ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 மே, 2026

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...


என் உயிர் சுவாசத்தின் 

தீண்டலாக 

நீ என்னோடு 

ஒருவித கதகதப்போடு

ஜீவித்து இருக்கிறாய்...


ஒரு நகரத்தில் சாலை வெளியின் 

பரபரப்புக்குகளுக்கிடையே 

நகரும் 

பட்டாம்பூச்சியாக 

என் மனமெனும் சாலையில் 

நீ பறந்து செல்கிறாய்...


உன் வருகைக்காக 

காத்திருக்கும் நேரத்தின் 

நொடிகளுக்குள் 

ஒரு தேவதையாக 

என்னோடு அரூபமாக 

பேசி சிரிக்கிறாய்...


என் வனமெங்கும் 

உன் காதலெனும் 

பூவின் வாசத்தில் 

கிறங்கடிக்கிறாய்...


காலமெனும் நதியில் 

உன்னோடு பயணித்த 

நினைவுகளை தூவி 

நான் அந்த நதியின் கரையில் 

ஒதுங்கி அந்த நினைவுகளை 

காவல் காத்து சிறை 

பிடித்திருப்பேன்...


என்றோவொரு யுகத்தில் 

நீ என் பெரும் காதலே காதலே 

என்று கண்ணீர் மல்க 

ஓடோடி வந்து 

என்னை அணைத்துக் கொண்டு 

அந்த நதியை என்னிடம் இருந்து 

விடுதலை செய்வாய் என்ற 

நம்பிக்கையோடு 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/05/26.






செவ்வாய், 26 மே, 2026

அந்த அமிர்த கடலில் மூழ்கி களித்த நாட்கள்...


பெரும் புயலே அடித்தாலும் 

கவலைகளின் நிழலில் 

எப்போதும் 

ஒதுங்கியதாக 

எனக்கு நினைவில் இல்லை...


ஒரு கணப் பொழுதிலும் 

மகிழ்ச்சி எனும் 

உணர்வெனும் ஆற்றில் 

நனைந்த நாட்களை 

நினைக்க 

தவறியதில்லை...


நட்பெனும் கரத்தின் பிடியை 

எவர் இரும்பு கரம் கொண்டு 

தடுத்து நிறுத்தினாலும் 

உறுதியாக அந்த கரத்தை 

இறுக பற்றிக் கொண்டேனே தவிர

அதை நழுவ விட்டதில்லை...


இப்படி காலமே ஆச்சரியமாக 

அதிர்ந்து பார்க்கும் 

பல நிகழ்வுகள் 

இப்போதும் நினைவில் இருந்து 

இறங்க மறுக்கிறது...


அதெல்லாம் என் இளமையின் 

துணைக் கொண்டு 

அந்த இளம் பருவ குளத்தில் 

குதியாட்டம் போட்டு...


வாழ்வை ஒரு சிறு பகுதியும் 

விடாமல் ரசித்து ருசித்து 

மகிழ்ந்து குதியாட்டம் போட்ட 

மறக்க முடியாத 

என் வாழ்வின் அமிர்த கடலென 

பரந்து விரிந்து 

கிடந்த நாட்கள்...


மீண்டும் அந்த அமிர்த கடலில் 

மூழ்கி கிடக்கும் 

பாக்கியத்தை 

ஏங்கி தவிக்கும் 

என் நிலையை...


இப்போது 

அந்த காலம் புரிந்துக் கொண்டு 

புன்முறுவலோடு 

தலையசைத்து 

மௌனமாக கடந்து செல்கிறது 

மீண்டும் அந்த நாட்களை 

மீட்டு கொண்டு வருவேன் என்று 

உறுதிமொழி அளிக்க 

மனமில்லாமலேயே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/05/26.

வெள்ளி, 8 மே, 2026

அன்பான விஜய் அண்ணாவுக்கு ஒரு கடிதம்...

 


அன்பான விஜய் அண்ணா 

நாளை தாங்கள் பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்கள் 🎉 

நாளை சனிக்கிழமை... மக்கள் சேவைக்கு உகந்த நாள்...

எப்போதும் சனி கடும் உழைப்பாளி... மேலும் அவர் கீழ் மட்டத்தில் உள்ள சாதாரண மக்களோடு எப்போதும் சுற்றுபவர்...

அவருக்கு கண்ணாடி மாளிகையில் இருந்துக்கொண்டு எதையும் செய்ய பிடிக்காது...

காசு பணம் பதவி மரியாதைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...

அவருக்கு தேவை நீதி நேர்மை மட்டும் தான்...

அகங்காரம் ஒரு சிறு துளி இருந்தாலும் அதை நசுக்கி விட்டு எதுவுமே நடக்காதது போல தனது பாதையில் செல்பவர்...

நிற்க...

ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் சொல்ல தான் இந்த கடிதம்..

அது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ராகுவின் அம்சம்... லாட்டரி டிக்கெட் விற்பவர் ஒருவர்...அது ராகுவின் அம்சம்..

அந்த ராகுவின் அம்சத்தை முதலில் நீங்கள் கழற்றி விட வேண்டும்...கலியுக ராஜா அவர்...

இந்த கலியுக ராஜா என்ன செய்வார் என்று போக போக தெரியும்... அந்த போக போக தெரிவதை விட நீங்கள் முதலிலேயே இவரை கழற்றி விட்டு விடுங்கள்...

அடுத்து புஸ்ஸி ஆனந்த்... இவர் விஸ்வ கர்மா அல்லவா... ஒரு விஸ்வகர்மாவால் தான் ஒரு அழகான மாளிகை பாண்டவர்களுக்கு உருவானது... அவர் ஏதோ பாண்டவர்கள் மீது உள்ள பேரன்பில் ஒரு மாய மாளிகை கட்டி கொடுத்து விட்டார்... அந்த மாளிகையினால் அகங்காரம் கொண்ட பாஞ்சாலி துரியோதனனை வம்புக்கு இழுத்து மகாபாரதம் எனும் பெரும் போருக்கு காரண கர்த்தா ஆக்கி விட்டு விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார்...

அப்புறம் ஒருவர் இருக்கிறார்...

அவர் யார் என்றால் செங்கோட்டையன்..இவர் சகுனி அம்சம்... அவர் வழிகாட்டுதல் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் உங்களை நிச்சயமாக அவர் அதாள பாதாளத்தில் தள்ளி விட்டு சிரித்துக்கொண்டே போய் விடுவார்...

பிறகு பெண்கள் ஓட்டு பெரும்பாலான சதவீதத்தில் வாங்கி வெற்றி பெற்று இருக்கிறீர்கள்... இவர்களும் ராகுவின் அம்சம் தான்.. இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.. இல்லை என்றால் அவர்கள் சீற்றம் உங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தி விடும்...

அதனால் நீங்கள் உங்களை சுற்றி உள்ள கலியுக ராஜாக்களை கழற்றி விட்டு மக்கள் தொண்டே மகேஸன் தொண்டு என்று தொடர்ந்து உங்கள் பயணத்தில் தெளிவான பாதை வகுத்துக் கொண்டு நேர்மையாக அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து ஆட்சி நடத்த வேண்டும்...

இரண்டு எதிர் கட்சிகள் சட்டசபையில்... அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.. இந்த சோதனையை எல்லாம் அவர்களே சந்தித்தது இல்லை என்பது தான் உண்மை... ஆனால் நீங்கள் இந்த இரும் பெரும் கட்சிகளை சமாளித்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மனம் கோணாதபடியும் நடந்து மிகவும் வேகமாக சாலையில் போகும் போது திடீரென ஒரு சிகப்பு லைட் விழுந்து நம்மை நிலைதடுமாற வைக்குமே அப்படி மத்தியில் உள்ள அரசு எனும் டிராபிக் போலீஸ்...

இப்படி இவர்கள் எல்லோரையுமே சமாளித்து நீங்கள் இந்த ஒரு ஐந்து வருடம் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சர்...

ஆம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்...

இந்த பத்திரிகை சந்திப்பில் எல்லாம் நீங்கள் நிச்சயமாக கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.. இல்லை என்றால் பெரும் விமர்சனத்தை சந்திப்பீர்கள்... அது நீங்கள் முன்னாடியே தயாராக வைத்துக் கொண்ட கேள்வி பதிலாக கூட இருக்கலாம்... ஏனெனில் கடந்த காலங்களில் அப்படி தான் நடந்தது...

இல்லை இல்லை நான் பத்திரிகையாளரையே சந்திக்க மாட்டேன் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா அல்ல...

ஜெயலலிதாவை விட்டு விட்டு கலைஞரை தேடி போய் விடுவார்கள் அன்றைய பத்திரிகையாளர்...

இன்றைய நிலையில் இரண்டு எதிர் கட்சிகள் மூத்த தலைவர்கள் தேடி போய் உங்களை சிக்கலில் மாட்டி விடும் கேள்விகள் அவர்களிடம் கேட்டு பதில் வாங்கி விட்டு அதை தலைப்பு செய்தியாக போட்டு விட்டு இதற்கு நீங்கள் பதில் அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி இதற்காவது முதலமைச்சர் பதில் அளிப்பாரா என்று கேள்வி குறி போட்டு விட்டு மக்களை யோசிக்க வைத்து விடுவார்கள்...

எது எப்படியோ மக்கள் சார்பாக நீங்கள் நீண்ட நெடிய மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐🙌🙏.

✍️ #இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/05/26.

ஞாயிறு, 3 மே, 2026

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் அதீத அமைதி...

 




அந்த அற்புதமான உள் அலங்காரம் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி அறையானது ஒரு அதீத அமைதியின் பிடியில் சிக்கி தவிக்கிறதா என்று பார்த்தால் அந்த அறை அப்படி இல்லை அது அந்த மனிதர்கள் இல்லாத தனிமையை ரசித்து சுவர்களும்,கதவுகளும்,சன்னல்களும் ,மௌன மொழியில் பேசி சத்தம் இல்லாமல் சிரிக்கிறது...


சற்று முன் சில பெரிய அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் பேசி சென்ற ரகசியத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு தங்களுக்குள் அவர்கள் பேசியவிஷயங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்கள் முகத்திரையின் லட்சணத்தை பேசி கேலி செய்து பின்பு கடுமையான கண்டனங்கள் நிறைவேற்றியது... அது பேசி சென்ற அந்த மனிதர்கள் கண்களில் படாமல் அந்த அறையில் உள்ள சுவர்களில் ஒன்றில் இரகசியமாக வைத்துக் கொண்டது...


என்றோவொரு நாள் அல்ல பல சமயங்களில் பல கதைகள் அங்கே வேறு வேறு முகத் திரை போட்டு கொண்டு வித விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள் மணிக்கணக்கில் பேசி விட்டு மறக்காமல் வெளியே செல்லும் போது தமது இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு எதுவும் நடக்காதது போல செல்வதை அந்த அறை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கிடந்த நாட்கள் மிகவும் அதிகம்...


இதோ இன்று ஒருவன் அந்த விடுதி அறையை இன்ச் இன்சாக நோட்டமிட்டபடியே தோதாக ஒரு இடத்தில் எதையோ செருகி விட்டு மீண்டும் ஒரு முறை அது சரியாக பொருத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு தனது அலைபேசியில் யாரையோ அழைத்து கிசுகிசுப்பாக சங்கேத மொழியில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு அந்த செய்தியை எதிர் முனையில் பார்த்து விட்டதை உறுதி செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த தகவலை அழித்து விட்டு வெளியே சென்று விட்டான்...

அநேகமாக அவன் அந்த ஐந்து நட்சத்திர விடுதி பணியாளராக தான் இருப்பான் என்று அந்த அறை யூகித்து உணர்ந்துக் கொண்டது...


இப்போது அந்த அறைக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது... இப்போது நாம் மட்டும் தனியாக இல்லை.. தன்னோடு இன்னொரு வஸ்து இருக்கிறது... இப்பொழுது பேசப் பட போகும் விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டு அந்த நேரத்திற்காக மிகவும் ஆவலாக காத்திருந்தது...


இது வரை இந்த அறையில் பேசிய அதிகார மிக்கவர்கள் பேச்சு எங்கேயும் கசிந்தது இல்லை.. தற்போது வரை அது தான் அந்த அறையின் தனித்துவம் என்று பலரும் அது காது பட பேசி சிலாகித்த போதெல்லாம் அந்த அறைக்கு கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இன்று அப்படி இல்லை..இதோ அவன் ரகசியமாக வைத்த அந்த வஸ்து காட்டிக் கொடுத்து விடும் என்று கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தது..

எப்படியோ அதிகாரமிக்கவர்களின் மோசமான முகத்திரை கிழிந்து தொங்க போகிறது என்று என்றும் இல்லாத பெரும் மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தது...

இப்போது யாரோவொருவர் கதவை திறக்கும் சத்தம் கேட்டு காதை கூர்மையாக்கியது...


அங்கே சில அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி பணியாளர்கள் தனக்குள் பேசிக் கொள்வதை கேட்டு அதிர்ந்தது... அது அந்த அதிகார மிக்கவர்கள் அந்த அறையில் தங்கவில்லையாம்... சில பல அவசர பணி நிமித்தம் காரணமாக வேறொரு கீழ் தளத்தில் உள்ள அறையில் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்திக்க நினைத்த நபர்களை பார்த்து பேசி விட்டு செல்ல போகிறார்களாம்...

இப்போது அந்த அறைக்கு கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்ததுடன் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது..

அங்கே அந்த மனிதன் செருகி வைத்த வஸ்துவின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது...

அந்த பணியாளர்கள் இத்தனை அலங்காரங்களும் வீணாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்றார்கள்...

அப்போது அந்த வஸ்துவை வைத்த மனிதன் சிறிது நேரத்தில் வந்து அதை எடுத்துக் கொண்டு வெளியே பரிதாபமாக செல்வதை இப்போது அந்த அறை வேடிக்கை பார்த்தது மிகவும் பாவமாக...

ஆனால் இது நமது அறைக்கு துரதிருஷ்ட முத்திரை குத்தி விடுவார்களே என்று கூடுதல் கவலை அதற்கு வந்தது...

அதுசரி இது நாள் வரை இங்கே நடந்த பேரங்களை எப்படியேனும் வெளிப்படுத்த வேறொரு வாய்ப்பு வராமலா போகும் விடு என்று அங்கிருந்த சன்னல் அருகில் தொங்கிய திரைசீலை காற்றில் அசைந்து ஆறுதல் படுத்தியது அந்த அறையை... அந்த அறையும் சரிதான் என்று சன்னல் சொன்ன தேறுதல் மொழியில் அமைதியடைந்தது...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/02/26. 


வெள்ளி, 1 மே, 2026

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...


 ஜெயிப்பது தோற்பது 

பற்றி எல்லாம் நான் எப்போதும் 

கவலை கொண்டதில்லை!

நான் ஆழ்ந்த காதலோடு 

நேசிக்க மறந்து 

இயந்திரத்தனமாக எப்போதாவது 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த நேரத்தை நினைத்து தான் 

தடுமாறி கலங்கி இருக்கிறேன்... 

தொலைக்க கூடாத 

அந்த மதிப்பு மிக்க 

பொக்கிஷத்திற்காக...

நான் அழுது விடுவதை பார்த்து 

என்னவோ ஏதோ என்று 

பதறி விடுகிறார்கள் அங்கே 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

சில மனிதர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.

உயிரோட்டமாக ஜீவித்து இருக்கும் கலை...

 


ஏதேதோ தேடி ஓடிக் கொண்டே 

இருக்கும் மக்களின் 

தீராத அந்த நெடுந்தூர ஓட்டத்தின் 

எல்லை எது என்று 

தெரியவில்லை...


வறண்ட பாலைவனத்தில் 

தண்ணீர் தேடி அலையும் 

அந்த பறவைக்கு கூட 

ஒரு அர்த்தம் இருக்கிறது...

உயிர் மீட்டலின் வலி அது...

தன்னை தானே 

மாய்த்துக் கொள்ள 

மனம் இல்லாமல் 

இறுதி வரை 

போராடிக் கொண்டிருக்கும் 

தன் முனைப்பின் நம்பிக்கை அது...


அந்த பறவைக்கு இங்கே 

எதையும் தன் வசப்படுத்திக் கொள்ள 

தேவையில்லாத மனநிலை அது...

அதன் தேவை எல்லாம் 

தான் ஜீவித்து இருக்கும் 

காலத்தை உறுதி செய்துக் கொள்ள 

போராடும் நிலையது...


இங்கே அந்த சிறு பறவையோடு 

ஒப்பிட்டு பார்க்கும் போது கூட 

இங்கே ஈசல் போல 

இயந்திரத்தனமாக ஓடும் 

மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்!


இங்கே தன்னிறைவு எனும் 

மனநிலையை தாண்டி 

எதற்கும் மதிப்பில்லை என்று 

இத்தனை தூரம் 

நான் அந்த சாலையில் 

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் 

அந்த சிறு பூச்சியிடம் 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 


அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து 

ஒருவன் என்னை 

வேகமாக தள்ளியதும் அல்லாமல் பைத்தியம் தனியாக 

ஏன் இங்கே பேசுகிறாய்...

இங்கே பார் நாங்கள் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

நீ நட்ட நடுசாலையில் 

ஒன்றுக்கு உதவாமல் 

வெட்டிக் கதையை 

தன்னந்தனியாக பேசிக் கொண்டு 

இருக்கிறாய்..

நேரம் போனால் வராது...

தள்ளி நில் சித்தம் கலங்கியவனே 

என்று ஆக்ரோஷமாக 

கோபத்தை காட்டி விட்டு 

ஓடுகிறான்...


அவன் என்னிடம் பேசிய 

அந்த சில நிமிடங்களில் 

அவனோடு பிரயாணம் செய்த 

கூட்டம் அவன் ஒருத்தன் 

தன்னோடு பிரயாணம் 

செய்ததையே

மறந்து விட்டு புள்ளியாக 

மறைந்த போனார்கள்...


அவனோ என்னை திரும்பி 

முறைத்து பார்த்தான்...

நான் சலனமில்லாமல் 

அவனை நோக்கி ஒரு புன்னகையை 

உதிர்த்து விட்டு 

அந்த பூச்சிக்கு 

இன்னொரு தத்துவ சாரலை 

போதித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

அதுவும் மெல்ல ஊர்ந்து கொண்டே 

என் கதையை கேட்டு 

சலிப்பில்லாமல் 

தன் பயணத்தை 

புத்துணர்ச்சியோடு 

தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.







புத்தக பை சுமந்து பட்டாம்பூச்சியாக திரிந்த அந்த நாளில்...

 




புத்தக பை சுமந்து 

பட்டாம்பூச்சியாக திரிந்த 

அந்த காலத்தில் 

நினைவுகள் எல்லாம் 

மனதின் ஒரு மூலையில் 

தித்திக்கும் வெல்லமாக 

சிதறிக் கிடக்கிறது...


நானும் என் நண்பர்களும் 

விடுமுறை நாட்களில் 

ஓயாமல் சுற்றி சுற்றி வந்த 

அந்த ஆலமரத்தின் நிழல் 

மட்டும் ஒரு அடையாள சின்னமாக 

அங்கே ஊரின் நடு பகுதியில் 

எங்கள் வருகைக்காக 

ஏங்கி போவோர் வருவோரை 

உற்று உற்று பார்க்கிறது...


அந்தவொரு விடுமுறை நாளில் 

நான் மட்டும் நிறைய எலந்தை பழங்களை 

தன் பாவாடையில் நிறைத்து 

ஓடுவதை பார்த்து 

நீ என்னை துரத்தி வந்து 

அத்தனை பழங்களையும் 

சிதறடித்து சண்டை போட்டு 

என் பேச்சு கா விட்டு 

பேசாமல் வேகமாக சென்ற 

நாள் மட்டும் இன்னும் 

அப்படியே இருக்கிறது 

என் மனதின் சாலையில் 

ஒரு பெரும் பள்ளமாக...


அது நடந்து பல வருடங்களாகி 

விட்ட போதும்

இப்போதும் 

எங்கே எலந்தை பழங்களை 

பற்றிய பேச்சுக்கள் 

வந்தாலும் நீ அங்கே 

சத்தமில்லாமல் 

என் எதிரே கோபமாக 

நின்று விடுகிறாய்...


தற்போது நீ எங்கே என்று 

தெரியவில்லை என்றாலும் 

உனக்கு நம் சண்டை 

ஞாபகம் இருந்தால் 

எப்போதேனும் நாம் சந்திக்கும்

தருணத்தில் 

என்னிடம் பழம் விட்டு விடு...


நீ எனக்கு தந்த காயை 

வைத்துக் கொண்டு 

நான் படும் 

அவஸ்தையை பார்த்து 

இங்கே என்னை பலபேர் 

கேலி செய்கிறார்கள் 

என் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.


வியாழன், 30 ஏப்ரல், 2026

இத்தனை வன்மமும் எதற்காக??

 

 


என் மீதான 

காதல் உணர்வுகளில் 

ஒரு வித மையல் கொண்டு

என்னை நெருங்காதே...

உன் மீதான 

என் பெரும் காதலின் 

அலையில் நீ அடித்து 

சென்று நடுக் கடலில் 

தத்தளிக்கவும் கூடும்...


அந்த பரந்து விரிந்துள்ள 

பெரும் அடர்ந்த காட்டில் 

பயமின்றி ஒரு பட்டாம்பூச்சியாக 

நீ இங்கும் அங்கும் பறந்து 

செல்லும் போது கூட 

உன் இலேசான வண்ணமயமான 

சிறகை கொண்டு என்னை நீ 

தீண்டி நெருங்காதே...


அந்த சிறு தீண்டலில் கூட 

நான் பெரும் தீயாக தகித்து 

உன்னை என் காதலியின் தீயில் 

இரையாக்கி விடவும் கூடும்...

அதனால் என்னை விட்டு 

வெகுதூரம் நீ விலகியே இரு...


என் புழக்கடையில் பூத்திருக்கும் 

அந்த ரோஜா பூவை நான் 

என்னை மறந்து ரசிக்கிறேன் 

என்பதற்காக 

நீ அங்கே மலர துடிக்காதே...


நான் அந்த செடியில் உள்ள 

முள்ளாக உன் சதையை 

கிழித்து பெரிய ரணமாக 

காலம் முழுவதும் 

உன்னை வலியில் நான் 

துடிக்க விடவும் கூடும்...

அதனால் நீ அந்த மலராக 

மலர பெரிய ஆவல் கொள்ளாதே...


இத்தனை வன்மமும் எதற்காக 

என்று நீ அங்கே அழுத முகத்தோடு 

என் மீது கேள்வி கணைகளை

கேவிக் கொண்டே 

என் மீது எரிகிறாய்...


அத்தனையும் வன்மம் அல்ல 

அது நான் உன் மீது 

பெரும் பித்து பிடித்து 

ஒரு பைத்தியக்காரனாக

இங்கும் அங்கும் அலைந்து 

தொலையும் போது 


இந்த பிரபஞ்சம் முழுவதும் 

உன்னை கைநீட்டி 

குற்றம் சாட்டி 

நீ அந்த குற்ற உணர்ச்சியில் 

கரைந்து...


என் மீதான உன் பேரன்பு கொண்ட 

காதலின் சுவாசத்தை 

நிறுத்தி 

என்னை விட்டு 

வேறொரு உலகத்திற்கு 

சென்று விடக்கூடாது 

என்பதாலேயே 

எனக்கு நானே 

கொடுத்துக் கொள்ளும்/கொல்லும்

தண்டனையடி 

என் தீஞ்சுவை காதலே!!!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/04/26.









செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தோல்வி தரும் பெரும் ஆழ்ந்த மன அமைதி...


 பல முயற்சி எனும் 

அற்புதமான பூக்கள் 

கடும் வெப்பத்தால் 

கருகி வீழ்வது போல 

என் முன்னெடுப்பு 

நிகழ்வுகள் எல்லாம் 

என்னை துன்புறுத்தி 

மகிழ்ந்த போதும்...


பெரும் அற்புதமான 

அந்த அலையில்

கால் நனைத்தலில் 

நான் என்னை மறந்து 

இந்த சிருஷ்டிக்கு 

நன்றி சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 

அதே அலை என்னை 

கடலில் எங்கோ ஒரு மூலையில் 

என்னை 

இழுத்துக் கொண்டே போய் 

போட்டது போல 

தடுமாறி அதிர்ச்சி 

அடைந்த போதிலும்...


நான் எனக்கான 

சாதாரண உணவை 

பெரும் பிரயத்தனப்பட்டு

சாப்பிட அமரும் போது 

எங்கிருந்தோ வந்த நாய் 

அதை வேகமாக இழுத்துக் கொண்டு 

போய் என் வயிற்றின் அக்னியை 

மேலும் தகிப்பூட்டி 

நான் அதிர்ச்சியாக 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

இருப்பதை 

பலபேர் கலகலவென சிரித்து 

நான் அங்கே 

வேடிக்கை பொருளாக 

காட்சியளித்த போதும்...


நான் இங்கே இம்மியளவும் 

கலங்குவதே இல்லை...

இங்கே எனக்கு தோல்வி என்பதோ

என் முன்னெடுப்புகள் எல்லாம் 

கானல் நீராகுவதோ 

என்னை சற்றும் நிலைதடுமாறி 

கீழே விழாமல் 

மிகவும் கூடுதல் வலிமையாக 

நின்று கொண்டு தான் 

இருக்கிறேன்...


அந்த அற்புதங்கள் 

எல்லாம் நிகழ...

அத்தனையும் சாத்தியமாக...

எனக்கு உதவிய தோல்வி எனும் 

மனதை பக்குவப்படுத்திய 

நண்பனால் தான்

இயன்றது...

தோல்வி எனும் நண்பனின் 

கரம் பற்றி நான் எத்தனை தூரம் 

செல்வேன் என்று தெரியாது...

அது வெற்றிகரமாக 

கனியாகாவிட்டாலும் 

ஒரு வித ஆழ்ந்த 

பக்குவ நிலையை 

உணர்த்தி என்னுள் 

ஆழ்ந்த அமைதியை 

அனுபவிக்க 

உதவ தவறுவதில்லை...

அதனால் என் நிரந்தர தோழன் 

அவன் ...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/04/26.




ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முகமூடியின் மாய வித்தை...

 




பிரதிபலிக்க கூடாத 

இடங்களில் எல்லாம் 

உணர்வுகளை 

மறைக்கும் திரையாக 

பலபேருக்கு 

கை கொடுத்த போதும்...


எதிரிகளை எதிர் கொள்ள 

திராணி இருந்தும் 

அவர்களை கையாள 

ஒரு சூழ்ச்சியாக 

மறைந்துக் கொள்ள 

பயன்பட்ட போதும்...


சில நேரங்களில் ஓட்டுகளை 

அறுவடை செய்ய 

நேரத்திற்கு தகுந்தார் போல 

தயார் நிலையில் இருந்து 

அரசியல்வாதிகளுக்கு 

கடும் பிரயத்தனப்பட்டு

பாதுகாப்பு கொடுத்த போதும்...


சில உறவுகளின் குணங்களை 

பிடிக்காமல் 

ஒதுங்கிக் கொள்ள 

விகாரத்தில் தோன்றும் 

கடும் கோபத்தை

மறைத்து கொள்ள 

எளிமையாக உதவிய போதும் 

அவர்களால் 

பாதிப்பு ஏதும் நேர்ந்து விடாமல் 

அதை கண்ணை இமை 

காப்பது போல

காத்து வந்த போதும்...


இப்படியாக அதை பலவகையில் 

சூழ்ச்சியாக 

பயன்படுத்திக் கொள்பவர்களை 

எல்லாம் விட்டு விட்டு 

இதோ இப்போது 

என்னோடு தேவையே 

இல்லாமல் வலுக்கட்டாயமாக 

சண்டை போட்டு 

உன் முகத்திரையை கிழித்து 

தொங்க விடுகிறேன் என்று

முகதிரையே இல்லாத 

என்னை...

என் உணர்வுகளை தூண்டி 

கையறு நிலையில் 

நிற்க வைத்து...


வீதியில் பலபேர் 

வேடிக்கை பார்க்க வைத்து 

விட்டதில் தான்...

முகமூடியே இல்லாத 

அதன் நிறம் என்ன என்று கூட 

தெரியாத நான் 

அந்த முகமூடியின் 

எண்ணற்ற 

மாய வித்தை சக்தியை 

ஒரு வித பயத்தோடு 

அதிர்ச்சியோடு 

உணர்கிறேன்...


இங்கே இந்த சமூகத்தில் 

எதையும் கண்டுகொள்ளாமல் 

சூழ்ச்சி பற்றிய 

எந்தவித எண்ணங்களும் 

இல்லாமல் பயணிப்பது 

மிக மிக 

கடினமான ஒன்று என்று... 

என் நிலையை 

அங்கே பலமுகமூடிகள் 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 

வேடிக்கை பார்த்தது மட்டும் அல்லாமல் 

சிரித்தும் வைப்பதை 

நான் கொஞ்சம் எரிச்சலோடு 

கடந்து போனேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/04/16.


அந்த பொம்மைக்காகவேனும்...

 




நீ என்னோடு பயணித்த நாட்களில் 

எல்லாம் நமது வீட்டில் 

ஒரு ஓரமாக அமைதியாக 

வேடிக்கை மட்டுமே 

பார்த்துக் கொண்டு இருந்தது...


நமது சிறு சிறு சுவாரஸ்யமான 

மகிழ்வில் எல்லாம் 

அது சிறு முறுவல் கொண்டு 

பார்த்து ரசித்து இருந்தது...


ஏதோவொரு நேரத்தில் 

நாம் ஊடல் கொண்டு 

பேசாத நாட்களில் எல்லாம் 

ஒரு தோழமையோடு 

சோகமான முகத்துடன் 

இருப்பது போலவே 

காட்சி அளிக்கும்... 

ஊடலை நிறுத்தி விடுங்களேன் 

என்று கெஞ்சும் 

ரகசிய தொனியில்...


இதோ இப்போது 

நமக்குள் ஏற்பட்ட 

பெரிய கருத்தியல் மோதலில் 

உனது வீட்டிற்கு சென்று 

நாட்கள் மாதங்களாக 

உருண்டோடி விட்டது...


எனக்கான துணையாக 

நீ ஆசையாக வாங்கி தந்த 

முதல் ஆண்டு நிறைவில் 

திருமண நாள் பரிசாக 

இதோ இந்த கரடி பொம்மை 

பாவமாக என்னை பார்க்கிறது...


என்னை பார்த்து எப்போது 

நீ சென்று கூட்டி வருவாய் என்று 

கேட்பது போல முகத்தை 

தொங்க போட்டு கிடக்கிறது...

என் மீது கோபித்துக் கொண்டு...


எனக்காக இல்லை என்றாலும் 

இந்த கரடி பொம்மைக்காகவேனும்

இல்லம் தேடி ஓடி வந்து 

என்னை ஒரு பாவனைக்காக

அணைத்துக் கொள் 

பாவம் அந்த உயிரற்ற 

ஆனால் உணர்வை 

புரிந்துக் கொண்டு பிரதிபலிக்கும் 

ஜீவனின் மகிழ்விற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.


சனி, 18 ஏப்ரல், 2026

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி கோப்பையில் ஊற்றப்பட்ட அந்த விலை உயர்ந்த மது ரசம்...

 

 


எத்தனையோ 

கனவுகள் அடங்கிய 

அலங்கரிக்கப்பட்ட 

கண்ணாடி கோப்பையில் 

ஊற்றப்பட்ட விலை உயர்ந்த 

மது ரசத்தின் 🍷 துளிகளில் 

மூழ்கும் இரு உள்ளங்கள்...


அன்றாட தேவைகளுக்கு 

ஓடி ஓடி 

தினசரி நிகழ்வுகளில் 

தொலைத்து விட்டு 

கிடைக்கும் 

ஓரிரு மணித் துளிகளில்...


தன் அளப்பரிய காதலை 

தன் இணைக்கு எப்படியும் 

கடத்தி விட துடித்து 

கணங்கள் போதாமல் 

தோற்று போகும் 

அந்த காதல் உள்ளங்கள்...


ஏதோவொரு கணத்தில் 

இணையோடு ஒன்ற முடியாமல் 

பிரிந்து செல்ல துடித்து 

நீதிமன்றத்தில் 

எத்தனையோ கேள்விகளுக்கு 

வழக்கறிஞர் சொல்லி கொடுத்த 

அந்த தயார் பதிலை சொல்லி... 


அந்த புரிந்துக் கொள்ள 

எந்தவொரு முயற்சியும் 

செய்யாத வாழ்வின் 

அற்புதமான தருணங்கள் 

நீதிபதியின் உத்தரவில் 

கரைந்து ஆழ் மனதில் 

தாங்கொணா ரணத்தை 

கொடுத்து ...


வாழ்வின் மீது இது வரை 

வைத்திருந்த பெரும் மதிப்பை 

வெறுத்து ஒதுக்கும் 

சில பலஉள்ளங்களின் 

ஆழ் மனதில் பதுக்கி வைத்திருக்கும் 

கண்ணீரின் வீரியத்திற்கு 

இங்கே எவரும் ஆறுதல் 

சொல்லி தேற்ற முடியாது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்...


எந்தவித முன்னறிவிப்பும் 

இல்லாமல் 

உன் வாழ்வின் அத்தனை 

அத்தியாயங்களும் 

முடிவுக்கு வந்து விட்டது 

என்கிறது அங்கே காலம்...

நான் அந்த கூற்றை கேட்டு 

ஆதரிக்கவும் இல்லை 

எதிர்க்கவும் இல்லை...

இது வரை நான் எழுதிய 

அத்தியாயங்கள் 

வாசித்து விட்டு 

அங்கே அந்த வாசகர்கள் 

இறுதி அத்தியாயத்தை 

சுவாரஸ்யமாக எழுதி முடித்து 

விடுவார்கள்...

அது நான் எழுதி வந்த கதையின் 

அத்தியாயத்தை விட 

இன்னும் சிறப்பாக இருக்கும்...

அது பற்றிய கவலை எனக்கு எதற்கு இனி?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/04/26.

வெறும் பகடைக் காய்களுக்குள் தஞ்சம்...

 

 


தீர்ந்துக் கொண்டே 

வரும் நாட்களில் எல்லாம் 

நான் என் பெரும் பிரயத்தனங்களை 

யாரோ ஒருவரின் குழந்தை 

என் கைகளை பிடித்து 

வருவதை போல 

அதை கொஞ்சம் கொஞ்சமாக 

கை விடுகிறேன்...


சிறு வயதில் 

ஓடி திரிந்த நாட்கள் எல்லாம் 

தற்போது கனவாக 

தேய்பிறை நிலவாக 

கலை இழந்து 

என் மனதின் ஓரத்தில் 

தூசி படிந்து கிடக்கிறது...


என்றோ நான் வாங்கிய விருதுகள் 

எல்லாம் என்னை பார்த்து 

இத்தனையும் 

உன் தொலைதலுக்கு பிறகு 

என்னாகும் என்று 

பெரும் அச்சத்தோடு 

கேள்வி எழுப்புகிறது...


என் அடையாளங்கள் என்று 

நான் கர்வப்பட்ட அத்தனையும் 

என் இறுதி ஊர்வலத்தில் 

பூக்களாக மிதிபட்டு 

கிடக்க வேண்டிய நிர்பந்தம் 

ஏற்பட போவதை நினைத்து 

தற்போது 

நான் கொஞ்சம் கொஞ்சமாக 

உணர்கிறேன்...


இத்தனை நிகழ்வுகளையும் 

அசைப்போடும் தருணத்தில் 

அந்த மூச்சை கவர்ந்து 

செல்பவன் என் கண்களுக்கு 

காட்சி கொடுத்து 

மிரள வைக்கிறான்...


இன்னும் என்ன 

காலம் உருட்டும்  

பகடைக் காய் 

உருட்டலில் 

உன் கடைசி உருட்டலும் 

கடந்த நொடிகளில் 

முடித்துக் கொண்டது...

இனி நாம் நம் பயணத்தை 

தொடரலாமா என்று 

கேட்ட கேள்வியில் தான் 

நான் விழிப்படைந்து 

அதிர்ச்சி அடைந்தேன்...


நான் வாழ்ந்த வாழ்வின் 

அர்த்தங்கள் எல்லாம் 

வெறும் பகடைக் காய்களுக்குள் 

தஞ்சம் புகுந்துக் கொண்ட

நிகழ்வி

ன் சத்தியத்தை...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/04/26.







 



திங்கள், 13 ஏப்ரல், 2026

போர் நிறுத்தம்...

 




இத்தனை நாள் தூரமாக நின்று 

வேடிக்கை பார்த்த 

அமைதி 

இன்று எந்த தயக்கமும் 

இல்லாமல் என் கைகளில் 

வேகமாக ஓடி வந்து 

பேரன்பு கொண்டு 

என்னை அணைக்கிறது...


ஏதேதோ நிம்மதியை தரும் 

என்று இத்தனை நாள் 

தேடி அலைந்த 

நாட்களை பார்த்து 

நான் வெட்கம் அடைகிறேன்...


என் வீட்டின் முற்றத்தில் 

நான் நட்டு வைத்து 

பாசமாக நீருற்றி வளர்த்த 

மரத்தின் நிழலில் 

வெகு நாட்களுக்கு பிறகு 

என் ஆசுவாசத்தை 

கொஞ்சம் புதைத்துக் கொள்கிறேன்...


எங்கோ கேட்ட மரண ஓலங்களின் 

சத்தத்திற்கு விடுதலை 

கிடைத்த கொண்டாட்டத்தின் 

உதிரல்களாக அங்கே 

பூத்து குலுங்கும் வசந்தத்தின் 

வாசத்தை சுவாசிக்கிறேன்...


இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்த மனதின் 

ஸ்திர தன்மையை மட்டும் 

காலம் நொடிக்கொரு முறை 

நினைவூட்டிக் கொண்டே 

இருந்தால் போதும்...

இங்கே என் வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும் 

புதைந்து கிடக்கும் அமிர்தத்தை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

நான் கொஞ்சம் சுவைக்க....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/04/26.


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...

 


#இன்றைய #தலையங்கம்:-

எடப்பாடியார் பேசுவதை மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்... அவர் கொரணா சமயத்தை நான் சரியாக கையாளாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதற் கொண்டு எல்லோரும் காணாமல் போய் இருப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் சொன்னார்...

இப்போது மீண்டும் போய் கேட்டு பாருங்கள்...

யார் பேசுவதையும் திரித்து தயவுசெய்து பரப்பாதீர்கள்...

அது எந்த அரசியல் தலைவர் பேச்சாக இருந்தாலும்...

முதலில் தரம் தாழ்ந்து ஏன் பேச வேண்டும்?

தனிநபர் விமர்சனம் பொது மக்களாகிய வாக்காளர்களுக்கு தேவையா?

அவர்களுக்கு தேவை அவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் தவிர உங்களது தனி நபர் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அல்ல...

எடப்பாடியார் சசிகலா காலை வணங்கி அரசியலுக்கு வந்தார் என்று சொல்லும் போது அந்த நிகழ்வு அவர் மட்டுமா வணங்கினார்கள்...

மேலும் அந்த நிகழ்வு நடந்து தான் அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...

அவர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றியவர்...

அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்..

குறிப்பாக விவசாயிகளுக்கு..

அதற்காக அவரை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள்?

ஏன் தினகரன் எவ்வளவு பிரயத்தனம் செய்தும் கட்சியை கைப்பற்ற இயலவில்லை...

இங்கே அடிமட்டத்தில் இருந்து யார் ஒருவர் மக்களின் உணர்வுகளோடு பயணிக்கிறார்களோ அவர்கள் தான் மக்களின் தலைவராக வருவார்கள்...


ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள்..

இது வரை உங்களுக்கு இதை இதை எல்லாம் செய்தோம்... இனியும் செய்வோம் என்றும் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் மக்களிடையே நடந்த தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்து ஓட்டு கேளுங்கள்...

அதை விடுத்து எப்போதும் தனி நபரை துதி பாடியோ அல்லது அசிங்கப்படுத்தியோ ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்...

மக்களுக்காக தான் அரசியல் தவிர 

அரசியலுக்காக மக்கள் இல்லை...


ஒவ்வொரு விவசாயின் துயரம் எல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டே ஆய்வு செய்பவர்களுக்கு தெரியாது..

இந்தியா இயல்பிலேயே விவசாய நாடு... அதன் உயிரோட்டத்தை கெடுக்காத மனிதன் தான் தற்போதைய அரசியல் தலைவராக தேவை...

மற்றவை எல்லாம் பிறகு தான்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 

மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்...

#விவசாயிமரியாதை

#மாண்பபுமிகுவிவசாயி.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/04/26.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம்... எடப்பாடியார் வாக்கு..

 


#இன்றையதலையங்கம்

#ஒருவிவசாயியின்துயரம்:- விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வாக்கு கொடுத்து இருக்கிறார்...

இது ஒன்று போதும் அஇஅதிமுக வெற்றி பெற...

கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் விவசாயிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள்..

அதுவும் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது சகோதரர் இரவில் எந்த நேரம் என்று பாராமல் தூக்கத்தை தொலைத்து தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் அவரது மற்ற பணிகளை பார்த்து தந்தையின் உடல் நலன் மிகவும் மோசமான தருணத்தில் அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த குறித்த நாளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு இல்லத்திற்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று மும்முனை மின்சாரம் வந்து விட்டதா என்று பார்த்து விட்டு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்ச வயலில் இறங்கினால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது...

ஒரு மனிதன் விவசாயம் பார்ப்பதே மிகவும் மோசமான நிகழ்வாக இன்றைய காலகட்டத்தில் மாறி விட்டது... அதிலும் இயற்கை இடர்பாடுகள் தாண்டி இடுப் பொருள் விலையேற்றம் ஆள் பற்றாக்குறை விளைச்சல் கைக்கு வந்தவுடன் விலை இல்லை... இப்படி இத்யாதி இத்யாதி சொல்லி கொண்டே போகலாம்... இத்தனை விஷயங்கள் நடக்கிறது...

ஒழுங்கான மும்முனை மின்சாரம் கொடுக்க கூட மனமில்லை... மேடைக்கு மேடை எங்கள் ஆட்சியில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பேசுவதை மக்கள் சரியான கிறுக்குப் தரமான பேச்சாக தான் பார்க்கிறார்கள்..

ஆமாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...

வயலுக்கு நடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தண்ணீர் பாய்ச்ச போனால் அங்கே சாலையை ஆக்கிரமித்து போதை இளைஞர்கள்...

அவர்களை பார்த்து பயந்துக் கொண்டு தான் வயலுக்கு போக வேண்டும்...

நல்லா ஆட்சி நடத்தினீர்கள் ஐயா 🙏 

இதே இடத்தில் இதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்...

கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுத்தார்.. நீங்கள் அவரது மகனாக இருந்துகொண்டு விவசாயியை துயர கடலில் மூழ்கடித்தீர்கள்...

ஆட்சி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் இல்லை...

அதற்கு மிக பெரிய அனுபவம் மக்களோடு மக்களாக உண்மையான உணர்வோடு பழகி இருக்க வேண்டும்.. வெறும் போட்டோ சூட் நிச்சயமாக களத்தில் வெற்றி பெற உதவாது...

இங்கே அரசியல் பேச்சு கலையில் தேர்ந்தவர்களை மதித்த காலம் போய் செயலில் யார் மக்களின் உணர்வுகளோடு ஒட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

#ஒருவிவசாயியின்துயரம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/04/26.

திங்கள், 30 மார்ச், 2026

நானும் என் வீடும் அந்த குருவியும்...


என்னை நானே அறியாமல் 

மிகவும் கூர்மையான பார்வையால் 

உற்று பார்க்கிறது என் வீடு..


நான் என்னை மறந்து பாடும் 

பாடல்களை மெய் மறந்து 

ரசித்து கேட்கிறது 

தனது கூர்மையான கேட்கும் திறன் கொண்ட செவிகளால்...

அந்த சுவர்கள்!


என் வாழ்வின் இன்பங்களை 

நான் நுகரும் போது 

அது அமைதியாக 

நிம்மதியடைகிறது...


நான் ஏதோ எனது சொந்தங்களின் 

ஏச்சு பேச்சில் 

காயப்படும் போதெல்லாம் 

துயருற்று சத்தம் இல்லாமல் 

கண்ணீர் வடிக்கிறது!


இங்கே என் கால்கள் நடக்கும் 

சத்தத்தில் எல்லாம் 

பெரும் நிம்மதியடைந்து 

பெரும் ஆறுதல் கொள்கிறது...


நான் தினமும் செய்து வரும் 

தான தர்ம செயல்களில் எல்லாம் 

தனது சுவாசத்தை 

புதுப்பித்துக் கொள்கிறது...


இந்த நிகழ்வுகள் எல்லாம் 

அன்றொரு நாள் சத்தம் இல்லாமல் 

நின்று போனதை 

அது அன்று நிலவிய அசாதாரண சூழலில் புரிந்துக் கொண்டு 

பெரும் அதிர்ச்சி அடைந்தது...


எது எப்படியோ நான் சூட்சமமாக 

அதனிடம் என் பூமி வருகை 

பதிவை முடித்துக் கொண்ட 

செய்தியை அதனிடம் 

தட்டு தடுமாறி சொல்லி முடித்த 

தருணத்தில் 

என் உயிர் சுதந்திரமாக பிரிந்து 

அந்த வீட்டில் இருந்து 

மெல்ல மெல்ல விலகியது...


அங்கே நான் சுடுகாட்டில் 

எரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அந்த வீட்டின் உரிமை 

வேறொருவருக்கு அடி மாட்டு 

விலைக்கு கை மாறியது...


ஏன் இவ்வளவு 

மோசமான விலை என்று 

அங்கே யாரோ கேட்கிறார்கள் 

அதற்கு அது வம்ச விருத்தி 

இல்லாத வீடு என்று 

யாரோ யதார்த்தமாக

சொல்லி செல்வதை பார்த்து 


அந்த வீடு அதே நொடியில் 

பூகம்பம் தாக்கியதை போல 

சடசடவென தரை மட்டமாகியதை 

பார்த்து அங்கே இருந்தவர்கள் 

பெரும் அதிர்ச்சி கொள்கிறார்கள்..


இங்கே கடும் அக்னியில் 

வெந்து கொண்டிருந்த நான் 

அந்த வீட்டின் பிரியத்தில் 

பெரும் கண்ணீர் உகுத்து 

நெருப்பை அணைக்கிறேன்...


இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்த 

மனிதர்கள் ஏதோவொரு 

ரகசிய ஒப்பந்தம் அந்த வீடும் 

நானும் போட்டுக் கொண்டதாக 

கிசுகிசுத்து கலைந்து செல்லும் போது 


அந்த வீட்டில் வசித்து வந்த குருவி 

சிறு முனகலோடு 

இடிந்த சுவர்கள் மீதேறி 

மேலே வந்து அவர்களை 

வேடிக்கை பார்த்தது...

இங்கே அந்த குருவி தான் 

வம்ச விருத்தியின் எச்சம் என்று 

எத்தனை பேர் புரிந்துக் கொண்டு 

இருப்பார்கள் என்று 

அந்த வீடு மெல்லிய 

குரலில் 

கேட்டு விட்டு தன் உயிரை 

தியாகம் செய்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/26.




தொலைதூரம் போக நினைக்கும் மனது...

 


எத்தனையோ 

யோசனைக்கு பிறகு 

நாம் எடுக்க போகும் 

முடிவு என்று 

ஏதேதோ பீடிகை போடுகிறாய் 

என் எதிரே அமர்ந்து 

மணிக்கணக்காக...


இணைந்து வாழ்ந்த 

வாழ்வின் சுவை 

அப்படி ஒன்றும் 

கசந்து விடவில்லை!

என்று இடையில் 

சொல்கிறாய்...


என்றோ வாங்கிய பழத்தில் 

ஒரு சிறு அழுகல் கண்டு 

தற்போது அந்த பழத்தை 

நொந்து பயனில்லை...

என்கிறாய்!


ஏதோவொரு தருணத்தில் 

கடுமையான முடிவுகளை 

எடுத்தேயாக வேண்டிய 

தருணத்தில் நாம் 

இருக்கிறோம் என்று 

நீ சொல்கிறாய்...


இப்படி ஏதேதோ காரணங்களை 

தேடி தேடி சொல்லி 

என்னை விட்டு 

தொலைதூர போக நினைக்கும் 

உன் மனதை புரிந்து கொள்ள 

முடியாமல் இல்லை...


இத்தனை தூரம் 

நீ மணிக்கணக்கில் 

என்னிடம் பேசிய போதும் 

நீ தினம் தினம் 

மறக்காமல் 

பெரும் காதலோடு 

எனக்கு தந்த 

உன் ஈர முத்தத்தை 

நான் என்ன செய்வது என்று 

மட்டும் சொல்ல மறந்து விட்டாயா 

அல்லது வேண்டும் என்றே 


உன் அடையாள நினைவாக 

என்னை துன்புறுத்தி பார்க்க 

அதை அப்படியே விட்டு விட்டு 

சென்று விட்டாயா என்று 

மட்டும் 

சொல்லி விட்டு செல் 

என் தீராத காதலே!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/2026.

வெள்ளி, 13 மார்ச், 2026

இன்றைய தலையங்கம்: எம்.பி.கனிமொழியை விளாசிய விளாத்திகுளம் மக்கள்

 


இன்றைய தலையங்கம்:-

சமூக சீர்கேடு மற்றும் தரம் தாழ்ந்த மாநிலமாக சுய ஒழுக்கத்தில் இருந்து விலகி செல்கிறதா தமிழ் நாடு?


ஆழ்ந்த உணர்வு பெருக்குக்கு முன்னால் உங்கள் அலங்கார அரசியல் அறிக்கையோ காசு பணம் துட்டு எல்லாம் வேலை செய்யாது என்பதை விளாத்திகுளம் நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது...

முந்தைய அதிமுக அரசை டாஸ்மாக் விஷயத்திற்காக சரமாரியாக கேள்வி கேட்ட கனிமொழி எம்.பி தற்போது அதே விசயத்திற்காக மக்கள் எழுச்சியால் பயந்து காவலர் துணையோடு மீண்டு சென்று இருக்கிறார்...

கர்மா எப்போதும் தருணம் பார்த்து திருப்பி அடிக்கும்... கனிமொழி எம்.பி அவர்களே!

ஆளும் அரசை தங்களது சகோதரன் தானே வழி நடத்துகிறார் அதுவும் காவல் துறை அவரது கைகளில் கொண்டு...

நீங்கள் யதார்த்தமான உண்மையை சில வருடங்களுக்கு முன்பே எடுத்து சொல்லி புரிய வைத்து இருந்தால் உங்களுக்கு தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த மோசமான அருவருக்கத்தக்க நிலை மக்களிடையே அவமானப்படும் நிலை வந்து இருக்காது...

போதை கலாச்சாரம் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு விதமான பயத்தை கொடுத்து இருக்கிறது...

யதார்த்ததை இனியாவது உணருங்கள்...


எதை எடுத்தாலும் வட இந்தியாவை உதாரணம் காட்டி பேசுவதை நிறுத்துங்கள்...

இது உங்கள் தவறை மறைக்கும் தந்திரம் என்று உணருங்கள்...

எப்படி அறிவார்ந்த சமூகத்தை தங்களது ஆட்சியில் மிகவும் கீழ்த்தரமான மாநிலமாக மாற்றி வைத்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா...


முதலில் நீங்கள் ஒரு பெண் பிறகு தான் நீங்கள் ஒரு எம்.பி.


சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று பல வருடங்களாக முன்னாள் முதல்வர் எடப்பாடி சொல்லும் போதெல்லாம் தாங்கள் அனைவரும் கேலி கிண்டல் செய்து அதை சரி செய்ய முனையாததன் விளைவு இது...

ஆமாம் நீங்கள் உங்கள் சகோதரர் என்ன மாதிரியான அரசியல் கற்றுக் கொண்டு அரசியல் களத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்...


மக்களுக்கு தேவை எப்போதும் நிம்மதியான அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை மட்டுமே.. மற்றபடி உங்களை போன்ற ஆடம்பர வாழ்க்கையை அல்ல...


மக்களுக்காக தான் நீங்கள்..

உங்களுக்காக மக்கள் இல்லை...

#சட்டம்ஒழுங்கு

#பெண்பாதுகாப்பு

#சமூகபாதுகாப்பு.

#இன்றைய தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/03/26.

திங்கள், 2 மார்ச், 2026

அலாதி சுவை...

 





வாழ்வின் சுவையை

சிறிதும் உணர 

காலம் இல்லாமல்

தீவிர ஓட்டத்தில்

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


எந்தவித எதிர்பார்ப்பும்

இல்லாமல்

கதிரவன் உதிப்பதற்குள்

எழுந்து

அது மறையும் வரை

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


கதிரவனின் உதயத்தில்

மிளிரும் ஒளியை

ரசிக்க சிறு நொடியும்

இல்லை...


இளம் காலைப் பொழுதில்

வானை அளந்து செல்லும்

பறவைகளின் சிறகை 

நின்று நிதானித்து

சிறிது நேரம்

அதை கண்களில்

நிறைத்துக் கொள்ள

நேரமில்லை...


அதோ அங்கே அன்றொரு நாள்

நான் சில ரொட்டி துண்டுகள்

போட்ட நினைவில்

என்னை மறக்காமல்

என் பின்னால் பெரும் பாசத்தோடு

ஓடி வரும் நாயின்

பேரன்பை உணர மனமில்லாமல்

அதை வெறுப்போடு

பார்த்து கடந்து செல்கிறேன்

என் அலுவலகத்தில்

மேலாளர் வசைகளுக்கு

அஞ்சி...


இப்படியே போகிறது

வாழ்க்கை என்று

வெறுப்பாக எண்ணியபடியே

ஒரு ஆசுவாசத்திற்காக

தேநீர் பருக

அலுவலகத்தை விட்டு 

வெளியே

அந்த சாலையில்

நடந்து செல்லும் போது

கடும் வெயிலின் தாக்கத்தில்

அப்படியே நிழலை

தேடி அலைகிறேன்...

மிகவும் சோர்வாக...


ஒரு சிறு நிழலை தேடி

கண்கள் என்னையும்

அறியாமல் தேடும் போது...


ஒரு சிறு மரம்

தனது கிளைகளில் உள்ள 

இலைகளை அசைத்து

இங்கே வா

சிறிது இளைப்பாற

நிழலெனும் மடியை

தருகிறேன் என்று

தாயன்போடு 

அழைக்கும் போது...


நான் வேக வேகமாக

ஓடி அந்த நிழலெனும்

மடியில் 

அடைக்கலம் ஆகி

சிறிது இளைப்பாறும் போது...


அதன் ஒரு சிறு கிளையில்

அமர்ந்து இரு குருவிகள்

கீச் கீச்சென்று சத்தமிட்டு

பேசுவதை கேட்டு விட்டு

தன்னை மறந்து

இயற்கையின் சுவையின்

ஒரு சிறு துளியை பருகி

அதன் அலாதி சுவையை

அன்று தான் உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/02/26.



ஞாயிறு, 1 மார்ச், 2026

உயிர் துளிகள்...

 உயிர் துளிகள்...



திடீரென்று எங்கிருந்தோ

சூழ்ந்துக் கொண்ட

போர் மேகங்களில்

பாலூட்டி வளர்த்த தாயின்

நேசத்தையும் 

தந்தையின் பாசத்தையும் உள்வாங்கிக் கொண்ட பூமியில்

தேடி அலைகிறார்கள்

இந்த ஒன்றும் அறியாத

கள்ளம் கபடமற்ற குழந்தைகள்...


தாம் வாழ்ந்த வீடுகளை

தன்னுள் வலுக்கட்டாயமாக

புதைத்துக் கொள்ளவில்லை

பூமி தாய் என்று

உணர்ந்தபோதும்

நியாயம் கேட்டு தவிக்கிறது

இங்கே இந்த குழந்தைகள்

திக்கற்ற நிலையில்

தவித்து நிற்கும் 

இந்த நிலையை 

காண சகியாமல்....


பல கனவுகளை தமக்குள்

சுமந்து மகிழ்வோடு

திரிந்த பட்டாம்பூச்சிகளின்

சிறகுகளில் இருந்து

அந்த வண்ணங்கள்

வலுக்கட்டாயமாக

பிய்த்து எடுக்கப்படுகிறது

கடும் மனதைக் கொண்ட கயவர்களின் போர் வாளால்...


இங்கே பிரபஞ்சத்தின்

நியாயமான முனகலோடு கூடிய

குரல் கேட்க நாதியற்று

கிடக்கிறது...

அந்த உயிரற்ற

கட்டிட இடிபாடுகளுக்குள்...


இங்கே பேரமைதிக் கொண்ட

பிரபஞ்சத்தின் ரசனையான

வசந்த வாழ்வை

சிதைத்து விட்டதில்

உங்களுக்கு அப்படி என்ன

அல்ப மகிழ்வு என்று...


ஒற்றை ஆளாக நான் இங்கே

கதறி

அழுவது மட்டும்

அந்த கயவர்களின் செவிகளில்

விழுமா என்ன என்று

என் ஆழ் மனதின் கேள்விக்கு

பதில் சொல்ல நாதி இல்லாமல்

அநாதையாக கிடக்கிறது...


அந்த அழுகையின் கண்ணீர்

செந்நீராக போர் மேகம் பொழிந்த

குண்டு மழையில் கலந்து விடுகிறது

சத்தம் இல்லாமல்...

வேறென்ன செய்ய இயலும்

அந்த ஒற்றை மனுஷியான

என்னால்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/03/26.






வியாழன், 26 பிப்ரவரி, 2026

சொற்களின் அலமாரி...

 





உன்னிடத்தில் வெகுநாட்களாக

பிரியம் கொண்டு

நான் உன்னிடம்

பேச நினைத்த சொற்களை

பேசாமல் தினம் தினம்

பொழுது போகிறது...


உன்னோடு இருந்த

ஒவ்வொரு கணங்களையும்

நான் கவிதை கோர்த்து

சொற்களுக்குள்

புதைத்துக் கொள்கிறேன்...

அதை உன்னிடத்தில்

சமர்ப்பிக்காமலேயே...


என் தேடல் எப்போதும் நீயாக

இருக்கும் போது

உன் தேடல் எதுவோ என்று

கேட்க நினைத்து

நீ விளையாட்டாக

எதிர் கருத்து ஏதேனும் சொல்லி விடுவாயோ என்று

கேட்காமலேயே நகர்ந்து

சென்ற நாட்கள் இங்கே

ஏராளம் ஏராளம்...

எது எப்படியோ உன் மீது கொண்ட

பெரும் காதலின்

சொல்லதிகாரத்தை

பெரும் புத்தகமாக்கி...

இங்கே எனது வீட்டின்

ஒரு பிரமாண்ட அறையை

அலமாரியாக ஒதுக்கி

சேர்த்து வைத்து இருக்கிறேன்...


அந்த சொற்களின் அலமாரியை

நீ கண்டு களிக்க 

வரும் நாளில் எந்த பூச்சியும்

அரித்து விடக் கூடாது என்று

என் நேசத்தின் கவசத்தை

வேலி இட்டு 

பாதுகாத்து வைத்திருக்கும்

தகவலையேனும்

எவரும் சொல்வதற்கு

முன்பே 

உனக்கு அறிவித்து விட

துடிக்கும் நான்

உன் பெரும் காதலின்

அடையாளம் என்று

நீ உணர்வாயோ மாட்டாயோ

நான் அறியேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/02/26.



செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

மறக்க முடியாத கனவு...

 

 


என்றோ நீ என்னை

காதலித்த நாட்கள்

எல்லாம்

என் நேற்றைய

இரவின் கனவில்

வந்து வண்ணங்கள் அப்பி 

அலங்கரித்து நிற்கிறது...


கனவில் எத்தனை நாழிகை

பேசினோம் என்று தெரியாது...

நீ நிஜத்தில் பேசியதை விட

கனவில் எந்த குற்றமும்

நிகழ்த்தாமல் பேசியதே

எனக்கு போதுமானதாக 

இருந்தது...


ஒரு அதிசய வண்ணங்கள்

கொண்ட பட்டாம்பூச்சி

நம்மை உரசி 

பறந்து சென்றதை நீ கவனித்து

அதை பிடித்து தர சொல்லி

நிர்பந்தம் செய்து

கோபித்துக் கொண்டு

திரும்பி நிற்க...


நான் அதை சகிக்காமல்

துரத்தி வெகுதூரம் சென்று

கையோடு அதை பிடித்து வர

நீ அந்த இடத்தில் இல்லாமல்

எங்கோ தொலைந்து போனாய்...


உன்னை நினைத்து

பெரும் குரலெழுப்பி

உன் பெயரை 

வேகமாக உச்சரிக்க

அருகில் இருந்த

மனைவியோ 

என்னை உலுக்கியதில்

நான் சுயநினைவுக்கு

வந்து திகைத்து அவளை

பார்க்கும் போதே


அவள் என் நிலையை

புரிந்துக் கொண்டு

என்னை அணைத்துக் கொண்டதில்

நான் அவள் நிலையை

உணர்ந்து 

சிறிது வடித்த கண்ணீரின்

வெப்பத்தில் 

நீ உணர்ந்து இருப்பாய்

என் காதலின் தகிப்பை...


ஏன் வந்தது அந்த கனவு என்று

நான் துடித்திருப்பதை

எங்கோ இருக்கும் அவள்

உணர்வாளோ என்று

நான் அறியேன் ...


எது எப்படியாயினும்

மறக்க முடியாத 

இந்த கனவின் மூலம்

அவள் வந்து என்னை

கொன்று தின்று விட்டு

என் எச்சத்தை 

என் வாழ்க்கை துணைக்கு

பரிசாக்கிய போதும்

என் வாழ்க்கை துணைவி

அதை பிறர் தின்று போட்ட

எச்சம் என்று எண்ணாமல்

அமிழ்தென 

பெரும் மரியாதையோடு

பாதுக்காப்பதை பார்த்து

நான் கண்ணீரோடு

என்றும் இல்லாத

பேரன்பு கொண்டு அவளை

தழுவு நிற்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/02/26.














சனி, 21 பிப்ரவரி, 2026

ஒளி பிறந்து என் வாழ்வின் வசந்தத்தின் வாசலை திறந்து வைத்து...

 




ஒவ்வொரு கணங்களும்

வறுமையின்

கோரத் தாண்டவத்தில்

என்னை பதம் பார்க்கிறது...


சற்றும் மனம் தளராத

விக்கிரமாதித்தனை போல்

தடைகளை உடைத்து

தூள் தூளாக்கி முன்னேறி

செல்கிறேன்...


வாழ்க்கை எனும் தோட்டத்தில்

ஏதேனும் ஒரு மலர்

பூத்து அந்த பிரபஞ்சம் எங்கும்

வாசம் வீசாதா என்று

ஏங்கி தவிக்கும் நேரத்தில்

வானில் விடிவெள்ளி போல

ஒரு அற்புதமான தருணம்

என் வாழ்வில் ஒளி பாய்ச்ச

இதோ இப்போது

வந்த இந்நாளில் 

ஒளி பிறந்து என் வாழ்வில்

வசந்தத்தின் வாசலை

திறந்து வைத்து

மலர் தூவி வரவேற்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/02/26.



வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

உன் கண்களில் ஒரு கவிதை காற்றில் எழுதி...

 




அன்றொரு நாள்

உன் நேசத்தின்

பிடியில் இறுக 

எனை அணைத்துக் கொண்டாய்...


அந்த ஒரே தேகம் தீண்டா

சூட்சம  உயிர் தீண்டலில்

ஈரேழு உலகையும்

மறந்து எத்தனை நாழிகை

இந்த பூமி தாய் மடியில்

கிடந்தேன் என்று

நான் அறியேன்...


மீண்டும் நான் சுய உணர்வில்

விழித்தெழுந்து சுற்றும் முற்றும்

பார்க்கும் போது

நீ காற்றலையில் கூந்தல் அசைய

என்னை திரும்பி பார்த்து


உன் இதழ் விரிய

ஒரு சிரிப்பில் முத்துக்களை

சிதற விட்டதை

நான் நிதானமாக சேகரிப்பதை

நீ பார்த்து ரசிக்கும்


அந்த உயிர் உருக்கும்

பார்வை தீண்டலில்

என் பசி தூக்கம் மறந்து

உன்னை ரசிக்கும் வேளையில்


நீ உன் கண்களில்

ஒரு கவிதை காற்றில் எழுதி

போகிறாய்..

பார்வை ஒன்றே போதுமே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/02/26.



சனி, 14 பிப்ரவரி, 2026

கழுதையும் நானும்...


 #கழுதையும் #நானும்:-

***************************

அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார்க்கிறது.. போய் விடும் என்று நினைத்தேன்.. ஆனால் அது அங்கிருந்து அசையாமல் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நின்று கொண்டு எனது முகத்தை பார்த்தது.. நான் அதற்கு பசியாக இருக்குமோ என்று நினைத்து ஏதேனும் சாப்பிடுகிறாயா என்று கேட்டேன்..அது இல்லை என்று தலையாட்டி விட்டு ..ஏதோ கேட்க தயங்கியது.. நான் சிரித்துக்கொண்டே எதுவாக இருந்தாலும் நீ என்னிடம் கேள்.. கண்டிப்பாக என்னால் முடியும் என்றால் உனக்கு உதவுகிறேன் என்றேன்..அது மெல்ல மெல்ல தனது தயக்கத்தை விட்டு விட்டு மிகவும் மெதுவாக உனது குரலை எனக்கு ஒரு நாள் மட்டும் தானமாக கொடுக்க முடியுமா என்று கேட்டது...


நான் அதை ஒரு பார்வை பார்த்தேன்..அது பயந்து விட்டது போலும்.. வேண்டாம் வேண்டாம்.. உனக்கு விருப்பம் இல்லை என்றால் என்றது வேக வேகமாக..

நான் சிரித்தபடியே இதுதானா.. இதற்கு ஏன் இந்த தயக்கம்.. என்று அதனிடம் எனது குரலை கொடுத்து விட்டு அதன் குரலை வாங்கி கொண்டேன்..

அந்த குரலை வைத்தே என்னோடு உரையாடியவர்களுடன் பேசினேன்..

அவர்கள் ஒவ்வொருவரும் என்னை பார்த்து மிகவும் நகைத்தார்கள்;பரிகசித்தார்கள்; என்னோடு மிகவும் நெருக்கமாக பயணித்தவர்கள் கூட அந்த நாளில் என்னை விட்டு சொல்லாமல் விலகி சென்று விட்டார்கள்..

அதேசமயத்தில் அந்த கழுதையின் பின்னால் தற்போது மிகவும் ஆச்சரியமாக அத்தனை பெரிய கூட்டம் சென்றது... எதையும் காதில் வாங்காமல் அந்த கழுதை எங்கே சென்றாலும் கண்மூடி தன்னை மறந்து பயணித்தார்கள்...

எனக்கு அந்த ஒரு நாள் முடிந்தபோது அவ்வளவு மன உளைச்சலை இங்கே என்னோடு பயணித்தவர்கள் எனக்கு ஏற்றி விட்டார்கள்..


அந்த கழுதை மிகவும் உற்சாகமாக வந்தது.. அந்த நாளின் முடிவில்.. என் வாழ்வில் இப்படி ஓர் ஆனந்தத்தை உணர்வேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சொல்லி எந்த சலனமும் இல்லாமல் எனது குரலை என்னிடம் கொடுத்தது...

நானோ அது கேட்பதற்கு முன்பாகவே அதன் குரலை அவசரம் அவசரமாக அதனிடம் ஒப்படைத்து விட்டு அதனிடம் கேட்டேன்.. ஏன் நீ எனது குரலை வைத்துக் கொள்ள எண்ணம் இல்லையா.. உன் பின்னாடி தான் அத்தனை பேர் சுற்றினார்களே.... ஏன் நீ கூட இப்போது எனது குரலால் ஆனந்தமாக இருப்பதாக தானே சொன்னாய் என்றேன் மிகவும் சுவாரஸ்யமாக அதன் பதிலை எதிர்பார்த்து..

அதற்கு அந்த கழுதையோ எப்போதும் இயல்பை விட்டு பயணிப்பது ஆபத்தாக தான் முடியும்.. அதனால் எனக்கு உன் குரல் வேண்டாம்..நீயே வைத்துக் கொள்.. இந்த ஒரு நாள் ஆனந்தம் எப்போதும் என் வாழ்வின் இறுதி வரை பயணிக்கும்..அது போதும் எனக்கு..என்றது..

அதன் பதிலில் ஆயிரம் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்து நான் வாய் மூடி மௌனியானேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தேவை இங்கே சில நட்சத்திரங்கள்...


தேவை இங்கே

சில நட்சத்திரங்கள்

இரவின் அதீத

நிழலில் பேசி

மகிழ்ந்து 

பிரபஞ்சத்தின் 

அமைதியை

சத்தம் இல்லாமல்

ரசிக்க....

#இளையவேணிகிருஷ்ணா.



சனி, 7 பிப்ரவரி, 2026

இன்று மலர்ந்த பூ...

 


இதோ புதிய விடியலை

வரவேற்கிறது

என் வீட்டில் நீ விஷேசமாக

கொடுத்து 

நான் வைத்த

ரோஜா பூ செடியில்

பூத்த

அந்த சிகப்பு ரோஜா...


நீ அன்றொரு நாள் 

என் பிறந்தநாள் பரிசாக

கொடுத்த அந்த செடியில்

எத்தனையோ மலர்கள்

பூத்துக் குலுங்கி

என் புழக்கடையை

வெகுநாட்களாக 

அலங்கரித்து 

என் மனதை

குளிர்வித்த போதும்

இன்று மலர்ந்த 

அந்த சிகப்பு ரோஜா 

உன் நினைவை தந்து

அந்த மலரில் உள்ள முள்

என் மனதை குத்தி கிழிக்கிறது...


இதோ இதே நாளில் தான்

நீ இந்த ரோஜா பூ செடியை

எனக்கு இன்முகத்துடன் பரிசளித்தாய்...

நீ என் மீது ஊடல் கொண்டு 

விட்டு நீங்கி சென்ற

இந்த கால இடைவெளியில்

அந்த செடியில் பூத்து உதிர்ந்த

மலர்களின் இதழ்களை

சேகரித்து வைத்து இருக்கிறேன்

உன் நினைவாக...


இதோ இன்று அந்த மலரின்

பனித் துளி படர்ந்த இதழ்கள்

காய்ந்து சருகாகி மண்ணில்

உதிர்ந்து உரமாகும் முன்

இன்றேனும் 

நீ என்னை காண வந்து

வாழ்த்து செய்தியை

பகிரும் போது

உன் கூந்தலை 

இந்த சிகப்பு ரோஜா

அலங்கரிப்பதற்காக

ஏங்கி தவிக்கும்

என் பெரும் காதலின்

சுவையை நீ அறிய

சிறிதேனும்

முயற்சி செய்ய மாட்டாயா

என் ஆருயிரே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/02/26.



வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

தாய் மரமும் அந்த பறவையும்...

 


அந்த கிளை படர்ந்த

மரத்தின் பழங்கள்

கனிந்து

மண்ணில் தஞ்சம்

புகுகிறது...


அதோ உணவை

தேடி திரிந்து

எதுவும் கிடைக்காத

பறவையொன்று

இந்த மரத்தின் கீழேயுள்ள

பழத்தில் தன் பசி எனும்

அக்னியை தணிக்கிறது...

அந்த பறவை இட்ட

எச்சத்தில் இருந்து 

அந்த கனியின் விதை

அந்த மரத்திற்கு அருகிலேயே

விழுந்து கிடக்கிறது...

