ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

கவிதை நேரம் (1)

 


நேயர்களே வணக்கம் 🙏 

கவிதை உலகம் என்பது மிகவும் வித்தியாசமான உலகம்...பல சிலிர்ப்பை தரும் உணர்வுகளை கொண்ட உலகம்... அந்த உலகிற்குள் சென்று மெய் மறந்து கவிதைகளை ரசிக்க நீங்கள் கீழேயுள்ள லிங்கிற்குள் வர வேண்டும்...

அதில் நீங்கள் கவிதைகளை எனது குரலில் கேட்டு ரசிக்கலாம் 🍁✨🤷.

https://youtu.be/1sqQSJgP1mM?si=45wAoHe75BCJPr4C

சிறுகதைகள் உலகம் ✨

 


வணக்கம் நேயர்களே 🙏.

எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் நலம் தானே...

கீழேயுள்ள லிங்கில் உள்ள கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே 🙏.

இது எழுத்தாளர்களின் எழுத்துக்களை ஒலி வடிவில் கொண்டு சென்று சிறப்பிக்கும் நிகழ்ச்சி 🙏.

https://youtu.be/qWZw3ixczcU?si=JVidM4hOF4RTr97Z

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

காலமும் நானும்...


நான் இங்கே எதையும் சேர்த்து வைக்க இயலாத 

கையாகாத மனுஷியாக 

ஓடிக் கொண்டிருப்பதாக 

அங்கே பல பேரின் கேலி பேச்சுகளை மிகவும் நிதானமாக ரசித்து 

புன்னகைத்து செல்வதை பார்த்து 

காலம் கொஞ்சம் 

அயர்ந்து தான் போனது...

அது என் தோளில் கை வைத்து ஏன் உனக்கு கோபம் வரவில்லை அவர்கள் பேச்சை கேட்டு என்று கேட்டது...

நானோ உன்னை சேமிக்க விரும்புகிறேன் நீ என்னோடு தங்கி விடுகிறாயா என்றேன் 

அந்த காலத்திடம்...

உடனே காலம் சுதாரித்துக் கொண்டு அதெப்படி முடியும் 

நான் எவரின் சேமிப்பாக இருக்க இயலாத ஜனனம் நான் என்றது...

அப்படி என்றால் நான் இங்கே எதை சேமித்து வைத்தாலும் 

உன்னுள் கரைந்து ...

இருக்கும் இடம் தெரியாமல் 

போய் விடும் தானே என்றேன்...

ஆம் அதிலென்ன சந்தேகம் 

உனக்கு என்றது...

பிறகு ஏன் நான் எதையும் சேமித்து 

அதை பாதுகாக்க 

இந்த பிரபஞ்சத்தில் அல்லாடி 

உயிரற்ற ஜடமாக 

உலாவ வேண்டும்...

வாழும் இந்த தருணத்தில் 

உன்னுள் என் உடல் 

புதையும் வரை 

கொஞ்சம் இலகுவாக 

உன் கை பிடித்து ...

இந்த பிரபஞ்சத்தின் பேரழகில் 

என்னை தொலைத்து 

இந்த நாட்டில் அரசியல் என்ற 

பெயரில் நடக்கும் கூத்துகளை 

கொஞ்சம் கண்டுக்காமல் தள்ளி 

வைத்து நான் வாழ்ந்து விட்டு 

போவதில் அப்படி என்ன உனக்கு 

பிரச்சினை என் காலமெனும் 

தோழனே என்று சிரித்துக்கொண்டே 

கேட்டதில் காலமும் 

அதுவும் சரிதான் என்று கலகலவென 

சிரித்து விட்டு 

கொஞ்சம் உனது கையால் 

இஞ்சி தேநீர் 

சூடாக கொண்டு வா தோழியே உன் கைகளால் அந்த தேநீரை பருகி நாட்களாகி விட்டது என்று சொல்லி அங்கே உள்ள இருக்கையில் சாவகாசமாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்க அதில் 2026க்குள் தீவிரவாதம் இந்தியாவில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அமித்ஷா பேசிக் கொண்டு இருந்தார்...

இதை பார்த்தவுடன் பொட்டென்று ரிமோட்டில் தொலைக்காட்சியை அமைதிப்படுத்தி விட்டு 

காத்திருந்த காலத்தின் கைகளில் சிரித்துக்கொண்டே எனது தயாரிப்பான இஞ்சி சுவையுள்ள தேநீரை திணித்தேன்...

ஏனோ அந்த தேநீரில் இன்று கொஞ்சம் காரம் அதிகமாக இருந்ததை இருவரும் உணர்ந்தோம்...

#காலமும் நானும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/08/24/ஞாயிற்றுக்கிழமை.

அந்த வீட்டின் வம்சம்...


அந்த வீட்டை போவோர் வருவோர் 

எல்லாம் வாய்க்கு வந்தபடி எல்லாம் 

கரித்துக் கொட்டுகிறார்கள் 

வம்சம் இல்லாத வீடென்று...

இதை செவிமடுத்த 

அந்த வீட்டில் வசித்து வந்த 

சில பல பல்லிகள் 

தாம் ஏராளமாக முட்டையிட்டு 

இதே வீட்டில் தானே 

தாம் தமது குழந்தைகளை எந்தவித 

தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக 

வளர்த்து வருகிறோம்...

அப்பொழுது எமது குழந்தைகள் 

இந்த வீட்டின் வம்சம் இல்லாமல் 

வேறென்ன என்று 

கோபம் கொண்டு 

அவர்கள் மீது குதித்த போது அப்படி 

பேசியவர்கள் ...

கொஞ்சம் பயந்து பின் வாங்க 

ம்ம் இந்த பயம் இருக்கட்டும் 

இனி இந்த வீட்டை கடக்கும் போது 

வாய்க்கு வந்ததை எல்லாம் 

பேசும் போது என்று 

ஒரு செருமு செருமியதில் 

அந்த மக்கள் அலறி அடித்து 

ஓடுவதை அந்த வீடு கொஞ்சம் தம் பங்கிற்கு 

திமிராக நோட்டமிட்டதை 

அந்த காலம் மேலே இருந்து 

ரசித்தது....

#அந்தவீட்டின்வம்சம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/08/24/ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

அந்த வீடற்ற மனிதரின் கலாரசனையில் உற்சாகம் கொள்கிறது அந்த சுவரின் ஓவியம்...


அந்த பிரமாண்டமான வீட்டில் 

வாழ்ந்து கொண்டு 

இருப்பவர் சில நாட்களில் 

உற்சாகம் இழந்து 

அவர் தாம் பார்த்து பார்த்து கட்டிய 

அந்த வீட்டில் உள் அலங்காரமாக செதுக்கிய கலையை ரசிக்காமல் 

அது நாளடைவில் பொலிவிழந்து 

அவரின் ரசனைக்காக 

ஏங்கி கிடக்கிறது...

புதிதாக இருந்த போது 

தாம் எவ்வாறெல்லாம் 

புகழப்பட்டோம் என்று 

நினைத்து நினைத்து 

ஏக்க பெருமூச்சு விட்டு 

அந்த நாளின் நினைவுகளை 

அசைப்போட்டு ஆறுதல் 

தேடிக் கொண்டது...

அந்த வீட்டின் வெளி சுவரில் 

வரையப்பட்ட 

சாலையோர புழுதியில் நனைந்த 

ஓவியம் ஒன்று 

புதிதாக ரசிக்கப்பட்ட 

அதே சுவையோடும் பொலிவோடும்...

உற்சாகமாக இருக்கிறது ...

அந்த சாலையில் 

தினந்தோறும் நடந்து செல்லும் 

அந்த வீடற்ற மனிதரின் 

கலா ரசனையோடு கூடிய 

பார்வையால் 

தினமும் நின்று நிதானமாக 

தாம் காதலோடு 

ரசிக்கப்படுவதை பார்த்து...

#அந்தவீடற்றவரின் கலாரசனை

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.

அந்த நதியை விதி எழுதிய போக்கில் பயணிக்க விடுங்கள்...

 


ஒரு நதி இங்கே 

எந்தவித சலனமும் 

மனதில் கொள்ளாமல் 

சத்தம் இல்லாமல் 

நூல் பிடித்தது போல 

விதி எழுதிய போக்கில் 

பயணித்துக் கொண்டு தான் 

உள்ளது...

காலமாகிய நான் உங்களிடம் 

கேட்டுக் கொள்வதெல்லாம்

அந்த பயணத்தில் ஒரு சிறு கூழாங்கல் கூட எறிந்து சலனப்படுத்தாமல் 

அதை அதன் போக்கில் 

பயணிக்க விடுங்கள் என்பதே...

நீங்கள் அந்த நதியில் நீராடி 

கலங்கப்படுத்தி பாவத்தை அந்த நதியில் 

கலக்காமல் இருந்தாலே போதும் 

அது தனது தவ பலத்தால் 

சுவையான நீரோடு பயணித்து என்னில் கலந்து விடும்...

அது என்னுள் உமிழும் அமிர்தத்தை கொண்டே 

என் ஆயுளை நீட்டித்து 

உங்கள் வாழ்வில் 

உங்களோடு பயணிக்கும் பாவ புண்ணிய கணக்கை 

கணக்கிட்டு 

எனது பயணத்தில் சிறு பின்னமும் 

ஏற்படாமல் 

யுகம் யுகமாக பயணித்து 

தர்மத்தின் தாரையை 

இந்த பிரபஞ்சத்தில் நிலைநாட்டுவேன்..

#ஒருநதியின் சலனமில்லாத பயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.

ஒரு இலக்கியவாதியும் அந்த நடுநிசி மனிதர்களும்...


அந்த இலக்கியவாதி அன்றொரு நாள் நடுநிசி நெருங்கும் அந்த வேளையில் தனக்கு நெருக்கமான எழுத்தாளரின் புத்தகம் ஒன்றை வாசித்து கொண்டு இருந்தார்...

தனக்கு கிடைத்த நேரத்தில் எல்லாம் ஏதோவொரு கலை பயணத்தில் இணைத்துக் கொள்வது அவரது பொழுதுபோக்கு என்று சொல்லலாம்... அப்படி அந்த வாசிப்பில் மூழ்கியவருக்கு அவரது வீட்டின் அழைப்பு மணியோசை காதில் விழுந்தது... அந்த அழைப்பு மணி ஓசை கேட்டு சாதாரண மக்களாக இருந்தால் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் குடும்பத்தாரையே அலறி அடித்து எழுப்பி விடும் சுபாவம் உள்ளவர்கள் மத்தியில் இவர் அதை ஒரு முறை அப்படியே நோட்டமிட்டு விட்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

வெளியே ஒரு கூட்டமே அவரது கதவு திறக்காதா என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்து விட்டு மீண்டும் அழைப்பு மணியை அழுத்தியது... இப்போதும் எந்த சலனமும் இல்லை அவரிடம்...

பிறகு பொறுமை இல்லாமல் ஒருவர் அந்த கதவின் மீது கையை வைக்க அது இலகுவாக திறந்து கொண்டது கண்டு வியப்படைந்தார்கள்... அப்படியே அவர்கள் அவரை நோக்கி வந்து ஒரு வணக்கம் செலுத்தினார்கள்... அவரும் தனது உடல் மொழியால் அவர்கள் மரியாதையை ஏற்றுக் கொண்டு மீண்டும் வாசிப்பில் மூழ்கி விட்டார்...

இவர்கள் அனைவரும் நாங்கள் இங்கே அமரலாமா சார் என்று கேட்டார்கள்.. அவரும் தனது கண்ணசைவில் அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்...

இவர்கள் மிகவும் மகிழ்ச்சியோடு அமர்ந்து கொண்டு எப்படி வந்த விசயத்தை ஆரம்பிப்பது என்று அமைதியாக இருந்தார்கள்... பிறகு ஒரு வழியாக அவரது இலக்கிய படைப்புகளை வரிசையாக தரம் பிரித்து வைத்துக் கொண்டு இந்த இந்த படைப்புகள் எல்லாம் நாங்கள் திரைப்படமாக எடுக்க போகிறோம் அதற்கு தங்களது அனுமதி வேண்டும் என்று கேட்டார்கள்... அப்போது அங்கே அந்த மேசையில் உள்ள பொம்மை ஒன்று காதை தீட்டிக் கொண்டது..இவரிடம் போய் இந்த மனிதர்கள் வந்து இருக்கிறார்களே இவர்கள் கிறுக்கு தான் பிடித்து விட்டது போலும்..இவர் என்ன குணாதிசயம் உள்ளவர் என்று இத்தனை நாள் இவரோடு பயணிக்கும் எனக்கே கணிக்க தெரியாதே..சரி இவர் என்ன தான் பதில் சொல்கிறார் பார்ப்போம் என்று தனது காதை கூர்மையாக்கி கொண்டது..இவர் அதை கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை... வந்தவர்கள் தங்களுக்குள் இந்த இந்த படைப்புகளுக்கு இந்த தொகையை பேசி விடலாமா என்று விவாதித்து கொண்டு இருந்தார்கள்.. குறைந்தது இரண்டு மூன்று மணி நேரம் அந்த விவாதம் போய்க் கொண்டிருக்கும்... ஒரு வழியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து அவர் இருந்த இடத்தை பார்க்கும் போது அந்த இருக்கை காலியாக இருந்தது.. எங்கே சென்று இருப்பார் ஒரு வேளை கழிவறை சென்று இருக்கக் கூடும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே அந்த இரவின் பேரமைதி வெளிப்படும் வகையில் அமர்ந்து இருந்தார்கள்... ஆனால் அவரை காணவில்லை..


ஒரு வேளை வெளியே தோட்டத்தில் உலாவ கூடும் என்று அந்த கூட்டத்தில் இருந்த இலக்கிய அறிவு சிறிது உள்ள ஒருவன் மட்டும் எழுந்து சென்று பார்த்தால் அவன் நினைத்தது போலவே அங்கே தான் அவர் அமைதியாக அந்த நடுநிசியில் நனையும் செடி கொடிகளை ரசித்தபடி மிகவும் மெதுவாக அதை வருடியபடியே அந்த தேய்பிறை நிலவின் மங்கிய ஒளியில் நடந்து கொண்டு இருந்தார்...

அவன் அதற்குள் உள்ளே ஓடோடி அவர் அந்த தோட்டத்தில் தான் இருக்கிறார் என்று மூச்சு வாங்க சொல்லி முடித்தான்..

எல்லோரும் அங்கே சென்று மீண்டும் தாங்கள் பேச நினைத்த அவர் எழுதிய இலக்கியத்திற்கான தொகையை சொன்னார்கள்... அவர் மிகவும் நிதானமாக நான் எப்போது என் கதையை உங்களிடம் கொடுப்பதாக சொன்னேன் என்று கேட்டார்..

இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. சார் நீங்கள் உங்கள் இல்லத்தில் எங்களை அனுமதித்தது மற்றும் நாங்கள் வந்த காரணத்தை சொன்னபோது நீங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே... அதனால் தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம் என்றார்கள்..

ஓ அப்படியா... ஆனால் நான் நீங்கள் எல்லோரும் ஏதோ எனது வீட்டில் திருட வந்ததாக அல்லவா நினைத்து மௌனமாக வாசித்து கொண்டு இருந்தேன் என்றார் மிகவும் நிதானமாக...

அதற்கு அவர்களுக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சார் ஒரு திருமணம் ஆகாத இலக்கியவவாதியான உங்கள் வீட்டில் என்ன இருக்க போகிறது? நாங்கள் திருடர்களாகவே இருந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனால் இலக்கியவாதியான உங்கள் வீட்டில் சில பல இலக்கிய புத்தகங்களோ தத்துவ புத்தகங்களோ நீங்கள் எழுதிய புத்தகங்களோ இருக்க போகிறது... இதை எவர் வாங்குவார்கள்...அதை நீங்கள் நினைப்பது போல நாங்கள் திருடர்களாகவே இருந்து எடுத்து சென்று விலைக்கு போட்டாலும் ஒரு வேளை உணவு எங்களால் நிம்மதியாக உண்ண முடியாத அளவுக்கு வரியை வாரி இறைத்து எங்கள் வயிற்றின் சூட்டில் குளிர் காயும் அரசாங்கம் உள்ள நாட்டில் உங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களால் எங்கள் பசிக்கு கூட உதவ முடியாது... நாங்கள் இங்கே ஒரு பத்து பேருக்கு மேல் இருக்கிறோம்... அது சரி நீங்கள் எங்கோ வேறு உலகத்தில் வாழ்பவர் போல பேசுகிறீர்கள்.. நீங்கள் இந்த நாட்டின் பிரஜை தானே என்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் கேட்டான்..

அதற்கு அந்த எழுத்தாளர் ஆம் நான் இந்த நாட்டின் வரிக்கு உதவ முடியாத பிரஜை என்று நகைச்சுவையாக சொல்லி விட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று தான் வாசித்து வந்த புத்தகத்தின் மீதி பக்கங்களை வாசிக்க தொடங்கினார்...

வந்தவர்கள் ஒன்றும் புரியாமல் அப்ப நாங்க வரோம் சார் என்றார்கள்... ம்ம்... போகும் போது அந்த கதவை கொஞ்சம் நன்றாக சாத்தி விட்டு செல்லுங்கள் இன்னும் எவரும் உங்களை போல வந்து விட போகிறார்கள்... எனது வாசிப்பு தடை பட்டால் எனக்கு பிடிக்காது என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு அந்த புத்தகத்தில் வாசிக்க மூழ்கினார்...

#ஒருஇலக்கியவாதியும்

#அந்த நடுநிசி மனிதர்களும்.

#கதையாக்கம்இளையவேணிகிருஷ்ணா.

அந்த சராசரி கிறுக்கர்களுக்கிடையே ...


தினமும் எதையோ நினைத்து 

ஓடிக் கொண்டிருக்கும் 

அந்த சராசரி கிறுக்கர்களுக்கிடையே 

வாழ்ந்து விடுவது 

அவ்வளவு எளிதல்ல!

அவர்களை அப்படியே 

ரசித்து வேடிக்கை பார்த்து 

அவர்கள் நிலையையும் 

என் நிலையையும் ஒப்பிட்டு 

எதையோ எனது தாள்களில் 

கிறுக்கி ஆறுதல் தேடிக் கொண்டு 

அந்த காலத்தின் நிழலில் 

கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு 

நான் பாட்டுக்கு 

சாலையில் 

போவோர் வருவோரை 

பார்த்துக் கொண்டே 

எதையோ ரசித்து 

ஹம் செய்து கொண்டு 

மன சாந்தி அடைகிறேன் 

இதையும் அங்கே பல வாழ்வை 

புரிந்துக் கொண்டதை போல நடித்து 

பேய் போல 

திரிந்துக் கொண்டிருக்கும் 

கிறுக்கர்கள் எனை பைத்தியம் என்று 

சொல்லி நகைக்கும் போது தான் 

கோபத்திற்கு பதிலாக 

பலம் கொண்ட மட்டும் சத்தமாக 

நான் சிரித்து வைத்ததில் 

அந்த காலமே 

அதிர்ந்து எனை நோக்கி 

ஓடோடி வந்து என் காலடியில் வீழ்ந்தது!

#சராசரி #கிறுக்கர்கள்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/08/24/வெள்ளிக்கிழமை.

புதன், 21 ஆகஸ்ட், 2024

பெரும் ஆராவாரத்தோடு பயணிக்கும் காலத்தின் கிளைகளில்...

 


பெரும் ஆராவாரத்தோடு 

பயணிக்கும் காலத்தின் 

கிளைகளில் 

சற்றே சிறகு நனைந்து 

சிறு தூறலை ரசித்து 

இளைப்பாறும் சிறு பறவை நான்...

அதோ அங்கே சாலையில் 

பெரும் நெரிசலுக்கிடையே

பொருளோடு கூடிய பயணம் என்று 

நினைத்து ஏமாந்து 

உணர்வற்ற இயந்திரம் போல

ஓடிக் கொண்டே இருக்கும் 

பல தரப்பட்ட மனிதர்களின் 

அந்த பெரும் ஓட்டத்தை 

அந்த கிளையில் இருந்து 

பெரும் ஆச்சரியத்தோடு 

வேடிக்கை பார்த்து 

மெய் மறந்து 

இருக்கும் போது 

என் சிறகில் பட்டு 

தெறித்து விழுந்த அந்த துளியில் 

அங்கே என்னை ஒத்த உணர்வுடைய மனிதன் 

எனை அண்ணாந்து பார்த்து 

மெல்லிய புன்னகையில் 

எனக்கு கையசைத்து செல்கிறான்...

எங்கள் இருவரின் பெரும் அன்பின் 

உயிரோட்டத்தில் 

இந்த கால வெள்ளமும் 

கொஞ்சம் நெகிழ்ந்து 

களிப்படைந்து கரைகிறது...

#காலவெள்ளம்

#இளையவேணிகிருணா.

நாள் 22/08/24/வியாழக்கிழமை.

நேரம் காலை 7:37.

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

வாழ்வென்பது யாதெனில்...

 


லௌகீக வாழ்வில் ஏதோ சாதித்து விட்டதாக குதூகலிப்பவர்களுக்கு தெரியாது அவர்கள் எப்போதும் பிச்சைக்காரர்களே என்று...

ஒரு கலைஞன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து உள் வாங்கி ஒரு கதையாக கவிதையாக எழுதுபவன்... ஓவியமாக வரைபவன் ... அவன் எப்போதும் பொக்கிஷமானவன்.. அவன் வாழ்வில் எவ்வளவு துயரங்கள் வந்தாலும் அதை அடுத்தவர்களிடம் புலம்பாமல் அதை தனது கலையாலேயே ஆறுதல் தேடிக் கொள்வான்... என்றும் உடைந்து போக மாட்டான்.. ஏனெனில் அவன் வாழ்வியல் எப்போதும் வித்தியாசமானது... ஒரு சாதாரண லௌகீக பிச்சைக்காரர்களால் புரிந்துக் கொள்ள முடியாதது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/08/24/திங்கட்கிழமை.

சனி, 17 ஆகஸ்ட், 2024

வேடிக்கை பார்க்கும் சுகத்தில்...


வேடிக்கை பார்க்கும் சுகத்தில் தான் 

இந்த பிரபஞ்சம் இயங்கிக் கொண்டு 

இருக்கிறது மிகவும் உற்சாகமாக...

ஒரு மனிதனின் துக்கமும் இங்கே 

வேடிக்கை தான்...

நானோ அந்த இயல்புடைய

மனிதர்களின் 

அருகில் இருப்பதை தவிர்த்து 

என் கனவுகளுக்கு மெருகேற்ற 

சும்மா அப்படியே வேடிக்கை 

பார்க்கிறேன் 

அதோ அங்கே எதிர்பாராத விதமாக 

என் கனவுகள் அத்தனையும் 

சுமந்து அங்கே ஒரு கப்பல் 

மிதந்து வருகிறது...

நானோ என்னையும் மறந்து 

மூழ்கி போகிறேன் 

அந்த கப்பலின் பிரமாண்டத்தை 

பார்த்து...

அந்த கப்பலோ

என் கனவுகளை கரையில் 

இறக்கி விட்டு விட்டு 

என்னையும் வாரியணைத்து 

இந்த பிரபஞ்சத்தை

சுற்றிக் காட்ட பேரன்போடு 

பயணிக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா

#நாள்18/08/24/ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

காலமும் நானும் நிதியமைச்சரும்...


 நீ அனைத்தையும் 

இழந்து விட வேண்டும் என்று 

காலம் எனக்கு கட்டளையிட்டு 

கேட்டு கொண்டது...

அதனால் என்ன இழந்து விட்டால் 

போயிற்று என்று 

சொல்லி விட்டு 

ஆமாம் நான் அப்படி என்ன 

வைத்து இருக்கிறேன் இழப்பதற்கு 

என்னிடம் இருக்கும் சுவாசம் கூட 

அந்த வெற்றிடத்தில் இருந்து தான் 

எனக்கு போனால் போகிறது என்று 

கடனாக கிடைக்கிறது 

கொஞ்சம் இந்த உலகில் உள்ள 

நிகழ்வுகளை 

வேடிக்கை தான் பார்த்து விட்டு 

போகட்டுமே 

பாவம் இவள் என்று...

வேறு நீ எதை இழக்க கேட்கிறாய் காலமே...

அப்படி ஏதேனும் இருந்தால் 

நீ எனக்கு கொஞ்சம் நினைவூட்டு...

அது எங்கே இருந்து எனக்கு கடனாகவோ உபகாரமாகவோ வருகிறது என்று தெளிவுப்படுத்துகிறேன் என்றேன் கலகலவென சிரித்து 

காலமோ போதும் போதும் உனது சிரிப்பை நிறுத்து...

இதை உனது நிதியமைச்சரிடம் எவரேனும் போட்டுக் கொடுத்து விட்டால் 

நீ அதற்கு தனியாக பெரும் கப்பம் கட்ட வேண்டியதாக இருக்கும் என்றது வேடிக்கையாக...

அப்பொழுது நான் உன்னை கை காட்டி விடுவேன் ...

இங்கே வரி கட்டாமல் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் விளையாடி பெரும் சொத்தை சேர்த்து வைத்து இருக்கிறார் இந்த காலம் என்று சொல்வேன் என்றேன்...

காலமோ அடுத்த நொடியில் 

கரைந்து போனது...

#காலமும்நானும்நிதியமைச்சரும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/08/24/வெள்ளிக்கிழமை.

நமக்கு நமது வலியை மறக்க சிறந்த வழி...


பயணிப்பது ஒன்றும் 

புதிதல்ல...

எத்தனையோ யுகத்தில் 

நாம் பிறந்து பிறந்து 

பயணித்து இருக்கிறோம்...

இதோ இந்த யுகத்தில் இப்போது பயணிக்கிறோம் 

இறந்து பிறந்து 

பிறந்து இறந்து இன்னும் 

எத்தனையோ பிறவி எடுத்து 

பயணித்து கொண்டு தான் 

இருக்க போகிறோம்...

அதனால் இந்த பிறவியில் 

கொஞ்சம் புலம்பாமல் 

உற்சாகமாக தான் பயணித்து இருப்போமே...

என்ன ஆகி விடப் போகிறது...

ஈரான் யுத்தம்;ரஷ்யா ஆளுமை; சீனாவின் சூழ்ச்சி நிறைந்த திமிர்;

இந்தியாவின் வரி நிறைந்த அகங்காரம்...

இதெல்லாம் அடுத்த பிறவியிலோ யுகத்திலோ 

கிடைக்காது...

அதனால் உங்கள் சொந்த கவலைகளை விட்டு விட்டு 

கொஞ்சம் உலகத்தில் நடக்கும் விசயங்களை வேடிக்கை பார்த்து நம்மை ஆள்பவர்கள் நம்மை கொடுமைப்படுத்தி சிரிப்பதை இடது கையால் நாமும் கொஞ்சம் அகங்காரத்தோடு தள்ளி விட்டு பயணிப்போம்...

அது தான் நமக்கு நமது வலியை மறக்க சிறந்த வழி...

#வலியைமறப்போம்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/08/24/வெள்ளிக்கிழமை.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

மரணத்தின் மீது வீசப்படும் பூக்களுக்கு...

 


நேற்று காலை வரை 

அந்த ஒழுகும் வீட்டில் 

ஒண்ட வழி இல்லாமல் 

சுண்ணாம்பு பேர்ந்து விழும் 

அந்த சுவரோரமாக 

பேய் மழையின் கோரத்தில் 

இருந்து 

விடுவித்துக் கொள்ள 

கைகளை கால்களுக்கு இடையே 

முட்டுக் கொடுத்து 

நடுநடுங்கி இரவை உறங்காமல் 

உறங்கி கழிக்கிறான் அவன்...

அவன் நிலையை அக்கம் பக்கம் 

எவரும் அறியாமல் இல்லை...

கண்டுக் கொள்ள தான் மனம் 

இல்லை அவர்களுக்கு 

இரவு கழிந்தது...

மெல்ல மெல்ல விடியலின் சுவடில் 

எழுந்த 

அந்த பக்கத்து வீட்டுக்காரர் தான் 

முதலில் அலறினார்...

எல்லோரும் வாருங்கள் இங்கே 

சுவர் இடிந்து இங்கே மூர்த்தி 

இறந்து விட்டான் என்று...

அதை பார்க்க ஓடோடி வந்த மக்கள் 

ஒருவருக்கொருவர் 

பச்சாபிதமாக

பேசிக் கொண்டார்கள் 

பாவம் இரவு அவனை 

நாம் நமது வீட்டுக்கு கூப்பிட்டு 

அடைக்கலம் கொடுத்து இருக்கலாம் 

என்று ...

இங்கே மரணத்தின் மீது 

வீசப்படும் பூக்களுக்கு 

மதிப்பு இல்லை என்று 

அங்கே ஒரு முற்றும் துறந்த ஞானி 

உரக்க சிரித்துக்கொண்டே 

சொல்லி விட்டு அந்த வீதியை கடக்கிறார்...

#மரணத்தின்மீதுவீசப்பட்டபூக்கள்.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/08/24/செவ்வாய் கிழமை.

தொடர்பறுந்த அந்த அலைபேசியின் தவம்...

 


எந்த அலைப்பேசி நிறுவனத்தின் 

சிக்னலும் இல்லாமல் 

தொடர்பற்ற அந்த இடத்தில் 

எந்த இம்சையும் 

இல்லாமல் வாழ்வை 

அனுபவித்துக் கொண்டு 

பயணிக்கிறான் அவன்...

ஒரு சின்ன ஜீவனோட்ட கோடு கூட 

இல்லாமல் தொடர்பறுந்து 

உயிரற்ற ஜடநிலையில் இருந்து 

எப்போது 

என்னை மீட்டுக் கொள்வது என்று 

துடிப்படங்கி ஒரு மோன நிலையில் 

அந்த கையடக்க பையில் 

தவம் கிடந்து தனித்து கிடக்கும் 

அந்த அலைப்பேசிக்கு மீண்டும் 

எவர் உயிர் கொடுத்து 

இயங்க வைக்கும் வரம் 

கொடுப்பாரோ என்று 

இங்கே யார் அறியக் கூடும்??

#தொடர்பறுந்த இடத்தில் 

#அலைப்பேசி.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/08/24/செவ்வாய் கிழமை.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

நான் உடைந்து நொறுங்கி கொண்டு இருக்கும் மணித்துளிகளில்...

 


நான் உடைந்து 

நொறுங்கி கொண்டு இருக்கின்ற 

அந்த மணித்துளிகளில் தான் 

ஒரு சில நெகிழ்வான தருணங்கள் 

ஆறுதலாக சாரல்களாக கனத்து 

என்னை 

பேரன்பு கொண்டு

தழுவிக் கொள்கிறது...

அதில் எனது கவிதையும் ஏனோ முட்டி 

மோதி முதல் இடம் பிடித்து விட்டு 

எனை பார்த்து குழந்தை சிரிப்பு 

சிரிக்கிறது...

அந்த குழந்தை சிரிப்பிற்காக 

நான் ஆயிரம் ஆயிரம் நொடிகளை 

எனை நொறுக்கி தள்ள சொல்லி 

அழைக்கிறேன்...

ஏன் தெரியுமா...

நான் தற்போது எழுதிக் கொண்டு 

இருக்கும் கவிதை 

எனை மீட்டு எடுத்து விடும் 

என்கின்ற கோடான கோடி 

நம்பிக்கை தான்...

#எனைமீட்டெடுக்கும்எழுத்து.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

கருணையற்ற மக்களின் மனம்...


எதுவும் சுதந்திரமாக செய்ய இயலாத 

கைதியின் நிலையை 

ஒத்த வாழ்க்கையில் 

ஆயிரம் ஆயிரம் கனவுகளுக்கு 

இங்கே பஞ்சம் இல்லை...

அந்த ஆயிரம் கனவில் 

ஒரு கனவேனும் கழுவேறாமல் 

என் ஆழ் மனமெனும் மடியில் 

புதைந்துக் கொண்டு 

தப்பித்தால் கூட போதும் 

நான் இந்த ஜகத்தின் நாயகியாக 

இந்த பிரபஞ்சத்தில் 

அறிவிக்கப்பட்டு விடுவேன்...

இதோ இந்த ஜகத்தின் நாயகி 

இப்போது அதே கனவை 

நிறைவேற்ற 

போராடிக் கொண்டு 

இருக்கிறாள் என்று 

உரக்க கத்தி கூப்பாடு போடுங்கள்...

அப்பொழுதேனும் 

இந்த கருணையற்ற மக்களின் மனம் 

கொஞ்சம் இரங்குகிறதா என்று 

எனக்கு கிசுகிசுத்தேனும்

என் செவிகளுக்கு அருகில் 

சொல்லி விட்டு போங்கள்...

#ஜகத்தின்நாயகி.

#இரவுகவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

கேட்பாரற்ற நிலையில் என் நிலையை ஒத்த பொம்மை...


அந்த யாருமற்ற தெருவொன்றில் 

அநாதையாக நடந்து செல்கிறேன்...

கேட்பாரற்ற நிலையில் 

என் நிலையை ஒத்த 

பொம்மை ஒன்று 

அந்த சாலையில் 

எவரோ வீசி எறிந்து விட்டு 

சென்ற போதும் 

நிலை கலங்காமல் 

அங்கே எனை பார்த்து இலேசாக 

சிரித்தது...

அந்த சிரிப்பில் பொய்யில்லை...

ஆயிரம் ஆயிரம் 

பேரன்பு மட்டும் 

மழை சாரலாக 

பொழிந்து எனை அதனை நோக்கி 

இழுத்து சென்றது...

அதன் அருகில் சென்று 

அதை வாரியணைத்த போது 

ஏதோவொரு ஜென்ம பந்தத்தில் 

நாங்கள் இணைந்து இருந்த 

ஆழ் மன நினைவொன்று ஏனோ 

மின்னல் போல எனை ஒரு நொடியில் 

வசீகரித்து 

சென்றதை மட்டும் ஏனோ 

மறக்க முடியாமல் 

போகும் இன்னும் 

வெகு காலத்திற்கு...

இங்கே உணர்வற்ற பொம்மை என்னோடு கொண்ட பந்தத்தில் நான் அநாதை இல்லை என்று 

அந்த சாலையில் பெரும் தாண்டவம் 

ஆடியதை

பார்த்த பறவைகளும்

ஏனோ தனது சிறகை விரித்து 

வானத்தில் ஆடிய தாண்டவம் 

இங்கே எங்களை தவிர 

வேறு எவருக்கும் புரியாது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/08/24/திங்கட்கிழமை.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

எனது இளைப்பாறும் நேரம் தொலைந்த காரணம்...


சற்றே இளைப்பாற

கொஞ்சம் நேரம் கிடைத்து விடும் போது கொஞ்சம் உறங்கி 

ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம் 

தான் ...

ஏனோ அதில் மனம் செல்லாமல் ஈரானுக்கு ரஷ்யா உதவி செய்து 

அமெரிக்காவின் சித்து விளையாட்டை அடக்கி விடுமா என்று 

திடீரென்று தோன்றிய ஆர்வத்தில் 

எனது இளைப்பாறும் நேரம் 

தொலைந்து அங்கே 

பாலஸ்தீனமும் இஸ்ரேலும் 

ஹமாஸும் ஆக்கிரமித்து விடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை...

இங்கே இளைப்பாறுதலுக்கும் உலகத்தின் போக்குக்கும் 

ஏதோ சம்பந்தம் இருந்து விட்டு போகட்டும் 

ஒரு உப்பு வாங்கி சோற்றில் போட்டு சாப்பிட வழி இல்லாத தேசத்தில் இருந்துக் கொண்டு நீ ஏன் இதில் வழக்கத்தை விட ஆர்வமாக இருக்கிறாய் என்று காலம் கேட்கும் கேள்விகளுக்கு தான் விடை இல்லை என்னிடம் ....

#உலககவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்09/08/24/வெள்ளிக்கிழமை.

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

வாழ்வின் துயரங்களுக்கு இங்கே...

 


முள்ளாக குத்திக் கிழிக்கும் 

வாழ்வின் துயரங்களுக்கு 

இங்கே வடிகால் 

எதுவென்று தேடி தேடி 

அலுத்துக் கொள்ளும் போது 

எதுவோ நடந்து விட்டு போகட்டும் 

என்ற 

ஒரு எண்ணத்தில் மட்டும் 

கோடானுகோடி ஆறுதலும் 

என் முன்பு மண்டியிட்டு 

கிடப்பதை பார்த்து 

கொஞ்சமல்ல நிறைய திமிர் 

என்னோடு பயணிப்பதை மட்டும் 

என்னால் தடுக்க முடியவில்லை...

#வாழ்க்கை.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/08/24/செவ்வாய் கிழமை.

ஒரு தேநீரின் காத்திருப்பு எல்லாம்...


ஒரு தேநீரின் காத்திருப்பு 

எல்லாம் இங்கே 

புரிந்துக் கொள்ள முடியாத 

அபூர்வ பட்சிகள் எழுப்பும் 

ஸ்வரம் போன்றது..

ஸ்வரத்தை ரசிக்க 

இங்கே எவருக்கும் சங்கீத ஞானம் 

தேவைப்படுவதில்லை...

அதே போல ஒரு தேநீரின் 

சுவைக்கு இங்கே 

ஒரு தேநீர் கடை வைத்து 

இருக்க வேண்டிய அனுபவம் 

தேவைப்படுவதில்லை...

இங்கே எந்த நிகழ்வையும் 

ஒப்பீடற்ற உணர்வுகளால் அன்றி 

வேறு எதனால் 

புரிந்துக் கொள்ள இயலும்??

#தேநீரின்காத்திருப்பு.

#இளையவேணிகிருஷ்ணா.

#இரவுகவிதை.

நாள் 06/08/24/செவ்வாய் கிழமை

உயிர் விசும்பலின் ஓசை...


உயிர் விசும்பலின் ஓசையை 

அந்த நுண்ணிய காற்று 

உள்வாங்கி ஆறுதல் 

சொல்கிறது...

தேற்றுதலின் நெடியை 

அறியாத அந்த உயிர் 

கொஞ்சம் தடுமாறி தான் போகிறது...

சுற்றிக் கொண்டே இருந்து 

பழக்கப்பட்ட தேகத்தை 

திடீரென அந்த பாழடைந்த வீட்டில் 

சிறையில் இடும் போது 

ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் 

இங்கும் அங்கும் கதறி திரிந்து 

அந்த இருண்ட அறைக்குள் 

ஓடும் போது 

எங்கோ இருந்து வந்த 

அந்த தெய்வீக இசையின் 

வருடலில் அமைதியடைகிறது...

இங்கே ஒரேயொரு நுண்ணிய 

உணர்வு மட்டும் போதுமானதாக 

இருக்கிறது 

அத்தனை பாரங்களையும் 

சுக்கு நூறாக்கி இலேசானதாக 

உணர என்று 

அமைதிக் கொள்கிறது 

இந்த பாழும் மனது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:06/08/24/செவ்வாய் கிழமை

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

ஒரு காட்டாற்றின் கருணை...

 


அந்த பெரும் ராஜ்ஜியத்தின் 

அரசனின் அகங்காரத்தை 

இழுத்துச் செல்கிறது 

ஒரு காட்டாற்று வெள்ளம்...

என்றோ வெறுமனே 

வெறும் நிலத்தில் புதையாமல் 

கிடந்த அந்த சிறிய விதையின் 

அளவற்ற உயிர் தோன்றலின் 

நம்பிக்கையை மட்டும் 

மறந்து விடாமல் கை பிடித்து 

அழைத்து புதைத்து சென்று 

விடுகிறது 

அதே காட்டாற்று வெள்ளம்...

ஒரே நிகழ்வின் இருவேறு விதமான 

விசித்திர 

இந்த நிகழ்வை 

கொஞ்சமும் சலனப்படாமல் 

பெரும் அமைதிக் கொண்டு 

வேடிக்கை பார்க்கிறது 

நம்மை சூழ்ந்த அந்த பரந்து விரிந்த வானம்...

#ஒருகாட்டாற்றின்பயணம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 05/08/24/திங்கட்கிழமை.

தடம் மாறிய நதியென்று இங்கே எதுவும் இல்லை ...

தடம் மாறிய நதியென்று இங்கே 

எதுவும் இல்லை...

தன் பயணத்தின் சூட்சமத்தை 

ஒரு போதும் அது மறப்பதும் 

இல்லை...

இங்கே பலராமரை போல 

மது அருந்திய மயக்கத்தில் 

ஒரு நதியின் பாதையை 

மாற்றி விடலாம் தான்...

தன் சுயத்தை மறக்காத 

அந்த நதியின் வழி தடத்தில் 

காத்திருக்கும் ஆயிரம் ஆயிரம் 

கூழாங்கற்கள் 

ஒரு மௌன சாட்சியாக 

காட்டிக் கொடுத்து விடும் 

அது மட்டுமல்ல ...


அந்த நதியை தேடி உருண்டோடி 

அணைத்துக் கொள்ள துடிக்கும் 

அந்த கூழாங்கற்களின் 

பெரும் காதலின் ...

சுவாசத்தின்...

 உருண்டோடும் 

ஓசையை இங்கே 

அந்த நதியை தவிர 

மற்றவர்களுக்கு 

வெறும் இரைச்சலாக தான் 

அறியக் கூடும் அல்லவா?

#கூழாங்கற்களின்காதல்.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/08/24/ஞாயிற்றுக்கிழமை.

வாழ்தல் எளிதினும் எளிது தான்...

 


சிறகொடிந்த பறவைக்கு பறக்க 

அதிகாரம் இல்லை என்று இங்கே 

எவரும் சொல்லி விட முடியாது...

பரந்த வானத்தை கொஞ்சம் 

அது கழுத்து உயர்த்தி 

பார்த்தால் போதும்...

ஆயிரம் யானையின் பலத்தை 

அது காற்றில் பெற்றுக் கொண்டு 

வானத்தில் ஆனந்தமாக சுற்றி வரும்...

இங்கே எவரும் எவரின் 

தைரியத்தையும் அவ்வளவு எளிதாக 

பறித்து விட முடியாது என்று 

உணருங்கள் ...

வாழ்வின் ஆழ்ந்த 

தாத்பரியத்தை 

உணர்ந்து 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 

பயணிப்பது எளிது...

இங்கே வாழ்தல் 

எளிதினும் எளிது தான்...

தேவையில்லாத சுமைகளை

அந்த வாழ்வெனும் நதியில் 

மிதக்க விட்டு விட்டு 

நாம் நாம் பாட்டுக்கு பயணிக்க 

துவங்கும் போது...

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 04/08/24/ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

இயற்கையும் நாமும்...


இந்த இயற்கை 

ஏதோவொரு வகையில் 

சமநிலைப் படுத்திக் கொண்டு 

நிச்சலனமாக

பேரமைதியான நதியாக 

பயணிக்கிறது...

நாம் தான் சமநிலை இல்லாத 

அல்லது சமநிலைக்கு 

பழக்கப்படுத்த தெரியாத மனதை 

வைத்துக் கொண்டு 

பெரும் சலனத்தோடு பயணிக்கிறோம் 

ஒரு காட்டாறு போல...

#காலைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் #ஆடி18.

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

அந்த அங்காடி தெருவில் நான்...


அந்த அங்காடித் தெருவில் சம்பந்தமே 

இல்லாமல் நுழைந்து விட்டேன்...

அங்கே பல பேரின் 

உரையாடலை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்...

இது இதெல்லாம் இல்லை என்றால் எனது வாழ்வே சூனியம் ஆகி விடும் என்ற போக்கில் பேச்சு போனது 

அங்கே பல பேரிடம்...

அதை கேட்டு விட்டு 

நான் சத்தமாக சிரிப்பதை பார்த்து விட்டு 

அங்கே பல பேரின் முகங்கள் 

எனை திரும்பி பார்த்த விதம் 

ஏதோ வேற்று கிரக வாசி வந்து விட்டதை போல...

எல்லோரும் எனை சூழ்ந்துகொண்டு 

கேள்வி கணைகளால் 

என்னை துளைத்தெடுக்கும் போது 

கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா என்றேன் 

ஒரு பெரும் கோபத்தோடு...

இங்கே எனக்கான தேவை

என்று ஒன்றேயொன்று 

அதுவும் எனக்கு பிறந்ததிலிருந்து கிடைத்து விடுகிறது...

அதுவும் இலவசமாக...

இந்த பிரபஞ்சத்தில் இருந்து 

விலகி விடும் வரை 

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்கும்...

எனது குறுகிய தேவையை நான் பட்டியலிடாமலேயே இயற்கை எனக்கு பேரன்போடு கொடுத்து உபசரித்து விடுகிறது...

குறிப்பாக எந்த ஜிஎஸ்டி வரியும் இல்லாமல் வாழ்வது எப்படி என்று எனக்கு இயற்கை கற்றுக் கொடுத்து விட்டது ...

இனி எல்லாம் பேரின்பமே 

என்ன எனை மன்னித்து விடு தேசமே என்று மிகவும் எளிதாக சொல்லி விட்டு 

அந்த அங்காடி தெருவில் இருந்து லாவகமாக வெளியேறுவதை பார்த்து 

எனை சூழ்ந்துக் கொண்ட கூட்டம் தன்னையும் அறியாமல் எனக்கு வழி விட்டு ஸ்தம்பித்து நிற்கிறது...

#அந்த #அங்காடித்தெருவில்நான்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/08/24/வியாழக்கிழமை.

சூட்சம வாழ்வின் எச்சத்தையும்...

 


எப்படியோ ஒரு நாள் 

நிம்மதியாக சந்தோஷமாக 

வாழ நினைக்கும் மனதிற்கு 

சேர்த்து வைத்து ஒரு நாளில் 

வாழ நினைக்கும் அந்த நாள் 

எந்த நாள் என்று 

கேட்டு அடிக்கடி கேள்விகளால் 

துளைத்தெடுக்கும் 

ஆழ் மனதிற்கு சொல்ல தான் பதில் 

இல்லை என்று நினைத்தேன்...

ஆனால் அந்த நாளே 

பூகம்பத்தில் அழிந்து 

இருந்த சுவடு கூட இல்லாமல் 

போக போகிறது என்று தெரியாமல் 

ஓடிக் கொண்டே இருக்கிறேன் 

நான் என் சூட்சம வாழ்வின் 

எச்சத்தையும் துவம்சம் 

செய்துக் கொண்டு...

#சூட்சமவாழ்வின்எச்சம்.

#இளலயவேணிகிருஷ்ணா.

நாள் 01/08/24/வியாழக்கிழமை.

காலை சிந்தனை ✨

இனிமையான  இந்த காலைப்பொழுது  உங்களுடைய புதிய  உற்சாக நிகழ்வுக்கான  தொடக்கம் ... இன்பமும் துன்பமும்  நம் மனதில் விளைந்த கற்பனை  அதை கொஞ்சம் வ...