ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 29 அக்டோபர், 2025

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...


அர்த்தங்களற்று பிடிபடாமல்

திரிகிறது வாழ்க்கை...

அதன் ருசிக்கொரு எல்லை

இங்கே எவரும் அப்படி வகுத்து விட 

முடியாது...

இங்கே எந்த ருசியும் தேவையில்லை 

என்று அமர்ந்து 

அந்த நதியை வேடிக்கை 

பார்க்கும் என்னையும்

சலனப்படுத்த ஓசை எழுப்பி

அது முடியாமல்

அலுத்துக் கொண்டு போகும் வேகத்தில் 

அங்கே பலபேர்

அதன் ஆக்ரோஷமான சுவைக்கு

அடிமையாகிறார்கள்...

இது தான் அதன் சுபாவம் என்று

நான் சற்றே திரும்பி புன்னகைத்து விட்டு 

மீண்டும் அந்த நதியை 

ரசிக்கிறேன் அவர்களை பற்றிய 

 எந்தவொரு உறுத்தலும் இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/10/25.

வியாழன், 23 அக்டோபர், 2025

இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்...

 


#இன்றையதலையங்கம்:-

#இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்:-

ஒரு மனிதனின் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு... பிறகு தான் எல்லாமே.. ஆனால் அந்த உணவை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை கிடைக்கிறது என்று பார்த்தால் நிச்சயமாக மனது வேதனை அடைகிறது.. ஒரு விவசாயியின் மன வேதனை மற்றொரு விவசாயிகளுக்கு தான் தெரியும்.. இங்கே பல நிகழ்வுகளை அரசியல் விவாதம் செய்யும் மீடியாக்கள் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்களுக்குள்ளாக்கும் வகையில் விவாதம் நடத்தி விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டாமா? பத்தோடு பதினொன்றாக செய்திகளை சொல்லி விட்டு போய் விட்டால் போதுமா என்று கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுகிறது...

பெரும்பாலான அரசியல்வாதிகள் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்த சொத்தை எழுதி வைக்கிறார்கள்... அந்த செலவு ஆகுமா டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யும் வரை பாதுகாத்து வைக்க குடோன்கள் கட்ட என்று கேட்க தோன்றுகிறது...

ஒரு பயிரை விளைய வைத்து அதை களம் வரை கொண்டு வர எத்தனை இன்னல்கள் சந்திக்க வேண்டி உள்ளது என்று ஒரு விவசாயியை சந்தித்து கேட்டு பாருங்கள்..

இங்கே நமது நாட்டில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்..

எந்த நாட்டிற்கும் கிடைக்காத காலநிலை நமது நாட்டிற்கு கிடைத்து இருக்கிறது... எத்தனை நாடுகள் பசி பட்டினியால் அவதிப்படுகிறார்கள் என்று கூகுளில் தேடி பாருங்கள்..

பசியால் காசா பகுதியில் மக்கள் படும் துயரத்தை நீங்கள் மீடியாவில் பார்த்து இருப்பீர்கள்...

இங்கே யாருக்கும் பயன் இல்லாமல் தானியங்கள் மழையாலோ அல்லது மற்ற காரணங்காளாலோ வீணாகிறது என்று நினைக்கும் போது பாரதியார் போல கோபம் வருகிறது... பாரதியார் தனியொருவருக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்துடுவோம் என்றார்...

ஆனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்றால் இந்த தேசத்தை ஆள்பவர்களை எரித்துடுவோம் என்று இன்று பாரதியார் இருந்து இருந்தால் நிச்சயமாக பாடி இருப்பார்...

ஒவ்வொரு விசயத்திற்கும் காரணத்தை தேடி கண்டுபிடித்து மீடியா கேட்கும் கேள்விகளுக்கு சமார்த்தியமாக பதில் சொல்லி விட்டு நகர்ந்து விட்டால் பிரச்சினை தீராது...நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகி விட்டது.. ஆனால் இங்கே விவசாயிகளுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தான் நாம் இருக்கிறோம்...

மாநில அரசு ஒரு பக்கம் மத்திய அரசை கையை காட்டுகிறது.. ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யுங்கள் என்று..

மத்திய அரசு ஒரு பக்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது..

இது இன்று நேற்று அல்ல...

காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது..

கடந்த எடப்பாடி ஐயா ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்ய சாக்கு தேவையான அளவு இல்லை என்று சாக்கு போக்கு சொன்ன காட்சிகள் எல்லாம் இன்னும் மறந்து விடவில்லை...

எது எப்படியோ இந்த விசயத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்..

நீங்கள் நெடுஞ்சாலை நான்குவழி சாலை எட்டு வழி சாலை எல்லாம் போடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து ஒரு சுமுகமான முடிவு எடுத்து விவசாயிகள் பக்கம் நில்லுங்கள்...

குடோன் கட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை...

உங்கள் பினாமி நிலத்தை கொடுத்தீர்கள் என்றாலே போதும் குடோன் கட்டி விடலாம்...

இந்த தேசம் எப்போதும் விவசாயிகளின் கண்ணீரை பார்த்துக் கொண்டே இருந்தால் அல்லது அவர்கள் தானாகவே தான் நேசித்த நிலத்தை கான்கிரீட் காடுகளாக விற்பனை செய்வதற்கு கொடுக்கும் நெருக்கடிகளை உருவாக்கி விட்டால் அது தான் இந்த தேசத்திற்கு ஆளும் அரசாங்கங்கள் சேர்த்து வைத்த கொடிய பாவம்...

இனியேனும் திருந்துங்கள்

இங்கே அனைத்தையும் அரசியல் மாயாஜால வார்த்தைகளில் அடைத்து வைத்து விட முடியாது...

அனைத்து விவசாயிகள் சார்பாக இந்த தலையங்கம் வெளியிடப்படுகிறது..

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:#24/10/25.

செவ்வாய், 21 அக்டோபர், 2025

வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...


எனது காத்திருத்தலின் 

வலியின் தகிப்பை

இங்கே நீ அறிய 

முடியாது போனதால் தான்

நான் ஏதேதோ சித்தம்

கலங்கியதை போல

செய்கிறேன்...

அன்றொரு நாள் மழை நாளில்

நீயும் நானும் சேர்ந்து பருகிய

தேநீரின் மிடரின் சுவையை

ஒரு அற்புதமான இசையை மீட்டெடுப்பது போல

நான் மீட்டி எனக்கான ஆறுதலை

தேடிக் கொள்கிறேன்...

இங்கே காதலின் தீண்டலின் சுவையை நீதான் உணர்த்தினாய்...

நீயே அதை வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிடுங்கி

அந்த கொழுந்து விட்டு எரியும்

தீயில் எறிந்து விட்டு எதுவும் நடவாதது போல செல்கிறாய்...

இத்தனையும் நடந்த பிறகும்

நீயும் நானும் கோர்ப்போம் என்று

நம்பி உன் வரவை ஆவலோடு

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

இந்த பேதைக்கு யார் ஆறுதல் என்று

எவரேனும் கேட்டால் அதுவும் நீயே என்று கொஞ்சமும் யோசிக்காமல்

சொல்லி விடும்

என் ஆழ்ந்த பெரும் காதலின்

உயிர் தீண்டலை புரிந்துக் கொண்டு

என் கரம் கோர்க்க வருவாயா என்று

இங்கே தனித்து நிற்கிறேன்

அந்த வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...

நீ வரும் நாளில் நான்

சித்தம் தெளிவேன் என்று

காத்திருக்கிறேன்

அதோ அங்கே பெய்யும் 

பெரும் மழையையும் பொருட்படுத்தாமல்

நெடுங்காலமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/10/25.






