ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

புகழ்

அன்பர்களே வணக்கம்.
           இன்று நாம் பார்க்க இருப்பது புகழ். ஆம். புகழ் தான். நாம் அனைவரும் கண்டிப்பாக புகழைத்தேடத்தான் செய்வோம். ஏன் நாம் அனைவரும் ஏதோவொரு வகையில் உழைப்பதும் அதற்கு தான்.
        சரி புகழ் என்பது என்ன அவ்வளவு எளிதில் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிதில் கிடைத்துவிடக்கூடியதா என்ன. இல்லை. நாம் அதுவும் அதை எதிர்பார்த்து செய்யும் போது நம் கைநழுவி போய்விடுவதே அதிகம். அதனால் நாம் புகழ் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் நமது செயல்களை மிகவும் ஒழுங்காக நேர்த்தியாக நேர்மையாக செய்து கொண்டே வரவேண்டும்.
      அப்படி செய்துக்கொண்டே வரும் போது நாம் எந்த இடையூறு விமர்சனங்கள் வரும் போதும் அதைப்பற்றி கவலைக்கொள்ளக்கூடாது.அப்போது தான் நாம் புகழை அடைய முடியும். உலகில் பெரும் புகழை அடைந்தவர்களைப் பார்த்தால் நமக்கு ஒன்று நன்றாக புரியும். அவர்கள் அவர்களின் செயல்களில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்.அவர்கள் அப்படி இருந்ததால் தான் அந்த புகழை அடைய முடிந்தது.
    மேலும் நாம் பொது சேவையில் இருப்பவர்களஇருப்பவர்களே அதிகப்புகழ் அடைவதைப் பார்க்கிறோம்.மற்றும் மக்களுக்கு பயன் தரும் கண்டுபிடிப்புகள் செய்தவர்கள் அதிகப்புகழ் அடைந்திருக்கிறார்கள்.இவர்கள் மட்டும் இல்லை.இன்னும் எத்தனையோ துறையில் இருப்பவர்களும் புகழ் மழையில் நனைகிறார்கள்.ஒரே வித்தியாசம் என்ன என்றால் பொது மக்களுக்கு பயன் உள்ள வகையில் செயல்களை செய்தவர்கள் நீடித்த புகழ் உடையவர்களாக உள்ளார்கள். மற்ற துறைகளில் புகழ் அடைந்தவர்கள் அந்தந்த துறையை சேர்ந்தவர்களுக்கே தெரியும் .அவ்வளவு தான்.
        மேலும் பொதுவாழ்வில் புகழ் அடைந்தவர்களை பாருங்கள். அவர்கள் அனைவரையும் அரவணைத்து சென்றதாலேயே அந்த புகழை அடைந்திருப்பார்கள்.அவர்கள் புகழ் அடைய பின்னாலே நிறைய மனிதர்கள் சத்தம் இல்லாமல் வேலை செய்திருப்பார்கள்.ஆனால் அவர்களை எப்படி அரவணைத்து வேலை வாங்க வேண்டும் என்கிற கலை கண்டிப்பாக தெரிந்ததால்தான் ஒருவருக்கு புகழ் கிடைக்கிறது.
       புகழ் என்பது ஒரு மிக பெரிய போதை.அதை அவ்வளவு எளிதில் வாங்கி விடமுடியாது. அதை வாங்க அது என்ன எளிய வஸ்துவா என்ன?.அதனால் புகழை நாம் எப்போதும் வாங்க துடிப்பதைவிட நமது காரியத்தை திறம்பட ஒழுங்கமைத்து செய்துக்கொண்டே வருவோம். இதை செய்யும் போது அடுத்தவர்கள் எந்த மோசமான விமர்சனங்கள் செய்தாலும் பொருட்படுத்தாமல் செய்து வருவோம். நமது செயல் நல்ல செயல்களாக இருக்கும் பட்சத்தில் நம்மை தேடி புகழ் வரும்.
       எந்த ஆடம்பரமான செயலிலும் புகழை வாங்க முடியாது. அது எளிமையான மனிதர்களையே தேடி சேரும். எந்தளவிற்கு நாம் எளிமையாக இருக்கிறோமோ அதாவது அடுத்தவர்கள் நம்மை அணுகுவதில் மற்றும் அடுத்தவர்களை நாம் நடத்துவதில் அடுத்தவர்களுக்கு உதவுவதில் ..இப்படி எல்லா விசயத்திலும் எளிமை வேண்டும்.
      நம்மிடம் செல்வம் வந்த போது நம் தேவையை குறைத்து அதை ஆக்கபூர்வமாக நாலுபேருக்கு செலவு செய்யும் போது நிச்சயமாக நம்மை தேடி புகழ் வரும். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்ன என்றால் தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் தேவையான நபருக்கு நம் செல்வம் உதவி செய்ய செல்கிறதா என்பதுதான்.
    நாம் நம் சேவைகளை ஒழுங்காக செய்துக்கொண்டே வரும் போது கண்டிப்பாக நம்மை தேடி புகழ் வந்தே தீரும். அப்போது நாம் அகங்காரத்தை நம்முள் அணுகவிடக்கூடாது.அதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மோசமாக தூண்டி விட்டாலும் நாம் நமது செயலில் கவனமாக இருக்க வேண்டும்.
    ஒவ்வொரு மனிதனும் வள்ளுவர் சொல்வதைப்போல தோன்றின் புகழோடு தோன்ற வேண்டும். அப்போது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு நிச்சயமாக ஒரு அர்த்தம் இருக்கும். அதற்காக குறுக்கு வழியில் புகழை நாம் தேடக்கூடாது.அது நீண்ட நாள் நிலைக்காது.
       ஒருமுறை புகழ் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு பாருங்கள். பிறகு உங்களை புகழ் மழை நனைக்கும். அப்படி முதலில் உங்களை வந்து சேர்ந்த புகழை நீங்கள் காப்பாற்றி பொக்கிஷம் போல பாதுக்காத்து வையுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை கொடுக்கும் கருவி.
     தேவைப்படும் போது அதை நினைத்து நினைத்து உங்களை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள்.அது இன்னும் பல புகழை உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.
    என்ன நேயர்களே புகழ் புரியும் காரியங்களில் ஈடுபட்டு ஆனந்தத்தை அதில் தேட முயற்சி செய்ய ஆயத்தம் ஆகிவிட்டீர்கள் அப்படி தானே. நல்லது. நல்ல செயல்களை இப்போதே செய்ய ஆரம்பித்து புகழோடு ஆனந்தமாக வாழுங்கள். வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விடை தெரியா கேள்வி ஒன்று...

  விடை தெரியா கேள்வி ஒன்று  பல யுகங்களாக இங்கும் அங்கும்  அலைந்து திரிந்து கொண்டு  இருக்கிறது என்னுள்ளே... ஒவ்வொரு முறையும் இந்த பூமியில்  ந...