ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

சனி, 29 அக்டோபர், 2022

இரவெனும் தேவதை


இரவெனும் தேவதையை

என்னுள்

அடக்கிக் கொண்டு 

சிறிது சிறிதாக

அதனோடு என்னை

பிணைத்துக் கொண்டு

பயணிக்கிறேன்..

இருள் கடுமையானதல்ல..

கடந்து செல்ல தேவையே

இல்லாத நொடிகள்

ஏதேனும் இருந்தால்

சொல்லுங்கள்..

நானும் அந்த தேவதையும்

எங்களை மறந்து

கிடக்க ஏங்கி தவிக்கிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.


ஏன் சமுத்திரத்தின் அமைதி கெட வேண்டும்?

 


என்னுள் கனன்று கொண்டு

இருக்கும் அந்தவொரு

விஷயத்தை சமுத்திரத்தில்

கரைத்து நிம்மதி அடைகிறேன்..

சமுத்திரமும் அந்த விஷயத்தின்

வீரியத்தால் தகிக்கிறது என்பதை

என் கால்களை நனைத்து செல்லும்

அலைகளில் உணர்கிறேன்..

அந்தவொரு விசயத்தை

நான் கடந்து செல்ல

ஏன் சமுத்திரத்தின் அமைதியை

கெடுக்க வேண்டும்??

என்னுள் நானே கேட்டுக் கொண்ட

அந்த நியாயமான கேள்விக்கு

இங்கே யார் பதில் சொல்லக் கூடும்?

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 20 அக்டோபர், 2022

மனதிரையின் வலி

 

இலேசான என் மனதிரையின்

விரிசலை பார்த்து

ஆன்மா அதிர்ந்தது..

நீயா என்று...

ஆம் என்றேன் வலி நிறைந்த

புன்னகையோடு...

இல்லை நீ அவ்வளவு

பலவீனமானவள் அல்ல என்று

தீர்க்கமாக சொன்னதை பார்த்து

நானும் உன்னை போல தான்

நம்ப மறுக்கிறேன் என்றேன்

என் வலிகளின் விரிசலை

மறைத்து...

#இளையவேணிகிருஷ்ணா.

காலமும் நானும்(3):-

 காலமும் நானும்:-



நான் மிகவும் சோகமாக இருப்பதை பார்த்து காலம் ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய் என்று ஆறுதலாக கேட்டது.. நான் ஒன்றும் இல்லை என்று சமாளித்தேன்.. இல்லை நீ இப்படி சோகமாக இருந்து நான் பார்த்தது இல்லை என்றது.. என்னோடு பயணிக்கும் மனிதர்களை விட காலம் என்னை உன்னிப்பாக கவனித்து வருவதை நினைத்து கொஞ்சம் பெருமையாக இருந்தது..

நீ எனக்கு ஒரு உதவி செய்வாயா என்று கேட்டேன்.. என்ன சொல் என்றது மிகவும் பரபரப்பாக.. அந்த பரபரப்பு என் மீது அது கொண்ட பேரன்பு என்பதை என்னால் உணர முடிந்தது.. என்னிடம் இருந்து கொஞ்சம் கூட தர்ம சிந்தனை இல்லாதவர்களை விலக்கி விடு என்றேன்.. ஏன் அப்படி சொல்கிறாய்?.

இங்கே சூரியன் வெறுப்பு வெறுப்பற்ற நிலையில் தானே பயணிக்கிறது..அதே போல நீ இருந்து விடு என்றது..

ஆனால் நான் அவர்களோடு பயணிக்கும் போது என் தர்ம சிந்தனை கொஞ்சம் கொஞ்சமாக என்னையும் அறியாமலேயே விடுபட்டு விடுமோ என்று எனக்கு பயமாக உள்ளது என்றேன்.

உன்னால் அப்படி இருக்க முடியாது.. எனக்கு அது நன்றாக தெரியும்..உன்னை பற்றி உன்னை விட எனக்கு தான் தெரியும் என்றது கொஞ்சம் புன்னகைத்து..

நான் அதன் புன்னகையில் சிறு ஆறுதல் அடைந்தேன்..

#இளையவேணிகிருஷ்ணா.

#காலமும்நானும்

வெள்ளி, 14 அக்டோபர், 2022

காலத்தின இரங்கற்பா


 இருளுக்கு மிக நீண்ட

இரங்கற்பா எழுதிக் கொண்டு

இருக்கும் போதே

அங்கே பகல் வந்து

எனக்கும் இரங்கற்பா எழுது என்று

கெஞ்சுகிறது..

இப்படியே இரங்கற்பா எழுதி எழுதி

ஓய்ந்து இந்த பிரபஞ்சத்திலிருந்து

விடை பெறும் போது

காலம் எனக்கு இரங்கற்பா

மௌனமாக எழுதி விடுகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.

எதிலும் நன்மையே



இருளை வெறுக்காதீர்கள்..

அதோ அங்கே உங்களை

கடந்து செல்லும் 

மின்மினி பூச்சை

நீங்கள் மெய் மறந்து

ரசித்து பார்ப்பதற்கு

இருள் காரணம்...

#இளையவேணிகிருஷ்ணா.
 

சற்று முன் தான்..

 

நான் மனிதர்களை தானே

படைத்தேன்..

எங்கே மனிதர்கள் என்று

இறைவன் கேட்கிறார்..

அதற்கு காலம் நீங்கள்

பார்த்துக் கொண்டு

இருப்பது மனிதர்கள் தான்

சற்று கொஞ்ச காலத்திற்கு 

முன்பு தான்

வாழ்வியலின் சிக்கலில்

ரோபோவாக 

மாறி விட்டார்கள் என்றது

மிகவும் நிதானமாக..

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 12 அக்டோபர், 2022

மாய நதி


 அந்த வாழ்வெனும்

மாய நதி இழுத்து செல்கிறது

என் அனுமதி பெறாமலேயே

நான் வழி முழுவதும்

கேட்கும் கேள்விகளுக்கு

அந்த நதியின் கரை

பதில் சொல்ல

எத்தனிக்கும் போது

அந்த மாய நதி கண்களால்

அந்த அதை மிரட்டி

என்னை கொஞ்சம்

இன்னும் இறுக்கமாக

அதற்குள் அழுத்தி

மூச்சு திணற 

இழுத்து செல்வதை பார்த்து

என் சுற்றத்தார் கைகொட்டி

சிரித்து வைக்கிறார்கள்

கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த விசும்பலின் சத்தம்


கொஞ்சம்

உங்கள் வாழ்வின் சுவை

தீர்வதற்கு முன்பே

நன்றாக 

ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்

இங்கே 

ஓடிக் கொண்டே இருப்பதால் 

உங்கள் ஆனந்தமான தருணத்தை

ஆலையில் இட்ட கரும்பை போல

துன்புறுத்துகிறீர்கள்...

அதன் மௌனமான வலியை

உங்களால் 

உணர முடியவில்லையா?

எப்படி உணர்வீர்கள்

நீங்கள் தான் கண் மண் தெரியாமல்

ஓடுவதிலேயே குறியாக

இருக்கிறீர்களே...

ஆனந்தத்தை தேடி ஓடுவதாக

சொல்கிறீர்கள்..

ஆனால் ஆனந்தமோ 

நீங்கள் ஓடிக் கொண்டிருக்கும் 

காலடியில் சத்தம் இல்லாமல்

நசுங்கி சிறு விசும்பலை

வெளிப்படுத்துகிறது..

நீங்கள் ஆரவாரமாக ஓடிக் 

கொண்டிருக்கும் போது 

எப்படி அந்த விசும்பலின்

சத்தம் உங்கள் செவிகளுக்கு கேட்கும்

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.



இரண்டு வித உணர்வுகள்


 வேண்டும் என்பதற்கும் 

வேண்டாம் என்பதற்கும்

ஒரு மெல்லிய கோடு தான்

இடையில் இருக்கிறது..

வேண்டும் என்பதை நீங்கள்

தேர்ந்தெடுத்து விட்டால்

பெரும் சலனம் ஆட்கொள்கிறது

வேண்டாம் என்று விட்டு விட்டால்

பெரும் அமைதி சூழ்கிறது..

இதை உணர்ந்துக் கொண்டு

பயணிக்கும் போது வாழ்வின்

ஆனந்தத்தை சுவைக்க முடிகிறது..

#இளையவேணிகிருஷ்ணா.


அந்த வித்தியாசமான சுவையில்

 

வாழ்வின் பெரும்பாலான

சுவைகளை சுவைத்து சுவைத்து 

எனக்கு சலிப்பை தந்து விட்டது..

இதோ எல்லா சுவைகளையும்

உணர்ந்த நான்

ஏதோவொரு சுவை சுவைக்க

மறந்து விட்டதாக

என் உள்ளுணர்வு சொல்ல

 தேடி அலைகிறேன்

அது ஒரு வித்தியாசமான 

சுவையாக இருக்கக் கூடும்..

அப்படி இல்லை என்றாலும்

சராசரி வாழ்வில் இருந்து

கொஞ்சம்

ஆசுவாசப்படுத்திக் கொள்ளவேனும்

உதவக் கூடும் என்று

இதோ இங்கே என் பயணத்தை

தொடங்கி தேடி அலைகிறேன்..

எந்தவித சலனமும் இல்லாமல்..

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 2 அக்டோபர், 2022

நமது ஸனாதான தர்மம் சொல்வது என்ன?


 இரவு சிந்தனை:-

நமது ஸனாதான தர்மத்தை பற்றி தவறான புரிதலோடு தான் இங்கே பலபேர் பயணிக்கிறோம்.. உதாரணமாக தர்ப்பணம் கொடுக்க பிள்ளை இல்லை என்றால் அந்த வம்சத்தின் முன்னோர்கள் நரகத்தில் உழல்வார்கள் என்று சொல்கிறது.. அதேவேளையில் அந்த வம்சத்தில் சகோதரர்களோடு பிறந்த ஒருவருக்கு குழந்தை இருந்தால் அது மற்ற உடன்பிறப்புகளுக்கும் வாரிசு தான்.. அதனால் பிள்ளை பேறு அண்ணன் தம்பி எவருக்கேனும் ஒருவருக்கு குழந்தை இருந்து மற்றவருக்கு பிள்ளை பேறு இல்லை என்றால் அவர்களை தூற்றுபவர்களை பாவம் வந்து சேரும் என்று சொல்கிறது...இதை எத்தனை பேர் நம்முள் புரிந்து கொண்டு இருக்கிறோம் என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வோம்..இது கருட புராணத்தில் உள்ளது.. இந்த விளக்கம்..சரி இதை விட்டு விட்டு அடுத்த விசயத்திற்கு வருவோம்..

ஒரு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தையின் தலையில் கை வைத்து பெற்ற அந்த தாய் இனி எந்த கருவறையிலும் புகாதாவாறு ஆசீர்வாதம் செய்து அழ வேண்டும் என்று நமது ஸனாதான தர்மம் சொல்கிறது.. ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்..இதை எத்தனை பேர் கடைபிடிக்கிறோம்.. இந்த உலகில் மிகவும் உயர்ந்த தத்துவத்தை நமது ஸனாதான தர்மத்தை தவிர வேறு எந்த எதுவும் சொல்லவில்லை.

இங்கே ஒரு விசயத்தை கவனியுங்கள்.. ஒரு பக்கம் ஒரு குடும்பத்தில் சந்ததி இல்லை என்றால் நரகம் என்று சொன்ன நமது ஸனாதான தர்மம் மறுபக்கம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த ஆன்மா எந்த கருவறையிலும் புகாதவாறு தாய் ஆசீர்வாதம் செய்ய சொல்கிறது.. ஏன் அப்படி சொல்கிறது.. ஒரு தாயின் ஆசீர்வாதம் பலித்து அவன் பிறவி சூழல் இதில் இருந்தாவது முக்தி பெறாதா என்று தான்.. இப்படி ஆழ்ந்த தத்துவம் உள்ள ஸனாதான தர்மத்தை நன்றாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்.. வாய்க்கு வந்த படி எவரேனும் பேசினால் நீங்களும் தரம் தாழ்ந்து சண்டைக்கு போகாமல் அதற்கான விளக்கத்தை கொடுக்க முயற்சி செய்யுங்கள்...

#நம் #தர்மம்

#நம் #வாழ்வியல் 

#இளையவேணிகிருஷ்ணா.

இன்றைய தலையங்கம்

  இன்றைய தலையங்கம்:- யாரோ பிரிகிறார்கள் சேர்கிறார்கள்... ஏன் அவர்கள் தனிப்பட்ட வாழ்வில் பொது ஜனங்கள் தலையிட்டு ஏதேதோ கருத்து சொல்லி அவர்களை ...