அந்தவொரு அந்தி மாலையில்

பெய்த மழையில்

மண்ணில் புதைந்து

பக்குவமடைந்து

சில நாட்கள் கழித்து

சில துளிர் முட்டி மோதி

வெளியே தலைக் காட்டுவதை

பார்த்த அந்த தாய் மரம்

மௌனமாக 

ஆனந்த கண்ணீரோடு

அந்த பறவைக்கு தன் இலைகள் அசைத்து சிறு ஒலியால்

நன்றி சொல்வதை பார்த்து

அந்த பறவை 

தன் சிறகுகளை படபடத்து

குதூகலித்து

என் பசியை தீர்த்த தாய் நீ

உன் நிழலில் நான்

இளைப்பாறுகிறேன்...


எனக்கு என்று 

பெரும் வசிப்பிடத்தை

தாயுள்ளத்தோடு கொடுத்து

உணவும் கொடுத்து

ஆதரிக்கும் நீ

அந்த சிறு துளிரோடு

கூடிய செடிக்கு மட்டுமா தாய்

எனக்கும் தான் என்று

சிறு கண்ணீரில்

அந்த கிளையை நனைத்தது...


இந்த அற்புதமான தருணத்தை

வேடிக்கை பார்த்துக் கொண்டே

நகர்ந்த காலம் 

இயற்கையின் சூட்சமம்

எப்போதும் கருணையாக 

இப்படி ஒன்றோடொன்று 

பின்னிப் பிணைந்து இருக்க

மனிதர்கள் மட்டும் ஏன்

மனம் முழுவதும் வஞ்சம் 

நிறைத்து கருணை என்ற

குணாதிசயம் வறண்டு

இந்த பூமியில்

இங்கும் அங்கும் ஓடி

பெரும் அதிர்வில்

இந்த பிரபஞ்சத்தை

நடுக்கத்தில் உழல

செய்கிறார்கள்...என்று

யோசித்தபடியே

பெரும் மூச்சோடு

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா‌

நாள்:07/02/16.





காலத்தின் இடைவெளியில் எங்கே தொலைந்தது அந்த பனிக் காலம்?


இயற்கையை ரசித்துக்கொண்டே

நகர்கிறேன்...

அந்த வயல் வெளியினூடே

படர்ந்து கிடந்த புல்வெளி

பாதத்திற்கு இதத்தை கொடுக்க

புல்வெளியில் படர்ந்த பனித்துளியை

ரசித்துக்கொண்டே...

அந்த பனி படர்ந்து கிடந்த

 காலை வேளையை

அப்படி என்னால் மறந்து விட

முடியாது...


கொஞ்சம் கொஞ்சமாக கண்ணுக்கு தெரியாமல் கரைகின்ற

காலத்தின் இடைவெளியில்

எங்கே தொலைந்தது

அந்த பனிக் காலம் என்று

தேடி அலைகிறேன்...


இதோ இப்போது சுட்டெரிக்கும்

வெயிலின் தாக்கத்தில்

அந்த புல்வெளியில் படர்ந்த

பனித் துளி 

என் தாகம் தீர்க்காமல்

எங்கே மறைந்துக் கொண்டு

கண்ணாமூச்சி ஆடுகிறது என்று

கேள்வி கணைகள்

என் நெஞ்சில் எழுகிறது...


அந்த பயிர் அறுவடை

செய்த வெற்று காட்டில்

வெயிலின் வெம்மை தாங்காமல்

அந்த தென்னங்கீற்றின் 

ஒற்றை நிழலில்

ஒடுங்கிக் கொள்ள

பெரும் பிரயத்தனப்படும் போது

எங்கெங்கோ சிதறிக் கிடந்த

கருமேகங்கள் ஒன்று திரண்டு

நான் உழைத்த அந்த மண்ணை

நனைத்தது

அந்த கோடை மழை...


இங்கே இயற்கை அன்னையின்

பெரும் அமுதின் திரளில்

நான் நனைந்து 

பெரும் உற்சாகம்

அடைவதை பார்த்து

என் பரவசத்தின் உச்சத்தில்

அந்த கோடை மழையும்

கொஞ்சம் சிலிர்த்து தான் போனது..


இங்கே இயற்கையின் 

பெரும் கருணையின் சூட்சமத்தை

அந்த நொடியில் உணர்ந்து

பெரும் அமைதிக் கொண்டு

அந்த மழையாடலை

ரசித்துக் கிடக்கிறேன்

மணிக்கணக்கில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/02/26.







வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஒன்றும் இல்லாத விசய சுகங்கள் எனும் சருகை நோக்கி...

 


ஓடிக் கொண்டே

இருக்கிறேன்..

ஒன்றும் இல்லாத

விஷய சுகஙங எனும்

பறக்கும் சருகுகளை

நோக்கி...


அந்த சருகின் மதிப்பு

ஒன்றும் இல்லை என்று

தெரிந்தும்

மற்றவர்கள் கைக்கு

அந்த சருகு கிடைத்து விடக் கூடாது 

என்ற அகங்காரம் 


மனதில் பசைப் போட்டு 

ஒட்டிக் கொண்டு

என் ஓட்டத்தை தீவிரமாக்கி

ஏதோவொரு தீவிர விசையை

மனதில் இயக்கி

ஓட வைக்கிறது... 


எப்படியோ அந்த ஒன்றுக்கும்

உதவாத சருகு

என் கைகளில் கிடைத்து விட்ட 

திருப்தியில்

வெற்றிக் களிப்போடு

நான் திரும்பி பார்க்கும் போது

என் பின்னால் எவரும் இல்லை


எங்கே என்று சற்றே

சுற்றும் முற்றும் பார்த்தேன்...

அவர்கள் வேறொரு

விஷய சுகங்கள் எனும்

சருகின் பின்

ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்!

நான் மீண்டும்

இந்த கையில் கிடைத்த சருகை

அங்கேயே நழுவ விட்டு விட்டு

அவர்கள் துரத்தி செல்லும்

சருகை நோக்கி 

இன்னும் தீவிரமாக

ஓடுகிறேன்...


அந்த சருகை 

மற்றவர்கள் கைக்கு

செல்லாமல்

எப்படியோ பிடித்து விட்டேன்..

அந்த சருகின் மகிமையை

ஆவலோடு பார்த்தால்

அது எதற்கும் உதவாததாக

உள்ளதை நினைத்து

மனம் வெதும்பி

அப்படியே சிறிது நேரம்

மூச்சு வாங்க அமர்கிறேன்...


இப்போது அவர்கள்

என்னை ஒரு முறைப்பு 

முறைத்து விட்டு

வேறொரு விசய சுகங்களை

நோக்கி செல்கிறார்கள்...


இதை எல்லாம் சற்றே

தூர இருந்து

வேடிக்கை

பார்த்து கொண்டிருந்த

காலமோ என்னை

வாரியணைத்து

பேரமைதியில்

வாழ்வின் மேலான

விலை மதிப்பு இல்லாத

தாத்பரியத்தை

தனது மௌனமொழியால்

உபதேசத்தை

என் ஆழ் மனதிற்கு

கடத்துவதை

இந்த பிரபஞ்சம்

கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறது...

இதோ இந்த பிரபஞ்சத்தில் 

ஒருவனை பக்குவப்படுத்தி விட்டோம் 

என்ற திருப்தியில்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/01/26.

சனிக்கிழமை.




இன்றைய தலையங்கம்:-மீளுமா காங்கிரஸ்?

 


இன்றைய தலையங்கம்:-

#மீளுமா காங்கிரஸ்?:-

ஒன்றை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்... அது என்ன என்றால் எப்போதும் அடுத்தவர் முதுகில் சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது அல்லது அதற்கு அடிமையாக்கப்பட்டது காங்கிரஸ்... மாநிலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்ய யாரேனும் ஒருவர் தமிழ் நாட்டில் காட்டுங்கள் காங்கிரஸ் கட்சியில் என்று கேட்டால் நிச்சயமாக எவரிடமும் பதில் இருக்காது..

இதை பொதுமக்களாகிய நாம் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் ஏன் காங்கிரஸ் உட்பட...

எப்போது பார்த்தாலும் திமுக காங்கிரஸ் கட்சியையும் தூக்கி சுமந்து காங்கிரஸ் தொகுதியிலும் வேலை பார்த்து வெற்றியை தேடி தந்து விடுவது வாடிக்கையாகி போனதால் அவர்கள் உழைக்காமலேயே எப்படி அதிக தொகுதிகளை கூட்டணி கட்சியிடம் பெறுவது என்று யோசிக்கிறார்கள்..

உண்மையில் தமிழ் நாட்டில் போல காங்கிரஸ் வேறு எந்த மாநிலத்திலும் மோசமாக இல்லை...

இதில் வேறு தவெக கூட கூட்டணி வேண்டும் என்று சில காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது மிகவும் மிகவும் கேலிக் கூத்தான விசயம்...


ஒரு அரசியல் கட்சி காமராஜருக்கு பிறகு தலை தூக்கவில்லை என்றால் அது யார் தவறு?


இந்த விசயத்தில் திமுக இவர்களுக்காக நிறைய தியாகம் செய்து உள்ளது... குறிப்பாக திமுக தொண்டர்கள்... அவர்கள் ஓட்டு கேட்க கூட வர சொன்னால் கூட காங்கிரஸ் வேட்பாளர் மெத்தனமாக இருந்த காட்சிகள் எல்லாம் உண்மையாக உழைத்து வந்த திமுக தொண்டர்களுக்கு மற்றும் மக்களுக்கு தெரியும்...

எப்போது பார்த்தாலும் பதவி சண்டை கீழ் மட்டத்தில் இறங்கி வேலை செய்யாத பண்ணையார் மனபாங்கு இதெல்லாம் இப்போது வேலைக்கு ஆகுமா என்று யோசிக்க மாட்டார்களா?

எனக்கு தெரிந்து திமுக தான் காங்கிரஸ் கட்சியை சோம்பேறி கட்சியாக மாற்றியதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்...


காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் ஏதாவது நாடகம் நடத்துவதை நிறுத்தி கட்சியை அடிமட்டத்தில் இருந்து எப்படி மாற்றியமைத்து மக்களோடு மக்களாக இருந்து வேலை செய்ய வைக்க வேண்டும் என்று டெல்லி தலைமை யோசிக்க வேண்டும்...


அதை விடுத்து எப்போது பார்த்தாலும் தேர்தல் வந்து விட்டால் சீட்டு பேரம் பேசுவதை மட்டும் தீவிரமாக வைத்துக் கொண்டு இருந்தால் ஏதோ கொஞ்சம் நஞ்சம் இருக்கும் காங்கிரஸ் அபிமானிகள் வேறு கட்சிக்கு சென்று விடுவார்கள்...


தமிழ் நாட்டில் தொடர்ந்து காங்கிரஸ் பல தொகுதிகளில் வெற்றி அடைந்து வருவது எல்லாம் திமுக கட்சியில் உள்ள தொண்டர்களால் தான்...


உண்மையில் தியாகி பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் திமுக தொண்டர்களுக்கு தான் தமிழ் நாட்டில் கொடுக்க வேண்டும்...


காங்கிரஸ் தமிழ் நாட்டில் கை நழுவி செல்லும் முன் யோசிக்குமா டெல்லி தலைமை என்று உண்மையான காங்கிரஸ் அபிமானிகள் கவலையில் உள்ளார்கள்...

காங்கிரஸ் சுய பரிசோதனை இப்போது செய்யாவிட்டால் இனி எப்போதும் இல்லை...

ஏனெனில் தமிழ் நாட்டில் பிஜேபி மிகவும் மும்முரமாக வேலை செய்கிறது... ஆனால் அதற்கு நேர் எதிராக வழக்கம் போல உங்களுக்குள்ளேயே சண்டை இடுகிறீர்கள்...

களத்தில் உழைப்பு மிகவும் அவசியம்.. தொகுதி மக்கள் அதை விட முக்கியம்...

#காங்கிரஸ்vsதிமுக.

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:31/01/26.

சனிக்கிழமை.

புதன், 28 ஜனவரி, 2026

சொல் வனம் எனும் அடர்ந்த காட்டில்...

 


என் நெஞ்சமெங்கும்

அடர்ந்து கிடக்கிறது

உனக்கான சொல் வனம் எனும்

அடர்ந்த காடுகள்...


அந்த நிழலில் நீ இளைப்பாறி

என் மடியில் சாய்ந்து...

அந்த மரத்தில் இருந்து

மெல்ல மெல்ல 

மென்மையாக விழுந்து

கவிதை மலர்கள்

உன்னை அலங்கரிக்க

நீ சிறிது நேரம் ஏதும் பேசாமல்

உன் பார்வையால் 

என் கண் பார்வையை 

ஊடுருவி ரசித்து

சிறிது நேரத்தில்


நிர்மலமான மனதில்

அமைதி பொங்க..

துயில் கொள்கிறாய்...

அந்த காட்சியை ரசித்துக்கொண்டே

அங்கே வசித்து வரும்

குயில்கள் 

தன் இனிமையான குரலால்

மென்மையாக தாலாட்ட...


நீ அந்த இசையில் மயங்கி

ஆழ்ந்த துயில் கொள்ள

நான் அந்த அடர் வனத்தை

பேரமைதிக் கொண்ட

மனதோடு பார்வையிடுகிறேன்...


உன் துயில் கொள்ளும் நிலை

சிறிதேனும் 

கலைந்து விடக்கூடாதே என்ற 

பெரும் தவிப்போடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/01/26.








செவ்வாய், 27 ஜனவரி, 2026

இயற்கையை நேசியுங்கள் இல்லையேல்...

 


#இன்றையதலையங்கம்:-

இயற்கையை நேசியுங்கள் இல்லையேல்...:-

அரசியல்வாதிகள் எப்போதும் திருந்த மாட்டார்கள்... இந்த பிரபஞ்சத்தில் மக்களாகிய நாம் தான் பூமியை காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருக்கிறோம்...குவாரி என்பது நிச்சயமாக மிகவும் ஆபத்தான விசயம்... இங்கே சில அறிவாளிகள் பிறகு சாலை வசதி கட்டிடங்கள் எப்படி கட்டுவது என்று கேட்பார்கள்... மேலைநாடுகளில் இப்படி தான் கட்டிடம் கட்டுகிறார்களா என்று அங்கே உள்ள கட்டணங்களை பற்றிய தகவல்கள் கூகுளில் தேடுங்கள்...

தமிழ் நாடு இப்படியே போனால் பாலைவனம் ஆவது உறுதி... மேலும் மண் நெகிழ்வு தன்மையை பெறும் போது நிலநடுக்கம் அந்த பகுதியை எதிர் காலத்தில் தாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..

இயற்கை சீரழிவு இப்படி தான் நிகழ்கிறது...

பெரும் ஆசைக் கொண்ட அதிகார போதையில் உள்ள அரசியல்வாதிகள் கொஞ்சம் இயற்கை நேசர்களாக இருந்தால் தமிழ் நாடு தப்பிக்கும்...

யோசியுங்கள் மக்களே..🙏.

இயற்கையை நேசியுங்கள்...

இல்லை என்றால் உங்கள் வருங்கால சந்ததி மோசமான சூழலில் சிக்கி தவிப்பதை நீங்கள் சூட்சமமாக வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் மேலே இருந்து...

#இயற்கையைநேசியுங்கள்.

#இன்றையதலையங்கம்.

#அதிகாரபோதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/01/26.

திங்கள், 26 ஜனவரி, 2026

நதி எனும் வித்தியாசமான தோழி 🎉

 


அந்திமாலையில் நதியின் வீட்டை நோக்கி என்கால்கள் நகர்ந்தது..என் அலுவலக பணி முடித்துவிட்டு..

சாலையில் கொஞ்சம் வேடிக்கை பார்த்தபடியே நடந்தேன்.. எவரும் நிதானமாக சாலையை கடந்து செல்லவில்லை. இந்த நேரத்தில் நதி என்னோடு இருந்திருந்தால் ஏதாவது தத்துவ ஆராய்ச்சி செய்ததை சொல்லி இருப்பாள் மக்கள் இவ்வாறு ஓடுவதை பார்த்து. நல்ல வேளை அவள் தற்போது தன்னோடு இல்லை என்று ஓர் புன்னகை செய்தபடி சாலையை கடந்து நதியின் வீட்டை அடைந்தேன்.

  கொஞ்சம் ஆவலாக இருந்தது என்ன தான் இன்று அலுவலகம் வராமல் செய்து கொண்டு இருப்பாள் என்று.

  வீடு முழுவதும் தேடினேன் அவள் எங்கும் காணவில்லை. நான் வந்ததை கவனித்து இங்கே வா கிருஷ் என்றாள். அவள் அழைத்த திசையை நோக்கினேன். ஏதோ செடி ஒன்று நட்டு வைத்துக்கொண்டு இருந்தாள் அவள் வீட்டு பின்புறம் உள்ள  சிறுநந்தவனத்தில்.

நான் ஆவலாக என்ன செடி இது நதி என்றேன்.

அவளோ இது ஓர் ரோஜா செடி என்றாள்..உனக்கு தான் ரோஜாவே பிடிக்காதே..நீ தலையில் எந்த பூவையும் சூடி நான் பார்த்ததே இல்லை..என்றேன் ரொம்ப பாவமாக.

அவள் நான் இந்த ரோஜாவை இப்போது வைத்தது நான் சூடிக்கொள்ள அல்ல.. நான் இங்கே இந்த தோட்டத்தில் வந்து உலாவும் போது இது காற்றில் அசைந்து என்னை வரவேற்கும். அந்த வரவேற்பு என்பது மிகப்பெரிய பொக்கிஷம். இப்போது எல்லாம் நீ எவர் வீட்டுக்கு சென்றாலும் பெரும்பாலும் அவர் அழைக்காமல் இருக்கும் போது நீ சென்றால் வரவேற்பு ஏதோ வேண்டாவெறுப்பாக இருப்பதை கவனித்து இருப்பாய் அல்லவா..எனக்கு அந்த அனுபவம் நிறைய நடந்து உள்ளது. ஒருவேளை உனக்கு அந்த அனுபவம் நிகழாமல் கூட இருக்கலாம் என்று சொல்லி கொண்டே அதற்கு நீர் நிற்பதற்கு கரை கட்ட தொடங்கினாள்..என் பதிலை எதிர்பார்க்காமலேயே.

  நான் அவ்வாறு எனக்கும் நடந்து இருக்கிறது எனது உறவுகள் மத்தியில். ஏனெனில் நான் அப்போது ஓர் வேலை இல்லா பட்டதாரி.. என்றேன் புன்னகைத்து கொண்டே.

அதற்கு அவள் சிரித்து கொண்டே சொன்னாள் இப்போது கூட நீ வேலை இல்லாமல் எங்கேயேனும் போனாய் என்றாலும் அதே கதிதான்..கிருஷ்.அது எப்போதும் மாறப்போவது இல்லை என்றாள் புன்னகை மாறாமலேயே..

சரி அதற்கும் இப்போது நீ இந்த ரோஜா செடி நடுவதற்கும் என்ன சம்பந்தம் என்றேன் புரியாமல்.

அதுவா நீ எப்போது இங்கே வந்தாலும் உனக்கு வேலை இருக்கிறதா எவ்வளவு சம்பாதிக்கிறாய் என்று எல்லாம் இந்த ரோஜா செடி கேட்காது.தனது மலர்ந்த புன்னகை மாறாத முகத்தோடு உன்னை வரவேற்கும்.. இதற்கு இருப்பவர் இல்லாதவர் என்ற பாகுபாடு தெரியாது என்றாள்.கரைகட்டி முடிக்க உதவிய அந்த மண்வெட்டியை எடுத்து சென்று கழுவிக்கொண்டே.

நான் ஆமோதித்து அந்த செடியை கொஞ்சம் வருடிக் கொடுத்து விட்டு நகர்ந்தேன். அதுவும் தனது பாசத்தாலேயே என்னை முள்ளால் கொஞ்சம் கீறியது.இதுவும் ஓர் அன்பு கீறல் தான் என்று நினைத்து நகர்ந்தேன்.கீறிய கையை தடவியபடியே.

  அதற்குள் அவள் அழைப்பு வர இதோ வந்து விட்டேன் என்று நகர்ந்தேன்.. கையில் தேநீர் கோப்பையோடு தோட்டத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தாள்.

  நான் அவள் போட்ட தேநீரை பருகினேன். இன்று கொஞ்சம் சுவை கூடுதலாக இருக்கிறது நதி என்றேன் புன்னகைத்து.

தேநீர் எப்போதும் சுவைதான். நாம் தான் அதை ரசித்து பருக நேரம் இல்லாமல் வேகமாக பருகி அதன் மரியாதையை குறைக்கிறோம் என்றாள்.

   நான் புன்னகைத்து கொண்டே சரிதான் என்று தலையாட்டினேன்.

அவள் என்னருகில் அமர்ந்து பறவைகளின் ஒலியில் இசையை கேட்டு ரசித்தாள்.தோட்டத்தில் பறக்கும் பறவைகளின் ஒலியில் தன்னை மறந்து தலையாட்டிக்கொண்டே நடந்தாள் மிகவும் மெதுவாக.

கொஞ்ச நேரம் நான் அவள் மென்னடையை ரசித்து கொண்டே அவளிடம் நாளை அலுவலகத்தில் பார்க்கலாம் என்றேன். இனிமையான அந்த தருணத்தில் இருந்து விடைபெற்றபடியே.

பார்க்கலாம் என்றாள் பறவைகளிடம் இருந்து தன் கண்களை விலக்காமலேயே..

இவள் ஓர் அதிசயம் தான் என்று என் வீட்டை நோக்கி நடையை கட்டினேன்.

மீண்டும் அவளோடு பயணம் நாளைக்கு என்று மனதில் நினைத்தபடியே .

#அவளோடுஓர்பயணம்

#இளையவேணிகிருஷ்ணா.

மனம் எனும் ஊஞ்சலில்...


உனக்காக நறுமணம் சூழ்ந்த

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட

என் மனம் எனும் 

கம்பீரமான கோட்டையில் 

கட்டி வைத்த

ஊஞ்சலில்...

நீ வந்து அதில் மகிழ்வோடு

அமர்ந்து ஆடும் தருணத்தை

அசைப் போட்டு

காத்திருக்கிறேன் இங்கே...


நீயோ அந்த தரம் தாழ்ந்த மனிதன் தனது மனம் எனும்

சிதிலமடைந்த கோட்டையில் அலங்கரித்து...

அந்த முள்ளில் கட்டி வைத்த

எவரும் கண்டுக்காத

தூசி படிந்த ...


எப்போது அறுந்து விழுமோ என்று

கவலைக் கொண்டு

போவோர் வருவோருக்கு

காட்சிக் கொடுத்த...


ஊஞ்சலை நம்பி போய் 

அமர ஓடிப் போவதை 

யதேச்சையாக பார்த்து

உன் பெயரை உச்சரித்தே

உன் பின்னால் ஓடி வருகிறேன்...

அதை காதில் வாங்காமல்


நீ அந்த பழுதடைந்த ஊஞ்சலில்

அமர்ந்த நொடியில்

கயிறு அறுப்பட்டு அந்த முட்புதரில்

வீழ்ந்து ...

அந்த அவமானம் தாங்காமல்

ஓடோடி

அருகில் உள்ள கிணற்றுக்கு

பலியாகி விட்டதை பார்த்து

நான் விக்கித்து நிற்கிறேன்...

எதுவும் செய்ய தோன்றாமல்...


அப்பொழுது என் மனமெனும்

அலங்கரிக்கப்பட்ட கோட்டையில்

உள்ள பூக்கள் வாடி உதிர்ந்து

உனக்கு அஞ்சலி செலுத்துவதை

பார்த்து தாங்கொணா துயரத்தில்

குலுங்கி குலுங்கி அழுவதை

போவோர் வருவோர் எல்லாம்

சிறு வருத்தம் தோய்ந்த

முகத்தோடு பார்த்து

எனக்கு ஆறுதல் சொல்லி

கடந்து செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/01/26.




ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...