ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 28 மே, 2026

ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...


என் உயிர் சுவாசத்தின் 

தீண்டலாக 

நீ என்னோடு 

ஒருவித கதகதப்போடு

ஜீவித்து இருக்கிறாய்...


ஒரு நகரத்தில் சாலை வெளியின் 

பரபரப்புக்குகளுக்கிடையே 

நகரும் 

பட்டாம்பூச்சியாக 

என் மனமெனும் சாலையில் 

நீ பறந்து செல்கிறாய்...


உன் வருகைக்காக 

காத்திருக்கும் நேரத்தின் 

நொடிகளுக்குள் 

ஒரு தேவதையாக 

என்னோடு அரூபமாக 

பேசி சிரிக்கிறாய்...


என் வனமெங்கும் 

உன் காதலெனும் 

பூவின் வாசத்தில் 

கிறங்கடிக்கிறாய்...


காலமெனும் நதியில் 

உன்னோடு பயணித்த 

நினைவுகளை தூவி 

நான் அந்த நதியின் கரையில் 

ஒதுங்கி அந்த நினைவுகளை 

காவல் காத்து சிறை 

பிடித்திருப்பேன்...


என்றோவொரு யுகத்தில் 

நீ என் பெரும் காதலே காதலே 

என்று கண்ணீர் மல்க 

ஓடோடி வந்து 

என்னை அணைத்துக் கொண்டு 

அந்த நதியை என்னிடம் இருந்து 

விடுதலை செய்வாய் என்ற 

நம்பிக்கையோடு 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/05/26.






செவ்வாய், 26 மே, 2026

அந்த அமிர்த கடலில் மூழ்கி களித்த நாட்கள்...


பெரும் புயலே அடித்தாலும் 

கவலைகளின் நிழலில் 

எப்போதும் 

ஒதுங்கியதாக 

எனக்கு நினைவில் இல்லை...


ஒரு கணப் பொழுதிலும் 

மகிழ்ச்சி எனும் 

உணர்வெனும் ஆற்றில் 

நனைந்த நாட்களை 

நினைக்க 

தவறியதில்லை...


நட்பெனும் கரத்தின் பிடியை 

எவர் இரும்பு கரம் கொண்டு 

தடுத்து நிறுத்தினாலும் 

உறுதியாக அந்த கரத்தை 

இறுக பற்றிக் கொண்டேனே தவிர

அதை நழுவ விட்டதில்லை...


இப்படி காலமே ஆச்சரியமாக 

அதிர்ந்து பார்க்கும் 

பல நிகழ்வுகள் 

இப்போதும் நினைவில் இருந்து 

இறங்க மறுக்கிறது...


அதெல்லாம் என் இளமையின் 

துணைக் கொண்டு 

அந்த இளம் பருவ குளத்தில் 

குதியாட்டம் போட்டு...


வாழ்வை ஒரு சிறு பகுதியும் 

விடாமல் ரசித்து ருசித்து 

மகிழ்ந்து குதியாட்டம் போட்ட 

மறக்க முடியாத 

என் வாழ்வின் அமிர்த கடலென 

பரந்து விரிந்து 

கிடந்த நாட்கள்...


மீண்டும் அந்த அமிர்த கடலில் 

மூழ்கி கிடக்கும் 

பாக்கியத்தை 

ஏங்கி தவிக்கும் 

என் நிலையை...


இப்போது 

அந்த காலம் புரிந்துக் கொண்டு 

புன்முறுவலோடு 

தலையசைத்து 

மௌனமாக கடந்து செல்கிறது 

மீண்டும் அந்த நாட்களை 

மீட்டு கொண்டு வருவேன் என்று 

உறுதிமொழி அளிக்க 

மனமில்லாமலேயே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/05/26.

வெள்ளி, 8 மே, 2026

அன்பான விஜய் அண்ணாவுக்கு ஒரு கடிதம்...

 


அன்பான விஜய் அண்ணா 

நாளை தாங்கள் பதவி ஏற்பதற்கு வாழ்த்துக்கள் 🎉 

நாளை சனிக்கிழமை... மக்கள் சேவைக்கு உகந்த நாள்...

எப்போதும் சனி கடும் உழைப்பாளி... மேலும் அவர் கீழ் மட்டத்தில் உள்ள சாதாரண மக்களோடு எப்போதும் சுற்றுபவர்...

அவருக்கு கண்ணாடி மாளிகையில் இருந்துக்கொண்டு எதையும் செய்ய பிடிக்காது...

காசு பணம் பதவி மரியாதைக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் அவர்...

அவருக்கு தேவை நீதி நேர்மை மட்டும் தான்...

அகங்காரம் ஒரு சிறு துளி இருந்தாலும் அதை நசுக்கி விட்டு எதுவுமே நடக்காதது போல தனது பாதையில் செல்பவர்...

நிற்க...

ஒரு முக்கியமான விஷயம் உங்களிடம் சொல்ல தான் இந்த கடிதம்..

அது உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ராகுவின் அம்சம்... லாட்டரி டிக்கெட் விற்பவர் ஒருவர்...அது ராகுவின் அம்சம்..

அந்த ராகுவின் அம்சத்தை முதலில் நீங்கள் கழற்றி விட வேண்டும்...கலியுக ராஜா அவர்...

இந்த கலியுக ராஜா என்ன செய்வார் என்று போக போக தெரியும்... அந்த போக போக தெரிவதை விட நீங்கள் முதலிலேயே இவரை கழற்றி விட்டு விடுங்கள்...

அடுத்து புஸ்ஸி ஆனந்த்... இவர் விஸ்வ கர்மா அல்லவா... ஒரு விஸ்வகர்மாவால் தான் ஒரு அழகான மாளிகை பாண்டவர்களுக்கு உருவானது... அவர் ஏதோ பாண்டவர்கள் மீது உள்ள பேரன்பில் ஒரு மாய மாளிகை கட்டி கொடுத்து விட்டார்... அந்த மாளிகையினால் அகங்காரம் கொண்ட பாஞ்சாலி துரியோதனனை வம்புக்கு இழுத்து மகாபாரதம் எனும் பெரும் போருக்கு காரண கர்த்தா ஆக்கி விட்டு விட்டு அவர் பாட்டுக்கு போய் விட்டார்...

அப்புறம் ஒருவர் இருக்கிறார்...

அவர் யார் என்றால் செங்கோட்டையன்..இவர் சகுனி அம்சம்... அவர் வழிகாட்டுதல் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் உங்களை நிச்சயமாக அவர் அதாள பாதாளத்தில் தள்ளி விட்டு சிரித்துக்கொண்டே போய் விடுவார்...

பிறகு பெண்கள் ஓட்டு பெரும்பாலான சதவீதத்தில் வாங்கி வெற்றி பெற்று இருக்கிறீர்கள்... இவர்களும் ராகுவின் அம்சம் தான்.. இவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நீங்கள் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும்.. இல்லை என்றால் அவர்கள் சீற்றம் உங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தி விடும்...

அதனால் நீங்கள் உங்களை சுற்றி உள்ள கலியுக ராஜாக்களை கழற்றி விட்டு மக்கள் தொண்டே மகேஸன் தொண்டு என்று தொடர்ந்து உங்கள் பயணத்தில் தெளிவான பாதை வகுத்துக் கொண்டு நேர்மையாக அதே சமயத்தில் சமயோசிதமாக யோசித்து ஆட்சி நடத்த வேண்டும்...

இரண்டு எதிர் கட்சிகள் சட்டசபையில்... அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்.. இந்த சோதனையை எல்லாம் அவர்களே சந்தித்தது இல்லை என்பது தான் உண்மை... ஆனால் நீங்கள் இந்த இரும் பெரும் கட்சிகளை சமாளித்து உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்கள் மனம் கோணாதபடியும் நடந்து மிகவும் வேகமாக சாலையில் போகும் போது திடீரென ஒரு சிகப்பு லைட் விழுந்து நம்மை நிலைதடுமாற வைக்குமே அப்படி மத்தியில் உள்ள அரசு எனும் டிராபிக் போலீஸ்...

இப்படி இவர்கள் எல்லோரையுமே சமாளித்து நீங்கள் இந்த ஒரு ஐந்து வருடம் கடந்து விட்டீர்கள் என்றால் நீங்கள் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சர்...

ஆம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்...

இந்த பத்திரிகை சந்திப்பில் எல்லாம் நீங்கள் நிச்சயமாக கலந்து கொண்டு பதில் அளிக்க வேண்டும்.. இல்லை என்றால் பெரும் விமர்சனத்தை சந்திப்பீர்கள்... அது நீங்கள் முன்னாடியே தயாராக வைத்துக் கொண்ட கேள்வி பதிலாக கூட இருக்கலாம்... ஏனெனில் கடந்த காலங்களில் அப்படி தான் நடந்தது...

இல்லை இல்லை நான் பத்திரிகையாளரையே சந்திக்க மாட்டேன் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஜெயலலிதா அல்ல...

ஜெயலலிதாவை விட்டு விட்டு கலைஞரை தேடி போய் விடுவார்கள் அன்றைய பத்திரிகையாளர்...

இன்றைய நிலையில் இரண்டு எதிர் கட்சிகள் மூத்த தலைவர்கள் தேடி போய் உங்களை சிக்கலில் மாட்டி விடும் கேள்விகள் அவர்களிடம் கேட்டு பதில் வாங்கி விட்டு அதை தலைப்பு செய்தியாக போட்டு விட்டு இதற்கு நீங்கள் பதில் அளிக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டி இதற்காவது முதலமைச்சர் பதில் அளிப்பாரா என்று கேள்வி குறி போட்டு விட்டு மக்களை யோசிக்க வைத்து விடுவார்கள்...

எது எப்படியோ மக்கள் சார்பாக நீங்கள் நீண்ட நெடிய மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐🙌🙏.

✍️ #இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/05/26.

ஞாயிறு, 3 மே, 2026

அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் அதீத அமைதி...

 




அந்த அற்புதமான உள் அலங்காரம் கொண்ட ஐந்து நட்சத்திர விடுதி அறையானது ஒரு அதீத அமைதியின் பிடியில் சிக்கி தவிக்கிறதா என்று பார்த்தால் அந்த அறை அப்படி இல்லை அது அந்த மனிதர்கள் இல்லாத தனிமையை ரசித்து சுவர்களும்,கதவுகளும்,சன்னல்களும் ,மௌன மொழியில் பேசி சத்தம் இல்லாமல் சிரிக்கிறது...


சற்று முன் சில பெரிய அதிகாரத்தில் உள்ள மனிதர்கள் பேசி சென்ற ரகசியத்தை தனக்குள் புதைத்துக் கொண்டு தங்களுக்குள் அவர்கள் பேசியவிஷயங்களை தீவிரமாக ஆராய்ந்து அவர்கள் முகத்திரையின் லட்சணத்தை பேசி கேலி செய்து பின்பு கடுமையான கண்டனங்கள் நிறைவேற்றியது... அது பேசி சென்ற அந்த மனிதர்கள் கண்களில் படாமல் அந்த அறையில் உள்ள சுவர்களில் ஒன்றில் இரகசியமாக வைத்துக் கொண்டது...


என்றோவொரு நாள் அல்ல பல சமயங்களில் பல கதைகள் அங்கே வேறு வேறு முகத் திரை போட்டு கொண்டு வித விதமான குணாதிசயம் கொண்ட மனிதர்கள் மணிக்கணக்கில் பேசி விட்டு மறக்காமல் வெளியே செல்லும் போது தமது இன்னொரு முகமூடியை போட்டுக் கொண்டு எதுவும் நடக்காதது போல செல்வதை அந்த அறை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கிடந்த நாட்கள் மிகவும் அதிகம்...


இதோ இன்று ஒருவன் அந்த விடுதி அறையை இன்ச் இன்சாக நோட்டமிட்டபடியே தோதாக ஒரு இடத்தில் எதையோ செருகி விட்டு மீண்டும் ஒரு முறை அது சரியாக பொருத்தி இருக்கிறதா என்று பார்த்து விட்டு தனது அலைபேசியில் யாரையோ அழைத்து கிசுகிசுப்பாக சங்கேத மொழியில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி விட்டு அந்த செய்தியை எதிர் முனையில் பார்த்து விட்டதை உறுதி செய்து விட்டு சிறிது நேரத்தில் அந்த தகவலை அழித்து விட்டு வெளியே சென்று விட்டான்...

அநேகமாக அவன் அந்த ஐந்து நட்சத்திர விடுதி பணியாளராக தான் இருப்பான் என்று அந்த அறை யூகித்து உணர்ந்துக் கொண்டது...


இப்போது அந்த அறைக்கு சுவாரஸ்யம் தொற்றிக் கொண்டது... இப்போது நாம் மட்டும் தனியாக இல்லை.. தன்னோடு இன்னொரு வஸ்து இருக்கிறது... இப்பொழுது பேசப் பட போகும் விஷயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டு அந்த நேரத்திற்காக மிகவும் ஆவலாக காத்திருந்தது...


இது வரை இந்த அறையில் பேசிய அதிகார மிக்கவர்கள் பேச்சு எங்கேயும் கசிந்தது இல்லை.. தற்போது வரை அது தான் அந்த அறையின் தனித்துவம் என்று பலரும் அது காது பட பேசி சிலாகித்த போதெல்லாம் அந்த அறைக்கு கோபம் கோபமாக வந்தது.. ஆனால் இன்று அப்படி இல்லை..இதோ அவன் ரகசியமாக வைத்த அந்த வஸ்து காட்டிக் கொடுத்து விடும் என்று கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தது..

எப்படியோ அதிகாரமிக்கவர்களின் மோசமான முகத்திரை கிழிந்து தொங்க போகிறது என்று என்றும் இல்லாத பெரும் மகிழ்ச்சியை சத்தம் இல்லாமல் தனக்குள் புதைத்துக் கொண்டு காத்திருந்தது...

இப்போது யாரோவொருவர் கதவை திறக்கும் சத்தம் கேட்டு காதை கூர்மையாக்கியது...


அங்கே சில அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற விடுதி பணியாளர்கள் தனக்குள் பேசிக் கொள்வதை கேட்டு அதிர்ந்தது... அது அந்த அதிகார மிக்கவர்கள் அந்த அறையில் தங்கவில்லையாம்... சில பல அவசர பணி நிமித்தம் காரணமாக வேறொரு கீழ் தளத்தில் உள்ள அறையில் பத்து நிமிடங்கள் மட்டுமே சந்திக்க நினைத்த நபர்களை பார்த்து பேசி விட்டு செல்ல போகிறார்களாம்...

இப்போது அந்த அறைக்கு கொஞ்சம் எரிச்சலும் கோபமும் வந்ததுடன் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது..

அங்கே அந்த மனிதன் செருகி வைத்த வஸ்துவின் நிலையை நினைத்து பரிதாபப்பட்டது...

அந்த பணியாளர்கள் இத்தனை அலங்காரங்களும் வீணாகி விட்டதே என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்றார்கள்...

அப்போது அந்த வஸ்துவை வைத்த மனிதன் சிறிது நேரத்தில் வந்து அதை எடுத்துக் கொண்டு வெளியே பரிதாபமாக செல்வதை இப்போது அந்த அறை வேடிக்கை பார்த்தது மிகவும் பாவமாக...

ஆனால் இது நமது அறைக்கு துரதிருஷ்ட முத்திரை குத்தி விடுவார்களே என்று கூடுதல் கவலை அதற்கு வந்தது...

அதுசரி இது நாள் வரை இங்கே நடந்த பேரங்களை எப்படியேனும் வெளிப்படுத்த வேறொரு வாய்ப்பு வராமலா போகும் விடு என்று அங்கிருந்த சன்னல் அருகில் தொங்கிய திரைசீலை காற்றில் அசைந்து ஆறுதல் படுத்தியது அந்த அறையை... அந்த அறையும் சரிதான் என்று சன்னல் சொன்ன தேறுதல் மொழியில் அமைதியடைந்தது...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/02/26. 


வெள்ளி, 1 மே, 2026

நான் நேசிக்க மறந்த அந்த நொடிகள்...


 ஜெயிப்பது தோற்பது 

பற்றி எல்லாம் நான் எப்போதும் 

கவலை கொண்டதில்லை!

நான் ஆழ்ந்த காதலோடு 

நேசிக்க மறந்து 

இயந்திரத்தனமாக எப்போதாவது 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த நேரத்தை நினைத்து தான் 

தடுமாறி கலங்கி இருக்கிறேன்... 

தொலைக்க கூடாத 

அந்த மதிப்பு மிக்க 

பொக்கிஷத்திற்காக...

நான் அழுது விடுவதை பார்த்து 

என்னவோ ஏதோ என்று 

பதறி விடுகிறார்கள் அங்கே 

என் மீது பெரும் நேசங் கொண்ட 

சில மனிதர்கள்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.

உயிரோட்டமாக ஜீவித்து இருக்கும் கலை...

 


ஏதேதோ தேடி ஓடிக் கொண்டே 

இருக்கும் மக்களின் 

தீராத அந்த நெடுந்தூர ஓட்டத்தின் 

எல்லை எது என்று 

தெரியவில்லை...


வறண்ட பாலைவனத்தில் 

தண்ணீர் தேடி அலையும் 

அந்த பறவைக்கு கூட 

ஒரு அர்த்தம் இருக்கிறது...

உயிர் மீட்டலின் வலி அது...

தன்னை தானே 

மாய்த்துக் கொள்ள 

மனம் இல்லாமல் 

இறுதி வரை 

போராடிக் கொண்டிருக்கும் 

தன் முனைப்பின் நம்பிக்கை அது...


அந்த பறவைக்கு இங்கே 

எதையும் தன் வசப்படுத்திக் கொள்ள 

தேவையில்லாத மனநிலை அது...

அதன் தேவை எல்லாம் 

தான் ஜீவித்து இருக்கும் 

காலத்தை உறுதி செய்துக் கொள்ள 

போராடும் நிலையது...


இங்கே அந்த சிறு பறவையோடு 

ஒப்பிட்டு பார்க்கும் போது கூட 

இங்கே ஈசல் போல 

இயந்திரத்தனமாக ஓடும் 

மனிதர்கள் தோற்று விடுகிறார்கள்!


இங்கே தன்னிறைவு எனும் 

மனநிலையை தாண்டி 

எதற்கும் மதிப்பில்லை என்று 

இத்தனை தூரம் 

நான் அந்த சாலையில் 

மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் 

அந்த சிறு பூச்சியிடம் 

சொல்லிக் கொண்டு 

இருக்கும் போதே 


அந்த ஈசல் கூட்டத்தில் இருந்து 

ஒருவன் என்னை 

வேகமாக தள்ளியதும் அல்லாமல் பைத்தியம் தனியாக 

ஏன் இங்கே பேசுகிறாய்...

இங்கே பார் நாங்கள் 

ஓடிக் கொண்டிருக்கிறோம் 

நீ நட்ட நடுசாலையில் 

ஒன்றுக்கு உதவாமல் 

வெட்டிக் கதையை 

தன்னந்தனியாக பேசிக் கொண்டு 

இருக்கிறாய்..

நேரம் போனால் வராது...

தள்ளி நில் சித்தம் கலங்கியவனே 

என்று ஆக்ரோஷமாக 

கோபத்தை காட்டி விட்டு 

ஓடுகிறான்...


அவன் என்னிடம் பேசிய 

அந்த சில நிமிடங்களில் 

அவனோடு பிரயாணம் செய்த 

கூட்டம் அவன் ஒருத்தன் 

தன்னோடு பிரயாணம் 

செய்ததையே

மறந்து விட்டு புள்ளியாக 

மறைந்த போனார்கள்...


அவனோ என்னை திரும்பி 

முறைத்து பார்த்தான்...

நான் சலனமில்லாமல் 

அவனை நோக்கி ஒரு புன்னகையை 

உதிர்த்து விட்டு 

அந்த பூச்சிக்கு 

இன்னொரு தத்துவ சாரலை 

போதித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

அதுவும் மெல்ல ஊர்ந்து கொண்டே 

என் கதையை கேட்டு 

சலிப்பில்லாமல் 

தன் பயணத்தை 

புத்துணர்ச்சியோடு 

தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.







புத்தக பை சுமந்து பட்டாம்பூச்சியாக திரிந்த அந்த நாளில்...

 




புத்தக பை சுமந்து 

பட்டாம்பூச்சியாக திரிந்த 

அந்த காலத்தில் 

நினைவுகள் எல்லாம் 

மனதின் ஒரு மூலையில் 

தித்திக்கும் வெல்லமாக 

சிதறிக் கிடக்கிறது...


நானும் என் நண்பர்களும் 

விடுமுறை நாட்களில் 

ஓயாமல் சுற்றி சுற்றி வந்த 

அந்த ஆலமரத்தின் நிழல் 

மட்டும் ஒரு அடையாள சின்னமாக 

அங்கே ஊரின் நடு பகுதியில் 

எங்கள் வருகைக்காக 

ஏங்கி போவோர் வருவோரை 

உற்று உற்று பார்க்கிறது...


அந்தவொரு விடுமுறை நாளில் 

நான் மட்டும் நிறைய எலந்தை பழங்களை 

தன் பாவாடையில் நிறைத்து 

ஓடுவதை பார்த்து 

நீ என்னை துரத்தி வந்து 

அத்தனை பழங்களையும் 

சிதறடித்து சண்டை போட்டு 

என் பேச்சு கா விட்டு 

பேசாமல் வேகமாக சென்ற 

நாள் மட்டும் இன்னும் 

அப்படியே இருக்கிறது 

என் மனதின் சாலையில் 

ஒரு பெரும் பள்ளமாக...


அது நடந்து பல வருடங்களாகி 

விட்ட போதும்

இப்போதும் 

எங்கே எலந்தை பழங்களை 

பற்றிய பேச்சுக்கள் 

வந்தாலும் நீ அங்கே 

சத்தமில்லாமல் 

என் எதிரே கோபமாக 

நின்று விடுகிறாய்...


தற்போது நீ எங்கே என்று 

தெரியவில்லை என்றாலும் 

உனக்கு நம் சண்டை 

ஞாபகம் இருந்தால் 

எப்போதேனும் நாம் சந்திக்கும்

தருணத்தில் 

என்னிடம் பழம் விட்டு விடு...


நீ எனக்கு தந்த காயை 

வைத்துக் கொண்டு 

நான் படும் 

அவஸ்தையை பார்த்து 

இங்கே என்னை பலபேர் 

கேலி செய்கிறார்கள் 

என் காதலே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/05/26.


ஒரு நகரத்தின் பரபரப்புகளுக்கிடையே பறக்கும் பட்டாம்பூச்சியாக...

என் உயிர் சுவாசத்தின்  தீண்டலாக  நீ என்னோடு  ஒருவித கதகதப்போடு ஜீவித்து இருக்கிறாய்... ஒரு நகரத்தில் சாலை வெளியின்  பரபரப்புக்குகளுக்கிடையே ...