ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 19 ஆகஸ்ட், 2026

அந்த பிரபஞ்சம் என்னை கூர்ந்து நோக்கியபோது...


எத்தனையோ 

சலசலப்பான நகர்வுகளுக்கு 

மத்தியில் 

ஒரு புழுதியென 

அங்கே பறந்து 

காலமெனும் வெளியில் 

கலக்கிறேன்...


இங்கே எனக்கென்று 

ஒரு அடையாளம் இருக்கிறது என்று 

அங்கே 

பலபேர் கூச்சலிட்டுக் கொண்டே 

இருக்கிறார்கள்...


நான் அவர்களின் 

கூச்சலை ஒரேயொரு 

பார்வையில் அடக்கி விட்டு 

அவர்கள் சொல்கின்ற 

அடையாளங்களை உதறி 

அந்த புழுதியில் 

கரைத்து விட்டு 

அந்த காலமெனும் சாலையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

ஏந்தி நிதானமாக 

கடந்து கடந்து செல்கிறேன்...


அந்த பிரபஞ்சமோ

என்னை கூர்ந்து 

கவனித்து 

எனக்கு ஒரு விருதை 

என் கைகளில் திணித்து விட்டு 

சென்றது...

அவள் ரசனையுள்ள 

கவலைகளற்ற 

வேடிக்கை பார்ப்பவள் என்று...


நான் அதையும் 

ஒரு புன்னகையோடு 

கடந்து செல்லும் போது 

என் கையில் உள்ள 

தேநீர் கோப்பையில் 

தேநீர் காலியாகி 

இருந்தது...

அதன் சுவை மட்டும் 

என்னோடு விடாப்பிடியாக 

பயணித்துக் கொண்டிருக்கிறது...

பெரும் காதலெனும் உணர்வோடு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/08/26.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலையோர புழுதியில் நனைந்த ஓவியம்...

 அந்த பிரமாண்டமான வீட்டில்  வாழ்ந்து கொண்டு  இருப்பவர் சில நாட்களில்  உற்சாகம் இழந்து  அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய  அந்த வீட்டில்  உள...