ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில் 

வாழ்ந்து கொண்டு 

இருப்பவர் சில நாட்களில் 

உற்சாகம் இழந்து 

அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய 

அந்த வீட்டில் 

உள் அலங்காரமாக செதுக்கிய 

கலையை ரசிக்காமல் 

அது நாளடைவில் பொலிவிழந்து 

அவரின் ரசனைக்காக 

ஏங்கி கிடக்கிறது...

புதிதாக இருந்த போது 

தாம் எவ்வாறெல்லாம் 

புகழப்பட்டோம் என்று 

நினைத்து நினைத்து 

ஏக்க பெருமூச்சு விட்டு 

அந்த நாளின் நினைவுகளை 

அசைப்போட்டு ஆறுதல் 

தேடிக் கொண்டது...


அந்த வீட்டின் வெளி சுவரில் 

வரையப்பட்ட சாலையோர 

புழுதியில் நனைந்த 

ஓவியம் ஒன்று 

புதிதாக ரசிக்கப்பட்ட 

அதே சுவையோடும் பொலிவோடும்...

உற்சாகமாக இருக்கிறது ...

அந்த சாலையில் தினந்தோறும் 

நடந்து செல்லும் 

அந்த வீடற்ற மனிதரின் 

கலா ரசனையோடு கூடிய 

பார்வையால் தினமும் 

நின்று நிதானமாக 

தாம் காதலோடு 

ரசிக்கப்படுவதை பார்த்து...

#அந்தவீடற்றவரின்கலாரசனை

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த நதி என்னில் உமிழும் அமிழ்தம்...

 


ஒரு நதி இங்கே 

எந்தவித சலனமும் 

மனதில் கொள்ளாமல் 

சத்தம் இல்லாமல் நூல் பிடித்தது போல 

விதி எழுதிய போக்கில் 

பயணித்துக் கொண்டு தான் 

உள்ளது...

காலமாகிய நான் உங்களிடம் 

கேட்டுக் கொள்வதெல்லாம்

அந்த பயணத்தில் 

ஒரு சிறு கூழாங்கல் கூட எறிந்து 

சலனப்படுத்தாமல் 

அதை அதன் போக்கில் 

பயணிக்க விடுங்கள் என்பதே...

நீங்கள் அந்த நதியில் நீராடி 

கலங்கப்படுத்தி பாவத்தை அந்த நதியில் 

கலக்காமல் இருந்தாலே போதும் 

அது தனது தவ பலத்தால் 

சுவையான நீரோடு பயணித்து 

என்னில் கலந்து விடும்...

அது என்னுள் உமிழும் 

அமிர்தத்தை கொண்டே 

என் ஆயுளை நீட்டித்து 

உங்கள் வாழ்வில் 

உங்களோடு பயணிக்கும் 

பாவ புண்ணிய கணக்கை 

கணக்கிட்டு 

எனது பயணத்தில் சிறு பின்னமும் 

ஏற்படாமல் 

யுகம் யுகமாக பயணித்து 

தர்மத்தின் தாரையை 

இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவேன்..

#ஒருநதியின்சலனமில்லாதபயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.

காலை சிந்தனை ❣️🎉


ஒரு கோப்பை தேநீர்

ஒரு சில புத்தகங்கள்

எந்தவித சஞ்சலமும் இல்லாத 

ஒரு நாளை கடத்த 

போதுமானதாக இருக்கிறது...

இனிமையான பொழுதாக 

தங்களுக்கு அமைய 

வாழ்த்துகள் நேயர்களே ✨🎻💐.

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைசிந்தனை.

வாழ்வை சிறைப்படுத்த முயலாதீர்கள்...


தமக்கென்று ஒரு அடையாளம்;

தம் பெயரை சொல்ல பிள்ளை;

நாம் வாழும் வாழ்க்கைக்கு 

ஏதோ அர்த்தம் இருக்க வேண்டும் 

என்று ஆழ்ந்து நம்புவது 

இவை எல்லாமே மஹாமாயா...

வாழ்க்கை என்பது இந்த வட்டத்திற்குள் அடைபட்டு 

கிடக்க வேண்டும் என்ற 

விதிகளுக்கு அப்பாற்பட்டது...

வாழ்தல் தவம்...

அதை எந்த அடையாளத்திற்குள்ளும் 

வட்டத்திற்குள்ளும் 

திணிக்க முயலும் போது

அதன் உண்மையான சுதந்திரம் 

பறிக்கப்படுகிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/08/26.



அந்த இலக்கியவாதியும் நடுநிசி மனிதர்களும்...

 


அந்த இலக்கியவாதி அன்றொரு நாள் நடுநிசி நெருங்கும் அந்த வேளையில் தனக்கு நெருக்கமான எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டு இருந்தார்...

தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் ஏதோவொரு கலை பயணத்தில் இணைத்துக் கொள்வது அவரது பொழுதுபோக்கு என்று சொல்லலாம்... அப்படி அந்த வாசிப்பில் மூழ்கியவருக்கு அவரது வீட்டின் அழைப்பு மணியோசை காதில் விழுந்தது... அந்த அழைப்பு மணி ஓசை கேட்டு சாதாரண மக்களாக இருந்தால் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தாரையே அலறி அடித்து எழுப்பி விடும் சுபாவம் உள்ளவர்கள் மத்தியில் இவர் அதை ஒரு முறை அப்படியே நோட்டமிட்டு விட்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

வெளியே ஒரு கூட்டமே அவரது கதவு திறக்காதா என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து விட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்தியது... இப்போதும் எந்த சலனமும் இல்லை அவரிடம்...

பிறகு பொறுமை இல்லாமல் ஒருவர் அந்த கதவின் மீது கையை வைக்க அது இலகுவாக திறந்து கொண்டது கண்டு வியப்படைந்தார்கள்... அப்படியே அவர்கள் அவரை நோக்கி வந்து ஒரு வணக்கம் செலுத்தினார்கள்... அவரும் தனது உடல் மொழியால் அவர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

இவர்கள் அனைவரும் நாங்கள் இங்கே அமரலாமா சார் என்று கேட்டார்கள்.. அவரும் தனது கண்ணசைவில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்...

இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அமர்ந்து கொண்டு எப்படி வந்த விசயத்தை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தார்கள்... பிறகு ஒரு வழியாக அவரது இலக்கிய படைப்புகளை வரிசையாக தரம் பிரித்து வைத்துக் கொண்டு இந்த இந்த படைப்புகள் எல்லாம் நாங்கள் திரைப்படமாக எடுக்க போகிறோம் அதற்கு தங்களது அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள்... அப்போது அங்கே அந்த மேசையில் உள்ள பொம்மை ஒன்று காதை தீட்டிக் கொண்டது..இவரிடம் போய் இந்த மனிதர்கள் வந்து இருக்கிறார்களே இவர்கள் கிறுக்கு தான் பிடித்து விட்டது போலும்..இவர் என்ன குணாதிசயம் உள்ளவர் என்று இத்தனை நாள் இவரோடு பயணிக்கும் எனக்கே கணிக்க தெரியாதே..சரி இவர் என்ன தான் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று தனது காதை கூர்மையாக்கி கொண்டது..இவர் அதை கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை... வந்தவர்கள் தங்களுக்குள் இந்த இந்த படைப்புகளுக்கு இந்த தொகையை பேசி விடலாமா என்று விவாதித்து கொண்டு இருந்தார்கள்.. குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் அந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்... ஒரு வழியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அவர் இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த இருக்கை காலியாக இருந்தது.. எங்கே சென்று இருப்பார் ஒரு வேளை கழிவறை சென்று இருக்கக் கூடும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அந்த இரவின் பேரமைதி வெளிப்படும் வகையில் அமர்ந்து இருந்தார்கள்... ஆனால் அவரை காணவில்லை..


ஒரு வேளை வெளியே தோட்டத்தில் உலாவ கூடும் என்று அந்த கூட்டத்தில் இருந்த இலக்கிய அறிவு சிறிது உள்ள ஒருவன் மட்டும் எழுந்து சென்று பார்த்தால் அவன் நினைத்தது போலவே அங்கே தான் அவர் அமைதியாக அந்த நடுநிசியில் நனையும் செடி கொடிகளை ரசித்தபடி மிகவும் மெதுவாக அதை வருடியபடியே அந்த தேய்பிறை நிலவின் மங்கிய ஒளியில் நடந்து கொண்டு இருந்தார்...

அவன் அதற்குள் உள்ளே ஓடோடி அவர் அந்த தோட்டத்தில் தான் இருக்கிறார் என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தான்..

எல்லோரும் அங்கே சென்று மீண்டும் தாங்கள் பேச நினைத்த அவர் எழுதிய இலக்கியத்திற்கான தொகையை சொன்னார்கள்... அவர் மிகவும் நிதானமாக நான் எப்போது என் கதையை உங்களிடம் கொடுப்பதாக சொன்னேன் என்று கேட்டார்..

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. சார் நீங்கள் உங்கள் இல்லத்தில் எங்களை அனுமதித்தது மற்றும் நாங்கள் வந்த காரணத்தை சொன்னபோது நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே... அதனால் தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம் என்றார்கள்..

ஓ அப்படியா... ஆனால் நான் நீங்கள் எல்லோரும் ஏதோ எனது வீட்டில் திருட வந்ததாக அல்லவா நினைத்து மௌனமாக வாசித்து கொண்டு இருந்தேன் என்றார் மிகவும் நிதானமாக...

அதற்கு அவர்களுக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சார் ஒரு திருமணம் ஆகாத இலக்கியவவாதியான உங்கள் வீட்டில் என்ன இருக்க போகிறது? நாங்கள் திருடர்களாகவே இருந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனால் இலக்கியவாதியான உங்கள் வீட்டில் சில பல இலக்கிய புத்தகங்களோ தத்துவ புத்தகங்களோ நீங்கள் எழுதிய புத்தகங்களோ இருக்க போகிறது... இதை எவர் வாங்குவார்கள்...அதை நீங்கள் நினைப்பது போல நாங்கள் திருடர்களாகவே இருந்து எடுத்து சென்று விலைக்கு போட்டாலும் ஒரு வேளை உணவு எங்களால் நிம்மதியாக உண்ண முடியாத அளவுக்கு வரியை வாரி இறைத்து எங்கள் வயிற்றின் சூட்டில் குளிர் காயும் அரசாங்கம் உள்ள நாட்டில் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களால் எங்கள் பசிக்கு கூட உதவ முடியாது... நாங்கள் இங்கே ஒரு பத்து பேருக்கு மேல் இருக்கிறோம்... அது சரி நீங்கள் எங்கோ வேறு உலகத்தில் வாழ்பவர் போல பேசுகிறீர்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரஜை தானே என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கேட்டான்..

அதற்கு அந்த எழுத்தாளர் ஆம் நான் இந்த நாட்டின் வரிக்கு உதவ முடியாத பிரஜை என்று நகைச்சுவையாக சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று தான் வாசித்து வந்த புத்தகத்தின் மீதி பக்கங்களை வாசிக்க தொடங்கினார்...

வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அப்ப நாங்க வரோம் சார் என்றார்கள்... ம்ம்... போகும் போது அந்த கதவை கொஞ்சம் நன்றாக சாத்தி விட்டு செல்லுங்கள் இன்னும் எவரும் உங்களை போல வந்து விட போகிறார்கள்... எனது வாசிப்பு தடை பட்டால் எனக்கு பிடிக்காது என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு அந்த புத்தகத்தில் வாசிக்க மூழ்கினார்...

#ஒருஇலக்கியவாதியும்

#அந்தநடுநநிசிமனிதர்களும்.

#கதையாக்கம்இளையவேணிகிருஷ்ணா.

புதன், 19 ஆகஸ்ட், 2026

நிஜ மரமும் பண மரமும் -சிறுகதை.


அந்த அதிஅற்புதமான 

பழங்களை கொடுத்து 

என்னை மகிழ்வித்து 

கொண்டிருந்த மரங்களை 

எல்லாம் 

அங்கே பணத்தை

குவித்து என்னை 

உச்ச நிலைக்கு 

அழைத்து சென்று விடும் 

மாயையில் 

அதை எல்லாம் 

சாய்த்து விட்டு

என் நிலத்தை கான்கிரீட் பணம் 

காய்க்கும் கட்டிட கிளைகளை 

உருவாக்கி சிறிது காலம் 

பெரும் செழிப்பில் 

மகிழ்ந்திருந்தேன்

சில காலம்...


அப்போது அங்கே 

வசித்த பறவைகள் 

எல்லாம் கீச் கீச் என்ற 

அடர்ந்த குரல்கள் 

காற்றில் கரைய 

வெகு தொலைவில் உள்ள 

மரங்களை சென்று 

தஞ்சமடைந்தது...


அந்த உணர்வுபூர்வமான நகர்தலை 

சிறிதும் கண்டுக் கொள்ளாமல் 

ஒரு சிரிப்பில் எகதாளமிட்டு 

அங்கே கூடி இருந்தவர்களிடம் 

சொல்லி சிரிக்கிறேன்...


இதோ காலங்கள் 

உருண்டோடி விட்டது...

இப்போது ஒரு பூகம்பத்தில் 

நான் உருவாக்கிய 

கான்க்ரீட் காடுகளாக 

காட்சி அளித்த இடங்கள் எல்லாம் 

தற்போது மயான பூமியாக 

காட்சியளித்ததை பார்த்து 

என் கண்களில் பெரும் நீருற்று 

பெருகி ஆறாக ஓடியது...


அப்போது என்தோளில் 

யாரோ அமர்வது போல 

சற்றே திரும்பி பார்க்கிறேன்...

அது வேறு யாருமல்ல 

என்றோ என் நிலத்தில் பசியாறிய குருவி ஒன்று தன் அலகில் 

ஒரு சிறிய பழத்தை 

சுமக்க முடியாமல் சுமந்து 

என் கவனத்தை திருப்பி 

என் உதட்டில் 

அந்த பழத்தை திணிக்க முயற்சி 

செய்கிறது...


செய்நன்றி மறவாத 

அந்த சிறிய குருவின் 

சின்ன கால்களை வருடி 

மன்னிப்பு கேட்கிறேன்...

சில கண்ணீர் துளிகள் 

அந்த குருவின் பாதத்தில் 

படர்ந்து என் பாவ மூட்டைகளை 

கரைக்க பெரும் பிரயத்தனங்களை 

அங்கே நிகழ்வித்துக் கொண்டு 

இருக்கிறது...


நான் சற்றே நிதானமாக பார்த்து 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு 

நிமிர்ந்து போது 

அந்த குருவி மீண்டும் 

என்னை ஒரு வித கவலை உணர்ச்சி பொங்க கீச் கீச் என்று 

மெல்லிய குரலில் குரல் எழுப்பியது...


நான் பேரன்பின் உணர்வுகளின் 

சக்தியை உணர்ந்து அங்கே 

பேச்சற்று அந்த குருவியை 

அணைத்துக் கொண்டு 

கண்ணீர் வழிய நிற்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:20/08/26.




அந்த பிரபஞ்சம் என்னை கூர்ந்து நோக்கியபோது...


எத்தனையோ 

சலசலப்பான நகர்வுகளுக்கு 

மத்தியில் 

ஒரு புழுதியென 

அங்கே பறந்து 

காலமெனும் வெளியில் 

கலக்கிறேன்...


இங்கே எனக்கென்று 

ஒரு அடையாளம் இருக்கிறது என்று 

அங்கே 

பலபேர் கூச்சலிட்டுக் கொண்டே 

இருக்கிறார்கள்...


நான் அவர்களின் 

கூச்சலை ஒரேயொரு 

பார்வையில் அடக்கி விட்டு 

அவர்கள் சொல்கின்ற 

அடையாளங்களை உதறி 

அந்த புழுதியில் 

கரைத்து விட்டு 

அந்த காலமெனும் சாலையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

ஏந்தி நிதானமாக 

கடந்து கடந்து செல்கிறேன்...


அந்த பிரபஞ்சமோ

என்னை கூர்ந்து 

கவனித்து 

எனக்கு ஒரு விருதை 

என் கைகளில் திணித்து விட்டு 

சென்றது...

அவள் ரசனையுள்ள 

கவலைகளற்ற 

வேடிக்கை பார்ப்பவள் என்று...


நான் அதையும் 

ஒரு புன்னகையோடு 

கடந்து செல்லும் போது 

என் கையில் உள்ள 

தேநீர் கோப்பையில் 

தேநீர் காலியாகி 

இருந்தது...

அதன் சுவை மட்டும் 

என்னோடு விடாப்பிடியாக 

பயணித்துக் கொண்டிருக்கிறது...

பெரும் காதலெனும் உணர்வோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/08/26.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

வேடிக்கை பார்க்கும் சுகத்தில்...


வேடிக்கை பார்க்கும் சுகத்தில் தான் 

இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு 

இருக்கிறது 

மிகவும் உற்சாகமாக...

ஒரு மனிதனின் துக்கமும் இங்கே 

வேடிக்கை தான்...

நானோ அந்த இயல்புடைய

மனிதர்களின் 

அருகில் இருப்பதை தவிர்த்து 

என் கனவுகளுக்கு மெருகேற்ற 

சும்மா அப்படியே வேடிக்கை பார்க்கிறேன் 

அதோ அங்கே எதிர்பாராத விதமாக 

என் கனவுகள் அத்தனையும் 

சுமந்து அங்கே ஒரு கப்பல் 

மிதந்து வருகிறது...

நானோ என்னையும் மறந்து 

மூழ்கி போகிறேன் 

அந்த கப்பலின் பிரமாண்டத்தை பார்த்து...

அந்த கப்பலோ

என் கனவுகளை கரையில் 

இறக்கி விட்டு விட்டு 

என்னையும் வாரியணைத்து 

இந்த பிரபஞ்சத்தை

சுற்றிக் காட்ட பேரன்போடு 

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா

#நாள்18/08/26.



திங்கள், 17 ஆகஸ்ட், 2026

மனமெனும் மயக்கத்தில் நான்...



என்றோவொரு நாள் 

பார்த்த 

உன் முகத்தை 

இன்றும் தேடியலைகிறது

என் ஜீவன்...

மது மயக்கத்தில் 

மூழ்கி அலையும் 

வண்டை போல 

என் மனமெனும் சாலையில் 

உன் பாத வாசத்தை 

தேடி ஒவ்வொரு நொடியும் 

அலைந்து திரிகிறேன் 

ஒரு பித்தனை போல...


காலத்தின் கரைகளில் 

நீ எங்கே ஒதுங்கி 

வேடிக்கை பார்த்துக் கொண்டு 

இருக்கிறாய் என்று 

யார் அறியக் கூடும்?

அது ஒரு மன மயக்கம் என்று 

எத்தனையோ முறை 

நான் என்னை தேற்றிக் கொண்டு 

சூழலை இயல்பு நிலைக்கு 

கொண்டு வர 

வெகு பிரயத்தனத்தோடு 

போராடி தோற்றுக் கொண்டு 

இருக்கிறேன் உன்னால்...


உண்மையில் நீ யார்?

நான் தேடும் காதலா 

இல்லை 

காதலின் மனமயக்கமா 

இது வரை ஏதும் 

பதில் இல்லையடி 

கண்மணி...

ஏ காலமே நீ சற்றே 

நின்று நிதானமாக ஆராய்ந்து 

என் கேள்விக்கு பதில் 

சொல்லி விட்டு போ...

இல்லை 

அதோ அங்கே சுடர் விட்டு 

கனலாக எரியும் 

அந்த தணலில் 

என்னை தள்ளி விட்டு போ...

அந்த அக்னியின் ஜீவாலையிலேனும் 

நான் அந்த மயக்கத்தில் இருந்து 

விடுபடுகிறேனா என்று 

பார்க்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:17/08/26.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

சுதந்திரம் என்பது யாதெனில்...

 


சுதந்திர தின சிறப்பு தலையங்கம்:-

தமிழ் நாட்டில் கனிம வளங்கள் கொள்ளை போவதை இதோடு நிறுத்த சட்ட சபையில் மசோதா நிறைவேற்றி இதை மக்கள் இயக்கமாக நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட வேண்டும்... இது தான் சுதந்திர தின வாழ்த்து செய்தி...


அனைத்து ஜீவ ராசிகளும் வாழ தான் இந்த பிரபஞ்சம் சிருஷ்டிக்கபட்டு இருக்கிறது...


இங்கே நமது பாரதத்தில் இயற்கைக்கு எதிராக எத்தனையோ விஷயங்கள் நடந்துக் கொண்டு இருக்கிறது...அதை இதோடு நிறுத்திக் கொள்ள தீவிரமாக நாட்டை ஆள்பவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்...


அதை விடுத்து வெறும் பொருளாதாரம் மற்றும் வல்லரசு என்று சுதந்திர உரையில் மாய வித்தைகள் காட்சியாக மக்கள் மனதில் ஓட வைக்கும் பேச்சை நிறுத்துங்கள்...


இங்கே மக்களின் வாழ்வுரிமை மற்றும் பல ஜீவ ராசிகளின் வாழ்வுரிமையை காக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்...


அதை விடுத்து வெறும் பாரத் மாதாவிற்கு ஜெ என்று முழங்குவதால் நிச்சயமாக ஒன்றும் நடக்காது...


ஆட்சியாளர்கள் இயற்கை சுரண்டலை விடுத்து மக்கள் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் நிம்மதியாக வாழ இந்த சுதந்திர உரையில் சூளுரைக்க வேண்டும்...


வெறும் பொருளாதார பார்வையில் நாட்டை இது வரை வெறும் குட்டிச் சுவராக்கியது போதும்...


நதிகளை மலைகளை காடுகளை மீட்கும் உறுதி மொழியே தற்போதைய தேவை...

எங்கே பார்த்தாலும் கான்கிரீட் காடுகள் பெருகி மிக பெரிய அச்சுறுத்தல் உள்ளது... நிஜமாகவே கட்டிடங்களை பார்க்கும் போது அடர்ந்த பயம் ஒன்று மனதிற்குள் புகுகிறது...


ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு... அது கிராமமோ நகரமோ.. இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்...


இருக்கும் தொழிற்சாலை தவிர புதிதாக வரக் கூடாது... கான்கிரீட் காடுகளுக்கு எதிரான போராட்டமே தற்போதைய தேவை...

நில உச்சவரம்பு சட்டம் போல வீடு உச்ச வரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும்...


இல்லை என்றால் காடுகள் காணாமல் போய் நரகத்தின் வாசலுக்கு நம்மை அழைத்துச் சென்று இருக்கும் இந்த நிலையை மாற்ற முடியாது...

இது தான் சுதந்திர தின செய்தி...

வாழ்த்துக்கள் மக்களே 🤝🙏🍂🦋😼🙊🥀🍃🪴🌴🪵🌲🌳🪾🌿☔❄️🌊🏖️🫎🐰🐭🐶🐺🐻🐗🐴🦎🐉🦖🦕🐊🐍🦕

#சுதந்திரதினசிறப்புதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/08/26.

புதன், 12 ஆகஸ்ட், 2026

காலமெனும் கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு...


காலமெனும் கதவிடுக்கில்

மாட்டிக் கொண்டு 

கண்ணீர் வடிக்கிறேன்...

காலமோ எதுவும் சொல்லாமல் 

என் நிலையை ரசித்து 

தன் முகத்தில் 

புன்னகையை ஏந்தி 

கடந்து செல்கிறது...

காலத்தை கொஞ்சம் 

பெரும் குரலெழுப்பி 

அழைக்கிறேன் நான்...

கொஞ்சம் நில் 

எப்போது என்னை 

நீ விடுவிப்பாய் என்று

பதில் சொல்லி விட்டு போ 

என்கிறேன் 

மிகவும் விரக்தியாக...

இது நாள் வரை 

எத்தனை கற்பத்தில் பத்தில்

பயணித்தாய் என்று 

உன் பிறவியை யோசித்து 

கணக்கிட்டு கொண்டே இரு...

அதற்குள் நான் 

வந்து விடுகிறேன் 

என்றது 

மிகவும் நிதானமாக...

நான் அந்த கணக்கீட்டிற்கான

புள்ளி விபரங்களை 

எங்கே தேடி சேகரிப்பது என்று 

குழப்பமாக பயந்து 

கண்ணீர் வடிக்கிறேன்...


அப்போது அங்கே 

சில பல மனிதர்கள்

மிகவும் சுதந்திரமாக 

ஒருவருக்கொருவர் 

பேசி சிரித்து செல்கிறார்கள்...

நான் அவர்களை 

எவ்வளவு பிரயத்தனங்கள் 

செய்தும் அழைக்க முடியவில்லை...

ஒரு வேளை அவர்கள் 

காலத்திடம் 

தமது பிறவி கணக்குகளை 

ஒப்படைத்து விட்டு 

சுதந்திரம் அடைந்து விட்டார்களா 

என்று தெளிவுப்படுத்திக் கொள்ள 

மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன் 

காலம் வரும் பாதை பார்த்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/26.





சமூக நிகழ்வெனும் மாய ஓட்டப்பந்தயத்தில்...

 



நான் எது எதிலோ 

நிம்மதி என்று 

ஓடிக் கொண்டே 

இருக்கிறேன்...

எந்தவித கேள்வியும் 

கேட்க நேரமில்லாமல் 

ஒரு மாய ஓட்டப்பந்தயம் 

எனும் சமூக நிகழ்வில்...


சில குடும்ப உறவுகளில் 

நிம்மதியாக 

உணரும் தருணங்களின் 

அடுத்த சில கால 

இடைவெளியில் 

அதே உறவு...


சில துன்பங்களை 

தூக்கி நம் மீது சுமக்க 

வைத்து விடுகிறது...

அப்போது 

நம்மை நிழலாக 

தொடர்ந்து வந்த நிம்மதி 

எங்கே ஒளிந்துக்கொண்டு 

கண்ணாமூச்சி ஆடுகிறது 

என்று தேடி 

அலைகிறேன்...


சில பிடித்த விஷயங்களில் 

ஆழ்ந்து 

என்னை தொலைக்கும் 

காலங்களில்

என்னை சேரும் புகழில் 

ஆழ் கடல் முத்து 

கிடைத்து விட்டதென

ஆனந்த கூத்தாடி 

களிக்கிறேன்..


அதே பிடித்த விஷயம் 

சில சமயங்களில் 

நானே வெறுத்து ஒதுக்கி 

எதுவும் செய்யாமல் 

காரியமற்ற நிலையில் 

கிடக்கிறேன்...


இங்கே எது உண்மை 

எது பொய்யென 

நுட்பமான தேடலில் 

நான் தொலைந்து 

கால வெளியில் சோர்ந்து 

அமரும் போகும் போது 


காலம் என்னை தேற்றி 

கை பிடித்து 

அழைத்து செல்கிறது... 


இங்கே 'நான்' 

தொலையும் வரை 

பாதி உண்மை

பாதி பொய்யென 

காட்சி கொடுத்து 

காட்சி பிழையாக 

சுற்றும் 

உன் பிறவி சூழலை 

முடிக்கும் வரை 

பாதி உண்மை எனும் 

மாயா சூழல் 

உன்னை விட்டு 

பிரியாது பயணிக்கும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/26.


ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

இந்த பிரபஞ்சத்தின் நாடக மேடையில் அசல் நாயகன்...

 


அங்கே எத்தனை முறை 

வீடு முழுவதும் தேடியும் 

அந்த ஜீவன் 

அகப்படவில்லை...


எங்கே சென்று இருக்கும் 

என்று குழம்பிப் போய் 

ஒரு பைத்தியகாரியை போல 

தேடி அலைகிறேன் 

அது ஒரு குவளை பால் 

சாப்பிடும் இந்த நேரத்தில்...


அது அமைதியாக 

ஒரு கோரை பாயை போல 

வாலை சுருட்டி தலையை 

தன் உடலுக்குள் 

புதைத்துக் கொண்டு 

படுத்திருக்கும் 

மேசைக்கடியில் 

அந்த கட்டிலுக்கடியில் 

என்று வீடு முழுவதும் 

அலசி ஆராய்ந்து விட்டு 


அந்த சோஃபாவில் 

சோர்ந்து வீழ்கிறேன்...

மீண்டும் 

நான் மெல்ல எழுந்து 

தேடுதல் வேட்டையை 

வெளியே தொடங்க 

கதவை திறக்கும் போது 

கடற்கரையில் அமைதியாக 

அந்த ஜீவன் அலையை 

ரசித்து தன்னை மறந்து 

அசைவற்று அமர்ந்து இருக்கிறது...


இங்கே அந்த சத்தமிடும் அலையை 

நான் பார்த்து பல நாட்கள் ஆவதை 

உணர்ந்து 

அதன் அருகில் அமர்ந்து கொண்டேன்..


அது நான் வந்த சுவடை கூட 

அறிய விருப்பம் இல்லாமல் 

இமைகள் இமைப்பதை மறந்து 

லயித்து கிடக்கிறது 

அந்த அலையின் ஓட்டத்தில்...


அது இருந்த அந்த நிலையில் 

இதுநாள் வரை 

என்னோடு பின்னி பிணைந்து 

 பயணித்து வந்த 

என் கல்வி நான் வகித்து வந்த 

பதவி செறுக்கு எல்லாம் 

கொஞ்சம் கொஞ்சமாக 

சூரியனை கண்ட பனி போல 

உருகி வடிந்து 

அந்த சமுத்திரத்தில் 

மெல்ல மெல்ல கரைகிறது...


இங்கே இந்த நொடியில் 

பிரபஞ்சத்தின் நாயகனாக 

அந்த பூனையை 

பிரபஞ்சம் அறிவித்ததை 

நான் கண்களில் வழியும் 

கண்ணீரை துடைக்க 

மறந்து அந்த ஜீவனை 

ஓடோடி சென்று 

என்னோடு 

அணைத்துக் கொள்கிறேன்...

அது ஏ

ன் என்று மட்டும் 

கேட்காதீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/08/26.



இவர்கள் அஞ்ஞான வாசம் எப்போது முடியும்?


நாள் தோறும் இங்கே 

பல மனிதர்கள் அரங்கேற்றும் 

நாடகத்தை 

இந்த பிரபஞ்சம் 

கொஞ்சமும் சத்தம் இல்லாமல் 

ரசிக்கிறது...


அவர்கள் நாடகம் முடிந்ததும் 

களையும் ஆடையாக 

உடல்கள் இங்கே 

அங்கொன்றும் இங்கொன்றுமாக

பரவி கிடப்பதை பார்த்து 

அதை மிகவும் நிதானமாக 

சேகரித்து தீக்கு இரையாக

சிலவற்றையும் 

மண்ணுக்கு உரமாக 

சிலவற்றையும் 

பாகம் பிரித்து 

கொடுத்து விட்டு 


தனக்கென எதுவும் 

வைத்துக் கொள்ளாமல் 

மீண்டும் நாடக மேடையில் 

புதிதாக ஏறும் 

கலைஞர்கள் களையும் ஆடைகளுக்காக 

காத்திருக்கிறது 

எந்தவித பற்றுதலும் 

இல்லாத 

இந்த பிரபஞ்சம்...


நாடக காட்சிகளில் 

நடிப்பவர்களோ 

அந்த கதாபாத்திரம் தான் என்று 

அகங்காரம் பிடித்து 

இங்கும் அங்கும் 

அலைந்து திரிந்து விட்டு 

சோர்ந்து போய் 

அந்த காலனிடம் 

அடைக்கலம் ஆவதை 

பார்த்த பிரபஞ்சம் 


இவர்கள் அஞ்ஞான வாசம் 

எப்போது முடியும் என்று 

மிகுந்த பொறுமையோடு 

காத்திருக்கிறது 

யுகம் யுகமாக...

அவர்களோ மீண்டும் மீண்டும் 

அதே மாய புதைக் குழிக்குள் 

மூழ்குவதிலேயே குறியாக 

இருப்பதை பார்த்து 

எதற்காகவும் நடுங்காத 

இந்த பிரபஞ்சம் 

ஒரு சில விநாடிகள் 

சோர்ந்து தான் போய் விட்டது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:10/08/26.











அங்கே சிறைப்பட்ட பறவைகளின் ஏக்கம்...


ஒருத்தி இருக்கிறாள்...

அவளது இருப்போ 

கட்டற்ற ஆற்றை போல அல்லாமல் 

ஒரு மென்மையான நதியை போல 

மிகவும் சுதந்திரமாக 

வழி நெடுகிலும் கை குலுக்கி 

நீர் துளிகள் படர்ந்த பூக்களை

வழி நெடுகிலும்

மிகவும் ரசனையாக 

சிதற விட்டு போகிறாள்...

அவளது வாழ்வின் ரசனையான 

நகர்வுகளை 

துளி துளியாக 

ரசித்து பார்த்து கொண்டு 

இருக்கிறது 

அங்கே ஒரு அதிசய 

சுதந்திர பறவை...

இங்கே ஒரு பெரும் சிறைக்குள் 

அடைப்பட்டு கிடக்கும் 

ஏராளமான பறவைகள் 

அதில் சலித்து சிறகு படபடக்க 

ஏக்கமாக வேடிக்கை பார்த்து

சத்தமிட்டு 

அந்த சுதந்திர பறவையின் 

கவனத்தை திருப்ப முயற்சி செய்து 

தோற்று விடுவதை

பாவமாக இந்த பிரபஞ்சம்

கையறு நிலையில் 

வேடிக்கை பார்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:09/08/26.

புதன், 5 ஆகஸ்ட், 2026

அந்த சதுரங்க ஆட்டத்தில் நான்...

 



அந்த சதுரங்க ஆட்டத்தில் 

ஆடவே தெரியாத என்னை 

வலுக்கட்டாயமாக 

யாரொவரால்

நிறுத்தி வைக்கப்பட்டு 

தோல்வியடைந்து 

தலை சாய்ந்து கிடப்பதை 

ஜீரணிக்க முடியாத 

காலமோ 


என்னை இழுத்து அணைத்து 

அங்கிருந்து தூக்கி செல்கிறது...

இங்கே எல்லாம் தெரிந்து தான் 

வாழ வேண்டும் என்று 

பிரபஞ்சம் எழுதாத விதியை 


அங்கே யாரொருவர் 

யாருக்கும் தெரியாமல் 

ஒரு கடினமான திரையால்

அதை மறைத்து பலபேரை 

இந்த சதுரங்க ஆட்டத்தில் 

காவு வாங்க உதவுகிறார்கள்...


அந்த வழியே என்னை 

இழுத்து வந்த காலமோ 

அந்த மறைத்த விதியை 

கவனித்து 

ஒரு பெரும் புயலை வரவழைத்து 

அந்த திரையை கிழித்து 

எங்கோ சென்று போட்டு விட 

தற்போது பல பேரும் 

நிம்மதியாக இந்த பிரபஞ்சத்தில் 

பயணிக்கிறார்கள்...


நான் தற்போது சற்றே 

கண் விழித்து பார்க்கிறேன்...

அருகில் இருந்த காலமோ 

இங்கே நிம்மதியாக 

சுவாசிப்பது முக்கியமா 

சமூகத்தின் துரத்துதலுக்கு 

அடிபணிதல் முக்கியமா என்று 

காலம் என்னை பார்த்து 

கேள்வி கேட்கிறது...

நானோ நிம்மதியாக சுவாசிப்பதே

முக்கியம் இங்கே என்று கூற 


அது என் முதுகில் தடவிக் கொடுத்து 

சில தின்பண்டங்கள் 

பசிக்காக கொடுத்து 

அந்த தென்றலை 

வழி துணையாக அனுப்பி வைக்க 

நான் சற்றே ஆறுதலாக 

பயணத்தை தொடர்கிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/08/26.


வெள்ளி, 31 ஜூலை, 2026

உன் மீதான தாபத்தின் வெப்பத்தை நழுவ செய்கிறது...

 


உன் நினைவுகளை 

சுமந்து கிடக்கும் 

இந்த இரவொன்றில் 

நீண்டதொரு 

வெறுமையான சாயலை 

என் மீது போர்த்தி செல்கிறது 

உன் மீதான காதல்...


உன் மீதான காதலில் 

ஒரு பித்து நிலையை 

நான் கடும் சிரமத்தோடு

கடக்கும் போதெல்லாம்...


இந்த தேநீரும் 

அந்த சிம்னி விளக்கும் 

தன்னால் ஆன ஆறுதலை 

எனக்கு தந்து 

என்னோடு அவ்வபோது 

உடனிருந்து பயணிக்கிறது...


பாவம் அந்த நிலவு தான் 

இங்கே கொஞ்சம் தடுமாறி 

போகிறது

தன் இயல்பை மறந்து... 


அது தான் சோகத்தின் 

கிரணங்களை என் மீது 

பாய்ச்ச மனமின்றி 

குளுமையை தந்து 

உன் மீதான தாபத்தின் 

வெப்பத்தை நழுவ செய்கிறது 

என்னிடமிருந்து...


நீயோ இதையெல்லாம் 

எங்கோ இருந்து 

கையில் ஒரு தேநீர் 

கோப்பையோடு 

வேடிக்கை பார்த்து 

ரசித்துக் கொண்டே 


அந்த நிலவை 

கோபித்துக் கொள்வதாக 

அங்கே உன்னை தீண்டிய 

தென்றல் 

என்னிடம் வந்து 

குறைப்பட்டுக் கொள்கிறது...


நானோ அந்த தென்றலை 

சமாதானம் செய்து 

என்னோடு 

இந்த இரவில் துணையாக 

வைத்துக் கொண்டேன்..


இதற்காக நீ 

அந்த தென்றலையும் 

உன் கோபத்தால் 

சபித்து விடாதே...


பாவம் அது பிழைத்து 

போகட்டும்...

அது எத்தனையோ முறை 

உனக்கும் எனக்கும் 

தூதுவாக இருந்து 

தந்த இன்பத்திற்கு 

நன்றி கடனாக 

இருந்து விட்டு போகட்டுமே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/07/26.







நிலவின் ரசிகையும் அந்த கவலைகளும்...

 


ஒரு தேநீர் கோப்பையோடு 

நிலவை ரசிக்க கிடைத்த 

இந்த நேரத்தில் 


எந்தவித மனிதர்களின் 

தொந்தரவும் 

இல்லாமல் ...

துரத்தும் கவலைகளை 

கொஞ்சம் தூர இறக்கி 

வைத்து விட்டு ...


நான் அந்த நிலவை ரசித்து 

தேநீரோடு பருக 

அந்த தென்றலின் தீண்டலில் 

என் கூந்தல் அலைபாய ...


நான் அந்த நிலவை நேசிப்பதாக 

கிசுகிசுத்து வைக்கிறேன்...

அந்த ரகசியத்தை 

தென்றல் களவாடி 

அந்த நிலவிடம் 

ஒப்படைக்க...


அங்கே நான் இறக்கி வைத்த 

கவலைகள் 

மெதுவாக என்னை தேடி 

அங்கே அலைந்து கொண்டு 

இருக்கிறது...


நானோ அது என் முதுகில் ஏறி 

சவாரி செய்யும் நேரம் வரை 

இந்த நிலவோடு 

சற்றே காதல் மொழி பேசி 

கரைகிறேன்...


இங்கே காதலின் தீராத 

தாகத்தில் கொஞ்சம் 

தாக சாந்தி அடைந்துவிடுவதை

யார் தான் விரும்பாதவர்கள் 

இங்கே?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/07/26.

பின் குறிப்பு:-

இந்த மாதத்தின் இறுதி கவிதை ❣️

ஞாயிறு, 26 ஜூலை, 2026

அமிர்த கடலென நீ எனக்கு...

 



எத்தனை துயரங்களையும் 

அசராமல்

அடித்து நொறுக்கி 

அந்த துயரங்களை

அயர்வடைய செய்து 


என் மோசமான 

சூழலை எல்லாம் 

கொஞ்சமும் 

அலுத்துக் கொள்ளாமல் 

என்னை தன் மிருதுவான 

அரவணைப்பால் 

அணைத்துக் கொண்டு 

என் வாழ்வில் 

நிகழும் 

நஞ்சு துளிகள் எனும் 

நிகழ்வுகளை எல்லாம் 

அமிர்த கடலென 

மாற்றுவதில் 


பெரும் மகிழ்வோடு 

ஈடுபடும் நீ 

எனக்கானவனாக 

இரேழு ஜென்மங்களிலும் 

சமுத்திரத்தை தேடி 

ஓடோடி வந்து சங்கமிக்கும் 

நதியென 

தொடர்வாயா 

என் ஆருயிரே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/07/26.


வெள்ளி, 24 ஜூலை, 2026

வாழ்வெனும் நெடும் பாதையில் நான்...

 



வாழ்வெனும் 

நெடும் பாதையில் 

வஞ்சிக்கப்பட்ட 

பலரோடும்...

உண்மையான 

நேசத்தை கொட்டி 

எதையும் 

என்னிடம் எதிர்பாராமல் 

பயணிக்கும் 

பலரோடும் 

தொடர்கிறது 

நிழல் போல வாழ்க்கை...


அந்த பாதையின் 

இரு பக்கத்திலும் 

நன்மை தீமையெனும் 

சிறகுகள் என்னை 

சுமந்து செல்கிறது...

கடந்து செல்ல வேண்டிய 

பாதையை மிகவும் 

இலகுவாக....


சில சமயங்களில் 

வாழ்வெனும் தோட்டத்தில் 

மலர்ந்து மணம் வீசும் 

சுகந்த மலர்களின் 

நறுமணத்தை நுகர்ந்து 

தென்றலாக

செல்கிறது...


பல சமயங்களில் 

வழியில் சக மனிதர்கள் 

நடத்தும் வேடிக்கை 

நிகழ்வுகளை

மிகவும் நிதானமாக 

ரசித்தபடியே கடந்து 

செல்கிறது...


ஏதோ பிறந்து வளர்ந்து 

இங்கே எதையோ செய்து 

அதன் மூலமாக 

சமூக மரியாதையை தேடி 

அலைபவர்கள் 

மத்தியில்...


நான் நானாக 

எந்தவித சலனமும் 

இல்லாமல் 

என் வாழ்க்கைக்கு 

அர்த்தத்தை தேடி தேடி 

சோர்ந்து போகாமல் 

அந்த நெடும் பாதையில் 

கையில் ஜீவித்து இருக்க 

வழி துணையாக 

எந்தவித உணவையும் 

எடுத்துக் கொள்ளாமல் 

ஏதோவொரு நம்பிக்கையில் 

பயணிக்கிறேன்...


இயற்கையோ 

எனக்கு 

தேவையான பொழுதில் 

தேவையான அமிர்தத்தை 

அங்கங்கே கொடுத்து 

என் கரங்களை குலுக்கி 

புன்னகையோடு 

பயணிக்க வைப்பதை 

பார்த்து கொஞ்சம் 

ஆச்சரியமாக பார்த்து 

பெருமூச்சொன்று 

உதிர்த்து 

கொஞ்சம் 

திரும்பி பார்க்கிறேன்...


கண்ணுக்கு எட்டிய 

தூரம் வரை 

என் பாதையில் 

நான் மட்டுமே 

இன்னும் 

அங்கே பயணிக்கிறேன்...

வேறு எவரையும் 

காணவில்லை...


அந்த நெடும் பாதை 

என்னிடம் 

மெதுவாக சொல்கிறது...

அவர்கள் அவர்களை 

நம்பி எடுத்து வந்த 

உணவு தீர்ந்து போய் ...


எங்கோ வேறு பாதையில் 

காலத்தின் கைகளில் 

அடைக்கலமாகி

அந்த காலத்தை 

திட்டிக் கொண்டே 

அதனோடு 

பெரும் குரலெடுத்து 

அதை சபித்துக் கொண்டே 

பயணிப்பதாக சொல்லியது...


இங்கே இலகுவான பாதை 

இங்கே இருக்க 

அவர்கள் எப்படி 

வழி தவறினார்கள் என்று 

எனக்கு நானே கேள்வி 

எழுப்பிக் கொண்டே 


மீண்டும் அந்த சுகமான 

நெடும் பாதையில் 

பயணிக்கிறேன்...

நான் அடைய வேண்டிய 

இடம் இன்னும் 

கொஞ்ச தூரம் தான் 

உள்ளது என்று 

அந்த காலம் சூட்சமமாக 

என் காதில் சொன்னதை 

குதூகலத்துடன் 

ரசித்துக் கொண்டே 

பயணிக்கிறேன் 

கொஞ்சம் வேகமாக 

நடை போட்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/07/26.


கர்ணன் நிலையும் தமிழ் நாட்டின் நிலையும்...


ஜனநாயகம் 

சற்றே விலகி நின்று 

வேடிக்கை பார்க்கிறது 

நடக்கும் கூத்தை...


இது ஜனநாயகமா 

இல்லை 

சல்லியன் நாடகமா

என்று...


என்ன கூத்து வேண்டுமானாலும் 

இந்த தமிழ் நாட்டில் 

அரங்கேற்றம் செய்யலாம் 

என்ற துணிவு இங்கே 

எவருக்கும் வருகிறது...


ஒரு காலத்தில் 

தரம் நிறைந்த மக்களால் 

இந்த மண் 

பெருமையடைய... 

இந்த மண்ணால் 

மக்கள் பெருமையடைய...


அது ஒரு பொற்காலம் என்று 

கிசுகிசுத்து பெருமூச்சு 

விடுகிறார்கள் 

அங்கே ஒரு சில மனிதர்கள்...


தற்போதோ

கொஞ்சமும் மண் மீதான 

பிணைப்பு இல்லாமல் 

இங்கே மக்கள் அனைவரும்

ஒன்று சேர்ந்து 

மகா சல்லியன் 

ஆனதால் ....


இங்கே தமிழ் நாடு 

கர்ணனை போல 

கதி கலங்கி நிற்கிறது...

என்ன செய்வது என்று 

தெரியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:24/07/26.


செவ்வாய், 21 ஜூலை, 2026

காலத்தால் வலுக்கட்டாயமாக இழுத்து செல்லப்படும் மனிதர்கள்...


காலம் எந்தவித இரக்கமும் 

இல்லாமல் பல மனிதர்களை 

வலுக்கட்டாயமாக இழுத்து 

செல்கிறது...

அவர்கள் தன் சுயத்தை 

தொலைத்து  

எல்லா உணர்வுகளையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஆழத்தில் 

புதைத்து விட்டு 

அதனோடு பயணிக்கிறார்கள்...

நானோ அந்த காட்சியை 

இந்த பிரபஞ்சத்தின் 

ஒரு ஓரத்தில் 

அமர்ந்து 

தேநீரை மிடறு மிடறாக 

பருகிய படியே 

ரசித்து வேடிக்கை பார்க்கிறேன்... 

பிரபஞ்சமோ நின்று நிதானமாக 

என்னை சத்தம் இல்லாமல்

வேடிக்கை பார்த்து ரசிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.

இந்த பிரபஞ்சம் மூச்சை நிறுத்தாமல் பயணிக்கும் சூட்சமம்...

 

 


தினம் தினம் 

ஓடி ஓடி களைப்பது

இந்த வயிற்றுப் பாட்டிற்கு தான் 

என்று போலியாக 

சொல்லிக் கொண்டு 

ஓடும் மனிதர்களை 

பார்த்து பெரும் வியப்பில் 

ஆழ்கிறது இந்த காலம்...


அவர்கள் சேர்த்து வைத்திருக்கும் 

ஆஸ்தியோ கோடியில் 

கொடி கட்டி பறக்க 

அந்த ஆஸ்தியின் ஒரு மூலையில் 

அவர்கள் அஸ்திக்கு அங்கே 

இடம் இல்லை அங்கே என்ற போதும்...

பொருளற்ற ஓட்டத்தில் 

ஏன் இந்த பொக்கிஷமான 

வாழ்க்கையை 

தன் சுயநலத்திற்காக பலியிட்டு 

படையலிட்டு

அதை வேகமாக வேகமாக

உண்கிறார்கள் ...


அவர்கள் மென்று 

உமிழ்ந்த பொய்களின் 

எச்சத்தில்

இந்த பிரபஞ்சம் கறைப்பட்டு 

அசிங்கப்படுவதை

கொஞ்சம் அருவருப்போடு

அந்த விடியல் 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் வேளையில்...


அங்கே சூரிய கிரணகங்களின் 

மெல்லிய ஒளியில் 

தன் சோம்பலை 

கணப் பொழுதில் முறித்து 

உண்மையில் 

தன் பசியெனும் 

பெரும் தீயை அணைக்க

எந்த அகங்காரமும் 

இல்லாமல் ...

 

தினம் தினம் 

வானில் ஒரு முறையான 

வரிசையோடு...

ஒற்றுமையோடு...

நிலை மாறாமல் பறந்து 

ஒரே மாதிரி விடியலை 

உற்சாகமாக வரவேற்று 

உண்மையாக 

தன் வயிற்றுப்பாட்டிற்காக

நெடுந்தூரம் 

இரை தேடும் பறக்கும் 

அந்த பறவைகளுக்காக...


இந்த பிரபஞ்சம் இன்னும் 

மூச்சை நிறுத்தாமல் 

இயங்கி கொண்டிருக்கிறதோ 

என்று பெருமூச்சுடன் 

காலமும் அந்த பறவைக்கு 

துணையாக 

எந்தவித சத்தமும் இல்லாமல்

பெரும் நன்றியுணர்வோடு

உடன் பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/07/26.


வாழ்வெனும் இடிபாடுகளில் சிக்கி...

 


தினம் தினம் 

வாழ்வெனும் இடிபாடுகளில் 

சிக்கி சிதறி 

கிடக்கிறேன்...


எந்தவித தற்காப்பு வித்தையும் 

இது வரை நான் 

கற்றுக் கொள்ளப்படாததன் 

விளைவை நான் அனுபவித்து 

அந்த விதி எனும் 

பெரும் பாறாங்கல் 

என் முதுகில் ஏறி 

இங்கும் அங்கும் 

நர்த்தனம் ஆடுகிறது...


அந்த நர்த்தனத்தின் வலியில் 

நான் முனகி ஓலமிடுவதை 

அந்த காலமெனும் பைரவனோ

எனக்கும் இதுக்கும் 

சம்பந்தம் இல்லை என்று 

ஒரு ஒற்றை பார்வை 

பார்த்து விட்டு 

கொஞ்சம் மனமிரங்கி 

ஓலமிடுகிறது...


அங்கே என் இரத்த சொந்தங்களும் 

தெரிந்தவர்களும்

என்னை தேடும் வேட்டையை 

சிறிது நேரம் நடத்தி விட்டு 

அவரவர் வேலைக்கு 

முகத்தில் வலுக்கட்டாயமாக 

வரவழைக்கப்பட்ட கவலையோடு 

தன் வீட்டுக்கு 

திரும்புகிறார்கள்... 


சும்மா என்று நினைத்து விடாதீர்கள்...

அவள் ஆடிய திமிர் பிடித்த 

ஆட்டத்திற்கு இந்த காலம் 

முன்னமே நிகழ்த்தி இருக்க வேண்டும் என்று 

மனதிற்குள் 

முனகுவதாக நினைத்துக் கொண்டு 

சற்றே குறைந்த குரலில் முணுமுணுத்துக்கிறார்கள்...


நான் அந்த முணுமுணுப்பு 

குரலை உற்று கேட்டு விட்டு 

இவர்களுக்கு அந்த காலமெனும் 

பைரவனே பரவாயில்லை 


எந்தவித அலங்கார பூச்சும் 

இல்லாமல் வெளிப்படையாக 

தன் இயலாமையை 

சொல்லி விட்டு 

கொஞ்சம் 

கருணையோடு 

ஓலமிட்டு சென்று 

இருக்கிறானே என்று 

அவனுக்கு மானசீகமாக 

நன்றி செலுத்தி 

கொஞ்சம் கொஞ்சமாக 

அந்த இடிப்பாடுகளில் 

புதைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/26.


சனி, 18 ஜூலை, 2026

விசுவாசம்...


ஒரு பறவையின் 

தாகத்தை தீர்க்க 

அந்த மனிதர்கள் 

கழிவு நீரை 

கொஞ்சம் கூட 

இரக்கமே இல்லாமல் 

பரிசளித்து விட்டு 


நவீன நாகரீகத்தின் 

படிமங்களில் 

புதைந்து கொள்கிறார்கள் 

கொஞ்சமும் கருணை 

இல்லாமல்...


இங்கே இயற்கையும் 

மௌன சாட்சியாக 

அவர்கள் ஜீவ காருண்யத்தின்

அளவை மதிப்பிட்டு 

பரிசொன்று கொடுப்பதற்காக 


நெடு நேரம் காத்திருப்பதை 

உணர்ந்து 

சிறிது அலட்சியமாக 

திரும்பி பார்க்கும் போது 

அங்கே இயற்கை 

இத்தனை நாள் நாம் தந்த 

பெரும் பரிசிற்கு 

நிகராக இல்லை என்றாலும் 

சிறியதாக 

நிலநடுக்கம் எனும் 

புதைமண்ணில் நேசத்தோடு 

புதைத்துக் கொண்டது 


அதுவும் தாய் தானே 

அந்த அரவணைப்பின் 

கிடுக்கி பிடியில் 

உணர்ந்து கொண்ட தருணத்தில் 

அவர்கள் உயிர் அங்கே 

அதன் கைகளிலேயே 

பிரிந்ததில்... 


அந்த பறவை அங்கே 

அவர்களுக்காக

அந்த இடிப்பாடுகளின் 

நடுவில் துக்கம் 

அனுசரிக்கும் 

கருணையில் தான் 

இந்த பிரபஞ்சம் 

தனது அச்சில் பிறழாமல் 

சுற்றிக் கொண்டு இருக்கிறது

என்று சூட்சமமாக 

உணர்ந்து ...

இந்த பிரபஞ்சம் 

பெரு மூச்சொன்று

உதிர்க்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/07/26.


புதன், 15 ஜூலை, 2026

பிறந்து பிறந்து சலித்து விட்ட என் ஜீவனோட்டத்திற்கு..


உன் நடனத்தில் 

இந்த பிரபஞ்சத்தை 

மிகவும் நுட்பமான 

நேர்த்தியால் 

சுழல வைக்கும் 

தந்திரத்தில் 

நான் எத்தனையோ நாட்கள் 

அதை நினைத்து அசந்து 

போவதுண்டு...


காலத்தின் பசிக்கு இரையாகும் 

ஜீவன்களை நீ பக்குவப்பட்ட 

ஆன்மாக்களை மட்டும் 

பிரித்தெடுத்து 

உன்னுள் மிகவும் பத்திரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறாய்...


மீதி ஆன்மாக்களை 

உன் நடனத்தினை நிறுத்தாமல் 

அவரவர் வினைக்கேற்ப 

கருப்பை தொட்டிலில் 

அமைதியாக 

அந்தந்த ஆன்மாவின் 

பக்குவ நிலைக்கு ஏற்ப 

சேர்த்து விட்டு 

உன் புன்சிரிப்பு கூடிய 

முகத்தோடு கூடிய 

நடனத்தை 

அதே அதிர்வலையில் தொடர்கிறாய்...


இங்கே நான் எத்தனையோ 

கருப்பையில் புகுந்து வந்து 

புகுந்து வந்து....

களைத்து விட்டதை 

நீ உணராமல் 

இருந்திருக்க மாட்டாய் என்று 

எனக்கு தெரியும்...


இருந்தும் நான் உனக்கு 

போட்டியாக மிகவும் 

மோசமான நடனத்தை 

தாள லயம் பிசகி 

நடத்திக் கொண்டு 

இருக்கிறேன்...

உன் கவனத்தை 

ஈர்ப்பதற்காக...


அந்த நடனத்தை 

சகிக்க முடியாமல் 

நீ என்னை உன் பாதத்தில் 

சேர்த்து கொண்டு 

பிறவா நிலையை 

கொடுப்பாய் என்ற 

பெரும் நம்பிக்கையோடு....


பிறந்து பிறந்து 

சலித்து விட்ட 

என் ஜீவனின் ஓட்டத்திற்கு 

நிரந்தரமாக ஓய்வு கொடுத்து 

எனக்கு ஒரு அடைக்கலம் 

கொடுத்து 

அணைத்துக் கொள் 

என் ஆத்மநாதனே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/26.


செவ்வாய், 14 ஜூலை, 2026

பயணிகள் கவனத்திற்கு...

 



விடியலை 

உணர்த்தும் பறவைகளின் 

ஒலியை கேட்பதற்கு 

முன்பே ....


சூரியனின் கிரணங்கள் 

இந்த பிரபஞ்சத்தை 

ஊடுருவுவதற்கு 

முன்பே....


எழுந்து நீராடி 

அந்த புகைவண்டி 

நிலையத்தை அடைந்து 


ஒரு தேநீர் கோப்பையை 

கையில் ஏந்தி 

அங்கே 

இங்கும் அங்கும் 

நடமாடும் பயணிகளை 

வேடிக்கை 

பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது...


அந்த புகைவண்டி நிலையத்தில் 

பயணிகள் கவனத்திற்கு 

என்று சொல்லி...


நீ வரும் 

புகைவண்டியின் 

பெயரை சொல்லி...

ஒரு மணி நேர 

தாமத அறிவிப்பு 

ஒன்று காற்றோடு கலந்து 

என் செவிகளை அடைந்தது...


அந்த அறிவிப்பில் 

நான் இன்னும் ஒரு யுகம் 

காத்திருக்க வேண்டுமா 

உன் முகம் காண என்று 


என் முகத்தில் சோகம் 

அப்பிக் கொண்டதை

அங்கே என்னை கடந்து 

செல்லும் 


பட்டாம்பூச்சி ஒன்று 

இலேசாக உராய்ந்து 

இத்தனை காலம் 

ஊடலில் 

பிரிந்து இருந்த நீ...


இந்த ஒரு மணி நேரத்தை 

ஒரு யுகமாக யோசிக்கிறாயே 

என்று கேலி செய்து செல்ல 


நானோ மிகுந்த ஆச்சரியத்துடன் 

அது போகும் வழியை 

மெய் மறந்து பார்க்கிறேன்...


என் மனதில் ஓடுவதை 

உன்னால் படிக்க முடியும் போது

அவளால் படிக்க 

முடியாமல் போனதே என்று 

ஒரு பெருமூச்சு ஒன்றை 

உதிர்த்து விட்டு 

யோசிக்கிறேன்..


இந்த பிரிவின் துயரத்தின்

வலியை அந்த பட்டாம்பூச்சி 

சிறகின் உரசலில் 

சிறிது மறந்து 

காத்திருக்கிறேன்...


நீ வரும் அந்த 

புகைவண்டியின் சத்தத்தை 

உற்று நோக்கி 

காத்திருக்கிறேன்...

என் நெஞ்சம் முழுவதும் 

நிறைந்த பெரும் காதலோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/26.


செவ்வாய், 7 ஜூலை, 2026

எந்தவித ரசனையும் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களே....

 





ஒரு மெல்லிய 

திரித்து விட்ட 

வெள்ளி கயிறை போல 

நீ கவர்ந்து இழுக்கிறாய்...


அங்கே சூரிய கிரணத்தின் 

வெப்பத்தால் 

உன் ஒளி சிதறல்கள் 

சிதறிடிக்கப்பட்டு

வண்ணமயமாக...


பல வண்ணங்களில் பூக்களை 

நொடி தோறும் உருவாக்கி...

இந்த பிரபஞ்சத்திற்கு 

எந்தவித எதிர்பார்ப்பும் 

இல்லாமல் 

பரிசளித்துக் கொண்டே 

இருக்கிறாய்...


அந்த அழகில் 

நான் இங்கே அசையாமல்

மயங்கி கிடப்பதை 

இந்த மொத்த பிரபஞ்சமும் 

வேடிக்கை 

பார்த்து லயிக்கிறது...


அங்கே எந்தவித ரசனையும் 

இல்லாமல் 

ஓடிக் கொண்டே இருக்கும் 

மனிதர்களே 

கொஞ்சம் உங்கள் ஓட்டத்தை 

நிறுத்தி விட்டு 

இந்த அழகியலை 

இந்த அதி அற்புதமான 

பொக்கிஷத்தை 

ரசிக்காமல் 

அங்கே எந்த பொக்கிஷத்தை 

தேடி நிற்காமல் 

ஓடிக் கொண்டே 

இருக்கிறீர்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:08/07/26.


காலத்தோடு கலந்த அவளின் உடலில் புனையப்பட்ட கதைகள்...

 





ஏதோவொரு சூழலில் 

அவள் 

இந்த சமூக வாழ்வெனும் 

நிகழ்வில் இருந்து 

மரணத்தின் அரவணைப்பில் 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத 

தோரணையில் 

அதை இறுக 

கட்டிப்பிடித்துக் கொண்டு

கிடக்கிறாள்...


அந்த இளம் பெண்ணின் 

மரணத்தின் உடலில் 

ஆயிரம் ஆயிரம் கதைகள் 

நிகழ்வாக புனையப்பட்டு 

அங்கிருந்த மக்களால் 

எழுதி எழுதி 

அழிக்கப்படுகிறது...


ஏதோவொரு நிலையில் எழுந்து 

இத்தனையையும் அவள் 

சூட்சம நிலையில் 

கேட்டு பரிதவிக்கிறாள்...


அவள் எதை காரணமாக நினைத்து 

காலத்தோடு கலந்தால் என்று 

எவரும் சரியாக புரிந்து கொள்ள 

மனமில்லாமல் 


அங்கே திரை இயக்குநர்கள் பலர் 

உடனடியாக உருவாகி 

ஒத்திகை பார்த்துக் கொண்டு 

இருக்கும் போது... 


தன் கதாபாத்திரத்தில் 

பொருத்திக் கொள்ள 

அங்கே யாரை நியமிக்கிறார்கள் 

அவர்கள் என்ற ஆவலில் 

அங்கே நோக்குகிறாள்...


அப்போதைக்கு அங்கே 

அவளை தவிர 

எவரும் இல்லை என்ற சூழலில் 


மரணித்த தன் உடலுக்கு 

அவர்கள் கற்பனை கதாப்பாத்திரங்கள் தாங்க 

உயிர் கொடுக்கும் முயற்சியில் 

அத்தனை பேரும் ஈடுபட்டு 

வருவதை தவிர ...


அங்கே அவளின் இல்லாத 

அந்த வெறுமையை 

அங்கே உள்ளவர்கள் எவரும் 

கவலைப்படாமல்

எல்லா உறவுகளும் வந்ததை 

உறுதி செய்துக் கொண்டு 

தன்னை தீக்கு இரையாக்க தூக்கி 

செல்வதை பார்த்து 

அவள் அங்கே 

வாழ்வின் நிலையாமையை 

உணர்ந்து 

திருப்தியோடு அந்த தீக்கு 

தன்னை உணவாக கொடுத்து 

அமைதிக் கொள்கிறாள்...


இங்கே 

அடுத்த இளம் பெண்ணின் 

இறப்பு கதை 

எப்போது கிடைக்கும் என்று... 


அங்கே இருந்த மக்கள் 

சுடுகாட்டில் இருந்து 

இருள் சூழ்ந்த அந்த நிலத்தில் 

அந்த நெருப்பின் 

வெளிச்சத்தில்...


ஒருவருக்கொருவர் விடாமல் 

அவள் கதையை 

வேறொரு கோணத்தில் 

விவாதித்து கொண்டே 

அவளிடம் இருந்து விடை பெற்று 

செல்கிறார்கள்...


இன்னும் சில நாட்களுக்கு 

அவளின் கதையை 

வயல் ஏரி குளம் என்று 

எல்லா இடத்திலும் 

பேசி பேசி 


அவள் இறந்து விட்டால் 

என்பதையும் மறந்து... 

மீண்டும் மீண்டும் 

அவளுக்கு உயிர் கொடுத்து 

கொன்று ரசிக்கும் 

குரூரமான உலகம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:07/07/26.


ஞாயிறு, 5 ஜூலை, 2026

பெரும் பித்து நிலை...

 


இயற்கையின் மீதான 

பெரும் காதலோடு கூடிய 

பித்து நிலையில் நான் 

லயித்து கிடப்பதில் 

அங்கே என்னோடு பேசுவதில் இருந்து 

பலபேர் தள்ளி இருக்கிறார்கள்...

நானும் இயற்கையும் அது பற்றிய 

கவலை இல்லாமல் 

பெரும் காதலோடு 

பின்னி பிணைந்து கிடக்கிறோம்...

ஏன் இந்த பித்து நிலை 

உங்கள் இருவருக்கும் என்று 

முணுமுணுப்பவர்களுக்கு 

தெரியாது......

அது என்னிடம் எவ்வளவோ பொக்கிஷத்தை 

அள்ளி அள்ளி கொடுத்து விட்டு 

அது பற்றி எங்கேயும் 

மனிதர்கள் போல தம்பட்டம் அடித்து விடுவதில்லை...

அதனால் தான் 

ஒருவர் மீது ஒருவருக்கு 

பெரும் பித்து நிலை 

எங்கள் இருவருக்கும் என்றேன்...

சரிதான் அங்கே மக்கள் 

பேசிக் கொள்வது 

உண்மை தான் போலும் 

பெரும் கிறுக்கு பிடித்து விட்டது 

இந்த பெண்ணிற்கு என்று 

மீண்டும் முணுமுணுத்து 

செல்கிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.

வாழ்வின் அந்த பெரும் தீஞ்சுவை கொண்ட அமிழ்தத்தின் நிலை...

 





வாழ்வின் பெரும் அமிழ்தத்தை 

இந்த இயற்கை பருகுவதற்காக 

அங்கே போவோர் வருவோரிடம் 

கெஞ்சி கூவி கூவி 

அழைக்கிறது...


அதன் அற்புதத்தை உணராத 

மக்களோ அதை கொஞ்சம் கூட 

திரும்பி பார்க்காமல் 

அதற்கு சரியான பித்தர் என்ற பட்டத்தை 

அதற்கு கொடுத்து விட்டு 

திட்டி தீர்த்து விட்டு 

வேகமாக நகர்கிறார்கள்...


அதை பேரமைதியோடு 

கவனித்து விட்டு அதன் அருகில் சென்று 

அந்த அமிழ்தத்தை 

வாங்கி பருகி ...

நிலைத்த பேரானந்தத்தில் 

அங்கும் இங்கும் அலைவதை 

பார்த்து விட்டு 


அதே மக்கள் எனக்கும் 

இவரும் அந்த இயற்கையோடு சேர்ந்த 

பெரும் பித்தர் என்று 

நான் கேளாமலேயே பட்டத்தை 

சூட்டி விட்டு வேகமாக 

அங்கிருந்து நகர்கிறார்கள்...


நானும் இயற்கையும் 

அவர்கள் கொடுத்த பட்டத்தை 

மிகவும் பத்திரமாக 

வைத்துக் கொண்டு 

அவர்கள் நிலையை பேசி 

வாய் விட்டு கலகலவென்று 

சிரிக்க ....


அங்கே அந்த பிரபஞ்சம் மட்டும் 

எங்களை மௌனமாக 

சிறுமுறுவலோடு 

ரசித்து மகிழ்ந்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.


நான் நடத்தும் வேள்வி தீ..


 


தினம் தினம் 

ஒரே மாதிரியான காரியம் 

ஒரு வேள்வியை போல 

தோய்வின்றி நடத்துகிறேன்...


அங்கே ஆகூதியில் 

தினமும் 

என் ஆசைகளை பலியிட்டு 

இதோடு என்னை 

நிர்மலமான மனிதராக 

மாற்றி விடும் என்று 

மிகுந்த ஆவலோடு...


அந்த தருணத்தை 

தரிசிக்க காத்திருந்து 

ஏமாந்து போன நாட்கள் 

இங்கே எத்தனை என்றால் 


இதோ கடந்து செல்ல...

என்னிடம் இருந்து 

விடை பெற காத்திருக்கும் 

இந்த நாள் வரை தான்...


அந்த வேள்வி தீ 

அணையாமல் 

கனகனவென்று 

பெரும் வெப்பத்தால் 

என் மனமெங்கும் பரவி 

என்னை தகிக்க 

வைத்து நோகடிக்கிறது...


நான் அந்த வேள்வி 

நடத்துவதை நிறுத்தி விட 

எத்தனிக்கும் போதெல்லாம் 

என் மனம் என்னோடு 

கோபித்துக் கொண்டு 

பெரும் ஆக்ரோஷத்துடன் 

சண்டைக்கு தயாராகி விடுகிறது...


நானோ அதன் ஆக்ரோஷத்திற்கு

அஞ்சியே அந்த வேள்வியை 

நடத்தி வருகிறேன்...

போதுமடா சாமி இந்த 

மானிட ஜென்மம் என்று...


#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/07/26.










 

 

வியாழன், 2 ஜூலை, 2026

அந்த நடுநிசி பிரியாணி பிரியனும் அந்த ஏழை விவசாயியின் துயரமும்......


அந்த ஏழை விவசாயியின் 

உழைப்பில் விளைந்த 

விலை மதிக்க முடியாத 

நெல் மணிகள் 

இந்த பிரபஞ்சத்தின் 

பசியை தீர்த்து 

அந்த மனங்கள் நிறைவடைய 

அதிகாலையில் எழுந்து 

ஓடி ஓடி களைத்து விடும் போது 

அவனுக்கான அங்கீகாரம் 

எங்கே என்று 

ஏழு உலகிலும் 

தேடி அலைந்தாலும் 

கிடைப்பதில்லை...


இங்கே எந்த உடல் உழைப்பையும் 

மதிக்காமல் 

வெட்டி கதைகளை பேசி 

அந்த விவசாயியின் உழைப்பை 

மதிக்காமல் நடு இரவில் 

பிரியாணி சாப்பிட்டு விட்டு 

அங்கே சாலையில் 

தனது இரு சக்கர வாகனத்தில் 

அதி வேகமாக 

அந்த நடுநிசி இரவை 

கிழித்துக் கொண்டு பறக்கிறான் 

அந்த ஒருவன்...



அங்கே பகலில் 

மும்முனை மின்சார சரியாக 

கிடைக்காத காரணத்தால் 

எரிபொருளால் நிரப்பிய 

வண்டியில் சென்றால் கூட 

இந்த இயற்கை நோகுமே என்று 

சைக்கிளில் 

அந்த நான்கு வழி சாலை வழியாக 

சென்று கொண்டிருந்த 

அந்த ஏழை விவசாயியின் 

இரேழு உலகிலும் விலை 

சொல்ல முடியாத உயிரோ 

அந்த நடுநிசி பிரியாணி பிரியன் 

ஒருவனால் காவு வாங்கப்படுகிறது ...


அங்கே அந்த உயிர் 

துடித்து துடித்து 

இறப்பதை கொஞ்சமும் 

சட்டை செய்யாமல் 

அவன் மட்டும் அல்ல 

அந்த நான்கு வழி சாலையில் 

அதி அற்புதமான சொகுசு சிற்றுந்தில் 

போகிறவர்கள் 

அந்த விபத்தை கண்டும் 

காணாதது போல 

சிற்றுந்தின் உள்ளே 

தன் சக பயணியிடம் 

அங்கே பாருங்கள் 

ஏதோ விபத்து ஏற்பட்டு விட்டது என்று 

உணர்வற்ற மொழியில் 

கடத்திக் கொண்டே 

அந்த விவசாயியின் இரத்தத்தில் 

தன் சிற்றுந்தின் டயரை 

ஏற்றி கடந்து செல்கிறார்கள்...


இங்கே அந்த சொகுசு சிற்றுந்தில் 

செல்பவனின் ஜீவனுக்கும்

ஜீவித்து இருக்க 

அங்கே இரத்த வெள்ளத்தில் கிடந்த 

அந்த ஏழை விவசாயியின் 

ஒரு பருக்கை சோறு 

அவன் தட்டில் ஏதோவொரு நாள் விழுந்து அவனும் சாப்பிட்டு இருக்கலாம்... 

அவனுக்குரிய மரியாதை இப்படி கிடைத்து இருக்கக் கூடாது என்று 

அங்கே இரவு பறவைகள் சிறகடித்து 

தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி

தனது இறுதி அஞ்சலியாக 

தான் அமர்ந்து இருந்த மரத்தில் இருந்து 

பூக்களை தனது அலகால் 

கொய்து அவன் உடலில் தூவி 

தனக்காக தானியங்கள் விளைவித்து

தன் ஜீவனை காப்பாற்றியவனுக்கு

கண்ணீர் அஞ்சலி செலுத்துவதை 

அந்த இருள் கருணையோடு 

அந்த பறவைகளுக்கு 

தன் விழிகளில் கண்ணீர் மல்க 

கைகூப்பி நன்றி தெரிவித்து கொண்டு 

இருந்ததை 

இந்த பிரபஞ்சம் மௌன சாட்சியாக 

மனம் கனத்து 

வேடிக்கை பார்த்தது 


தன் கண்களில் வழியும் 

கண்ணீரை துடைக்க மறந்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/07/26.



திங்கள், 29 ஜூன், 2026

அந்தி மயங்கும் வேளை தாண்டிய அந்த மெல்லிய இரவில்...


அந்தி மயங்கும் வேளை தாண்டிய 

அந்த மெல்லிய இரவில் தான் 

அன்று அங்கே நடந்த மிகவும் 

முக்கியத்துவம் வாய்ந்த 

விசயங்களின் போக்குகளை 

பற்றி ஆள் ஆளாக்கு சரி என்றோ 

தவறு என்றோ ...

பேசி வாக்குவாதம் செய்து 

ஓய்ந்து ஒவ்வொருவராக 

கலைந்து செல்கிறார்கள்...

அங்கே அந்த நிகழ்வை 

கூர்மையாக கவனித்து 

உண்மை தன்மையின் 

போக்கை முழுவதும் உணர்ந்த 

காலம் மட்டும் 

அங்கே அவர்கள் கூட்டாக நின்று 

பேசிய கூட்டத்தில் 

கலந்துக் கொள்ளாமல் 

வெறுமனே அவர்கள் பேசிய 

பேச்சின் கற்பனை கலந்த 

நிகழ்வை வேடிக்கையாக பார்த்து நகைத்து விட்டு 

அந்த பெரும் இருளில் கலக்கிறது...

இங்கே உண்மை எது 

பொய் எது என்று கேட்டு 

அறிந்துக் கொள்ள மனமில்லாமல் 

எதை எதையோ தன் சுவைக்கு 

தகுந்தார் போல 

பேசி களித்து களி நடனம் 

புரிபவர்கள் மத்தியில் காலம் ஏன் 

அங்கே நடந்ததை 

சாட்சியாக சொல்லவில்லை என்று 

என்னை போன்ற 

கோபம் கொள்பவர்களையும் 

காலம் கண்டுக் கொள்ளாமல் 

தன் போக்கில் 

இயல்பாக நிதானமாக பயணிப்பதை 

இங்கே 

என்னை தவிர எவரும் வேடிக்கை 

பார்க்கவில்லை 

என்பது தான் காலத்தின் துயரம்...

#இப்படிக்கு காற்றை நேசிப்பவள்❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/06/26

ஒரு நாள் ஒரு பொழுதேனும் இப்படி...


ஒரு நாள் ஒரு பொழுதேனும்

இப்படி தன்னை மறந்து உறங்க 

துடிக்கும் இமைகளுக்கு இங்கே 

ஆயிரம் ஆயிரம் கவலைகளை 

போற போக்கில் 

அள்ளித் தெளித்து விட்டு 

போகிறது காலம்...

நானும் மனதும் தான் இங்கே 

இமைகளை கெஞ்சிக் கூத்தாடி 

உறங்க வைக்கிறோம்...

மீண்டும் கொஞ்சம் 

எல்லாம் மறந்து 

இமைகள் மூடும் போது 

அங்கே தலை வாசல் வழியே 

தலையை எட்டி பார்த்து 

காலம் தனது கைகள் நிறைய 

கவலைகளை கொண்டு வந்து 

வீடு முழுக்க இறைத்து விட்டு 

ஓடோடி போகிறது நொடிப்பொழுதில்...

நான் இமைகளை கை கூப்பி 

கேட்டுக் கொண்டு 

அங்கே இறைந்து கிடந்த 

கவலைகளை 

ஒரு மெலிதான 

துணியை வைத்து ...

சத்தம் இல்லாமல் 

தூய்மை செய்து 

முடிக்கும் போது 

நடுநிசி இரவு 

என்னையும் 

என் இமைகளையும் 

கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் 

சிரித்து வைத்து போனதில் 

எனது இல்லம் அங்கே சத்தம் 

இல்லாமல் கண்ணீர் வடிப்பதை 

யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இமையும்நானும்.

நாள்:29/06/26

ஞாயிறு, 28 ஜூன், 2026

பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்...


பூமி தாயின் கெஞ்சலும் அதன் கோபமும்:-

அத்தனை துர்நாற்றத்தோடும்

நான் நிரந்தரமாக 

வசிக்கிறேன்...


நீங்களோ என்னை கடந்து 

செல்லும் போது 

அந்த சில நிமிடங்கள் 

உங்கள் நாசியை 

துளைக்கும் 

அந்த துர்நாற்றத்தை 

சகிக்காமல் 

மூக்கை மூடி 

செல்கிறீர்கள்...


எனது மடியில் 

உணவை தேடி தத்தி தத்தி 

செல்லும் அந்த காகங்களுக்கும் 

நாய்களுக்கும் பசுக்களுக்கும்

நான் வைத்திருக்கும் 

இந்த நெகிழி கழிவை 

பசியாற கொடுத்து விட்டு 

மௌனமாக அழுகிறேன்...


அங்கோ 

ஏசி பேருந்துகள் இயக்க 

அரசு பெரும் பிரயத்தனங்களை 

செய்து வருவதாக 

கேள்வியுற்று 

கொஞ்சம் திகைத்து தான் 

நான் போகிறேன்...


என் அழிவின் விளிம்பை 

அவர்களால் எப்படி 

அவ்வளவு எளிதாக 

கடந்து செல்ல முடிகிறதென்று

எனக்கு நானே கேள்வி 

கேட்டுக் கொள்கிறேன்...


சில நேரங்களில் 

என் கோபத்தின் 

தாக்கத்தினால் 

சில பல நாடுகளில் கட்டிடங்கள் 

இடிந்து விழுவதை 

வேடிக்கை பார்த்து விட்டு 


இயற்கை அன்னைக்கு 

அப்படி என்ன தான் 

கோபமோ என்று 

என்னையே திட்டி தீர்க்கும் 

மனிதர்கள் விசுவாசத்தை 

எண்ணி கொஞ்சம் வியந்து தான் 

போகிறேன்...


நான் அசுத்தப்படுத்தப்படுகிறேன்

என்று உணராமல் 

நீங்கள் எனக்கு இழைக்கும் 

தீங்குகளை எல்லாம் 

சேகரித்து வருகிறேன்...

என்றோவொரு நாள் 

அந்த சமுத்திரத்தின் 

ஆழத்தில் புதைத்துக் கொண்ட 

நீங்கள் எனக்கு அளித்த 

கழிவெனும் பரிசை 

உங்கள் முகத்தில் உமிழும் போது 

அங்கே எவரும் 

உங்களை காப்பாற்ற 

வர மாட்டார்கள்...

ஏன் என்று கேட்காதீர்கள்...


அங்கே 

மொத்த மனிதர்களும் 

மரணித்து என் கால்களை 

தழுவி மன்னிப்பு கேட்கும் 

தோரணையில் 

வீழ்ந்து கிடக்கும் போது... 


அங்கே என் மடியில் 

உணவுக்காக அலைந்து கொண்டு 

இருந்த சிற்றுயிர்களுக்கு 

உங்களை 

பெரும் விருந்தாக்கி

மகிழ்ந்து 

உணவளித்து 

பெரும் ருத்ர தாண்டவம் 

ஆடுவதை 

இந்த பிரபஞ்சம் கொஞ்சம் 

நடுங்கி மிரண்டு 

தள்ளி நின்று 

வேடிக்கை பார்க்கும்...


பிறகு மெல்ல மெல்ல 

அமைதியடைந்து

பெரும் பிரயத்தனப்பட்டு

அந்த இயற்

கையிடம் 

முறையிட்டு

ஒரு புது யுகத்தை 

உருவாக்குவேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:28/06/26.





திங்கள், 22 ஜூன், 2026

அந்த பங்களாவின் அதிகாரம் யாருக்கு?


அந்த அடர்ந்த பண்ணை 

காட்டின் நடுவே 

என்றொவொரு நாள் 

வாழ்ந்த காலத்தில் 

என் முன்னோர்கள் கட்டிய 

பங்களாவை தேடி 

பல காலங்கள் கழித்து 

கரையில் ஒதுங்கிய 

கிழிஞ்சல்கள் போல 

அதை சேர்கிறேன்...


வீட்டின் கதவில் கை வைத்தபோது 

அங்கே இருந்த சிலந்தி பூச்சி 

கடகடவென்று வேகமாக 

கதவின் இடுக்கில்

ஓடி ஒளிகிறது...


கதவின் பூட்டின் துளையில் 

சாவியை விட்டு 

திறந்த போது பெரும் இருள் 

சூழ்ந்த கருமை நிறம் 

என்னை ஓடோடி வந்து 

வரவேற்கிறது...


என்றோ என் முன்னோர் வைத்த 

அற்புதமான விருந்தின் மீதமாக 

கீழே உருண்டோடி கிடக்கும் 

ரம் பாட்டில்களில் 

என் கால் ஏதேச்சையாக பட ...


அது பயந்து நழுவி ஓடி 

எழுப்பிய சத்தத்தில் 

அங்கே காதலோடு 

புணர்ந்து கொண்டிருந்த 

பல்லி இரண்டும் 

வேறு வேறு திசையில் 

அச்சத்தில் ஓடி ஒளிகிறது...


மெதுவாக அந்த பங்களாவின் 

புழக்கடை பகுதிக்கு சென்று 

சன்னலை திறந்து 

பார்க்கிறேன்...


அங்கே பல மலர் செடிகள் 

பூத்து குலுங்கிய தடயங்களாக 

மலர் இதழ் சருகுகள் 

செத்து கிடக்கிறது 

காய்ந்து போன 

தாய் செடிகளுக்கு 

அடியில் உரமாக...


இத்தனைக்கும் நடுவில் 

அந்த பங்களா 

சில ஜீவ ராசிகளுக்கு 

அடைக்கலம் கொடுத்து 

உயிர்ப்போடு வைத்திருந்ததை 

நான் அங்கே கண்ட காட்சிகளில் 

உணர்ந்து கொண்டு


சில பல ஆசுவாசங்களுக்கிடையே

அந்த இரவில் 

அங்கே நான் 

தங்க முடிவு செய்ததை 

அங்கே அந்த பங்களா சுவருக்கு 

கொஞ்சம் 

சத்தமாக அறிவித்தேன்...


எங்கிருந்தோ ஊரை சுற்றி விட்டு 

பங்களாவின் முகப்பில் 

என் முன்னோர்கள் நட்டு வைத்த 

மரமொன்றில் 

கம்பீரமாக அமர்ந்த 

குருவி ஒன்று...


அதற்கு என் அனுமதி தேவை 

என்று பெரும் குரலெழுப்பி 

சொல்ல 

நானும் அந்த பங்களா சுவர்களும் 

கொஞ்சம் அதிர்ந்து தான் 

அந்த குருவியை 

திரும்பி பார்க்கிறோம்...


இங்கே சில பல காலங்கள் 

கழித்து உரிமை கொண்டாட 

நான் வரும் போது 

அங்கே இதுவரை 

என் முன்னோர்கள் வாழ்ந்த 

பங்களாவை 

உயிர்ப்போடு வைத்திருந்த 

அந்த ஜீவ ராசிக்கு 

கட்டுப்பட்டு வந்த வழியே 

திரும்பி சோகமாக 

நடப்பதை பார்த்து 


அந்த குருவி 

நீ இந்த இரவு மட்டும் 

தங்கலாம்...

உன்னிடம் நிறைய கதைகள் 

பேச வேண்டி உள்ளது ...

கதை ஓரிரவில் முடியாது 

அதனால் சில நாட்கள் 

இங்கே தங்க உனக்கு 

அனுமதி தருகிறேன் என்றது...


நான் மீண்டும் அந்த பங்களாவில் 

நுழைந்த போது 

அங்கே ஏதோவொரு சூட்சம சக்தி 

என்னை பார்த்து சிரிப்பது போல 

உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/06/26.

















 

நான் என்பது யாரோ பெரும் திரளினிலே...


கண்ணாடி பார்த்து 

எத்தனை நாட்கள் ஆகிறது 

உங்கள் முடி நரைத்து இருப்பதை 

கவனிக்கவில்லையா என்று 

அங்கே ஒருவர் 

என்னை உரையாடல் நடுவில் 

சிரித்தபடியே கேட்கிறார்...

நிச்சயமாக எவ்வளவு காலம் 

என்று தெரியவில்லை எனக்கு 

என்று நான் சொல்வதை பார்த்து...

அவர் விசித்திரமான பார்வை 

ஒன்றை 

என் மீது வீசி விட்டு 

ஏன் என்று கேட்டார்...

நீங்கள் நினைப்பது போல 

என் முகமோ அல்லது உடலோ 

நான் இல்லை என்று 

நன்றாக எனக்கு தெரிந்து 

இருக்கும் போது 

எனக்கு கண்ணாடி பார்க்கும் 

அவசியம் தான் என்ன என்று 

கேட்டதும் சற்றே யோசித்து 

அமைதியாக பதிலேதும் 

பேசாமல் போய் விட்டார்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/06/26.

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருளில் நனையும் நட்சத்திரமும் நானும்...


இருளில் நனையும் 

நட்சத்திரங்கள் 

அமைதியாக எனை 

வேடிக்கை பார்க்கிறது...

நானும் அதை கொஞ்சம் 

ரசித்து சிரிக்கிறேன்...


இங்கே என் நேரத்தில் 

நீ ஏன் தொந்தரவாக 

இருக்கிறாய் என்று 

என்னை பார்த்து 

வேடிக்கையாக 

கேட்கிறது...

அந்த நட்சத்திரங்களில் ஒன்று 

கொஞ்சம் மிடுக்காக...


இங்கே இந்த நேரத்தில் 

உனக்கு என்ன வேலை 

கொடுக்கப்பட்டு இருக்கிறதோ 

அந்த வேலையில் 

ஏதேனும் தவறு நடந்தால் 

என்னிடம் சொல் என்று 


அந்த இறைவன் எனக்கு 

ஆணையிட்டு இருப்பதாக 

கலகலவென்று நகைப்புடனே 

சொல்கிறேன்...


அந்த நட்சத்திரமோ 

இங்கே உன்னை கண்காணிக்க 

என்னை இறைவன் அனுப்பி 

இருக்கிறார் என்று 

இன்னும் மிடுக்காக 

சொல்ல...


நானோ உன்னிடம் 

என் உறக்கத்தை 

தொலைத்து விட்டு 

இங்கே நிர்க்கதியாக 

நிற்கிறேன்...

நீயோ கண் சிமிட்டி 

காதல் மொழி பேசுகிறாய்...


ஒன்று செய்வோம் 

நாம் இருவரும் ஒருவரையொருவர் 

சமாதானமாக போய் விடுவோம் 

நம் காதல் ஈர்ப்பு விதியாவது 

அந்த இறைவனிடம் இருந்து 

தப்பிக்கும் என்றேன் நான் 

சிரித்தபடியே...


அந்த நட்சத்திரமோ 

அதுவும் சரிதான்...

உன் காதலை எல்லாம் 

என்னால் ஏற்க முடியாது

என்றது...

ஏன் என் காதலில் 

புனிதம் இல்லையா என்று 

தவிப்போடு கேட்கிறேன்...


அப்படி தான் 

வைத்துக் கொள்ளேன் 

பொழுது புலர்ந்ததும் 

உன் அலுவலக மேலதிகாரியின் 

கட்டளைகளை சிரம் மேல் ஏற்று 

ஒரு அடிமையை போல 

இருக்கும் உன் கோலத்தை 

என்னால் சகிக்க முடியாது...


உன் இயந்திரத்தனமான 

காதலில் எல்லாம் விழும் அளவுக்கு 

நான் ஒன்றும் உணர்வற்ற ஜடமல்ல என்று சொல்லி விட்டு 


அங்கே மேகங்களில் இருந்து 

வெளியே வந்து 

எங்கள் சண்டையை 

எட்டிப் பார்த்த நிலவின் 

காதல் ஒளியில் 

தன்னை இழந்தது 

அந்த நட்சத்திரம்...


நானோ அதை பார்த்து பெரு மூச்சு 

ஒன்றை உதிர்த்து விட்டு 

இமைகளோடு போராடுகிறேன் 

உறக்கத்திற்காக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/06/26.

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...