம் என்று

நீங்கள் ஏன் உணராமல்

பயந்து ஓடி ஒளிந்துக் 

கொள்கிறீர்கள்...

இழந்து விடுதல் என்பது

என்னை பொறுத்தவரை ஒரு வரம் 

என்பேன்...

வாழ்வின் சுமைகள் 

தானாகவே கழிந்து விடுவதில் 

உங்களுக்கு என்ன நஷ்டம் ஆகிவிட 

போகிறது???

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:23.

தேதி கார்த்திகை-1.

ஊர்ந்து செல்லும் நொடிகளுக்குள்...

 


நீ யார் என்று

எனை அங்கே

சில பேர் கேட்கிறார்கள்...

நான் ஊர்ந்து செல்லும் 

நொடிகளுக்குள்

மிகவும் நிதானமாக வாழ்க்கையை

ரசித்து பயணிப்பவள்

என்றேன் ...

அப்படி சொன்ன என்னை 

பேரதிசயமான பார்வையை

கொஞ்சம் என் மீது வீசி

செல்கிறார்கள்...

#இரவுகவிதை.

#இசைச்சாரல்வானொலி.

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் முன்னிரவு 10:03.

தேதி கார்த்திகை -1.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...