நாள் தோறும் இங்கே
பல மனிதர்கள் அரங்கேற்றும்
நாடகத்தை
இந்த பிரபஞ்சம்
கொஞ்சமும் சத்தம் இல்லாமல்
ரசிக்கிறது...
அவர்கள் நாடகம் முடிந்ததும்
களையும் ஆடையாக
உடல்கள் இங்கே
அங்கொன்றும் இங்கொன்றுமாக
பரவி கிடப்பதை பார்த்து
அதை மிகவும் நிதானமாக
சேகரித்து தீக்கு இரையாக
சிலவற்றையும்
மண்ணுக்கு உரமாக
சிலவற்றையும்
பாகம் பிரித்து
கொடுத்து விட்டு
தனக்கென எதுவும்
வைத்துக் கொள்ளாமல்
மீண்டும் நாடக மேடையில்
புதிதாக ஏறும்
கலைஞர்கள் களையும் ஆடைகளுக்காக
காத்திருக்கிறது
எந்தவித பற்றுதலும்
இல்லாத
இந்த பிரபஞ்சம்...
நாடக காட்சிகளில்
நடிப்பவர்களோ
அந்த கதாபாத்திரம் தான் என்று
அகங்காரம் பிடித்து
இங்கும் அங்கும்
அலைந்து திரிந்து விட்டு
சோர்ந்து போய்
அந்த காலனிடம்
அடைக்கலம் ஆவதை
பார்த்த பிரபஞ்சம்
இவர்கள் அஞ்ஞான வாசம்
எப்போது முடியும் என்று
மிகுந்த பொறுமையோடு
காத்திருக்கிறது
யுகம் யுகமாக...
அவர்களோ மீண்டும் மீண்டும்
அதே மாய புதைக் குழிக்குள்
மூழ்குவதிலேயே குறியாக
இருப்பதை பார்த்து
எதற்காகவும் நடுங்காத
இந்த பிரபஞ்சம்
ஒரு சில விநாடிகள்
சோர்ந்து தான் போய் விட்டது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:10/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக