நீ என்னோடு பயணித்த நாட்களில்
எல்லாம் நமது வீட்டில்
ஒரு ஓரமாக அமைதியாக
வேடிக்கை மட்டுமே
பார்த்துக் கொண்டு இருந்தது...
நமது சிறு சிறு சுவாரஸ்யமான
மகிழ்வில் எல்லாம்
அது சிறு முறுவல் கொண்டு
பார்த்து ரசித்து இருந்தது...
ஏதோவொரு நேரத்தில்
நாம் ஊடல் கொண்டு
பேசாத நாட்களில் எல்லாம்
ஒரு தோழமையோடு
சோகமான முகத்துடன்
இருப்பது போலவே
காட்சி அளிக்கும்...
ஊடலை நிறுத்தி விடுங்களேன்
என்று கெஞ்சும்
ரகசிய தொனியில்...
இதோ இப்போது
நமக்குள் ஏற்பட்ட
பெரிய கருத்தியல் மோதலில்
உனது வீட்டிற்கு சென்று
நாட்கள் மாதங்களாக
உருண்டோடி விட்டது...
எனக்கான துணையாக
நீ ஆசையாக வாங்கி தந்த
முதல் ஆண்டு நிறைவில்
திருமண நாள் பரிசாக
இதோ இந்த கரடி பொம்மை
பாவமாக என்னை பார்க்கிறது...
என்னை பார்த்து எப்போது
நீ சென்று கூட்டி வருவாய் என்று
கேட்பது போல முகத்தை
தொங்க போட்டு கிடக்கிறது...
என் மீது கோபித்துக் கொண்டு...
எனக்காக இல்லை என்றாலும்
இந்த கரடி பொம்மைக்காகவேனும்
இல்லம் தேடி ஓடி வந்து
என்னை ஒரு பாவனைக்காக
அணைத்துக் கொள்
பாவம் அந்த உயிரற்ற
ஆனால் உணர்வை
புரிந்துக் கொண்டு பிரதிபலிக்கும்
ஜீவனின் மகிழ்விற்காக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:19/04/26.
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக