ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 டிசம்பர், 2025

விடை பெற காத்திருக்கும் ஒரு வருடத்தின் பயணத்தில் நானும் எமது நிகழ்வும்...2025

 


#கடந்து செல்ல #காத்திருக்கும் இந்த ஆங்கில வருடத்தின் #பயணம் #2025:-

இந்த வருடத்தின் சாதனை கூகுள் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது தான்... மற்ற படி இந்த வருடம் நான் வழக்கமாக கொடுத்து வந்த வானொலி ஒலிபரப்பு சேவை கடுமையான சூழல் (தந்தை தாய் உடல் நலன் காரணமாக)காரணமாக தொடர்ந்து கொடுக்க இயலவில்லை..

ஆனால் அதற்கு பதிலாக சிறுகதைகள் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...

கவிஞர்களை சிறப்பிக்கும் வகையில் அப்போதைக்கு அப்போது எமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்தேன்..

கதைகள் மற்றும் சில நிகழ்வுகள் எமது சேனலில் வாசித்து இருக்கிறேன்...

மற்ற படி இந்த வருடம் எனது இயல்பான கலைப் பயணத்தை கொஞ்சம் பதம் பார்த்தது என்பது தான் உண்மை...

மற்ற படி நிறைய பயணங்கள் செய்தேன்...

இந்த டிசம்பர் மாதத்தில் பத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக அலைபேசி வேலை செய்யாமல் அதை அப்படியே விட்டு விலகி அந்த தருணத்தை ரசித்தேன்...

அதுவும் மிகவும் அற்புதமான தருணம் தான்...

எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு செய்து கொண்டு இருக்கும் போதே விலகி இருக்கவும் என்னால் முடியும் என்பதை நான் உணர்ந்த தருணம் என்று சொல்வேன்...

எது எப்படியோ மீண்டும் எமது ஒலிபரப்பு சேவையை நான் தொடங்கி பல புதிய கவிஞர்களை சிறப்பிக்க வேண்டும்...

மற்ற படி நான் நானாக இருப்பதில் எனக்கு எந்த இடையூறும் இல்லாமல் காலம் என்னை அற்புதமாக நகர்த்தி செல்கிறது கொஞ்சம் ரசனையோடே...🙌👣😉❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/25.

இன்றைய தலையங்கம்//வெற்று ஆராவாரங்கள் இளைஞர்களின் உரிமையை மீட்டெடுக்குமா?


 #இன்றைய #தலையங்கம்:- இளைஞர்களை நல்வழியில் கொண்டு செல்லும் களத்தில் பொதுமக்கள்:-

மக்களாகிய நாங்கள் கேட்டு கொள்வதெல்லாம் இளைஞர்களை மோசமான போதை சீரழிவில் இருந்து காப்பாற்றுவது தான்...

தமிழகத்தின் தற்போதைய தேவை அது மட்டுமே...

தமிழக மக்கள் தற்போது இது பற்றிய சிந்தனையோடு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய #முதல்வர் அவர்களே...

ஒட்டுமொத்த இளைஞர்கள் சீரழிந்து விட்ட பிறகு இங்கே எந்த உரிமையை நீங்கள் மீட்க போராடுகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்...

தமிழ் நாட்டின் பராம்பரியம் கலாச்சாரம் எல்லாமே போய் விட்டது..

தற்போது அதை மீட்டெடுக்க போராடுங்கள்...

ஒரு நல்லாட்சி என்பது அனைத்தையும் (அதாவது மக்களின் நலன்களை) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்...

வெற்று கூச்சல் கேட்டு கேட்டு நாங்கள் சலித்து விட்டோம் என்று சொல்வதை விட சோர்ந்து விட்டோம்...

நீங்கள் கல்விக்காக ஆசிரியர் ஊதியத்திற்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால்...

அதனால் எது எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

எதுஎதை மிகவும் அமைதியாக அதே சமயத்தில் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...

வெறும் வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை...

திருத்தணியில் நடந்த சம்பவம் உங்கள் உடன்பிறப்புகளுக்கே நிச்சயமாக மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை..

தேவை தற்போது அரசாங்கத்திற்கு சுய பரிசோதனை...

இந்த ஆண்டின் இறுதி பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்து உங்களுக்கு கரும் புள்ளியை திடீரென வாங்கி கொடுத்து இருக்கிறது என்று நினைக்காதீர்கள்...

இது போதை வஸ்துக்கள் நெடுங்காலமாக சமூகத்தில் புரையோடியதன் விளைவுகள் தான் இப்படி பெரும் பூதமாக கிளம்பி இருக்கிறது...

இதற்கு முழு முதற் காரணம் போதை வஸ்துக்கள் மாநிலத்தில் எங்கேயும் உலவாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் விட்டது தானே காரணம்...

தமிழ் நாட்டில் #இரவு #எட்டு மணிக்கு பிறகு பொதுமக்கள் சாலையில் போகவே அஞ்சுகிறார்கள்... அதுவும் #கிராமம் உட்பட..இது பற்றி நான் முன்பே ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறேன்...

இது பற்றி இனியேனும் அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/25.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

இன்றைய தலையங்கம்:சமுதாயத்தை கட்டமைப்பது யார் பொறுப்பு?


#இன்றையதலையங்கம் :-

#சமுதாயத்தை #கட்டமைப்பது #யார்?மிகவும் அருவருக்கத்தக்க சமுதாயத்தை உருவாக்குவதில் எப்போதும் நமது பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்... கல்வி என்பதற்கு முன்னால் சுய ஒழுக்கம் முக்கியம் என்பதை மறந்து நெடுநாட்களாகிவிட்டது என்பதற்கு அடையாளமாக தான் திருத்தணி சம்பவம்...

கேரளா சினிமா பாருங்கள்... நமது சினிமாவையும் பாருங்கள்...

சமுதாய நிகழ்வை பெரும்பாலும் வெட்டு குத்து என்று வளர்த்தெடுத்த சினிமாவை கொஞ்சம் கூட கத்தரிக்காமல் அங்கீகாரம் கொடுத்தது யார் என்று யோசித்து பாருங்கள்..

இளைஞர்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எத்தனை சதவீத பெற்றோர்களுக்கு அக்கறை இருக்கிறது? எல்லாவற்றையும் பணத்தால் மதிப்பிட நாம் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம்...

முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள் என்று பெற்றோர்கள் பள்ளிகளில் போய் சொல்லி இருக்கிறார்களா?

இல்லை அவர்கள் தான் தமது பிள்ளைகளை கண்டித்து இருக்கிறார்களா..

இங்கே மிகவும் தரம் தாழ்ந்த சமுதாயத்தை கட்டமைத்து விட்டு அரசியல்வாதிகளையும் அனுமதித்து விட்டு மீண்டும் நாம் அதே சமுதாயத்தையும் நாமே பணத்தை வாங்கிக் கொண்டு கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அரசியல்வாதிகளையும் தேர்ந்தெடுத்து விட்டு அதை பார்த்து நாமே குறை கூறுவது நமது முகத்தில் நாமே உமிழ்ந்து கொண்டதற்கு நிகரானது...

இனியேனும் இளைய தலைமுறையினரை நாம் மோசமான பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க பெரும் பிரயத்தனங்கள் செய்வோம்...

அனைவரும் கூடி இளைய சமுதாயத்தை ஒழுக்க நெறியில் மீட்டெடுக்க நமது வீட்டில் இருந்து தொடங்குவோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/12/25.

#இன்றையதலையங்கம்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

நெடுஞ்சாலை வாழ்க்கை..


 விவேகா ஒரு அற்புதமான இளம் வயது பதினான்கு வருடம் நிறைந்த சிறுமி... பெற்றோர் இறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் சுற்றி திரிந்த அந்த சிறுமியை அந்த வயதான கிழவர் தான் பராமரித்தார்... அவரும் வீட்டினரால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த குழந்தை...

அவர் அந்த நெடுஞ்சாலையில் சிறிய அளவில் கைத்தறி துண்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருபவர்..

ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு போதுமானதாக இருந்தது என்று சொல்லி விட முடியாது என்றாலும் அந்த நெடுஞ்சாலையில் விலையுயர்ந்த கார்களில் போவோர் எவராகிலும் இவரிடம் கைத்தறி துண்டு வாங்கிக் கொண்டு உணவு வாங்க காசும் கொடுத்து விட்டு போவார்கள்...அதை வைத்து தான் அவர் தினசரி வாழ்வும் சென்றது...

ஆனால் அவருக்கு துண்டு தினமும் விற்பனை செய்து தீர்ந்து விடும்.. ஏனெனில் அவரது சிரித்த முகமே அவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவ மனிதர்களை இறைவன் அனுப்பி வைத்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்கிறார்களே அது இவருக்கு முற்றிலும் பொருந்துவதாக இருந்தது...

மேலும் அந்த விவேகாவின் முகமும் கள்ளம் கபடம் இல்லாமல் இருந்ததால் இருவருக்கும் பணத்தை கொடுத்து விட்டு போவார்கள் ஒரு சிலர்..

விவேகா தாத்தா இந்த பணத்தை கொடுத்து சாப்பிட என்ன உங்களுக்கு வாங்கி வரட்டும் என்று ஆவலாக கேட்பாள்..

இவரோ உனக்கு என்ன பிடிக்குதோ வாங்கி வா தாயி... என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..

அவளும் சரி தாத்தா என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்து அருகில் உள்ள சிறிய ஹோட்டலில் தோசை ஆளுக்கு மூன்று என்று கட்டிக் கொண்டு ஓடி வந்து வேகமாக பிரித்து சாப்பிடுங்கள் தாத்தா என்று சொல்லி விட்டு அவருக்கு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைப்பாள்..

அவர் சாப்பிடுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கும் போது தாத்தா அவளை பார்த்து நீ சாப்பிடு தாயி.. உனக்கு பசிக்கல என்று கேட்பார் வாஞ்சையாக...

இல்லை தாத்தா.. நீங்கள் சாப்பிட்டவுடன் சாப்பிடுகிறேன் என்று சொல்லி கொண்டே உங்களுக்கு இன்னும் ஒரு தோசை வைக்கட்டுமா என்று தனது தோசை பார்சலை பிரிப்பாள்.. இல்லை தாயி.. இதுவே போதும்..நீ சாப்பிடு என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..

அந்த சிறுமியும் சிரித்துக்கொண்டே சரி சரி தாத்தா என்று தலையாட்டி விட்டு தனது பார்சலில் உள்ள தோசையை ஆவலாக சாப்பிடுவாள்...

இப்படி தான் அவர்கள் தினசரி பொழுதுகள் போனது... கைத்தறி துண்டுகளை நெடுஞ்சாலையில் போவோரிடம் விற்பனை செய்வதும் அந்த வருமானத்தை சேகரித்து ஒரு பக்கம் துண்டுகளை வாங்கி விற்பதும் மறு பக்கம் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதுமாக இருந்தது...

துண்டு விற்பனை செய்வதற்கு இடையே இருவரும் பல கதைகளை பேசிக் கொண்டு இருப்பார்கள்..

அங்கே இருந்த பாலத்தின் அடியில் தான் இருவரும் உறங்குவார்கள்... தற்போதைய குளிர் காலத்தில் அவர்களுக்கு உதவியது அங்கே ஒரு நாள் எந்த புண்ணியவானோ கொடுத்த ஸ்வர்ட்டர்..

மீதம் உள்ள கைத்தறி துண்டுகள் அடங்கிய பையை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி போவார்கள்...

இங்கே எளியவன் வதைப்பட்டு கொண்டு கொசுக் கடியில் கிடக்க அங்கே நாட்டை ஆள்பவர்கள் நேரத்திற்கு ஒரு உடை மாற்றி அழகு பார்ப்பது மற்றும் இந்த நிலையில் இருக்கும் மக்கள் வாழும் பகுதிகளை எவரேனும் அயல் தேசத்து அரசர் வந்தால் தட்டிகள் வைத்து மறைப்பதும் இந்த நாட்டில் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் நடக்கும் செயல்கள்...

இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல அரசியல் பேசும் ஒரு கூட்டம்.. இதற்கு அவர்கள் வாங்கி வந்த தலையெழுத்து என்று ஒரு கூட்டம்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

எது எப்படியோ இந்த நாட்டில் அவர்களும் ஒரு பிரஜைகள் என்பது எழுதப்படாத சட்டம்.. பாம்பை அடித்து பரணில் போட்டால் ஒரு உதவும் என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. அதைப் போல அப்போதைக்கு அப்போது அதான் இந்த தேர்தல் வருகிறது இல்லையா.. அந்த நிகழ்வுகளில் கூட்டம் காண்பிக்க இந்த மனிதர்களை கூப்பிட்டுக் கொள்வார்கள்... ஆனால் அவர்களுக்கு ஓட்டு உரிமை இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் நினைக்கிறேன்.. ஏனெனில் அவர்களுக்கு சொல்லி கொள்ள முகவரி இல்லையே.. மேலும் இவர்கள் ஓட்டு போட்டு தான் அவர்கள் ஆட்சி அதிகார கட்டிலில் அமர வேண்டும் என்று விதி ஏதும் இல்லையே.. அதற்கு தான் பல்வேறு வழிகள் இருக்கிறதே...

சரி இந்த ஏழைகளுக்கு அரசியல் எதற்காக.. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு யாரையோ நம்பிக் கொண்டு இருக்கும் போது...

சரி அதை விடுங்கள்..

இதோ இங்கே விடிவதற்கு தயாராக இருக்கிறது இயற்கை..

வழக்கம் போல தாத்தா தான் முதலில் எழுந்தார்.. பக்கத்தில் சிறுமியை காணவில்லை... எங்கே என்று விவேகா விவேகா என்று குரல் கொடுக்கிறார்.. ஆனால் அவளை காணவில்லை..

தாத்தா மனம் அந்த அதிகாலையில் கருக்கென்று இருந்தது..இன்று நான் இவ்வளவு அசதியாக உறங்கி விட்டேனே என்று வேகமாக எழ முயற்சி செய்கிறார்.. அவசரத்தில் கீழே விழுகிறார்.. மீண்டும் தட்டு தடுமாறி எழுந்து இங்கும் அங்கும் வேகமாக போகிறார்.. அந்த சிறுமியின் பெயரை உச்சரித்துக் கொண்டே...

அவள் அங்கே அந்த கார் அருகில் நின்று கொண்டு அதிகாலை வேளையில் கைத்தறி துண்டிற்கு விலை பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அவர்கள் அதை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விட்டு இவளை பற்றி விசாரிக்கிறார்கள்.. இவளும் தனது கதையை சுருங்க சொல்லி தன்னோடு ஒரு தாத்தா இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் சாலையின் மறு பக்கத்தில் நிற்பதை பார்த்து விட்டு தாத்தா அந்த சாலையை கடக்க முயல்கிறார்..

அவளை அடைந்து விட்டார் ஒரு வழியாக..ஏம்மா இந்த குளிரில் இப்படி வந்து நிற்கிறாய்... பிறகு விற்பனை செய்து கொள்ளலாம் அல்லவா என்று அவள் கையை பிடித்துக் கொண்டார்..இதை எல்லாம் கவனித்து வந்த அந்த காரில் இருந்த மனிதர்.. தாத்தா உங்கள் தாத்தாவா என்று கேட்கிறார்கள்.. இவளும் ஆமாம் இவர் எனது தாத்தா என்று சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்துக் கொள்கிறாள்..

அவர்கள் அந்த பெரியவரிடம் உங்கள் பேத்தியை நாங்கள் கூட்டிச் சென்று படிக்க வைக்கிறோம் என்று சொல்கிறார்கள்.. அதை கேட்ட தாத்தாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அந்த சிறுமி உடனே இல்லை இல்லை வேண்டாம்.. நான் உங்களோடு வர மாட்டேன்.. நான் வந்து விட்டால் தாத்தா மிகவும் சிரமமாக உணர்வார் என்று சொல்கிறாள்..நீ படித்து பெரிய ஆளாக வந்தால் தானே உங்கள் தாத்தாவிற்கு பெருமை என்று சொல்லி பார்த்தார்.. இல்லை இல்லை வேண்டாம்.. எனக்கு எந்த பெருமையும் வேண்டாம்.. நான் தாத்தாவோடு இருப்பதை தவிர இந்த உலகத்தில் எந்த பெருமையும் இல்லை என்று சொல்லி விட்டு வேக வேகமாக தாத்தா கையை பிடித்துக் கொண்டு வாங்க தாத்தா போகலாம் என்று சொல்லி சாலையை கடக்க முயல்கிறாள்..

அதை பார்த்த அந்த மனிதருக்கு ஏதோ பொறி தட்டுகிறது.. இந்த முகத்தை எங்கோ பார்த்து இருக்கிறேனே.. சட்டென்று நினைவு வந்தவராக பெரும் குரலெடுத்து அழுகிறார்... இப்படி ஒரு நல்ல மனிதரை இந்த நெடுஞ்சாலையில் தவிக்க விட்டு விட்டேனே என்று...

திடீரென காரை அந்த நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு அப்பா அப்பா என்று ஓடுகிறார்.. அவர்கள் இவர் கூப்பிவது காதில் விழாத தூரத்திற்கு சாலையின் மறுபக்கத்தில் சென்று விட்டார்கள்.. அவரோ இவர்களை சந்திக்க வரும் ஆவலில் அங்கிருந்து வெகு வேகமாக வந்த காரின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்...இதை உள்ளுணர்வில் உணர்ந்து கொஞ்சம் திரும்பி பார்க்கிறார்கள் தாத்தாவும் அந்த சிறுமியும்...

அந்த நிகழ்வை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நிற்கிறாள் அந்த சிறுமி..

அந்த பெரியவரோ என்னம்மா ஆச்சு...என்று சிறுமியை உலுக்கிய உலுக்கில் தாத்தா அவர் அங்கே பாருங்கள் என்று கையை நீட்டி சொல்கிறாள்...

அவரோ தினமும் இப்படி ஏதோவொரு நிகழ்வு இந்த நெடுஞ்சாலையில் நடந்து விடுவது கொடுமை மா..நீ அதை பார்க்காதே...வா நமது இடத்திற்கு போய் விடலாம் என்று அந்த சிறுமியை பாதுகாப்பாக கையை பிடித்துக் கொண்டு போகிறார்.. அங்கே அவர்கள் எப்போதும் இருக்கும் இடத்தில் ஒரு நாய் படுத்து இருக்கிறது...

அதை விரட்ட இருவருக்கும் மனம் இல்லாமல் அதன் அருகில் அமர்ந்து கொண்டார்கள்... சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த சிறுமி திடீரென தாத்தா ஏன் தாத்தா நல்லவர்களை இறைவன் சோதிக்கிறார் என்று கேட்கிறாள்..

அதற்கு அவரோ தெரியலையே மா...ஏதோ காரணம் இருக்கும்.. சரி அதை விடு தாயி..

சூரியன் மேலே வந்து விட்டான்.. தனது மெல்லிய சுருக்கு பையில் உள்ள பணத்தை கொடுத்து இந்தா போய் உனக்கு பிடித்த காலை சிற்றுண்டி வாங்கி வா.. எனக்கு பசிக்கிறது தாயி என்கிறார்...

இதோ தாத்தா..என்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டாக பறக்கிறாள் அந்த சிறுமி...

இங்கே ஆதரவற்றவர்கள் என்று நெடுஞ்சாலையில் யாரும் இல்லை.. ஒரு வேளை கோடிக் கணக்கில் சேர்த்து ஊர் மெச்ச பெரிய பங்களாவில் ஒரு வேளை இருக்கலாமோ என்னவோ... அறிந்தவர்கள் சொல்லுங்கள்...

சுபம் 🎉💫

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/11/25.

வெள்ளிக்கிழமை. 


வியாழன், 4 டிசம்பர், 2025

இராஜேந்திர சோழனை கடற் படை தினத்தில் நினைவுகூறுவோம் 💫


 வணக்கம் அன்பு நேயர்களே 🎉🙏.

தற்போது ராஜேந்திர சோழனின் அற்புதமான வரலாற்று நிகழ்வுகளை கடற் படை தினத்தில் நினைவுகூறுவோம் 💫

கீழேயுள்ள லிங்கில் அவரது அற்புதமான செயல்களை குரல் பதிவாக கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🍂

https://youtu.be/1ksF6KSVF_E?si=C5J_c__XA7oUJNq3

இன்றைய தலையங்கம்:-கோயில்அரசியல் நல்லதல்ல


 #இன்றையதலையங்கம்:-

#கோயில் #அரசியல்:-

உங்கள் அரசியலுக்கு தயைக் கூர்ந்து கோயிலை பயன்படுத்தாதீர்கள் 🙏

ஏனெனில் இங்கே ஆத்மார்த்தமான உணர்வோடு தான் அந்த காலத்தில் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது...

எதை எடுத்தாலும் அரசியலாக்குவது அறநிலையத்துறைக்கு நல்லது அல்ல...

இந்நேரத்தில் கலைஞர் இருந்து இருந்தால் நிச்சயமாக இப்படியான நிகழ்வுகள் நடக்க விட்டு இருக்க மாட்டார்... ஏன் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படி நடந்து இருக்காது...

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அரசு இருப்பது தான் கோயில் விசயத்தில் காட்டுகிறது என்று தோன்றுகிறது...

மரபு என்பது கோயில் மசூதி தேவசபை இப்படி ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் இருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும்...

மேலும் பழைய காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அந்த கோயில் தொடர்பான தகவல்களை வாசித்து விட்டு பிறகு வாருங்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...

அரசியல் செய்ய இங்கே ஆயிரம் ஆயிரம் விசயங்கள் உள்ளது...

பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சமூக சீர்கேடுகள் அவ்வளவு நடக்கிறது..அதை அரசியல் ஆக்குங்கள்...

எத்தனையோ பேருந்துகள் காய்லாங்கடைக்கு போகும் நிலையில் உள்ளது..அதை மாற்ற வேண்டும் என்று போராடுங்கள்...

சாலை விரிவாக்கம் என்கின்ற போர்வையில் சாலையோரம் உள்ள அற்புதமான பயண உணர்வை தரும் புளிய மரத்தை வெட்டாமல் அதை வேறு இடத்திற்கு மாற்றி நட முடியுமா என்று தானே முன்வந்து நீதிபதிகள் வழக்கு போடுங்கள்...

இங்கே இயற்கை சுரண்டல்கள் அவ்வளவு நடக்கிறது..அதை தடுக்க ஏதாவது அரசியல் கட்சிகள் தினம் தினம் சாலையில் அமர்ந்து போராடுங்கள்...

இதற்கு மேல் ஒரு விஷயம்.. இங்கே எந்த அரசாங்க பணிகளாக இருந்தாலும் அது நீதிமன்றம் உட்பட மக்கள் வரிப்பணத்தில் தான் வாழ்க்கை உங்களுக்கு... அந்த மக்களுக்கு துரோகம் செய்யலாமா என்று ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் யோசித்தால் இங்கே டாஸ்மாக் கடையில் இருந்து ஒரே உத்தரவில் எல்லா சமூக சீர்கேடுகளையும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நிலை இருக்க எல்லாவற்றையும் பணத்தை வைத்து நடத்தினால் அந்த கர்மா சும்மா விடுமா?

கொஞ்சம் யோசியுங்கள் 🍂

இங்கே மாற்ற முடியாத விசயங்கள் என்று எதுவும் இல்லை...

அதிகாரிகள் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் அரசாங்கம் திருத்தும்...

அது அரசு ஊழியர்கள் எல்லோருமாக சேர்ந்து இருந்தால் இங்கே எதுவும் சாத்தியமே...

ஆனால் ஊதிய உயர்வுக்காக போராடும் ஒற்றுமை சமூக அக்கறையில் இல்லையே...😏.

இங்கே தன்னில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும்...

மக்களும் கொஞ்சம் துட்டுக்கு ஓட்டு போடாமல் ஒற்றுமையாக இருந்தால் இந்த சமூகம் உருப்படும்... இல்லை என்றால் தமிழ் நாட்டை எந்த பிரம்மா விஷ்ணுவாலும் சிவனாலும் காப்பற்ற முடியாது...

விட்டு போன கடவுளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்...

#கோயில்அரசியல்

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/12/25

வியாழக்கிழமை.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

சிறுவெளிச்சத்தின் தேடலாக -சிறுகதை..

 


ஒன்றிற்கும் அடங்காத வெளிச்சத்தின் வீரியத்தை இங்கே முழுவதும் அறிந்தவர்கள் எவரும் இல்லை என்ற போதும் இங்கே நான்

அந்த பெரிய வெளிச்சத்தின் வீதியில் உலாவின நாட்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்...

அந்த அற்புதமான நாட்கள் எல்லாம் கடந்த காலங்களாக மாறி விட்டதா என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நகர்கிறேன்...

இங்கே ஒரு பெண்ணின் சுதந்திரம் எவ்வளவு என்பதை எவராலும் அவ்வளவு துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியாது..

அதை பற்றி உங்களுக்கு ஏதேனும் துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியும் என்றால் என்னிடம் ஓடோடி வந்து சொல்லுங்கள்...

ஏன் இப்படி அதிகாலையில் ஒரு புலம்பல் என்று நீங்கள் மட்டும் அல்ல..இதோ இந்த குளிர்ந்த இரவிற்கு விடை கொடுத்து விட்டு பகல் பொழுதிற்கு வழி விட்டு போய் கொண்டு இரவை கேளுங்கள்.. அது என் வேதனையை சொல்லும்...

ஏனெனில் நானும் அதுவும் தான் வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.. தற்போது என் மீது பெரும் பரிவுக் கொண்டு பிரிகிறது.. இப்போது நீங்கள் என்னிடம் மாட்டிக் கொண்டீர்கள்..

ஏன் இத்தனை பீடிகை என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. ஏனெனில் இரவே இவ்வளவு நேரம் எனது இம்சையை சகித்துக் கொண்டு என் புலம்பலை கேட்டு விட்டு தான் விடை பெற்று செல்கிறது... பிறகு நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா என் புலம்பலில் இருந்து தப்பிப்பதற்கு...

சரி விசயத்திற்கு வருகிறேன்...

நான் தமிழ் அரசி..நான் ஒரு படைப்பாளி என்று சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா என்று எனக்கு தெரியாது.. ஆனால் நான் எனது பார்வையில் ஒரு படைப்பாளி.. நான் ஏதோ எனக்கு தெரிந்த கற்பனையில் கதைகளை கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்..

ஆனால் பாருங்கள் எனக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்து விட்டார்கள்... நான் முன்பு போல எழுதுவேனா என்று கவலை அதிகமாக இருக்கிறது... இங்கே எழுதுவது என்பது எல்லாம் என்னை பொறுத்தவரை பள்ளி மாணவ செல்வங்கள் போல ஏதோவொன்று எழுதி பக்கத்தை நிரப்பி விடுவதாக நான் நினைப்பதில்லை..

அது ஒரு அற்புதமான வாழ்வியலை பற்றி அசைப்போடும் தருணத்தை எழுத்தில் கொண்டு வரும் கலை..

இதோ நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதை முழுவதுமாக என்றால் நான் வாழ்வின் ரசனையை அழகான பார்வையில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன்...

திருமண பந்தத்தில் நுழைந்து விட்டால் நான் இதே போல ஒரு கற்பனையை எப்படி வடிப்பேன் என் படைப்புகளில்...

எப்போதும் காலையில் இட்லி தோசை சட்னி மதியம் சாப்பாடு அதை தொடர்ந்த வீட்டில் ஏற்படும் சண்டைகள்.. என் பக்கத்து

வீட்டுக்காரரோடு இருக்கும் அக்கப் போர்கள் எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை... இப்படி தான் நான் எழுத உட்காரும் போதெல்லாம் தோன்றும்.. இதெல்லாம் இங்கே நீங்களும் தான் அனுபவித்து வருவீர்கள்..அதே நிகழ்வை எழுத்திலும் வாசிக்கும் போது உங்களுக்கு முதலில் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே வாசிப்பீர்கள்.. பிறகு...

அதை விடுங்கள்.. நீங்கள் என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு படைப்பாளி பக்கத்தில் சென்று உங்களுக்கு பிடித்த எழுத்து நடையை வாசிக்க தான் போவீர்கள்.. அதுவல்ல என் கவலை...

நீங்கள் தற்போது கூட என் படைப்புகளை பெரிதாக வாசித்து விடவில்லை.. அதனால் எனக்கு அதன் பாதிப்பு குறைவு தான்..

மேலும் நான் என் ஆத்ம திருப்தி எனக்காக நான் வடித்து வைத்த வாழ்வியல் ஓவியத்தை என் எழுத்தில் வடித்து எனக்கு ஒரு துன்பம் வரும் போது நானே எனக்கு ஆறுதலாக என் படைப்பில் ஆறுதல் தேடிக் கொள்வேன்.. அப்படி தான் என் படைப்புகள் இருக்க வேண்டும் என்று நான் ஒரு விதி வகுத்து இருக்கிறேன்..

ஆனால் தற்போது நினைத்தாலே தலை சுற்றுகிறது..

நான் பாட்டுக்கு எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கிறுக்கி கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று இது நாள் வரை வந்த வரன்களை ஏதோவொரு சாக்கு வைத்து தட்டி கழித்து வந்தேன்..

ஆனால் தற்போது விடாப்பிடியாக ஒரு வரனை காட்டி நல்ல குடும்பம் நல்ல பையன் நன்றாக சம்பாதிக்கிறான் குறிப்பாக அவர்கள் வீட்டில் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று பேசி பேசி நீ சம்மதித்து தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று இல்லை.. நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று அவர்கள் வீட்டில் பேசி நிச்சயதார்த்தமும்  முடித்து விட்டார்கள்..நீ தான் பெரிய எழுத்தாளினி ஆயிற்றே..நீ உன் ரசனையை சொல்லி வரன் தேட சொல்லலாமே வீட்டில் என்று கேட்கலாம்.. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுலபமான காரியமல்ல எங்கள் வீட்டில்.. அதுவும் எங்கள் வீட்டில்.. நினைத்துக் கூட பார்க்க முடியாது.. பிறகு எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டால் நான் வீட்டில் அமர்ந்து எதையோ கிறுக்கிக் கொண்டு இருப்பதை அவர்கள் இடத்தில் காட்டினாலும் அதை வாசிக்காமல் போய் சமையல் கற்றுக் கொள்.. அது தான் போகிற வீட்டில் எங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று சொல்லி விடுவார்கள்.. இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என்று கேட்காதீர்கள்.. இப்படி தான் இங்கே சமூகம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது..

அதை ஒட்டி தான் என் குடும்பமும்..

நான் அதற்காக சமைப்பது பெண் வேலை இல்லை என்று பெண்ணியம் பேசும் கூட்டத்தில் கொடி பிடிப்பவள் அல்ல... ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நினைப்பவள்...

சரி அதை விடுங்கள்..இதோ இந்த விடியலில் என்னை பார்த்து விட்டு சென்ற அந்த பையன் இன்று சாதாரணமாக வந்து பார்த்து விட்டு செல்ல வருவதாக தகவல் என் குடும்பத்தாரிடம் இருந்து எனக்கு நேற்று மாலை வந்தது..

நீங்கள் கேட்கலாம்.. இங்கே எங்களிடம் நீங்கள் புலம்புவதற்கு பதிலாக அலைபேசியில் அந்த பையனிடம் உங்கள் எழுத்து கனவை பேசலாம் இல்லையா என்று...

அதில் தான் ஒரு சிக்கல்...

நான் அலைபேசி எண்ணை கூட வாங்கவில்லை.. எனது குடும்பத்தாரும் என்னிடம் கொடுத்து பேசு என்று சொல்லவில்லை.. அதான் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதே என்று கொடுக்கலாம் இல்லையா..

ஆனால் அவர்களுக்கு ஒரு பயம்.. ஏதாவது பேசி திருமணத்தை இவள் நிறுத்தி விடுவாள் என்று...

பாருங்கள் இந்த விஞ்ஞான உலகில் நான் எந்தளவிற்கு என் குடும்பத்தை நேசித்து அவர்கள் பேச்சிற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்று உணர்கிறீர்களா...

இதோ காலை பத்து மணிக்கு வரன் பையன் வர போகிறான்..

நான் அவனிடம் எப்படியாவது நான் இதுவரை எழுதி வைத்த கிறுக்கல்கள் பற்றி அவனிடம் சொல்லி ஒரு புத்தகம் போட்டு விட உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள போகிறேன்... அவனுக்கு அந்த ரசனை இருந்தால் எழுத்தின் மீதான தீராத காதல் இருந்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் தான்...

அந்த அதிருஷ்டம் மட்டும் எனக்கு கிடைத்து தொடர்ந்து எழுத அந்த வீட்டில் ஒரு சுதந்திரம் நிம்மதியான சூழல் கிடைத்து விட்டால் போதும்.. நான் ஆனந்தமாக உணர்வேன்..

பார்ப்போம்... ஆனால் ஒன்று நிச்சயம்.நான் திருமண பந்தத்தில் நுழைந்தாலும் வீடு சூழலை கதை களமாக ஆக்காமல் எனக்கான தனி தன்மையில் தான் எழுதுவேன்... அதனால் அதை எதிர் பார்த்து வராதீர்கள்...🤷.

இதோ இங்கே நன்றாக வெளிச்சம் பரவுகிறது சூரியனின் கருணையால்.. எனது வாழ்விலும் நான் எனக்கான சிறு வெளிச்சத்தை இங்கே தேடி அலைகிறேன்...

ஆம் நான் சொல்ல மறந்து விட்டேன் வரன் பையனின் பெயர் தமிழ் அன்பன்... நல்ல முறையில் என் கனவு பலிக்க நீங்களும் இந்த விடியலில் எனக்காக பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்களேன்..புண்ணியபாக போகும்..😌.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.



சனி, 22 நவம்பர், 2025

அந்த ரசிக்கப் படாத இரவொன்று...


அந்த ரசிக்கப் படாத இரவொன்று 

மெல்ல மெல்ல சத்தம் இல்லாமல்

விடைபெறுகிறது...

இங்கே அதன் முடிவில் நான்

எனக்கான அத்தியாயம் எழுத

அமர்ந்து விட்டேன்...

இன்னும் நம்பிக்கை இழக்காமல்

அந்த இரவின் எச்சம்

அது பற்றிய அழகிய நொடிகளின் 

குறிப்புகளை

எனக்காக அனுப்பிக் கொண்டே

இருக்கிறது...

தீராத எழுத்தின் மீதான

அதீத மோகம் கொண்ட

இளம் எழுத்தாளனை போல...

அந்த குறிப்புகளை நான்

எந்த பக்கத்தில் சேர்த்தாலும்

அதன் சுவை குறைந்து விடும் என்று

தனியாக சேகரித்து வைக்கிறேன்...

இது தெரியாமல் அதுவோ

என் மீது ஊடல் கொண்டு

குறிப்புகளை அனுப்பி வைப்பதை

நிறுத்தி விட்டது...

நான் என் அத்தியாயங்கள்

எழுதுவதையும் அது குறிப்புகள்

அனுப்பும் வரை தற்காலிகமாக

நிறுத்தி வைக்கிறேன்...

இது பற்றி அதனிடம் தூது செல்ல

இங்கே இந்த அதிகாலை வேளையை

கெஞ்சி கூத்தாடி அனுப்பி வைக்கிறேன்...

இதோ அதுவும் அதன் சுழற்சியில் 

இருந்து

தற்காலிகமாக விடுப்பட்டு 

இரவின் எச்சத்தின் வாசலில்

நிற்கிறது மெல்லிய கூப்பாடு

போட்டுக் கொண்டு...

அங்கே இப்போது தான் விழித்த 

பறவைகள்

அந்த கூப்பாட்டின் ஓசையில்

சிறிது பயந்து சிறகை சிலிர்த்து

மெலிதாக முணகுகிறது...

எப்படியேனும் இன்று அந்த இரவின்

ரசனை மொழிகளை 

தனி புத்தகமாக பதிவேற்றம் செய்து

அதனை கொண்டாடி விட வேண்டும்

என்று அந்த தூதுவராக பொழுதை

எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...

இன்னும் சில பல குறிப்புகள்

எப்படியேனும் அதனிடம் உரிமையோடு

சண்டைப் போட்டு

வாங்கி விடுவான் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.













அறிவிக்கப்படாத சலிப்பொன்று...


அந்த அறிவிக்கப்படாத

சலிப்பொன்று 

என்னுள் அகண்டு விரிந்து

ஒரு நதி போல ஓடுகிறது...

அதன் போக்கில் சிறு பிழையும்

என்னால் சொல்லி விட முடியாதபடி 

ஓடி களிப்போடு நகர்கிறது...

நான் தான் இங்கே நீச்சல் தெரியாத

மனிதனாக கரையில் நின்று

அந்த நதியில் நீராட பாதுகாப்பு 

கருவியாக 

சிறு துரும்பாக ஏதேனும்

என் கைகளுக்கு தட்டுப்பட்டு விடாத 

என்று இங்கும் அங்கும்

தேடி அலைகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.














ஞாயிறு, 16 நவம்பர், 2025

மனதின் காயங்கள்...

 


கிருஷ்ணா அன்று இருந்ததை போல எப்போதும் மனம் உடைந்து போனதில்லை... அவன் அப்படி என்ன தவறு செய்து விட்டான் என்று அந்த நிறுவனம் அவனை பணியில் இருந்து வெளியேற்றினார்கள் என்று அவனுக்கு புரியாத புதிராகவே இருந்தது... அடுத்து என்ன என்று யோசிக்க யோசிக்க அவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போலவே இருந்தது... அதனால் சற்று தேநீர் தயாரித்து பருகலாம் என்று சமையல் அறைக்கு சென்றான்...

ஆம் சொல்ல மறந்து விட்டேன் கிருஷ்ணா ஒரு திருமண பந்தத்தில் இன்னும் இணையாத மிகவும் ஒழுக்கமான மனிதன்... அவன் அப்படி எவரிடமும் மனதை பறி கொடுக்காமல் இருந்ததற்கான காரணம் சமூகத்தில் அங்கங்கே நிகழும் திருமண பந்ததத்தின் சீர்குலைவுகள் தான் காரணம் என்று மற்றவர்களிடம் அவனது திருமணம் பற்றி பேச்சு எடுத்தால் சிரித்துக்கொண்டே சொல்லி விட்ட போதிலும் அவனுக்கு உண்மையில் திருமணம் செய்ய விருப்பமில்லை என்று மட்டும் சொல்லலாம்.. ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது...ஏனெனில் அவனை நிறைய பேர் காதலித்தார்கள்..ஆனால் அவனோ ஒரு வார இறுதி நாளில் அவர்களை அவனுக்கு பிரியமான தேநீர் விடுதிக்கு வரவழைப்பான்..அவர்களும் மிகவும் ஆவலாக கனவுகளோடு வருவார்கள்..அவர்களிடம் பலவிதமான கேள்விகள் கேட்பதற்கு முன்னால் தேநீர் முழுமையாக ரசித்து அதிலேயே ஒன்றி பேசாமல் அங்கிருந்த மரங்களை பறவைகளை ரசித்து பருகுகிறார்களா என்று முதல் தேர்வு அவர்களிடம் சொல்லாமலேயே வைப்பான்..ஆனால் அது அவர்களுக்கு தெரியாது அல்லவா..அதனால் தேநீர் பருகிக் கொண்டே அவன் வேலை எவ்வளவு சம்பளம் உங்கள் வீட்டில் எத்தனை பேர் நீங்கள் எனக்கு முழு சுதந்திரம் வேலைக்கு செல்வதற்கு கொடுப்பீர்களா..இப்படி இத்யாதி இத்யாதி கேள்விகள் அவனை கேட்பார்கள்..அவனோ எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் அந்த தேநீரை பருகுவதிலேயே மிகவும் நுட்பமாக இருப்பான்..அதை பார்த்து விட்டு பொறுமை இழந்து சென்ற பெண்கள் தான் அதிகம்..அப்படியே பொறுமையாக இருந்தவர்களில் அவன் தேநீர் பற்றி மட்டும் நிறைய பேசுவான்..இதில் மீதி பாதி பேர்கள் இவனை கிறுக்கன் என்று முத்திரை குத்தி கோபமாக சென்று விடுவார்கள்...ஆக மொத்தம் இவனுக்கானவள் இவன் எதிர் பார்த்த மாதிரி இன்னும் அமையவில்லை..அப்பாடா எப்படியோ அவன் தேநீர் தயாரிக்க சென்ற இடைவெளியில் உங்களுக்கு அவனை பற்றிய தகவல்களை சொல்லி விட்டேன்..உங்களில் யாரேனும் முயற்சி செய்து பாருங்கள்..அவனை திருமணம் செய்ய..

தற்போது அவன் வந்து விட்டான்.. பிறகு பேசலாம்...🤫

அப்படியே கிருஷ்ணா சோஃபாவில் அமர்ந்து கொண்டு அந்த தேநீரை பருகினான் மிடறு மிடறாக..

வாசல் கதவு திறந்து இருந்ததால் அவன் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்து கொண்டே அந்த தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை பருகி முடித்து அதை அப்படியே அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு விட்டு வெறுமனே கைகளை தலைக்கு மேலே கட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான்...

சாலையில் பரபரப்பாக செல்பவர்களை மிகவும் நிதானமாக ரசித்து பார்த்தான்.. அவனுக்கு சிறிது சிரிப்பு வந்தது... நேற்று வரை நான் கூட இப்படி தான் சாலையில் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டு இருந்தேன்... ஆனால் இன்று என் நிலை அமைதியாக ஓரிடத்தில் உட்கார வைத்து இருக்கிறது...ஏதோ அந்த நிறுவனத்தின் முக்கால் வாசி பங்கு தன் பெயரில் அவர்கள் எழுதி வைத்து விட்டதாக அல்லவா நான் ஓடிக் கொண்டிருந்தேன் என்று தற்போது அந்த ஓட்டத்தை நிறுத்தியவுடன் நிதர்சனம் புரிந்தது..

ஆனால் நல்ல வேலையாக எந்த கடனும் இந்த வேலையை நம்பி வாங்கவில்லை...

அவர்கள் கை நிறைய சம்பளம் கொடுத்தார்கள்...

இந்த கடன் வேண்டுமா அந்த கடன் வேண்டுமா என்று ஒரு நாளில் எத்தனை அலைபேசி அழைப்புகள் அதை எல்லாம் மிகவும் நிதானமாக பதில் சொல்லி கடந்தான்... அது அவனுக்கு வாழ்க்கை பற்றிய ஆழ்ந்த புரிதல் கொண்ட மனிதன் என்பதை காட்டியது...

தற்போது வங்கியில் வீட்டு செலவுகள் போக ஒரு பெரிய தொகை இருந்தது..

அதனால் இன்னும் சில மாதங்களுக்கு ஏன் ஓரிரு வருடங்களுக்கு போதும்.. ஏனெனில் அவன் வீட்டை கூட நகர் புற வெளியில் இயற்கை சூழ்ந்த ஒரு எளிமையான வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்தான்.. ஆனாலும் சாலையில் எப்போதும் பரபரப்பு உள்ள வீடு அது...

அதனால் வாடகை நகர் புறத்தை விட மிகவும் குறைவு..

தற்போது சாப்பாட்டிற்கோ மற்ற வீட்டு வாடகைக்கோ பெரிதாக பிரச்சினை இல்லை.. ஆனால் இப்படியே சும்மா இருப்பது இயலாத ஒன்று..

என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருக்கும் போது மீரா அலைபேசியில் அழைத்து இருந்தாள்..

என்ன கிருஷ்ணா என்ன செய்கிறாய் அலுவலகத்தில் இருந்து வந்து விட்டாயா என்று கேட்டாள்..

ஆமாம் மீரா அலுவலகத்தில் இருந்து வந்து விட்டேன்..இனி அலுவலகம் செல்ல தேவையில்லை என்று சொன்னான்...

அப்படி என்றால் வீட்டில் இருந்து வேலை செய்ய சொல்லி விட்டார்களா என்று ஆவலாக கேட்டாள்..

இல்லை இல்லை கொஞ்சம் பொறுமையாக கேள்..வேலை போய் விட்டது என்றான்..

என்ன வேலை போய் விட்டதா.. உங்கள் நிறுவனம் தானே மிகவும் பிரசித்தி பெற்ற டாப் டென் நிறுவனத்தில் எப்போதும் இருக்கும்.. அந்த நிறுவனத்தில் ஆள் குறைப்பு நடவடிக்கையா என்று ஆச்சரியமாக கேட்டாள்...

ஆம் மீரா பெரிய பெரிய நிறுவனங்கள் தான் ஏதோவொரு சாக்கு சொல்லி ஆட் குறைப்பு நடவடிக்கைகள் செய்கிறார்கள்.. இதில் என்ன அதிசயம் என்று கேட்டான்...

சரி சரி நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே.. நான் எங்கள் நிறுவனத்தில் ஏதாவது காலி பணியிடங்கள் உனக்கு தகுந்தார் போல உள்ளதா என்று பார்க்கிறேன்..நீ இது பற்றி பெரிதாக யோசிக்காதே..சரியா என்று கேட்டாள்..

சரி மீரா.. நான் அது பற்றி சிறிது மன வருத்ததோடு தான் இருந்தேன்.. ஆனால் தற்போது அந்த வருத்தம் இல்லை.. ஏனெனில் எனக்கு இந்த இடைவெளியை கொஞ்சம் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்பாக நினைக்கிறேன்...

ஹே.. மிகவும் மகிழ்ச்சி..நாளை நான் விடுப்பு சொல்லி விட்டு வருகிறேன்.எங்காவது போகலாம் நீ முடியாது என்று சொல்லி விடாதே என்று உற்சாகமாக கேட்டாள்...

அதெல்லாம் முடியாது என்று சொல்ல மாட்டேன்..நீ இல்லை என்றாலும் நான் எங்காவது எனது இரு சக்கர வாகனத்தில் அது எங்கே போகிறதோ அங்கே போகலாம் என்று தான் நினைத்து இருந்தேன் என்றான் கொஞ்சம் சிரித்துக்கொண்டே..

சரி டா.. நான் நாளை வருகிறேன்..

நீ இரவு உணவு தயாரிக்க போ என்றாள்..

நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்..நீ ஒழுங்காக வேலை முடிந்து சாலையில் எவர் மீதும் உன் வண்டியை இடித்து விடாமல் வீட்டுக்கு போ என்றான்..

உனக்கு என்னிடம் வம்பு இழுத்து பேசாமல் உறக்கம் வராது அப்படி தானே கிருஷ்ணா.. சரி நீ போனை வை என்று சொல்லி பொய் கோபம் கொண்டு அலைபேசியை தொடர்பை துண்டித்தாள்..

எப்படியோ அவனது நீண்ட கால பள்ளி தோழி வெகு நாட்களுக்கு பிறகு அலைபேசியில் அழைத்து பேசியதில் அவனது வேலை பறி போனதால் ஏற்பட்ட மனக் காயம் ஆறியது போல இருந்தது..

அப்படியே தனக்கு பிடித்த ரேடியோ மிர்ச்சி வானொலி ஒலிபரப்பை கேட்டுக் கொண்டே இரவு உணவாக சப்பாத்தி மாவு பிசைய ஆயத்தமானான்...

வானொலியில் வாகாய் வாகாய் வாழ்கிறேன்..என்ற வரிகள் கேட்டது...

உண்மை தானே.. இந்த பிரபஞ்சம் எவ்வளவு அற்புதமான பேரழகை தனக்குள் புதைத்து வைத்து உள்ளது.. அந்த புதையல் எவ்வளவு ஆசுவாசமான உணர்வுகளை நமக்கு இலவசமாகவே அளிக்க காத்து இருக்கிறது..அதை விடுத்து எப்போதும் ஓட்டம் ஓட்டம் என்று யாருக்காகவோ ஓடினால் எப்படி இதை அனுபவிப்பது... கொஞ்ச நாள் இந்த பிரபஞ்சத்தின் அழகை மிகவும் நிதானமாக பருக வேண்டும்.. அது நான் நேசித்து கிடக்கும் தேநீரின் சுவையை விட பிரமாண்டமானது...என்று நினைத்தபடியே மாவை பிசைந்து முடித்து விட்டு குருமா வைக்க தயாரானான்...

அங்கே இரவு மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.. கிருஷ்ணா மன பாரமோ மெல்ல மெல்ல குறைந்தது..

#இளையவேணிகிருஷ்ணா..

நாள்:16/10/25.

ஞாயிற்றுக்கிழமை.



புதன், 12 நவம்பர், 2025

வித்தியாசமான மனிதர்..

 


கண்ணன் ஒரு பழமைவாதி என்று அந்த ஊர் மக்களால் அறியப்படுபவர்.. அவர் இந்த டிஜிட்டல் உலகத்தில் மிகவும் வித்தியாசமாக வாழ்ந்துக் கொண்டு வருபவர் என்று சொன்னால் அது மிகையில்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

அவரது குடும்பத்தினர் குறிப்பாக அவரது மகன் இவரை பார்த்து மிகவும் எரிச்சல் அடையும் அளவுக்கு அவர் எந்தவித டிஜிட்டல் கருவியையும் அவரோடு பயணிக்க விட்டதில்லை..

அவர் ஒரு பட்டன் போன் தான் வைத்திருப்பார்.. அதையும் இப்போது இருக்கும் மக்கள் போல ஒரு மூன்றாவது கையை போல எங்கேயும் எடுத்துக் கொண்டு செல்பவர் அல்ல.. சொல்லப் போனால் அந்த போன் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் தான் இருப்பார்... வெளியூருக்கு போகும் போது கூட அவர் அதை எடுத்துக் கொண்டு போவதில்லை...இது பற்றி அவரது மனைவி ஜானகி மகனிடம் குறைப்பட்டு கொண்டால் உடனே அவரை பார்த்து எங்காவது போகும் போது அந்த போனை எடுத்து கொண்டு போனால் என்ன அப்பா.. அந்த போனை நான் உங்களுக்கு வாங்கி கொடுத்ததே நீங்கள் எங்காவது போனால் குறிப்பாக உங்கள் நண்பர்கள் வீட்டுக்கு போனால் நேரம் தெரியாமல் பேசுவீர்கள்..பிறகு இரவு ஆகி விடும் அங்கேயே தங்கி விட சொன்னார்கள் என்று தங்கி விட்டு காலையில் தான் வருவீர்கள்... அப்போது உங்களை எந்த நண்பர்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என்று வரிசையாக போன் செய்து கேட்பது எங்களுக்கு ஒரு சங்கடம் என்றால் அவர்கள் அதை வைத்து கேலி செய்து சிரிப்பது ஒரு சங்கடம் என்று சொல்லி சலித்துக் கொள்வான்... அப்போதெல்லாம் அவர் அட போப்பா வழி முழுவதும் நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை..குறிப்பாக பேருந்து இங்கேயே ஏறி இருக்க மாட்டேன்.உனது அம்மா என்னங்க எங்கே இருக்கிறீர்கள்..பஸ் ஏறி விட்டீர்களா என்றும் பத்து நிமிடத்துக்கு ஒரு முறை நான் கிரிக்கெட் லைவ் கமெண்ரி கொடுப்பது போல உங்கள் அம்மாவுக்கு கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும்..அதனால் நான் எனது நண்பர் காவல் துறையில் தான் இருக்கிறார்..அவரிடம் நான் எங்கே இருக்கிறேன் என்று சொல்லி விட்டு தான் போவேனாக்ககும் என்று பெருமையாக சொல்லவும் இன்னும் அதிகமாக அவரது மகன் மதனுக்கு இன்னும் கோபம் அதிகமாக வந்தது..இது என்ன பா பெரிய சலிப்பு... இதெல்லாம்

கேலிக்குரிய விஷயமா போப்பா போய் வேலையை பார்... இந்த உலகம் எதையாவது குறைப்பட்டுக் கொண்டும் கேலி செய்துக் கொண்டும் தான் இருக்கும்..என்று சிரித்துக்கொண்டே அவர் வேலையை பார்க்க சென்று விடுவார்... இந்த பதில் எப்போதும் வரும் பதில் தான்.. அப்போதெல்லாம் மதன் தலையில் கையை வைத்து உட்கார்ந்து விடுவான்.. மேலும் அவரது தாய் ஜானகியிடம் அம்மா அவரை திருத்த முடியாது..அவரை பற்றி என்னிடம் சொல்லி என்னை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதே... அவர் எப்படியோ போகட்டும் என்று சொல்லி விட்டு போய் விடுவான்..

இப்படி தான் அவர் வாழ்க்கை அவருக்கு டிஜிட்டல் இம்சை இல்லாமலும் மற்றவர்களுக்கு அவர் ஒரு இம்சை யாகவும் காட்சி அளித்தார்...

ஒரு நாள் அவர் வீட்டில் இருக்கும் போது அவரது நண்பர் குமரேசன் அழைத்து இருந்தார்.. அப்போது அவர் முற்றத்தில் இங்கும் அங்கும் பறந்து திரிந்த குருவிக்கு அரிசியை ஒரு தட்டில் எடுத்து வந்து வைத்து அது சாப்பிடும் அழகை ரசித்துக் கொண்டு இருந்தார்.. ஜானகி தான் எப்போதும் அவரது போனை எடுப்பார்.. அவர் அந்த போனை எடுத்து கொண்டு அவரிடம் வந்தார்... அவரது செயலில் தலையில் அடித்துக் கொண்டே ஏங்க உங்களுக்கு போன்.. உங்கள் நண்பர் குமரேசன் தான் தொடர்பில் இருக்கிறார்.. பேசுங்கள் ஏதோ அவசரமாக இருக்கும் போல அவரது குரல் பதட்டமாக இருந்தது என்று சொல்லி அவரிடம் அலைபேசியை தந்தார்.. அவர் டேய் கண்ணா என் போனுக்கு குறுந்தகவல் வந்து கொண்டே உள்ளது டா.. என் வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டார்கள் டா .. இது எப்படி டா நடக்கும் என்று குரலில் பதட்டமாக கேட்டார்.. குரல் தழுதழுத்தது... அவரது மகன் அரபு நாடு ஒன்றில் பணி செய்து வருகிறான்.. அவன் அனுப்பி வைத்த பணத்தை தான் இழந்து நிற்கிறார் என்று கண்ணன் புரிந்துக் கொண்டு சரி டா குமரேசா...பதட்டப்படாதே... கொஞ்சம் தண்ணீர் குடி... நான் வருகிறேன்.. நமது நண்பன் தண்டபாணி தான் காவல் துறையில் எஸ் ஐ ஆக இருக்கிறான் அல்லவா அவனிடம் போகலாம்.. அதற்கு முன்னால் உனது வங்கிக்கு தகவல் சொல்லி உனது கணக்கில் உள்ள தொகை மேலும் பறி போகாமல் இருக்க வங்கி ஏடிஎம் கார்டை லாக் செய்ய சொல் உடனடியாக.. நான் இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு அவசரம் அவசரமாக ஜானகி என் சட்டையை எடுத்து வா என்று வேகமாக குரல் கொடுத்தார்... ஜானகி தனது அடுப்பில் உள்ள வேலைகளை விட்டு விட்டு இதோ வரேன்ங்க என்று சொல்லி கொண்டே அவரது சட்டையை எடுத்து அவர் கையில் கொடுத்து விட்டு என்னங்க என்னாச்சு என்றாள்...

அதெல்லாம் ஒன்றும் இல்லை.. எனது நண்பன் குமரேசன் இருக்கிறான் இல்லையா அவன் வங்கி கணக்கில் இருந்து பணத்தை யாரோ ஒரு லட்சம் வரைக்கும் திருடி விட்டார்களாம்.. நான் வந்து சொல்கிறேன் என்று கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா என்று அவசரப்படுத்தினார்... உடனடியாக சமையல் அறையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தது மட்டுமல்லாமல் ஒரு பாட்டில் தண்ணீர் ஊற்றி அதை ஒரு சிறிய பையில் போட்டு அவரிடம் கொடுத்துக் கொண்டே என்னங்க இப்படி எல்லாமா நடக்கும் என்று ஆதங்கமாக கேட்டாள் ஜானகி...

ஆமாம் ஜானகி இது டிஜிட்டல் திருட்டு.. இதெல்லாம் தினமும் நான் செய்தித்தாளில் வாசித்து வருகிறேன்...

இப்படி எல்லாம் நடந்துக் கொண்டே இருந்தாலும் மக்கள் இது பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா... இது வரை செய்தித்தாளில் வாசித்து வந்தேன் எனது நண்பனுக்கே இந்த நிலைமை வரும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை...என்று சொல்லி கொண்டே தனது காலில் காலணி மாட்டிக் கொண்டே வரேன் ஜானகி.. நான் நாளை தான் வருவேன்..நீ என்னை எதிர்பார்க்காதே என்று முதன் முறையாக ஜானகியிடம் தனது வருகையை பற்றி சொல்லி விட்டு வேகமாக நடக்கிறார்... அந்த ஊருக்கு வரும் டவுன் பஸ் வரும் நேரம் தான் தற்போது.அதை  பிடிப்பதற்காக கொஞ்சம் நடையை கூட்டினார்... அவரது நண்பன் குமரேசன் ஊர் இவரது ஊரில் இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அந்த ஊரை சென்றடைய இதை விட்டால் மாலையில் தான் பேருந்து என்பதால்...

ஜானகிக்கோ தனது கணவன் எத்தனையோ உலக விவகாரங்கள் தெரிந்து இருந்தும் ஏன் பழமைவாதியாக இருக்கிறார் என்று  புரிந்தது...சே எப்படி எல்லாம் தனது கணவரை இப்படி பழமைவாதியாக இருக்காதீர்கள் என்று தானும் தன் மகன் மதனும் திட்டி இருப்போம்.. அது தான் தற்போது அவருக்கு பாதுகாப்பு போல.. அவர் பாட்டுக்கு அவர் உலகை சிருஷ்டித்து வாழ்ந்து விட்டு போகட்டுமே.. நமக்கு ஒரு கொள்கை என்றால் அவருக்கு ஒரு கொள்கை.. அந்த கொள்கையால் அப்படி ஒன்றும் பெரிய மோசமான நிகழ்வு நடக்க போவதில்லை.. பிறகு ஏன் அவரை கடிந்து கொள்ள வேண்டும் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டு  தனது மீதி சமையல் வேலையை முடித்து கொண்டு முற்றத்தில் கொஞ்சம் காற்று வாங்க வந்தாள்... அங்கே அந்த இரண்டு குருவிகள் அவரது கணவர் வைத்த அரிசியை சாப்பிட்டு விட்டு இவளை பார்த்ததும் தனது சிறகை படபடத்து வேகமாக வெளியே பறந்து சென்றது...அவரை பார்த்து பயம் இல்லை என்னை பார்த்து பயம் என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே முணுமுணுத்து அங்கே உள்ள மரக் கட்டிலில் அமர்ந்து வெளியே உள்ள மரத்தின் இலைகள் அசைவதை முதன் முறையாக மிகவும் ரசனையோடு லயித்து பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அங்கே அந்த இரண்டு குருவிகளும் அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து கீச் கீச்சென்று தனக்குள் ஏதோ பாஷை பரிமாறிக் கொண்டதை வேடிக்கை பார்த்தாள் ஜானகி.. எவ்வளவு அழகு..அதை விடுத்து தனது மகன் வாங்கி கொடுத்த தொடு திரையில் நாம் யார் யாரோ போடும் ரீல்ஸ்ல் மனதை பறிக்கொடுத்தோமே என்று முதன் முறையாக கவலைப் பட்டாள் ஜானகி...

அதை அப்படியே ரசித்துக் கொண்டே சமையல் களைப்பு தீர கண்ணயர்ந்தாள்.. அந்த குருவிகள் இப்போது தாலாட்டியது ஜானகிக்காக தனது குரலில்....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

வியாழக்கிழமை.



செவ்வாய், 11 நவம்பர், 2025

மண் மணம்...🍂💫☔

 


தரண் பெங்களூரில் கணினி தொழில்நுட்ப துறையில் வேலை பார்த்து வரும் ஒரு முப்பது வயது இளைஞன்... தொடர்ந்து வேலை பார்த்து பார்த்து ஏதோவொரு அலுப்பு அவனுக்கு ஏற்பட்டதை உணர்ந்தான்... அப்போதைக்கு அப்போது ஓரிரு நாட்கள் கிடைக்கும் விடுப்பில் எல்லாம் அவன் பிறந்த கிராமத்திற்கு வந்து விடுவான்... ஆனால் போக ஒரு நாள் வர ஒரு நாள் என்று இடையில் தானாக விடுப்பு வாங்கிய இரண்டு நாட்கள் மட்டுமே அவனது கிராமத்தில் தங்குவதற்கு கிடைத்த வாய்ப்பாக அமைந்தது..

பணிக்கு சேர்ந்த புதிதில் அவனுக்கு அது பற்றி பெரிதாக தெரியவில்லை.. ஊருக்கு போகும் போதெல்லாம் அங்கே அவனுக்கு ஊர் மக்களால் நிறைய வரவேற்பு கிடைத்தது.. அது அவனுக்கு பெருமையாக இருந்தது.. மேலும் அப்பாத்தா அவன் வீட்டு வழியாக போவோர் வருவோரை கூப்பிட்டு பேசும் போதெல்லாம் அவர்கள் உங்கள் பேரன் பெங்களூரில் என்ன வேலை செய்கிறான் என்று கேட்கும் போதெல்லாம் மிகவும் உற்சாகமாக கண்களில் ஒளி தெரிய என் பேரன் பெரிய கம்யூட்டர் கம்பெனியில் பெரிய பதவியில் பணம் நிறைய சம்பாதிக்கிறானாக்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருப்பார்.. அப்போது அவர் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியும்.. 

அந்த சமயத்தில் தந்தை இருந்தார் என்றால் அவரும் சிரித்துக்கொண்டே எப்போது பார்த்தாலும் இதே பேரன் பெருமை தானா என்று சென்று விடுவார்..

ஏனெனில் தரணின் குடும்பம் ஒரு விவசாய குடும்பம்.. இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் மற்றும் இரண்டு கறவை மாடுகள் வைத்து சிறிது வங்கியில் தேவைப்படும் போது விவசாய கடன் வாங்கி இப்படி தான் ஓடியது..கிணற்று பாசனம் தான் என்றாலும் நெல் கம்பு சோளம் வெங்காயம் கடலை என்று எதை போட்டாலும் நன்கு விளையும் பூமி..அதே சமயம் கிணறும் நல்ல ஊற்று ஊறி அவர்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தது.. நாளடைவில் பருவ மழை தவறியது...அருகே இருக்கும் நிலத்தில் எல்லாம் போர் போட்டு இவர்கள் நீர் மட்டம் குறைய காரணம் ஆனது... அப்போதும் அவர்கள் கலங்காமல் ஒரு ஏக்கர் நிலத்தை விவசாயம் பார்த்து வந்தார்கள்... தரண் பள்ளி முடிந்ததும் பையை வைத்து விட்டு நேராக வயலுக்கு சென்று மாட்டை கவனித்து வந்தான்..மாடு கன்றுகளுக்கு இரவு மற்றும் மறுநாள் காலைக்கு தேவையான பச்சை பயிர் தட்டையை அறுத்து வைத்து விட்டு மாடு கன்றுகளுக்கு தவிடு பிண்ணாக்கு வீட்டில் தயாரித்த ஊற வைத்த தானிய கலவை கலக்கி தொட்டியில் வைத்து அது ஆவலாக குடிக்கும் அழகை ரசிக்கும் போது அவன் பயிர் தட்டையை அறுத்த அலுப்பு போய் விடும்.. பிறகு வீட்டுக்கு அதை கூட்டி வந்து மாட்டை மாட்டு பட்டியில் அடைத்து விட்டு அதற்கு தேவையான தீனியை போட்டு விட்டு தனது கை கால்களை கழுவிக்கொண்டு படிக்க உட்காருவான்... பிறகு இரவு உணவு கொஞ்ச நேரம் வானொலி ஒலிபரப்பு கேட்டு ரசித்தல் உறங்குதல் .. மீண்டும் அதிகாலை எழுந்து படித்தல் பிறகு கறவை முடித்தவுடன் மாடு கன்றுகளை போய் வயலில் கட்டி விட்டு அதற்கு தேவையான தீனியை போட்டு விட்டு குளித்து முடித்து காலை உணவை சாப்பிட்டு விட்டு ஏழு கிலோ மீட்டர் அப்பால் உள்ள பேரூராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் தனக்கு விருப்பமான முதல் குரூப் எடுத்து படித்து வந்தான்.. இது தான் அவனது தினசரி வேலை..

பள்ளியில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுத்தாலும் அவன் யார் எந்த பாடத்தில் சந்தேகம் கேட்டாலும் சொல்லி கொஞ்சமும் கர்வம் இன்றி சொல்லி கொடுப்பான்.. இதனால் இவனை ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு எப்போதும் பிரியமான மாணவனாக திகழ்ந்தான்.மேலும்அந்த மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் எடுத்து தனது பள்ளிக்கு வீட்டுக்கு ஊருக்கு பெருமை சேர்த்தான்.. இதனால் அவனுக்கு விருப்பமான கல்லூரியில் அவன் விருப்ப பாடம் எலக்ட்ரிக்கல்ஸ் &எலக்ன்ட்ரானிக் கிடைப்பதில் எந்தவித சிரமமும் இல்லை.. அந்த படிப்பு இறுதி ஆண்டில் இருக்கும் போது பிரபலமான கம்பெனியில்  உள் வளாக நுழைவு தேர்வில் வெற்றி பெற்றதால் அவனை தேர்வு செய்து பணி ஆணையை கொடுத்து விட்டு சென்றார்கள்.. கல்லூரியே இது பற்றி பெருமையாக நினைத்தது..

கல்லூரி முடிந்ததும் நேராக அந்த பிரபலமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான்.கல்லூரி முடிந்ததும் பணிக்கு சேர்ந்ததால் அவன் மாடு கன்றுகளை நினைவில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மூழ்கி விடுவான்...

தற்போதும் மாடு கன்றுகள் அவன் வீட்டில் உள்ளது..அதை அவரது தந்தை தான் தற்போது காலை மாலை வயலுக்கும் வயலில் இருந்து வீட்டுக்கும்  அழைத்து சென்று வருகிறார்.. ஊரில் உள்ள உறவுகள் எல்லோரும் உங்கள் பையன் தான் நன்றாக சம்பாதிக்கிறானே பிறகு ஏன் ஏன் இந்த மாடு கன்றுகளை வைத்துக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்கும் போதெல்லாம் அவர் அதனை பெரிதாக நினைக்காமல் நான் இந்த மாடு கன்றுகள் இந்த மண் வாசனையோடு பழகி விட்டேன்..அதை விட மனசில்லை என்று சிரித்துக்கொண்டே சொல்லி விட்டு செல்வார்..

தரண் தாயாரும் மாடு மீது ஈர்ப்பு உடையவர் ஆதலால் அவருக்கு ஒரு சிரமமும் இல்லாமல் இருந்தது.. ஏனெனில் வயலில் விஸ்தாரமாக வேளாண்மை தற்போது செய்ய இயலாது.. கிணற்று நீர் மாடு கன்றுகளுக்கு பயிர் தட்டையை தெளித்து அதற்கு நீர் பாய்ச்ச தான் போதுமானதாக இருந்தது.. அதனால் அவர் இதிலேயே தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.. இப்படியே வாழ்க்கை போனது..

அன்றொரு நாள் எல்லா வேலைகளையும் முடித்து விட்டு அந்த வானொலியில் பாடல் கேட்டுக் கொண்டே அப்படியே  இரவில் கண்ணயர்ந்து உறங்கி விட்டார் தரண் தந்தை மனோகரன்.. விடிந்ததும் வழக்கமான அதிகாலை விழிப்பு வந்ததும் தினமும் செய்ய வேண்டிய காரியத்தை முடித்துக் கொண்டு காலை உணவை முடித்துக் கொண்டு  வயலுக்கு சென்றார் மனோகரன்.. தரண் தாய் லட்சுமி வீட்டில் வேலைகள் முடித்துக் கொண்டு மாமியாருக்கு உணவை பரிமாறி விட்டு மதியம் உணவை மேசை மீது எடுத்து வைத்து விட்டு தனக்கும் கணவர் மனோகரனுக்கும் மதிய உணவை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றாள்..

வயலில் வேப்ப நிழலில் போனவுடன் உட்கார்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தாள்..மாடு கன்றுகள் இவளை காதை தீட்டி கொண்டு அவளை பார்த்து கத்திக் கொண்டே பார்த்தது.. ஏனெனில் லட்சுமி தீனி போடும் நேரம் வந்துவிட்டது..அதை பார்த்து லட்சுமி கொஞ்ச நேரம் பொறுக்க மாட்டாயா என்று அன்பாக கடிந்துக் கொண்டே  இதோ வரேன் இரு என்று மெல்லமாக எழுந்து மாட்டிற்கு அறுத்து வைத்து இருந்த பயிர் தட்டையை எடுத்து போய் போட்டார் ..

அது தலையை ஆட்டிக் கொண்டே சாப்பிடும் அழகை அப்படியே நின்று ரசித்தாள்.. தற்போது மனோகரன் லட்சுமி என்ன அங்கே மாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்..இதோ வரப்பு மீது உள்ள பயிர் தட்டையை களத்தில் கொண்டு வை என்று வயலில் இருந்து வேகமாக குரல் கொடுத்தார்..இருங்க வரேன்.. கொஞ்ச நேரம் எதையும் ரசிக்க விட மாட்டேன் என்கிறீர்கள் என்று முணுமுணுத்துக் கொண்டே கணவர் இருக்கும் இடத்திற்கு அறுத்து வைத்த பயிர் தட்டையை எடுத்து வர செல்லவும் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது..போனை காதில் வைத்தாள் ஹலோ என்றாள்.. அம்மா நான் தரண் பேசுறேன்.. நீங்கள் நன்றாக உள்ளீர்களா சாப்பிட்டு விட்டீர்களா என்று கேட்டான்.. வழக்கமாக இரவு நேரத்தில் போன் செய்யும் இவன் இந்த நேரத்தில் எப்படி என்று நினைத்தவாறே நன்றாக இருக்கிறோம் சாப்பிட்டு விட்டு இங்கே வயலில் தான் இருக்கிறோம் டா கண்ணா...நீ எப்படி இருக்கிறாய் நலமா.. ஆமாம் ஏன் இந்த நேரத்தில் போன்.. எப்போதும் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாயே ..வேலை நேரம் மாறி விட்டதாடா கண்ணா என்று கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே சென்றாள்.. அம்மா கொஞ்சம் இருங்கள்.. நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்க வேண்டும்.. இங்கே எனக்கு வேலை போய் விட்டது அம்மா.. ஆள் குறைப்பு நடவடிக்கைகள் காரணமாக என்றான்.. 

என்னடா கண்ணா சொல்றே வேலை போய் விட்டதா என்றாள்..

ஆமாம் அம்மா.. ஆனால் அதற்காக ஏன் இவ்வளவு அதிர்ச்சி... அமைதியாக இருங்கள் அம்மா போனை அப்பாவிடம் கொடுங்கள்..

அப்பா பேசினார்..என்னப்பா ஏதாவது பிரச்சனையா என்று அமைதியாக கேட்டார்.. அப்பா ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக வேலை போய் விட்டது இனி மேல் புதிய வேலை கிடைக்கும் வரை நான் ஊருக்கு தான் வந்து தேர்வுக்கு படித்து தயாராக வேண்டும் என்றான்..

ஓ அப்படியா.. அதனால் என்ன வாப்பா.. பார்த்துக் கொள்ளலாம் இப்ப என்ன சோற்றுக்கு வழி இல்லாமலா இருக்கிறோம்.. இல்லை இருக்க இடம் இல்லாமல் இருக்கிறோமா சொல்லு என்று நிதானமாக சமாதானம் செய்தார்.. ஒரு தந்தையின் உள்ளம் எப்போதும் நிதானமாக அறிவுபூர்வமாக யோசிக்கும்.. ஆனால் தாய் உள்ளமோ உணர்வுபூர்வமாக யோசித்து நிலைதடுமாறும்... என்பது உண்மை தான் போல என்று நினைத்து கொண்டு தொடர்ந்தான்... நான் இரவு கிளம்பி வருகிறேன் அப்பா.. இங்கே பெரிதாக பொருட்கள் இல்லை..அதை இங்கேயே எவருக்கும் பயன்படுத்தி கொள்ள கொடுத்து விட்டு வருகிறேன் என்றான்.. அதுவும் சரிதான் ப்பா அப்படியே செய்து விட்டு வா.. பயணத்தில் கவனமாக வாப்பா.. ஒன்றும் கவலைப்படாதே என்று மீண்டும் ஒரு அக்கறையோடு சொல்லி விட்டு போனை வைத்தார்..

லட்சுமியோ என்னங்க இப்படி ஆயிடுச்சு என்று சோகமானாள்...

அட விடு லட்சுமி.ஏதோ காலம் காலமாக நம்ம பையன் அந்த வேலையிலேயே இருந்த மாதிரி.. இப்போது என்ன ஆகி விட்டது என்று கவலையுடன் இருக்கிறாய்..போ போ அங்கே பார் உன் மாடு கன்றுகள் உன்னையே பார்க்கிறது இந்தம்மா போனா போன இடம் என்று கோபமாக பார்க்கிறது பார் என்றார் கேலியாக...

லட்சுமி, உங்களுக்கு எதுவாக இருந்தாலும் கேலி தான் போங்கள் என்று சொல்லிக் கொண்டே நான் இப்போது தான் என் அண்ணன் கிட்ட அவர் பெண்ணை கேட்கலாம் என்று நினைத்தேன் என்றாள்.எல்லா தாயாருக்கும் பையனை பற்றிய கவலை இருக்கும் அல்லவா அது போல..

அட விடு லட்சுமி... நல்ல வேளை நீ இந்த பேச்சை எடுக்காமல் இருந்தது நல்லதாக போயிற்று.. ஏனெனில் உன் அண்ணன் நம்ம பையன் நன்றாக சம்பாதிப்பதால் கொடுக்க நினைத்து இருக்கலாம்.. தற்போது இவனுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்காமல் போனால் அதற்காக மட்டும் பெண் கொடுத்த உங்கள் அண்ணன் மனம் சங்கடப் படும் அல்லவா என்று கேட்டார் மனோகரன்..

அதற்கு லட்சுமி பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

சரி சரி மணி பார் ஒன்று ஆகி விட்டது.. நாம் சாப்பிடலாம் வா என்று சொல்லி விட்டு கடகடவென்று வரப்பில் நடந்தார்...

பின்னாலேயே கவலை தோய்ந்த முகத்துடன் லட்சுமி சென்றாள்...

திடீரென்று அங்கே ஒரு காற்று வேகமாக வீசியது.. அப்போது எங்கெங்கோ கலைந்து திட்டு திட்டாக இருந்த மேகம் ஒன்று சேர்ந்து சிறு தூரலாக வர அறிகுறியாக மண் வாசம் அற்புதமாக நாசியை துளைத்தது...

லட்சுமி இன்று வானம் நிற்காது போல.. பார் ரொம்ப நாட்களுக்கு பிறகு இந்த மண் வாசம்... என்றார் மனோகரன்..

ஆமாங்க... இந்த வாசத்திற்கு வேறு எந்த வாசனையும் ஈடு இணை இல்லை என்று உற்சாகமானாள் லட்சுமி..

ஒரு சில நிமிடங்களில் மழை நன்றாக பெய்தது... கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நிற்காமல் பெய்தது...

மனோகரன் அந்த மழையை கொட்டகையில் அமர்ந்து ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே லட்சுமி இங்கே பார் இந்த மழை நமக்கு நல்ல அறிகுறி காட்டுகிறது...நம்ம ஏரிக்கு நீர் வரத்து வரும் அருகில் உள்ள அந்த மலையில் நல்ல மழை பெய்து கொண்டு இருக்கிறது..நம்ம கிணறு ஊற்று ஊற இது நமக்கு கை கொடுக்கும் என்றார்... ஆமாங்க இறைவன் அனுகிரகம் நமக்கு இருக்கிறது போல... என்றாள் சிரித்துக்கொண்டே...

ஆமாம் ஆமாம் உன் கவலை தீர்ந்ததா என்றார்...

கூடவே எடுத்து வந்த  வானொலியில் வானிலை அறிக்கையில் இன்னும் இரண்டு நாட்கள் இந்த மழை நீடிக்கும் என்று சொன்னதில் இவர்கள் இருக்கும் பகுதியும் அடங்கும்..

இருவரும் பெய்யும் மழையை ரசித்துக் கொண்டே சாப்பிட்டார்கள்...இதை அங்கே கொட்டகையில் இருந்த மாடும் காதை முன்னோக்கி வைத்து பார்த்துக் கொண்டு இருந்ததை எதேச்சையாக பார்த்த மனோகரன் அப்படி பார்க்காதே... அந்த மழையை ரசி அது தான் உனக்கு எங்களுக்கு ஏன் இந்த பிரபஞ்சத்தின் ஜீவராசிக்கு சோறு போடும் கடவுள் என்றார் கொஞ்சம் குரலை உயர்த்தி.. அப்புறம் சொல்ல மறந்து விட்டேன்... உன் தோழன் நாளைக்கு வந்து விடுவான் அவன் கொஞ்ச நாள் உங்களோடு தான் இருக்க போகிறான் என்றார் சற்றே குரலை உயர்த்தி அந்த மாடு கன்றுகளிடம்...

இவர் பேசுவதை கூர்மையாக கேட்ட அந்த மாடு கன்றுகள் உற்சாகமாக தலையை ஆட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்ததை லட்சுமியும் மனோகரனும் பார்த்து அகம் மகிழ்ந்தார்கள்...

அங்கே தரணும் இங்கே இருக்கும் மாடு கன்றுகளை நினைத்துக் கொண்டே தனது அறையில் உள்ள நண்பர்களிடம் சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டு ஏதாவது அப்பாத்தா அப்பா அம்மாவிற்கு வாங்கலாம் என்று கடைத் தெருவிற்கு செல்ல ஆயத்தமானான்...இதை பார்த்த அந்த அறை நண்பர்கள் உனக்கு வேலை போனது கவலையாக இல்லையா என்று ஆச்சரியமாக கேட்டார்கள்... இல்லை நான் கவலை மறக்க எனக்கு அங்கே என் மண் வாசமும் நான் அன்போடு வளர்த்த மாடு கன்றுகளும் பேரன்போடு காத்திருக்கிறது என்றான் மிகவும் உற்சாகமாக...

இந்த பதிலை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.. ஏனெனில் அவர்கள் இந்த வேலையை நம்பி நிறைய கடன் வங்கியில் வாங்கி இருந்தார்கள்... அது அவர்களை நிம்மதியாக இருக்க விடாமல் செய்கிறது..நானோ இந்த வேலையை நம்பி எந்த கடனும் வாங்காமல் இருந்ததால் தப்பித்தேன் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சோடு கடை வீதிக்கு சென்றான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/10/25

புதன்கிழமை.



திங்கள், 10 நவம்பர், 2025

நானும் கங்காவும்... சிறுகதை

 


இந்த குளிர் காலத்தில் படுக்கையை விட்டு எழுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல..ஆனால் அன்றாட வாழ்க்கையை அதற்கான நிகழ்வோடு பயணிப்பதை தவிர்க்க இயலாது..அதனால் கொஞ்சம் சோம்பலை முறித்து என்னருகே உள்ள மேசை மீது இருந்த சிறிய கடிகாரத்தில் மணியை பார்க்கிறேன். விடியற்காலை ஐந்து மணி என்று காட்டியது.

இப்போது எழுந்தால் தான் இல்ல பணிகளை முடித்து விட்டு எனது அலுவலக பணிக்கு செல்ல சரியாக இருக்கும்... எப்போதும் வழக்கமாக அந்த விடியற் பொழுதை ஒரு சில நிமிடங்கள் வீட்டு புழக்கடையில் வந்து நின்று ரசிக்காமல் என் கடமையை நான் செய்தது இல்லை.. அப்படியே நான் வளர்த்து வரும் செடிகளை மெதுவாக நோட்டமிட்டேன்.. அங்கே சில ரோஜாக்கள் பூத்து மணம் வீசியது.. அது தலையசைத்து வா வா என்று உற்சாகமாக அழைத்தது.. அதனருகில் சென்று மெல்ல அதன் இதழ்களை வருடி விடும் போது அந்த இதழ்களில் இருந்து வழிந்த பனித்துளிகள் என் விரல்களின் வழியாக படர்ந்து ஓடியது..அதை அப்படியே சிறிது நேரம் ரசித்துக் கொண்டே என் காலை கடன்களை முடித்துக் கொண்டு தேநீர் தயாரிக்கும் பணிக்காக செல்கிறேன்...

அந்த தேநீர் கோப்பையை எடுத்து கொண்டு மீண்டும் புழக்கடை பக்கம் வருகிறேன்.. அங்கே ஓரிரு காக்கை குருவின் சத்தம் தற்போது கேட்கிறது.. மெல்ல மெல்ல மேலே சூரியன் எழ ஆயத்தமாகும் அறிகுறிகள் கிழக்கு வானம் சிவப்பதில் உணர்ந்து ரசிக்கிறேன்..

என்ன இருந்தாலும் இந்த இயற்கை தனது நியதியை மாற்றாமல் எப்படி பயணிக்கிறது என்று எப்போதும் போல ஆச்சரியம் கொண்டு பருகுகிறேன் என் கையில் உள்ள தேநீரை அதே ரசனை மாறாமல்..

பிறகு குளித்து முடித்து விட்டு என் நாளின் தொடக்கத்தௌ இனிமையாக்கும் வானொலி ஒலிபரப்பு சேவையை ரசித்துக் கொண்டே காலை உணவு தயாரிக்கும் பணிகளுக்கு இடையே அலுவலக பணிக்கான ஒத்திகையும் செல்கிறது ஒரு ஓரமாக மனதின் மூலையில்..

ஒரு வழியாக எல்லா வேலைகளும் முடிந்தது...

அலுவலகம் செல்வதற்காக எனது அலுவலக பையை எடுத்துக்கொண்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தேன்...கதவை பூட்டி விட்டு எனது இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு பயணிக்கும் போது தான் அந்த அசாதாரண நிகழ்வை கண்டேன்...

ஒரு இளம் பெண் அங்கே கண்ணீரோடு கதறி அழுதுக்கொண்டே சாலையின் இடது புறத்தில் அந்த பேக்கரி பக்கம் கிழிந்த உடையோடு என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதை கவனித்து மீண்டும் எனது வாகனத்தை திருப்பி அவள் அருகில் வந்து அவளை தொட்டு திருப்புகிறேன்... நான் தொட்டதில் மீண்டும் பயந்து நடுங்கி மிரண்டு ஒதுங்கி போகிறாள்...

ஏன் இந்த அவஸ்தை அவளுக்கு என்று சொல்லாமலேயே புரிந்தது எனக்கு..

அவளை பார்வையாலேயே அமைதிப் படுத்தி விட்டு அங்கிருந்து அவளை நேராக எனது வீட்டிற்கு அழைத்து செல்கிறேன்...

வழி நெடுக அவளும் எதுவும் பேசவில்லை நானும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை..

இந்த சமுதாயத்தில் நிகழும் அற்பத்தனமான நிகழ்வில் இதுவும் ஒன்று தானே...

இங்கே இதை பற்றி நிறைய பேசுவார்கள் எழுதுவார்கள்.. ஆனால் செயல் என்று வந்து விட்டால் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நமக்கேன் வம்பு என்று ஓரமாக ஒதுங்கி போய் விடுவார்கள்.. இங்கே பல பெண்களுக்கு நிகழும் அநியாயம் எல்லாம் அவளுக்கு எதிராக அவள் மீது வேண்டும் என்றே பழி சுமத்தி பழக்கப்பட்ட சமுதாயத்திற்கு இந்த அலைகளின் வலியை எப்படி உணர்த்தினாலும் உணர போவதில்லை.. அப்படியே உணர்ந்தாலும் உணராதது போல கடந்து தான் செல்வார்கள்..

இது காலம் காலமாக அவள் நிகழ்த்தப்படும் ஒரு தீராத வன்முறை..

இப்படியே யோசித்துக் கொண்டே சாலையில் பயணித்து எனது வீட்டிற்கு வந்து விட்டேன்..

அந்த பெண் மெல்லமாக இறங்குகிறாள்..

அவளை வீட்டுக்கு அழைத்து சென்று குளியலறையை காட்டி குளிக்க சொல்கிறேன்.. அதற்கு முன் என்னிடம் உள்ள எனக்கு மிகவும் பிடித்த ஒரு பிங்க் கலர் சுடிதாரை அவளிடம் கொடுத்து குளித்து முடித்து விட்டு வா என்று சொல்லி அவளை அனுப்பி விட்டு அவளுக்காக சில உணவுகளை ஆர்டர் செய்கிறேன்.. பிறகு அவள் வந்தவுடன் இஞ்சி தட்டி போட்ட தேநீரை சூடாக அவளிடம் கொடுத்து பருகு என்கிறேன்..

அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்..

நான் அவளை அழக் கூடாது என்று சமாதானம் கண்களாலேயே சொல்லி விட்டு நகர்ந்து சென்று இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்கிறேன்.. எதிர் முனையில் எனது மேலதிகாரி கதிரவன் என் விடுப்பு தகவலை காதில் வாங்கியவுடன் ஏனம்மா என்னாச்சு இன்று தாங்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் நிறைய உள்ளது.. எம் டி கேட்டால் நான் என்ன சொல்லி சமாளிப்பேன் என்று கொஞ்சம் சலிப்போடு கேட்டார்...

நான் உங்களுக்கு என் விடுப்பு பற்றிய விபரங்களை நாளை அலுவலகம் வந்து சொல்கிறேன் சார்.தற்போது கொஞ்சம் எதிர் பாராத நிகழ்வு நேர்ந்து விட்டது புரிந்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சரிம்மா நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் பாருங்கள் என்று சொல்லி அலைபேசி இணைப்பை துண்டித்தார்...

நான் மீண்டும் அவளின் அருகில் சென்று சோபாவில் அமர்ந்தேன்.. அவள் கைகளுக்குள் முகத்தை புதைத்து கொண்டு தேம்பி தேம்பி அழுகிறாள்...

அவள் கொஞ்சம் அழட்டும் என்று விட்டு விட்டேன்..

அப்போது வெளியே அழைப்பு மணி சத்தம் கேட்டது..

கதவை திறந்தேன்.நான் ஆர்டர் செய்த உணவு வந்து இருந்தது..அதை வாங்கி டைனிங் ஹாலில் இருந்த மேசை மீது வைத்து விட்டு அவளிடம் வந்தேன்..

தற்போது அவள் அழுகை கொஞ்சம் நின்று இருந்தது..

நான் அவளிடம் என்ன படித்து இருக்கிறாய் என்றேன்.. நான் பள்ளி படிப்பு மட்டுமே முடித்து இருக்கிறேன் அக்கா என்றாள்..

வேறு என்ன கைத் தொழில் தெரியும் என்று கேட்டேன்.. எனக்கு தையல் சமையல் மிகவும் அற்புதமாக செய்வேன் என்றாள்..

எப்படி இது நிகழ்ந்தது என்று கேட்டேன்.. நான் நினைத்தது போலவே தான் அவள் கதையும் இருந்தது.தன் காதலனே தன்னை ஏமாற்றி விட்டான் என்று சொல்லும் போது மீண்டும் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை..

அவன் படித்து பணியில் இருப்பதாகவும் தன்னை தவிர வேறு எவரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று காதல் மொழிகளால் அவளை கட்டி போட்டு இருப்பதையும் என்னிடம் சொல்லி சொல்லி அழுதாள்.. இங்கே இவள் மேல் பிழை இல்லை..

ஆனால் இந்த சமுதாயம் இப்படி நம்பிக்கையோடு தான் நேசித்தவன் கரம் பிடிப்பான் ஏமாற்ற மாட்டான் என்று தன்னை முழு காதலோடு ஒப்படைத்தவளை கேலி பேசி தூற்றும்.. என்ன அநியாயம் என்று நினைத்தேன்...

அவள் என்னிடம் நான் என்ன பிழை செய்தேன் அக்கா என்றாள்..

அவள் வயது பதினெட்டு தான் என்று அவள் சொன்னதில் தெரிந்து கொண்டேன்..

தற்போது பதினெட்டு வயது என்பது அறியாத பருவம் இல்லை என்றாலும் அவள் உணர்வுபூர்வமாக தோற்று இருக்கிறாள் என்பது தான் வேதனையான விஷயம்..

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..நீ பிழை இல்லை மா இந்த சமுதாயம் அவர்கள் கொண்ட பார்வை பல ஆண்களின் வக்கிர குணம் இது தான் பிழை என்று சொல்லி விட்டு அவளை சாப்பிட அழைத்தேன்..

இல்லை அக்கா வேண்டாம் ..நீங்கள் இந்தளவுக்கு என்னை பார்த்து கொண்டதே போதும்.. நான் வருகிறேன் என்று எழுந்தாள் கரம் கூப்பி கும்பிட்டு.. நான் அவள் கரம் மென்மையாக பற்றி  உட்கார வைத்தேன்..எங்கே செவ்வாய் என்று கேட்டேன்..

நான் ஒரு ஆதரவற்றவள்.. எங்கே என்று தெரியவில்லை.. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று அந்த நிலையிலும் தீர்க்கமாக சொன்னாள்..

எனக்கு சற்று நிம்மதியாக இருந்தது அவள் கூற்று..

அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்தேன்..

பிறகு நீ இங்கேயே இரு.. மாலையில் பேசலாம்.. எங்கேயும் தயவுசெய்து போய் விடாதே.. எனக்கு அவசர அலுவல் பணிகள் உள்ளது.. மாலையில் என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.. தயவுசெய்து செய்து போய் விட மாட்டாய் தானே என்று அவளிடம் கேட்டேன்.. இல்லை இல்லை அக்கா போக மாட்டேன்.. தங்களது இந்த அன்பிற்கு நான் ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் அல்லவா.. இங்கே என்னை போன்றவர்கள் வாழ்வது நரக வேதனை என்றால் இந்த சமுதாயம் பார்க்கும் பார்வையில் நான் கூனி குறுகி போய் விடும் அளவுக்கு அணு அணுவாக சாகடிப்பார்கள்.. என் கதையை கேட்பவர்கள் என்றாள்.. அதெல்லாம் விடு..நீ உன் கதையை ஏன் தம்பட்டம் அடித்து சொல்கிறாய்.. அந்த நிகழ்வு பற்றிய நினைவுகளை அழி.. நான் உனக்கு இருக்கிறேன் என்று அவள் முகத்தை கையில் ஏந்தி சொல்லி விட்டு மீண்டும் அலைபேசி எடுத்து என் மேலதிகாரியிடம் சொன்னேன் நான் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறேன் என்று.. அவர் ஆச்சரியம் அடையாமல் வாங்கம்மா நீங்களாவது விடுப்பு எடுப்பதாவது என்று தனக்கு தானே சிரித்துக்கொண்டே..

நான் அவளிடம் திரும்பி நான் வரட்டுமா என்று கேட்டுக் கொண்டே சில பல எளிய புத்தகங்கள் அவள் வாசிக்க ஏதுவாக வரவேற்பு அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு வானொலியை போட்டு விட்டு உனக்கு மதியம் சாப்பாடு ஆர்டர் செய்கிறேன் என்றேன்.. இல்லை அக்கா வேண்டாம்.. நான். தேநீர் வைத்து சில பிஸ்கட் எடுத்து கொள்கிறேன் என்றாள்.. அவள் ஏன் மறுக்கிறாள் என்று புரிந்தது.. சரி அங்கே சமையலறையில் ஏதாவது வேண்டும் என்றால் சமைத்து கொள் என்று சொல்லி விட்டு உன் பெயரை கேட்க மறந்து விட்டேனே என்றேன் சிறிது புன்னகைத்து..

என் பெயர் கங்கா என்றால் வறண்ட சிரிப்போடு..

உங்கள் பெயர் என்று அவசரமாக கேட்டாள்.. என் பெயர் நதி என்றேன்..

உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா என்று கேட்டாள் அவசரமாக.. நான் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டு லேசாக முறுவலித்து விடை பெற்று கொண்டு வெளியே வருகிறேன்.. என் முன் வாசலில்  தொட்டியில் உள்ள ரோஜாக்கள் அசைந்து என்னை கூப்பிட்டது.. நான் அதை அலுவலகம் செல்லும் அவசரத்தில் லேசாக வருட அதன் முட்களில் ஒன்று பதம் பார்த்தது..

நான் அது ஏற்படுத்திய வலியை பொறுத்து அதனிடம் உரிமையோடு மாலை வந்து கவனித்து கொள்கிறேன் உன்னை என்று சொல்லி விட்டு எனது வாகனத்தை எடுக்கும் போது எனது வீட்டில் உள்ள வானொலியில் காலம் மாறலாம் என் காதல் மாறுமா என்று மெல்லிய ஓசையில் கேட்டது.. அந்த பாடல் இங்கே எனக்கும் அந்த ரோஜாவுக்கும் உள்ளே உள்ள கங்காவுக்கும் பொருத்தமாக தான் இருக்கும் என்று தலையை இடம் வலம் அசைத்து வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக சாலையில் பயணிக்கிறேன்.. அலுவல் வேலைக்காகவா அல்லது வேறு கங்கா கண்களில் பட்டு விடக் கூடாது என்றா என்று என் ஆழ் மனம் என்னை கேள்வி கேட்டு கிண்டல் செய்வதை கொஞ்சம் புன்னகைத்து ரசித்தபடியே....

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:11/10/25.

செவ்வாய்க்கிழமை.

செவ்வாய், 4 நவம்பர், 2025

இன்றைய தலையங்கம்: யார் குற்றவாளிகள்?

 


#இன்றையதலையங்கம்:

#குற்றம் செய்தவர் யார்?

கோவை சம்பவம் பற்றி பல பேர் பலவிதங்களில் குற்றம் சுமத்தினாலும் ஒரு தமிழ் சமுதாயத்தில் நெடுங்காலமாக புரையோடிய போதை வஸ்து கலாச்சாரம் தான் முழுமுதற் காரணம் என்று சொல்வேன்.. அந்த பெண் தனியாக அங்கே ஏன் போகிறார் அப்படி இப்படி என்று கேள்வி எழுவதை ஒரு பக்கம் வைத்து விட்டு மிகவும் தீவிரமாக ஆராய்ந்தால் அங்கே நடந்த விஷயம் தான் கூர்ந்து கவனிக்க வேண்டும்..ஒரு பெண் ஒரு வேளை அங்கே அவரோடு வந்த இளைஞனால் பாதிக்கப்பட்டு இருந்து காவல் துறைக்கு புகார் மனு கொடுத்து இருந்தால் அந்த பார்வையில் வழக்கை எடுத்துச் செல்லலாம்.. ஆனால் அங்கே நடந்தது என்ன என்று பாருங்கள்..மூன்று இளைஞர்கள் போதையால் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவரை கீழ்தரமாக பயன்படுத்தி இருக்கிறார்கள்..இதை விட்டு விட்டு வழக்கை ஆரம்பிக்கும் போதே அந்த பெண்ணை குற்றவாளியாக வைத்து காவல் துறை வழக்கை கொண்டு செல்லக் கூடாது..முதலில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை குறைத்தாலே பாதி குற்ற செயல்கள் குறைந்து விடும்... மேலும் கிராமப் புறங்கள் வரை மிகவும் மோசமான நிலையே உள்ளது இந்த விஷயத்தில்... மக்கள் ஏழு மணிக்கு மேல் அவர்கள் ஊரிலேயே நடமாட முடிவதில்லை.இது பற்றி பல நாளிதழ்களில் செய்தி வந்தாலும் ஒரு மெத்தன போக்கே உள்ளது... அந்த பெண்ணை விடுங்கள் நேற்று யூடியூப் சேனலில் ஒரு வக்கீல் கேட்கிறார் ஒவ்வொருவரும் காவல் துறை பாதுகாப்பு தர முடியுமா என்று.. முதலில் நீங்கள் சொல்வது போல முதலமைச்சர் அந்த துறையை வைத்துக் கொள்ள தான் வேண்டுமா என்று கேள்வி எழுந்தாலும் எங்கே குற்ற செயல்கள் கட்டவிழ்ந்து நடக்கிறதோ அங்கே யார் பொறுப்பு ஏற்பது என்ற கேள்வியும் எழுகிறது.. அதனால் காவல் துறை முதலமைச்சர் வசம் வைத்துக் கொள்கிறார்கள்.. ஆனால் யார் வசம் இருக்கிறது என்பது பிரச்சினை இல்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆட்சியாளர்கள் இருப்பது தான் தவறு.. இது பற்றி நிறைய பேசியாகி விட்டது... காவல் துறை தமிழ் நாட்டை பொறுத்தவரை கைகள் கட்டிப் போடப்பட்டு தான் இருக்கிறது... ஏனெனில் அவர்களுக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லை...யாரோவர் போதையில் காவல் துறையினரை அடிக்கும் நிகழ்வு நடக்கும் போது அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நேர்மையான காவல் துறை முடிவெடுக்க முடிகிறதா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை... இந்த மாநிலமும் மாநிலத்து மக்களும் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக மாறி வருகிறார்கள் என்பது தான் முகத்தில் அறைந்த உண்மை... இங்கே சாதாரண பொது மக்களுக்கு எத்தனை இடையூறுகள் போதை வஸ்துவால் சீரழிந்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களால் என்று ஆட்சியை நடத்திக் கொண்டு வரும் தலைமைக்கு உரைக்கவே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை...

பார்ப்போம் வழக்கை எப்படி எடுத்துச் செல்கிறார்கள் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:04/11/25

புதன், 29 அக்டோபர், 2025

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...


அர்த்தங்களற்று பிடிபடாமல்

திரிகிறது வாழ்க்கை...

அதன் ருசிக்கொரு எல்லை

இங்கே எவரும் அப்படி வகுத்து விட 

முடியாது...

இங்கே எந்த ருசியும் தேவையில்லை 

என்று அமர்ந்து 

அந்த நதியை வேடிக்கை 

பார்க்கும் என்னையும்

சலனப்படுத்த ஓசை எழுப்பி

அது முடியாமல்

அலுத்துக் கொண்டு போகும் வேகத்தில் 

அங்கே பலபேர்

அதன் ஆக்ரோஷமான சுவைக்கு

அடிமையாகிறார்கள்...

இது தான் அதன் சுபாவம் என்று

நான் சற்றே திரும்பி புன்னகைத்து விட்டு 

மீண்டும் அந்த நதியை 

ரசிக்கிறேன் அவர்களை பற்றிய 

 எந்தவொரு உறுத்தலும் இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/10/25.

வியாழன், 23 அக்டோபர், 2025

இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்...

 


#இன்றையதலையங்கம்:-

#இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்:-

ஒரு மனிதனின் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு... பிறகு தான் எல்லாமே.. ஆனால் அந்த உணவை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை கிடைக்கிறது என்று பார்த்தால் நிச்சயமாக மனது வேதனை அடைகிறது.. ஒரு விவசாயியின் மன வேதனை மற்றொரு விவசாயிகளுக்கு தான் தெரியும்.. இங்கே பல நிகழ்வுகளை அரசியல் விவாதம் செய்யும் மீடியாக்கள் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்களுக்குள்ளாக்கும் வகையில் விவாதம் நடத்தி விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டாமா? பத்தோடு பதினொன்றாக செய்திகளை சொல்லி விட்டு போய் விட்டால் போதுமா என்று கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுகிறது...

பெரும்பாலான அரசியல்வாதிகள் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்த சொத்தை எழுதி வைக்கிறார்கள்... அந்த செலவு ஆகுமா டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யும் வரை பாதுகாத்து வைக்க குடோன்கள் கட்ட என்று கேட்க தோன்றுகிறது...

ஒரு பயிரை விளைய வைத்து அதை களம் வரை கொண்டு வர எத்தனை இன்னல்கள் சந்திக்க வேண்டி உள்ளது என்று ஒரு விவசாயியை சந்தித்து கேட்டு பாருங்கள்..

இங்கே நமது நாட்டில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்..

எந்த நாட்டிற்கும் கிடைக்காத காலநிலை நமது நாட்டிற்கு கிடைத்து இருக்கிறது... எத்தனை நாடுகள் பசி பட்டினியால் அவதிப்படுகிறார்கள் என்று கூகுளில் தேடி பாருங்கள்..

பசியால் காசா பகுதியில் மக்கள் படும் துயரத்தை நீங்கள் மீடியாவில் பார்த்து இருப்பீர்கள்...

இங்கே யாருக்கும் பயன் இல்லாமல் தானியங்கள் மழையாலோ அல்லது மற்ற காரணங்காளாலோ வீணாகிறது என்று நினைக்கும் போது பாரதியார் போல கோபம் வருகிறது... பாரதியார் தனியொருவருக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்துடுவோம் என்றார்...

ஆனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்றால் இந்த தேசத்தை ஆள்பவர்களை எரித்துடுவோம் என்று இன்று பாரதியார் இருந்து இருந்தால் நிச்சயமாக பாடி இருப்பார்...

ஒவ்வொரு விசயத்திற்கும் காரணத்தை தேடி கண்டுபிடித்து மீடியா கேட்கும் கேள்விகளுக்கு சமார்த்தியமாக பதில் சொல்லி விட்டு நகர்ந்து விட்டால் பிரச்சினை தீராது...நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகி விட்டது.. ஆனால் இங்கே விவசாயிகளுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தான் நாம் இருக்கிறோம்...

மாநில அரசு ஒரு பக்கம் மத்திய அரசை கையை காட்டுகிறது.. ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யுங்கள் என்று..

மத்திய அரசு ஒரு பக்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது..

இது இன்று நேற்று அல்ல...

காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது..

கடந்த எடப்பாடி ஐயா ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்ய சாக்கு தேவையான அளவு இல்லை என்று சாக்கு போக்கு சொன்ன காட்சிகள் எல்லாம் இன்னும் மறந்து விடவில்லை...

எது எப்படியோ இந்த விசயத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்..

நீங்கள் நெடுஞ்சாலை நான்குவழி சாலை எட்டு வழி சாலை எல்லாம் போடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து ஒரு சுமுகமான முடிவு எடுத்து விவசாயிகள் பக்கம் நில்லுங்கள்...

குடோன் கட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை...

உங்கள் பினாமி நிலத்தை கொடுத்தீர்கள் என்றாலே போதும் குடோன் கட்டி விடலாம்...

இந்த தேசம் எப்போதும் விவசாயிகளின் கண்ணீரை பார்த்துக் கொண்டே இருந்தால் அல்லது அவர்கள் தானாகவே தான் நேசித்த நிலத்தை கான்கிரீட் காடுகளாக விற்பனை செய்வதற்கு கொடுக்கும் நெருக்கடிகளை உருவாக்கி விட்டால் அது தான் இந்த தேசத்திற்கு ஆளும் அரசாங்கங்கள் சேர்த்து வைத்த கொடிய பாவம்...

இனியேனும் திருந்துங்கள்

இங்கே அனைத்தையும் அரசியல் மாயாஜால வார்த்தைகளில் அடைத்து வைத்து விட முடியாது...

அனைத்து விவசாயிகள் சார்பாக இந்த தலையங்கம் வெளியிடப்படுகிறது..

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:#24/10/25.

செவ்வாய், 21 அக்டோபர், 2025

வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...


எனது காத்திருத்தலின் 

வலியின் தகிப்பை

இங்கே நீ அறிய 

முடியாது போனதால் தான்

நான் ஏதேதோ சித்தம்

கலங்கியதை போல

செய்கிறேன்...

அன்றொரு நாள் மழை நாளில்

நீயும் நானும் சேர்ந்து பருகிய

தேநீரின் மிடரின் சுவையை

ஒரு அற்புதமான இசையை மீட்டெடுப்பது போல

நான் மீட்டி எனக்கான ஆறுதலை

தேடிக் கொள்கிறேன்...

இங்கே காதலின் தீண்டலின் சுவையை நீதான் உணர்த்தினாய்...

நீயே அதை வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிடுங்கி

அந்த கொழுந்து விட்டு எரியும்

தீயில் எறிந்து விட்டு எதுவும் நடவாதது போல செல்கிறாய்...

இத்தனையும் நடந்த பிறகும்

நீயும் நானும் கோர்ப்போம் என்று

நம்பி உன் வரவை ஆவலோடு

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

இந்த பேதைக்கு யார் ஆறுதல் என்று

எவரேனும் கேட்டால் அதுவும் நீயே என்று கொஞ்சமும் யோசிக்காமல்

சொல்லி விடும்

என் ஆழ்ந்த பெரும் காதலின்

உயிர் தீண்டலை புரிந்துக் கொண்டு

என் கரம் கோர்க்க வருவாயா என்று

இங்கே தனித்து நிற்கிறேன்

அந்த வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...

நீ வரும் நாளில் நான்

சித்தம் தெளிவேன் என்று

காத்திருக்கிறேன்

அதோ அங்கே பெய்யும் 

பெரும் மழையையும் பொருட்படுத்தாமல்

நெடுங்காலமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/10/25.






திங்கள், 20 அக்டோபர், 2025

இன்றைய தலையங்கம்

 


#இன்றையதலையங்கம்:-

அரசாங்கம் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக உள்ளது என்று சொன்னால் அதை நேரில் அனுபவித்து வரும் பொதுமக்கள் என்ன நிலையில் உள்ளது என்று அறிவார்கள்... தங்களது கண்களுக்கு முன்னே பலவகையான போதை வஸ்துவை பயன்படுத்தி தாய் தந்தையரை கொடுமைப்படுத்தி மற்றும் பொது இடத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி மோசமான சமூகத்தின் அடையாளமாக தற்போது இளைஞர் சமூகம் மாறிக் கொண்டே வருகிறது என்பதை இங்கே இந்த பதிவை வாசிக்கும் எவரும் மறுக்க முடியாது...

இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக நிறைய திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று மேடை தோறும் பேசி வரும் அரசாங்கம் இங்கே இளைஞர்கள் போதை வஸ்துவால் சீரழிகிறார்கள் என்று சொன்னால் மறுக்கிறார்கள் அல்லது அவர்கள் நலனில் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை இன்றி ஏதேதோ பேசி நழுவி விடுகிறார்கள்...கிராமப்புறம் வரை போதை வஸ்து பெருகி விட்டது.. நள்ளிரவு வரை மிகவும் அதிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் எவரையும் உறங்க விடுவதில்லை...

இது நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் தெரியும்...

ஏனெனில் ஒரு பள்ளியில் குடித்து விட்டு தகாத முறையில் ஆசிரியர்கள் வருவதும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவர்களை பணி இடை நீக்கம் செய்வதும் தொடர் கதையாகிறது... ஏன் பணிஇடை நீக்கம் செய்ய வேண்டும்... அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்க வைக்க அப்படி என்ன தயக்கம் இந்த அரசாங்கத்திற்கு என்று தெரியவில்லை...

ஆனால் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் எல்லா அரசியல் கட்சிகளும்...

மக்களுக்காக தான் ஒழுங்கான அமைதியான சமூகத்தை உருவாக்க தான் அரசியல் கட்சிகளே தவிர ஒரு இனத்தை அழிப்பதற்காக அல்ல... ஏனெனில் எவ்வளவு மதிப்பு மரியாதை கொண்ட தமிழ் நாட்டின் பெருமை மிகவும் மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது...

இனியேனும் அரசியல் கட்சிகள் திருந்த வேண்டும்...

ஏனெனில் ஓட்டு அரசியலையும் தாண்டி மக்கள் தற்போது தமது வீட்டு வாசல் வரை சமூக சீர்கேடுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஒரு நூலகத்தின் முன்பு போதை வஸ்து மற்றும் சாராய பாட்டில் இப்படி கிடப்பதை எந்த அறிவார்ந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது...

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தான் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வேத வாக்கு...

கொஞ்சம் சமூக அக்கறை கொண்டு அரசியல் கட்சிகளை நடத்தி வாருங்கள்...

இல்லை என்றால் அதற்கான விளைவுகளை மக்கள் மிகவும் அற்புதமாக கொடுத்து விடுவார்கள்...

இங்கே கட்சி சார்பின்றி நடுநிலை என்று ஒன்று இருக்கிறது... சமூக அக்கறை என்று ஒன்று இருக்கிறது...

தமது தீவிரமான விசுவாசி எங்கே போய் விட போகிறார்கள் என்று கட்சி தொண்டர்களை நினைக்காதீர்கள்.. ஏனெனில் அவர்கள் குடும்பமும் இதே தமிழ் சமூகத்தில் பல அருவருக்கத்தக்க விசயங்களை தமது வீட்டு இளைஞர்கள் மூலம் அனுபவித்து வருகிறது...

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்!

அது நல்ல சமூகத்தின் பாதையை உருவாக்கட்டும்...

தீபாவளி சரக்கு விற்பனை காசு எவ்வளவு தேறியது எவ்வளவு கல்லா கட்டினோம் என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அரசாங்கம் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்... இல்லை என்றால் அவர்கள் மனசாட்சி அவர்களுக்கு தண்டனை கொடுக்கட்டும்...

உப்பு தின்பவன் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.. இது இயற்கையின் நியதி.. 🍂🍁👣.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/10/25.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

நிகழ் கால கவிதை 🍂


#இன்றைய #நிகழ்கால #கவிதை:-

வடகிழக்கு பருவ மழையை 

எதிர் கொள்ள 

அரசு தயார் என்று

மாலையில் அறிக்கை வருகிறது 

அரசிடமிருந்து...

இந்த அறிக்கையை பார்த்து விட்டு

மழை அதனாலென்ன...

நீங்கள் என்னை வேடிக்கை 

பார்த்துக் கொண்டே இருக்கும் போது

ஒழுங்காக கழிவு நீர் மேலாண்மை 

இல்லாமல் சாலையில் பெருகி

நோய் எனும் அரக்கனை பரப்பி

காவு வாங்க காத்திருக்கிறார் 

கால தர்மன் என்கிறது நையாண்டியாக...

இங்கே வீடுகளில் நீர் சேமிப்பு 

தொட்டிகளில் எல்லாம் தமது கைகளை 

ஏதோ உள்ளே

ஆராய்ச்சி செய்வது போல 

போஸ் கொடுத்து உங்களை(அரசை) ஏமாற்றி

ஊதியம் வாங்கி செல்கிறார்கள்...

வழக்கம் போல அரசு இத்தனை இடத்தில் நாங்கள் தொடர் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்று மீடியாவிற்கு பேட்டி கொடுத்து தனது கடமையை முடித்துக் கொண்டு தேர்தல் வேலைகளுக்கு தயார் ஆகிறது ஆளும் அரசாங்கம்...

எதிர் கட்சிகள் அங்கே மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூப்பாடு போட்டு இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் 

இது என்ன அரசா காவு வாங்கும் 

அரக்கரா என்று கேள்வி கணைகளை

தொடுத்து விட்டு முகத்தில் 

அரசாங்கத்திற்கு ஒரு குட்டு வைத்த 

களிப்பில் தனது தேர்தல் பேரத்தை கூட்டணி கட்சிகளிடம் தொடங்கி விடுகிறது...

இந்த களேபரத்தில் தமது குடும்பத்தில் 

ஒருத்தர் இறந்ததை அன்றே மறந்து 

அரசு கொடுக்கும்

நிவாரண தொகையை 

வாங்கிக் கொண்டு 

தத்தமது வேலைகளில் 

மூழ்கி போகிறார்கள் பொது ஜனங்கள்...

இதென்ன அநியாயம் என்று

அங்கே ஊழி தாண்டவத்திற்கு

கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிறது

இந்த பிரபஞ்சம்...

#நிகழ்காலகவிதை.

#வடகிழக்குபருவமழையும்

#இந்த #ஜனநாயகமும்

#பொதுஜனமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.

ஒரு நதியின் பயணம் போல..

 


ஒரு நதியின் பயணம் போல

வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவதில்

அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை

உங்களுக்கு...

அது உங்களை எவ்வித சிரமமும் 

இல்லாமல் ஏந்தி

அந்த கரையின்

அற்புதத்தை காட்ட நினைக்கிறது.. 

 நீங்களோ அந்த வாழ்வெனும் நதியோடு

பிணக்கம் கொள்கிறீர்கள்...

பாவம் அது என்ன செய்யும்

நீங்கள் அந்த அற்புதத்தை

காணாமலேயே அதற்குள் அடங்கி 

மூழ்கி போகும் போது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

நீயும் நானும் சேர்ந்து பருகிய தேநீரின் வாசம்...

#தேநீர் 


நீயும் நானும் சேர்ந்து பருகிய 

 வாசமும் சுவையும் இன்னும் 

அந்த தேநீர் விடுதியில் 

நமது ஞாபகமாக ஒட்டிக் கொண்டு 

இருக்கிறது ...

வெறும் அழியாத கறையாக...

நான் அதை வேடிக்கை பார்க்கிறேன் 

என்னை மறந்து!

சார் மன்னிக்கவும் அந்த கறை

நாங்கள் எவ்வளவு முயன்றும் 

அகலவில்லை என்று பணிவாக சொல்லி 

தேநீர் கோப்பையை

அந்த கறையை விட்டு தள்ளி

வைக்கிறார் அந்த விடுதி மனிதர்

நானோ முகத்தை திருப்பி சத்தம் இல்லாமல் அழுகிறேன்...

அந்த தேநீர் கறையை நினைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10 /10/25

அந்த நகர காடுகளின் வெப்பத்தில்...

 

அந்த நகர காடுகளின்

வெப்பத்தில் தகிக்கிறது...

இந்த பிரபஞ்சம்...

அதோ அங்கே நகர காடுகளிடமிருந்து 

தப்பி பிழைத்த

ஒற்றை மரத்தின் நிழலில்

அடைக்கலமாகி

இந்த அகோர பசிக் கொண்ட 

மனிதர்களை பற்றி

ஆயிரம் புகார்களை

தனது மொழியில்

ஒப்புவித்து அங்கே தனது கூட்டில்

இரவின் சூட்சமத்தில்

அமைதிக் கொண்டு 

அந்த குருவி

உறங்க போவதை பார்த்து 

அங்கே இருந்த காலமோ

மென்மையாக விசிறி 

தாலாட்டு பாடுகிறது

அந்த தாலாட்டில்

இந்த பிரபஞ்சமே

பேரமைதி கொண்டு உறங்கி கிடக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.


ஞாயிறு, 12 அக்டோபர், 2025

என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்...

 


ஜூபின் ❤️ என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்... எவ்வளவு எளிமையான மனிதராக சமூகத்தில் வலம் வந்து இருக்கிறார் என்று அவரது காணொளியை பார்க்கும் போது வியந்தேன்... ஒரு இறப்பில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் கண்ணீர் மல்க கலந்துக் கொண்டு சாலை எங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்... இவரது எளிமை மற்றும் தர்மசிந்தனை தான் காரணம்... இன்னும் இவரது நினைவுகள் அகலவில்லை... உண்மையில் எனக்கு ஹிந்தி தெரியாது... ஆனால் ya Ali பாடலை இவருக்காகவே நான் ஆங்கில மொழியில் வைத்து பாடினேன்...

நிச்சயமாக இவரது இறப்பின் மௌனம் கலைய வேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனை... கண்ணீரோடு விடை கொடுத்த போதும் நீங்கா நினைவுகளாக எப்போதும் நெஞ்சில் ஜூபின் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 4 அக்டோபர், 2025

இனியொரு விதி செய்வோம்...

 


#இன்றையதலையங்கம்:-

மிக பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் வாழ்ந்த தமிழ்நாடு தற்போது கலை வேறு அரசியல் வேறு என்பதில் தடுமாறி நிற்கிறது என்பது தான் ஜீரணிக்க முடியாத காலக் கொடுமை... எத்தனை நூலகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது... அங்கே உள்ள உலக அரசியல் தலைவர்கள் பற்றியோ உள்ளூர் அரசியல் தலைவர்கள் பற்றியோ மிகவும் நிதானமாக வாசித்தவர்கள் எத்தனை பேர்... இன்றைய இளைஞர்கள் கொஞ்சமும் புத்தக வாசனை இல்லாத மனிதர்களாகவே வலம் வருகிறார்கள்...சே குவேரா சட்டை பெருமிதமாக அணிந்து கொள்வார்கள்... ஆனால் அவரது புரட்சி எங்கே எப்படி ஆரம்பித்து எத்தனை இடர்களை கடந்து இன்றும் ஒரு புரட்சியாளராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்று எத்தனை பேர் அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது கேள்வி குறி தான்...இது சாதாரண வாசிப்பாளருக்கு சாத்தியம்... ஆனால் அரசியல் ஆர்வம் மிகுந்தவர்கள் அரசியலில் பெரிதாக புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இப்படியான மனிதர்களை ஆழமாக வாசித்து அதன் பிறகு அரசியல் புரட்சி செய்ய வருகிறார்கள்...

மேம்போக்கான அரசியல் மற்றும் துட்டுக்கு அரசியல் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் எழும் போதெல்லாம் கூட்டணி தர்மம் என்று ஓடி ஒளிந்து கொள்ளும் அரசியல்...இப்படிதானே இன்றைய அரசியல் போகிறது...மேலும் கட்சியில் உயிரைஐ கொடுத்து மக்களுக்காக சேவை செய்பவர்களுக்கு உண்மையில் சீட் கொடுக்கிறார்களா என்று அந்தந்த பெரிய கட்சிகள் தமது மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்...அரசியல் பற்றிய உண்மையான உருவை மாற்றி இது தான் அரசியல் என்று மக்கள் மனதில் திணிப்பவர்களுக்கு சூட்டோடு சூடாக ஒரு குட்டு நீதிமன்றம் வைக்கட்டும்...


மேலும் சாலை என்பது மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்டது...அதை அடைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரமோ பேனர்கள் வைக்கும் கலாச்சாரமோ இனி எப்போதும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்கட்டும்...

எல்லாவற்றிற்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றம் நழுவாமல் தானே முன்வந்து இன்றைய இளைஞர்கள் சீரழிந்து சமுதாயத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி வைத்து இருப்பதற்கு அரசாங்கம் பதில் சொல்ல காலக்கெடு விதிக்கட்டும்...

எப்படி இருந்த தமிழ் நாடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டதை ஆழ்ந்த வருத்தம் நிறைந்த மனதோடு கண்ணீரோடு பெரும்பான்மையான பொது ஜனங்கள் மௌனமாக அழுவதை கொஞ்சம் உற்று கேளுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் வைத்து தமிழ் நாட்டில் அங்கங்கே நடக்கும் மோசமான நிகழ்வுகளை இன்றைய ஊடகங்கள் சுட்டிக் காட்டட்டும்...

இடித்துரைப்பவர்கள் இல்லாமல் போனால் இந்த நாட்டை ஆள்பவர்கள் மட்டும் அல்ல குடிமக்களுக்கும் நாசமாக தானே போவார்கள்...

இனியொரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்...

#இனியொருவிதிசெய்வோம்

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:04/10/25/சனிக்கிழமை.

வியாழன், 2 அக்டோபர், 2025

இங்கே மரணிக்காத இரவொன்று இருந்தால் சொல்லுங்கள்...


எனக்காக காத்திருந்து களைத்து 

சிதைந்து போன 

நொடிகளை தேடினேன் 

திடீரென ஞாபகம் வந்தவனாக..

அதுவோ கோபித்து 

கரைந்து போனது 

காலத்திற்குள் என்று 

அந்த வாழ்வின் சாட்சி என்னிடம் 

கொஞ்சமும் இரக்கமின்றி 

சொல்லி விட்டு 

விடுவிடுவென்று பயணிக்கிறான்...

நான் அப்படியே அந்த 

வாழ்வெனும் சாலையில் உறைந்து 

நிற்பதை பார்த்து 

பொறுக்காமல் என் மீது சிறிது 

அன்பு கொண்ட ஒருவர் 

சீட்டு கட்டில் ஜோக்கர் இல்லாமல் 

வெற்றி அடைவதும் 

சாத்தியமான ஒன்று தானே என்று 

சமாதானம் செய்து 

அங்கே இருந்த தேநீர் விடுதியில் 

ஒரு கோப்பை தேநீர் வாங்கி 

தருகிறார்...

அந்த தேநீரின் சில நிமிட சுவையில் 

நான் சகலமும் மறந்து 

பயணிக்கிறேன்...

இங்கே மரணிக்காத இரவு என்று 

ஒன்று இருந்தால் சொல்லுங்கள்...

நான் அதில் மறைந்துக் கொள்ள 

கேட்கிறேன் என்று 

நினைத்து விடாதீர்கள்...

அந்த இரவிடம் எந்தவித 

இடையூறும் இல்லாமல் 

இடைவெளி இன்றி 

நான் சில பாடங்களை 

கற்றுக் கொள்ள வேண்டும் ...

இப்படிக்கு இரவை நேசிப்பவன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/10

/25/வெள்ளிக்கிழமை.


திங்கள், 29 செப்டம்பர், 2025

பாட்டி வீடெனும் சொர்க்க கூடு

 

 


வயலில் இருந்து கிளம்பி வரும் போது வழியில் அந்த அற்புதமான ஆலமரத்தின் அடியில் நண்பகல் வேளையில் அமர்கிறேன்...கொஞ்சம் களைப்பாக இருந்தது...பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து பருகி விட்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தேன்...நல்ல வெயில் என்பதால் அந்த மரத்தின் இலைகள் அசைந்து என் மேனியை வருடியது மிகவும் இதமாக இருந்தது...ஆம் நான் உங்களிடம் என்னை பற்றி சொல்ல மறந்து விட்டேன் அல்லவா...நான் ஒரு கணிப்பொறியாளர்...இதோ சில நாட்கள் விடுமுறை கிடைத்ததால் எனது பாட்டி வீட்டிற்கு வந்து இருக்கிறேன்...காலையில் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு பாட்டி வயலுக்கு வந்தேன்...பாட்டி வீடு புழக்கடையோடு உள்ள வீடு..மிகவும் நேர்த்தியாக அதே சமயத்தில் கலை நுணுக்கங்களோடு அந்த வீடு அமைந்து இருந்தது எனக்கு எப்போதும் பிடிக்கும்..எப்போதெல்லாம் எனக்கு விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கே வந்து விடுவேன்..தாயார் வருவதற்கு இயலாது..தந்தை ஒரு மத்திய அரசு துறையில் பணியாற்றும் அதிகாரி என்பதால்... அந்த நகரத்தின் மத்தியில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் ஓரளவு பெரிய வீடு அது.எமது தந்தை பார்த்து பார்த்து கட்டிய வீடு தான் என்றாலும் எப்போதும் எனக்கு பாட்டி வீட்டின் இந்த அமைதியான சுற்றுச்சூழல் உள்ள வீடு தான் மிகவும் பிடிக்கும்...அந்த நகர கூட்டின் அலங்காரங்களை விட இந்த பாட்டி வீட்டின் பின்புறம் செடிகொடிகள் தலையசைத்து என்னை உற்சாகமாக வரவேற்கும் இந்த வீடு தான் உயிரோட்டம் நிறைந்ததாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்...அப்படியே அமைதியாக இப்படி எண்ணற்ற எண்ணங்கள் மனதில் ஓட அந்த மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தேன்... சில பல குருவிகளின் கீச் கீச்சென்று சத்தம் எனது செவிகளுக்கு இனிமையான இசையாக இருந்தது... அப்படியே நான் வாழ்ந்து வந்த நகரத்தினை மனதில் ஓட விட்டேன்... இந்த சூழலுக்கு மாறாக சாலையில் நெருக்கமான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களின் ஓடும் ஓசை கேட்டு கொண்டே இருக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும்..சாலையில் சில சமயங்களில் நான் நடந்து செல்லும் போது ஆபத்தான அமைதியை சீர்குலைக்கும் டயர்களின் கீறிச் சத்தங்கள் என் அருகில் வந்து உரசியது போல போகும் போதெல்லாம் என் இதயத்தின் துடிதுடிப்பை அதிகரிக்கும்... என்ன இது வாழ்க்கை என்று நான் நினைத்து கொண்டு சாலையில் அவர்களை ஒரு முறை முறைத்து பார்த்து விட்டால் கூட அவர்கள் வாயில் இருந்து வரும் வசவுகளை சொல்லி மாளாது...

இப்படியே ஒப்பீடு தொடர்ந்த நினைவலைகளுக்கிடையே என் திறன் பேசி சிணுங்கியது... பாட்டி தான் அழைக்கிறார்... அலைபேசியை எடுத்து சொல்லுங்கள் பாட்டி என்றேன்...மதிய சாப்பாடு தயார் ஆகி விட்டது கண்ணா...வா சாப்பிட என்றார்... சரி பாட்டி நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன்... இல்லயடா கண்ணா நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம் நீ பொறுமையாக வா என்றார்...

நான் சரி பாட்டி என்று சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு மீண்டும் அந்த ஆழ்ந்த அமைதியான சூழலை அனுபவிக்கிறேன்...இதோ நான் இளைப்பாறும் இந்த மரத்தின் அடியில் தான் வயல் வேலை இல்லாத நாள்களில் தாத்தாவும் பாட்டியும் பெரும்பாலான கதைகளை பேசி ஆனந்தமாக பொழுதை கழித்து வந்தோம் என்று வெட்க சிரிப்போடு அடிக்கடி என்னிடம் சொல்லி இருக்கிறார்... எவ்வளவு அற்புதமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் சொல்லொணா ஆனந்தம் அடையும்... பிறகு எப்படி இப்படி மாறியது வாழ்க்கை என்று யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியாமல் தலைவலி வந்தது தான் மிச்சம்...இதை பற்றி அம்மாவிடம் கேட்டால் ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாய் கண்ணா... இந்த வாழ்க்கைக்கு என்ன... உனக்கு தகுந்த வயது வரும் போது எல்லாம் புரியும் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார்... ஆனால் இது வரை நான் அன்று கேட்ட கேள்விக்கான விடை தான் இன்னும் கிடைக்கவில்லை...

இப்படி யோசிக்கும் போதே அந்த மரக்கிளையில் இருந்த இரண்டு குருவிகள் கீழே வந்து அங்கே கிடந்த பழங்களை கொத்தி கொத்தி தின்றது... பிறகு அப்படியே அந்த மரத்தடியில் மண்ணில் கிடந்த பூச்சிகளை சாப்பிட தொடங்கியது...அதை அப்படியே ரசித்து பார்த்து இருந்தேன்...

பிறகு கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்ததோ இரண்டும் பறந்து போனது...

நான் அது போன திசையையே ஒரு வித ஆச்சரியமாக பார்த்து இருந்தேன்... பிறகு இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் எங்கோ இருக்கும் இந்த பறவைகள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக ஆனந்தமாக வாழ்வதற்கு எது காரணமாக இருக்கும்...இதோ இப்போது மண்ணில் கிடந்த பழங்கள் மற்றும் பூச்சிகள் அதற்கு உணவாக இருக்கும் இடத்தில் கிடைத்ததா அல்லது இந்த பரந்து விரிந்து கிடந்த மரக்கிளையில் எது பற்றியும் கவலைக் கொள்ளாமல் வாழ்ந்து விட இயற்கை கொடுத்த இந்த கொடையா என்று ஆச்சரியமாக யோசித்துக் கொண்டே இருக்கும் போதே அந்த இரண்டு குருவிகளும் வேகமாக ஒன்றொடொன்று சிறகை உரசி கீச் கீச்சென்று சத்தம் போட்டுக் கொண்டே அங்கே வந்து அது கட்டிய அழகான பின்னலோடு கூடிய கூட்டில் புகுந்து கொண்டு கொஞ்சம் தலையை நீட்டி என்னை பார்த்து மீண்டும் கீச் கீச்சென்று கத்தியது... நான் எனது யோசனையை விட்டு விட்டு கொஞ்சம் தலையை உயர்த்தி பார்த்தேன்... அந்த ஜோடி குருவிகள் என்னை பார்த்ததும் தனது சிறகை படபடவென்று அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியது... நான் அதை பார்த்து சிறிது சிரித்தபடி உற்சாகமாக கையசைத்தேன்...

மீண்டும் அலைபேசி ஒலித்தது... நான் திரையில் தோன்றிய பெயரை பார்த்து விட்டு எடுத்து இதோ வருகிறேன் பாட்டி என்று சொல்லி விட்டு அலைபேசியை எனது சட்டைப்பையில் வைத்து விட்டு அந்த குருவி இருக்கும் கூட்டை பார்த்து நான் வருகிறேன் என்று கையசைத்தேன்... அந்த குருவிகளும் சரி நாளை பார்க்கலாம் என்று தனது மொழியில் மெலிதான குரலில் கீச் கீச்சென்றது...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள சூட்சுமங்கள் எவ்வளவு அற்புதமானது... இவ்வளவு அற்புதங்கள் இருந்தும் எந்தவித அகங்காரமும் இல்லாமல் எப்படி இவ்வளவு அடக்கமாக மௌனமாக இருக்க முடிகிறது என்று நினைத்து மிகுந்த ஆச்சரியத்தை அடைந்துக் கொண்டே நடக்கும் போது மீண்டும் அலைபேசி சிணுங்கல்...யார் என்று பார்த்தால் தாயார் ... சொல்லுங்கள் அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்றேன்... நான் நலமாக தான் இருக்கிறேன்... அங்கே நீயும் பாட்டியும் எப்படி இருக்கிறீர்கள் நீயும் பாட்டியும் என்ன செய்கிறீர்கள் சாப்பிட்டு விட்டீர்களா இருவரும் என்று படபடவென்று கேட்டார்.. கொஞ்சம் பொறுங்கள்.. ஏன் இத்தனை கேள்விகள்... நான் தற்போது தான் வயலில் இருந்து வீட்டுக்கு போகிறேன்.. போய் தான் சாப்பிட வேண்டும் என்றேன்...

ஓ அப்படியா ஏன் இவ்வளவு நேரம்.. விரைவில் போய் சாப்பிடு என்று சொல்லி விட்டு கண்ணா ஒரு விஷயம் சொல்ல தான் உன்னை அழைத்தேன்..நீ எப்போது கிளம்பி வருகிறாய் என்று கேட்டார்..

ஏன் இந்த அவசரம்.. நான் கிளம்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் ஏன் என்று கேட்டேன்...

அதில்லைடா உன் பெயரில் உனக்கு ஒரு வீடு அப்பா இங்கே வாங்குவதாக பேசினார் அல்லவா...அது தற்போது பேரம் முடிந்தது... அந்த வீட்டின் ரெஜிஸ்ட்ரேஷன் வரும் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று வீட்டை விற்றவர் சொன்னார்..அந்த வேலைக்காக தான் உன் வருகையை பற்றி கேட்டேன் என்றார்...

அம்மா இப்போது எனக்கு அந்த வீடு தேவையில்லை எனக்கு தற்போது அங்கே நீங்கள் வசித்து வரும் வீடே போதும்... மேலும் நான் அடுத்த வருடத்தில் இருந்து இங்கே பாட்டி வீட்டில் தான் வசிக்க போகிறேன் என்றேன்..

ஏ என்னடா கண்ணா சொல்கிறாய்... சும்மா விளையாடாதே என்று பதட்டமாக கேட்கிறார்...

நான் விளையாடவெல்லாம் இல்லை அம்மா.. நான் மிகவும் தெளிவாக தான் சொல்கிறேன் என்றேன்...

ஏன் கண்ணா... அங்கே இருந்து என்ன செய்வாய் உன் திருமணம் முடிந்ததும் நீ உனது வாழ்க்கை இனிமையாக துவங்க தானே அந்த வீடு அப்பா ஆசையாக வாங்கினார் நீ ஏன் இப்படி...

அம்மா எனக்கு வசிக்க மிகவும் அற்புதமான கூடு இங்கே பாட்டி வாழ்ந்த இயற்கை சூழ்ந்த பெருங் கூடாக இந்த வீடு உள்ளது... நான் இதில் தான் பாட்டியோடு எனக்கு மிகவும் பிடித்த விவசாயம் செய்துக் கொண்டு அற்புதமான வாழ்க்கை வாழ போகிறேன் என்றேன்...

என்னடா சொல்கிறாய் எனக்கு தலை சுற்றுகிறது என்றார் அம்மா...

அம்மா இதெல்லாம் உனக்கு இப்போது புரியாது... காலம் உங்களுக்கு புரிய வைக்கும் என்று சொல்லி விட்டு அலைபேசியை துண்டிக்கவும் பாட்டி வீடு வரவும் சரியாக இருந்தது...

பாட்டி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வாய் நிறைய சிரிப்போடு வாடா கண்ணா சாப்பிடலாம்... உனக்கு பிடித்த கத்தரிக்காய் கூட்டு வத்தல் குழம்பு வடகம் கார வடை தயிர் பச்சடி செய்து இருக்கிறேன் என்று சொல்லி கொண்டே வேகமாக வீட்டின் தாழ்வாரத்தை தாண்டி கூடத்திற்கு சென்று புழக்கடையில் உள்ள வாழையிலையை பறித்து வந்து கூடத்தில் பரிமாற ஆயத்தமாகிறார்...

நான் அவர் இலையில் பறிமாறிய அழகை ரசித்தபடியே சாப்பிட்டு முடித்து புழக்கடையில் கை கழுவ சென்றேன்.. அங்கிருந்த மரங்களின் கிளைகளில் இருந்த என்னை வந்த நாளில் இருந்து பார்த்து பழகிய ஒரு குருவி என்னை பார்த்து கீச் கீச்சென்று சிறகை அடித்து உற்சாகத்தை காட்டியது...

நான் அதற்கு பதிலுக்கு உற்சாகமாக ஒரு கையை ஆட்டி விட்டு உள்ளே சென்று எனக்கான அறையில் ஓய்வெடுத்தேன்... நிம்மதியாக எனது கண்களை தூக்கம் தழுவியது... எனது அறையில் உள்ள அந்த வானொலியில் சூழலுக்கு தகுந்தபடி தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாடவும் அந்தி மயங்கவும் சரியாக இருந்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/09/25/திங்கட்கிழமை.

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...