ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 30 மார்ச், 2026

நானும் என் வீடும் அந்த குருவியும்...


என்னை நானே அறியாமல் 

மிகவும் கூர்மையான பார்வையால் 

உற்று பார்க்கிறது என் வீடு..


நான் என்னை மறந்து பாடும் 

பாடல்களை மெய் மறந்து 

ரசித்து கேட்கிறது 

தனது கூர்மையான கேட்கும் திறன் கொண்ட செவிகளால்...

அந்த சுவர்கள்!


என் வாழ்வின் இன்பங்களை 

நான் நுகரும் போது 

அது அமைதியாக 

நிம்மதியடைகிறது...


நான் ஏதோ எனது சொந்தங்களின் 

ஏச்சு பேச்சில் 

காயப்படும் போதெல்லாம் 

துயருற்று சத்தம் இல்லாமல் 

கண்ணீர் வடிக்கிறது!


இங்கே என் கால்கள் நடக்கும் 

சத்தத்தில் எல்லாம் 

பெரும் நிம்மதியடைந்து 

பெரும் ஆறுதல் கொள்கிறது...


நான் தினமும் செய்து வரும் 

தான தர்ம செயல்களில் எல்லாம் 

தனது சுவாசத்தை 

புதுப்பித்துக் கொள்கிறது...


இந்த நிகழ்வுகள் எல்லாம் 

அன்றொரு நாள் சத்தம் இல்லாமல் 

நின்று போனதை 

அது அன்று நிலவிய அசாதாரண சூழலில் புரிந்துக் கொண்டு 

பெரும் அதிர்ச்சி அடைந்தது...


எது எப்படியோ நான் சூட்சமமாக 

அதனிடம் என் பூமி வருகை 

பதிவை முடித்துக் கொண்ட 

செய்தியை அதனிடம் 

தட்டு தடுமாறி சொல்லி முடித்த 

தருணத்தில் 

என் உயிர் சுதந்திரமாக பிரிந்து 

அந்த வீட்டில் இருந்து 

மெல்ல மெல்ல விலகியது...


அங்கே நான் சுடுகாட்டில் 

எரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அந்த வீட்டின் உரிமை 

வேறொருவருக்கு அடி மாட்டு 

விலைக்கு கை மாறியது...


ஏன் இவ்வளவு 

மோசமான விலை என்று 

அங்கே யாரோ கேட்கிறார்கள் 

அதற்கு அது வம்ச விருத்தி 

இல்லாத வீடு என்று 

யாரோ யதார்த்தமாக

சொல்லி செல்வதை பார்த்து 


அந்த வீடு அதே நொடியில் 

பூகம்பம் தாக்கியதை போல 

சடசடவென தரை மட்டமாகியதை 

பார்த்து அங்கே இருந்தவர்கள் 

பெரும் அதிர்ச்சி கொள்கிறார்கள்..


இங்கே கடும் அக்னியில் 

வெந்து கொண்டிருந்த நான் 

அந்த வீட்டின் பிரியத்தில் 

பெரும் கண்ணீர் உகுத்து 

நெருப்பை அணைக்கிறேன்...


இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்த 

மனிதர்கள் ஏதோவொரு 

ரகசிய ஒப்பந்தம் அந்த வீடும் 

நானும் போட்டுக் கொண்டதாக 

கிசுகிசுத்து கலைந்து செல்லும் போது 


அந்த வீட்டில் வசித்து வந்த குருவி 

சிறு முனகலோடு 

இடிந்த சுவர்கள் மீதேறி 

மேலே வந்து அவர்களை 

வேடிக்கை பார்த்தது...

இங்கே அந்த குருவி தான் 

வம்ச விருத்தியின் எச்சம் என்று 

எத்தனை பேர் புரிந்துக் கொண்டு 

இருப்பார்கள் என்று 

அந்த வீடு மெல்லிய 

குரலில் 

கேட்டு விட்டு தன் உயிரை 

தியாகம் செய்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/26.




தொலைதூரம் போக நினைக்கும் மனது...

 


எத்தனையோ 

யோசனைக்கு பிறகு 

நாம் எடுக்க போகும் 

முடிவு என்று 

ஏதேதோ பீடிகை போடுகிறாய் 

என் எதிரே அமர்ந்து 

மணிக்கணக்காக...


இணைந்து வாழ்ந்த 

வாழ்வின் சுவை 

அப்படி ஒன்றும் 

கசந்து விடவில்லை!

என்று இடையில் 

சொல்கிறாய்...


என்றோ வாங்கிய பழத்தில் 

ஒரு சிறு அழுகல் கண்டு 

தற்போது அந்த பழத்தை 

நொந்து பயனில்லை...

என்கிறாய்!


ஏதோவொரு தருணத்தில் 

கடுமையான முடிவுகளை 

எடுத்தேயாக வேண்டிய 

தருணத்தில் நாம் 

இருக்கிறோம் என்று 

நீ சொல்கிறாய்...


இப்படி ஏதேதோ காரணங்களை 

தேடி தேடி சொல்லி 

என்னை விட்டு 

தொலைதூர போக நினைக்கும் 

உன் மனதை புரிந்து கொள்ள 

முடியாமல் இல்லை...


இத்தனை தூரம் 

நீ மணிக்கணக்கில் 

என்னிடம் பேசிய போதும் 

நீ தினம் தினம் 

மறக்காமல் 

பெரும் காதலோடு 

எனக்கு தந்த 

உன் ஈர முத்தத்தை 

நான் என்ன செய்வது என்று 

மட்டும் சொல்ல மறந்து விட்டாயா 

அல்லது வேண்டும் என்றே 


உன் அடையாள நினைவாக 

என்னை துன்புறுத்தி பார்க்க 

அதை அப்படியே விட்டு விட்டு 

சென்று விட்டாயா என்று 

மட்டும் 

சொல்லி விட்டு செல் 

என் தீராத காதலே!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/2026.

வெள்ளி, 13 மார்ச், 2026

இன்றைய தலையங்கம்: எம்.பி.கனிமொழியை விளாசிய விளாத்திகுளம் மக்கள்

 


இன்றைய தலையங்கம்:-

சமூக சீர்கேடு மற்றும் தரம் தாழ்ந்த மாநிலமாக சுய ஒழுக்கத்தில் இருந்து விலகி செல்கிறதா தமிழ் நாடு?


ஆழ்ந்த உணர்வு பெருக்குக்கு முன்னால் உங்கள் அலங்கார அரசியல் அறிக்கையோ காசு பணம் துட்டு எல்லாம் வேலை செய்யாது என்பதை விளாத்திகுளம் நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது...

முந்தைய அதிமுக அரசை டாஸ்மாக் விஷயத்திற்காக சரமாரியாக கேள்வி கேட்ட கனிமொழி எம்.பி தற்போது அதே விசயத்திற்காக மக்கள் எழுச்சியால் பயந்து காவலர் துணையோடு மீண்டு சென்று இருக்கிறார்...

கர்மா எப்போதும் தருணம் பார்த்து திருப்பி அடிக்கும்... கனிமொழி எம்.பி அவர்களே!

ஆளும் அரசை தங்களது சகோதரன் தானே வழி நடத்துகிறார் அதுவும் காவல் துறை அவரது கைகளில் கொண்டு...

நீங்கள் யதார்த்தமான உண்மையை சில வருடங்களுக்கு முன்பே எடுத்து சொல்லி புரிய வைத்து இருந்தால் உங்களுக்கு தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த மோசமான அருவருக்கத்தக்க நிலை மக்களிடையே அவமானப்படும் நிலை வந்து இருக்காது...

போதை கலாச்சாரம் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு விதமான பயத்தை கொடுத்து இருக்கிறது...

யதார்த்ததை இனியாவது உணருங்கள்...


எதை எடுத்தாலும் வட இந்தியாவை உதாரணம் காட்டி பேசுவதை நிறுத்துங்கள்...

இது உங்கள் தவறை மறைக்கும் தந்திரம் என்று உணருங்கள்...

எப்படி அறிவார்ந்த சமூகத்தை தங்களது ஆட்சியில் மிகவும் கீழ்த்தரமான மாநிலமாக மாற்றி வைத்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா...


முதலில் நீங்கள் ஒரு பெண் பிறகு தான் நீங்கள் ஒரு எம்.பி.


சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று பல வருடங்களாக முன்னாள் முதல்வர் எடப்பாடி சொல்லும் போதெல்லாம் தாங்கள் அனைவரும் கேலி கிண்டல் செய்து அதை சரி செய்ய முனையாததன் விளைவு இது...

ஆமாம் நீங்கள் உங்கள் சகோதரர் என்ன மாதிரியான அரசியல் கற்றுக் கொண்டு அரசியல் களத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்...


மக்களுக்கு தேவை எப்போதும் நிம்மதியான அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை மட்டுமே.. மற்றபடி உங்களை போன்ற ஆடம்பர வாழ்க்கையை அல்ல...


மக்களுக்காக தான் நீங்கள்..

உங்களுக்காக மக்கள் இல்லை...

#சட்டம்ஒழுங்கு

#பெண்பாதுகாப்பு

#சமூகபாதுகாப்பு.

#இன்றைய தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/03/26.

திங்கள், 2 மார்ச், 2026

அலாதி சுவை...

 





வாழ்வின் சுவையை

சிறிதும் உணர 

காலம் இல்லாமல்

தீவிர ஓட்டத்தில்

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


எந்தவித எதிர்பார்ப்பும்

இல்லாமல்

கதிரவன் உதிப்பதற்குள்

எழுந்து

அது மறையும் வரை

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


கதிரவனின் உதயத்தில்

மிளிரும் ஒளியை

ரசிக்க சிறு நொடியும்

இல்லை...


இளம் காலைப் பொழுதில்

வானை அளந்து செல்லும்

பறவைகளின் சிறகை 

நின்று நிதானித்து

சிறிது நேரம்

அதை கண்களில்

நிறைத்துக் கொள்ள

நேரமில்லை...


அதோ அங்கே அன்றொரு நாள்

நான் சில ரொட்டி துண்டுகள்

போட்ட நினைவில்

என்னை மறக்காமல்

என் பின்னால் பெரும் பாசத்தோடு

ஓடி வரும் நாயின்

பேரன்பை உணர மனமில்லாமல்

அதை வெறுப்போடு

பார்த்து கடந்து செல்கிறேன்

என் அலுவலகத்தில்

மேலாளர் வசைகளுக்கு

அஞ்சி...


இப்படியே போகிறது

வாழ்க்கை என்று

வெறுப்பாக எண்ணியபடியே

ஒரு ஆசுவாசத்திற்காக

தேநீர் பருக

அலுவலகத்தை விட்டு 

வெளியே

அந்த சாலையில்

நடந்து செல்லும் போது

கடும் வெயிலின் தாக்கத்தில்

அப்படியே நிழலை

தேடி அலைகிறேன்...

மிகவும் சோர்வாக...


ஒரு சிறு நிழலை தேடி

கண்கள் என்னையும்

அறியாமல் தேடும் போது...


ஒரு சிறு மரம்

தனது கிளைகளில் உள்ள 

இலைகளை அசைத்து

இங்கே வா

சிறிது இளைப்பாற

நிழலெனும் மடியை

தருகிறேன் என்று

தாயன்போடு 

அழைக்கும் போது...


நான் வேக வேகமாக

ஓடி அந்த நிழலெனும்

மடியில் 

அடைக்கலம் ஆகி

சிறிது இளைப்பாறும் போது...


அதன் ஒரு சிறு கிளையில்

அமர்ந்து இரு குருவிகள்

கீச் கீச்சென்று சத்தமிட்டு

பேசுவதை கேட்டு விட்டு

தன்னை மறந்து

இயற்கையின் சுவையின்

ஒரு சிறு துளியை பருகி

அதன் அலாதி சுவையை

அன்று தான் உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/02/26.



ஞாயிறு, 1 மார்ச், 2026

உயிர் துளிகள்...

 உயிர் துளிகள்...



திடீரென்று எங்கிருந்தோ

சூழ்ந்துக் கொண்ட

போர் மேகங்களில்

பாலூட்டி வளர்த்த தாயின்

நேசத்தையும் 

தந்தையின் பாசத்தையும் உள்வாங்கிக் கொண்ட பூமியில்

தேடி அலைகிறார்கள்

இந்த ஒன்றும் அறியாத

கள்ளம் கபடமற்ற குழந்தைகள்...


தாம் வாழ்ந்த வீடுகளை

தன்னுள் வலுக்கட்டாயமாக

புதைத்துக் கொள்ளவில்லை

பூமி தாய் என்று

உணர்ந்தபோதும்

நியாயம் கேட்டு தவிக்கிறது

இங்கே இந்த குழந்தைகள்

திக்கற்ற நிலையில்

தவித்து நிற்கும் 

இந்த நிலையை 

காண சகியாமல்....


பல கனவுகளை தமக்குள்

சுமந்து மகிழ்வோடு

திரிந்த பட்டாம்பூச்சிகளின்

சிறகுகளில் இருந்து

அந்த வண்ணங்கள்

வலுக்கட்டாயமாக

பிய்த்து எடுக்கப்படுகிறது

கடும் மனதைக் கொண்ட கயவர்களின் போர் வாளால்...


இங்கே பிரபஞ்சத்தின்

நியாயமான முனகலோடு கூடிய

குரல் கேட்க நாதியற்று

கிடக்கிறது...

அந்த உயிரற்ற

கட்டிட இடிபாடுகளுக்குள்...


இங்கே பேரமைதிக் கொண்ட

பிரபஞ்சத்தின் ரசனையான

வசந்த வாழ்வை

சிதைத்து விட்டதில்

உங்களுக்கு அப்படி என்ன

அல்ப மகிழ்வு என்று...


ஒற்றை ஆளாக நான் இங்கே

கதறி

அழுவது மட்டும்

அந்த கயவர்களின் செவிகளில்

விழுமா என்ன என்று

என் ஆழ் மனதின் கேள்விக்கு

பதில் சொல்ல நாதி இல்லாமல்

அநாதையாக கிடக்கிறது...


அந்த அழுகையின் கண்ணீர்

செந்நீராக போர் மேகம் பொழிந்த

குண்டு மழையில் கலந்து விடுகிறது

சத்தம் இல்லாமல்...

வேறென்ன செய்ய இயலும்

அந்த ஒற்றை மனுஷியான

என்னால்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/03/26.






போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...