உன் நினைவுகளை
சுமந்து கிடக்கும்
இந்த இரவொன்றில்
நீண்டதொரு
வெறுமையான சாயலை
என் மீது போர்த்தி செல்கிறது
உன் மீதான காதல்...
உன் மீதான காதலில்
ஒரு பித்து நிலையை
நான் கடும் சிரமத்தோடு
கடக்கும் போதெல்லாம்...
இந்த தேநீரும்
அந்த சிம்னி விளக்கும்
தன்னால் ஆன ஆறுதலை
எனக்கு தந்து
என்னோடு அவ்வபோது
உடனிருந்து பயணிக்கிறது...
பாவம் அந்த நிலவு தான்
இங்கே கொஞ்சம் தடுமாறி
போகிறது
தன் இயல்பை மறந்து...
அது தான் சோகத்தின்
கிரணங்களை என் மீது
பாய்ச்ச மனமின்றி
குளுமையை தந்து
உன் மீதான தாபத்தின்
வெப்பத்தை நழுவ செய்கிறது
என்னிடமிருந்து...
நீயோ இதையெல்லாம்
எங்கோ இருந்து
கையில் ஒரு தேநீர்
கோப்பையோடு
வேடிக்கை பார்த்து
ரசித்துக் கொண்டே
அந்த நிலவை
கோபித்துக் கொள்வதாக
அங்கே உன்னை தீண்டிய
தென்றல்
என்னிடம் வந்து
குறைப்பட்டுக் கொள்கிறது...
நானோ அந்த தென்றலை
சமாதானம் செய்து
என்னோடு
இந்த இரவில் துணையாக
வைத்துக் கொண்டேன்..
இதற்காக நீ
அந்த தென்றலையும்
உன் கோபத்தால்
சபித்து விடாதே...
பாவம் அது பிழைத்து
போகட்டும்...
அது எத்தனையோ முறை
உனக்கும் எனக்கும்
தூதுவாக இருந்து
தந்த இன்பத்திற்கு
நன்றி கடனாக
இருந்து விட்டு போகட்டுமே...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:31/07/26.









.png)






