ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 26 பிப்ரவரி, 2026

சொற்களின் அலமாரி...

 





உன்னிடத்தில் வெகுநாட்களாக

பிரியம் கொண்டு

நான் உன்னிடம்

பேச நினைத்த சொற்களை

பேசாமல் தினம் தினம்

பொழுது போகிறது...


உன்னோடு இருந்த

ஒவ்வொரு கணங்களையும்

நான் கவிதை கோர்த்து

சொற்களுக்குள்

புதைத்துக் கொள்கிறேன்...

அதை உன்னிடத்தில்

சமர்ப்பிக்காமலேயே...


என் தேடல் எப்போதும் நீயாக

இருக்கும் போது

உன் தேடல் எதுவோ என்று

கேட்க நினைத்து

நீ விளையாட்டாக

எதிர் கருத்து ஏதேனும் சொல்லி விடுவாயோ என்று

கேட்காமலேயே நகர்ந்து

சென்ற நாட்கள் இங்கே

ஏராளம் ஏராளம்...

எது எப்படியோ உன் மீது கொண்ட

பெரும் காதலின்

சொல்லதிகாரத்தை

பெரும் புத்தகமாக்கி...

இங்கே எனது வீட்டின்

ஒரு பிரமாண்ட அறையை

அலமாரியாக ஒதுக்கி

சேர்த்து வைத்து இருக்கிறேன்...


அந்த சொற்களின் அலமாரியை

நீ கண்டு களிக்க 

வரும் நாளில் எந்த பூச்சியும்

அரித்து விடக் கூடாது என்று

என் நேசத்தின் கவசத்தை

வேலி இட்டு 

பாதுகாத்து வைத்திருக்கும்

தகவலையேனும்

எவரும் சொல்வதற்கு

முன்பே 

உனக்கு அறிவித்து விட

துடிக்கும் நான்

உன் பெரும் காதலின்

அடையாளம் என்று

நீ உணர்வாயோ மாட்டாயோ

நான் அறியேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/02/26.



செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறக்க முடியாத கனவு...

 

 


என்றோ நீ என்னை

காதலித்த நாட்கள்

எல்லாம்

என் நேற்றைய

இரவின் கனவில்

வந்து வண்ணங்கள் அப்பி 

அலங்கரித்து நிற்கிறது...


கனவில் எத்தனை நாழிகை

பேசினோம் என்று தெரியாது...

நீ நிஜத்தில் பேசியதை விட

கனவில் எந்த குற்றமும்

நிகழ்த்தாமல் பேசியதே

எனக்கு போதுமானதாக 

இருந்தது...


ஒரு அதிசய வண்ணங்கள்

கொண்ட பட்டாம்பூச்சி

நம்மை உரசி 

பறந்து சென்றதை நீ கவனித்து

அதை பிடித்து தர சொல்லி

நிர்பந்தம் செய்து

கோபித்துக் கொண்டு

திரும்பி நிற்க...


நான் அதை சகிக்காமல்

துரத்தி வெகுதூரம் சென்று

கையோடு அதை பிடித்து வர

நீ அந்த இடத்தில் இல்லாமல்

எங்கோ தொலைந்து போனாய்...


உன்னை நினைத்து

பெரும் குரலெழுப்பி

உன் பெயரை 

வேகமாக உச்சரிக்க

அருகில் இருந்த

மனைவியோ 

என்னை உலுக்கியதில்

நான் சுயநினைவுக்கு

வந்து திகைத்து அவளை

பார்க்கும் போதே


அவள் என் நிலையை

புரிந்துக் கொண்டு

என்னை அணைத்துக் கொண்டதில்

நான் அவள் நிலையை

உணர்ந்து 

சிறிது வடித்த கண்ணீரின்

வெப்பத்தில் 

நீ உணர்ந்து இருப்பாய்

என் காதலின் தகிப்பை...


ஏன் வந்தது அந்த கனவு என்று

நான் துடித்திருப்பதை

எங்கோ இருக்கும் அவள்

உணர்வாளோ என்று

நான் அறியேன் ...


எது எப்படியாயினும்

மறக்க முடியாத 

இந்த கனவின் மூலம்

அவள் வந்து என்னை

கொன்று தின்று விட்டு

என் எச்சத்தை 

என் வாழ்க்கை துணைக்கு

பரிசாக்கிய போதும்

என் வாழ்க்கை துணைவி

அதை பிறர் தின்று போட்ட

எச்சம் என்று எண்ணாமல்

அமிழ்தென 

பெரும் மரியாதையோடு

பாதுக்காப்பதை பார்த்து

நான் கண்ணீரோடு

என்றும் இல்லாத

பேரன்பு கொண்டு அவளை

தழுவு நிற்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/02/26.














சனி, 21 பிப்ரவரி, 2026

ஒளி பிறந்து என் வாழ்வின் வசந்தத்தின் வாசலை திறந்து வைத்து...

 




ஒவ்வொரு கணங்களும்

வறுமையின்

கோரத் தாண்டவத்தில்

என்னை பதம் பார்க்கிறது...


சற்றும் மனம் தளராத

விக்கிரமாதித்தனை போல்

தடைகளை உடைத்து

தூள் தூளாக்கி முன்னேறி

செல்கிறேன்...


வாழ்க்கை எனும் தோட்டத்தில்

ஏதேனும் ஒரு மலர்

பூத்து அந்த பிரபஞ்சம் எங்கும்

வாசம் வீசாதா என்று

ஏங்கி தவிக்கும் நேரத்தில்

வானில் விடிவெள்ளி போல

ஒரு அற்புதமான தருணம்

என் வாழ்வில் ஒளி பாய்ச்ச

இதோ இப்போது

வந்த இந்நாளில் 

ஒளி பிறந்து என் வாழ்வில்

வசந்தத்தின் வாசலை

திறந்து வைத்து

மலர் தூவி வரவேற்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/02/26.



வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

உன் கண்களில் ஒரு கவிதை காற்றில் எழுதி...

 




அன்றொரு நாள்

உன் நேசத்தின்

பிடியில் இறுக 

எனை அணைத்துக் கொண்டாய்...


அந்த ஒரே தேகம் தீண்டா

சூட்சம  உயிர் தீண்டலில்

ஈரேழு உலகையும்

மறந்து எத்தனை நாழிகை

இந்த பூமி தாய் மடியில்

கிடந்தேன் என்று

நான் அறியேன்...


மீண்டும் நான் சுய உணர்வில்

விழித்தெழுந்து சுற்றும் முற்றும்

பார்க்கும் போது

நீ காற்றலையில் கூந்தல் அசைய

என்னை திரும்பி பார்த்து


உன் இதழ் விரிய

ஒரு சிரிப்பில் முத்துக்களை

சிதற விட்டதை

நான் நிதானமாக சேகரிப்பதை

நீ பார்த்து ரசிக்கும்


அந்த உயிர் உருக்கும்

பார்வை தீண்டலில்

என் பசி தூக்கம் மறந்து

உன்னை ரசிக்கும் வேளையில்


நீ உன் கண்களில்

ஒரு கவிதை காற்றில் எழுதி

போகிறாய்..

பார்வை ஒன்றே போதுமே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/02/26.



சனி, 14 பிப்ரவரி, 2026

கழுதையும் நானும்...


 #கழுதையும் #நானும்:-

***************************

அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார்க்கிறது.. போய் விடும் என்று நினைத்தேன்.. ஆனால் அது அங்கிருந்து அசையாமல் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நின்று கொண்டு எனது முகத்தை பார்த்தது.. நான் அதற்கு பசியாக இருக்குமோ என்று நினைத்து ஏதேனும் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன்..அது இல்லை என்று தலையாட்டி விட்டு ..ஏதோ கேட்க தயங்கியது.. நான் சிரித்துக்கொண்டே எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேள்.. கண்டிப்பாக என்னால் முடியும் என்றால் உனக்கு உதவுகிறேன் என்றேன்..அது மெல்ல மெல்ல தனது தயக்கத்தை விட்டு விட்டு மிகவும் மெதுவாக உனது குரலை எனக்கு ஒரு நாள் மட்டும் தானமாக கொடுக்க முடியுமா என்று கேட்டது...


நான் அதை ஒரு பார்வை பார்த்தேன்..அது பயந்து விட்டது போலும்.. வேண்டாம் வேண்டாம்.. உனக்கு விருப்பம் இல்லை என்றால் என்றது வேக வேகமாக..

நான் சிரித்தபடியே இதுதானா.. இதற்கு ஏன் இந்த தயக்கம்.. என்று அதனிடம் எனது குரலை கொடுத்து விட்டு அதன் குரலை வாங்கி கொண்டேன்..

அந்த குரலை வைத்தே என்னோடு உரையாடியவர்களுடன் பேசினேன்..

அவர்கள் ஒவ்வொருவரும் என்னை பார்த்து மிகவும் நகைத்தார்கள்;பரிகசித்தார்கள்; என்னோடு மிகவும் நெருக்கமாக பயணித்தவர்கள் கூட அந்த நாளில் என்னை விட்டு சொல்லாமல் விலகி சென்று விட்டார்கள்..

அதேசமயத்தில் அந்த கழுதையின் பின்னால் தற்போது மிகவும் ஆச்சரியமாக அத்தனை பெரிய கூட்டம் சென்றது... எதையும் காதில் வாங்காமல் அந்த கழுதை எங்கே சென்றாலும் கண்மூடி தன்னை மறந்து பயணித்தார்கள்...

எனக்கு அந்த ஒரு நாள் முடிந்தபோது அவ்வளவு மன உளைச்சலை இங்கே என்னோடு பயணித்தவர்கள் எனக்கு ஏற்றி விட்டார்கள்..


அந்த கழுதை மிகவும் உற்சாகமாக வந்தது.. அந்த நாளின் முடிவில்.. என் வாழ்வில் இப்படி ஓர் ஆனந்தத்தை உணர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்லி எந்த சலனமும் இல்லாமல் எனது குரலை என்னிடம் கொடுத்தது...

நானோ அது கேட்பதற்கு முன்பாகவே அதன் குரலை அவசரம் அவசரமாக அதனிடம் ஒப்படைத்து விட்டு அதனிடம் கேட்டேன்.. ஏன் நீ எனது குரலை வைத்துக் கொள்ள எண்ணம் இல்லையா.. உன் பின்னாடி தான் அத்தனை பேர் சுற்றினார்களே.... ஏன் நீ கூட இப்போது எனது குரலால் ஆனந்தமாக இருப்பதாக தானே சொன்னாய் என்றேன் மிகவும் சுவாரஸ்யமாக அதன் பதிலை எதிர்பார்த்து..

அதற்கு அந்த கழுதையோ எப்போதும் இயல்பை விட்டு பயணிப்பது ஆபத்தாக தான் முடியும்.. அதனால் எனக்கு உன் குரல் வேண்டாம்..நீயே வைத்துக் கொள்.. இந்த ஒரு நாள் ஆனந்தம் எப்போதும் என் வாழ்வின் இறுதி வரை பயணிக்கும்..அது போதும் எனக்கு..என்றது..

அதன் பதிலில் ஆயிரம் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து நான் வாய் மூடி மௌனியானேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேவை இங்கே சில நட்சத்திரங்கள்...


தேவை இங்கே

சில நட்சத்திரங்கள்

இரவின் அதீத

நிழலில் பேசி

மகிழ்ந்து 

பிரபஞ்சத்தின் 

அமைதியை

சத்தம் இல்லாமல்

ரசிக்க....

#இளையவேணிகிருஷ்ணா.



சனி, 7 பிப்ரவரி, 2026

இன்று மலர்ந்த பூ...

 


இதோ புதிய விடியலை

வரவேற்கிறது

என் வீட்டில் நீ விஷேசமாக

கொடுத்து 

நான் வைத்த

ரோஜா பூ செடியில்

பூத்த

அந்த சிகப்பு ரோஜா...


நீ அன்றொரு நாள் 

என் பிறந்தநாள் பரிசாக

கொடுத்த அந்த செடியில்

எத்தனையோ மலர்கள்

பூத்துக் குலுங்கி

என் புழக்கடையை

வெகுநாட்களாக 

அலங்கரித்து 

என் மனதை

குளிர்வித்த போதும்

இன்று மலர்ந்த 

அந்த சிகப்பு ரோஜா 

உன் நினைவை தந்து

அந்த மலரில் உள்ள முள்

என் மனதை குத்தி கிழிக்கிறது...


இதோ இதே நாளில் தான்

நீ இந்த ரோஜா பூ செடியை

எனக்கு இன்முகத்துடன் பரிசளித்தாய்...

நீ என் மீது ஊடல் கொண்டு 

விட்டு நீங்கி சென்ற

இந்த கால இடைவெளியில்

அந்த செடியில் பூத்து உதிர்ந்த

மலர்களின் இதழ்களை

சேகரித்து வைத்து இருக்கிறேன்

உன் நினைவாக...


இதோ இன்று அந்த மலரின்

பனித் துளி படர்ந்த இதழ்கள்

காய்ந்து சருகாகி மண்ணில்

உதிர்ந்து உரமாகும் முன்

இன்றேனும் 

நீ என்னை காண வந்து

வாழ்த்து செய்தியை

பகிரும் போது

உன் கூந்தலை 

இந்த சிகப்பு ரோஜா

அலங்கரிப்பதற்காக

ஏங்கி தவிக்கும்

என் பெரும் காதலின்

சுவையை நீ அறிய

சிறிதேனும்

முயற்சி செய்ய மாட்டாயா

என் ஆருயிரே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/02/26.



வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தாய் மரமும் அந்த பறவையும்...

 


அந்த கிளை படர்ந்த

மரத்தின் பழங்கள்

கனிந்து

மண்ணில் தஞ்சம்

புகுகிறது...


அதோ உணவை

தேடி திரிந்து

எதுவும் கிடைக்காத

பறவையொன்று

இந்த மரத்தின் கீழேயுள்ள

பழத்தில் தன் பசி எனும்

அக்னியை தணிக்கிறது...

அந்த பறவை இட்ட

எச்சத்தில் இருந்து 

அந்த கனியின் விதை

அந்த மரத்திற்கு அருகிலேயே

விழுந்து கிடக்கிறது...

அந்தவொரு அந்தி மாலையில்

பெய்த மழையில்

மண்ணில் புதைந்து

பக்குவமடைந்து

சில நாட்கள் கழித்து

சில துளிர் முட்டி மோதி

வெளியே தலைக் காட்டுவதை

பார்த்த அந்த தாய் மரம்

மௌனமாக 

ஆனந்த கண்ணீரோடு

அந்த பறவைக்கு தன் இலைகள் அசைத்து சிறு ஒலியால்

நன்றி சொல்வதை பார்த்து

அந்த பறவை 

தன் சிறகுகளை படபடத்து

குதூகலித்து

என் பசியை தீர்த்த தாய் நீ

உன் நிழலில் நான்

இளைப்பாறுகிறேன்...


எனக்கு என்று 

பெரும் வசிப்பிடத்தை

தாயுள்ளத்தோடு கொடுத்து

உணவும் கொடுத்து

ஆதரிக்கும் நீ

அந்த சிறு துளிரோடு

கூடிய செடிக்கு மட்டுமா தாய்

எனக்கும் தான் என்று

சிறு கண்ணீரில்

அந்த கிளையை நனைத்தது...


இந்த அற்புதமான தருணத்தை

வேடிக்கை பார்த்துக் கொண்டே

நகர்ந்த காலம் 

இயற்கையின் சூட்சமம்

எப்போதும் கருணையாக 

இப்படி ஒன்றோடொன்று 

பின்னிப் பிணைந்து இருக்க

மனிதர்கள் மட்டும் ஏன்

மனம் முழுவதும் வஞ்சம் 

நிறைத்து கருணை என்ற

குணாதிசயம் வறண்டு

இந்த பூமியில்

இங்கும் அங்கும் ஓடி

பெரும் அதிர்வில்

இந்த பிரபஞ்சத்தை

நடுக்கத்தில் உழல

செய்கிறார்கள்...என்று

யோசித்தபடியே

பெரும் மூச்சோடு

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா‌

நாள்:07/02/16.





காலத்தின் இடைவெளியில் எங்கே தொலைந்தது அந்த பனிக் காலம்?


இயற்கையை ரசித்துக்கொண்டே

நகர்கிறேன்...

அந்த வயல் வெளியினூடே

படர்ந்து கிடந்த புல்வெளி

பாதத்திற்கு இதத்தை கொடுக்க

புல்வெளியில் படர்ந்த பனித்துளியை

ரசித்துக்கொண்டே...

அந்த பனி படர்ந்து கிடந்த

 காலை வேளையை

அப்படி என்னால் மறந்து விட

முடியாது...


கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு தெரியாமல் கரைகின்ற

காலத்தின் இடைவெளியில்

எங்கே தொலைந்தது

அந்த பனிக் காலம் என்று

தேடி அலைகிறேன்...


இதோ இப்போது சுட்டெரிக்கும்

வெயிலின் தாக்கத்தில்

அந்த புல்வெளியில் படர்ந்த

பனித் துளி 

என் தாகம் தீர்க்காமல்

எங்கே மறைந்துக் கொண்டு

கண்ணாமூச்சி ஆடுகிறது என்று

கேள்வி கணைகள்

என் நெஞ்சில் எழுகிறது...


அந்த பயிர் அறுவடை

செய்த வெற்று காட்டில்

வெயிலின் வெம்மை தாங்காமல்

அந்த தென்னங்கீற்றின் 

ஒற்றை நிழலில்

ஒடுங்கிக் கொள்ள

பெரும் பிரயத்தனப்படும் போது

எங்கெங்கோ சிதறிக் கிடந்த

கருமேகங்கள் ஒன்று திரண்டு

நான் உழைத்த அந்த மண்ணை

நனைத்தது

அந்த கோடை மழை...


இங்கே இயற்கை அன்னையின்

பெரும் அமுதின் திரளில்

நான் நனைந்து 

பெரும் உற்சாகம்

அடைவதை பார்த்து

என் பரவசத்தின் உச்சத்தில்

அந்த கோடை மழையும்

கொஞ்சம் சிலிர்த்து தான் போனது..


இங்கே இயற்கையின் 

பெரும் கருணையின் சூட்சமத்தை

அந்த நொடியில் உணர்ந்து

பெரும் அமைதிக் கொண்டு

அந்த மழையாடலை

ரசித்துக் கிடக்கிறேன்

மணிக்கணக்கில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/02/26.







போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...