தினம் தினம்
வாழ்வெனும் இடிபாடுகளில்
சிக்கி சிதறி
கிடக்கிறேன்...
எந்தவித தற்காப்பு வித்தையும்
இது வரை நான்
கற்றுக் கொள்ளப்படாததன்
விளைவை நான் அனுபவித்து
அந்த விதி எனும்
பெரும் பாறாங்கல்
என் முதுகில் ஏறி
இங்கும் அங்கும்
நர்த்தனம் ஆடுகிறது...
அந்த நர்த்தனத்தின் வலியில்
நான் முனகி ஓலமிடுவதை
அந்த காலமெனும் பைரவனோ
எனக்கும் இதுக்கும்
சம்பந்தம் இல்லை என்று
ஒரு ஒற்றை பார்வை
பார்த்து விட்டு
கொஞ்சம் மனமிரங்கி
ஓலமிடுகிறது...
அங்கே என் இரத்த சொந்தங்களும்
தெரிந்தவர்களும்
என்னை தேடும் வேட்டையை
சிறிது நேரம் நடத்தி விட்டு
அவரவர் வேலைக்கு
முகத்தில் வலுக்கட்டாயமாக
வரவழைக்கப்பட்ட கவலையோடு
தன் வீட்டுக்கு
திரும்புகிறார்கள்...
சும்மா என்று நினைத்து விடாதீர்கள்...
அவள் ஆடிய திமிர் பிடித்த
ஆட்டத்திற்கு இந்த காலம்
முன்னமே நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று
மனதிற்குள்
முனகுவதாக நினைத்துக் கொண்டு
சற்றே குறைந்த குரலில் முணுமுணுத்துக்கிறார்கள்...
நான் அந்த முணுமுணுப்பு
குரலை உற்று கேட்டு விட்டு
இவர்களுக்கு அந்த காலமெனும்
பைரவனே பரவாயில்லை
எந்தவித அலங்கார பூச்சும்
இல்லாமல் வெளிப்படையாக
தன் இயலாமையை
சொல்லி விட்டு
கொஞ்சம்
கருணையோடு
ஓலமிட்டு சென்று
இருக்கிறானே என்று
அவனுக்கு மானசீகமாக
நன்றி செலுத்தி
கொஞ்சம் கொஞ்சமாக
அந்த இடிப்பாடுகளில்
புதைகிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/07/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக