உன் நடனத்தில்
இந்த பிரபஞ்சத்தை
மிகவும் நுட்பமான
நேர்த்தியால்
சுழல வைக்கும்
தந்திரத்தில்
நான் எத்தனையோ நாட்கள்
அதை நினைத்து அசந்து
போவதுண்டு...
காலத்தின் பசிக்கு இரையாகும்
ஜீவன்களை நீ பக்குவப்பட்ட
ஆன்மாக்களை மட்டும்
பிரித்தெடுத்து
உன்னுள் மிகவும் பத்திரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்...
மீதி ஆன்மாக்களை
உன் நடனத்தினை நிறுத்தாமல்
அவரவர் வினைக்கேற்ப
கருப்பை தொட்டிலில்
அமைதியாக
அந்தந்த ஆன்மாவின்
பக்குவ நிலைக்கு ஏற்ப
சேர்த்து விட்டு
உன் புன்சிரிப்பு கூடிய
முகத்தோடு கூடிய
நடனத்தை
அதே அதிர்வலையில் தொடர்கிறாய்...
இங்கே நான் எத்தனையோ
கருப்பையில் புகுந்து வந்து
புகுந்து வந்து....
களைத்து விட்டதை
நீ உணராமல்
இருந்திருக்க மாட்டாய் என்று
எனக்கு தெரியும்...
இருந்தும் நான் உனக்கு
போட்டியாக மிகவும்
மோசமான நடனத்தை
தாள லயம் பிசகி
நடத்திக் கொண்டு
இருக்கிறேன்...
உன் கவனத்தை
ஈர்ப்பதற்காக...
அந்த நடனத்தை
சகிக்க முடியாமல்
நீ என்னை உன் பாதத்தில்
சேர்த்து கொண்டு
பிறவா நிலையை
கொடுப்பாய் என்ற
பெரும் நம்பிக்கையோடு....
பிறந்து பிறந்து
சலித்து விட்ட
என் ஜீவனின் ஓட்டத்திற்கு
நிரந்தரமாக ஓய்வு கொடுத்து
எனக்கு ஒரு அடைக்கலம்
கொடுத்து
அணைத்துக் கொள்
என் ஆத்மநாதனே...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:16/07/26.
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக