அந்த அதிஅற்புதமான
பழங்களை கொடுத்து
என்னை மகிழ்வித்து
கொண்டிருந்த மரங்களை
எல்லாம்
அங்கே பணத்தை
குவித்து என்னை
உச்ச நிலைக்கு
அழைத்து சென்று விடும்
மாயையில்
அதை எல்லாம்
சாய்த்து விட்டு
என் நிலத்தை கான்கிரீட் பணம்
காய்க்கும் கட்டிட கிளைகளை
உருவாக்கி சிறிது காலம்
பெரும் செழிப்பில்
மகிழ்ந்திருந்தேன்
சில காலம்...
அப்போது அங்கே
வசித்த பறவைகள்
எல்லாம் கீச் கீச் என்ற
அடர்ந்த குரல்கள்
காற்றில் கரைய
வெகு தொலைவில் உள்ள
மரங்களை சென்று
தஞ்சமடைந்தது...
அந்த உணர்வுபூர்வமான நகர்தலை
சிறிதும் கண்டுக் கொள்ளாமல்
ஒரு சிரிப்பில் எகதாளமிட்டு
அங்கே கூடி இருந்தவர்களிடம்
சொல்லி சிரிக்கிறேன்...
இதோ காலங்கள்
உருண்டோடி விட்டது...
இப்போது ஒரு பூகம்பத்தில்
நான் உருவாக்கிய
கான்க்ரீட் காடுகளாக
காட்சி அளித்த இடங்கள் எல்லாம்
தற்போது மயான பூமியாக
காட்சியளித்ததை பார்த்து
என் கண்களில் பெரும் நீருற்று
பெருகி ஆறாக ஓடியது...
அப்போது என்தோளில்
யாரோ அமர்வது போல
சற்றே திரும்பி பார்க்கிறேன்...
அது வேறு யாருமல்ல
என்றோ என் நிலத்தில் பசியாறிய குருவி ஒன்று தன் அலகில்
ஒரு சிறிய பழத்தை
சுமக்க முடியாமல் சுமந்து
என் கவனத்தை திருப்பி
என் உதட்டில்
அந்த பழத்தை திணிக்க முயற்சி
செய்கிறது...
செய்நன்றி மறவாத
அந்த சிறிய குருவின்
சின்ன கால்களை வருடி
மன்னிப்பு கேட்கிறேன்...
சில கண்ணீர் துளிகள்
அந்த குருவின் பாதத்தில்
படர்ந்து என் பாவ மூட்டைகளை
கரைக்க பெரும் பிரயத்தனங்களை
அங்கே நிகழ்வித்துக் கொண்டு
இருக்கிறது...
நான் சற்றே நிதானமாக பார்த்து
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
நிமிர்ந்து போது
அந்த குருவி மீண்டும்
என்னை ஒரு வித கவலை உணர்ச்சி பொங்க கீச் கீச் என்று
மெல்லிய குரலில் குரல் எழுப்பியது...
நான் பேரன்பின் உணர்வுகளின்
சக்தியை உணர்ந்து அங்கே
பேச்சற்று அந்த குருவியை
அணைத்துக் கொண்டு
கண்ணீர் வழிய நிற்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:20/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக