எத்தனையோ
யோசனைக்கு பிறகு
நாம் எடுக்க போகும்
முடிவு என்று
ஏதேதோ பீடிகை போடுகிறாய்
என் எதிரே அமர்ந்து
மணிக்கணக்காக...
இணைந்து வாழ்ந்த
வாழ்வின் சுவை
அப்படி ஒன்றும்
கசந்து விடவில்லை!
என்று இடையில்
சொல்கிறாய்...
என்றோ வாங்கிய பழத்தில்
ஒரு சிறு அழுகல் கண்டு
தற்போது அந்த பழத்தை
நொந்து பயனில்லை...
என்கிறாய்!
ஏதோவொரு தருணத்தில்
கடுமையான முடிவுகளை
எடுத்தேயாக வேண்டிய
தருணத்தில் நாம்
இருக்கிறோம் என்று
நீ சொல்கிறாய்...
இப்படி ஏதேதோ காரணங்களை
தேடி தேடி சொல்லி
என்னை விட்டு
தொலைதூர போக நினைக்கும்
உன் மனதை புரிந்து கொள்ள
முடியாமல் இல்லை...
இத்தனை தூரம்
நீ மணிக்கணக்கில்
என்னிடம் பேசிய போதும்
நீ தினம் தினம்
மறக்காமல்
பெரும் காதலோடு
எனக்கு தந்த
உன் ஈர முத்தத்தை
நான் என்ன செய்வது என்று
மட்டும் சொல்ல மறந்து விட்டாயா
அல்லது வேண்டும் என்றே
உன் அடையாள நினைவாக
என்னை துன்புறுத்தி பார்க்க
அதை அப்படியே விட்டு விட்டு
சென்று விட்டாயா என்று
மட்டும்
சொல்லி விட்டு செல்
என் தீராத காதலே!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:30/03/2026.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக