ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 31 ஜூலை, 2025

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில் நான்...


அந்த தேடல் இப்போது 

அவசியம் தான் என்று 

தோன்றுகிறது...

நீ பயணிக்கும் அந்த பெரும் காட்டில் 

நானும் சத்தம் இல்லாமல் 

பயணிக்கிறேன்...

உன்னை தொந்தரவு செய்ய 

தோன்றாத இந்த பயணத்தில் 

நான் உன்னோடு 

உனக்கு தெரியாமல் 

எவ்வளவு தூரம் 

எவ்வளவு காலம் பயணிப்பேன் 

என்று நிர்ணயம் செய்ய முடியாது!

நிர்ணயம் செய்ய முடியாத 

இந்த விசயத்தை நான் 

நேசிக்கிறேன்...

அதில் பெரும் காதல் 

சத்தம் இல்லாமல் 

தீப்பிடித்து எரிகிறது!

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:01/08/25

வெள்ளிக்கிழமை.


ஒரு விதையின் பயணம்...


எத்தனை நாள் தான் இப்படியே மறைந்து மூச்சடக்கி வாழ்வது 

என்று கேட்கும் விதைகளின் சூட்சம பாஷையை கூர்மையாக கேட்டு 

நிலம் கடத்தி விடுகிறது 

அந்த கருமேக கூட்டத்தில்...

அதுவோ எங்கெங்கோ சிதறி கிடந்த மேகக் கூட்டத்தை கூட்டி 

உயிர் பிச்சை இட்டதில் 

நிலமெனும் தாயும் 

விதை எனும் சேயும் நிம்மதி பெருமூச்சு அடைவதை பார்த்து 

அங்கிருந்த கருணை நெஞ்சம் கொண்ட விவசாயி ஆறுதல் அடைகிறார் கண்களில் வழிந்த ஆனந்த கண்ணீரை துடைக்க மனமில்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:01/08/25/

வெள்ளிக்கிழமை.



அந்த பெரும் மழையும் குடையும் பெரும் காதலும்


இன்றைய எதிர் பாராத பெரும் மழையில் நனைந்துக் கொண்டே நான் வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தேன்... இந்த நேரத்தில் எந்த பேருந்தும் வராதது வேறு பெரும் சோர்வாக உணர்ந்தேன்..வண்டியை பழுது பார்க்க விட்டதால் இந்த சோதனையில் மாட்டிக் கொண்டேன்... பேருந்து வரும் வழியை தான் காணோம்.. பெரும் மழையோ மேலும் மேலும் என்னை சாரலாக பேருந்து நிறுத்தத்தில் பதம் பார்த்து அழகு பார்த்தது மட்டுமல்லாமல் பெரும் காற்றும் சேர்ந்துக் கொண்டு என்னை மேலும் சோதனைக்குள்ளாக்கியது..

என் கையில் இருந்த குடையை மேலும் இறுக பிடித்துக் கொண்டு பேருந்து வரும் திசையில் கவனம் செலுத்தினேன்... இந்த மழை நின்று விட்டால் நன்றாக இருக்கும்... இந்த மழை அந்த மழை நாளில் அவளோடு நான் சந்தித்து இதே குடைக்குள் எங்கள் பேரன்பை பெரும் மௌனத்தோடு பகிர்ந்து கொண்ட நாளை,சந்திப்பை மேலும் மேலும் ஞாபகப்படுத்தி என்னை காயப்படுத்திக் கொண்டு இருந்ததை இங்கே பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகளோ அல்லது இந்த பேருந்து நிழற்குடையோ அல்லது இதோ எனை நனைத்து பதம் பார்த்துக் கொண்டு இருக்கும் இந்த பெரும் மழையோ ஞாபகம் வைத்துக் கொண்டு இருந்தால் தானே இந்த பெரும் காயத்தில் இருந்து நான் தப்பிக்க இயலும் என்று நினைக்கும் போதே என் கையில் இருந்த குடை அப்போது அடித்த பெரும் காற்றில் களவாடிப் போனதில் நான் திகைத்து நின்றேன் சற்றே... அந்த ஒரு நொடி தான் தாமதித்தேன்... அந்த குடையை கைப்பற்ற நான் சாலையை கடந்து செல்ல முனைந்தபோது சில பல வாகனங்கள் நான் சாலையை கடந்து செல்ல நீட்டும் கையை உதாசீனப்படுத்தி வேகமாக கடந்து சென்றதில் என்னையும் அறியாமல் சில கண்ணீர் துளிகள் தெறித்து விழுந்து அந்த மழையில் கரைந்து காணாமல் போனது... நான் சற்று நிதானித்து கடந்து சென்று அந்த குடையை காணாமல் சற்று திகைத்து நின்றேன்... அங்கே ஒரு பெண் அந்த குடையை எடுத்து மடக்கிக் கொண்டு எனக்கு எதிர்புறமாக திரும்பி நின்றுக் கொண்டு எவருடனோ பேசிக் கொண்டு இருந்தாள் சற்றே அந்த குடையை திருப்பி திருப்பி பார்த்தபடி... நான் வேகமாக ஓடி அந்த குடையை அவள் கையில் இருந்து சற்றும் பொதுவெளி என்று வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் பறித்துக் கொண்டு 

அவளை கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து மீண்டும் அதிர்ந்து நின்றேன்..இவள் இவள் என்று யோசிக்கும் போதே அவளும் சற்றே அதிர்ந்து என்னை பார்த்தாள்... நீங்கள் நீங்கள் என்று யோசித்து கிருஷ்ணா என்று வாய் விட்டு சொல்லி என் அருகில் மிகவும் நெருக்கமாக வந்தாள்..அதே வாசம் எப்படி மறக்க முடியும் இந்த வாசத்தை என்று நினைத்து ஆம் நான் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு பெரும் பிரயத்தனப்பட்டு நகர முயன்றேன்...அவளோ சற்று நில்லுங்கள் என்றாள்.ஏன் என்றேன் புரிந்தும் புரியாமல் நான் யார் என்று உங்களுக்கு ஞாபகம் இல்லையா என்று கேட்டாள்...தெரியும்..நீ யார் என்று தெரியும்..இந்த குடை உன் அருகில் வந்து இல்லை என்றால் நீ எப்படி என்னை ஞாபகம் வைத்து இருப்பாய்..நீ மறந்தாலும் நானும் இந்த குடையும் மறக்க மாட்டோம் அன்றொரு நாள் இதே பெரும் மழைக் காலத்தில் இதே குடை சாட்சியாக நாம் பகிர்ந்து கொண்ட பெரும் நேசத்தின் பகிர்வை...நமது பெரும் காதலின் சின்னமாக என்னோடு மழைக்காலம் தவறாமல் பயணிக்கும் இந்த குடையின் பெரும் நேசத்தையும் நான் தொலைத்து விடக் கூடாது என்று தான் இதன் பின்னே ஓடி வந்தேன்...வேறு எதுவும் நான் உன்னை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்பவில்லை..

இந்த பத்து பதினைந்து வருட பெரும் கால இடைவெளியில் என் பெரும் காதலின் துயரத்தை அடிக்கடி அசைப்போடுவதற்காகவே பல நேரங்களில் இந்த பெரும் மழை பெய்கிறது என்று நினைத்துக் கொள்வேன்... மற்ற படி வேறெதுவும் பெரிதாக பாதித்து விடாதபடி என் அன்றாட நிகழ்வுகளை வகுத்து கொண்டு எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்வை நகர்த்தி செல்கிறேன்.. சரி நான் செல்கிறேன் என்று திரும்பிய என்னை பார்த்து அவ்வளவு தானா என்று அவள் கேட்ட குரலின் விசும்பலில் நான் சற்றே நெகிழ்ந்து திரும்பி பார்க்க தான் நினைத்தேன்.. ஆனால் இனி எதுவும் ஆகி விடப் போவதில்லை... அவள் ஞாபகமாக என்னோடு பயணிக்கும் குடையின் நழுவுதலையே என்னால் ஜீரணிக்க முடியாத போது இவள் தற்போது பயணிக்கும் கதையை கேட்டு அந்த பெரும் துயரத்தின் வெப்பத்தை தணிக்க இன்னும் எத்தனை நீண்ட பெரும் மழை பெய்ய வேண்டுமோ என்று நினைத்தேன்.. அப்படியே அந்த பெரும் மழை பெய்தாலும் என்னுள் கனன்று சுழன்று என்னை பதம் பார்த்துக் கொண்டு இருக்கும் அக்னியின் 

ஜூவாலையை அணைக்க முடியுமா என்ன என்று நினைத்துக் கொண்டே அவ்வளவு தான் என்று சற்று விறைப்போடு சொல்லி விட்டு வேகமாக அந்த குடையை விரித்து சாலையை கடந்து செல்கிறேன் எவ்வளவு கஷ்டப்பட்டும் நிறுத்த முடியாமல் என் கண்களில் இருந்து கடகடவென்று வழிந்த 

கண்ணீரை துடைக்க மனமில்லாமல் நான் எனது பேருந்து நிற்கும் நிழற்குடையை தஞ்சம் அடையவும் அங்கே வெகுநேரமாகியும் அவரது பேருந்து வராமல் காத்திருந்த பயணி ஒருவர் என்னை பார்த்து என்ன சார் குடை கிடைத்து விட்டதா என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.. நானும் சற்றே சிரமப்பட்டு சிரித்து ஆமாம் சார் கிடைத்து விட்டது ஆனால் வேறொரு துயரம் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது என்று சொல்ல நினைத்து குடை கிடைத்ததை மட்டும் சொல்லி விட்டு நான் அந்த குடையை மடக்கி எனது பைக்குள் வைக்க முயன்ற போது அவள் அந்த குடையை பிடித்த அந்த இடத்தின் வெப்பத்தை மட்டும் உணர்ந்தேன் இந்த குளிர் நிறைந்த பொழுதிலும்...இதோ நான் பயணிக்க காத்திருக்கும் பேருந்து வரவும் நான் அதில் ஏறிய போது நான் எப்போதும் விரும்பும் சன்னலோர இருக்கை

வெகு நாட்களுக்கு பிறகு 

இன்று மிகவும் இயல்பாக கிடைத்ததில் மனதிற்குள் நான் சிரித்துக் கொண்டேன் .. எதுவுமே இங்கே நாம் விரும்பும் நேரத்தில் கிடைக்காமல் என்றோவொரு நாள் கிடைத்து ஒன்று பெரும் துயரப்படுத்தும் அல்லது பெரும் மகிழ்வை தரும் .. இந்த இரண்டிற்கும் நடுவில் நாம் பயணிக்கும் இந்த வாழ்வின் பயணமும் பேருந்து பயணமும் ஏறத்தாழ ஒன்று தானோ என்று நினைத்து... சன்னல் வழியாக வேடிக்கை பார்க்கும் போது அங்கே இரு பறவைகள் சிறகை நனைத்த மழைத்துளியை நழுவ விட்டுக் கொண்டே காற்றில் அதன் காதலை பறி கொடுத்து விடக் கூடாது என்று சிறகை விரித்து ஒன்றோடொன்று உரசி பயணிக்கும் அழகை ரசிக்க தொடங்கும் போது மேகங்கள் விலகி அந்த அந்திமாலை சூரியன் மெல்ல மெல்ல ஒளியை இலேசாக உமிழ்ந்து தன் இன்றைய பணியை முடித்த திருப்தியில் மேற்கு திசையில் மறைய துவங்கவும் நான் எனது நிறுத்தம் இறங்கவும் சரியாக இருந்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 31/07/25/

வியாழக்கிழமை.


புதன், 30 ஜூலை, 2025

அவிழ்படாத முடிச்சு...


எந்தவொரு அவிழ்படாத முடிச்சுகள் எல்லாம் எனக்கு பெரிய சிரமத்தை கொடுத்து வாட்டி வதைத்தது போல தான் இதுவும் என்று நான் நினைத்து வாழ்வின் பயணத்தை தொடர்கிறேன்..

எதுவுமே எளிதில் இங்கே கிடைப்பது அரிது என்று தெரிந்த போதும் ஏன் இந்த மனது இப்படி குழம்பி தவிக்கிறது என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன்... மேலதிகாரியின் இன்றைய யாரோவொருவரின் மேல் இருந்த குமுறல்கள் எல்லாம் என் மீது வடிந்ததில் இன்றைய அவரது மனம் இலேசாகி என் மனதின் அடி ஆழம் வரை சென்று பாரத்தை அதன் பங்கிற்கு ஏற்றி சிம்மாசனமிட்டு உட்கார்ந்து என்னை பார்த்து சிரித்தது...

இருக்கட்டும் இருக்கட்டும்... அதற்கும் என் மீது அளவுக்கடந்த பிரியம் இருப்பதை இதை விட வேறு எப்படியும் உணர்த்தி விட முடியாது தானே...

இப்படியே யோசித்துக் கொண்டே எனது புல்லட்டில் அந்த சன நெருக்கடிக்களுக்கு இடையே பயணித்தேன்...சாலையோ என் ஆக்ரோஷமான பயணத்தின் வலியை தன் மீது இவன் இறக்குகிறானே என்ன செய்வது என்று மௌனமாக தன் வலியை பொறுத்துக் கொண்டது...

போவோர் வருவோர் எல்லாம் என் வேகத்தை பார்த்து கொஞ்சம் மிரண்டும் திட்டியும் சென்றார்கள் என்பதை நான் உள்ளுணர்வு சொல்லி உணர்ந்துக் கொண்டேன்...

எதுவாகவோ இருந்து விட்டு போகட்டும்.. எனக்கான ஆறுதல் இங்கே எதுவும் இல்லை என்று முடிவான பிறகு எதன் மீதும் அவ்வளவு பரிவு எனக்கு தோன்றி விடக் கூடாது என்று நினைத்து மனதை கல்லாக்கி கொண்டேன்...

ஏன் இந்த வாழ்க்கை என்று நினைத்த போதும் நான் அவ்வளவு எளிதாக வாழ்வை வெறுப்பவன் அல்ல என்பதும் என் மனதின் ஒரு மூலையில் ஒரு எண்ணம் ஒதுங்கி பயணித்ததை மட்டும் என்னால் உணர முடிந்தது..

இத்தனை புலம்பல்களும் ஏன் என்று இங்கே வாசிப்பவர்கள் கேட்கலாம்... அதற்கான காரணம் இந்த கடவுள் போட்ட முடிச்சு என்கின்ற பெயரில் எனக்கு வாய்த்த வாழ்க்கை துணை தான் காரணம்...

வாழ்வின் ரசத்தை அவளால் எப்படி உணர முடியாமல் பயணிக்க முடிகிறது என்று நான் அடிக்கடி கேட்ட கேள்வியின் துளையை கேட்க சகிக்காமல் என்னை விட்டு பிரிந்து சென்று நேற்றோடு ஒரு வாரம் ஆகிறது... போனால் போகட்டும் என்று நான் பாட்டுக்கு எனது பணிகளை பார்த்து கொண்டு இருந்தாலும் விடாமல் அலைபேசியில் தொந்தரவு செய்து அவள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்வின் சுவைக்கு என்னை மாற்ற முயற்சி செய்து வருவதை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை... மேலும் வெறுப்பு அவள் மீது ஏற்படுத்தி விடுவதை அவள் ஏன் உணர மாட்டேன் என்கிறாள் என்று யோசித்து முடிக்கவும் எனது இல்லம் வரவும் சரியாக இருந்தது... நான் எனது புல்லட்டை நிறுத்தி விட்டு சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று மின் விளக்கிற்கு உயிர் கொடுத்தேன்.. திடீரென வந்த வெளிச்சத்தின் கூச்சத்தில் நெளிந்து வேகமாக சுவரின் மீது நகர்ந்து ஒண்டிக் கொண்டது அங்கே புணர்ந்து கிடந்த இரு பல்லிகள்..

இதை பார்த்து விட்டு கொஞ்சம் எனது கோபத்தை குறைத்து கொஞ்சம் நிதானத்திற்கு வந்து மின் விசிறியை சுழல விட்டு அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து கண்களை மூடினேன்.. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை.. அழைப்பு மணியின் சத்தத்தில் எழுந்து கதவை திறந்தபோது என் வாழ்க்கை துணை அங்கே நின்று என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தாள்... நானும் எதுவும் பேசவில்லை...

அவள் உள்ளே நுழைந்ததும் என்னிடம் இரவு உணவு என்ன செய்யலாம் என்று எதுவும் நடக்காதது போல கேட்டாள்... நானும் குளிர் சாதன பெட்டியில் உள்ள நானே அரைத்து வைத்திருந்த இட்லி மாவை அவளிடம் எடுத்து வந்து கொடுத்து இட்லி ஊற்றி பூண்டு சட்னி செய்து விடலாமா என்றேன்.. அவளும் அதையே தான் யோசித்து இருந்தாள் போலும்.. ஒரு புன்முறுவலோடு சிரித்து அந்த மாவை இட்லியாக்க ஆயத்தமானாள்... நானும் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளை பார்க்க தயாரானேன்...

வாங்க கிருஷ்ணா சாப்பிடலாம் என்று அவள் இயல்பாக அழைத்ததில் தான் எத்தனை ஆயிரம் ஆயிரம் வாஞ்சை கள் என்று உணர்ந்துக் கொண்டு நான் சாப்பிட ஆயத்தமானேன்... நாங்கள் இருவரும் சேர்ந்து சாப்பிடுவதை அங்கே சுவரில் ஒண்டி இருந்த அந்த பல்லிகள் இரண்டும் பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்ததில் ஒரு காரணம் இருந்தது...இனி இவன் அலுவலகத்தில் இருந்து கதவை வேகமாக திறக்க மாட்டானே என்ற நிம்மதியாகவும் அது இருக்கலாம்..எது எப்படியோ கடவுளின் முடிச்சு எப்போதும் அவிழ்படாமலேயே என்னோடு பயணிக்கும் போது தான் நான் அதன் தாத்பரியத்தை உணர முடிகிறது என்று நினைத்து நிம்மதியாக உறங்க செல்வதற்கு முன் அந்த இறைவனுக்கு நன்றி சொன்னேன்...

#இளையவேணி கிருஷ்ணா

நாள்:31/07/25/வியாழக்கிழமை

புதன், 23 ஜூலை, 2025

மர்ம வீடு பாகம் (1)


அந்த மர்ம வீட்டின் முற்றத்தில் எப்போதும் பசுமையான தலையாட்டிகாற்றை ரசிக்கும் மரமொன்று இருந்தது... அங்கே பல அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வதாக மக்களால் நம்பப்பட்டு வந்தாலும் நான் அங்கே தான் வசிக்க ஆயத்தம் ஆனேன்.. ஏன் என்று நீங்கள் கேட்டால் நான் சொல்லும் பதில் உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாதாக தான் இருக்கும்.. ஏனெனில் அந்த மரத்தின் அற்புதமான படர்ந்து விரிந்து இருந்த வசீகரம் மட்டும் அல்ல... அங்கே எப்போதும் குடிக் கொண்டு இருக்கும் பலவிதமான பறவைகள்... அதன் வாழ்வியல் என்று கூட சொல்லலாம்.தற்போது இருக்கும் பரபரப்பான வாழ்வியல் சூழலில் சலித்து கொஞ்சம் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நான் வசிக்க வேண்டும் என்று நினைத்தபோது தான் இந்த வீடு பற்றிய தகவல் கிடைத்தது... உடனே நீங்கள் கேட்கலாம்..நீ மனநிலை பிறழ்வு உடையவரா என்று.. ஆமாம் என்று தான் வைத்துக் கொள்ளுங்களேன்.. உங்கள் பார்வையில் நான் மனநிலை பிறழ்ந்தவர் தான்... நான் குடியேறி தற்போது சில நாட்கள் ஆகிறது.. ஆனால் அங்கே இந்த மக்கள் குறிப்பிட்டதை போல எல்லாம் ஒரு அமானுஷ்ய நிகழ்வுகளும் நடந்ததாக எனக்கு தெரியவில்லை.. நான் எனது அன்றாட பணிகளில் எந்தவித தொந்தரவும் இல்லாமல் வாழ்ந்து வந்தேன்... அந்த வீட்டிற்கு சொந்தமாக காணி நிலம் ஒன்றும் இருந்தது... அந்த நிலத்தோடு தான் இந்த வீட்டையும் எனக்கு வசிக்க விட்டார்கள்.. அந்த நிலத்தை கொஞ்சம் சீர்திருத்தம் செய்து காய்கறி செடிகள் நடலாம் என்று திட்டமிட்டு அதை உழுது தயாராக வைக்க இன்று ஆளை கூப்பிட வேண்டும் என்று நினைத்து தற்போது எனது காலைப் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறேன்...இதோ முடிந்தது.. பசியும் என்னை கொஞ்சம் கண்டுக் கொள்ளேன் என்று உரிமையோடு சிணுங்கியது..காலை உணவாக தயாரித்து வைத்து இருந்த இட்லியும் அதற்கு தொட்டுக் கொள்ள வெங்காய சட்னியும் தட்டில் போட்டு எடுத்துக் கொண்டு அந்த மரத்தின் அடியில் உள்ள கல்லுக் கட்டில் அமர்ந்து மிகவும் நிதானமாக ரசித்து ருசித்துக் கொண்டே அந்த பறவைகளின் அற்புதமான குரலில் உரையாடலையும் கேட்டு ரசித்தேன்..என்ன அற்புதமான உலகம் இந்த இறைவன் படைத்து வைத்து இருக்கிறான்.. இந்த அற்புதத்தை தவற விட்டு விட்டு எங்கே இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக நினைத்தபடியே நான் சாப்பிட்டு முடிக்கவும் அங்கே நான் எதிர்பார்த்த உழவுக்கு டிராக்டரோடு ஆள் வரவும் சரியாக இருந்தது..என்ன அம்மா சாப்பிடுகிறீர்களா என்று கேட்டார் அந்த மனிதர்.. ஆமாம் சாப்பிட்டு முடித்து விட்டேன்.. வாருங்கள் நீங்களும் சாப்பிடலாம் என்றேன்... அவர் சிரித்துக்கொண்டே அதெல்லாம் வேண்டாம் மா.. நான் முதலில் உழவை முடித்து விட்டு வருகிறேன்.. பிறகு தங்களது உணவை ருசி பார்க்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.. நானும் சரி என்று ஆமோதித்து தட்டை கழுவி வைத்து விட்டு அவரோடு பேசிக் கொண்டே கழனிக்கு நடந்தேன்... 

அடுத்த நிகழ்வில் சந்திப்போம்...

அந்த மர்ம வீட்டில் நேயர்களே 🙏.


திங்கள், 21 ஜூலை, 2025

எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு என்ன


எலிசபெத் மகாராணி வாழ்வில் சிறுவயதில் பாதித்த நிகழ்வு அவரை தீர்க்கமான முடிவை எடுக்க வைத்தது அது என்ன என்று கீழேயுள்ள லிங்கில் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் நேயர்களே 🙏 

https://youtu.be/Wq6LbQHDvMY?si=g-P3Vm3ECgpK2AZL


உயிர் நாடி சிறுகதை//


அந்த பச்சை வயல்வெளியை

பேருந்து பயணத்தில் நான் 

கடந்து செல்லும் போது 

அன்று என்னிடம் இருந்த 

என் வயலில் 

உழைத்து களைத்த 

காளை மாட்டின் சத்தம் 

இன்னும் என் காதில் 

ஒலித்துக் கொண்டே இருக்கிறது...

இன்றோ நான் விற்ற வயலை 

அதே பேருந்து பயணத்தில் கடக்க 

நேர்ந்த போது 

அங்கே காணும் காட்சியில் 

டிராக்டர் உழும் சத்தத்தில் 

என் உயிர் நாடி சற்றே சில நொடிகள் 

அடங்கி போக 

என்னையும் அறியாமல் 

என் கண்களில் தாரை தாரையாக 

நீர் வழிந்தபோது 

என் அருகில் இருந்தவர் 

என்னாச்சு என்று ஆறுதலாக 

கேட்டபோது நான் சுதாரித்து 

கண்களை 

துடைத்துக் கொண்டு 

ஒன்றும் இல்லை ஐயா என்று 

சொல்லியபடியே பேருந்தை விட்டு 

இறங்கி அங்கிருந்த 

பயணியர் இருக்கையில் சற்றே 

ஆறுதலாக அமர்ந்தேன்...

என் வலியை சமிக்ஞையால்

உணர்ந்த ஏதோவொரு 

பறவையொன்று 

நான் அமர்ந்து இருந்த 

இருக்கை 

அருகே உள்ள மரத்திலிருந்து 

சற்றே சிறகை சிலிர்த்து எழுந்து 

தன் சிறகாலே என்னை மிருதுவாக 

வருடி கீச் கீச்சென்று 

என் காதருகே பேசி ஏதோ 

ஆறுதல் செய்ய முயன்றதில் 

மீண்டும் என் கண்களில் கண்ணீர்...

அந்த பறவையின் எச்சத்தை 

அங்கே வேகமாக வந்த 

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 

என்றோவொரு நாள் வரும் 

மழைத்துளிகளின் ஸ்பரிசத்தை 

ஸ்பரித்து சிலிர்த்து எழ காத்திருக்கும் 

ஒரு விதையின் சிறு முனகலின் 

வலியை நான் உணர்ந்ததை போல 

அதில் பயணித்த பயணிகளின்

செவிகளை எட்டி இருக்க 

நியாயமில்லை ...

மீண்டும் மீண்டும் 

என் கண்களில் வழியும் கண்ணீரை 

அங்கே இருந்த மரங்களும் ,

செடி கொடிகளும் செய்வதறியாது 

திகைத்தது...

அங்கே மழைக்கான

அறிவிப்பாக பறந்து திரிந்த 

தட்டான்களும் சற்றே 

என் சோகத்தை கடக்க முடியாமல் 

மௌன சாட்சியாக அங்கேயே 

என்னை விட்டு அகலாமல் என்னை 

சுற்றி சுற்றி பறந்ததை 

பெரும் வியப்போடு 

போவோர் வருவோர் பார்த்து 

கடந்து செல்கிறார்கள்...

அவர்களுக்கோ அது வியப்பு..

எங்களுக்கோ அது நுட்பமான 

உயிரை உருக்கும் வலி என்று 

அவர்களுக்கு யாரேனும் 

புரிய வைக்க முயற்சி 

செய்யுங்களேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:21/07/25/திங்கட்கிழமை.



வெள்ளி, 18 ஜூலை, 2025

சிறுகதை உலகம்: கட்டெறும்பு கனைக்கிறது..


வணக்கம் பேரன்பு கொண்ட நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் வளர்கவி கோவை அவர்களின் அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்ட குடும்ப கதையை வாசித்து இருக்கிறேன்.. வழக்கம் போல தங்களது மேலான பேராதரவு தந்து கருத்துக்களை கதையை கேட்டு விட்டு பதியுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் 🎉 🎻 ✨.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு மகிழலாம் நேயர்களே 🎉 🙏 🤝 

https://youtu.be/WhP9qjY-9AM?si=M15iOMtNpRYMmfRm

சிறுகதை உலகம்//ஆனந்தம்


வறுமையின் பிடியில் சிக்கிய ஒரு பள்ளி சிறுவனின் உருக்கமான கதை நேயர்களே 🙏🎉🎻.

கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉 🙏 🎻 

https://youtu.be/0lOM7F62jrc?si=6VsBOWFDz5mQh-FL

புதன், 16 ஜூலை, 2025

அந்த இருவரின் குணங்களும்...

எப்போதும் என் தவறுகளை

தன் நிர்மலமான 

புன்னகையால் 

குழந்தையும் தெய்வமும் 

மன்னித்து ஒருவர் பார்வையாலேயே 

அரவணைக்கிறார்...

இன்னொருவரோ 

தன் செயல்களாலே 

ஒரு குறுஞ்சிரிப்பை காட்டி

எனது காலை 

கட்டிக் கொள்கிறார்...

இந்த குணங்கள் இல்லாமல் தான் 

நான் பொழுது விடிந்து 

பொழுது மறையும் வரை 

எவர் எவருடனோ சண்டை போட்டு 

என் மனதை குப்பையாக்கி எதுவுமே 

நடக்காதது போல 

சென்று விடுகிறேன்...

மனமோ தான் போட்ட 

அன்றைய அந்த 

சண்டை குப்பைகளை 

வெளியேற்ற முடியாமல் 

அதனுள் அழுந்தி மூச்சடக்கி 

சாக கிடக்கும் போது 

நான் கொஞ்சம் என் உள்ளுணர்வால் 

அங்கே எட்டிப் பார்த்து 

மூர்ச்சையாகி கிடப்பதை 

அந்த சாலையில் 


போவோர் வருவோர் 

எல்லாம் 

வெறுமனே வேடிக்கை பார்த்து 

கலைந்து செல்வதை 

என்னை நேசிக்கும் காலம் 

கண்ணீர் வடித்து 

பெரும் மௌனத்தோடு 

என்னை 

அடக்கம் செய்கிறது...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:17/07/25/வியாழக்கிழமை.

செவ்வாய், 15 ஜூலை, 2025

அந்த குழந்தையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள்..


அந்த பேருந்து நிறுத்தத்தின் அரசு இயந்திரம் இயக்கிய காணொளி மூலமாக ஒலித்துக் கொண்டே இருந்தது அரசின் சாதனை திட்டங்கள் மற்றும் இனி வரும் சாதனை சார்ந்த விஷயங்கள் பற்றி தம்பட்டம் அடித்துக் கொண்டே இருந்தது அதிகமான சத்தத்தோடு...

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் சில பேர் அதை வேண்டா வெறுப்பாக பார்த்தார்கள்..பல பேர் அங்கே அப்படி ஒரு காணொளி போய்க் கொண்டு இருக்கிறது என்கின்ற பிரஞ்ஞை கூட இல்லாமல் தமது ஊருக்கான பேருந்து வராதா என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் மிகவும் சலிப்போடே...

என்னை போன்ற சொற்ப மனிதர்கள் மட்டுமே அதை கண்டும் காணாமல் அதில் லயித்தும் லயிக்காமல் போவோர் வருவோரை எல்லாம் சற்றே நிதானமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தோம் ...

விஞ்ஞானம் கையில் வந்து விட்ட காலத்தில் கூட இந்த பெரும்பாலும் கண்டுக் கொள்ளாத அல்லது கண்டுக்கொள்ள மனம் இல்லாத விசயங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை இப்படி அரசு இயந்திர விளம்பரங்களுக்காக செலவு செய்கிறார்களே என்கின்ற ஆதங்கம் என்னை போன்ற அரசியல் பார்வையாளர்களுக்கு இருந்தது...

ஆனால் அந்த ஆதங்கம் எந்தளவுக்கு எல்லோருக்கும் இருக்கிறது அப்படியே இருந்தாலும் அதனால் நமது வரிப் பணத்தை குறைக்க போகிறார்களா என்ன... ஒன்றும் ஆகப் போவதில்லை... நமக்கு கொஞ்ச நேரம் இரத்த அழுத்தம் அதிகமாவது தான் மிச்சமாக இருக்கும் இல்லையா இப்படியே யோசித்துக் கொண்டு இருக்கும் போது எனதருகே ஒரு பெண்மணி தோளில் சிறு குழந்தையை போட்டுக் கொண்டு அமர்ந்தார் அந்த பேருந்து நிறுத்தத்தில்... அந்த குழந்தைக்கு வாகாக பார்க்கும் திசையில் அந்த காணொளி இருந்தது... அதில் வரும் மனிதர்கள் மற்றும் ஆராவாரங்கள் அந்த குழந்தைக்கு ஏதோ ஒரு வேடிக்கை காட்டுவதாகவே இருந்தது.. இமைக் கொட்டாமல் தன் பசியை மறந்து அழுகையை மறந்து அந்த காணொளியை தன்னை மறந்து லயித்து பார்த்துக் கொண்டு இருந்தது அந்த தாயிற்கு சற்றே ஆறுதல் தந்ததில் நான் மக்கள் வரிப்பணம் வீணாவதை சற்றே மறந்தேன்..அதுவரை அழுது ஆர்ப்பாட்டம் செய்துக் கொண்டு  இருந்த தனது குழந்தைக்கு ஏதோவொரு ஆறுதல் எது கொடுத்தது என்று சற்றே திரும்பி பார்த்து சற்றே சலிப்படைந்தாலும் சிறிது ஆறுதலும் அடைந்தார் என்பதை தவிர அந்த காணொளியை அங்கே பலவிதமான உணர்வுகளை பிரதிபலித்தில் அந்த குழந்தையின் கள்ளம் கபடமற்ற சிரிப்பை ரசித்துக்கொண்டே இருக்கும் போது நான் போகும் பேருந்து வந்தது... நான் சற்றே அந்த காணொளியை திரும்பி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்கிறேன்...இனி இன்னும் அங்கே அநேக பேருக்கு அந்த காணொளி பலபேருக்கு மீண்டும் பலவிதமான உணர்வுகளை கடத்தினாலும் அந்த குழந்தையின் சிரிப்பின் சுவடில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்து சற்றே சிரிப்போடே பயணித்தேன் எனது ஊருக்கு செல்லும் பேருந்தில்.....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:16/07/25/புதன்

கிழமை.


திங்கள், 14 ஜூலை, 2025

வாழ்வின் வண்ணக் கோலமாக...


வாழ்வின் வண்ணக்கோலமாக

நீ என் காதல் நெஞ்சில் இதுவரை 

மிளிரினாய்...

ஏனோ இன்று நான் போட்ட 

காதல் வண்ணங்களை கலைத்து 

அலங்கோலத்தின் 

சுவடுகளை மட்டும் 

விட்டு விட்டு வண்ணங்களை 

சிதறடித்து என் காதலை 

கழுவி செல்கிறாய்...

உன்னோடான பிரியத்தை 

நான் அந்த கலைந்து போன 

வண்ண கோலத்தில் தேடி 

அலைகிறேன் 

நான் செய்த பாவம் என்ன 

என் கண்மணியே...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/07/25/செ

வ்வாய்கிழமை.

பெரும் மௌனதிரளில் மூழ்கி...


இன்றைய அலைபேசியின்

அத்தனை எனக்கான தரவுகளையும் 

சரிபார்த்து 

முடித்த பின்பும் நான் 

ஏதோவொரு சோர்வோடு 

உறங்க போகிறேன்...

உள்ளங்கையில் உலகமென 

உலகத்தின் அத்தனை 

விஷயங்களும் 

நான் எங்கே சென்றாலும் என்னோடு 

பிரயாணம் செய்தபோதும் 

என் கேள்விக்கான பதிலாக

உன் குறுஞ்செய்தி 

என் அலைபேசியில் இல்லாத 

வெறுமையை பூர்த்தி 

செய்யாத போது 

உலகம் என் உள்ளங்கையை 

பெரும் பிரயத்தனப்பட்டு

மென்மையான பூக்களால் 

அலங்கரித்து என்ன 

ஆகி விடப்போகிறது என்று 

நான் இந்த உலகத்தை 

கேள்வி கேட்க ...

இந்த உலகமோ 

பெரும் மௌன திரளில் மூழ்கி 

என்னிடம் இருந்து தப்பிக்க 

பார்க்கிறது...

நான் என் செய்வேன்

சொல் என் பெரும் காதல் நெஞ்சமே...

#இளையவேணிகிருஷ்ணா

நாள்:14/07/25/திங்கட்கிழமை.

14/07/25/திங்கட்கிழமை.

ஞாயிறு, 13 ஜூலை, 2025

அந்த சொற்பமான நொடிகளில்...


அந்த சொற்பமான நொடிகளில் 

எந்த சுவடும் இல்லாமல் 

தாம் வந்து சென்ற தடயம் இல்லாமல் 

அழித்து விட்டு 

மணலில் வீடு கட்டி

விளையாடிய சிறுமி 

தாமே அதை கலைத்து விட்டு 

மகிழ்ந்து கைகொட்டி 

குதூகலம் அடைவதை போல 

என் கனவுக்குள் பிரகாசமாக 

அதிவேகமாக பிரவேசித்து 

பிறகு நீ எங்கோ மறைந்து 

போகிறாய் என் இனிய காதல் 

கனவே...

நீ எங்கே சென்றாய் என்று 

இந்த பிரபஞ்சத்தின் 

மூலைமுடுக்கெல்லாம் விடாமல் 

தேடி அலைந்து களைத்து அமைதி அடைகிறேன் நான் 

உன் கனவின் சுவடை 

எந்த நதியிலும் கரைக்க மனம் இல்லாமல்...

#இளையவேணி கிருஷ்ணா 

நாள் 14/07/25

அலமாரியில் உறங்குபவன் -இலக்கியம்


அலமாரியில் உறங்குபவன் வேற்று நாட்டு இலக்கியவாதிகளின் இலக்கியம் பற்றிய எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பார்வையில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் 🙏 💫 🎉.

https://youtu.be/IFHMYOVt89w?si=hGtb0TzG3k_NC-TQ

சனி, 12 ஜூலை, 2025

வீடு பற்றிய தொலைநோக்கு சிந்தனை டென்னிஷ் அரக்கல் பார்வையில் 🎉

 


வீடு பற்றிய தொலைநோக்கு சிந்தனை டென்னிஷ் அரக்கல் பார்வையில் கேட்டு மகிழுங்கள் நேயர்களே... கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🎉🙏🎻.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சி கேட்கலாம் 🙏💫🎉

https://youtu.be/qQ1k3kQcgVU?si=d66Npin8S3W9yVII

வெள்ளி, 11 ஜூலை, 2025

அந்த மயானத்தில் பேரமைதியில்...

 


அந்த மயான அமைதியில் தான் 

பேரமைதி கொண்ட பூக்கள் 

அவிழும் ஓசையை கேட்க முடிகிறது...

அந்த மயானத்தில் 

எப்போதும் வசித்து வந்த 

குயிலும் கூட தன் குரலை 

காற்றோடு கலந்து விடாமல் இருக்க 

சற்றே மெனக்கெடலோடு அடக்கி 

அந்த பூக்கள் அவிழும் ஓசையில் 

லயித்து கிடக்க 

அங்கே அன்று தான் வந்த 

காற்றற்ற உடலும் கொஞ்சம் 

சிலிர்த்து அடங்கியதில் 

புரிந்துக் கொண்டேன்

அந்த பூக்களின் பெரும் சக்தியை...

அதுவரை அந்த மயானத்தின் 

ஒரு மூலையில் பெரும் அமைதியை 

கைக்கொண்டு இவற்றை எல்லாம் 

கவனித்து வந்த இயற்கையை 

பெரும் காதலோடு 

நேசித்து வந்த நான்...

#இளையவேணி கிருஷ்ணா

நாள் 11/07/25/

வெள்ளிக்கிழமை.

வியாழன், 10 ஜூலை, 2025

அந்த அமைதியான பூங்காவனத்தில்...

 

அந்த அமைதியான 

பூங்காவனத்தில் தான் 

அந்த புழுதி படிந்த காட்டாற்று 

வெள்ளம் 

ஆயிரம் ஆயிரம் குப்பைகளை சுமந்து 

அந்த பூங்காவனத்தை 

ரணமாக்கி நகர்ந்தது!

ஏனோ அது வரை 

அந்த பூங்காவனத்தின் 

பேரழகை ரசித்தவர்கள் சிறிதும் 

இரக்கமின்றி 

எல்லோரும் சிதறி ஓட 

நான் மட்டும் அதுவரை 

அந்த பூங்காவனத்தில் 

அனைவரையும் வசீகரித்த 

பூக்களின் சிதைந்து போன

இதழ்களை சேகரித்து 

கைகளில் ஏந்தி அமைதியாக 

அந்த நீர் சூழ்ந்த பூங்காவனத்தின் 

ஒரு சிறு மூலையில் 

அஞ்சலி செலுத்துவதை 

அங்கே அந்த பூங்காவனத்தில் 

இதுவரை அடைக்கலம் ஆகி இருந்த 

பறவைகள் 

என்னை சுற்றி சுற்றி 

பேரன்பின் அலையை 

செலுத்தி வருவதை 

இந்த பிரபஞ்சம் வேடிக்கை 

பார்க்கிறது அந்த சூனியமான

பேரமைதியினை பருகிய படி...

#இளையவேணி கிருஷ்ணா.

நாள்:11/07/25/வெள்ளிக்கிழமை

சிறுகதை உலகம்//மணமகன் -சிறுகதை 🎉


இன்றைய சிறுகதை உலகம் 

நிகழ்ச்சியில் மணமகன் -சிறுகதை 🎉

எழுத்தாளர் #சந்திராமனோகரன்.

#குரலாக்கம்:

இளையவேணிகிருஷ்ணா🎉 

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🙏 🎉 🎻.https://youtu.be/qye8SudCRlY?si=dOAjzLE6zq1Nzpy0

புதன், 9 ஜூலை, 2025

#சிறுகதைஉலகம்//நூறு நகல் மூளைகள்

 


சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் இன்று அறிவியல் புனைவு சுவாரஸ்யமான கதையை கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🙏🎉🎻.

கீழேயுள்ள லிங்கில் கதையை கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🎻https://youtu.be/ccm0wACeJfE?si=OYMzj4vWskWx88DJ

புதன், 2 ஜூலை, 2025

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

 


வணக்கம் நேயர்களே 🎻🙏 

இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏 🎉 🎻.

https://youtu.be/_APGhVcREJE?si=AB6ZpXRtJzLHfJZk

செவ்வாய், 1 ஜூலை, 2025

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️ (8)


எல்லாம் எனக்கு தெரியும் என்று 

நான் நினைப்பதுமில்லை!

எதுவுமே தெரியாது என்று 

நான் நினைப்பதும் இல்லை!!

இரண்டிற்கும் இடைப்பட்ட இடத்தில் 

நான் ஒரு சிறு துளியாக

இந்த பிரபஞ்சத்தில் மிதக்கிறேன்!

எதை நான் அறிந்துக் கொள்ள 

வேண்டுமோ அதை என்னை 

உள்ளிருந்து ஆட்டுவிக்கும் 

இறைவன் தக்க நேரத்தில் 

எனக்கு தெரிவிப்பான்...

இதை தவிர பெரிதாக 

இந்த உலகியலில் நான் 

பெருத்த ஈடுபாடு கொண்டதில்லை...

இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:02/07/25/புதன்கிழமை

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...