அந்த அடர்ந்த பண்ணை
காட்டின் நடுவே
என்றொவொரு நாள்
வாழ்ந்த காலத்தில்
என் முன்னோர்கள் கட்டிய
பங்களாவை தேடி
பல காலங்கள் கழித்து
கரையில் ஒதுங்கிய
கிழிஞ்சல்கள் போல
அதை சேர்கிறேன்...
வீட்டின் கதவில் கை வைத்தபோது
அங்கே இருந்த சிலந்தி பூச்சி
கடகடவென்று வேகமாக
கதவின் இடுக்கில்
ஓடி ஒளிகிறது...
கதவின் பூட்டின் துளையில்
சாவியை விட்டு
திறந்த போது பெரும் இருள்
சூழ்ந்த கருமை நிறம்
என்னை ஓடோடி வந்து
வரவேற்கிறது...
என்றோ என் முன்னோர் வைத்த
அற்புதமான விருந்தின் மீதமாக
கீழே உருண்டோடி கிடக்கும்
ரம் பாட்டில்களில்
என் கால் ஏதேச்சையாக பட ...
அது பயந்து நழுவி ஓடி
எழுப்பிய சத்தத்தில்
அங்கே காதலோடு
புணர்ந்து கொண்டிருந்த
பல்லி இரண்டும்
வேறு வேறு திசையில்
அச்சத்தில் ஓடி ஒளிகிறது...
மெதுவாக அந்த பங்களாவின்
புழக்கடை பகுதிக்கு சென்று
சன்னலை திறந்து
பார்க்கிறேன்...
அங்கே பல மலர் செடிகள்
பூத்து குலுங்கிய தடயங்களாக
மலர் இதழ் சருகுகள்
செத்து கிடக்கிறது
காய்ந்து போன
தாய் செடிகளுக்கு
அடியில் உரமாக...
இத்தனைக்கும் நடுவில்
அந்த பங்களா
சில ஜீவ ராசிகளுக்கு
அடைக்கலம் கொடுத்து
உயிர்ப்போடு வைத்திருந்ததை
நான் அங்கே கண்ட காட்சிகளில்
உணர்ந்து கொண்டு
சில பல ஆசுவாசங்களுக்கிடையே
அந்த இரவில்
அங்கே நான்
தங்க முடிவு செய்ததை
அங்கே அந்த பங்களா சுவருக்கு
கொஞ்சம்
சத்தமாக அறிவித்தேன்...
எங்கிருந்தோ ஊரை சுற்றி விட்டு
பங்களாவின் முகப்பில்
என் முன்னோர்கள் நட்டு வைத்த
மரமொன்றில்
கம்பீரமாக அமர்ந்த
குருவி ஒன்று...
அதற்கு என் அனுமதி தேவை
என்று பெரும் குரலெழுப்பி
சொல்ல
நானும் அந்த பங்களா சுவர்களும்
கொஞ்சம் அதிர்ந்து தான்
அந்த குருவியை
திரும்பி பார்க்கிறோம்...
இங்கே சில பல காலங்கள்
கழித்து உரிமை கொண்டாட
நான் வரும் போது
அங்கே இதுவரை
என் முன்னோர்கள் வாழ்ந்த
பங்களாவை
உயிர்ப்போடு வைத்திருந்த
அந்த ஜீவ ராசிக்கு
கட்டுப்பட்டு வந்த வழியே
திரும்பி சோகமாக
நடப்பதை பார்த்து
அந்த குருவி
நீ இந்த இரவு மட்டும்
தங்கலாம்...
உன்னிடம் நிறைய கதைகள்
பேச வேண்டி உள்ளது ...
கதை ஓரிரவில் முடியாது
அதனால் சில நாட்கள்
இங்கே தங்க உனக்கு
அனுமதி தருகிறேன் என்றது...
நான் மீண்டும் அந்த பங்களாவில்
நுழைந்த போது
அங்கே ஏதோவொரு சூட்சம சக்தி
என்னை பார்த்து சிரிப்பது போல
உணர்ந்தேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:23/06/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக