ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 13 ஏப்ரல், 2026

போர் நிறுத்தம்...

 




இத்தனை நாள் தூரமாக நின்று 

வேடிக்கை பார்த்த 

அமைதி 

இன்று எந்த தயக்கமும் 

இல்லாமல் என் கைகளில் 

வேகமாக ஓடி வந்து 

பேரன்பு கொண்டு 

என்னை அணைக்கிறது...


ஏதேதோ நிம்மதியை தரும் 

என்று இத்தனை நாள் 

தேடி அலைந்த 

நாட்களை பார்த்து 

நான் வெட்கம் அடைகிறேன்...


என் வீட்டின் முற்றத்தில் 

நான் நட்டு வைத்து 

பாசமாக நீருற்றி வளர்த்த 

மரத்தின் நிழலில் 

வெகு நாட்களுக்கு பிறகு 

என் ஆசுவாசத்தை 

கொஞ்சம் புதைத்துக் கொள்கிறேன்...


எங்கோ கேட்ட மரண ஓலங்களின் 

சத்தத்திற்கு விடுதலை 

கிடைத்த கொண்டாட்டத்தின் 

உதிரல்களாக அங்கே 

பூத்து குலுங்கும் வசந்தத்தின் 

வாசத்தை சுவாசிக்கிறேன்...


இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்று தெரிந்த மனதின் 

ஸ்திர தன்மையை மட்டும் 

காலம் நொடிக்கொரு முறை 

நினைவூட்டிக் கொண்டே 

இருந்தால் போதும்...

இங்கே என் வாழ்வின் 

ஒவ்வொரு நொடியிலும் 

புதைந்து கிடக்கும் அமிர்தத்தை 

எந்தவித தொந்தரவும் இல்லாமல் 

நான் கொஞ்சம் சுவைக்க....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/04/26.


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்...

 


#இன்றைய #தலையங்கம்:-

எடப்பாடியார் பேசுவதை மீண்டும் ஒரு முறை கேட்டு பாருங்கள்... அவர் கொரணா சமயத்தை நான் சரியாக கையாளாமல் இருந்து இருந்தால் இந்நேரம் ஸ்டாலின் முதற் கொண்டு எல்லோரும் காணாமல் போய் இருப்போம் என்கின்ற அர்த்தத்தில் தான் சொன்னார்...

இப்போது மீண்டும் போய் கேட்டு பாருங்கள்...

யார் பேசுவதையும் திரித்து தயவுசெய்து பரப்பாதீர்கள்...

அது எந்த அரசியல் தலைவர் பேச்சாக இருந்தாலும்...

முதலில் தரம் தாழ்ந்து ஏன் பேச வேண்டும்?

தனிநபர் விமர்சனம் பொது மக்களாகிய வாக்காளர்களுக்கு தேவையா?

அவர்களுக்கு தேவை அவர்கள் பயனடையும் வகையில் திட்டங்கள் தவிர உங்களது தனி நபர் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அல்ல...

எடப்பாடியார் சசிகலா காலை வணங்கி அரசியலுக்கு வந்தார் என்று சொல்லும் போது அந்த நிகழ்வு அவர் மட்டுமா வணங்கினார்கள்...

மேலும் அந்த நிகழ்வு நடந்து தான் அவர் தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...

அவர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றியவர்...

அவர் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்..

குறிப்பாக விவசாயிகளுக்கு..

அதற்காக அவரை ஏன் இவ்வளவு தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறீர்கள்?

ஏன் தினகரன் எவ்வளவு பிரயத்தனம் செய்தும் கட்சியை கைப்பற்ற இயலவில்லை...

இங்கே அடிமட்டத்தில் இருந்து யார் ஒருவர் மக்களின் உணர்வுகளோடு பயணிக்கிறார்களோ அவர்கள் தான் மக்களின் தலைவராக வருவார்கள்...


ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை சொல்லி ஓட்டு கேளுங்கள்..

இது வரை உங்களுக்கு இதை இதை எல்லாம் செய்தோம்... இனியும் செய்வோம் என்றும் கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை திருத்திக் கொள்வோம் என்றும் மக்களிடையே நடந்த தவறுகளுக்கு வருத்தத்தை தெரிவித்து ஓட்டு கேளுங்கள்...

அதை விடுத்து எப்போதும் தனி நபரை துதி பாடியோ அல்லது அசிங்கப்படுத்தியோ ஏன் ஓட்டு கேட்கிறீர்கள்...

மக்களுக்காக தான் அரசியல் தவிர 

அரசியலுக்காக மக்கள் இல்லை...


ஒவ்வொரு விவசாயின் துயரம் எல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டே ஆய்வு செய்பவர்களுக்கு தெரியாது..

இந்தியா இயல்பிலேயே விவசாய நாடு... அதன் உயிரோட்டத்தை கெடுக்காத மனிதன் தான் தற்போதைய அரசியல் தலைவராக தேவை...

மற்றவை எல்லாம் பிறகு தான்..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் 

மற்றவர் எல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்...

#விவசாயிமரியாதை

#மாண்பபுமிகுவிவசாயி.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/04/26.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம்... எடப்பாடியார் வாக்கு..

 


#இன்றையதலையங்கம்

#ஒருவிவசாயியின்துயரம்:- விவசாயத்திற்கு மீண்டும் மும்முனை மின்சாரம் 24மணிநேரமும் முன்னாள் முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வாக்கு கொடுத்து இருக்கிறார்...

இது ஒன்று போதும் அஇஅதிமுக வெற்றி பெற...

கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் விவசாயிகள் சொல்லொணா துயரத்தை அனுபவித்தார்கள்..

அதுவும் விவசாய குடும்பத்தில் பிறந்த நான் எனது சகோதரர் இரவில் எந்த நேரம் என்று பாராமல் தூக்கத்தை தொலைத்து தண்ணீர் பாய்ச்சி விட்டு மீண்டும் அவரது மற்ற பணிகளை பார்த்து தந்தையின் உடல் நலன் மிகவும் மோசமான தருணத்தில் அவரது ஆரோக்கியத்தை மேம்படுத்த குறித்த நாளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு இல்லத்திற்கு வந்தவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று மும்முனை மின்சாரம் வந்து விட்டதா என்று பார்த்து விட்டு மோட்டார் போட்டு விட்டு தண்ணீர் பாய்ச்ச வயலில் இறங்கினால் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிகழ்வு எல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது...

ஒரு மனிதன் விவசாயம் பார்ப்பதே மிகவும் மோசமான நிகழ்வாக இன்றைய காலகட்டத்தில் மாறி விட்டது... அதிலும் இயற்கை இடர்பாடுகள் தாண்டி இடுப் பொருள் விலையேற்றம் ஆள் பற்றாக்குறை விளைச்சல் கைக்கு வந்தவுடன் விலை இல்லை... இப்படி இத்யாதி இத்யாதி சொல்லி கொண்டே போகலாம்... இத்தனை விஷயங்கள் நடக்கிறது...

ஒழுங்கான மும்முனை மின்சாரம் கொடுக்க கூட மனமில்லை... மேடைக்கு மேடை எங்கள் ஆட்சியில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பேசுவதை மக்கள் சரியான கிறுக்குப் தரமான பேச்சாக தான் பார்க்கிறார்கள்..

ஆமாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்...

வயலுக்கு நடு இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு தண்ணீர் பாய்ச்ச போனால் அங்கே சாலையை ஆக்கிரமித்து போதை இளைஞர்கள்...

அவர்களை பார்த்து பயந்துக் கொண்டு தான் வயலுக்கு போக வேண்டும்...

நல்லா ஆட்சி நடத்தினீர்கள் ஐயா 🙏 

இதே இடத்தில் இதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்...

கலைஞர் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு கொடுத்தார்.. நீங்கள் அவரது மகனாக இருந்துகொண்டு விவசாயியை துயர கடலில் மூழ்கடித்தீர்கள்...

ஆட்சி நிர்வாகம் என்பது சாதாரண விஷயம் இல்லை...

அதற்கு மிக பெரிய அனுபவம் மக்களோடு மக்களாக உண்மையான உணர்வோடு பழகி இருக்க வேண்டும்.. வெறும் போட்டோ சூட் நிச்சயமாக களத்தில் வெற்றி பெற உதவாது...

இங்கே அரசியல் பேச்சு கலையில் தேர்ந்தவர்களை மதித்த காலம் போய் செயலில் யார் மக்களின் உணர்வுகளோடு ஒட்டி இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

#ஒருவிவசாயியின்துயரம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/04/26.

திங்கள், 30 மார்ச், 2026

நானும் என் வீடும் அந்த குருவியும்...


என்னை நானே அறியாமல் 

மிகவும் கூர்மையான பார்வையால் 

உற்று பார்க்கிறது என் வீடு..


நான் என்னை மறந்து பாடும் 

பாடல்களை மெய் மறந்து 

ரசித்து கேட்கிறது 

தனது கூர்மையான கேட்கும் திறன் கொண்ட செவிகளால்...

அந்த சுவர்கள்!


என் வாழ்வின் இன்பங்களை 

நான் நுகரும் போது 

அது அமைதியாக 

நிம்மதியடைகிறது...


நான் ஏதோ எனது சொந்தங்களின் 

ஏச்சு பேச்சில் 

காயப்படும் போதெல்லாம் 

துயருற்று சத்தம் இல்லாமல் 

கண்ணீர் வடிக்கிறது!


இங்கே என் கால்கள் நடக்கும் 

சத்தத்தில் எல்லாம் 

பெரும் நிம்மதியடைந்து 

பெரும் ஆறுதல் கொள்கிறது...


நான் தினமும் செய்து வரும் 

தான தர்ம செயல்களில் எல்லாம் 

தனது சுவாசத்தை 

புதுப்பித்துக் கொள்கிறது...


இந்த நிகழ்வுகள் எல்லாம் 

அன்றொரு நாள் சத்தம் இல்லாமல் 

நின்று போனதை 

அது அன்று நிலவிய அசாதாரண சூழலில் புரிந்துக் கொண்டு 

பெரும் அதிர்ச்சி அடைந்தது...


எது எப்படியோ நான் சூட்சமமாக 

அதனிடம் என் பூமி வருகை 

பதிவை முடித்துக் கொண்ட 

செய்தியை அதனிடம் 

தட்டு தடுமாறி சொல்லி முடித்த 

தருணத்தில் 

என் உயிர் சுதந்திரமாக பிரிந்து 

அந்த வீட்டில் இருந்து 

மெல்ல மெல்ல விலகியது...


அங்கே நான் சுடுகாட்டில் 

எரிந்துக் கொண்டு இருக்கிறேன்...

அந்த வீட்டின் உரிமை 

வேறொருவருக்கு அடி மாட்டு 

விலைக்கு கை மாறியது...


ஏன் இவ்வளவு 

மோசமான விலை என்று 

அங்கே யாரோ கேட்கிறார்கள் 

அதற்கு அது வம்ச விருத்தி 

இல்லாத வீடு என்று 

யாரோ யதார்த்தமாக

சொல்லி செல்வதை பார்த்து 


அந்த வீடு அதே நொடியில் 

பூகம்பம் தாக்கியதை போல 

சடசடவென தரை மட்டமாகியதை 

பார்த்து அங்கே இருந்தவர்கள் 

பெரும் அதிர்ச்சி கொள்கிறார்கள்..


இங்கே கடும் அக்னியில் 

வெந்து கொண்டிருந்த நான் 

அந்த வீட்டின் பிரியத்தில் 

பெரும் கண்ணீர் உகுத்து 

நெருப்பை அணைக்கிறேன்...


இந்த நிகழ்வை வேடிக்கை பார்த்த 

மனிதர்கள் ஏதோவொரு 

ரகசிய ஒப்பந்தம் அந்த வீடும் 

நானும் போட்டுக் கொண்டதாக 

கிசுகிசுத்து கலைந்து செல்லும் போது 


அந்த வீட்டில் வசித்து வந்த குருவி 

சிறு முனகலோடு 

இடிந்த சுவர்கள் மீதேறி 

மேலே வந்து அவர்களை 

வேடிக்கை பார்த்தது...

இங்கே அந்த குருவி தான் 

வம்ச விருத்தியின் எச்சம் என்று 

எத்தனை பேர் புரிந்துக் கொண்டு 

இருப்பார்கள் என்று 

அந்த வீடு மெல்லிய 

குரலில் 

கேட்டு விட்டு தன் உயிரை 

தியாகம் செய்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/26.




தொலைதூரம் போக நினைக்கும் மனது...

 


எத்தனையோ 

யோசனைக்கு பிறகு 

நாம் எடுக்க போகும் 

முடிவு என்று 

ஏதேதோ பீடிகை போடுகிறாய் 

என் எதிரே அமர்ந்து 

மணிக்கணக்காக...


இணைந்து வாழ்ந்த 

வாழ்வின் சுவை 

அப்படி ஒன்றும் 

கசந்து விடவில்லை!

என்று இடையில் 

சொல்கிறாய்...


என்றோ வாங்கிய பழத்தில் 

ஒரு சிறு அழுகல் கண்டு 

தற்போது அந்த பழத்தை 

நொந்து பயனில்லை...

என்கிறாய்!


ஏதோவொரு தருணத்தில் 

கடுமையான முடிவுகளை 

எடுத்தேயாக வேண்டிய 

தருணத்தில் நாம் 

இருக்கிறோம் என்று 

நீ சொல்கிறாய்...


இப்படி ஏதேதோ காரணங்களை 

தேடி தேடி சொல்லி 

என்னை விட்டு 

தொலைதூர போக நினைக்கும் 

உன் மனதை புரிந்து கொள்ள 

முடியாமல் இல்லை...


இத்தனை தூரம் 

நீ மணிக்கணக்கில் 

என்னிடம் பேசிய போதும் 

நீ தினம் தினம் 

மறக்காமல் 

பெரும் காதலோடு 

எனக்கு தந்த 

உன் ஈர முத்தத்தை 

நான் என்ன செய்வது என்று 

மட்டும் சொல்ல மறந்து விட்டாயா 

அல்லது வேண்டும் என்றே 


உன் அடையாள நினைவாக 

என்னை துன்புறுத்தி பார்க்க 

அதை அப்படியே விட்டு விட்டு 

சென்று விட்டாயா என்று 

மட்டும் 

சொல்லி விட்டு செல் 

என் தீராத காதலே!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/03/2026.

வெள்ளி, 13 மார்ச், 2026

இன்றைய தலையங்கம்: எம்.பி.கனிமொழியை விளாசிய விளாத்திகுளம் மக்கள்

 


இன்றைய தலையங்கம்:-

சமூக சீர்கேடு மற்றும் தரம் தாழ்ந்த மாநிலமாக சுய ஒழுக்கத்தில் இருந்து விலகி செல்கிறதா தமிழ் நாடு?


ஆழ்ந்த உணர்வு பெருக்குக்கு முன்னால் உங்கள் அலங்கார அரசியல் அறிக்கையோ காசு பணம் துட்டு எல்லாம் வேலை செய்யாது என்பதை விளாத்திகுளம் நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது...

முந்தைய அதிமுக அரசை டாஸ்மாக் விஷயத்திற்காக சரமாரியாக கேள்வி கேட்ட கனிமொழி எம்.பி தற்போது அதே விசயத்திற்காக மக்கள் எழுச்சியால் பயந்து காவலர் துணையோடு மீண்டு சென்று இருக்கிறார்...

கர்மா எப்போதும் தருணம் பார்த்து திருப்பி அடிக்கும்... கனிமொழி எம்.பி அவர்களே!

ஆளும் அரசை தங்களது சகோதரன் தானே வழி நடத்துகிறார் அதுவும் காவல் துறை அவரது கைகளில் கொண்டு...

நீங்கள் யதார்த்தமான உண்மையை சில வருடங்களுக்கு முன்பே எடுத்து சொல்லி புரிய வைத்து இருந்தால் உங்களுக்கு தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த மோசமான அருவருக்கத்தக்க நிலை மக்களிடையே அவமானப்படும் நிலை வந்து இருக்காது...

போதை கலாச்சாரம் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளுக்கும் ஒரு விதமான பயத்தை கொடுத்து இருக்கிறது...

யதார்த்ததை இனியாவது உணருங்கள்...


எதை எடுத்தாலும் வட இந்தியாவை உதாரணம் காட்டி பேசுவதை நிறுத்துங்கள்...

இது உங்கள் தவறை மறைக்கும் தந்திரம் என்று உணருங்கள்...

எப்படி அறிவார்ந்த சமூகத்தை தங்களது ஆட்சியில் மிகவும் கீழ்த்தரமான மாநிலமாக மாற்றி வைத்து இருக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லையா...


முதலில் நீங்கள் ஒரு பெண் பிறகு தான் நீங்கள் ஒரு எம்.பி.


சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று பல வருடங்களாக முன்னாள் முதல்வர் எடப்பாடி சொல்லும் போதெல்லாம் தாங்கள் அனைவரும் கேலி கிண்டல் செய்து அதை சரி செய்ய முனையாததன் விளைவு இது...

ஆமாம் நீங்கள் உங்கள் சகோதரர் என்ன மாதிரியான அரசியல் கற்றுக் கொண்டு அரசியல் களத்தில் இருக்கிறீர்கள் என்பதை கொஞ்சம் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்...


மக்களுக்கு தேவை எப்போதும் நிம்மதியான அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை மட்டுமே.. மற்றபடி உங்களை போன்ற ஆடம்பர வாழ்க்கையை அல்ல...


மக்களுக்காக தான் நீங்கள்..

உங்களுக்காக மக்கள் இல்லை...

#சட்டம்ஒழுங்கு

#பெண்பாதுகாப்பு

#சமூகபாதுகாப்பு.

#இன்றைய தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/03/26.

திங்கள், 2 மார்ச், 2026

அலாதி சுவை...

 





வாழ்வின் சுவையை

சிறிதும் உணர 

காலம் இல்லாமல்

தீவிர ஓட்டத்தில்

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


எந்தவித எதிர்பார்ப்பும்

இல்லாமல்

கதிரவன் உதிப்பதற்குள்

எழுந்து

அது மறையும் வரை

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


கதிரவனின் உதயத்தில்

மிளிரும் ஒளியை

ரசிக்க சிறு நொடியும்

இல்லை...


இளம் காலைப் பொழுதில்

வானை அளந்து செல்லும்

பறவைகளின் சிறகை 

நின்று நிதானித்து

சிறிது நேரம்

அதை கண்களில்

நிறைத்துக் கொள்ள

நேரமில்லை...


அதோ அங்கே அன்றொரு நாள்

நான் சில ரொட்டி துண்டுகள்

போட்ட நினைவில்

என்னை மறக்காமல்

என் பின்னால் பெரும் பாசத்தோடு

ஓடி வரும் நாயின்

பேரன்பை உணர மனமில்லாமல்

அதை வெறுப்போடு

பார்த்து கடந்து செல்கிறேன்

என் அலுவலகத்தில்

மேலாளர் வசைகளுக்கு

அஞ்சி...


இப்படியே போகிறது

வாழ்க்கை என்று

வெறுப்பாக எண்ணியபடியே

ஒரு ஆசுவாசத்திற்காக

தேநீர் பருக

அலுவலகத்தை விட்டு 

வெளியே

அந்த சாலையில்

நடந்து செல்லும் போது

கடும் வெயிலின் தாக்கத்தில்

அப்படியே நிழலை

தேடி அலைகிறேன்...

மிகவும் சோர்வாக...


ஒரு சிறு நிழலை தேடி

கண்கள் என்னையும்

அறியாமல் தேடும் போது...


ஒரு சிறு மரம்

தனது கிளைகளில் உள்ள 

இலைகளை அசைத்து

இங்கே வா

சிறிது இளைப்பாற

நிழலெனும் மடியை

தருகிறேன் என்று

தாயன்போடு 

அழைக்கும் போது...


நான் வேக வேகமாக

ஓடி அந்த நிழலெனும்

மடியில் 

அடைக்கலம் ஆகி

சிறிது இளைப்பாறும் போது...


அதன் ஒரு சிறு கிளையில்

அமர்ந்து இரு குருவிகள்

கீச் கீச்சென்று சத்தமிட்டு

பேசுவதை கேட்டு விட்டு

தன்னை மறந்து

இயற்கையின் சுவையின்

ஒரு சிறு துளியை பருகி

அதன் அலாதி சுவையை

அன்று தான் உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/02/26.



போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...