ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

செவ்வாய், 31 டிசம்பர், 2024

இன்று போல தான் நாளையும் இருப்பேன்...


இன்று போல தான் 

நாளையும் இருப்பேன்...

யுகம் யுகமாக 

உற்சாகமாக பயணிக்கும் எனக்கு 

இந்த சிறு துளி 

காலத்தின் வரையறைகள் 

எதுவும் செய்ய போவதில்லை..

நான் நானாக பயணிக்கும் வரை...

ஒரு நதியின் பேரமைதியை போல 

சலனமற்று தொடரும் 

என் பயணத்தில் எந்த கால தேசமும் 

எல்லை இல்லை...

நான் நானாக எப்போதும்...

#இரவு கவிதை🎻 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/24/செவ்வாய் கிழமை 

வாழ்க்கை அற்புதமானது...

 


வாழ்க்கை அற்புதமானது!

இயற்கையின் பேரன்பில் 

நாம் அனைவரும் அரவணைத்து 

கிடக்கிறோம் என்று நம்புங்கள்!

அப்போது தான் வாழ்வின் அமிர்தம் 

உங்களுக்கு புரியும்!

மீண்டும் சொல்கிறேன் 

வாழ்க்கை அற்புதமானது!

நம்புங்கள் இங்கே எதுவும் 

நம்மிடம் இருந்து 

களவு போகவில்லை!

வாழ்வின் தேஜஸை 

உணரும் போது 

ஜகத்தின் பேருண்மை 

உங்களுக்கு புரியும்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 31/12/24.

நேரம்: இரவின் 

மெல்லிய கைகளில் 

அடைக்கலமான போது..

திங்கள், 30 டிசம்பர், 2024

இருப்பை பற்றி கவலை இல்லாமல் பயணிக்கிறது காலம்...


இருப்பைப் பற்றி

கவலை இல்லாமல்

பயணிக்கிறது காலம்...

நாம் நமது இருப்பை

நிலைநிறுத்திக் கொள்ள

போராடுகிறோம்

காலத்தோடு..

காலம் புகழ் பெறுகிறது..

நாமோ இருப்பை பற்றிய

கவலையில் கதறி அழுகிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 28 டிசம்பர், 2024

வருடங்கள் எங்கே என்று கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள்...


பொழுது புலர்வதும் 

மறைவதும் இங்கே சத்தம் இல்லாமல் 

நடந்துக் கொண்டே தான் 

இருக்கிறது...

நானும் பத்தோடு பதினொன்றாக 

இல்லாமல் கூடுதல் ரசனையோடு 

இந்த இயற்கையின் 

அதீத காதலை ரசித்து 

எனது கருவியில் படம் 

பிடித்துக் கொண்டே

நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...

காலமோ என் பின்னே நீ இப்படி 

இலக்கின்றி அலைவது 

சரியல்ல என்று 

கூவிக் கொண்டு 

என் பின்னால் ஓடி வருவதை ரசித்து 

அதையும் என் கருவியில் அடக்கி 

உற்சாகமாக நடக்கிறேன் 

அந்த அடர்ந்த காட்டுவெளியில்...

இது தான் என் வாழ்வின் 

முடிவில்லா பயணம் ...

இங்கே எனது வாழ்வின் கணக்கில் 

வருடங்கள் எங்கே என்று 

எனக்கு தெரியவில்லை... 

நீங்கள் தெரிந்தால் கண்டுபிடித்து 

என்னிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் 🦋🤷

என்று கொஞ்சம் சத்தம் போட்டு 

அறிவித்து விட்டு

இந்த பிரபஞ்சத்தில் மெதுவாக 

மிதக்கிறேன்...

காலமும் என்னை பார்த்து 

பெருமிதம் கொள்கிறது...

இவ்வளவு ரசனையா என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :29/12/24.

வியாழன், 26 டிசம்பர், 2024

அந்த ஒற்றை சொல்லை விட்டு இருந்தால்...


ஒன்றும் இல்லை என்று 

ஒரே சொல்லை சொல்லி சொல்லி 

ஆயிரம் யுகங்களை 

கடந்து விட்டேன்...

அந்த ஒரு சொல்லை 

நான் மறந்து இருந்தால் 

இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை 

சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்...

அங்கே எந்தவித கல்மிஷமும் 

இல்லாத 

மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் 

என்றேன் 

அந்த காலத்திடம்...

காலமோ அதை விட இது தான் உனது 

ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக 

 உனது மனவலிமையின் 

தகர்க்க முடியாத 

இரும்பு கலசத்தின் உறுதியை

நான் பல யுகமாக உணர்ந்து வருகிறேன்...

இதோ பார் உனது துக்கத்தின் 

கீறல்கள் ...

எனக்கு ஏற்படுத்திய வலியின் 

இரத்த கசிவு 

இன்னும் நிற்காமல் 

என் உடல் எங்கும் 

பயணிக்கிறது என்று என்னிடம் 

அதன் உடலை காட்டிய போது 

நான் விம்மி விம்மி அழுது 

அந்த காலத்தின் தோளில் 

சாய்கிறேன்...

அந்த காலமோ என்னை மிருதுவாக 

அதன் இரு கைகளால் அணைத்து 

பெரும் காதலோடு 

மௌன மொழியில் 

ஆறுதல் சொன்னது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 26/12/24.

புதன், 25 டிசம்பர், 2024

உயிரோட்டமான அந்த காதல் அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை...


இதோ அந்த உன்னோடான

ஊடலுக்கும் தேடலுக்குமிடையில் தான் நான் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறேன்....

எனினும் இந்த தேநீரின் பெரும் காதலோடு கூடிய இதழ் ஸ்பரிசத்தில் தான் 

தினமும் உன்னோடான காதல் நினைவுகளை கொஞ்சம் மறந்து 

ஏதோவொரு பித்து நிலையில் இருந்து தப்பித்து ஜீவித்து இருக்கிறேன்...

நீ என்னோடு சேராத காலமும் இடைவெளியும் 

அப்படி ஒன்றும் வீணாகி விடவில்லை தான்...

இதோ என் கையில் பெரும் நறுமணத்தோடு என் இதழில் பதிக்கும் முத்தத்தின் தேநீர் சுவையோடு இன்றைய காலத்திற்குரிய கடமைகளை செய்ய ஓடோடி போக எத்தனித்து விட்டேன்...

என் நிலைமையை அறிந்த தேநீரும் மாலையில் நாம் சந்திப்போம் என்று 

என்னை பெரும் ஏக்க பார்வை பார்த்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தது...

இங்கே எந்த உயிரோட்டமான காதலும் அப்படி ஒன்றும் தோற்று விடவில்லை தனக்கு தானே ஆற்றுப்படுத்திக் கொண்டு 

அந்த சாலையில் ஓடும் மக்களோடு நானும் ஒரு புள்ளியாக மறைகிறேன்...

மீண்டும் சந்திப்போம் மாலையில் என்று அந்த தேநீர் கோப்பைக்கு மீண்டும் ஒரு இதழ் முத்தம் பதித்து...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள் 26/12/24.

என் ஆயிரம் தேடலின் சாம்பலில் வெப்பத்தில்...

 


அதோ எந்த தேடலும் 

இல்லாமல் ஒரு மனுஷி அங்கே 

அந்த சாலையில் பயணிக்கிறாள் 

என்று பலரும் கூடி 

பேசிக் கொள்வதை கேட்டும் 

எந்த சலனமும் இல்லாமல் 

கடந்து செல்கிறேன்...

அங்கே என்னை நிந்தித்து 

கேலி செய்தவர்களோடு 

பெரும் சண்டையிட்டுக் கொண்டு 

இருக்கிறது என் ஆயிரம் தேடலின் 

சாம்பலின் வெப்பத்தின் தகிப்பின் 

உக்கிரத்தின் தீண்டலின்

மகிமை குறையாமல் அந்த காலம்...

நான் அதையும் வேடிக்கை 

பார்த்துக் கொண்டே 

பயணிக்கிறேன்...

இங்கே இந்த சுவையின் 

அபூர்வ தன்மையையும் 

எந்தவித சலனமும் இல்லாமல் 

நிதானமாக ருசித்துக் கொண்டே...

இந்த நிலையில் எங்கிருந்தோ வந்த 

அந்த தென்றலின் தீண்டலில் 

அந்த காலம் தனது உக்கிரத்தை 

தணித்து 

என்னை தேடி ஓடோடி வந்தது...

நான் நின்று அதனை 

என் மார்போடு பெரும் காதலோடு 

அணைத்துக் கொண்டபோது

என் தோளில் அதன் சில துளி 

உதிர்த்த கண்ணீரின் வெப்பத்தில் 

அதன் பெரும் காதலை 

உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/12/24.

நானும் அந்த நடுநிசியும் அந்த கோப்பையும்...


அந்த நடுநிசி பேரிருள் வேளையில் 

நானும் என் கையில் தவழும் 

அந்த மது கோப்பையும் 

அந்த பேரமைதியை ரசித்து 

கிடக்கிறோம்...

இடை இடையே ஒரு அபூர்வ 

பறவையின் இறக்கையின் 

ஒலியை நாங்கள் இருவரும் 

மறக்காமல் ரசித்துக் கொண்டே...

ஒருவரையொருவர் 

சிறு புன்னகை சிந்தி 

ஆழ்ந்த பேரன்பில் 

பேச்சற்ற நிலையில் 

பெரும் காதலோடு ரசித்து 

கண்களால் காதலை பருகி 

கிடக்கிறோம் பல மணி நேரம்...

அண்டமெங்கும் பகல் முழுவதும் 

அலைந்து திரிந்த சோர்வில் 

அத்தனை மனிதர்களும் 

ஓய்வெடுத்து உறங்குகிறார்கள்...

என்று கோப்பை தான் முதலில் 

பேச்சை ஆரம்பித்து வைத்தது...

ஆம் கோப்பையே... அவர்கள் 

வாழ்க்கையோடு தினம் தினம் 

போராடி அந்த நாளின் முடிவில் 

எந்தவித திருப்தியும் இல்லாமல் 

சோர்ந்து தான் போகிறார்கள் 

என்றேன்...

என் கையில் தவழும் 

அந்த கோப்பையோ நீ மட்டும் எப்படி

எந்தவித போராட்டமும் இல்லாமல்

ஆழ்ந்த அமைதி கொண்டு 

இதோ என்னோடு தினம் தினம் 

காதலோடு 

உரையாடி களிக்கிறாய் என்று 

ஆச்சரியமாக கேட்டது...

நானோ கொஞ்சம் 

சிரித்துக் கொண்டே 

இங்கே எதுவும் எனக்கானது இல்லை 

நான் இதோ எனை தீண்டி 

கடந்து செல்லும் 

இந்த நொடிப்பொழுதை 

கொஞ்சம் வேடிக்கை பார்க்க வந்த 

மனுஷனாக தான் 

என்னை பாவித்து 

இந்த பிரபஞ்சத்தில் 

உன் உதவியோடு மிதக்கிறேன்...

இங்கே நீயும் நானும் கொண்ட 

பெரும் காதலின் உணர்வை 

அதோ அந்த காலமும் 

பிரிக்க மனமில்லாமல் 

இரவை இன்னும் சில 

மணித் துளிகள் நாம் இருவரும்

கேட்காமலேயே நீட்டித்து 

சத்தம் இல்லாமல் செல்கிறது 

பார்த்தாயா என்றேன்...

அந்த நுரை ததும்பும் 

மது கோப்பையும் பெரும்

ஆச்சரியமாக ஆம் என்று 

தலையசைத்தது...

இந்த புரிதல் தான் 

வாழ்வின் சூட்சமம் 

இங்கே பெரும் மாயையின் நிழலில் 

இளைப்பாறுபவர்களுக்கு

இந்த காலத்தின் லீலையோ 

நம் பெரும் காதலின் ஈரமோ 

உணர முடியாது அல்லவா என்றேன்..

அந்த மது 🍷 கோப்பையும் 

ஆம் என்று பெரும் காதலோடு 

என் இதழ்களில் முத்தமிட்டதை 

பார்த்து அந்த அதிசய பறவையும் 

தன் சிறகசைப்பை நிறுத்தி 

வேடிக்கை பார்த்தது...

நானும் அந்த கோப்பையில் உள்ள 

என் பெரும் காதலை 

என் இதழ் வழியே பருகி 

அதை என்னுள் 

ஒன்றாக்கிக் கொள்ளும் போது

அந்த நடுநிசி கடந்த பெரும் இரவோ 

இன்றைய பெரும் காதலின் 

அத்தியாயம் முடிந்த திருப்தியில் 

அமைதிக் கொள்கிறது...

நானும் மெல்ல மெல்ல 

ஆழ்ந்த உறக்கத்தில் பேரமைதியின்

சாயலை என் காலடியில் 

சரிந்து விழுந்த அந்த காலி 

கோப்பையும் உணர்ந்து 

அமைதியாக அந்த நடுநிசி இரவை 

மெல்ல மெல்ல விடுக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 25/12/24.

முன்னிரவு பொழுது...





செவ்வாய், 24 டிசம்பர், 2024

இது போல ஆயிரம் கதைகளை கேட்டும் சலிக்காமல்...

அந்த கண்ணாடி டம்ளரில் 

பொங்கி வழிந்து குதூகலித்து

எனை சீண்டல் பார்வையில் 

பெரும் போதையூட்டி

அழைக்கிறது வோட்கா!

நானும் என்னை கொஞ்சம் 

ஆசுவாசப்படுத்திக் கொள்ள 

மிடறு மிடறாக பருகி 

அதனிடம் காதல் மொழிகளை பேசி 

சரிகிறேன்...


என் மீது வழிந்தோடும் 

அந்த திரவமோ 

இது போல பல ஆயிரம் கதைகளை 

கேட்டும் சலிக்காமல் 

என் கன்னத்தில் 

ஒரு பெரும் முத்தத்தை 

கொடுத்து அதன் மடியில் 

உறங்க செய்து அந்த இரவை 

 கண்ணீரில் நனைத்து 

எனக்காக பிரார்த்தனை செய்து 

என்னை அரவணைத்து 

விடியும் நேரத்தில் 

கொஞ்சம் கண்ணயர்ந்து

 துயில் கொள்கிறது!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/12/24

நேரம் அந்தி மயங்கும் வேளையில் 

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

இங்கே நிஜமெது நிழலெது?


கொஞ்சமும் சோர்வில்லாமல்

புத்துணர்ச்சியோடு

ஓடிக் கொண்டே இருக்கும் 

என் சாயலில் பயணிக்கும் 

காலத்தை நான் கொஞ்சம் 

ஆச்சரியமாக 

வேடிக்கை பார்த்து 

சிலை போல நகராமல் 

அந்த நெடுஞ்சாலையின் 

நடுவில் நிற்கிறேன் ...

என்னை கடந்து செல்லும் 

காலமெனும் வாகனத்தில் 

பயணம் செய்பவர்கள் ஏதேதோ 

எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று 

என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது 

அந்த கால் இல்லாத காலம்...

நானோ இரு கால்கள் இருந்தும் 

ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் 

அந்த சாலையில்...

இங்கே நிஜமெது நிழலெது??

கொஞ்சம் புரிந்தவர்கள் 

சொல்லி விட்டு 

என்னை சாலையின் மறு பக்கத்தில் 

கொஞ்சம் சேர்த்து விட்டு 

செல்லுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/12/24/ஞாயிற்றுக்கிழமை.

செவ்வாய், 17 டிசம்பர், 2024

அது தான் வாழ்வின் யாத்திரை...


எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு 

இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் 

போகிறது 

அதை முன்பே அறிந்துக் கொள்ள 

ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்?

அதை முன்பே 

அறிந்துக் கொண்டால் மட்டும் 

உங்களுக்கு சாதகமாக 

முடிந்து விடப் போகிறதா என்ன?

அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன 

தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே நிகழ்த்தி விட்டு 

அது பாட்டுக்கு எந்தவித சலனமும் 

இல்லாமல் பயணித்து விடும்...

நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு 

அதனோடு சண்டையிட 

பெரும் கோபங்கொண்டு 

அதை துரத்தி செல்கிறீர்கள்?

அதை அப்படியே விட்டு விட்டு 

நீங்களும் சலனம் இல்லாமல் 

பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!

அது தான் பேரமைதி 

வாழ்வின் யாத்திரை!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன் கிழமை.

அப்படி ஒன்றும் மார்கழியை கொண்டாட...


அப்படி ஒன்றும் மார்கழியை 

கொண்டாட எனக்கு அதில் 

எதுவும் தற்போது இருப்பதாக 

தெரியவில்லை!

கடும் குளிரின் தாக்கத்தில்

போர்வைக்குள் அந்த மிதமான 

வெப்பத்தையும் 

ஊடுருவ துடிக்கும் 

இதமான குளிரையும் 

ரசிப்பதை நிறுத்தி விட்டு 

அந்த குளிரில் எழுந்து 

ஏதேதோ செய்து 

நான் ஒரு ஒழுங்கான 

தெய்வீக மனுஷி என்று 

நிரூபிக்க தற்போது மனமில்லை 

ஒரு தெளிவான அதீத ரசனையை 

தவிர 

எனக்கு இங்கே எதுவும் ஆனந்தத்தை 

கொடுத்து விடப் போவதில்லை 

என்று 

தீவிரமாக நம்பும் 

சாதாரண மனுஷி நான் 

அவ்வளவு தான்!

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன்கிழமை.

காலத்திற்கு கட்டளையிடும் அதிகாரம்...


இங்கே காலத்திற்கு கட்டளையிடும்

அதிகாரத்தை 

எத்தனை கோடி யுகங்கள் 

தவம் இருந்தாலும் 

பெற முடியாது என்று 

தெரிந்தும் அந்த அதிகாரத்தை பெற 

இங்கே அகங்காரத்தோடு 

பெரும் தவத்தை 

இயற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்...

இதோ நீங்கள் அந்த உக்கிர தவத்தை 

இயற்றும் போதே ஊழிக் காலத்தின் 

பேரவையில் சிக்கி

 எவரும் கண்டறியா 

அந்த பெரும் மணல் திட்டின் 

ஆழத்தில் புதையுண்டு போவதை 

அதே காலம் எந்தவித அகங்காரமும் 

இல்லாமல் வேடிக்கை பார்த்து 

உங்கள் ஆன்மாவின் அமைதிக்காக 

இங்கே சலனமில்லாமல் 

பெரும் தவம் இயற்றி 

தன் பயணத்தை தொடர்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:18/12/24/புதன்கிழமை.

ஊழிக் காலத்தின் அருகே...


ஊழிக் காலத்தின் 

அருகே நடக்கும் 

பெரும் அமைதியின், சிறு துகளின் 

பேராற்றலின் சூட்சுமத்தை

இங்கே நான் உணர்ந்து 

ஆழ்ந்த அமைதியோடு 

பயணிக்கிறேன்..

என் தளர்வான நடையை பார்த்த 

சிலரோ புரியாமல் கேலி செய்து 

பெரும் சிரிப்போடு 

தகாத வார்த்தைகளால் கடிந்து 

என்னை கடந்த அடுத்த நொடியில் 

அந்த ஆழி பேரவையின் பெரும் பசிக்கு 

உணவாகிறார்கள்...

நானோ அவர்கள் சடலத்தை 

பொறுமையாக தேடி 

இந்த பூமிக்குள் முறையாக 

அடக்கம் செய்து 

எந்த சலனமும் இல்லாமல் 

பயணிப்பதை 

அந்த காலம் சற்றே புன்முறுவலோடு 

வேடிக்கை பார்த்து 

என்னோடு பயணிக்கிறது 

சூட்சமமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 18/12/24/புதன்கிழமை.

வியாழன், 5 டிசம்பர், 2024

என் சாயலை ஏந்தி பயணிக்கும் அந்த நுட்பமான நதி...


எனது வாழ்க்கை பயணத்தின் 

சுவாரஸ்யத்தை 

கேட்க அங்கே 

ஆயிரம் ஆயிரம் காதுகள் 

தன்னால் முடிந்தவரை 

கூர் தீட்டி வைத்து காத்திருக்கிறது...

நானோ அந்த ரகசியத்தை

கொஞ்சமும் வெளியே 

வந்து விடாதபடி 

ஆழ்மனமெனும் அறையில் 

திணித்து 

ஒரு பெரும் பூட்டு போட்டு விட்டு 

அந்த சனநெருக்கடியான சாலையில் 

நடக்கிறேன் 

என் இயல்பு மாறாமல்...

இங்கே என் வாழ்வின் பயணத்தின் 

ரகசியமோ அந்த அறையில் இருந்து 

உருகி வழிந்தோடி பெரும் ஆறாக 

பயணிக்கிறது....

இப்போது அது அங்கே நதியில் 

இளைப்பாற நினைக்கும் 

அந்த பல இலட்சம் கால்களுக்கு 

கொஞ்சம் இதம் அளித்து

பயணிக்குமாறு அதற்கு 

கட்டளை இடுகிறேன்...

அதுவும் என் சாயலை ஏந்தி 

பயணிக்கும் நுட்பமான ஜீவனாக 

அந்த பெரும் மலைகளின் 

சிறு பாதை வழியே 

பயணிக்கும்போது நானும் ஏனோ 

அந்த நதியின் பயணத்தில் 

என் கால்களை வைத்த நொடியில் 

என் கண்களில் இருந்து 

சில சொட்டு கண்ணீர் 

அந்த நதியை வெப்பமாக்கி 

தாக்கியதில் அது கொஞ்சம் 

நிலைதடுமாறி ஆர்ப்பரித்து 

பின்பு நிலைத்து ...

என்னை நிலையை 

புரிந்துக் கொண்டு 

எனை வாரி அணைத்துக் கொண்டு 

நிசப்தமாக பயணிக்கிறது...

நானோ அந்த நதியில் எந்தவித 

பெரும் சக்தியும் இல்லாமல் 

மிதந்து செல்கிறேன்...

இந்த நிகழ்வை ஆச்சரியமாக 

வேடிக்கை பார்த்த மக்களுக்கு 

தெரியாது...

நான் அனுபவித்த 

பெரும் துன்பத்தின் 

ஆகர்ஷண சக்தி தான் 

இந்த நதியின் பயணமும் 

அதில் நான் மிதந்து செல்லும் 

நிகழ்வும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 06/12/24/வெள்ளிக்கிழமை.






புதன், 4 டிசம்பர், 2024

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் கொஞ்ச தூரம் இருக்கிறது...


அந்த சாபத்தின் செந்தீ 

கடும் இருளில் துழாவி துழாவி 

என்னை பதம் பார்க்க வந்தது...

நானோ ஏதோ நினைவின் வழியே 

கொஞ்சம் சிந்திய கண்ணீரில்

அந்த செந்தீயின் மொத்த தகிப்பும் 

உள்ளடங்கி குளிர்ச்சியும் இல்லாமல் 

வெப்பமும் இல்லாமல் 

கிடந்த சாம்பலினை 

என் மேனி மீது பூசிக்கொண்டு 

அந்த திக்கற்ற நிர்க்கதியான 

பறவை போல இங்கும் அங்கும் 

அலைந்து திரிவதை பார்த்து 

அந்த இருளும் 

மேலும் கருமையை பூசி

கொஞ்சம் நடுநடுங்கி தான் 

அந்த மொத்த இரவையும் 

கண் துயிலாமல் 

பிரமை பிடித்தது போல 

கழித்தது...

நானோ அந்த கருக்கலில் 

என் மேனி எங்கும் பூசிய சாம்பலை 

உதிர்த்து விட்டு 

இந்த பிரபஞ்சம் அதிரும் வகையில் 

சிரித்து வைத்தேன்...

அதை பார்த்த அந்த பகல் பொழுதும் 

திக்கு தெரியாமல் 

சிதறி போனது கண்டு 

இந்த மனிதர்கள் 

கண் விழித்து பார்த்து மிரண்டு தான் 

போனார்கள்...

இரவோ 

அந்த நொடிப்பொழுதில் தான் 

கொஞ்சம் இறுக்கம் தளர்த்தி

நிம்மதி பெருமூச்சோடு

கண் அயர்ந்தது...

அடுத்த திகில் நிமிடங்கள் இன்னும் 

கொஞ்சம் தூரம் இருக்கிறது 

என்கின்ற தற்காலிக அமைதி 

கொண்ட மனதோடு...

இளைய வேணி கிருஷ்ணா.

நாள்:05/12/24/வியாழக்கிழமை.



புதன், 27 நவம்பர், 2024

வாழ்க்கை ஒரு புயலில் சிக்கிய ஓடம்...


தேடல் இல்லாத வாழ்க்கை 

வறண்ட பாலை போன்றது 

என்று அங்கே யாரோ ஒரு வாழ்க்கை 

பயணி தன் உடன் பயணிப்பவரிடம் 

சொல்லி செல்கிறார்...

நானோ அந்த வார்த்தைகளை 

கேட்டு விட்டு 

கொஞ்சம் புன்முறுவலோடு 

பயணிக்கிறேன்...

இங்கே தேடலின் வெறுமையில் 

சிக்கிக் கொள்வதை விட 

இதோ கடந்து செல்லும் இந்த 

நொடிக்கு இரையாகி போவதே மேல் 

என்று 

மனதில் நினைத்துக் கொண்டு 

நடக்கிறேன்...

ஏனோ என் கால்கள் வேகமாக 

நடக்க ஒத்துழைக்க மறுக்கிறது...

கொஞ்சம் வெறுப்போடு 

அண்ணாந்து பார்த்தால் 

அங்கே என்னை பார்த்து 

சிரித்து வைத்து அந்த மேகத்தின் 

நிழலில் மறைந்துக் கொள்கிறது 

அந்த நிலவு...

நான் பயணிக்கும் இந்த சாலை 

எனக்கு ஆயிரம் ஆயிரம் 

புத்தத்துவத்தை உணர்த்தி விட 

துடிக்கும் போதும் நான் 

அந்த உணர்வை கடந்தும் 

வாழ பயணிக்கிறேன் இங்கே...

வாழ்வின் ரகசியத்தை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறோம் 

இங்கே 

என்று கொஞ்சம் வெறுமையாக 

உணர்ந்து...

வாழ்க்கை என்னை பொறுத்தவரை 

ஒரு புயலில் சிக்கிய ஓடம்...

என்றோவொரு நாள் அது கரையை 

கடக்கும்...

இல்லை கடலில் மூழ்கும்...

அவ்வளவு தானே..

வேறென்ன இங்கே புதிதாக 

நடந்து விட போகிறது??

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/24/புதன்கிழமை.

அந்த நதியின் கண்ணீரை யார் துடைக்கக் கூடும்?


நான் பயணிக்கும் இந்த சாலையில் 

கொஞ்சம் 

இளைப்பாறிக் கொள்ள நினைத்து 

என் சுமைகளை தலயணையாக்கி 

கண்களை மூடி 

என் கண்கள் சிந்தும் கண்ணீரோடு 

அந்த சாலையின் நடுவில் 

என் இருப்பிடம் இதுதானோ இனி 

என்று கொஞ்சம் நான் பயந்து 

கலங்கி இருக்கும் போது 

என் அருகே சத்தம் இல்லாமல் 

அந்த ஜீவன் 

படுத்துக் கொண்டது...

கொஞ்சம் அதன் அருகாமையை 

உணர்ந்து 

கண் விழித்து பார்த்தேன் 

வழியும் கண்ணீரோடு... 

அதுவோ எந்தவித 

சலனமும் இல்லாமல் 

ஏதோவொரு பாதுகாப்பை 

உணர்ந்ததை போல 

கண்களை மூடி உறங்குவதை 

நான் பார்த்த போது அதன் முகத்தில் 

அந்த நிம்மதியை உணர்ந்து 

என் சோகத்தின் சுவடை 

அழித்து விட்டு நானும் 

அதன் துணை ஒரு ஆறுதலாக 

கண் அயர்ந்து உறங்க 

முயல்கிறேன்....

இங்கே இந்த பிரபஞ்சம் 

எல்லோரையும் 

அரவணைத்துக் கொண்டு தான் 

பயணிக்கிறது...

ஒரு சாந்தமான நதியை போல....

அதை உணராமல் 

பல ஜீவன்கள் இங்கே 

அதன் அரவணைப்பில் இருந்து 

திமிறிக்கொண்டு பயணிக்கும் போது 

அந்த நதியின் கண்ணீரை 

இங்கே யார் துடைக்கக் கூடும்???

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/11/24/புதன் கிழமை.

சனி, 23 நவம்பர், 2024

வெம்மை தாக்கும் அந்த தருணத்தில் தான்...


வெம்மை தாக்கும் 

அந்த தருணத்தில் தான் 

எங்கிருந்தோ வந்து 

திடீரென அணைத்துக் கொள்கிறது 

அந்த தென்றல் காற்று...

இங்கே 

நாம் தேடாமலேயே தான் 

பல நிகழ்வுகள் நம் அனுமதி 

தேவை இல்லாமல் 

சத்தம் இல்லாமல் கடந்து செல்கிறது...

அது புரியாமல் இங்கே 

நான் ஆயிரம் ஆயிரம் கனவுகளை 

கணக்கிட்டு காலத்திடம் 

சொல்லி கொண்டு இருக்கிறேன்...

கொஞ்சம் ஆக்ரோஷமான ஆசை 

என் மனதில் வழிந்து ஓடும் படி...

அதை பொறுமையாக கேட்டு விட்டு 

ஒரேயொரு புன்னகை 

வழிந்தோடும் படி எனை கடந்து செல்கிறது 

ஒரு புகையை போல...

அந்த காலம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/11/24/ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 22 நவம்பர், 2024

பெரும் போரின் உக்கிரத்தை தணித்து...


 நீயோ குருட்டு பிடிவாதத்தால்

எவரின் தூண்டுதலாலோ

விலகி விலகி பயணிக்கிறாய் 

என்னிடம் இருந்து...

அந்த உக்ரைனை போல...

நானோ உன்னை 

என் பேரன்பின் கட்டுக்குள் வைக்க 

போராடி தீர்க்கிறேன்

அந்த ரஷ்யாவை போல...

என் பேரன்பின் தீர்க்கம் 

பெரும் வலுவான பிடிமானம் 

கொண்டது 

அந்த ரஷ்யாவின் 

பேரண்ட பிடிமானத்தை 

இறுக செய்யும் 

நிகழ்வினை ஒத்த 

எந்த எல்லைக்கும் செல்வதற்குள் 

நீயாகவே 

என் கைகளுக்குள் 

தஞ்சமடைந்து விடு...

பெரும் போரின் உக்கிரத்தை 

தணித்து விட்ட பெரும் புண்ணியம் 

உன்னை சேரட்டும்...

#டைமிங் #கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 23/11/24/சனிக்கிழமை.

செவ்வாய், 19 நவம்பர், 2024

அந்த பிடிமானமற்ற தனிமையில்...


அந்த பிடிமானமற்ற 

தனிமையில் தான் 

ஆயிரம் ஆயிரம் 

ஆழ்ந்த தேடலின் சுவடுகள் எனை 

கொஞ்சம் நிதானமாக 

கடந்து கடந்து போகிறது...

நானும் நிதானமாக அது 

கற்றுக் கொடுக்கும் 

ஆழ்ந்த கல்வியை 

கற்றுக் கொண்டு 

இருக்கும் போதே 

என் கவனத்தை திசை திருப்பி 

வழி எங்கும் 

லௌகீக விதைகளை தூவி 

செல்வதை நீங்கள் 

நிறுத்தி விடுங்கள்...

ஏனெனில் நான் அதிலிருந்து 

பல கோடி மைல்கள் கடந்து 

வந்து விட்டேன்...

நீங்கள் எனை துரத்தி துரத்தி 

சோர்ந்து விடாதீர்கள்...

ஏனெனில் வழி எங்கும் 

உங்கள் சோர்வை தணிக்க 

பானம் ஏதும் அங்கே கிடைக்க போவதில்லை என்பதை 

நீங்கள் கவனம் வையுங்கள்...

#இளையவேணிகிருஷ்ணா

நாள் 20/11/24/புதன்கிழமை.

பிரிவதும் சேர்வதும் இங்கே...


பிரிவதும் சேர்வதும் 

இங்கே சிலாகித்து 

பேசப்படுகிறது...

இதற்கிடையே 

ஒரு மெல்லிய அன்பின் 

சிலாகிப்பை... 

அந்த இருவரின் ஆழ் மனதில் 

அமிழ்ந்து துடிக்கும் வேதனையை...

இங்கே 

யார் அறியக் கூடும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/11/24/புதன்கிழமை.

அந்த கட்டமைக்கப்பட்ட பிம்மத்தின் பிடியில்...


அந்த கட்டமைக்கப்பட்ட 

பிம்மத்தின் பிடியில் இருந்து 

திமிரி வெளியே வர 

ஆயிரம் ஆயிரம் பிரயத்தனங்களை 

செய்து அசந்து போய் 

கண்ணீரோடு அமர்கிறேன்...

என் அருகே ஒரு பட்டாம்பூச்சியோ

எந்தவித பிரயத்தனமும் 

இல்லாமல் என் தோளை 

மிகவும் மிகவும் மிருதுவாக உரசி 

பறந்து செல்வதை பார்த்து 

கொஞ்சம் ஆசுவாசம் கொண்டு 

எழும் போது என் மீது 

கட்டமைக்கப்பட்ட 

அந்த பிம்பத்தின் பிடி இலகுவாகி 

எனை கொஞ்சம் கொஞ்சமாக 

அதன் பிடியில் இருந்து 

விடுவிக்கிறது...

விடுவிக்கப்பட்ட அடுத்த நொடியே 

அந்த பட்டாம்பூச்சி சென்ற பாதையில் 

ஓடும் போது கொஞ்சம் நில் 

என்ற சத்தத்துடன் காலம் 

எனை கை நீட்டி தடுப்பதில் 

கொஞ்சம் எரிச்சல் அடைந்து 

என்ன என்று கோபமாக 

நிமிர்ந்து அதை கேள்வி 

கேட்கும் போது 

அதுவோ கொஞ்சமும் 

பதட்டம் இல்லாமல் 

தனது குறிப்பால் உணர்த்துகிறது 

என் கால்களில் மிதிப்பட்ட 

அத்தனை பூக்களின் வலியை...

நானோ இப்போது மீண்டும் 

அழுகிறேன்...

என் கால்களுக்கு இரையான 

அந்த பூக்களின் தேகத்தில் ஏற்பட்ட 

காயத்தில் இருந்து வழியும் 

உதிரம் கண்டு...

இங்கே எந்த கட்டமைப்பும் 

இல்லாமல் கூட பல வேதனைகள்

வகுக்கப்பட்டு விடுகிறது...

இங்கே நடக்கும் விதியின் போக்கில் 

திமிரி செல்ல எத்தனை எத்தனை 

சோதனைகள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/11/24/புதன்கிழமை.

 



பெரும்பாலான மக்கள் ஒளிந்துக் கொள்ளும் வார்த்தையான...


பல ஆயிரம் ஆயிரம் வேடிக்கைகளில்

இதுவும் ஒன்று...

வெளியே காட்டப்படும் பிம்மத்தில் 

மறைந்து இருக்கும் சூட்சுமத்தை 

இங்கே யார் அறியக் கூடும்?

அந்த பிம்பத்தின் நேர்த்தியில்

ஆயிரம் ஆயிரம் கொண்டாட்டங்கள் 

வடிவமைக்கப்படுவதை 

வேடிக்கை பார்த்து நான் 

சிரித்துக் கொள்வதை

பார்த்து காலம் 

என்ன புன்னகை என்று 

என்னிடம் கேள்வி எழுப்பும் போது

வழக்கம் போல 

பெரும்பாலான மக்கள் 

ஒளிந்துக் கொள்ளும் 

வார்த்தையான ஒன்றுமில்லையில்

நானும் ஒளிந்துக் கொள்கிறேன் 

தவிர்க்க முடியாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/11/24/புதன்கிழமை.


சனி, 16 நவம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை இன்று/எந்நிலையிலும் கலங்காதே

 


இனிய இரவு வணக்கம் நேயர்களே 🙏.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதையில் இன்று எந்நிலையிலும் கலங்காத மனதை பெற புத்தர் தனது சீடர்களுக்கு சொன்ன போதனை 

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏 🎻 ✨ 

https://youtu.be/fJAhasydiV4?si=HT0y_RJMpLraibhv

வெள்ளி, 15 நவம்பர், 2024

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை/நீங்கள் நீங்களாகவே இருங்கள் ✨

 


வணக்கம் நேயர்களே 🙏 

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை பதிவில் இன்று நீங்கள் நீங்களாகவே இருங்கள் அது தான் அழகாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் பதிவு கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே 🙏.

அனைவருக்கும் இனிமையான இரவு வணக்கம் 🙏 .

https://youtu.be/Td1k4h57QDg?si=kS-9Mxw2XLPfn7G3

வியாழன், 14 நவம்பர், 2024

இனிமையான உற்சாசமான காலை பயணம்

 


வணக்கம் நேயர்களே 🎉🥳😍.

இன்றைய பொழுது மிகவும் உற்சாகமாக செல்ல வாழ்த்துக்கள் 💐 

இன்றைய நாள் மிகவும் அருமையாக அமைய வாழ்த்துகள் 🎉 

கீழே உள்ள லிங்கில் 

காலை சிந்தனை கேட்டு கொண்டே தங்களது இனிமையான இன்றைய பயணத்தை தொடங்குங்கள் ☔🦋🤝🎉

https://youtu.be/KXMnbqKSAec?si=sIKjt2C-PkBhXrtY

அந்த மழையின் அபூர்வ இசையின் ஈரம் மட்டும்...


தீர்ந்துக் கொண்டே இருக்கும் 

இந்த நாளின் பொழுதுகளில் 

குறையாமல் 

தொடர்ந்துக் கொண்டே 

வருகிறது....

எனது வாழ்வின் 

சுவாரஸ்யமான தருணங்களும்...

இப்படியே சத்தம் இல்லாமல் 

முடிந்தது 

இந்த நாளின் பொழுது 

அதோ அங்கே கூடு தேடி 

மிகவும் நிதானமாக சிறகை விரித்து 

பறந்து சென்றது 

அந்த வானத்தை அளந்தபடி 

அங்கே ஒரு பறவை கூட்டம்...

அந்த அந்தி மாலையின் தூறலை 

அறிவித்தபடியே 

அங்கே சில பல தும்பிகள் கூட்டம் 

எனை உரசி செல்கிறது...

அங்கே மேற்கில் விழுந்துக் கொண்டு 

இருக்கிறது கொஞ்சம் வேகமாக 

ஐப்பசி மாதத்தின் கதிரவன் 

தன் பணியை திருப்தியாக முடித்த 

எண்ணத்தில்...

எந்த வெப்பத்தின் தாக்கத்தையும் 

இந்த பிரபஞ்சத்தின் ஜீவராசிகள் 

உணர்ந்து விடாமல்...

இங்கே நானும் 

அந்த வண்ணத்து பூச்சியும் மட்டும் 

இந்த இரவின் நீட்சியில் 

மழையின் நனைதலில் 

அந்த மேகங்கள் நள்ளிரவு வரை 

மீட்டிக் கொண்டு இருக்கும்

கேட்பாரற்ற 

அந்த அபூர்வ ராகங்களை

கேட்டுக் கொண்டே 

இருந்த வேளையில் கொஞ்சம் 

கொஞ்சமாக ஸ்வரம் குறைத்து 

விடை பெற்ற அந்த மழையின் 

அபூர்வ இசையின் ஈரம் மட்டும் 

என்னையும் 

அந்த வண்ணத்து பூச்சியின்

சிறகையும் விட்டு விலகாமல் 

பயணிக்கிறது...

#மழை நேர கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/11/24/வியாழக்கிழமை.










வியாழன், 7 நவம்பர், 2024

சித்த நிலை யாதென்று புரிகின்ற வேளையில்...


சித்த நிலை யாதென்று 

புரிகின்ற வேளையில் 

சுவையுள்ள பதார்த்ததின் வாசம் 

நாசியை வசீகரிக்கிறது...

சுத்தமான ஆத்மாவின் 

தீராத தாகத்தை

கண்டுக்கொள்ளாமல் 

அந்த வேளையில் 

உதாசீனம் செய்து 

உருண்டோடி செல்லும் காலத்தை 

தினம் தினம் திட்டி தீர்க்கிறேன்...

அந்த ஆன்மாவின் தாகத்தை 

நான் தீர்க்க வழி இல்லாமல் 

நான் தவிக்கும் போது 

நீ ஏன் அதிவேகத்தில் 

இவ்வளவு அவசரம் கதியில் 

என்னை இழுத்து செல்கிறாய் 

என்று...

காலமோ எந்த பதிலும் சொல்லாமல் 

என்னிடம் இருந்து 

விடை பெறுகிறது 

ஒரு சிறு காலி கோப்பையின்

பெரும் தேவையான 

தேநீர் தாகத்தை 

இங்கே ஒரு துளி தேநீரில் 

தணிந்து விடுமா என்ன 

என்று மனதிற்குள் 

நினைத்துக் கொண்டு... 

#இரவு கவிதை 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 07/11/24/வியாழக்கிழமை.




 


திங்கள், 28 அக்டோபர், 2024

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:-நேற்று விஜய் கட்சி நடத்திய மாநாட்டில் பேசிய விஜய் பேச்சு ரசிக்கும் படி இல்லை.துவக்கம் என்பது எப்போதும் வணக்கம் சொல்லி அழகாக ஆரம்பித்து மிகவும் அழகாக பேசி இருக்கலாம்...தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு கத்தி பேசியதை அவரது ரசிகர்கள் வேண்டும் என்றால் ரசிக்கலாம்... ஆனால் பொதுவெளியில் எப்படி நேர்த்தியோடு பேச வேண்டும் என்று கூட பயிற்சி எடுக்கவில்லை என்று தான் தோன்றுகிறது... மேலும் அவர்களே என்று சொல்வதை கேவலமாக சித்திரித்து பேசி இருக்கிறார்... அந்த வார்த்தை என்பது ஒருவருக்கு கொடுக்கும் மரியாதை என்பது கூட புரிந்துக் கொள்ள முடியாத அளவுக்கு பொது அறிவு... ஆரம்பம் என்பது அசட்டுத்தனமாக அனைவரையும் பொடி வைத்து எதிர்ப்பது அல்ல... நாம் நமது செயல்களில் மக்களோடு எப்போதும் எப்படி இருக்க போகிறோம் என்பதே... மேலும் அவர் சித்தாந்த ரீதியாக ஒரு கட்சியை எதிர்ப்பதாகவும் அரசியல் ரீதியாக ஒரு கட்சியை எதிர்ப்பதாகவும் சொன்னது மிகவும் கேலிக்குரியது.. அப்போது அவர் சொல்ல வருவது பிஜேபி அரசியல் கட்சி வரிசையில் இல்லையா என்று கேட்க தோன்றுகிறது... அரசியலில் ஒரு மாநாடு போடுகிறோம் என்றால் அந்த மாநாட்டில் பங்கேற்பவர்களை முதலில் ஒழுங்குப்படுத்த முறைப்படுத்த தன்னார்வாளர்களை அந்த கட்சியில் இருந்து ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.... ஆனால் அங்கே இன்று பார்க்கும்போது ஏதோ போர்க்களம் நடந்த இடம் போல இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் நாற்காலிகளை அவரது கட்சி தொண்டர்கள் கன்னாபின்னாவென்று உடைத்து போட்டு வைத்து இருக்கிறார்கள்... அந்த தொண்டர்கள் தமக்குள்ளேயே ஒரு ஒழுங்கு இல்லாத போது எப்படி கட்சி பணிகளை நீங்கள் நினைப்பது போல செய்வார்கள் என்று வினா எழுகிறது அல்லவா... எப்போதும் ஒரு கட்சி தலைமை என்பது ஒரு ஒழுங்கை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்... ஒரு பொதுவெளியில் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்... மேலும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு வந்து கலந்துக் கொண்ட தொண்டர்களுக்கு அந்த இடத்தை கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி சொல்லி இருக்க வேண்டும்... பேச்சின் இடையிடையே ஒரு நிமிடம் ஒரு நிமிடம் என்று அடிக்கடி சொல்லி ஏதோ சொல்ல மறந்த விசயத்தை ஓடி போய் ஓடி போய் சொல்லியது எல்லாம் மிகவும் நகைச்சுவையாக தான் இருந்தது... கட்சி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை உள்ளது... ஆனால் இவரை வழி நடத்துபவர் யாரோ இவரை சரியான பாதையில் அழைத்துச் செல்வது போல தெரியவில்லை...கூட்டத்தை பங்கேற்ற தொண்டர்களிடம் இனி மதுவை தொட மாட்டேன் என்று ஒரு வாக்குறுதி வாங்கி இருக்கலாம்... இங்கே எனக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கிறீர்கள்.. ஆனால் தங்களது குடும்பத்தை முதலில் நேசிக்க வேண்டும் நீங்கள் என்று சொல்லி வழி அனுப்பி வைத்து இருக்கலாம்... இப்படி எனக்கு நேற்று விஜய் மாநாட்டை பார்த்து எந்த நேரத்தில் என்ன அசாம்பாவிதம் நடந்து விடுமோ என்று தான் தோன்றியது... ஏனெனில் அங்கே ரசிகர்கள் நடந்துக் கொண்ட விதம் அப்படி... பொதுவாக சினிமா என்பது ராகு தான் வழி நடத்துவார்... அந்த ராகு அரசியல் ஆசையை தூண்டுவார்...ஆனால் அந்த ராகு வீதியில் விட்டு விட்டு ஓடி விடுவார்..பொதுவாக அரசியல் ஆட்சி அதிகாரம் எல்லாம் கிடைக்க ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் சனி கிரகங்கள் கையில் தான் உள்ளது என்பதே யதார்த்தமான உண்மை... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

#கட்சிஆட்சிஅதிகாரம்.

#இன்றையதலையங்கம்

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 26 அக்டோபர், 2024

அந்த ரசனையான முதல் மது🍷 கோப்பை


அந்த மது கோப்பையில் 

தளும்பி வழியும் பழரசத்தினை 

கொஞ்சம் கொஞ்சமாக 

அதை தொடாமலேயே 

ரசனை நிறைந்த மனதோடு 

வேடிக்கை பார்க்கிறேன்...

செயற்கை வழியில் இருளாக்கப்பட்ட 

அந்த விடுதியில் பல உயர் ரக 

மின்னொளியில் 

நனைந்து கிடக்கிறது 

அந்த பழரசம்....

அதன் மீது பட்டு தெறிக்கும்

கண் கூசும் ஒளியை 

கொஞ்சம் பிரமிப்போடு 

பார்த்து கிடக்கிறேன் 

கைகளை 

என் தலையின் பின்புறம் 

கம்பீரமாக கட்டிக் கொண்டு 

அந்த கோப்பையை எவ்வளவு நேரம் 

ரசித்து இருப்பேன் என்று 

தெரியாது....

அங்கே பல மது பிரியர்கள் 

மது போதையில் யாரையோ 

கட்டியணைத்து 

செயற்கையாக நடனமாடி

செயற்கையாக தனது 

மனக் கவலையை மறக்க துடித்து 

ஏதேதோ பிதற்றல் ஒலியை 

எழுப்பி அங்கே ஒலிக்கும் 

இசைக்கு ஏற்ப தன்னிச்சையாக 

கால்கள் நடனமாடுவதை 

நான் கொஞ்சம் வேடிக்கை 

பார்த்து ரசிப்பதை பார்த்து 

என் மேசை மீதிருந்த 

அந்த மது 🍷 கோப்பை 

என் வித்தியாசமான ரசனையை 

கண்டு வியப்புற்று திகைத்து 

அந்த மேசையில் கவிழ்ந்து 

விழுகிறது...

அந்த கண்ணாடி கோப்பையின் 

நங் என்று மேசை விட்டு

உருண்டோடி கீழே விழும் ஓசையில் 

அத்தனை பேரும் எனை திரும்பி 

பார்த்து ஆறுதல் சொல்லி 

இன்னொரு பழரசத்தை 

கொண்டு வந்து என் முன்பு 

மேசை மீது கனிவோடு வைத்து 

செல்கிறார்கள்...

இப்போது புது பழரச கோப்பையை 

கொஞ்சம் பரிதாபமாக 

கண்கள் பனிக்க

பார்க்கிறேன் நான் ...

அந்த மெல்லிய மின்னொளியில் 

என்னால் உயிர் மாய்த்துக் கொண்ட 

அந்த ரசனையான 

முதல் மது 🍷 கோப்பையை 

நினைத்து...

#ரசனையான 🍷 கோப்பை..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை 



அந்த காலி கோப்பையில் கனத்து கிடக்கும் தேநீர் போல...


அந்த காலி கோப்பைக்குள் 

கனத்து கிடக்கும் தேநீர் போல

என் மனதின் மூலையில் 

கனத்து கிடக்கிறது 

ஒரு துளி கவலை...

எந்தவித பருகுதலும் இன்றி 

மதிப்பற்ற கோப்பையாக 

அதை அவ்விடத்தில் விட்டு 

செல்கிறேன்...

அங்கே பறந்து வந்த ஈ ஒன்று 

அதில் விழுந்து உயிர் விட்டு 

சென்றதை அங்கே இருந்த 

யாரோ ஒருவரின் பேச்சில் 

உணர்கிறேன்...

இங்கே மதிப்பற்ற தேநீர் கோப்பை 

ஒரு ஜீவனின் உயிர் விட 

காரணமானதை எண்ணி எண்ணி 

கவலைக் கொள்ள துடிக்கும் மனதை 

கொஞ்சம் கோபமாக 

திட்டி தீர்க்கிறேன்...

மீண்டும் நான் பருகாத 

தேநீர் அடங்கிய கோப்பையை 

எந்த இடத்திலோ வைத்து விட்டு 

அங்கே ஏதோவொரு ஜீவனின் 

கொலைகளமாக மாறி விடக் கூடாது 

என்று நினைத்து...

#காலிக் கோப்பை..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.




#காலை சிந்தனை


வாழ்வின் பொக்கிஷம் 

என்பதெல்லாம் 

நாம் நம்முள்ளே பேரானந்தமாக 

இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு 

ரசனையோடு 

பயணிக்கிறோம் என்பதை தவிர 

வேறொன்றும் இல்லை!

விலை மதிக்க முடியாத 

ஜடபொருட்களில்

நீங்கள் எவ்வளவு தூரம் 

இன்பத்தை தேடி 

பயணித்தாலும் அதில் உங்களுக்கு 

ஏமாற்றமே மிஞ்சும்!

#காலை சிந்தனை ✨ 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.

திங்கள், 21 அக்டோபர், 2024

வாழ்வியல்

 


அனைவருக்கும் இனிமையான காலை வணக்கம் நேயர்களே 🙏.

வாழ்வியல் பற்றிய புரிதலோடு நாம் பயணிக்கும் போது வாழ்க்கை மிகவும் சுவாரசியமாக அதே சமயத்தில் ரம்யமாக இருக்கும் அல்லவா...

கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழலாம் வாருங்கள் நேயர்களே வாழ்க்கை பற்றிய புரிதல் ✨ 🎻 🦋.

https://youtu.be/M2F91n_b-oE?si=IerbTBTCEKjpWrkh

அந்த ஜீவனுக்காக பழியை தீர்த்துக் கொள்கிறது எங்கிருந்தோ வந்த மழை...


சில பல மழைத் துளிகளின் 

மேனி தீண்டலை 

ரசிக்காமல் அந்த சாலையில் 

இங்கும் அங்கும் பயணிக்கும் 

பாதசாரிகள்...

நாற்சக்கர வாகனத்தின் உள்ளே 

இருந்துகொண்டே மழையை 

திட்டி தீர்க்கும் சிக்னலிடையே 

சிக்கி தவிக்கும் அந்த 

சில பல மனிதர்கள்...

தனது இருசக்கர வாகனத்தினோடே 

போராடி 

எரிச்சலோடு வண்டியை 

நகர்த்தும் அந்த மனிதர்கள்...

இதை எல்லாம் வெறுமனே 

வேடிக்கை பார்த்து அந்த மழையின் 

தழுவலில் சிலிர்த்து 

உற்சாகம் அடைந்து வழி மறித்து 

நிற்கும் ஏதுமறியாத

இந்த ஜீவனை வசை பாடி

தனது ஆற்றாமையை 

தீர்த்துக் கொண்டு 

பெரும் மனப்பாரம் 

இறங்கிய உணர்வோடு 

வெகுவேகமாக நகர்ந்து செல்லும் 

அவர்களை மீண்டும் 

பெரும் வேகத்தில் நனைத்து 

அமைதியாக அந்த ஜீவனுக்கான 

பழியை தீர்த்துக் கொள்கிறது 

எங்கிருந்தோ வந்த அந்த மேகத்தின் 

வெடிப்பில் தங்கிய மழை....

#மழைகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/10/24/திங்கட்கிழமை.

அந்தி மயங்கும் வேளை கடந்து சில மணி நேரம்...

அந்த குரலினை எங்கே தேடி அலைவேன்...


அந்த மழைக் கால 

இரவொன்றில் 

எந்தவித ஆர்ப்பாட்டமும் 

இல்லாமல் மெதுவாக 

எனை கடந்து செல்கிறது 

சாலையில் வழிந்தோடும் 

அந்த மழைநீர்...

என் குடையில் இருந்து வழியும் 

மழைநீரின் ஆறுதல் குரலை 

கேட்க வழி இல்லாமல் 

என் செவிகளை 

ஆக்கிரமிக்கிறது 

எங்கோ இருந்து வந்த அந்த 

விலை உயர்ந்த சிற்றுந்தின்

அந்த ஒலிப்பானின் பேரொலி...

இதை கவனித்த சாலையின் 

ஒரு பகுதி 

என்னை இலகுவாக கை பிடித்து 

இழுத்து ஓரமாக சேர்த்து விடும் 

அதேநேரத்தில் 

என் குடையில் வழிந்தோடும் 

மழை நீரும் நடுங்கி 

தன் ஆறுதல் குரலை 

உள்ளிழுத்துக் கொண்டதை 

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் 

வெளிக் கொணர முடியவில்லை...

இங்கே மதிப்பற்ற குரல் கூட்டத்தின் 

ஒரு கோடி துகள்களில் இதன் குரலை 

எங்கே தேடி அலைவேன் 

இந்த மழைக் கால இரவில்...

#மழைக்கவிதை.

நாள் 21/10/24/திங்கட்கிழமை.

அந்தி மங்கி ஒரு நாழிப் பொழுதில் 

எழுதிய கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

தொலைந்து விட்ட பாதையை தேடி...


தொலைந்து விட்ட பாதையை 

தேடி பயன் இல்லை...

உருண்டோடி எனை பதம் பார்த்து 

களிப்போடு சிரிக்கும் காலத்தின் 

கேலியிலிருந்து கொஞ்சம் 

எனை விடுவித்துக் கொண்டு 

இங்கே சாலையின் ஓரத்தில் 

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை 

இந்த பிரபஞ்சத்தில் இருந்து 

விடுவித்துக் கொள்ள துடிக்கும் 

இந்த மாலை வேளையை 

ஆழ்ந்த அமைதியோடு 

வேடிக்கை பார்த்து 

ஆசுவாசப்படுத்திக் கொண்டு

விடை பெற்று போக 

துணிந்த கால்களுக்கு 

மட்டும் ஏதோவொரு பாதையை 

காட்டி விட்டு நகர்ந்து விடு என்று

காலத்திடம் 

சொல்ல துடிக்கும் இதழ்களை 

ஏனோ நான் கட்டுப்படுத்தி 

அங்கேயே நிற்கிறேன்...

இருளுக்கும் அந்த சாலைக்கும் 

பெரும் துணையாக இருந்து விட்டு 

போகட்டுமே என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 21/10/24/திங்கட்கிழமை/அந்திமாலை

வெள்ளி, 18 அக்டோபர், 2024

அந்த வசவு வார்த்தையின் அர்த்தம்...

 


தனது தந்தை தான் கேட்ட அந்த விளையாட்டு பொம்மையான யானையை வாங்கி வருவார் என்று பெரும் எதிர்ப்பார்ப்பு சுமந்து சோர்ந்து 

உறங்கி விட்ட அந்த குழந்தைக்கு தெரியாது...

அன்றைய அலுவலக சண்டையில் அந்த யானை 

வாங்குவதை மறந்து விட்டு 

தனது ஊருக்கு இருந்த அந்த கடைசி பேருந்து படியேறிய போது 

தனது குழந்தையின் எதிர்பார்ப்பை மறந்து விட்டோமே என்று 

மீண்டும் இறங்க முயலும் போது அந்த பேருந்து நடத்துனர் அவரது கையை பிடித்து இழுத்து பேருந்தில் உள்ளே தள்ளி

பேசிய வசவு வார்த்தையான 

உன் இறுதி பயணத்தை நடத்திக் கொள்ள 

என் இந்த வாழ்வின் பயணத்தை வழி மாற்றி விடாதே என்ற அந்த வசவுக்காக அவரிடம் சண்டைக்கு போக மனமில்லாமல் பயணத்தை முடித்து வீட்டுக்கு நுழைந்து 

அந்த உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் 

நெற்றியில் முத்தமிட்டு நகரும் போது 

பாதி உறக்கத்திலும் மறக்காமல் அப்பா யானை பொம்மை எங்கே என்று 

முணுமுணுத்து விட்டு உறங்கி விட்ட குழந்தைக்கு நாளை 

எப்படியேனும் முதலில் 

அந்த யானை பொம்மையை வாங்கி கை பையில் வைத்துக் கொண்டு தான் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்று....

#அந்த வசவு வார்த்தை.

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.

##இளையவேணிகிருஷ்ணா.

வாழ்வின் கேள்வி கணைகளும் நானும்...


அடுக்கடுக்காக என்னிடம் 

இடைவிடாது கேட்டுக் கொண்டே 

இருக்கும் வாழ்வின் 

கேள்வி கணைகளுக்கு மத்தியில் ஒரேயொரு நொடிப்பொழுதில் கிடைத்த ஆசுவாசம் அது 

அதோ அங்கே மேகங்களுக்குள் சிறிது சிறிதாக மறைந்துக் கொண்டு இருக்கும் நிலவு...

வாழ்க்கையோ நான் எந்த கேள்விக்கும் பதில் அளிக்காத கோபத்தில் 

என் மீது கோபம் கொண்டு 

இன்னும் பல கேள்வி கணைகளால் தொடுத்து காயப்படுத்த முயற்சி செய்யும் போது 

மீண்டும் மேகத்தின் திரையில் இருந்து விடுபட்டு 

என்னை ஆட்கொண்டு ஆனந்த கூத்தாட வைக்கிறது நிலவு...

இந்த நிகழ்வுகளை 

கொஞ்சம் வேடிக்கை பார்த்த 

என் காலமோ 

நீ எப்போதும்  

என் பிரதிபிம்பமாகவே 

பயணிக்கிறாய் என்று 

ஒரு கை குலுக்கலோடு 

மறக்காமல் தேநீர் போட சொல்லி வாங்கி பருகி விட்டு தான் சென்றது...

#வாழ்வின்கேள்விகணைகள்

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

அந்த புதையுண்ட கனவுகள்...

 


புதையுண்ட கனவுகள் 

அன்றொவொரு நாள் 

திடீரென எழுந்து 

எனை கேள்வி கேட்கும் காலத்தில் 

அப்போது பெரும் சமாதானமாக 

ஏதேதோ சொல்லி சமாளிக்கிறேன்

சமாதான பேச்சில் தோற்று 

சோர்ந்து அமருகையில்

அங்கே காலம் எனக்காக 

விட்ட இடத்திலிருந்து 

பேச்சு வார்த்தை 

நடத்திக் கொண்டு 

இருக்கும் போது தான் 

முழுவதும் குழம்பி போகிறேன்...

என் கனவை சிதைத்தது

காலமோ அல்லவோ 

தெரியவில்லை 

எனினும் யாருமற்ற தனிமையின் 

வெறுமையில்

அந்த புதையுண்ட கனவினை

சுவாசித்து சுவாசித்து 

மூர்ச்சையாகி வீழும் போது 

அந்த காலத்தின் தோள்கள் 

என் ஆசுவாசத்தை 

புரிந்துக் கொண்டு 

மெல்ல 

அணைத்துக் கொண்டு பேச்சற்ற மௌனத்தில் என் சோகத்தின் சுமைகளை 

கொஞ்சம் கொஞ்சமாக 

வெளியேற்றி எனை கணமற்ற 

மனுஷியாக்கி 

பறக்க வண்ண சிறகுகளை 

கொடுத்து நான் பறப்பதை 

சிறு பிள்ளையாக வேடிக்கை 

பார்த்து ஆனந்தம் கொள்வதை எப்படி 

என்னால் ஊதாசீனப்படுத்த முடியும் 

என்ற எனக்குள் கேள்வி கேட்டு 

பெரும் சமாதானம் ஆகிறேன்...

அந்த பெரும் கனவினை 

என் அருகே ஒரு கல்லறையில் 

புதைத்துக் கொண்டு ...

#பெரும்கனவு.

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.மழைக்கால இரவொன்றில் 

#இளையவேணிகிருஷ்ணா

அந்த பெரும் நேசத்தின் மகிமையை உணராமல்...

 


பெரும் தவிப்போடு

கடந்து செல்கிறேன் 

எனை நேசித்த அந்த இறப்பின் 

யாசிப்பை...

என் புறங்கையால் 

தள்ளி விட்டு விட்டு...

கால சுழற்சியில் எல்லாம் 

மறந்து விட்டது...

இதோ முதுமை நெருங்கி 

எனை ஒரு மூலையில் 

உட்கார வைத்து காட்சி பொருளாக்கி 

வேடிக்கை பார்க்கும் நேரத்தில் 

என் ஆழ் மனதில் பளிச்சிட்டது... 

என்றோவொரு நாள் 

எனை ஆழமாக நேசித்த 

அந்த இறப்பின் பெரும் நேசத்தை புறங்கையால் தள்ளி விட்டு பெரும் கர்வத்தோடு பயணித்த அந்த நாட்கள்...

இப்போது நான் யாசிக்கிறேன் பெரும் நேசங்கொண்டு அந்த இறப்பின் பெரும் காதலை...

அதுவோ எனை ஒரு கேலி சிரிப்போடு கண்டும் காணாதது போல 

எனை கடந்து செல்கிறது...

நான் என் கைகளை நீட்டி 

அதன் குறுக்கும் நெடுக்குமான ஓட்டத்தை 

நிறுத்தி விட வேண்டுமென...

என் கைகளோ எவ்வளவு முயற்சி செய்தும் எழாமல் 

போகும் போது 

பெரும் நேசத்தின் அவமதிப்பை 

இங்கே 

எவர் எவருக்கு செய்தாலும் 

அதன் கொடுமையின் சீற்றத்தை 

இங்கே தாங்கும் துணிவு 

துர்லபம் என்று 

மௌனமாக கண்ணீர் வடிக்கிறேன்...

என் கண்ணீரின் 

நுண்ணிய சத்தங்கள் கேட்டு 

நான் சாய்ந்து கொண்டு இருந்த சுவரோ 

பரிதாபமாக எனை கெஞ்சி கேட்கிறது...

கொஞ்சம் உன் அழுகையை நிறுத்துகிறாயா...

உன் அழுகையின் சத்தத்தை 

என்னால் தாங்க இயலவில்லை என்று....

#இரவுகவிதை.

நாள் 18/10/24/வெள்ளிக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 14 அக்டோபர், 2024

இன்றைய தலையங்கம்: இயற்கை நடத்தும் பாடம்

 

இன்றைய தலையங்கம்:-

இயற்கை நடத்தும் பாடம்:- ஓட்டு அரசியல்... நகரமயமாக்கல் நிறுத்த தைரியம் இல்லை... கிராமப்புறங்களிலும் மற்றும் பரவலாக வேலைவாய்ப்பு உருவாக்கி மக்கள் ஒரே இடத்தில் குவியாமல் தடுக்க எந்தவித முற்போக்கு சிந்தனையும் இல்லை... வேளாண்மை சார்ந்த தொழில்களில் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யுங்கள் என்று போற போக்கில் சொல்லி விட்டு செல்லும் அரசாங்கம் அதற்கான நிறுவனத்தை நிறுவவோ அல்லது அவர்களே நிறுவிக் கொள்ளவோ உதவி செய்தல் இல்லை... நாட்டின் ஜிடிபி இதில் தான் உள்ளது...ஆனால் அந்த தானியங்களை பாதுகாத்து வைக்க நவீன மயமாக்கப்பட்ட குடோன்கள் ஒவ்வொரு கிராமம் வாரியாக செய்து தர யோசிப்பது இல்லை... நகரத்தில் வீடு கட்ட வதவதவென்று அதிகாரம் வழங்கி விடுவது அதில் வர போகும் சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல்... இப்படி பல விசயங்களை சொல்லி கொண்டே போகலாம்... ஆனால் மேம்பாலம் மீது கார் நிறுத்துவது இங்கே பெரிதாக பேசப்படுகிறது... ஆனால் ஒவ்வொரு விவசாயியும் தனது உயிர் துளியை சிந்தி உரமாக்கி விளைவித்த நெல் முதலான தானியங்களை மழையில் நனைந்து கொண்டே அள்ளி அள்ளி சாக்கில் பிடிக்கும் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாலும் அலட்சியம் செய்யும் அரசு... மக்கள் வரிப்பணத்தில் போக்குவரத்து வசதிக்காக செய்யப்பட்ட வேளச்சேரி மேம்பாலத்தில் கார் நிறுத்த எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்று தகவல்கள் வருகிறது... சபாஷ்... முதலில் வீடு கட்டும் போதே அந்த ஏரியா அதற்கு தகுதி உடையது தானா என்று ஆராய்ச்சி செய்யாமல் ஏன் வாங்குகிறீர்கள்... மேலும் சென்னை முக்கால் வாசி அந்த காலத்தில் ஏரியாக இருந்து உள்ளது... மேலும் இந்த அரசாங்கம் தான் முட்டாள்தனமாக அங்கே குடியேற அனுமதிக்கிறது என்றால் மக்களாகிய உங்களுக்கு எங்கே மதி போனது என்று தான் கேட்க தோன்றுகிறது...

எதுவோ எப்போதும் நீண்ட கால திட்டம் பற்றி யோசிக்காமல் செய்யும் எந்த செயலும் மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்பதை இயற்கை நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளது ஆழ்ந்த நிகழ்வுகள் மூலம் என்பது மட்டும் மறுப்பதற்கு இல்லை...

#இன்றைய தலையங்கம்

#இயற்கை நடத்தும் பாடம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/10/24/செவ்வாய் கிழமை.

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

இரவும் நாங்களும்...

 

அந்த நள்ளிரவு பொழுதில் 

எதேச்சையாக சாலையில் 

யாருமற்ற தனிமையில் 

நடக்கிறேன் ...

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 

எனை மிருதுவாக தீண்டி 

நலம் விசாரித்து என்னோடு 

சிறு உரையாடல் 

நிகழ்த்திக் கொண்டு 

பயணிக்கிறது 

அந்த குளிர் காற்று ...

என் காலடி ஓசையில் 

திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தது 

அந்த சாலையோர புழுதியில் 

தனது உறங்கியும் உறங்காமல் 

இருந்த நாய் ஒன்று...

என்னை ஏனோ பின் தொடர்ந்து 

வந்துக் கொண்டே இருக்கிறது...

இங்கே யாருமற்ற சாலையில் 

நானும் அந்த நாயும் 

எங்களை வருடும் காற்றும் 

எங்கிருந்தோ சத்தம் எழுப்பும் 

இரவு பூச்சியின் ஓசையும்...

கொஞ்சம் இந்த பிரபஞ்சத்தின் 

இருளின் நீண்ட தூர பயணத்தை 

ரசிக்க மனமில்லாமல் 

அங்கே பல மனிதர்கள் நாளைய 

சூழலின் கவலைகளோடு 

கண் அயர்கிறார்கள்...

நாங்கள் அந்த பேரமைதி கொண்ட 

பயணத்தின் சாயலை 

மனதில் தேக்கி வைத்து 

விடிந்தும் விடியாத பொழுதில் 

கை குலுக்கி விடை பெறுகிறோம் 

ஒரு ஆழ்ந்த ரசனை கொண்ட 

புன்னகையோடு....

நாங்கள் விடை பெற்று நிதானமாக 

இந்த விடியலை எதிர் கொள்வதற்கு 

பதிலாக உறங்க செல்கிறோம் 

அங்கே அந்த பல கவலையோடு 

கண்ணயர்ந்த மனிதர்கள் 

திடுதிடுவென்று ஓட துவங்கி 

விட்டார்கள்....

அந்த ஓட்டத்தில் நாங்கள் நிதானமாக 

இரவில் பயணித்த சாலை

நசுங்குகிறது...

இது எதையும் கண்டுக்கொள்ளாமல்

நானும் அந்த நாயும் இரவு பூச்சியும் 

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை 

கவனித்த அந்த பகல் நேர சாலை 

எங்களை வரவேற்க காத்திருக்கிறது 

அந்திமாலை எப்போது வரும் 

இந்த நசுங்கலில் இருந்து விடுபட்டு 

சுவையான பயணிகளான 

எங்களை சந்திக்க என்று...

#இரவும் நாங்களும்

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 13/10/24/ஞாயிற்றுக்கிழமை.



வியாழன், 10 அக்டோபர், 2024

அவர்களின் கேள்வி...

 


ஏன் உனக்கு இந்த கர்வம் என்று 

அங்கே பலபேர் எனை வழி மறித்து 

கேட்கிறார்கள்...

நானோ என் தேவைகள் 

மிகவும் சொற்பம் என்று 

சொல்லி விட்டு அங்கிருந்து 

நகர்கிறேன் 

எனை கடந்து சென்ற பட்டாம்பூச்சி 

என் தோளில் அமர்ந்து 

எந்தவித பயமும் இல்லாமல் 

பயணிக்கிறது...

இதை எல்லாம் வேடிக்கை 

பார்த்த மக்கள் 

என் பதிலில் திருப்தியடையாமல் 

அந்த பட்டாம்பூச்சியையும் சேர்த்து 

வசைப்பாடுகிறார்கள் 

இந்த காலம் அதையும் 

சும்மா வெறுமனே

புன்முறுவலோடு 

வேடிக்கை பார்த்துக் கடக்கிறது....

#அவர்களின்கேள்வி

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/10/24/வெள்ளிக்கிழமை.

அந்த வேரின் பெரும் உவகை...

 


என்றோவொரு நாள் 

பூக்கும் பூக்களுக்காக

இன்றே அந்த செடியின் வேர்கள் 

தீவிரமாக  

மண்ணில் போராட்டம் கொள்கிறது ...

அதன் பெரும் உழைப்பு

எதிர் காலத்தில் பயன் கொடுத்து 

பல பூக்கள் பூத்துக் குலுங்கலாம் 

அல்லது ஒரேயொரு பூவும் 

பூக்காமல் போகலாம்...

எனினும் வேரின் வெற்றி 

என்பது அந்த பூக்களற்ற 

செடியின் மகிழ்ச்சியிலாவது 

பெரும் வெற்றி பெற்ற களிப்பில் 

மண்ணில் 

பேரமைதிக் கொள்கிறது...

இங்கே எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத 

பயணத்தில் எல்லாம் ஏதோவொரு 

ஒரு உவகை 

கருணைக் கொண்டு 

பேரன்பு கொண்ட 

தழுவலை விட்டு செல்கிறது 

அந்த தழுவலின் பேரன்பை 

நிதானமாக உணர்பவர்கள் 

இந்த பிரபஞ்சத்தில் கோடியில் 

ஒருவரே அல்லவா...

#அந்தவேரின்பெரும்உவகை

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/10/24/வெள்ளிக்கிழமை.

அந்த செல்லா காசின் பெரும் விருப்பம்...

 


அந்த செல்லா காசின் 

பெரும் விருப்பம் 

தான் எப்படியேனும் செல்லும் காசாக 

மாறி புதுப் பொலிவோடு 

சகல மரியாதையுடன் 

வாழ வேண்டும் என்பதே...

அதை நடைமுறைப்படுத்த 

யார் யார் காலிலோ விழுந்து 

கண்ணீரோடு மன்றாடுகிறது...

ஒருவரின் கருணையும் இல்லாமல் 

மண்ணோடு மண்ணாக புதைகிறது...

மீண்டும் அந்த புது யுகத்தில் 

யாரோ ஒரு பேரரசரின் கையில் 

ரத்தினங்கள் பதிக்கப்பட்ட 

மோதிரமாக அது பெரும் மகுடம் 

சூட்டப்பட்டு பெரும் மதிப்பு 

பெற்ற போது அதன் போன யுகத்தின் 

நிலையில் தான் பரிதவித்த நினைவு 

மின்னல் போல வந்து 

செல்லும் போது 

பெரும் ஆச்சரியம் அடைந்து 

இந்த சாம்ராஜ்ஜியத்தின் 

அடையாளமாக நானா என்று 

ஒரு சிறு துளி 

ஆர்ப்பாட்டம் இல்லாமல் 

பேரமைதி கொண்டு 

அந்த பேரரசரின் விரல்களின் வழியே 

ஊடுருவி 

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் 

நாடகங்களை வேடிக்கை 

பார்க்கிறது...

#செல்லாகாசு.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 11/10/24/வெள்ளிக் கிழமை.



புதன், 9 அக்டோபர், 2024

ரத்தன் டாடா தேசத்தின் பொக்கிஷம்


உயர்ந்த உள்ளம் கொண்ட ரத்தன் டாடாவின் ஆன்மா அந்த இறைவனின் நிழலில் பூரண அமைதிக் கொள்ளட்டும்... தேசத்திற்காக என யோசிக்கும் தொழிலதிபர்கள் தற்போதைய நாளில் சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்...டாடா எப்போதும் தேசத்தின் கடைக் கோடி மக்களின் இதயத்தை வென்ற மாமனிதர் ... அவருக்கு ஆத்மார்த்தமான இதய அஞ்சலி செலுத்த நாடு கடமைப்பட்டுள்ளது🙏.

#ரத்தன்டாடா.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10/10/24/வியாழக்கிழமை.

இந்த ராஜாவின் பிதற்றலால் அந்த ராஜா என்ன செய்வார்?

 


இன்றைய தலையங்கம்:-

சிதம்பர நடராஜர் கோயில் வளாகம் விளையாட்டு மைதானமா?

அறநிலைய துறையை ஊர் ஊராக சென்று விமர்சனம் செய்யும் பிஜேபினர் சிதம்பர நடராஜர் கோயிலில் மட்டை பந்து விளையாடியதை நியாயப்படுத்துவது போல பிஜேபி ஒருங்கிணைப்பாளர் H.ராஜா செய்தியாளர்களிடம் பேசுவது எவ்வளவு முரணான அதேசமயத்தில் அருவருக்கத்தக்க விசயம் என்று அந்த கட்சியை ஆதரிக்கும் மக்கள் உணருங்கள்...இதே போல அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மட்டை பந்து வீச்சு விளையாட்டு நடந்து இருந்தால் எவ்வளவு வியாக்கியானம் பேசி இருப்பார்கள்... இந்த சிதம்பர நடராஜர் கோயிலில் நடந்த மட்டை பந்து வீச்சு விசயத்தை நீதிமன்ற மதுரை கிளைக்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும்... ஏனெனில் அங்கே நாட்டியாஞ்சலி நடத்தக் கூட இந்த தீட்சிதர்களிடம் எவ்வளவு போராட்டம் ஒரு காலத்தில் நடந்தது என்று மக்களுக்கு தெரியும்... நடராஜரின் நடன கலையை உலகம் முழுவதும் உணர்த்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த சில வருடங்களுக்கு முன்பு எவ்வளவு கெஞ்ச வேண்டியது இருந்தது இந்த தீட்சிதர்களிடம்... தற்போது மட்டை பந்து வீச்சு விளையாட்டு தீட்சிதர்கள் அங்கே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்... கேட்டால் பிஜேபி ஒருங்கிணைப்பாளர் ராஜா ஏன் அங்கே கிரிக்கெட் விளையாடினால் என்ன தவறு என்று கேட்கிறார்.. மேலும் அது கோயில் இடம் இல்லையாம் அது விளையாட்டு மைதானம் என்கிறார்... இப்படியான தலைவரை வைத்துக் கொண்டு இந்த பிஜேபி இன்னும் இந்த தமிழ் நாட்டில் என்ன பாடுபடப் போகிறதோ யாருக்கு தெரியும்... ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. இந்த பிஜேபி மேலிட தலைவர்கள் டெல்லியில் முதலில் நல்ல தமிழ் பயிற்று பள்ளியில் சேர்ந்து தமிழ் கற்றுக் கொண்டால் தான் அவர்களுக்கு அவர்கள் நிர்ணயம் செய்த தலைவர்களாலேயே எவ்வளவு கூத்து இங்கே நடக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியும்...அதை விட்டு விட்டு இங்கே ரோடு ஷோ நடத்தி ஒரு புண்ணியமும் இல்லை ஜீ...

#சிதம்பரநடராஜர்கோயில்வளாகம்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 09/10/24/புதன்கிழமை.

செவ்வாய், 8 அக்டோபர், 2024

உயர்ந்த மனிதர் 💫

 


ஒரு அற்புதமான வாழ்வை வாழ்ந்து கொண்டு தனது அமைதியான வாழ்வின் மூலம் உயர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தை நமக்கு உணர்த்தி இருக்கிறார் இந்த ஆட்டோ ஓட்டும் பெரியவர்.. எதிலும் திருப்தி இல்லாமல் வாழும் பல மனிதர்கள் மத்தியில் இவர் ஒரு அற்புதமான மனிதர் தான்... அவரது உரையாடலை தான் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்...அவரை சிறப்பித்து இணையத்தில் பகிர்ந்து கொண்ட அந்த அன்பருக்கு பெரும் மகிழ்வோடு வாழ்த்துக்கள்🎉💫🙏

கீழேயுள்ள லிங்கில் அந்த பெரியவரின் உரையாடல் நேயர்களே 🙏 🎻 ✨.

https://youtu.be/cpO_UNOFCAU?si=j9d8EwgWM-sBpqi6

பிரம்மா தோன்ற போகிறார்...

 


இந்த ஞாயிறு 

நம்மை படைத்த பிரம்மா 

தோன்ற போகிறார் 

மெரினாவில் என்று 

காத்து வழியே 

காதில் கேட்ட செய்தியில் 

எது பற்றியும் யோசிக்காமல் 

இப்போதே அவரை பார்க்க 

திட்டமிடல் நடக்கிறது 

அங்கே கூடி கூடி பேசும் 

கூட்டத்தினரிடையே

ஆத்திக நாத்திக பேதமில்லாமல்....

இதை செவி சாய்த்த காலமோ 

அது சரி ...

இந்த ஞாயிறு நமக்கு 

ஒரு பெரும் விருந்து தான் என்று 

பெரும் மகிழ்ச்சியில் வந்த 

சிரிப்பின் ஒலியை 

அவர்கள் செவியை 

அடைந்து விடாமல் தடுத்து

அடக்க பெரும் பாடுபட்டு 

தனது கைகளால் இறுக 

வாய் பொத்தி 

தனது காலடி சத்தத்தை மறைத்து 

அவர்களை கடந்து 

மறைந்தது...

#சூழல்கவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/10/24/செவ்வாய்க்கிழமை.



வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...

காற்றில் தன் தேகத்திற்கு  எந்த பிடிமானமும் கிடைக்காதா  என்று  தேடி அலைகிறது  அந்த சிறிய கொடி... வெகுநேரம் அந்த கொடியின்  தேடலில்  புரிந்துக்...