ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஜூலை, 2026

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

 



வாழ்வெனும் 

நெடும் பாதையில் 

வஞ்சிக்கப்பட்ட 

பலரோடும்...

உண்மையான 

நேசத்தை கொட்டி 

எதையும் 

என்னிடம் எதிர்பாராமல் 

பயணிக்கும் 

பலரோடும் 

தொடர்கிறது 

நிழல் போல வாழ்க்கை...


அந்த பாதையின் 

இரு பக்கத்திலும் 

நன்மை தீமையெனும் 

சிறகுகள் என்னை 

சுமந்து செல்கிறது...

கடந்து செல்ல வேண்டிய 

பாதையை மிகவும் 

இலகுவாக....


சில சமயங்களில் 

வாழ்வெனும் தோட்டத்தில் 

மலர்ந்து மணம் வீசும் 

சுகந்த மலர்களின் 

நறுமணத்தை நுகர்ந்து 

தென்றலாக

செல்கிறது...


பல சமயங்களில் 

வழியில் சக மனிதர்கள் 

நடத்தும் வேடிக்கை 

நிகழ்வுகளை

மிகவும் நிதானமாக 

ரசித்தபடியே கடந்து 

செல்கிறது...


ஏதோ பிறந்து வளர்ந்து 

இங்கே எதையோ செய்து 

அதன் மூலமாக 

சமூக மரியாதையை தேடி 

அலைபவர்கள் 

மத்தியில்...


நான் நானாக 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

என் வாழ்க்கைக்கு 

அர்த்தத்தை தேடி தேடி 

சோர்ந்து போகாமல் 

அந்த நெடும் பாதையில் 

கையில் ஜீவித்து இருக்க 

வழி துணையாக 

எந்தவித உணவையும் 

எடுத்துக் கொள்ளாமல் 

ஏதோவொரு நம்பிக்கையில் 

பயணிக்கிறேன்...


இயற்கையோ 

எனக்கு 

தேவையான பொழுதில் 

தேவையான அமிர்தத்தை 

அங்கங்கே கொடுத்து 

என் கரங்களை குலுக்கி 

புன்னகையோடு 

பயணிக்க வைப்பதை 

பார்த்து கொஞ்சம் 

ஆச்சரியமாக பார்த்து 

பெருமூச்சொன்று 

உதிர்த்து 

கொஞ்சம் 

திரும்பி பார்க்கிறேன்...


கண்ணுக்கு எட்டிய 

தூரம் வரை 

என் பாதையில் 

நான் மட்டுமே 

இன்னும் 

அங்கே பயணிக்கிறேன்...

வேறு எவரையும் 

காணவில்லை...


அந்த நெடும் பாதை 

என்னிடம் 

மெதுவாக சொல்கிறது...

அவர்கள் அவர்களை 

நம்பி எடுத்து வந்த 

உணவு தீர்ந்து போய் ...


எங்கோ வேறு பாதையில் 

காலத்தின் கைகளில் 

அடைக்கலமாகி

அந்த காலத்தை 

திட்டிக் கொண்டே 

அதனோடு 

பெரும் குரலெடுத்து 

அதை சபித்துக் கொண்டே 

பயணிப்பதாக சொல்லியது...


இங்கே இலகுவான பாதை 

இங்கே இருக்க 

அவர்கள் எப்படி 

வழி தவறினார்கள் என்று 

எனக்கு நானே கேள்வி 

எழுப்பிக் கொண்டே 


மீண்டும் அந்த சுகமான 

நெடும் பாதையில் 

பயணிக்கிறேன்...

நான் அடைய வேண்டிய 

இடம் இன்னும் 

கொஞ்ச தூரம் தான் 

உள்ளது என்று 

அந்த காலம் சூட்சமமாக 

என் காதில் சொன்னதை 

குதூகலத்துடன் 

ரசித்துக் கொண்டே 

பயணிக்கிறேன் 

கொஞ்சம் வேகமாக 

நடை போட்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/07/26.


கர்ணன் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும்...


ஜனநாயகம் 

சற்றே விலகி நின்று 

வேடிக்கை பார்க்கிறது 

நடக்கும் கூத்தை...


இது ஜனநாயகமா 

இல்லை 

சல்லியன் நாடகமா

என்று...


என்ன கூத்து வேண்டுமானாலும் 

இந்த தமிழ் நாட்டில் 

அரங்கேற்றம் செய்யலாம் 

என்ற துணிவு இங்கே 

எவருக்கும் வருகிறது...


ஒரு காலத்தில் 

தரம் நிறைந்த மக்களால் 

இந்த மண் 

பெருமையடைய... 

இந்த மண்ணால் 

மக்கள் பெருமையடைய...


அது ஒரு பொற்காலம் என்று 

கிசுகிசுத்து பெருமூச்சு 

விடுகிறார்கள் 

அங்கே ஒரு சில மனிதர்கள்...


தற்போதோ

கொஞ்சமும் மண் மீதான 

பிணைப்பு இல்லாமல் 

இங்கே மக்கள் அனைவரும்

ஒன்று சேர்ந்து 

மகா சல்லியன் 

ஆனதால் ....


இங்கே தமிழ் நாடு 

கர்ணனை போல 

கதி கலங்கி நிற்கிறது...

என்ன செய்வது என்று 

தெரியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/07/26.


செவ்வாய், 21 ஜூலை, 2026

காலத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படும் மனிதர்கள்...


காலம் எந்தவித இரக்கமும் 

இல்லாமல் பல மனிதர்களை 

வலுக்கட்டாயமாக இழுத்து 

செல்கிறது...

அவர்கள் தன் சுயத்தை 

தொலைத்து  

எல்லா உணர்வுகளையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஆழத்தில் 

புதைத்து விட்டு 

அதனோடு பயணிக்கிறார்கள்...

நானோ அந்த காட்சியை 

இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

அமர்ந்து 

தேநீரை மிடறு மிடறாக 

பருகிய படியே 

ரசித்து வேடிக்கை பார்க்கிறேன்... 

பிரபஞ்சமோ நின்று நிதானமாக 

என்னை சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்த்து ரசிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.

இந்த பிரபஞ்சம் மூச்சை நிறுத்தாமல் பயணிக்கும் சூட்சமம்...

 

 


தினம் தினம் 

ஓடி ஓடி களைப்பது

இந்த வயிற்றுப் பாட்டிற்கு தான் 

என்று போலியாக 

சொல்லிக் கொண்டு 

ஓடும் மனிதர்களை 

பார்த்து பெரும் வியப்பில் 

ஆழ்கிறது இந்த காலம்...


அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 

ஆஸ்தியோ கோடியில் 

கொடி கட்டி பறக்க 

அந்த ஆஸ்தியின் ஒரு மூலையில் 

அவர்கள் அஸ்திக்கு அங்கே 

இடம் இல்லை அங்கே என்ற போதும்...

பொருளற்ற ஓட்டத்தில் 

ஏன் இந்த பொக்கிஷமான 

வாழ்க்கையை 

தன் சுயநலத்திற்காக பலியிட்டு 

படையலிட்டு

அதை வேகமாக வேகமாக

உண்கிறார்கள் ...


அவர்கள் மென்று 

உமிழ்ந்த பொய்களின் 

எச்சத்தில்

இந்த பிரபஞ்சம் கறைப்பட்டு 

அசிங்கப்படுவதை

கொஞ்சம் அருவருப்போடு

அந்த விடியல் 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் வேளையில்...


அங்கே சூரிய கிரணகங்களின் 

மெல்லிய ஒளியில் 

தன் சோம்பலை 

கணப் பொழுதில் முறித்து 

உண்மையில் 

தன் பசியெனும் 

பெரும் தீயை அணைக்க

எந்த அகங்காரமும் 

இல்லாமல் ...

 

தினம் தினம் 

வானில் ஒரு முறையான 

வரிசையோடு...

ஒற்றுமையோடு...

நிலை மாறாமல் பறந்து 

ஒரே மாதிரி விடியலை 

உற்சாகமாக வரவேற்று 

உண்மையாக 

தன் வயிற்றுப்பாட்டிற்காக

நெடுந்தூரம் 

இரை தேடும் பறக்கும் 

அந்த பறவைகளுக்காக...


இந்த பிரபஞ்சம் இன்னும் 

மூச்சை நிறுத்தாமல் 

இயங்கி கொண்டிருக்கிறதோ 

என்று பெருமூச்சுடன் 

காலமும் அந்த பறவைக்கு 

துணையாக 

எந்தவித சத்தமும் இல்லாமல்

பெரும் நன்றியுணர்வோடு

உடன் பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.


வாழ்வெனும் இடிபாடுகளில் சிக்கி...

 


தினம் தினம் 

வாழ்வெனும் இடிபாடுகளில் 

சிக்கி சிதறி 

கிடக்கிறேன்...


எந்தவித தற்காப்பு வித்தையும் 

இது வரை நான் 

கற்றுக் கொள்ளப்படாததன் 

விளைவை நான் அனுபவித்து 

அந்த விதி எனும் 

பெரும் பாறாங்கல் 

என் முதுகில் ஏறி 

இங்கும் அங்கும் 

நர்த்தனம் ஆடுகிறது...


அந்த நர்த்தனத்தின் வலியில் 

நான் முனகி ஓலமிடுவதை 

அந்த காலமெனும் பைரவனோ

எனக்கும் இதுக்கும் 

சம்பந்தம் இல்லை என்று 

ஒரு ஒற்றை பார்வை 

பார்த்து விட்டு 

கொஞ்சம் மனமிரங்கி 

ஓலமிடுகிறது...


அங்கே என் இரத்த சொந்தங்களும் 

தெரிந்தவர்களும்

என்னை தேடும் வேட்டையை 

சிறிது நேரம் நடத்தி விட்டு 

அவரவர் வேலைக்கு 

முகத்தில் வலுக்கட்டாயமாக 

வரவழைக்கப்பட்ட கவலையோடு 

தன் வீட்டுக்கு 

திரும்புகிறார்கள்... 


சும்மா என்று நினைத்து விடாதீர்கள்...

அவள் ஆடிய திமிர் பிடித்த 

ஆட்டத்திற்கு இந்த காலம் 

முன்னமே நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று 

மனதிற்குள் 

முனகுவதாக நினைத்துக் கொண்டு 

சற்றே குறைந்த குரலில் முணுமுணுத்துக்கிறார்கள்...


நான் அந்த முணுமுணுப்பு 

குரலை உற்று கேட்டு விட்டு 

இவர்களுக்கு அந்த காலமெனும் 

பைரவனே பரவாயில்லை 


எந்தவித அலங்கார பூச்சும் 

இல்லாமல் வெளிப்படையாக 

தன் இயலாமையை 

சொல்லி விட்டு 

கொஞ்சம் 

கருணையோடு 

ஓலமிட்டு சென்று 

இருக்கிறானே என்று 

அவனுக்கு மானசீகமாக 

நன்றி செலுத்தி 

கொஞ்சம் கொஞ்சமாக 

அந்த இடிப்பாடுகளில் 

புதைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/26.


சனி, 18 ஜூலை, 2026

விசுவாசம்...


ஒரு பறவையின் 

தாகத்தை தீர்க்க 

அந்த மனிதர்கள் 

கழிவு நீரை 

கொஞ்சம் கூட 

இரக்கமே இல்லாமல் 

பரிசளித்து விட்டு 


நவீன நாகரீகத்தின் 

படிமங்களில் 

புதைந்து கொள்கிறார்கள் 

கொஞ்சமும் கருணை 

இல்லாமல்...


இங்கே இயற்கையும் 

மௌன சாட்சியாக 

அவர்கள் ஜீவ காருண்யத்தின்

அளவை மதிப்பிட்டு 

பரிசொன்று கொடுப்பதற்காக 


நெடு நேரம் காத்திருப்பதை 

உணர்ந்து 

சிறிது அலட்சியமாக 

திரும்பி பார்க்கும் போது 

அங்கே இயற்கை 

இத்தனை நாள் நாம் தந்த 

பெரும் பரிசிற்கு 

நிகராக இல்லை என்றாலும் 

சிறியதாக 

நிலநடுக்கம் எனும் 

புதைமண்ணில் நேசத்தோடு 

புதைத்துக் கொண்டது 


அதுவும் தாய் தானே 

அந்த அரவணைப்பின் 

கிடுக்கி பிடியில் 

உணர்ந்து கொண்ட தருணத்தில் 

அவர்கள் உயிர் அங்கே 

அதன் கைகளிலேயே 

பிரிந்ததில்... 


அந்த பறவை அங்கே 

அவர்களுக்காக

அந்த இடிப்பாடுகளின் 

நடுவில் துக்கம் 

அனுசரிக்கும் 

கருணையில் தான் 

இந்த பிரபஞ்சம் 

தனது அச்சில் பிறழாமல் 

சுற்றிக் கொண்டு இருக்கிறது

என்று சூட்சமமாக 

உணர்ந்து ...

இந்த பிரபஞ்சம் 

பெரு மூச்சொன்று

உதிர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/07/26.


புதன், 15 ஜூலை, 2026

பிறந்து பிறந்து சலித்து விட்ட என் ஜீவனோட்டத்திற்கு..


உன் நடனத்தில் 

இந்த பிரபஞ்சத்தை 

மிகவும் நுட்பமான 

நேர்த்தியால் 

சுழல வைக்கும் 

தந்திரத்தில் 

நான் எத்தனையோ நாட்கள் 

அதை நினைத்து அசந்து 

போவதுண்டு...


காலத்தின் பசிக்கு இரையாகும் 

ஜீவன்களை நீ பக்குவப்பட்ட 

ஆன்மாக்களை மட்டும் 

பிரித்தெடுத்து 

உன்னுள் மிகவும் பத்திரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்...


மீதி ஆன்மாக்களை 

உன் நடனத்தினை நிறுத்தாமல் 

அவரவர் வினைக்கேற்ப 

கருப்பை தொட்டிலில் 

அமைதியாக 

அந்தந்த ஆன்மாவின் 

பக்குவ நிலைக்கு ஏற்ப 

சேர்த்து விட்டு 

உன் புன்சிரிப்பு கூடிய 

முகத்தோடு கூடிய 

நடனத்தை 

அதே அதிர்வலையில் தொடர்கிறாய்...


இங்கே நான் எத்தனையோ 

கருப்பையில் புகுந்து வந்து 

புகுந்து வந்து....

களைத்து விட்டதை 

நீ உணராமல் 

இருந்திருக்க மாட்டாய் என்று 

எனக்கு தெரியும்...


இருந்தும் நான் உனக்கு 

போட்டியாக மிகவும் 

மோசமான நடனத்தை 

தாள லயம் பிசகி 

நடத்திக் கொண்டு 

இருக்கிறேன்...

உன் கவனத்தை 

ஈர்ப்பதற்காக...


அந்த நடனத்தை 

சகிக்க முடியாமல் 

நீ என்னை உன் பாதத்தில் 

சேர்த்து கொண்டு 

பிறவா நிலையை 

கொடுப்பாய் என்ற 

பெரும் நம்பிக்கையோடு....


பிறந்து பிறந்து 

சலித்து விட்ட 

என் ஜீவனின் ஓட்டத்திற்கு 

நிரந்தரமாக ஓய்வு கொடுத்து 

எனக்கு ஒரு அடைக்கலம் 

கொடுத்து 

அணைத்துக் கொள் 

என் ஆத்மநாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/26.


செவ்வாய், 14 ஜூலை, 2026

பயணிகள் கவனத்திற்கு...

 



விடியலை 

உணர்த்தும் பறவைகளின் 

ஒலியை கேட்பதற்கு 

முன்பே ....


சூரியனின் கிரணங்கள் 

இந்த பிரபஞ்சத்தை 

ஊடுருவுவதற்கு 

முன்பே....


எழுந்து நீராடி 

அந்த புகைவண்டி 

நிலையத்தை அடைந்து 


ஒரு தேநீர் கோப்பையை 

கையில் ஏந்தி 

அங்கே 

இங்கும் அங்கும் 

நடமாடும் பயணிகளை 

வேடிக்கை 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது...


அந்த புகைவண்டி நிலையத்தில் 

பயணிகள் கவனத்திற்கு 

என்று சொல்லி...


நீ வரும் 

புகைவண்டியின் 

பெயரை சொல்லி...

ஒரு மணி நேர 

தாமத அறிவிப்பு 

ஒன்று காற்றோடு கலந்து 

என் செவிகளை அடைந்தது...


அந்த அறிவிப்பில் 

நான் இன்னும் ஒரு யுகம் 

காத்திருக்க வேண்டுமா 

உன் முகம் காண என்று 


என் முகத்தில் சோகம் 

அப்பிக் கொண்டதை

அங்கே என்னை கடந்து 

செல்லும் 


பட்டாம்பூச்சி ஒன்று 

இலேசாக உராய்ந்து 

இத்தனை காலம் 

ஊடலில் 

பிரிந்து இருந்த நீ...


இந்த ஒரு மணி நேரத்தை 

ஒரு யுகமாக யோசிக்கிறாயே 

என்று கேலி செய்து செல்ல 


நானோ மிகுந்த ஆச்சரியத்துடன் 

அது போகும் வழியை 

மெய் மறந்து பார்க்கிறேன்...


என் மனதில் ஓடுவதை 

உன்னால் படிக்க முடியும் போது

அவளால் படிக்க 

முடியாமல் போனதே என்று 

ஒரு பெருமூச்சு ஒன்றை 

உதிர்த்து விட்டு 

யோசிக்கிறேன்..


இந்த பிரிவின் துயரத்தின்

வலியை அந்த பட்டாம்பூச்சி 

சிறகின் உரசலில் 

சிறிது மறந்து 

காத்திருக்கிறேன்...


நீ வரும் அந்த 

புகைவண்டியின் சத்தத்தை 

உற்று நோக்கி 

காத்திருக்கிறேன்...

என் நெஞ்சம் முழுவதும் 

நிறைந்த பெரும் காதலோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/26.


செவ்வாய், 7 ஜூலை, 2026

எந்தவித ரசனையும் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களே....

 





ஒரு மெல்லிய 

திரித்து விட்ட 

வெள்ளி கயிறை போல 

நீ கவர்ந்து இழுக்கிறாய்...


அங்கே சூரிய கிரணத்தின் 

வெப்பத்தால் 

உன் ஒளி சிதறல்கள் 

சிதறிடிக்கப்பட்டு

வண்ணமயமாக...


பல வண்ணங்களில் பூக்களை 

நொடி தோறும் உருவாக்கி...

இந்த பிரபஞ்சத்திற்கு 

எந்தவித எதிர்பார்ப்பும் 

இல்லாமல் 

பரிசளித்துக் கொண்டே 

இருக்கிறாய்...


அந்த அழகில் 

நான் இங்கே அசையாமல்

மயங்கி கிடப்பதை 

இந்த மொத்த பிரபஞ்சமும் 

வேடிக்கை 

பார்த்து லயிக்கிறது...


அங்கே எந்தவித ரசனையும் 

இல்லாமல் 

ஓடிக் கொண்டே இருக்கும் 

மனிதர்களே 

கொஞ்சம் உங்கள் ஓட்டத்தை 

நிறுத்தி விட்டு 

இந்த அழகியலை 

இந்த அதி அற்புதமான 

பொக்கிஷத்தை 

ரசிக்காமல் 

அங்கே எந்த பொக்கிஷத்தை 

தேடி நிற்காமல் 

ஓடிக் கொண்டே 

இருக்கிறீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/07/26.


காலத்தோடு கலந்த அவளின் உடலில் புனையப்பட்ட கதைகள்...

 





ஏதோவொரு சூழலில் 

அவள் 

இந்த சமூக வாழ்வெனும் 

நிகழ்வில் இருந்து 

மரணத்தின் அரவணைப்பில் 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத 

தோரணையில் 

அதை இறுக 

கட்டிப்பிடித்துக் கொண்டு

கிடக்கிறாள்...


அந்த இளம் பெண்ணின் 

மரணத்தின் உடலில் 

ஆயிரம் ஆயிரம் கதைகள் 

நிகழ்வாக புனையப்பட்டு 

அங்கிருந்த மக்களால் 

எழுதி எழுதி 

அழிக்கப்படுகிறது...


ஏதோவொரு நிலையில் எழுந்து 

இத்தனையையும் அவள் 

சூட்சம நிலையில் 

கேட்டு பரிதவிக்கிறாள்...


அவள் எதை காரணமாக நினைத்து 

காலத்தோடு கலந்தால் என்று 

எவரும் சரியாக புரிந்து கொள்ள 

மனமில்லாமல் 


அங்கே திரை இயக்குநர்கள் பலர் 

உடனடியாக உருவாகி 

ஒத்திகை பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது... 


தன் கதாபாத்திரத்தில் 

பொருத்திக் கொள்ள 

அங்கே யாரை நியமிக்கிறார்கள் 

அவர்கள் என்ற ஆவலில் 

அங்கே நோக்குகிறாள்...


அப்போதைக்கு அங்கே 

அவளை தவிர 

எவரும் இல்லை என்ற சூழலில் 


மரணித்த தன் உடலுக்கு 

அவர்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் தாங்க 

உயிர் கொடுக்கும் முயற்சியில் 

அத்தனை பேரும் ஈடுபட்டு 

வருவதை தவிர ...


அங்கே அவளின் இல்லாத 

அந்த வெறுமையை 

அங்கே உள்ளவர்கள் எவரும் 

கவலைப்படாமல்

எல்லா உறவுகளும் வந்ததை 

உறுதி செய்துக் கொண்டு 

தன்னை தீக்கு இரையாக்க தூக்கி 

செல்வதை பார்த்து 

அவள் அங்கே 

வாழ்வின் நிலையாமையை 

உணர்ந்து 

திருப்தியோடு அந்த தீக்கு 

தன்னை உணவாக கொடுத்து 

அமைதிக் கொள்கிறாள்...


இங்கே 

அடுத்த இளம் பெண்ணின் 

இறப்பு கதை 

எப்போது கிடைக்கும் என்று... 


அங்கே இருந்த மக்கள் 

சுடுகாட்டில் இருந்து 

இருள் சூழ்ந்த அந்த நிலத்தில் 

அந்த நெருப்பின் 

வெளிச்சத்தில்...


ஒருவருக்கொருவர் விடாமல் 

அவள் கதையை 

வேறொரு கோணத்தில் 

விவாதித்து கொண்டே 

அவளிடம் இருந்து விடை பெற்று 

செல்கிறார்கள்...


இன்னும் சில நாட்களுக்கு 

அவளின் கதையை 

வயல் ஏரி குளம் என்று 

எல்லா இடத்திலும் 

பேசி பேசி 


அவள் இறந்து விட்டால் 

என்பதையும் மறந்து... 

மீண்டும் மீண்டும் 

அவளுக்கு உயிர் கொடுத்து 

கொன்று ரசிக்கும் 

குரூரமான உலகம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/07/26.


ஞாயிறு, 5 ஜூலை, 2026

பெரும் பித்து நிலை...

 


இயற்கையின் மீதான 

பெரும் காதலோடு கூடிய 

பித்து நிலையில் நான் 

லயித்து கிடப்பதில் 

அங்கே என்னோடு பேசுவதில் இருந்து 

பலபேர் தள்ளி இருக்கிறார்கள்...

நானும் இயற்கையும் அது பற்றிய 

கவலை இல்லாமல் 

பெரும் காதலோடு 

பின்னி பிணைந்து கிடக்கிறோம்...

ஏன் இந்த பித்து நிலை 

உங்கள் இருவருக்கும் என்று 

முணுமுணுப்பவர்களுக்கு 

தெரியாது......

அது என்னிடம் எவ்வளவோ பொக்கிஷத்தை 

அள்ளி அள்ளி கொடுத்து விட்டு 

அது பற்றி எங்கேயும் 

மனிதர்கள் போல தம்பட்டம் அடித்து விடுவதில்லை...

அதனால் தான் 

ஒருவர் மீது ஒருவருக்கு 

பெரும் பித்து நிலை 

எங்கள் இருவருக்கும் என்றேன்...

சரிதான் அங்கே மக்கள் 

பேசிக் கொள்வது 

உண்மை தான் போலும் 

பெரும் கிறுக்கு பிடித்து விட்டது 

இந்த பெண்ணிற்கு என்று 

மீண்டும் முணுமுணுத்து 

செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.

வாழ்வின் அந்த பெரும் தீஞ்சுவை கொண்ட அமிழ்தத்தின் நிலை...

 





வாழ்வின் பெரும் அமிழ்தத்தை 

இந்த இயற்கை பருகுவதற்காக 

அங்கே போவோர் வருவோரிடம் 

கெஞ்சி கூவி கூவி 

அழைக்கிறது...


அதன் அற்புதத்தை உணராத 

மக்களோ அதை கொஞ்சம் கூட 

திரும்பி பார்க்காமல் 

அதற்கு சரியான பித்தர் என்ற பட்டத்தை 

அதற்கு கொடுத்து விட்டு 

திட்டி தீர்த்து விட்டு 

வேகமாக நகர்கிறார்கள்...


அதை பேரமைதியோடு 

கவனித்து விட்டு அதன் அருகில் சென்று 

அந்த அமிழ்தத்தை 

வாங்கி பருகி ...

நிலைத்த பேரானந்தத்தில் 

அங்கும் இங்கும் அலைவதை 

பார்த்து விட்டு 


அதே மக்கள் எனக்கும் 

இவரும் அந்த இயற்கையோடு சேர்ந்த 

பெரும் பித்தர் என்று 

நான் கேளாமலேயே பட்டத்தை 

சூட்டி விட்டு வேகமாக 

அங்கிருந்து நகர்கிறார்கள்...


நானும் இயற்கையும் 

அவர்கள் கொடுத்த பட்டத்தை 

மிகவும் பத்திரமாக 

வைத்துக் கொண்டு 

அவர்கள் நிலையை பேசி 

வாய் விட்டு கலகலவென்று 

சிரிக்க ....


அங்கே அந்த பிரபஞ்சம் மட்டும் 

எங்களை மௌனமாக 

சிறுமுறுவலோடு 

ரசித்து மகிழ்ந்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.


நான் நடத்தும் வேள்வி தீ..


 


தினம் தினம் 

ஒரே மாதிரியான காரியம் 

ஒரு வேள்வியை போல 

தோய்வின்றி நடத்துகிறேன்...


அங்கே ஆகூதியில் 

தினமும் 

என் ஆசைகளை பலியிட்டு 

இதோடு என்னை 

நிர்மலமான மனிதராக 

மாற்றி விடும் என்று 

மிகுந்த ஆவலோடு...


அந்த தருணத்தை 

தரிசிக்க காத்திருந்து 

ஏமாந்து போன நாட்கள் 

இங்கே எத்தனை என்றால் 


இதோ கடந்து செல்ல...

என்னிடம் இருந்து 

விடை பெற காத்திருக்கும் 

இந்த நாள் வரை தான்...


அந்த வேள்வி தீ 

அணையாமல் 

கனகனவென்று 

பெரும் வெப்பத்தால் 

என் மனமெங்கும் பரவி 

என்னை தகிக்க 

வைத்து நோகடிக்கிறது...


நான் அந்த வேள்வி 

நடத்துவதை நிறுத்தி விட 

எத்தனிக்கும் போதெல்லாம் 

என் மனம் என்னோடு 

கோபித்துக் கொண்டு 

பெரும் ஆக்ரோஷத்துடன் 

சண்டைக்கு தயாராகி விடுகிறது...


நானோ அதன் ஆக்ரோஷத்திற்கு

அஞ்சியே அந்த வேள்வியை 

நடத்தி வருகிறேன்...

போதுமடா சாமி இந்த 

மானிட ஜென்மம் என்று...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.










 

 

வியாழன், 2 ஜூலை, 2026

அந்த நடுநிசி பிரியாணி பிரியனும் அந்த ஏழை விவசாயியின் துயரமும்......


அந்த ஏழை விவசாயியின் 

உழைப்பில் விளைந்த 

விலை மதிக்க முடியாத 

நெல் மணிகள் 

இந்த பிரபஞ்சத்தின் 

பசியை தீர்த்து 

அந்த மனங்கள் நிறைவடைய 

அதிகாலையில் எழுந்து 

ஓடி ஓடி களைத்து விடும் போது 

அவனுக்கான அங்கீகாரம் 

எங்கே என்று 

ஏழு உலகிலும் 

தேடி அலைந்தாலும் 

கிடைப்பதில்லை...


இங்கே எந்த உடல் உழைப்பையும் 

மதிக்காமல் 

வெட்டி கதைகளை பேசி 

அந்த விவசாயியின் உழைப்பை 

மதிக்காமல் நடு இரவில் 

பிரியாணி சாப்பிட்டு விட்டு 

அங்கே சாலையில் 

தனது இரு சக்கர வாகனத்தில் 

அதி வேகமாக 

அந்த நடுநிசி இரவை 

கிழித்துக் கொண்டு பறக்கிறான் 

அந்த ஒருவன்...



அங்கே பகலில் 

மும்முனை மின்சார சரியாக 

கிடைக்காத காரணத்தால் 

எரிபொருளால் நிரப்பிய 

வண்டியில் சென்றால் கூட 

இந்த இயற்கை நோகுமே என்று 

சைக்கிளில் 

அந்த நான்கு வழி சாலை வழியாக 

சென்று கொண்டிருந்த 

அந்த ஏழை விவசாயியின் 

இரேழு உலகிலும் விலை 

சொல்ல முடியாத உயிரோ 

அந்த நடுநிசி பிரியாணி பிரியன் 

ஒருவனால் காவு வாங்கப்படுகிறது ...


அங்கே அந்த உயிர் 

துடித்து துடித்து 

இறப்பதை கொஞ்சமும் 

சட்டை செய்யாமல் 

அவன் மட்டும் அல்ல 

அந்த நான்கு வழி சாலையில் 

அதி அற்புதமான சொகுசு சிற்றுந்தில் 

போகிறவர்கள் 

அந்த விபத்தை கண்டும் 

காணாதது போல 

சிற்றுந்தின் உள்ளே 

தன் சக பயணியிடம் 

அங்கே பாருங்கள் 

ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டது என்று 

உணர்வற்ற மொழியில் 

கடத்திக் கொண்டே 

அந்த விவசாயியின் இரத்தத்தில் 

தன் சிற்றுந்தின் டயரை 

ஏற்றி கடந்து செல்கிறார்கள்...


இங்கே அந்த சொகுசு சிற்றுந்தில் 

செல்பவனின் ஜீவனுக்கும்

ஜீவித்து இருக்க 

அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த 

அந்த ஏழை விவசாயியின் 

ஒரு பருக்கை சோறு 

அவன் தட்டில் ஏதோவொரு நாள் விழுந்து அவனும் சாப்பிட்டு இருக்கலாம்... 

அவனுக்குரிய மரியாதை இப்படி கிடைத்து இருக்கக் கூடாது என்று 

அங்கே இரவு பறவைகள் சிறகடித்து 

தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி

தனது இறுதி அஞ்சலியாக 

தான் அமர்ந்து இருந்த மரத்தில் இருந்து 

பூக்களை தனது அலகால் 

கொய்து அவன் உடலில் தூவி 

தனக்காக தானியங்கள் விளைவித்து

தன் ஜீவனை காப்பாற்றியவனுக்கு

கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை 

அந்த இருள் கருணையோடு 

அந்த பறவைகளுக்கு 

தன் விழிகளில் கண்ணீர் மல்க 

கைகூப்பி நன்றி தெரிவித்து கொண்டு 

இருந்ததை 

இந்த பிரபஞ்சம் மௌன சாட்சியாக 

மனம் கனத்து 

வேடிக்கை பார்த்தது 


தன் கண்களில் வழியும் 

கண்ணீரை துடைக்க மறந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/07/26.



திங்கள், 29 ஜூன், 2026

அந்தி மயங்கும் வேளை தாண்டிய அந்த மெல்லிய இரவில்...


அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ ...

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது 

பொய் எது என்று கேட்டு 

அறிந்துக் கொள்ள மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை 

சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற 

கோபம் கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக பயணிப்பதை 

இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள்❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/26

ஒரு நாள் ஒரு பொழுதேனும் இப்படி...


ஒரு நாள் ஒரு பொழுதேனும்

இப்படி தன்னை மறந்து உறங்க 

துடிக்கும் இமைகளுக்கு இங்கே 

ஆயிரம் ஆயிரம் கவலைகளை 

போற போக்கில் 

அள்ளித் தெளித்து விட்டு 

போகிறது காலம்...

நானும் மனதும் தான் இங்கே 

இமைகளை கெஞ்சிக் கூத்தாடி 

உறங்க வைக்கிறோம்...

மீண்டும் கொஞ்சம் 

எல்லாம் மறந்து 

இமைகள் மூடும் போது 

அங்கே தலை வாசல் வழியே 

தலையை எட்டி பார்த்து 

காலம் தனது கைகள் நிறைய 

கவலைகளை கொண்டு வந்து 

வீடு முழுக்க இறைத்து விட்டு 

ஓடோடி போகிறது நொடிப்பொழுதில்...

நான் இமைகளை கை கூப்பி 

கேட்டுக் கொண்டு 

அங்கே இறைந்து கிடந்த 

கவலைகளை 

ஒரு மெலிதான 

துணியை வைத்து ...

சத்தம் இல்லாமல் 

தூய்மை செய்து 

முடிக்கும் போது 

நடுநிசி இரவு 

என்னையும் 

என் இமைகளையும் 

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் 

சிரித்து வைத்து போனதில் 

எனது இல்லம் அங்கே சத்தம் 

இல்லாமல் கண்ணீர் வடிப்பதை 

யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இமையும்நானும்.

நாள்:29/06/26

ஞாயிறு, 28 ஜூன், 2026

பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்...


பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்:-

அத்தனை துர்நாற்றத்தோடும்

நான் நிரந்தரமாக 

வசிக்கிறேன்...


நீங்களோ என்னை கடந்து 

செல்லும் போது 

அந்த சில நிமிடங்கள் 

உங்கள் நாசியை 

துளைக்கும் 

அந்த துர்நாற்றத்தை 

சகிக்காமல் 

மூக்கை மூடி 

செல்கிறீர்கள்...


எனது மடியில் 

உணவை தேடி தத்தி தத்தி 

செல்லும் அந்த காகங்களுக்கும் 

நாய்களுக்கும் பசுக்களுக்கும்

நான் வைத்திருக்கும் 

இந்த நெகிழி கழிவை 

பசியாற கொடுத்து விட்டு 

மௌனமாக அழுகிறேன்...


அங்கோ 

ஏசி பேருந்துகள் இயக்க 

அரசு பெரும் பிரயத்தனங்களை 

செய்து வருவதாக 

கேள்வியுற்று 

கொஞ்சம் திகைத்து தான் 

நான் போகிறேன்...


என் அழிவின் விளிம்பை 

அவர்களால் எப்படி 

அவ்வளவு எளிதாக 

கடந்து செல்ல முடிகிறதென்று

எனக்கு நானே கேள்வி 

கேட்டுக் கொள்கிறேன்...


சில நேரங்களில் 

என் கோபத்தின் 

தாக்கத்தினால் 

சில பல நாடுகளில் கட்டிடங்கள் 

இடிந்து விழுவதை 

வேடிக்கை பார்த்து விட்டு 


இயற்கை அன்னைக்கு 

அப்படி என்ன தான் 

கோபமோ என்று 

என்னையே திட்டி தீர்க்கும் 

மனிதர்கள் விசுவாசத்தை 

எண்ணி கொஞ்சம் வியந்து தான் 

போகிறேன்...


நான் அசுத்தப்படுத்தப்படுகிறேன்

என்று உணராமல் 

நீங்கள் எனக்கு இழைக்கும் 

தீங்குகளை எல்லாம் 

சேகரித்து வருகிறேன்...

என்றோவொரு நாள் 

அந்த சமுத்திரத்தின் 

ஆழத்தில் புதைத்துக் கொண்ட 

நீங்கள் எனக்கு அளித்த 

கழிவெனும் பரிசை 

உங்கள் முகத்தில் உமிழும் போது 

அங்கே எவரும் 

உங்களை காப்பாற்ற 

வர மாட்டார்கள்...

ஏன் என்று கேட்காதீர்கள்...


அங்கே 

மொத்த மனிதர்களும் 

மரணித்து என் கால்களை 

தழுவி மன்னிப்பு கேட்கும் 

தோரணையில் 

வீழ்ந்து கிடக்கும் போது... 


அங்கே என் மடியில் 

உணவுக்காக அலைந்து கொண்டு 

இருந்த சிற்றுயிர்களுக்கு 

உங்களை 

பெரும் விருந்தாக்கி

மகிழ்ந்து 

உணவளித்து 

பெரும் ருத்ர தாண்டவம் 

ஆடுவதை 

இந்த பிரபஞ்சம் கொஞ்சம் 

நடுங்கி மிரண்டு 

தள்ளி நின்று 

வேடிக்கை பார்க்கும்...


பிறகு மெல்ல மெல்ல 

அமைதியடைந்து

பெரும் பிரயத்தனப்பட்டு

அந்த இயற்

கையிடம் 

முறையிட்டு

ஒரு புது யுகத்தை 

உருவாக்குவேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/06/26.





திங்கள், 22 ஜூன், 2026

அந்த பங்களாவின் அதிகாரம் யாருக்கு?


அந்த அடர்ந்த பண்ணை 

காட்டின் நடுவே 

என்றொவொரு நாள் 

வாழ்ந்த காலத்தில் 

என் முன்னோர்கள் கட்டிய 

பங்களாவை தேடி 

பல காலங்கள் கழித்து 

கரையில் ஒதுங்கிய 

கிழிஞ்சல்கள் போல 

அதை சேர்கிறேன்...


வீட்டின் கதவில் கை வைத்தபோது 

அங்கே இருந்த சிலந்தி பூச்சி 

கடகடவென்று வேகமாக 

கதவின் இடுக்கில்

ஓடி ஒளிகிறது...


கதவின் பூட்டின் துளையில் 

சாவியை விட்டு 

திறந்த போது பெரும் இருள் 

சூழ்ந்த கருமை நிறம் 

என்னை ஓடோடி வந்து 

வரவேற்கிறது...


என்றோ என் முன்னோர் வைத்த 

அற்புதமான விருந்தின் மீதமாக 

கீழே உருண்டோடி கிடக்கும் 

ரம் பாட்டில்களில் 

என் கால் ஏதேச்சையாக பட ...


அது பயந்து நழுவி ஓடி 

எழுப்பிய சத்தத்தில் 

அங்கே காதலோடு 

புணர்ந்து கொண்டிருந்த 

பல்லி இரண்டும் 

வேறு வேறு திசையில் 

அச்சத்தில் ஓடி ஒளிகிறது...


மெதுவாக அந்த பங்களாவின் 

புழக்கடை பகுதிக்கு சென்று 

சன்னலை திறந்து 

பார்க்கிறேன்...


அங்கே பல மலர் செடிகள் 

பூத்து குலுங்கிய தடயங்களாக 

மலர் இதழ் சருகுகள் 

செத்து கிடக்கிறது 

காய்ந்து போன 

தாய் செடிகளுக்கு 

அடியில் உரமாக...


இத்தனைக்கும் நடுவில் 

அந்த பங்களா 

சில ஜீவ ராசிகளுக்கு 

அடைக்கலம் கொடுத்து 

உயிர்ப்போடு வைத்திருந்ததை 

நான் அங்கே கண்ட காட்சிகளில் 

உணர்ந்து கொண்டு


சில பல ஆசுவாசங்களுக்கிடையே

அந்த இரவில் 

அங்கே நான் 

தங்க முடிவு செய்ததை 

அங்கே அந்த பங்களா சுவருக்கு 

கொஞ்சம் 

சத்தமாக அறிவித்தேன்...


எங்கிருந்தோ ஊரை சுற்றி விட்டு 

பங்களாவின் முகப்பில் 

என் முன்னோர்கள் நட்டு வைத்த 

மரமொன்றில் 

கம்பீரமாக அமர்ந்த 

குருவி ஒன்று...


அதற்கு என் அனுமதி தேவை 

என்று பெரும் குரலெழுப்பி 

சொல்ல 

நானும் அந்த பங்களா சுவர்களும் 

கொஞ்சம் அதிர்ந்து தான் 

அந்த குருவியை 

திரும்பி பார்க்கிறோம்...


இங்கே சில பல காலங்கள் 

கழித்து உரிமை கொண்டாட 

நான் வரும் போது 

அங்கே இதுவரை 

என் முன்னோர்கள் வாழ்ந்த 

பங்களாவை 

உயிர்ப்போடு வைத்திருந்த 

அந்த ஜீவ ராசிக்கு 

கட்டுப்பட்டு வந்த வழியே 

திரும்பி சோகமாக 

நடப்பதை பார்த்து 


அந்த குருவி 

நீ இந்த இரவு மட்டும் 

தங்கலாம்...

உன்னிடம் நிறைய கதைகள் 

பேச வேண்டி உள்ளது ...

கதை ஓரிரவில் முடியாது 

அதனால் சில நாட்கள் 

இங்கே தங்க உனக்கு 

அனுமதி தருகிறேன் என்றது...


நான் மீண்டும் அந்த பங்களாவில் 

நுழைந்த போது 

அங்கே ஏதோவொரு சூட்சம சக்தி 

என்னை பார்த்து சிரிப்பது போல 

உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/06/26.

















 

நான் என்பது யாரோ பெரும் திரளினிலே...


கண்ணாடி பார்த்து 

எத்தனை நாட்கள் ஆகிறது 

உங்கள் முடி நரைத்து இருப்பதை 

கவனிக்கவில்லையா என்று 

அங்கே ஒருவர் 

என்னை உரையாடல் நடுவில் 

சிரித்தபடியே கேட்கிறார்...

நிச்சயமாக எவ்வளவு காலம் 

என்று தெரியவில்லை எனக்கு 

என்று நான் சொல்வதை பார்த்து...

அவர் விசித்திரமான பார்வை 

ஒன்றை 

என் மீது வீசி விட்டு 

ஏன் என்று கேட்டார்...

நீங்கள் நினைப்பது போல 

என் முகமோ அல்லது உடலோ 

நான் இல்லை என்று 

நன்றாக எனக்கு தெரிந்து 

இருக்கும் போது 

எனக்கு கண்ணாடி பார்க்கும் 

அவசியம் தான் என்ன என்று 

கேட்டதும் சற்றே யோசித்து 

அமைதியாக பதிலேதும் 

பேசாமல் போய் விட்டார்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/06/26.

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருளில் நனையும் நட்சத்திரமும் நானும்...


இருளில் நனையும் 

நட்சத்திரங்கள் 

அமைதியாக எனை 

வேடிக்கை பார்க்கிறது...

நானும் அதை கொஞ்சம் 

ரசித்து சிரிக்கிறேன்...


இங்கே என் நேரத்தில் 

நீ ஏன் தொந்தரவாக 

இருக்கிறாய் என்று 

என்னை பார்த்து 

வேடிக்கையாக 

கேட்கிறது...

அந்த நட்சத்திரங்களில் ஒன்று 

கொஞ்சம் மிடுக்காக...


இங்கே இந்த நேரத்தில் 

உனக்கு என்ன வேலை 

கொடுக்கப்பட்டு இருக்கிறதோ 

அந்த வேலையில் 

ஏதேனும் தவறு நடந்தால் 

என்னிடம் சொல் என்று 


அந்த இறைவன் எனக்கு 

ஆணையிட்டு இருப்பதாக 

கலகலவென்று நகைப்புடனே 

சொல்கிறேன்...


அந்த நட்சத்திரமோ 

இங்கே உன்னை கண்காணிக்க 

என்னை இறைவன் அனுப்பி 

இருக்கிறார் என்று 

இன்னும் மிடுக்காக 

சொல்ல...


நானோ உன்னிடம் 

என் உறக்கத்தை 

தொலைத்து விட்டு 

இங்கே நிர்க்கதியாக 

நிற்கிறேன்...

நீயோ கண் சிமிட்டி 

காதல் மொழி பேசுகிறாய்...


ஒன்று செய்வோம் 

நாம் இருவரும் ஒருவரையொருவர் 

சமாதானமாக போய் விடுவோம் 

நம் காதல் ஈர்ப்பு விதியாவது 

அந்த இறைவனிடம் இருந்து 

தப்பிக்கும் என்றேன் நான் 

சிரித்தபடியே...


அந்த நட்சத்திரமோ 

அதுவும் சரிதான்...

உன் காதலை எல்லாம் 

என்னால் ஏற்க முடியாது

என்றது...

ஏன் என் காதலில் 

புனிதம் இல்லையா என்று 

தவிப்போடு கேட்கிறேன்...


அப்படி தான் 

வைத்துக் கொள்ளேன் 

பொழுது புலர்ந்ததும் 

உன் அலுவலக மேலதிகாரியின் 

கட்டளைகளை சிரம் மேல் ஏற்று 

ஒரு அடிமையை போல 

இருக்கும் உன் கோலத்தை 

என்னால் சகிக்க முடியாது...


உன் இயந்திரத்தனமான 

காதலில் எல்லாம் விழும் அளவுக்கு 

நான் ஒன்றும் உணர்வற்ற ஜடமல்ல என்று சொல்லி விட்டு 


அங்கே மேகங்களில் இருந்து 

வெளியே வந்து 

எங்கள் சண்டையை 

எட்டிப் பார்த்த நிலவின் 

காதல் ஒளியில் 

தன்னை இழந்தது 

அந்த நட்சத்திரம்...


நானோ அதை பார்த்து பெரு மூச்சு 

ஒன்றை உதிர்த்து விட்டு 

இமைகளோடு போராடுகிறேன் 

உறக்கத்திற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/06/26.

சனி, 20 ஜூன், 2026

மரணத்தில் துணை வரும் தோழன்...

 





அற்புதமான படைப்பின் 

ரகசியத்தை அறிந்த 

கையில் உருவான 

இந்த சிறு மண் பாத்திரம் 

என் உடலெனும் 

கூட்டை விட்டு உயிர் 

போகும் போது 

வழி துணையாக

இத்தனை காலம் 

என்னோடு பயணித்த 

அத்தனை உறவுகளும் 

சத்தம் இல்லாமல் 

சிறு விசும்பலோடு விலகி 

என் உடலுக்கு 

தீ வைத்தவுடன் 

மெல்ல மெல்ல 

விடை பெறும் போது 

அந்த குயவனின் 

அழகிய கைகளால் உருவான 

அந்த அழகிய மண் பாண்டம் 

மட்டும் 

தன் உடலை சிதறடித்து 

உயிரை அர்பணித்துக் கொண்டு

என்னோடு பயணிப்பதை 

சூட்சமமாக பார்த்து 

கொஞ்சம் நெகிழ்ந்து தான் 

போகிறேன்...

இங்கே எனக்கான 

துணையாக 

அந்த பாண்டம் மட்டும் 

ஏன் என்னை கூடவே 

துரத்தி வருகிறது என்று 

யோசிக்கும் போதே 

உனக்கும் எனக்கும் உள்ள 

உறவை எப்படி நீ மறந்தாய் என்று 

அது கேட்டு விட்டதில் 

நான் பேரமைதி கொண்டு 

சூட்சம உலகில் பயணிக்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/06/26.


ஞாயிறு, 14 ஜூன், 2026

எல்லாவித பயணத்திலும் ஒருவித சலிப்பே மிஞ்சி விடுகிறது...

 


எல்லாவித பயணத்திலும்

ஏதோவொரு சலிப்பே

மிஞ்சி விடுகிறது!

பேச்சற்ற தனிமையில்

நான் பேரானந்த ஊற்றை 

உணர்ந்துக் கொண்டு

இருக்கும் போது

அந்த சிறு இலை

எனது மடியில் சத்தமின்றி

சயனிக்கிறது!

ஏதோவொன்றிற்கு நான்

அடைக்கலமாகிறேன்

இங்கே என் அனுமதி கேட்டு

எதுவும் நடக்கவில்லை

நான் அந்த இலையின் துயிலை ரசித்து

இந்த இரவை கடக்கிறேன்...

இங்கே சம்சாரிகள் போல

நடிப்பதை விட

உண்மையில் 

ஒரு தூய்மையான துறவறம் 

தேவை இங்கே எனக்கு 

என்றுணரும் தருணத்தில் தான்

நான் நானாக 

இந்த வாழ்வெனும் நதியில்

நிச்சலனமாக பயணிக்கிறேன்...

இங்கே எந்தன் தேவை ஒரு

ஆழ்ந்த அமைதி

இதை உணரும் தருணத்தை

நான் இத்தனை நாள்

தவற விட்டு பயணித்து 

இருப்பதை பார்த்து

என்னை நானே வியக்கிறேன்...

இரவெனும் நதியின் கரையோரம் 

நான் இருக்கும் இந்த நிலையில்

அந்த இலையும் நானும்

மௌனமாக 

அந்த பேரின்ப நிலையை 

ஒரு புன்னகையோடு 

ரசிக்கிறோம்..

#இளையவேணிகிருஷ்ணா.

வெள்ளி, 12 ஜூன், 2026

உதிர்ந்த இலையின் பயணம்..


தன் இறுதி பயணத்தை 

தொடங்கிய அந்த இலையை 

பிரிய மனமில்லாமல் 

கிளை எனும் கையை கொண்டு 

முடிந்தளவு 

தன்னோடு அணைத்துக் கொள்ள 

பார்க்கிறது 

அந்த மரம் எனும் தாய்...

அதுவோ சுக பிரம்மம் போல 

எந்த உணர்வுகளையும் 

வெளிப்படுத்தாமல் பயணிக்கிறது...

மண்ணோடு 

புதைந்துக் கொள்வதற்கு முன் 

ஒரேயொரு செய்தியை 

தகுதி வாய்ந்தவரிடம் 

பகிர்ந்து விட வேண்டும் என்று 

தீவிரமாக தேடும் போது 

அங்கே ஒரு குயிலின் சிறகு 

தன் மீது உராய்ந்த அதிர்வில் 

அதன் மீது அந்த செய்தியை 

கடத்தி விட்டு 

மண்ணில் புதைந்து 

ஆனந்தலயமாக 

எத்தனிக்கும் போது 

அந்த இலையின் இறுதி சடங்கை 

எங்கிருந்தோ வந்த 

அதன் மூதாதையரின் 

தென்றல் காற்றில் 

சிறு அசைவை மட்டும் 

வெளிப்படுத்தி அமைதிக் கொள்கிறது 

அந்த இலை...

#உதிர்ந்த #இலையின் #பயணம் 

#இளையவேணிகிருஷ்ணா.


செவ்வாய், 9 ஜூன், 2026

எனக்கு பிடித்தது என்று ஒரு காலத்தில் இருந்தது... தற்போது இல்லை...


 நான் எப்போதும் 

வெற்றியை பற்றியோ 

தோல்வியை பற்றியோ 

கவலைப்பட்டதே இல்லை...

வெற்றியோ தோல்வியோ அது சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்... ஆனால் அந்த சலனத்தை சொற்ப வினாடிகளிலேயே கொன்று புதைத்து விட்டு மாற்று வேலைக்கு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சென்று விடுவேன்...

இது தான் நான் பயணிக்கும் சாலை என்று எவரிடமும் அகங்காரம் கொண்டு பேசியது இல்லை... ஏனெனில் சில மணித்துளிகளில் என் பயண சாலை மாறும் என்பது எனக்கு நன்றாக தெரியும்...

எனக்கு பிடித்தது என்று எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது... ஆனால் தற்போது இல்லை...

நான் இந்த காலத்தில் பயணிக்கிறேன் 

அவ்வளவு தான் ...

இது தான் நான் வாழ்வில் கற்றுக் கொண்ட அல்லது காலம் கற்பித்த கட்டணம்இல்லாத பாடம் என்று சொன்னால் அது மிகையல்ல....

#இளையவேணிகிருஷ்ணா.

#நள்ளிரவின் #மெல்லிய #குரல்.

அந்த சிதிலமடைந்த வீட்டில்...


அந்த சிதிலமடைந்த

வீட்டின் வலியை

அங்கே வந்து சென்ற

சில பறவைகள்

அறியக் கூடும்

சில வருடங்களுக்கு

முன்பு வரை

இங்கே கூடி கூட்டமாக

தானியங்களை சாப்பிட்டு விட்டு பறந்து 

அடுத்த நாளும்

அங்கே வந்து பார்த்து 

ஏமாந்த போது தான்

தெரிந்தது!

அந்த வீட்டில் வசித்த

அந்த மனிதருக்கும்

வறுமை வரக் கூடும் என்று

தாம் அறிந்து வைத்திருக்கவில்லையே என்று

கொஞ்சம் யோசித்துப் பார்த்து

தன் சிறகை விரித்து உடனே

பறந்து விட்டது ...

சில பல தானியங்கள் அங்கே முன்னேற்பாடாக

அங்கே அந்த வீட்டின் உரிமையாளர் 

போட்டு விட்டு சென்றதை

சாப்பிட மனமில்லாமல் ...

#கொஞ்சம்தேநீர்

#கொஞ்சம்கவிதை 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

வியாழன், 28 மே, 2026

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...


என் உயிர் சுவாசத்தின் 

தீண்டலாக 

நீ என்னோடு 

ஒருவித கதகதப்போடு

ஜீவித்து இருக்கிறாய்...


ஒரு நகரத்தில் சாலை வெளியின் 

பரபரப்புக்குகளுக்கிடையே 

நகரும் 

பட்டாம்பூச்சியாக 

என் மனமெனும் சாலையில் 

நீ பறந்து செல்கிறாய்...


உன் வருகைக்காக 

காத்திருக்கும் நேரத்தின் 

நொடிகளுக்குள் 

ஒரு தேவதையாக 

என்னோடு அரூபமாக 

பேசி சிரிக்கிறாய்...


என் வனமெங்கும் 

உன் காதலெனும் 

பூவின் வாசத்தில் 

கிறங்கடிக்கிறாய்...


காலமெனும் நதியில் 

உன்னோடு பயணித்த 

நினைவுகளை தூவி 

நான் அந்த நதியின் கரையில் 

ஒதுங்கி அந்த நினைவுகளை 

காவல் காத்து சிறை 

பிடித்திருப்பேன்...


என்றோவொரு யுகத்தில் 

நீ என் பெரும் காதலே காதலே 

என்று கண்ணீர் மல்க 

ஓடோடி வந்து 

என்னை அணைத்துக் கொண்டு 

அந்த நதியை என்னிடம் இருந்து 

விடுதலை செய்வாய் என்ற 

நம்பிக்கையோடு 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/05/26.






செவ்வாய், 26 மே, 2026

அந்த அமிர்த கடலில் மூழ்கி களித்த நாட்கள்...


பெரும் புயலே அடித்தாலும் 

கவலைகளின் நிழலில் 

எப்போதும் 

ஒதுங்கியதாக 

எனக்கு நினைவில் இல்லை...


ஒரு கணப் பொழுதிலும் 

மகிழ்ச்சி எனும் 

உணர்வெனும் ஆற்றில் 

நனைந்த நாட்களை 

நினைக்க 

தவறியதில்லை...


நட்பெனும் கரத்தின் பிடியை 

எவர் இரும்பு கரம் கொண்டு 

தடுத்து நிறுத்தினாலும் 

உறுதியாக அந்த கரத்தை 

இறுக பற்றிக் கொண்டேனே தவிர

அதை நழுவ விட்டதில்லை...


இப்படி காலமே ஆச்சரியமாக 

அதிர்ந்து பார்க்கும் 

பல நிகழ்வுகள் 

இப்போதும் நினைவில் இருந்து 

இறங்க மறுக்கிறது...


அதெல்லாம் என் இளமையின் 

துணைக் கொண்டு 

அந்த இளம் பருவ குளத்தில் 

குதியாட்டம் போட்டு...


வாழ்வை ஒரு சிறு பகுதியும் 

விடாமல் ரசித்து ருசித்து 

மகிழ்ந்து குதியாட்டம் போட்ட 

மறக்க முடியாத 

என் வாழ்வின் அமிர்த கடலென 

பரந்து விரிந்து 

கிடந்த நாட்கள்...


மீண்டும் அந்த அமிர்த கடலில் 

மூழ்கி கிடக்கும் 

பாக்கியத்தை 

ஏங்கி தவிக்கும் 

என் நிலையை...


இப்போது 

அந்த காலம் புரிந்துக் கொண்டு 

புன்முறுவலோடு 

தலையசைத்து 

மௌனமாக கடந்து செல்கிறது 

மீண்டும் அந்த நாட்களை 

மீட்டு கொண்டு வருவேன் என்று 

உறுதிமொழி அளிக்க 

மனமில்லாமலேயே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/05/26.

வெள்ளி, 8 மே, 2026

அன்பான விஜய் அண்ணாவுக்கு ஒரு கடிதம்...

 


அன்பான விஜய் அண்ணா 

நாளை தாங்கள் பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்கள் 🎉 

நாளை சனிக்கிழமை... மக்கள் சேவைக்கு உகந்த நாள்...

எப்போதும் சனி கடும் உழைப்பாளி... மேலும் அவர் கீழ் மட்டத்தில் உள்ள சாதாரண மக்களோடு எப்போதும் சுற்றுபவர்...

அவருக்கு கண்ணாடி மாளிகையில் இருந்துக்கொண்டு எதையும் செய்ய பிடிக்காது...

காசு பணம் பதவி மரியாதைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...

அவருக்கு தேவை நீதி நேர்மை மட்டும் தான்...

அகங்காரம் ஒரு சிறு துளி இருந்தாலும் அதை நசுக்கி விட்டு எதுவுமே நடக்காதது போல தனது பாதையில் செல்பவர்...

நிற்க...

ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் சொல்ல தான் இந்த கடிதம்..

அது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ராகுவின் அம்சம்... லாட்டரி டிக்கெட் விற்பவர் ஒருவர்...அது ராகுவின் அம்சம்..

அந்த ராகுவின் அம்சத்தை முதலில் நீங்கள் கழற்றி விட வேண்டும்...கலியுக ராஜா அவர்...

இந்த கலியுக ராஜா என்ன செய்வார் என்று போக போக தெரியும்... அந்த போக போக தெரிவதை விட நீங்கள் முதலிலேயே இவரை கழற்றி விட்டு விடுங்கள்...

அடுத்து புஸ்ஸி ஆனந்த்... இவர் விஸ்வ கர்மா அல்லவா... ஒரு விஸ்வகர்மாவால் தான் ஒரு அழகான மாளிகை பாண்டவர்களுக்கு உருவானது... அவர் ஏதோ பாண்டவர்கள் மீது உள்ள பேரன்பில் ஒரு மாய மாளிகை கட்டி கொடுத்து விட்டார்... அந்த மாளிகையினால் அகங்காரம் கொண்ட பாஞ்சாலி துரியோதனனை வம்புக்கு இழுத்து மகாபாரதம் எனும் பெரும் போருக்கு காரண கர்த்தா ஆக்கி விட்டு விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார்...

அப்புறம் ஒருவர் இருக்கிறார்...

அவர் யார் என்றால் செங்கோட்டையன்..இவர் சகுனி அம்சம்... அவர் வழிகாட்டுதல் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் உங்களை நிச்சயமாக அவர் அதாள பாதாளத்தில் தள்ளி விட்டு சிரித்துக்கொண்டே போய் விடுவார்...

பிறகு பெண்கள் ஓட்டு பெரும்பாலான சதவீதத்தில் வாங்கி வெற்றி பெற்று இருக்கிறீர்கள்... இவர்களும் ராகுவின் அம்சம் தான்.. இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.. இல்லை என்றால் அவர்கள் சீற்றம் உங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தி விடும்...

அதனால் நீங்கள் உங்களை சுற்றி உள்ள கலியுக ராஜாக்களை கழற்றி விட்டு மக்கள் தொண்டே மகேஸன் தொண்டு என்று தொடர்ந்து உங்கள் பயணத்தில் தெளிவான பாதை வகுத்துக் கொண்டு நேர்மையாக அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து ஆட்சி நடத்த வேண்டும்...

இரண்டு எதிர் கட்சிகள் சட்டசபையில்... அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.. இந்த சோதனையை எல்லாம் அவர்களே சந்தித்தது இல்லை என்பது தான் உண்மை... ஆனால் நீங்கள் இந்த இரும் பெரும் கட்சிகளை சமாளித்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மனம் கோணாதபடியும் நடந்து மிகவும் வேகமாக சாலையில் போகும் போது திடீரென ஒரு சிகப்பு லைட் விழுந்து நம்மை நிலைதடுமாற வைக்குமே அப்படி மத்தியில் உள்ள அரசு எனும் டிராபிக் போலீஸ்...

இப்படி இவர்கள் எல்லோரையுமே சமாளித்து நீங்கள் இந்த ஒரு ஐந்து வருடம் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சர்...

ஆம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்...

இந்த பத்திரிகை சந்திப்பில் எல்லாம் நீங்கள் நிச்சயமாக கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.. இல்லை என்றால் பெரும் விமர்சனத்தை சந்திப்பீர்கள்... அது நீங்கள் முன்னாடியே தயாராக வைத்துக் கொண்ட கேள்வி பதிலாக கூட இருக்கலாம்... ஏனெனில் கடந்த காலங்களில் அப்படி தான் நடந்தது...

இல்லை இல்லை நான் பத்திரிகையாளரையே சந்திக்க மாட்டேன் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா அல்ல...

ஜெயலலிதாவை விட்டு விட்டு கலைஞரை தேடி போய் விடுவார்கள் அன்றைய பத்திரிகையாளர்...

இன்றைய நிலையில் இரண்டு எதிர் கட்சிகள் மூத்த தலைவர்கள் தேடி போய் உங்களை சிக்கலில் மாட்டி விடும் கேள்விகள் அவர்களிடம் கேட்டு பதில் வாங்கி விட்டு அதை தலைப்பு செய்தியாக போட்டு விட்டு இதற்கு நீங்கள் பதில் அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி இதற்காவது முதலமைச்சர் பதில் அளிப்பாரா என்று கேள்வி குறி போட்டு விட்டு மக்களை யோசிக்க வைத்து விடுவார்கள்...

எது எப்படியோ மக்கள் சார்பாக நீங்கள் நீண்ட நெடிய மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐🙌🙏.

✍️ #இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/05/26.

ஞாயிறு, 3 மே, 2026

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் அதீத அமைதி...

 




அந்த அற்புதமான உள் அலங்காரம் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி அறையானது ஒரு அதீத அமைதியின் பிடியில் சிக்கி தவிக்கிறதா என்று பார்த்தால் அந்த அறை அப்படி இல்லை அது அந்த மனிதர்கள் இல்லாத தனிமையை ரசித்து சுவர்களும்,கதவுகளும்,சன்னல்களும் ,மௌன மொழியில் பேசி சத்தம் இல்லாமல் சிரிக்கிறது...


சற்று முன் சில பெரிய அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் பேசி சென்ற ரகசியத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு தங்களுக்குள் அவர்கள் பேசியவிஷயங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்கள் முகத்திரையின் லட்சணத்தை பேசி கேலி செய்து பின்பு கடுமையான கண்டனங்கள் நிறைவேற்றியது... அது பேசி சென்ற அந்த மனிதர்கள் கண்களில் படாமல் அந்த அறையில் உள்ள சுவர்களில் ஒன்றில் இரகசியமாக வைத்துக் கொண்டது...


என்றோவொரு நாள் அல்ல பல சமயங்களில் பல கதைகள் அங்கே வேறு வேறு முகத் திரை போட்டு கொண்டு வித விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள் மணிக்கணக்கில் பேசி விட்டு மறக்காமல் வெளியே செல்லும் போது தமது இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு எதுவும் நடக்காதது போல செல்வதை அந்த அறை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கிடந்த நாட்கள் மிகவும் அதிகம்...


இதோ இன்று ஒருவன் அந்த விடுதி அறையை இன்ச் இன்சாக நோட்டமிட்டபடியே தோதாக ஒரு இடத்தில் எதையோ செருகி விட்டு மீண்டும் ஒரு முறை அது சரியாக பொருத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு தனது அலைபேசியில் யாரையோ அழைத்து கிசுகிசுப்பாக சங்கேத மொழியில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு அந்த செய்தியை எதிர் முனையில் பார்த்து விட்டதை உறுதி செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த தகவலை அழித்து விட்டு வெளியே சென்று விட்டான்...

அநேகமாக அவன் அந்த ஐந்து நட்சத்திர விடுதி பணியாளராக தான் இருப்பான் என்று அந்த அறை யூகித்து உணர்ந்துக் கொண்டது...


இப்போது அந்த அறைக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது... இப்போது நாம் மட்டும் தனியாக இல்லை.. தன்னோடு இன்னொரு வஸ்து இருக்கிறது... இப்பொழுது பேசப் பட போகும் விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டு அந்த நேரத்திற்காக மிகவும் ஆவலாக காத்திருந்தது...


இது வரை இந்த அறையில் பேசிய அதிகார மிக்கவர்கள் பேச்சு எங்கேயும் கசிந்தது இல்லை.. தற்போது வரை அது தான் அந்த அறையின் தனித்துவம் என்று பலரும் அது காது பட பேசி சிலாகித்த போதெல்லாம் அந்த அறைக்கு கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இன்று அப்படி இல்லை..இதோ அவன் ரகசியமாக வைத்த அந்த வஸ்து காட்டிக் கொடுத்து விடும் என்று கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தது..

எப்படியோ அதிகாரமிக்கவர்களின் மோசமான முகத்திரை கிழிந்து தொங்க போகிறது என்று என்றும் இல்லாத பெரும் மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தது...

இப்போது யாரோவொருவர் கதவை திறக்கும் சத்தம் கேட்டு காதை கூர்மையாக்கியது...


அங்கே சில அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி பணியாளர்கள் தனக்குள் பேசிக் கொள்வதை கேட்டு அதிர்ந்தது... அது அந்த அதிகார மிக்கவர்கள் அந்த அறையில் தங்கவில்லையாம்... சில பல அவசர பணி நிமித்தம் காரணமாக வேறொரு கீழ் தளத்தில் உள்ள அறையில் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்திக்க நினைத்த நபர்களை பார்த்து பேசி விட்டு செல்ல போகிறார்களாம்...

இப்போது அந்த அறைக்கு கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்ததுடன் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது..

அங்கே அந்த மனிதன் செருகி வைத்த வஸ்துவின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது...

அந்த பணியாளர்கள் இத்தனை அலங்காரங்களும் வீணாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்றார்கள்...

அப்போது அந்த வஸ்துவை வைத்த மனிதன் சிறிது நேரத்தில் வந்து அதை எடுத்துக் கொண்டு வெளியே பரிதாபமாக செல்வதை இப்போது அந்த அறை வேடிக்கை பார்த்தது மிகவும் பாவமாக...

ஆனால் இது நமது அறைக்கு துரதிருஷ்ட முத்திரை குத்தி விடுவார்களே என்று கூடுதல் கவலை அதற்கு வந்தது...

அதுசரி இது நாள் வரை இங்கே நடந்த பேரங்களை எப்படியேனும் வெளிப்படுத்த வேறொரு வாய்ப்பு வராமலா போகும் விடு என்று அங்கிருந்த சன்னல் அருகில் தொங்கிய திரைசீலை காற்றில் அசைந்து ஆறுதல் படுத்தியது அந்த அறையை... அந்த அறையும் சரிதான் என்று சன்னல் சொன்ன தேறுதல் மொழியில் அமைதியடைந்தது...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/02/26. 


வெள்ளி, 1 மே, 2026

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...


 ஜெயிப்பது தோற்பது 

பற்றி எல்லாம் நான் எப்போதும் 

கவலை கொண்டதில்லை!

நான் ஆழ்ந்த காதலோடு 

நேசிக்க மறந்து 

இயந்திரத்தனமாக எப்போதாவது 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த நேரத்தை நினைத்து தான் 

தடுமாறி கலங்கி இருக்கிறேன்... 

தொலைக்க கூடாத 

அந்த மதிப்பு மிக்க 

பொக்கிஷத்திற்காக...

நான் அழுது விடுவதை பார்த்து 

என்னவோ ஏதோ என்று 

பதறி விடுகிறார்கள் அங்கே 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

சில மனிதர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.

உயிரோட்டமாக ஜீவித்து இருக்கும் கலை...

 


ஏதேதோ தேடி ஓடிக் கொண்டே 

இருக்கும் மக்களின் 

தீராத அந்த நெடுந்தூர ஓட்டத்தின் 

எல்லை எது என்று 

தெரியவில்லை...


வறண்ட பாலைவனத்தில் 

தண்ணீர் தேடி அலையும் 

அந்த பறவைக்கு கூட 

ஒரு அர்த்தம் இருக்கிறது...

உயிர் மீட்டலின் வலி அது...

தன்னை தானே 

மாய்த்துக் கொள்ள 

மனம் இல்லாமல் 

இறுதி வரை 

போராடிக் கொண்டிருக்கும் 

தன் முனைப்பின் நம்பிக்கை அது...


அந்த பறவைக்கு இங்கே 

எதையும் தன் வசப்படுத்திக் கொள்ள 

தேவையில்லாத மனநிலை அது...

அதன் தேவை எல்லாம் 

தான் ஜீவித்து இருக்கும் 

காலத்தை உறுதி செய்துக் கொள்ள 

போராடும் நிலையது...


இங்கே அந்த சிறு பறவையோடு 

ஒப்பிட்டு பார்க்கும் போது கூட 

இங்கே ஈசல் போல 

இயந்திரத்தனமாக ஓடும் 

மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்!


இங்கே தன்னிறைவு எனும் 

மனநிலையை தாண்டி 

எதற்கும் மதிப்பில்லை என்று 

இத்தனை தூரம் 

நான் அந்த சாலையில் 

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் 

அந்த சிறு பூச்சியிடம் 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 


அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து 

ஒருவன் என்னை 

வேகமாக தள்ளியதும் அல்லாமல் பைத்தியம் தனியாக 

ஏன் இங்கே பேசுகிறாய்...

இங்கே பார் நாங்கள் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

நீ நட்ட நடுசாலையில் 

ஒன்றுக்கு உதவாமல் 

வெட்டிக் கதையை 

தன்னந்தனியாக பேசிக் கொண்டு 

இருக்கிறாய்..

நேரம் போனால் வராது...

தள்ளி நில் சித்தம் கலங்கியவனே 

என்று ஆக்ரோஷமாக 

கோபத்தை காட்டி விட்டு 

ஓடுகிறான்...


அவன் என்னிடம் பேசிய 

அந்த சில நிமிடங்களில் 

அவனோடு பிரயாணம் செய்த 

கூட்டம் அவன் ஒருத்தன் 

தன்னோடு பிரயாணம் 

செய்ததையே

மறந்து விட்டு புள்ளியாக 

மறைந்த போனார்கள்...


அவனோ என்னை திரும்பி 

முறைத்து பார்த்தான்...

நான் சலனமில்லாமல் 

அவனை நோக்கி ஒரு புன்னகையை 

உதிர்த்து விட்டு 

அந்த பூச்சிக்கு 

இன்னொரு தத்துவ சாரலை 

போதித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

அதுவும் மெல்ல ஊர்ந்து கொண்டே 

என் கதையை கேட்டு 

சலிப்பில்லாமல் 

தன் பயணத்தை 

புத்துணர்ச்சியோடு 

தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.







புத்தக பை சுமந்து பட்டாம்பூச்சியாக திரிந்த அந்த நாளில்...

 




புத்தக பை சுமந்து 

பட்டாம்பூச்சியாக திரிந்த 

அந்த காலத்தில் 

நினைவுகள் எல்லாம் 

மனதின் ஒரு மூலையில் 

தித்திக்கும் வெல்லமாக 

சிதறிக் கிடக்கிறது...


நானும் என் நண்பர்களும் 

விடுமுறை நாட்களில் 

ஓயாமல் சுற்றி சுற்றி வந்த 

அந்த ஆலமரத்தின் நிழல் 

மட்டும் ஒரு அடையாள சின்னமாக 

அங்கே ஊரின் நடு பகுதியில் 

எங்கள் வருகைக்காக 

ஏங்கி போவோர் வருவோரை 

உற்று உற்று பார்க்கிறது...


அந்தவொரு விடுமுறை நாளில் 

நான் மட்டும் நிறைய எலந்தை பழங்களை 

தன் பாவாடையில் நிறைத்து 

ஓடுவதை பார்த்து 

நீ என்னை துரத்தி வந்து 

அத்தனை பழங்களையும் 

சிதறடித்து சண்டை போட்டு 

என் பேச்சு கா விட்டு 

பேசாமல் வேகமாக சென்ற 

நாள் மட்டும் இன்னும் 

அப்படியே இருக்கிறது 

என் மனதின் சாலையில் 

ஒரு பெரும் பள்ளமாக...


அது நடந்து பல வருடங்களாகி 

விட்ட போதும்

இப்போதும் 

எங்கே எலந்தை பழங்களை 

பற்றிய பேச்சுக்கள் 

வந்தாலும் நீ அங்கே 

சத்தமில்லாமல் 

என் எதிரே கோபமாக 

நின்று விடுகிறாய்...


தற்போது நீ எங்கே என்று 

தெரியவில்லை என்றாலும் 

உனக்கு நம் சண்டை 

ஞாபகம் இருந்தால் 

எப்போதேனும் நாம் சந்திக்கும்

தருணத்தில் 

என்னிடம் பழம் விட்டு விடு...


நீ எனக்கு தந்த காயை 

வைத்துக் கொண்டு 

நான் படும் 

அவஸ்தையை பார்த்து 

இங்கே என்னை பலபேர் 

கேலி செய்கிறார்கள் 

என் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.


வியாழன், 30 ஏப்ரல், 2026

இத்தனை வன்மமும் எதற்காக??

 

 


என் மீதான 

காதல் உணர்வுகளில் 

ஒரு வித மையல் கொண்டு

என்னை நெருங்காதே...

உன் மீதான 

என் பெரும் காதலின் 

அலையில் நீ அடித்து 

சென்று நடுக் கடலில் 

தத்தளிக்கவும் கூடும்...


அந்த பரந்து விரிந்துள்ள 

பெரும் அடர்ந்த காட்டில் 

பயமின்றி ஒரு பட்டாம்பூச்சியாக 

நீ இங்கும் அங்கும் பறந்து 

செல்லும் போது கூட 

உன் இலேசான வண்ணமயமான 

சிறகை கொண்டு என்னை நீ 

தீண்டி நெருங்காதே...


அந்த சிறு தீண்டலில் கூட 

நான் பெரும் தீயாக தகித்து 

உன்னை என் காதலியின் தீயில் 

இரையாக்கி விடவும் கூடும்...

அதனால் என்னை விட்டு 

வெகுதூரம் நீ விலகியே இரு...


என் புழக்கடையில் பூத்திருக்கும் 

அந்த ரோஜா பூவை நான் 

என்னை மறந்து ரசிக்கிறேன் 

என்பதற்காக 

நீ அங்கே மலர துடிக்காதே...


நான் அந்த செடியில் உள்ள 

முள்ளாக உன் சதையை 

கிழித்து பெரிய ரணமாக 

காலம் முழுவதும் 

உன்னை வலியில் நான் 

துடிக்க விடவும் கூடும்...

அதனால் நீ அந்த மலராக 

மலர பெரிய ஆவல் கொள்ளாதே...


இத்தனை வன்மமும் எதற்காக 

என்று நீ அங்கே அழுத முகத்தோடு 

என் மீது கேள்வி கணைகளை

கேவிக் கொண்டே 

என் மீது எரிகிறாய்...


அத்தனையும் வன்மம் அல்ல 

அது நான் உன் மீது 

பெரும் பித்து பிடித்து 

ஒரு பைத்தியக்காரனாக

இங்கும் அங்கும் அலைந்து 

தொலையும் போது 


இந்த பிரபஞ்சம் முழுவதும் 

உன்னை கைநீட்டி 

குற்றம் சாட்டி 

நீ அந்த குற்ற உணர்ச்சியில் 

கரைந்து...


என் மீதான உன் பேரன்பு கொண்ட 

காதலின் சுவாசத்தை 

நிறுத்தி 

என்னை விட்டு 

வேறொரு உலகத்திற்கு 

சென்று விடக்கூடாது 

என்பதாலேயே 

எனக்கு நானே 

கொடுத்துக் கொள்ளும்/கொல்லும்

தண்டனையடி 

என் தீஞ்சுவை காதலே!!!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/04/26.









செவ்வாய், 28 ஏப்ரல், 2026

தோல்வி தரும் பெரும் ஆழ்ந்த மன அமைதி...


 பல முயற்சி எனும் 

அற்புதமான பூக்கள் 

கடும் வெப்பத்தால் 

கருகி வீழ்வது போல 

என் முன்னெடுப்பு 

நிகழ்வுகள் எல்லாம் 

என்னை துன்புறுத்தி 

மகிழ்ந்த போதும்...


பெரும் அற்புதமான 

அந்த அலையில்

கால் நனைத்தலில் 

நான் என்னை மறந்து 

இந்த சிருஷ்டிக்கு 

நன்றி சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 

அதே அலை என்னை 

கடலில் எங்கோ ஒரு மூலையில் 

என்னை 

இழுத்துக் கொண்டே போய் 

போட்டது போல 

தடுமாறி அதிர்ச்சி 

அடைந்த போதிலும்...


நான் எனக்கான 

சாதாரண உணவை 

பெரும் பிரயத்தனப்பட்டு

சாப்பிட அமரும் போது 

எங்கிருந்தோ வந்த நாய் 

அதை வேகமாக இழுத்துக் கொண்டு 

போய் என் வயிற்றின் அக்னியை 

மேலும் தகிப்பூட்டி 

நான் அதிர்ச்சியாக 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

இருப்பதை 

பலபேர் கலகலவென சிரித்து 

நான் அங்கே 

வேடிக்கை பொருளாக 

காட்சியளித்த போதும்...


நான் இங்கே இம்மியளவும் 

கலங்குவதே இல்லை...

இங்கே எனக்கு தோல்வி என்பதோ

என் முன்னெடுப்புகள் எல்லாம் 

கானல் நீராகுவதோ 

என்னை சற்றும் நிலைதடுமாறி 

கீழே விழாமல் 

மிகவும் கூடுதல் வலிமையாக 

நின்று கொண்டு தான் 

இருக்கிறேன்...


அந்த அற்புதங்கள் 

எல்லாம் நிகழ...

அத்தனையும் சாத்தியமாக...

எனக்கு உதவிய தோல்வி எனும் 

மனதை பக்குவப்படுத்திய 

நண்பனால் தான்

இயன்றது...

தோல்வி எனும் நண்பனின் 

கரம் பற்றி நான் எத்தனை தூரம் 

செல்வேன் என்று தெரியாது...

அது வெற்றிகரமாக 

கனியாகாவிட்டாலும் 

ஒரு வித ஆழ்ந்த 

பக்குவ நிலையை 

உணர்த்தி என்னுள் 

ஆழ்ந்த அமைதியை 

அனுபவிக்க 

உதவ தவறுவதில்லை...

அதனால் என் நிரந்தர தோழன் 

அவன் ...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/04/26.




ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

முகமூடியின் மாய வித்தை...

 




பிரதிபலிக்க கூடாத 

இடங்களில் எல்லாம் 

உணர்வுகளை 

மறைக்கும் திரையாக 

பலபேருக்கு 

கை கொடுத்த போதும்...


எதிரிகளை எதிர் கொள்ள 

திராணி இருந்தும் 

அவர்களை கையாள 

ஒரு சூழ்ச்சியாக 

மறைந்துக் கொள்ள 

பயன்பட்ட போதும்...


சில நேரங்களில் ஓட்டுகளை 

அறுவடை செய்ய 

நேரத்திற்கு தகுந்தார் போல 

தயார் நிலையில் இருந்து 

அரசியல்வாதிகளுக்கு 

கடும் பிரயத்தனப்பட்டு

பாதுகாப்பு கொடுத்த போதும்...


சில உறவுகளின் குணங்களை 

பிடிக்காமல் 

ஒதுங்கிக் கொள்ள 

விகாரத்தில் தோன்றும் 

கடும் கோபத்தை

மறைத்து கொள்ள 

எளிமையாக உதவிய போதும் 

அவர்களால் 

பாதிப்பு ஏதும் நேர்ந்து விடாமல் 

அதை கண்ணை இமை 

காப்பது போல

காத்து வந்த போதும்...


இப்படியாக அதை பலவகையில் 

சூழ்ச்சியாக 

பயன்படுத்திக் கொள்பவர்களை 

எல்லாம் விட்டு விட்டு 

இதோ இப்போது 

என்னோடு தேவையே 

இல்லாமல் வலுக்கட்டாயமாக 

சண்டை போட்டு 

உன் முகத்திரையை கிழித்து 

தொங்க விடுகிறேன் என்று

முகதிரையே இல்லாத 

என்னை...

என் உணர்வுகளை தூண்டி 

கையறு நிலையில் 

நிற்க வைத்து...


வீதியில் பலபேர் 

வேடிக்கை பார்க்க வைத்து 

விட்டதில் தான்...

முகமூடியே இல்லாத 

அதன் நிறம் என்ன என்று கூட 

தெரியாத நான் 

அந்த முகமூடியின் 

எண்ணற்ற 

மாய வித்தை சக்தியை 

ஒரு வித பயத்தோடு 

அதிர்ச்சியோடு 

உணர்கிறேன்...


இங்கே இந்த சமூகத்தில் 

எதையும் கண்டுகொள்ளாமல் 

சூழ்ச்சி பற்றிய 

எந்தவித எண்ணங்களும் 

இல்லாமல் பயணிப்பது 

மிக மிக 

கடினமான ஒன்று என்று... 

என் நிலையை 

அங்கே பலமுகமூடிகள் 

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் 

வேடிக்கை பார்த்தது மட்டும் அல்லாமல் 

சிரித்தும் வைப்பதை 

நான் கொஞ்சம் எரிச்சலோடு 

கடந்து போனேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/04/16.


அந்த பொம்மைக்காகவேனும்...

 




நீ என்னோடு பயணித்த நாட்களில் 

எல்லாம் நமது வீட்டில் 

ஒரு ஓரமாக அமைதியாக 

வேடிக்கை மட்டுமே 

பார்த்துக் கொண்டு இருந்தது...


நமது சிறு சிறு சுவாரஸ்யமான 

மகிழ்வில் எல்லாம் 

அது சிறு முறுவல் கொண்டு 

பார்த்து ரசித்து இருந்தது...


ஏதோவொரு நேரத்தில் 

நாம் ஊடல் கொண்டு 

பேசாத நாட்களில் எல்லாம் 

ஒரு தோழமையோடு 

சோகமான முகத்துடன் 

இருப்பது போலவே 

காட்சி அளிக்கும்... 

ஊடலை நிறுத்தி விடுங்களேன் 

என்று கெஞ்சும் 

ரகசிய தொனியில்...


இதோ இப்போது 

நமக்குள் ஏற்பட்ட 

பெரிய கருத்தியல் மோதலில் 

உனது வீட்டிற்கு சென்று 

நாட்கள் மாதங்களாக 

உருண்டோடி விட்டது...


எனக்கான துணையாக 

நீ ஆசையாக வாங்கி தந்த 

முதல் ஆண்டு நிறைவில் 

திருமண நாள் பரிசாக 

இதோ இந்த கரடி பொம்மை 

பாவமாக என்னை பார்க்கிறது...


என்னை பார்த்து எப்போது 

நீ சென்று கூட்டி வருவாய் என்று 

கேட்பது போல முகத்தை 

தொங்க போட்டு கிடக்கிறது...

என் மீது கோபித்துக் கொண்டு...


எனக்காக இல்லை என்றாலும் 

இந்த கரடி பொம்மைக்காகவேனும்

இல்லம் தேடி ஓடி வந்து 

என்னை ஒரு பாவனைக்காக

அணைத்துக் கொள் 

பாவம் அந்த உயிரற்ற 

ஆனால் உணர்வை 

புரிந்துக் கொண்டு பிரதிபலிக்கும் 

ஜீவனின் மகிழ்விற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.


சனி, 18 ஏப்ரல், 2026

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி கோப்பையில் ஊற்றப்பட்ட அந்த விலை உயர்ந்த மது ரசம்...

 

 


எத்தனையோ 

கனவுகள் அடங்கிய 

அலங்கரிக்கப்பட்ட 

கண்ணாடி கோப்பையில் 

ஊற்றப்பட்ட விலை உயர்ந்த 

மது ரசத்தின் 🍷 துளிகளில் 

மூழ்கும் இரு உள்ளங்கள்...


அன்றாட தேவைகளுக்கு 

ஓடி ஓடி 

தினசரி நிகழ்வுகளில் 

தொலைத்து விட்டு 

கிடைக்கும் 

ஓரிரு மணித் துளிகளில்...


தன் அளப்பரிய காதலை 

தன் இணைக்கு எப்படியும் 

கடத்தி விட துடித்து 

கணங்கள் போதாமல் 

தோற்று போகும் 

அந்த காதல் உள்ளங்கள்...


ஏதோவொரு கணத்தில் 

இணையோடு ஒன்ற முடியாமல் 

பிரிந்து செல்ல துடித்து 

நீதிமன்றத்தில் 

எத்தனையோ கேள்விகளுக்கு 

வழக்கறிஞர் சொல்லி கொடுத்த 

அந்த தயார் பதிலை சொல்லி... 


அந்த புரிந்துக் கொள்ள 

எந்தவொரு முயற்சியும் 

செய்யாத வாழ்வின் 

அற்புதமான தருணங்கள் 

நீதிபதியின் உத்தரவில் 

கரைந்து ஆழ் மனதில் 

தாங்கொணா ரணத்தை 

கொடுத்து ...


வாழ்வின் மீது இது வரை 

வைத்திருந்த பெரும் மதிப்பை 

வெறுத்து ஒதுக்கும் 

சில பலஉள்ளங்களின் 

ஆழ் மனதில் பதுக்கி வைத்திருக்கும் 

கண்ணீரின் வீரியத்திற்கு 

இங்கே எவரும் ஆறுதல் 

சொல்லி தேற்ற முடியாது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/26.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல்...


எந்தவித முன்னறிவிப்பும் 

இல்லாமல் 

உன் வாழ்வின் அத்தனை 

அத்தியாயங்களும் 

முடிவுக்கு வந்து விட்டது 

என்கிறது அங்கே காலம்...

நான் அந்த கூற்றை கேட்டு 

ஆதரிக்கவும் இல்லை 

எதிர்க்கவும் இல்லை...

இது வரை நான் எழுதிய 

அத்தியாயங்கள் 

வாசித்து விட்டு 

அங்கே அந்த வாசகர்கள் 

இறுதி அத்தியாயத்தை 

சுவாரஸ்யமாக எழுதி முடித்து 

விடுவார்கள்...

அது நான் எழுதி வந்த கதையின் 

அத்தியாயத்தை விட 

இன்னும் சிறப்பாக இருக்கும்...

அது பற்றிய கவலை எனக்கு எதற்கு இனி?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/04/26.

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...