திங்கள், 20 அக்டோபர், 2025

இன்றைய தலையங்கம்

 


#இன்றையதலையங்கம்:-

அரசாங்கம் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக உள்ளது என்று சொன்னால் அதை நேரில் அனுபவித்து வரும் பொதுமக்கள் என்ன நிலையில் உள்ளது என்று அறிவார்கள்... தங்களது கண்களுக்கு முன்னே பலவகையான போதை வஸ்துவை பயன்படுத்தி தாய் தந்தையரை கொடுமைப்படுத்தி மற்றும் பொது இடத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி மோசமான சமூகத்தின் அடையாளமாக தற்போது இளைஞர் சமூகம் மாறிக் கொண்டே வருகிறது என்பதை இங்கே இந்த பதிவை வாசிக்கும் எவரும் மறுக்க முடியாது...

இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக நிறைய திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று மேடை தோறும் பேசி வரும் அரசாங்கம் இங்கே இளைஞர்கள் போதை வஸ்துவால் சீரழிகிறார்கள் என்று சொன்னால் மறுக்கிறார்கள் அல்லது அவர்கள் நலனில் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை இன்றி ஏதேதோ பேசி நழுவி விடுகிறார்கள்...கிராமப்புறம் வரை போதை வஸ்து பெருகி விட்டது.. நள்ளிரவு வரை மிகவும் அதிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் எவரையும் உறங்க விடுவதில்லை...

இது நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் தெரியும்...

ஏனெனில் ஒரு பள்ளியில் குடித்து விட்டு தகாத முறையில் ஆசிரியர்கள் வருவதும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவர்களை பணி இடை நீக்கம் செய்வதும் தொடர் கதையாகிறது... ஏன் பணிஇடை நீக்கம் செய்ய வேண்டும்... அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்க வைக்க அப்படி என்ன தயக்கம் இந்த அரசாங்கத்திற்கு என்று தெரியவில்லை...

ஆனால் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் எல்லா அரசியல் கட்சிகளும்...

மக்களுக்காக தான் ஒழுங்கான அமைதியான சமூகத்தை உருவாக்க தான் அரசியல் கட்சிகளே தவிர ஒரு இனத்தை அழிப்பதற்காக அல்ல... ஏனெனில் எவ்வளவு மதிப்பு மரியாதை கொண்ட தமிழ் நாட்டின் பெருமை மிகவும் மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது...

இனியேனும் அரசியல் கட்சிகள் திருந்த வேண்டும்...

ஏனெனில் ஓட்டு அரசியலையும் தாண்டி மக்கள் தற்போது தமது வீட்டு வாசல் வரை சமூக சீர்கேடுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஒரு நூலகத்தின் முன்பு போதை வஸ்து மற்றும் சாராய பாட்டில் இப்படி கிடப்பதை எந்த அறிவார்ந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது...

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தான் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வேத வாக்கு...

கொஞ்சம் சமூக அக்கறை கொண்டு அரசியல் கட்சிகளை நடத்தி வாருங்கள்...

இல்லை என்றால் அதற்கான விளைவுகளை மக்கள் மிகவும் அற்புதமாக கொடுத்து விடுவார்கள்...

இங்கே கட்சி சார்பின்றி நடுநிலை என்று ஒன்று இருக்கிறது... சமூக அக்கறை என்று ஒன்று இருக்கிறது...

தமது தீவிரமான விசுவாசி எங்கே போய் விட போகிறார்கள் என்று கட்சி தொண்டர்களை நினைக்காதீர்கள்.. ஏனெனில் அவர்கள் குடும்பமும் இதே தமிழ் சமூகத்தில் பல அருவருக்கத்தக்க விசயங்களை தமது வீட்டு இளைஞர்கள் மூலம் அனுபவித்து வருகிறது...

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்!

அது நல்ல சமூகத்தின் பாதையை உருவாக்கட்டும்...

தீபாவளி சரக்கு விற்பனை காசு எவ்வளவு தேறியது எவ்வளவு கல்லா கட்டினோம் என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அரசாங்கம் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்... இல்லை என்றால் அவர்கள் மனசாட்சி அவர்களுக்கு தண்டனை கொடுக்கட்டும்...

உப்பு தின்பவன் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.. இது இயற்கையின் நியதி.. 🍂🍁👣.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/10/25.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

நிகழ் கால கவிதை 🍂


#இன்றைய #நிகழ்கால #கவிதை:-

வடகிழக்கு பருவ மழையை 

எதிர் கொள்ள 

அரசு தயார் என்று

மாலையில் அறிக்கை வருகிறது 

அரசிடமிருந்து...

இந்த அறிக்கையை பார்த்து விட்டு

மழை அதனாலென்ன...

நீங்கள் என்னை வேடிக்கை 

பார்த்துக் கொண்டே இருக்கும் போது

ஒழுங்காக கழிவு நீர் மேலாண்மை 

இல்லாமல் சாலையில் பெருகி

நோய் எனும் அரக்கனை பரப்பி

காவு வாங்க காத்திருக்கிறார் 

கால தர்மன் என்கிறது நையாண்டியாக...

இங்கே வீடுகளில் நீர் சேமிப்பு 

தொட்டிகளில் எல்லாம் தமது கைகளை 

ஏதோ உள்ளே

ஆராய்ச்சி செய்வது போல 

போஸ் கொடுத்து உங்களை(அரசை) ஏமாற்றி

ஊதியம் வாங்கி செல்கிறார்கள்...

வழக்கம் போல அரசு இத்தனை இடத்தில் நாங்கள் தொடர் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்று மீடியாவிற்கு பேட்டி கொடுத்து தனது கடமையை முடித்துக் கொண்டு தேர்தல் வேலைகளுக்கு தயார் ஆகிறது ஆளும் அரசாங்கம்...

எதிர் கட்சிகள் அங்கே மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூப்பாடு போட்டு இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் 

இது என்ன அரசா காவு வாங்கும் 

அரக்கரா என்று கேள்வி கணைகளை

தொடுத்து விட்டு முகத்தில் 

அரசாங்கத்திற்கு ஒரு குட்டு வைத்த 

களிப்பில் தனது தேர்தல் பேரத்தை கூட்டணி கட்சிகளிடம் தொடங்கி விடுகிறது...

இந்த களேபரத்தில் தமது குடும்பத்தில் 

ஒருத்தர் இறந்ததை அன்றே மறந்து 

அரசு கொடுக்கும்

நிவாரண தொகையை 

வாங்கிக் கொண்டு 

தத்தமது வேலைகளில் 

மூழ்கி போகிறார்கள் பொது ஜனங்கள்...

இதென்ன அநியாயம் என்று

அங்கே ஊழி தாண்டவத்திற்கு

கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிறது

இந்த பிரபஞ்சம்...

#நிகழ்காலகவிதை.

#வடகிழக்குபருவமழையும்

#இந்த #ஜனநாயகமும்

#பொதுஜனமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.

ஒரு நதியின் பயணம் போல..

 


ஒரு நதியின் பயணம் போல

வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவதில்

அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை

உங்களுக்கு...

அது உங்களை எவ்வித சிரமமும் 

இல்லாமல் ஏந்தி

அந்த கரையின்

அற்புதத்தை காட்ட நினைக்கிறது.. 

 நீங்களோ அந்த வாழ்வெனும் நதியோடு

பிணக்கம் கொள்கிறீர்கள்...

பாவம் அது என்ன செய்யும்

நீங்கள் அந்த அற்புதத்தை

காணாமலேயே அதற்குள் அடங்கி 

மூழ்கி போகும் போது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

நீயும் நானும் சேர்ந்து பருகிய தேநீரின் வாசம்...

#தேநீர் 


நீயும் நானும் சேர்ந்து பருகிய 

 வாசமும் சுவையும் இன்னும் 

அந்த தேநீர் விடுதியில் 

நமது ஞாபகமாக ஒட்டிக் கொண்டு 

இருக்கிறது ...

வெறும் அழியாத கறையாக...

நான் அதை வேடிக்கை பார்க்கிறேன் 

என்னை மறந்து!

சார் மன்னிக்கவும் அந்த கறை

நாங்கள் எவ்வளவு முயன்றும் 

அகலவில்லை என்று பணிவாக சொல்லி 

தேநீர் கோப்பையை

அந்த கறையை விட்டு தள்ளி

வைக்கிறார் அந்த விடுதி மனிதர்

நானோ முகத்தை திருப்பி சத்தம் இல்லாமல் அழுகிறேன்...

அந்த தேநீர் கறையை நினைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10 /10/25

அந்த நகர காடுகளின் வெப்பத்தில்...

 

அந்த நகர காடுகளின்

வெப்பத்தில் தகிக்கிறது...

இந்த பிரபஞ்சம்...

அதோ அங்கே நகர காடுகளிடமிருந்து 

தப்பி பிழைத்த

ஒற்றை மரத்தின் நிழலில்

அடைக்கலமாகி

இந்த அகோர பசிக் கொண்ட 

மனிதர்களை பற்றி

ஆயிரம் புகார்களை

தனது மொழியில்

ஒப்புவித்து அங்கே தனது கூட்டில்

இரவின் சூட்சமத்தில்

அமைதிக் கொண்டு 

அந்த குருவி

உறங்க போவதை பார்த்து 

அங்கே இருந்த காலமோ

மென்மையாக விசிறி 

தாலாட்டு பாடுகிறது

அந்த தாலாட்டில்

இந்த பிரபஞ்சமே

பேரமைதி கொண்டு உறங்கி கிடக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.


ஞாயிறு, 12 அக்டோபர், 2025

என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்...

 


ஜூபின் ❤️ என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்... எவ்வளவு எளிமையான மனிதராக சமூகத்தில் வலம் வந்து இருக்கிறார் என்று அவரது காணொளியை பார்க்கும் போது வியந்தேன்... ஒரு இறப்பில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் கண்ணீர் மல்க கலந்துக் கொண்டு சாலை எங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்... இவரது எளிமை மற்றும் தர்மசிந்தனை தான் காரணம்... இன்னும் இவரது நினைவுகள் அகலவில்லை... உண்மையில் எனக்கு ஹிந்தி தெரியாது... ஆனால் ya Ali பாடலை இவருக்காகவே நான் ஆங்கில மொழியில் வைத்து பாடினேன்...

நிச்சயமாக இவரது இறப்பின் மௌனம் கலைய வேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனை... கண்ணீரோடு விடை கொடுத்த போதும் நீங்கா நினைவுகளாக எப்போதும் நெஞ்சில் ஜூபின் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 4 அக்டோபர், 2025

இனியொரு விதி செய்வோம்...

 


#இன்றையதலையங்கம்:-

மிக பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் வாழ்ந்த தமிழ்நாடு தற்போது கலை வேறு அரசியல் வேறு என்பதில் தடுமாறி நிற்கிறது என்பது தான் ஜீரணிக்க முடியாத காலக் கொடுமை... எத்தனை நூலகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது... அங்கே உள்ள உலக அரசியல் தலைவர்கள் பற்றியோ உள்ளூர் அரசியல் தலைவர்கள் பற்றியோ மிகவும் நிதானமாக வாசித்தவர்கள் எத்தனை பேர்... இன்றைய இளைஞர்கள் கொஞ்சமும் புத்தக வாசனை இல்லாத மனிதர்களாகவே வலம் வருகிறார்கள்...சே குவேரா சட்டை பெருமிதமாக அணிந்து கொள்வார்கள்... ஆனால் அவரது புரட்சி எங்கே எப்படி ஆரம்பித்து எத்தனை இடர்களை கடந்து இன்றும் ஒரு புரட்சியாளராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்று எத்தனை பேர் அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது கேள்வி குறி தான்...இது சாதாரண வாசிப்பாளருக்கு சாத்தியம்... ஆனால் அரசியல் ஆர்வம் மிகுந்தவர்கள் அரசியலில் பெரிதாக புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இப்படியான மனிதர்களை ஆழமாக வாசித்து அதன் பிறகு அரசியல் புரட்சி செய்ய வருகிறார்கள்...

மேம்போக்கான அரசியல் மற்றும் துட்டுக்கு அரசியல் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் எழும் போதெல்லாம் கூட்டணி தர்மம் என்று ஓடி ஒளிந்து கொள்ளும் அரசியல்...இப்படிதானே இன்றைய அரசியல் போகிறது...மேலும் கட்சியில் உயிரைஐ கொடுத்து மக்களுக்காக சேவை செய்பவர்களுக்கு உண்மையில் சீட் கொடுக்கிறார்களா என்று அந்தந்த பெரிய கட்சிகள் தமது மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்...அரசியல் பற்றிய உண்மையான உருவை மாற்றி இது தான் அரசியல் என்று மக்கள் மனதில் திணிப்பவர்களுக்கு சூட்டோடு சூடாக ஒரு குட்டு நீதிமன்றம் வைக்கட்டும்...


மேலும் சாலை என்பது மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்டது...அதை அடைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரமோ பேனர்கள் வைக்கும் கலாச்சாரமோ இனி எப்போதும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்கட்டும்...

எல்லாவற்றிற்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றம் நழுவாமல் தானே முன்வந்து இன்றைய இளைஞர்கள் சீரழிந்து சமுதாயத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி வைத்து இருப்பதற்கு அரசாங்கம் பதில் சொல்ல காலக்கெடு விதிக்கட்டும்...

எப்படி இருந்த தமிழ் நாடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டதை ஆழ்ந்த வருத்தம் நிறைந்த மனதோடு கண்ணீரோடு பெரும்பான்மையான பொது ஜனங்கள் மௌனமாக அழுவதை கொஞ்சம் உற்று கேளுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் வைத்து தமிழ் நாட்டில் அங்கங்கே நடக்கும் மோசமான நிகழ்வுகளை இன்றைய ஊடகங்கள் சுட்டிக் காட்டட்டும்...

இடித்துரைப்பவர்கள் இல்லாமல் போனால் இந்த நாட்டை ஆள்பவர்கள் மட்டும் அல்ல குடிமக்களுக்கும் நாசமாக தானே போவார்கள்...

இனியொரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்...

#இனியொருவிதிசெய்வோம்

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:04/10/25/சனிக்கிழமை.

வியாழன், 2 அக்டோபர், 2025

இங்கே மரணிக்காத இரவொன்று இருந்தால் சொல்லுங்கள்...


எனக்காக காத்திருந்து களைத்து 

சிதைந்து போன 

நொடிகளை தேடினேன் 

திடீரென ஞாபகம் வந்தவனாக..

அதுவோ கோபித்து 

கரைந்து போனது 

காலத்திற்குள் என்று 

அந்த வாழ்வின் சாட்சி என்னிடம் 

கொஞ்சமும் இரக்கமின்றி 

சொல்லி விட்டு 

விடுவிடுவென்று பயணிக்கிறான்...

நான் அப்படியே அந்த 

வாழ்வெனும் சாலையில் உறைந்து 

நிற்பதை பார்த்து 

பொறுக்காமல் என் மீது சிறிது 

அன்பு கொண்ட ஒருவர் 

சீட்டு கட்டில் ஜோக்கர் இல்லாமல் 

வெற்றி அடைவதும் 

சாத்தியமான ஒன்று தானே என்று 

சமாதானம் செய்து 

அங்கே இருந்த தேநீர் விடுதியில் 

ஒரு கோப்பை தேநீர் வாங்கி 

தருகிறார்...

அந்த தேநீரின் சில நிமிட சுவையில் 

நான் சகலமும் மறந்து 

பயணிக்கிறேன்...

இங்கே மரணிக்காத இரவு என்று 

ஒன்று இருந்தால் சொல்லுங்கள்...

நான் அதில் மறைந்துக் கொள்ள 

கேட்கிறேன் என்று 

நினைத்து விடாதீர்கள்...

அந்த இரவிடம் எந்தவித 

இடையூறும் இல்லாமல் 

இடைவெளி இன்றி 

நான் சில பாடங்களை 

கற்றுக் கொள்ள வேண்டும் ...

இப்படிக்கு இரவை நேசிப்பவன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/10

/25/வெள்ளிக்கிழமை.


அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...