அற்புதமான படைப்பின்
ரகசியத்தை அறிந்த
கையில் உருவான
இந்த சிறு மண் பாத்திரம்
என் உடலெனும்
கூட்டை விட்டு உயிர்
போகும் போது
வழி துணையாக
இத்தனை காலம்
என்னோடு பயணித்த
அத்தனை உறவுகளும்
சத்தம் இல்லாமல்
சிறு விசும்பலோடு விலகி
என் உடலுக்கு
தீ வைத்தவுடன்
மெல்ல மெல்ல
விடை பெறும் போது
அந்த குயவனின்
அழகிய கைகளால் உருவான
அந்த அழகிய மண் பாண்டம்
மட்டும்
தன் உடலை சிதறடித்து
உயிரை அர்பணித்துக் கொண்டு
என்னோடு பயணிப்பதை
சூட்சமமாக பார்த்து
கொஞ்சம் நெகிழ்ந்து தான்
போகிறேன்...
இங்கே எனக்கான
துணையாக
அந்த பாண்டம் மட்டும்
ஏன் என்னை கூடவே
துரத்தி வருகிறது என்று
யோசிக்கும் போதே
உனக்கும் எனக்கும் உள்ள
உறவை எப்படி நீ மறந்தாய் என்று
அது கேட்டு விட்டதில்
நான் பேரமைதி கொண்டு
சூட்சம உலகில் பயணிக்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/06/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக