ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 28 ஜூன், 2026

பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்...


பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்:-

அத்தனை துர்நாற்றத்தோடும்

நான் நிரந்தரமாக 

வசிக்கிறேன்...


நீங்களோ என்னை கடந்து 

செல்லும் போது 

அந்த சில நிமிடங்கள் 

உங்கள் நாசியை 

துளைக்கும் 

அந்த துர்நாற்றத்தை 

சகிக்காமல் 

மூக்கை மூடி 

செல்கிறீர்கள்...


எனது மடியில் 

உணவை தேடி தத்தி தத்தி 

செல்லும் அந்த காகங்களுக்கும் 

நாய்களுக்கும் பசுக்களுக்கும்

நான் வைத்திருக்கும் 

இந்த நெகிழி கழிவை 

பசியாற கொடுத்து விட்டு 

மௌனமாக அழுகிறேன்...


அங்கோ 

ஏசி பேருந்துகள் இயக்க 

அரசு பெரும் பிரயத்தனங்களை 

செய்து வருவதாக 

கேள்வியுற்று 

கொஞ்சம் திகைத்து தான் 

நான் போகிறேன்...


என் அழிவின் விளிம்பை 

அவர்களால் எப்படி 

அவ்வளவு எளிதாக 

கடந்து செல்ல முடிகிறதென்று

எனக்கு நானே கேள்வி 

கேட்டுக் கொள்கிறேன்...


சில நேரங்களில் 

என் கோபத்தின் 

தாக்கத்தினால் 

சில பல நாடுகளில் கட்டிடங்கள் 

இடிந்து விழுவதை 

வேடிக்கை பார்த்து விட்டு 


இயற்கை அன்னைக்கு 

அப்படி என்ன தான் 

கோபமோ என்று 

என்னையே திட்டி தீர்க்கும் 

மனிதர்கள் விசுவாசத்தை 

எண்ணி கொஞ்சம் வியந்து தான் 

போகிறேன்...


நான் அசுத்தப்படுத்தப்படுகிறேன்

என்று உணராமல் 

நீங்கள் எனக்கு இழைக்கும் 

தீங்குகளை எல்லாம் 

சேகரித்து வருகிறேன்...

என்றோவொரு நாள் 

அந்த சமுத்திரத்தின் 

ஆழத்தில் புதைத்துக் கொண்ட 

நீங்கள் எனக்கு அளித்த 

கழிவெனும் பரிசை 

உங்கள் முகத்தில் உமிழும் போது 

அங்கே எவரும் 

உங்களை காப்பாற்ற 

வர மாட்டார்கள்...

ஏன் என்று கேட்காதீர்கள்...


அங்கே 

மொத்த மனிதர்களும் 

மரணித்து என் கால்களை 

தழுவி மன்னிப்பு கேட்கும் 

தோரணையில் 

வீழ்ந்து கிடக்கும் போது... 


அங்கே என் மடியில் 

உணவுக்காக அலைந்து கொண்டு 

இருந்த சிற்றுயிர்களுக்கு 

உங்களை 

பெரும் விருந்தாக்கி

மகிழ்ந்து 

உணவளித்து 

பெரும் ருத்ர தாண்டவம் 

ஆடுவதை 

இந்த பிரபஞ்சம் கொஞ்சம் 

நடுங்கி மிரண்டு 

தள்ளி நின்று 

வேடிக்கை பார்க்கும்...


பிறகு மெல்ல மெல்ல 

அமைதியடைந்து

பெரும் பிரயத்தனப்பட்டு

அந்த இயற்

கையிடம் 

முறையிட்டு

ஒரு புது யுகத்தை 

உருவாக்குவேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/06/26.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

  வாழ்வெனும்  நெடும் பாதையில்  வஞ்சிக்கப்பட்ட  பலரோடும்... உண்மையான  நேசத்தை கொட்டி  எதையும்  என்னிடம் எதிர்பாராமல்  பயணிக்கும்  பலரோடும்  த...