என்றோவொரு நாள்
பார்த்த
உன் முகத்தை
இன்றும் தேடியலைகிறது
என் ஜீவன்...
மது மயக்கத்தில்
மூழ்கி அலையும்
வண்டை போல
என் மனமெனும் சாலையில்
உன் பாத வாசத்தை
தேடி ஒவ்வொரு நொடியும்
அலைந்து திரிகிறேன்
ஒரு பித்தனை போல...
காலத்தின் கரைகளில்
நீ எங்கே ஒதுங்கி
வேடிக்கை பார்த்துக் கொண்டு
இருக்கிறாய் என்று
யார் அறியக் கூடும்?
அது ஒரு மன மயக்கம் என்று
எத்தனையோ முறை
நான் என்னை தேற்றிக் கொண்டு
சூழலை இயல்பு நிலைக்கு
கொண்டு வர
வெகு பிரயத்தனத்தோடு
போராடி தோற்றுக் கொண்டு
இருக்கிறேன் உன்னால்...
உண்மையில் நீ யார்?
நான் தேடும் காதலா
இல்லை
காதலின் மனமயக்கமா
இது வரை ஏதும்
பதில் இல்லையடி
கண்மணி...
ஏ காலமே நீ சற்றே
நின்று நிதானமாக ஆராய்ந்து
என் கேள்விக்கு பதில்
சொல்லி விட்டு போ...
இல்லை
அதோ அங்கே சுடர் விட்டு
கனலாக எரியும்
அந்த தணலில்
என்னை தள்ளி விட்டு போ...
அந்த அக்னியின் ஜீவாலையிலேனும்
நான் அந்த மயக்கத்தில் இருந்து
விடுபடுகிறேனா என்று
பார்க்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:17/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக