ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வெள்ளி, 24 ஜூலை, 2026

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

 



வாழ்வெனும் 

நெடும் பாதையில் 

வஞ்சிக்கப்பட்ட 

பலரோடும்...

உண்மையான 

நேசத்தை கொட்டி 

எதையும் 

என்னிடம் எதிர்பாராமல் 

பயணிக்கும் 

பலரோடும் 

தொடர்கிறது 

நிழல் போல வாழ்க்கை...


அந்த பாதையின் 

இரு பக்கத்திலும் 

நன்மை தீமையெனும் 

சிறகுகள் என்னை 

சுமந்து செல்கிறது...

கடந்து செல்ல வேண்டிய 

பாதையை மிகவும் 

இலகுவாக....


சில சமயங்களில் 

வாழ்வெனும் தோட்டத்தில் 

மலர்ந்து மணம் வீசும் 

சுகந்த மலர்களின் 

நறுமணத்தை நுகர்ந்து 

தென்றலாக

செல்கிறது...


பல சமயங்களில் 

வழியில் சக மனிதர்கள் 

நடத்தும் வேடிக்கை 

நிகழ்வுகளை

மிகவும் நிதானமாக 

ரசித்தபடியே கடந்து 

செல்கிறது...


ஏதோ பிறந்து வளர்ந்து 

இங்கே எதையோ செய்து 

அதன் மூலமாக 

சமூக மரியாதையை தேடி 

அலைபவர்கள் 

மத்தியில்...


நான் நானாக 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

என் வாழ்க்கைக்கு 

அர்த்தத்தை தேடி தேடி 

சோர்ந்து போகாமல் 

அந்த நெடும் பாதையில் 

கையில் ஜீவித்து இருக்க 

வழி துணையாக 

எந்தவித உணவையும் 

எடுத்துக் கொள்ளாமல் 

ஏதோவொரு நம்பிக்கையில் 

பயணிக்கிறேன்...


இயற்கையோ 

எனக்கு 

தேவையான பொழுதில் 

தேவையான அமிர்தத்தை 

அங்கங்கே கொடுத்து 

என் கரங்களை குலுக்கி 

புன்னகையோடு 

பயணிக்க வைப்பதை 

பார்த்து கொஞ்சம் 

ஆச்சரியமாக பார்த்து 

பெருமூச்சொன்று 

உதிர்த்து 

கொஞ்சம் 

திரும்பி பார்க்கிறேன்...


கண்ணுக்கு எட்டிய 

தூரம் வரை 

என் பாதையில் 

நான் மட்டுமே 

இன்னும் 

அங்கே பயணிக்கிறேன்...

வேறு எவரையும் 

காணவில்லை...


அந்த நெடும் பாதை 

என்னிடம் 

மெதுவாக சொல்கிறது...

அவர்கள் அவர்களை 

நம்பி எடுத்து வந்த 

உணவு தீர்ந்து போய் ...


எங்கோ வேறு பாதையில் 

காலத்தின் கைகளில் 

அடைக்கலமாகி

அந்த காலத்தை 

திட்டிக் கொண்டே 

அதனோடு 

பெரும் குரலெடுத்து 

அதை சபித்துக் கொண்டே 

பயணிப்பதாக சொல்லியது...


இங்கே இலகுவான பாதை 

இங்கே இருக்க 

அவர்கள் எப்படி 

வழி தவறினார்கள் என்று 

எனக்கு நானே கேள்வி 

எழுப்பிக் கொண்டே 


மீண்டும் அந்த சுகமான 

நெடும் பாதையில் 

பயணிக்கிறேன்...

நான் அடைய வேண்டிய 

இடம் இன்னும் 

கொஞ்ச தூரம் தான் 

உள்ளது என்று 

அந்த காலம் சூட்சமமாக 

என் காதில் சொன்னதை 

குதூகலத்துடன் 

ரசித்துக் கொண்டே 

பயணிக்கிறேன் 

கொஞ்சம் வேகமாக 

நடை போட்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/07/26.


கர்ணன் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும்...


ஜனநாயகம் 

சற்றே விலகி நின்று 

வேடிக்கை பார்க்கிறது 

நடக்கும் கூத்தை...


இது ஜனநாயகமா 

இல்லை 

சல்லியன் நாடகமா

என்று...


என்ன கூத்து வேண்டுமானாலும் 

இந்த தமிழ் நாட்டில் 

அரங்கேற்றம் செய்யலாம் 

என்ற துணிவு இங்கே 

எவருக்கும் வருகிறது...


ஒரு காலத்தில் 

தரம் நிறைந்த மக்களால் 

இந்த மண் 

பெருமையடைய... 

இந்த மண்ணால் 

மக்கள் பெருமையடைய...


அது ஒரு பொற்காலம் என்று 

கிசுகிசுத்து பெருமூச்சு 

விடுகிறார்கள் 

அங்கே ஒரு சில மனிதர்கள்...


தற்போதோ

கொஞ்சமும் மண் மீதான 

பிணைப்பு இல்லாமல் 

இங்கே மக்கள் அனைவரும்

ஒன்று சேர்ந்து 

மகா சல்லியன் 

ஆனதால் ....


இங்கே தமிழ் நாடு 

கர்ணனை போல 

கதி கலங்கி நிற்கிறது...

என்ன செய்வது என்று 

தெரியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/07/26.


செவ்வாய், 21 ஜூலை, 2026

காலத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படும் மனிதர்கள்...


காலம் எந்தவித இரக்கமும் 

இல்லாமல் பல மனிதர்களை 

வலுக்கட்டாயமாக இழுத்து 

செல்கிறது...

அவர்கள் தன் சுயத்தை 

தொலைத்து  

எல்லா உணர்வுகளையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஆழத்தில் 

புதைத்து விட்டு 

அதனோடு பயணிக்கிறார்கள்...

நானோ அந்த காட்சியை 

இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

அமர்ந்து 

தேநீரை மிடறு மிடறாக 

பருகிய படியே 

ரசித்து வேடிக்கை பார்க்கிறேன்... 

பிரபஞ்சமோ நின்று நிதானமாக 

என்னை சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்த்து ரசிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.

இந்த பிரபஞ்சம் மூச்சை நிறுத்தாமல் பயணிக்கும் சூட்சமம்...

 

 


தினம் தினம் 

ஓடி ஓடி களைப்பது

இந்த வயிற்றுப் பாட்டிற்கு தான் 

என்று போலியாக 

சொல்லிக் கொண்டு 

ஓடும் மனிதர்களை 

பார்த்து பெரும் வியப்பில் 

ஆழ்கிறது இந்த காலம்...


அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 

ஆஸ்தியோ கோடியில் 

கொடி கட்டி பறக்க 

அந்த ஆஸ்தியின் ஒரு மூலையில் 

அவர்கள் அஸ்திக்கு அங்கே 

இடம் இல்லை அங்கே என்ற போதும்...

பொருளற்ற ஓட்டத்தில் 

ஏன் இந்த பொக்கிஷமான 

வாழ்க்கையை 

தன் சுயநலத்திற்காக பலியிட்டு 

படையலிட்டு

அதை வேகமாக வேகமாக

உண்கிறார்கள் ...


அவர்கள் மென்று 

உமிழ்ந்த பொய்களின் 

எச்சத்தில்

இந்த பிரபஞ்சம் கறைப்பட்டு 

அசிங்கப்படுவதை

கொஞ்சம் அருவருப்போடு

அந்த விடியல் 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் வேளையில்...


அங்கே சூரிய கிரணகங்களின் 

மெல்லிய ஒளியில் 

தன் சோம்பலை 

கணப் பொழுதில் முறித்து 

உண்மையில் 

தன் பசியெனும் 

பெரும் தீயை அணைக்க

எந்த அகங்காரமும் 

இல்லாமல் ...

 

தினம் தினம் 

வானில் ஒரு முறையான 

வரிசையோடு...

ஒற்றுமையோடு...

நிலை மாறாமல் பறந்து 

ஒரே மாதிரி விடியலை 

உற்சாகமாக வரவேற்று 

உண்மையாக 

தன் வயிற்றுப்பாட்டிற்காக

நெடுந்தூரம் 

இரை தேடும் பறக்கும் 

அந்த பறவைகளுக்காக...


இந்த பிரபஞ்சம் இன்னும் 

மூச்சை நிறுத்தாமல் 

இயங்கி கொண்டிருக்கிறதோ 

என்று பெருமூச்சுடன் 

காலமும் அந்த பறவைக்கு 

துணையாக 

எந்தவித சத்தமும் இல்லாமல்

பெரும் நன்றியுணர்வோடு

உடன் பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.


வாழ்வெனும் இடிபாடுகளில் சிக்கி...

 


தினம் தினம் 

வாழ்வெனும் இடிபாடுகளில் 

சிக்கி சிதறி 

கிடக்கிறேன்...


எந்தவித தற்காப்பு வித்தையும் 

இது வரை நான் 

கற்றுக் கொள்ளப்படாததன் 

விளைவை நான் அனுபவித்து 

அந்த விதி எனும் 

பெரும் பாறாங்கல் 

என் முதுகில் ஏறி 

இங்கும் அங்கும் 

நர்த்தனம் ஆடுகிறது...


அந்த நர்த்தனத்தின் வலியில் 

நான் முனகி ஓலமிடுவதை 

அந்த காலமெனும் பைரவனோ

எனக்கும் இதுக்கும் 

சம்பந்தம் இல்லை என்று 

ஒரு ஒற்றை பார்வை 

பார்த்து விட்டு 

கொஞ்சம் மனமிரங்கி 

ஓலமிடுகிறது...


அங்கே என் இரத்த சொந்தங்களும் 

தெரிந்தவர்களும்

என்னை தேடும் வேட்டையை 

சிறிது நேரம் நடத்தி விட்டு 

அவரவர் வேலைக்கு 

முகத்தில் வலுக்கட்டாயமாக 

வரவழைக்கப்பட்ட கவலையோடு 

தன் வீட்டுக்கு 

திரும்புகிறார்கள்... 


சும்மா என்று நினைத்து விடாதீர்கள்...

அவள் ஆடிய திமிர் பிடித்த 

ஆட்டத்திற்கு இந்த காலம் 

முன்னமே நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று 

மனதிற்குள் 

முனகுவதாக நினைத்துக் கொண்டு 

சற்றே குறைந்த குரலில் முணுமுணுத்துக்கிறார்கள்...


நான் அந்த முணுமுணுப்பு 

குரலை உற்று கேட்டு விட்டு 

இவர்களுக்கு அந்த காலமெனும் 

பைரவனே பரவாயில்லை 


எந்தவித அலங்கார பூச்சும் 

இல்லாமல் வெளிப்படையாக 

தன் இயலாமையை 

சொல்லி விட்டு 

கொஞ்சம் 

கருணையோடு 

ஓலமிட்டு சென்று 

இருக்கிறானே என்று 

அவனுக்கு மானசீகமாக 

நன்றி செலுத்தி 

கொஞ்சம் கொஞ்சமாக 

அந்த இடிப்பாடுகளில் 

புதைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/26.


சனி, 18 ஜூலை, 2026

விசுவாசம்...


ஒரு பறவையின் 

தாகத்தை தீர்க்க 

அந்த மனிதர்கள் 

கழிவு நீரை 

கொஞ்சம் கூட 

இரக்கமே இல்லாமல் 

பரிசளித்து விட்டு 


நவீன நாகரீகத்தின் 

படிமங்களில் 

புதைந்து கொள்கிறார்கள் 

கொஞ்சமும் கருணை 

இல்லாமல்...


இங்கே இயற்கையும் 

மௌன சாட்சியாக 

அவர்கள் ஜீவ காருண்யத்தின்

அளவை மதிப்பிட்டு 

பரிசொன்று கொடுப்பதற்காக 


நெடு நேரம் காத்திருப்பதை 

உணர்ந்து 

சிறிது அலட்சியமாக 

திரும்பி பார்க்கும் போது 

அங்கே இயற்கை 

இத்தனை நாள் நாம் தந்த 

பெரும் பரிசிற்கு 

நிகராக இல்லை என்றாலும் 

சிறியதாக 

நிலநடுக்கம் எனும் 

புதைமண்ணில் நேசத்தோடு 

புதைத்துக் கொண்டது 


அதுவும் தாய் தானே 

அந்த அரவணைப்பின் 

கிடுக்கி பிடியில் 

உணர்ந்து கொண்ட தருணத்தில் 

அவர்கள் உயிர் அங்கே 

அதன் கைகளிலேயே 

பிரிந்ததில்... 


அந்த பறவை அங்கே 

அவர்களுக்காக

அந்த இடிப்பாடுகளின் 

நடுவில் துக்கம் 

அனுசரிக்கும் 

கருணையில் தான் 

இந்த பிரபஞ்சம் 

தனது அச்சில் பிறழாமல் 

சுற்றிக் கொண்டு இருக்கிறது

என்று சூட்சமமாக 

உணர்ந்து ...

இந்த பிரபஞ்சம் 

பெரு மூச்சொன்று

உதிர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/07/26.


புதன், 15 ஜூலை, 2026

பிறந்து பிறந்து சலித்து விட்ட என் ஜீவனோட்டத்திற்கு..


உன் நடனத்தில் 

இந்த பிரபஞ்சத்தை 

மிகவும் நுட்பமான 

நேர்த்தியால் 

சுழல வைக்கும் 

தந்திரத்தில் 

நான் எத்தனையோ நாட்கள் 

அதை நினைத்து அசந்து 

போவதுண்டு...


காலத்தின் பசிக்கு இரையாகும் 

ஜீவன்களை நீ பக்குவப்பட்ட 

ஆன்மாக்களை மட்டும் 

பிரித்தெடுத்து 

உன்னுள் மிகவும் பத்திரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்...


மீதி ஆன்மாக்களை 

உன் நடனத்தினை நிறுத்தாமல் 

அவரவர் வினைக்கேற்ப 

கருப்பை தொட்டிலில் 

அமைதியாக 

அந்தந்த ஆன்மாவின் 

பக்குவ நிலைக்கு ஏற்ப 

சேர்த்து விட்டு 

உன் புன்சிரிப்பு கூடிய 

முகத்தோடு கூடிய 

நடனத்தை 

அதே அதிர்வலையில் தொடர்கிறாய்...


இங்கே நான் எத்தனையோ 

கருப்பையில் புகுந்து வந்து 

புகுந்து வந்து....

களைத்து விட்டதை 

நீ உணராமல் 

இருந்திருக்க மாட்டாய் என்று 

எனக்கு தெரியும்...


இருந்தும் நான் உனக்கு 

போட்டியாக மிகவும் 

மோசமான நடனத்தை 

தாள லயம் பிசகி 

நடத்திக் கொண்டு 

இருக்கிறேன்...

உன் கவனத்தை 

ஈர்ப்பதற்காக...


அந்த நடனத்தை 

சகிக்க முடியாமல் 

நீ என்னை உன் பாதத்தில் 

சேர்த்து கொண்டு 

பிறவா நிலையை 

கொடுப்பாய் என்ற 

பெரும் நம்பிக்கையோடு....


பிறந்து பிறந்து 

சலித்து விட்ட 

என் ஜீவனின் ஓட்டத்திற்கு 

நிரந்தரமாக ஓய்வு கொடுத்து 

எனக்கு ஒரு அடைக்கலம் 

கொடுத்து 

அணைத்துக் கொள் 

என் ஆத்மநாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/26.


வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...