ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

திங்கள், 2 மார்ச், 2026

அலாதி சுவை...

 





வாழ்வின் சுவையை

சிறிதும் உணர 

காலம் இல்லாமல்

தீவிர ஓட்டத்தில்

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


எந்தவித எதிர்பார்ப்பும்

இல்லாமல்

கதிரவன் உதிப்பதற்குள்

எழுந்து

அது மறையும் வரை

ஓடிக் கொண்டே இருக்கிறேன்...


கதிரவனின் உதயத்தில்

மிளிரும் ஒளியை

ரசிக்க சிறு நொடியும்

இல்லை...


இளம் காலைப் பொழுதில்

வானை அளந்து செல்லும்

பறவைகளின் சிறகை 

நின்று நிதானித்து

சிறிது நேரம்

அதை கண்களில்

நிறைத்துக் கொள்ள

நேரமில்லை...


அதோ அங்கே அன்றொரு நாள்

நான் சில ரொட்டி துண்டுகள்

போட்ட நினைவில்

என்னை மறக்காமல்

என் பின்னால் பெரும் பாசத்தோடு

ஓடி வரும் நாயின்

பேரன்பை உணர மனமில்லாமல்

அதை வெறுப்போடு

பார்த்து கடந்து செல்கிறேன்

என் அலுவலகத்தில்

மேலாளர் வசைகளுக்கு

அஞ்சி...


இப்படியே போகிறது

வாழ்க்கை என்று

வெறுப்பாக எண்ணியபடியே

ஒரு ஆசுவாசத்திற்காக

தேநீர் பருக

அலுவலகத்தை விட்டு 

வெளியே

அந்த சாலையில்

நடந்து செல்லும் போது

கடும் வெயிலின் தாக்கத்தில்

அப்படியே நிழலை

தேடி அலைகிறேன்...

மிகவும் சோர்வாக...


ஒரு சிறு நிழலை தேடி

கண்கள் என்னையும்

அறியாமல் தேடும் போது...


ஒரு சிறு மரம்

தனது கிளைகளில் உள்ள 

இலைகளை அசைத்து

இங்கே வா

சிறிது இளைப்பாற

நிழலெனும் மடியை

தருகிறேன் என்று

தாயன்போடு 

அழைக்கும் போது...


நான் வேக வேகமாக

ஓடி அந்த நிழலெனும்

மடியில் 

அடைக்கலம் ஆகி

சிறிது இளைப்பாறும் போது...


அதன் ஒரு சிறு கிளையில்

அமர்ந்து இரு குருவிகள்

கீச் கீச்சென்று சத்தமிட்டு

பேசுவதை கேட்டு விட்டு

தன்னை மறந்து

இயற்கையின் சுவையின்

ஒரு சிறு துளியை பருகி

அதன் அலாதி சுவையை

அன்று தான் உணர்ந்தேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/02/26.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

போர் நிறுத்தம்...

   இத்தனை நாள் தூரமாக நின்று  வேடிக்கை பார்த்த  அமைதி  இன்று எந்த தயக்கமும்  இல்லாமல் என் கைகளில்  வேகமாக ஓடி வந்து  பேரன்பு கொண்டு  என்னை ...