இருளில் நனையும்
நட்சத்திரங்கள்
அமைதியாக எனை
வேடிக்கை பார்க்கிறது...
நானும் அதை கொஞ்சம்
ரசித்து சிரிக்கிறேன்...
இங்கே என் நேரத்தில்
நீ ஏன் தொந்தரவாக
இருக்கிறாய் என்று
என்னை பார்த்து
வேடிக்கையாக
கேட்கிறது...
அந்த நட்சத்திரங்களில் ஒன்று
கொஞ்சம் மிடுக்காக...
இங்கே இந்த நேரத்தில்
உனக்கு என்ன வேலை
கொடுக்கப்பட்டு இருக்கிறதோ
அந்த வேலையில்
ஏதேனும் தவறு நடந்தால்
என்னிடம் சொல் என்று
அந்த இறைவன் எனக்கு
ஆணையிட்டு இருப்பதாக
கலகலவென்று நகைப்புடனே
சொல்கிறேன்...
அந்த நட்சத்திரமோ
இங்கே உன்னை கண்காணிக்க
என்னை இறைவன் அனுப்பி
இருக்கிறார் என்று
இன்னும் மிடுக்காக
சொல்ல...
நானோ உன்னிடம்
என் உறக்கத்தை
தொலைத்து விட்டு
இங்கே நிர்க்கதியாக
நிற்கிறேன்...
நீயோ கண் சிமிட்டி
காதல் மொழி பேசுகிறாய்...
ஒன்று செய்வோம்
நாம் இருவரும் ஒருவரையொருவர்
சமாதானமாக போய் விடுவோம்
நம் காதல் ஈர்ப்பு விதியாவது
அந்த இறைவனிடம் இருந்து
தப்பிக்கும் என்றேன் நான்
சிரித்தபடியே...
அந்த நட்சத்திரமோ
அதுவும் சரிதான்...
உன் காதலை எல்லாம்
என்னால் ஏற்க முடியாது
என்றது...
ஏன் என் காதலில்
புனிதம் இல்லையா என்று
தவிப்போடு கேட்கிறேன்...
அப்படி தான்
வைத்துக் கொள்ளேன்
பொழுது புலர்ந்ததும்
உன் அலுவலக மேலதிகாரியின்
கட்டளைகளை சிரம் மேல் ஏற்று
ஒரு அடிமையை போல
இருக்கும் உன் கோலத்தை
என்னால் சகிக்க முடியாது...
உன் இயந்திரத்தனமான
காதலில் எல்லாம் விழும் அளவுக்கு
நான் ஒன்றும் உணர்வற்ற ஜடமல்ல என்று சொல்லி விட்டு
அங்கே மேகங்களில் இருந்து
வெளியே வந்து
எங்கள் சண்டையை
எட்டிப் பார்த்த நிலவின்
காதல் ஒளியில்
தன்னை இழந்தது
அந்த நட்சத்திரம்...
நானோ அதை பார்த்து பெரு மூச்சு
ஒன்றை உதிர்த்து விட்டு
இமைகளோடு போராடுகிறேன்
உறக்கத்திற்காக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/06/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக