புத்தக பை சுமந்து
பட்டாம்பூச்சியாக திரிந்த
அந்த காலத்தில்
நினைவுகள் எல்லாம்
மனதின் ஒரு மூலையில்
தித்திக்கும் வெல்லமாக
சிதறிக் கிடக்கிறது...
நானும் என் நண்பர்களும்
விடுமுறை நாட்களில்
ஓயாமல் சுற்றி சுற்றி வந்த
அந்த ஆலமரத்தின் நிழல்
மட்டும் ஒரு அடையாள சின்னமாக
அங்கே ஊரின் நடு பகுதியில்
எங்கள் வருகைக்காக
ஏங்கி போவோர் வருவோரை
உற்று உற்று பார்க்கிறது...
அந்தவொரு விடுமுறை நாளில்
நான் மட்டும் நிறைய எலந்தை பழங்களை
தன் பாவாடையில் நிறைத்து
ஓடுவதை பார்த்து
நீ என்னை துரத்தி வந்து
அத்தனை பழங்களையும்
சிதறடித்து சண்டை போட்டு
என் பேச்சு கா விட்டு
பேசாமல் வேகமாக சென்ற
நாள் மட்டும் இன்னும்
அப்படியே இருக்கிறது
என் மனதின் சாலையில்
ஒரு பெரும் பள்ளமாக...
அது நடந்து பல வருடங்களாகி
விட்ட போதும்
இப்போதும்
எங்கே எலந்தை பழங்களை
பற்றிய பேச்சுக்கள்
வந்தாலும் நீ அங்கே
சத்தமில்லாமல்
என் எதிரே கோபமாக
நின்று விடுகிறாய்...
தற்போது நீ எங்கே என்று
தெரியவில்லை என்றாலும்
உனக்கு நம் சண்டை
ஞாபகம் இருந்தால்
எப்போதேனும் நாம் சந்திக்கும்
தருணத்தில்
என்னிடம் பழம் விட்டு விடு...
நீ எனக்கு தந்த காயை
வைத்துக் கொண்டு
நான் படும்
அவஸ்தையை பார்த்து
இங்கே என்னை பலபேர்
கேலி செய்கிறார்கள்
என் காதலே...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:02/05/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக