ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 29 அக்டோபர், 2025

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...


அர்த்தங்களற்று பிடிபடாமல்

திரிகிறது வாழ்க்கை...

அதன் ருசிக்கொரு எல்லை

இங்கே எவரும் அப்படி வகுத்து விட 

முடியாது...

இங்கே எந்த ருசியும் தேவையில்லை 

என்று அமர்ந்து 

அந்த நதியை வேடிக்கை 

பார்க்கும் என்னையும்

சலனப்படுத்த ஓசை எழுப்பி

அது முடியாமல்

அலுத்துக் கொண்டு போகும் வேகத்தில் 

அங்கே பலபேர்

அதன் ஆக்ரோஷமான சுவைக்கு

அடிமையாகிறார்கள்...

இது தான் அதன் சுபாவம் என்று

நான் சற்றே திரும்பி புன்னகைத்து விட்டு 

மீண்டும் அந்த நதியை 

ரசிக்கிறேன் அவர்களை பற்றிய 

 எந்தவொரு உறுத்தலும் இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/10/25.

வியாழன், 23 அக்டோபர், 2025

இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்...

 


#இன்றையதலையங்கம்:-

#இந்த தேசத்தின் சாபமா அரசியல்வாதிகள்:-

ஒரு மனிதனின் உயிர் வாழ்வதற்கு அடிப்படை தேவை உணவு... பிறகு தான் எல்லாமே.. ஆனால் அந்த உணவை விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த நாட்டில் என்ன மரியாதை கிடைக்கிறது என்று பார்த்தால் நிச்சயமாக மனது வேதனை அடைகிறது.. ஒரு விவசாயியின் மன வேதனை மற்றொரு விவசாயிகளுக்கு தான் தெரியும்.. இங்கே பல நிகழ்வுகளை அரசியல் விவாதம் செய்யும் மீடியாக்கள் எல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி அரசாங்கத்தை நெருக்கடிக்களுக்குள்ளாக்கும் வகையில் விவாதம் நடத்தி விவசாயிகள் பக்கம் நிற்க வேண்டாமா? பத்தோடு பதினொன்றாக செய்திகளை சொல்லி விட்டு போய் விட்டால் போதுமா என்று கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழுகிறது...

பெரும்பாலான அரசியல்வாதிகள் பினாமி பெயரில் கோடிக்கணக்கில் சம்பாதித்த சொத்தை எழுதி வைக்கிறார்கள்... அந்த செலவு ஆகுமா டெல்டா விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் செய்யும் வரை பாதுகாத்து வைக்க குடோன்கள் கட்ட என்று கேட்க தோன்றுகிறது...

ஒரு பயிரை விளைய வைத்து அதை களம் வரை கொண்டு வர எத்தனை இன்னல்கள் சந்திக்க வேண்டி உள்ளது என்று ஒரு விவசாயியை சந்தித்து கேட்டு பாருங்கள்..

இங்கே நமது நாட்டில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது என்பது தான் மிகவும் வேதனையான விஷயம்..

எந்த நாட்டிற்கும் கிடைக்காத காலநிலை நமது நாட்டிற்கு கிடைத்து இருக்கிறது... எத்தனை நாடுகள் பசி பட்டினியால் அவதிப்படுகிறார்கள் என்று கூகுளில் தேடி பாருங்கள்..

பசியால் காசா பகுதியில் மக்கள் படும் துயரத்தை நீங்கள் மீடியாவில் பார்த்து இருப்பீர்கள்...

இங்கே யாருக்கும் பயன் இல்லாமல் தானியங்கள் மழையாலோ அல்லது மற்ற காரணங்காளாலோ வீணாகிறது என்று நினைக்கும் போது பாரதியார் போல கோபம் வருகிறது... பாரதியார் தனியொருவருக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்துடுவோம் என்றார்...

ஆனால் விவசாயிகளின் உழைப்பு வீணாகிறது என்றால் இந்த தேசத்தை ஆள்பவர்களை எரித்துடுவோம் என்று இன்று பாரதியார் இருந்து இருந்தால் நிச்சயமாக பாடி இருப்பார்...

ஒவ்வொரு விசயத்திற்கும் காரணத்தை தேடி கண்டுபிடித்து மீடியா கேட்கும் கேள்விகளுக்கு சமார்த்தியமாக பதில் சொல்லி விட்டு நகர்ந்து விட்டால் பிரச்சினை தீராது...நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் ஆகி விட்டது.. ஆனால் இங்கே விவசாயிகளுக்கு அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத அளவுக்கு தான் நாம் இருக்கிறோம்...

மாநில அரசு ஒரு பக்கம் மத்திய அரசை கையை காட்டுகிறது.. ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யுங்கள் என்று..

மத்திய அரசு ஒரு பக்கம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா அதை செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது..

இது இன்று நேற்று அல்ல...

காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது..

கடந்த எடப்பாடி ஐயா ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்ய சாக்கு தேவையான அளவு இல்லை என்று சாக்கு போக்கு சொன்ன காட்சிகள் எல்லாம் இன்னும் மறந்து விடவில்லை...

எது எப்படியோ இந்த விசயத்திற்கு ஒரு தீர்வு வேண்டும்..

நீங்கள் நெடுஞ்சாலை நான்குவழி சாலை எட்டு வழி சாலை எல்லாம் போடுவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து ஒரு சுமுகமான முடிவு எடுத்து விவசாயிகள் பக்கம் நில்லுங்கள்...

குடோன் கட்டுவது ஒன்றும் அவ்வளவு கடினமான காரியம் இல்லை...

உங்கள் பினாமி நிலத்தை கொடுத்தீர்கள் என்றாலே போதும் குடோன் கட்டி விடலாம்...

இந்த தேசம் எப்போதும் விவசாயிகளின் கண்ணீரை பார்த்துக் கொண்டே இருந்தால் அல்லது அவர்கள் தானாகவே தான் நேசித்த நிலத்தை கான்கிரீட் காடுகளாக விற்பனை செய்வதற்கு கொடுக்கும் நெருக்கடிகளை உருவாக்கி விட்டால் அது தான் இந்த தேசத்திற்கு ஆளும் அரசாங்கங்கள் சேர்த்து வைத்த கொடிய பாவம்...

இனியேனும் திருந்துங்கள்

இங்கே அனைத்தையும் அரசியல் மாயாஜால வார்த்தைகளில் அடைத்து வைத்து விட முடியாது...

அனைத்து விவசாயிகள் சார்பாக இந்த தலையங்கம் வெளியிடப்படுகிறது..

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

#நாள்:#24/10/25.

செவ்வாய், 21 அக்டோபர், 2025

வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...


எனது காத்திருத்தலின் 

வலியின் தகிப்பை

இங்கே நீ அறிய 

முடியாது போனதால் தான்

நான் ஏதேதோ சித்தம்

கலங்கியதை போல

செய்கிறேன்...

அன்றொரு நாள் மழை நாளில்

நீயும் நானும் சேர்ந்து பருகிய

தேநீரின் மிடரின் சுவையை

ஒரு அற்புதமான இசையை மீட்டெடுப்பது போல

நான் மீட்டி எனக்கான ஆறுதலை

தேடிக் கொள்கிறேன்...

இங்கே காதலின் தீண்டலின் சுவையை நீதான் உணர்த்தினாய்...

நீயே அதை வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து பிடுங்கி

அந்த கொழுந்து விட்டு எரியும்

தீயில் எறிந்து விட்டு எதுவும் நடவாதது போல செல்கிறாய்...

இத்தனையும் நடந்த பிறகும்

நீயும் நானும் கோர்ப்போம் என்று

நம்பி உன் வரவை ஆவலோடு

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

இந்த பேதைக்கு யார் ஆறுதல் என்று

எவரேனும் கேட்டால் அதுவும் நீயே என்று கொஞ்சமும் யோசிக்காமல்

சொல்லி விடும்

என் ஆழ்ந்த பெரும் காதலின்

உயிர் தீண்டலை புரிந்துக் கொண்டு

என் கரம் கோர்க்க வருவாயா என்று

இங்கே தனித்து நிற்கிறேன்

அந்த வாழ்வெனும் நெடுஞ்சாலையில்...

நீ வரும் நாளில் நான்

சித்தம் தெளிவேன் என்று

காத்திருக்கிறேன்

அதோ அங்கே பெய்யும் 

பெரும் மழையையும் பொருட்படுத்தாமல்

நெடுங்காலமாக...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:22/10/25.






திங்கள், 20 அக்டோபர், 2025

இன்றைய தலையங்கம்

 


#இன்றையதலையங்கம்:-

அரசாங்கம் சட்டம் ஒழுங்கு மிகவும் நன்றாக உள்ளது என்று சொன்னால் அதை நேரில் அனுபவித்து வரும் பொதுமக்கள் என்ன நிலையில் உள்ளது என்று அறிவார்கள்... தங்களது கண்களுக்கு முன்னே பலவகையான போதை வஸ்துவை பயன்படுத்தி தாய் தந்தையரை கொடுமைப்படுத்தி மற்றும் பொது இடத்தில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி மோசமான சமூகத்தின் அடையாளமாக தற்போது இளைஞர் சமூகம் மாறிக் கொண்டே வருகிறது என்பதை இங்கே இந்த பதிவை வாசிக்கும் எவரும் மறுக்க முடியாது...

இளைஞர்கள் முன்னேற்றத்திற்காக நிறைய திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று மேடை தோறும் பேசி வரும் அரசாங்கம் இங்கே இளைஞர்கள் போதை வஸ்துவால் சீரழிகிறார்கள் என்று சொன்னால் மறுக்கிறார்கள் அல்லது அவர்கள் நலனில் அவர்கள் குடும்ப நலனில் அக்கறை இன்றி ஏதேதோ பேசி நழுவி விடுகிறார்கள்...கிராமப்புறம் வரை போதை வஸ்து பெருகி விட்டது.. நள்ளிரவு வரை மிகவும் அதிகமாக அருவருக்கத்தக்க வகையில் பேசி முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மற்றும் எவரையும் உறங்க விடுவதில்லை...

இது நிச்சயமாக தேர்தல் முடிவுகளில் தெரியும்...

ஏனெனில் ஒரு பள்ளியில் குடித்து விட்டு தகாத முறையில் ஆசிரியர்கள் வருவதும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக அவர்களை பணி இடை நீக்கம் செய்வதும் தொடர் கதையாகிறது... ஏன் பணிஇடை நீக்கம் செய்ய வேண்டும்... அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறைவாசம் அனுபவிக்க வைக்க அப்படி என்ன தயக்கம் இந்த அரசாங்கத்திற்கு என்று தெரியவில்லை...

ஆனால் ஒரு விஷயத்தை புரிந்துக் கொள்ள வேண்டும் எல்லா அரசியல் கட்சிகளும்...

மக்களுக்காக தான் ஒழுங்கான அமைதியான சமூகத்தை உருவாக்க தான் அரசியல் கட்சிகளே தவிர ஒரு இனத்தை அழிப்பதற்காக அல்ல... ஏனெனில் எவ்வளவு மதிப்பு மரியாதை கொண்ட தமிழ் நாட்டின் பெருமை மிகவும் மோசமாக போய்க் கொண்டு இருக்கிறது...

இனியேனும் அரசியல் கட்சிகள் திருந்த வேண்டும்...

ஏனெனில் ஓட்டு அரசியலையும் தாண்டி மக்கள் தற்போது தமது வீட்டு வாசல் வரை சமூக சீர்கேடுகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்...

ஒரு நூலகத்தின் முன்பு போதை வஸ்து மற்றும் சாராய பாட்டில் இப்படி கிடப்பதை எந்த அறிவார்ந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளாது...

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது தான் தமிழ் நாட்டில் உள்ள மக்களின் வேத வாக்கு...

கொஞ்சம் சமூக அக்கறை கொண்டு அரசியல் கட்சிகளை நடத்தி வாருங்கள்...

இல்லை என்றால் அதற்கான விளைவுகளை மக்கள் மிகவும் அற்புதமாக கொடுத்து விடுவார்கள்...

இங்கே கட்சி சார்பின்றி நடுநிலை என்று ஒன்று இருக்கிறது... சமூக அக்கறை என்று ஒன்று இருக்கிறது...

தமது தீவிரமான விசுவாசி எங்கே போய் விட போகிறார்கள் என்று கட்சி தொண்டர்களை நினைக்காதீர்கள்.. ஏனெனில் அவர்கள் குடும்பமும் இதே தமிழ் சமூகத்தில் பல அருவருக்கத்தக்க விசயங்களை தமது வீட்டு இளைஞர்கள் மூலம் அனுபவித்து வருகிறது...

இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்!

அது நல்ல சமூகத்தின் பாதையை உருவாக்கட்டும்...

தீபாவளி சரக்கு விற்பனை காசு எவ்வளவு தேறியது எவ்வளவு கல்லா கட்டினோம் என்று பார்ப்பதற்கு முன்னால் ஒரு அரசாங்கம் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்ளட்டும்... இல்லை என்றால் அவர்கள் மனசாட்சி அவர்களுக்கு தண்டனை கொடுக்கட்டும்...

உப்பு தின்பவன் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது.. இது இயற்கையின் நியதி.. 🍂🍁👣.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 20/10/25.

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

நிகழ் கால கவிதை 🍂


#இன்றைய #நிகழ்கால #கவிதை:-

வடகிழக்கு பருவ மழையை 

எதிர் கொள்ள 

அரசு தயார் என்று

மாலையில் அறிக்கை வருகிறது 

அரசிடமிருந்து...

இந்த அறிக்கையை பார்த்து விட்டு

மழை அதனாலென்ன...

நீங்கள் என்னை வேடிக்கை 

பார்த்துக் கொண்டே இருக்கும் போது

ஒழுங்காக கழிவு நீர் மேலாண்மை 

இல்லாமல் சாலையில் பெருகி

நோய் எனும் அரக்கனை பரப்பி

காவு வாங்க காத்திருக்கிறார் 

கால தர்மன் என்கிறது நையாண்டியாக...

இங்கே வீடுகளில் நீர் சேமிப்பு 

தொட்டிகளில் எல்லாம் தமது கைகளை 

ஏதோ உள்ளே

ஆராய்ச்சி செய்வது போல 

போஸ் கொடுத்து உங்களை(அரசை) ஏமாற்றி

ஊதியம் வாங்கி செல்கிறார்கள்...

வழக்கம் போல அரசு இத்தனை இடத்தில் நாங்கள் தொடர் ஆய்வு செய்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறோம் என்று மீடியாவிற்கு பேட்டி கொடுத்து தனது கடமையை முடித்துக் கொண்டு தேர்தல் வேலைகளுக்கு தயார் ஆகிறது ஆளும் அரசாங்கம்...

எதிர் கட்சிகள் அங்கே மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்று கூப்பாடு போட்டு இத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் 

இது என்ன அரசா காவு வாங்கும் 

அரக்கரா என்று கேள்வி கணைகளை

தொடுத்து விட்டு முகத்தில் 

அரசாங்கத்திற்கு ஒரு குட்டு வைத்த 

களிப்பில் தனது தேர்தல் பேரத்தை கூட்டணி கட்சிகளிடம் தொடங்கி விடுகிறது...

இந்த களேபரத்தில் தமது குடும்பத்தில் 

ஒருத்தர் இறந்ததை அன்றே மறந்து 

அரசு கொடுக்கும்

நிவாரண தொகையை 

வாங்கிக் கொண்டு 

தத்தமது வேலைகளில் 

மூழ்கி போகிறார்கள் பொது ஜனங்கள்...

இதென்ன அநியாயம் என்று

அங்கே ஊழி தாண்டவத்திற்கு

கொஞ்சம் கொஞ்சமாக தயாராகிறது

இந்த பிரபஞ்சம்...

#நிகழ்காலகவிதை.

#வடகிழக்குபருவமழையும்

#இந்த #ஜனநாயகமும்

#பொதுஜனமும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.

ஒரு நதியின் பயணம் போல..

 


ஒரு நதியின் பயணம் போல

வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவதில்

அப்படி ஒன்றும் கஷ்டம் இல்லை

உங்களுக்கு...

அது உங்களை எவ்வித சிரமமும் 

இல்லாமல் ஏந்தி

அந்த கரையின்

அற்புதத்தை காட்ட நினைக்கிறது.. 

 நீங்களோ அந்த வாழ்வெனும் நதியோடு

பிணக்கம் கொள்கிறீர்கள்...

பாவம் அது என்ன செய்யும்

நீங்கள் அந்த அற்புதத்தை

காணாமலேயே அதற்குள் அடங்கி 

மூழ்கி போகும் போது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/10/25

நீயும் நானும் சேர்ந்து பருகிய தேநீரின் வாசம்...

#தேநீர் 


நீயும் நானும் சேர்ந்து பருகிய 

 வாசமும் சுவையும் இன்னும் 

அந்த தேநீர் விடுதியில் 

நமது ஞாபகமாக ஒட்டிக் கொண்டு 

இருக்கிறது ...

வெறும் அழியாத கறையாக...

நான் அதை வேடிக்கை பார்க்கிறேன் 

என்னை மறந்து!

சார் மன்னிக்கவும் அந்த கறை

நாங்கள் எவ்வளவு முயன்றும் 

அகலவில்லை என்று பணிவாக சொல்லி 

தேநீர் கோப்பையை

அந்த கறையை விட்டு தள்ளி

வைக்கிறார் அந்த விடுதி மனிதர்

நானோ முகத்தை திருப்பி சத்தம் இல்லாமல் அழுகிறேன்...

அந்த தேநீர் கறையை நினைத்து..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 10 /10/25

அந்த நகர காடுகளின் வெப்பத்தில்...

 

அந்த நகர காடுகளின்

வெப்பத்தில் தகிக்கிறது...

இந்த பிரபஞ்சம்...

அதோ அங்கே நகர காடுகளிடமிருந்து 

தப்பி பிழைத்த

ஒற்றை மரத்தின் நிழலில்

அடைக்கலமாகி

இந்த அகோர பசிக் கொண்ட 

மனிதர்களை பற்றி

ஆயிரம் புகார்களை

தனது மொழியில்

ஒப்புவித்து அங்கே தனது கூட்டில்

இரவின் சூட்சமத்தில்

அமைதிக் கொண்டு 

அந்த குருவி

உறங்க போவதை பார்த்து 

அங்கே இருந்த காலமோ

மென்மையாக விசிறி 

தாலாட்டு பாடுகிறது

அந்த தாலாட்டில்

இந்த பிரபஞ்சமே

பேரமைதி கொண்டு உறங்கி கிடக்கிறது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/10/25.


ஞாயிறு, 12 அக்டோபர், 2025

என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்...

 


ஜூபின் ❤️ என்னை பாதித்த ஆளுமையில் இவரும் ஒருவர்... எவ்வளவு எளிமையான மனிதராக சமூகத்தில் வலம் வந்து இருக்கிறார் என்று அவரது காணொளியை பார்க்கும் போது வியந்தேன்... ஒரு இறப்பில் கிட்டத்தட்ட பதினைந்து லட்சம் பேர் கண்ணீர் மல்க கலந்துக் கொண்டு சாலை எங்கும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்... இவரது எளிமை மற்றும் தர்மசிந்தனை தான் காரணம்... இன்னும் இவரது நினைவுகள் அகலவில்லை... உண்மையில் எனக்கு ஹிந்தி தெரியாது... ஆனால் ya Ali பாடலை இவருக்காகவே நான் ஆங்கில மொழியில் வைத்து பாடினேன்...

நிச்சயமாக இவரது இறப்பின் மௌனம் கலைய வேண்டும் என்பதே எனது ஆத்மார்த்தமான பிரார்த்தனை... கண்ணீரோடு விடை கொடுத்த போதும் நீங்கா நினைவுகளாக எப்போதும் நெஞ்சில் ஜூபின் ❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

சனி, 4 அக்டோபர், 2025

இனியொரு விதி செய்வோம்...

 


#இன்றையதலையங்கம்:-

மிக பெரிய இலக்கியவாதிகள் எல்லாம் வாழ்ந்த தமிழ்நாடு தற்போது கலை வேறு அரசியல் வேறு என்பதில் தடுமாறி நிற்கிறது என்பது தான் ஜீரணிக்க முடியாத காலக் கொடுமை... எத்தனை நூலகங்கள் தமிழ் நாட்டில் உள்ளது... அங்கே உள்ள உலக அரசியல் தலைவர்கள் பற்றியோ உள்ளூர் அரசியல் தலைவர்கள் பற்றியோ மிகவும் நிதானமாக வாசித்தவர்கள் எத்தனை பேர்... இன்றைய இளைஞர்கள் கொஞ்சமும் புத்தக வாசனை இல்லாத மனிதர்களாகவே வலம் வருகிறார்கள்...சே குவேரா சட்டை பெருமிதமாக அணிந்து கொள்வார்கள்... ஆனால் அவரது புரட்சி எங்கே எப்படி ஆரம்பித்து எத்தனை இடர்களை கடந்து இன்றும் ஒரு புரட்சியாளராக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்று எத்தனை பேர் அறிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது கேள்வி குறி தான்...இது சாதாரண வாசிப்பாளருக்கு சாத்தியம்... ஆனால் அரசியல் ஆர்வம் மிகுந்தவர்கள் அரசியலில் பெரிதாக புரட்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இப்படியான மனிதர்களை ஆழமாக வாசித்து அதன் பிறகு அரசியல் புரட்சி செய்ய வருகிறார்கள்...

மேம்போக்கான அரசியல் மற்றும் துட்டுக்கு அரசியல் மற்றும் முக்கியமான பிரச்சினைகள் எழும் போதெல்லாம் கூட்டணி தர்மம் என்று ஓடி ஒளிந்து கொள்ளும் அரசியல்...இப்படிதானே இன்றைய அரசியல் போகிறது...மேலும் கட்சியில் உயிரைஐ கொடுத்து மக்களுக்காக சேவை செய்பவர்களுக்கு உண்மையில் சீட் கொடுக்கிறார்களா என்று அந்தந்த பெரிய கட்சிகள் தமது மனசாட்சியை கேட்டுக் கொள்ளட்டும்...அரசியல் பற்றிய உண்மையான உருவை மாற்றி இது தான் அரசியல் என்று மக்கள் மனதில் திணிப்பவர்களுக்கு சூட்டோடு சூடாக ஒரு குட்டு நீதிமன்றம் வைக்கட்டும்...


மேலும் சாலை என்பது மக்களின் வரிப்பணத்தில் போடப்பட்டது...அதை அடைத்துக் கொண்டு தேர்தல் பிரசாரமோ பேனர்கள் வைக்கும் கலாச்சாரமோ இனி எப்போதும் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்கட்டும்...

எல்லாவற்றிற்கும் மேலாக டாஸ்மாக் கடைகளை அரசின் கொள்கை முடிவு என்று நீதிமன்றம் நழுவாமல் தானே முன்வந்து இன்றைய இளைஞர்கள் சீரழிந்து சமுதாயத்தையும் கெடுத்து குட்டி சுவராக்கி வைத்து இருப்பதற்கு அரசாங்கம் பதில் சொல்ல காலக்கெடு விதிக்கட்டும்...

எப்படி இருந்த தமிழ் நாடு இவ்வளவு தரம் தாழ்ந்து போய் விட்டதை ஆழ்ந்த வருத்தம் நிறைந்த மனதோடு கண்ணீரோடு பெரும்பான்மையான பொது ஜனங்கள் மௌனமாக அழுவதை கொஞ்சம் உற்று கேளுங்கள் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் வைத்து தமிழ் நாட்டில் அங்கங்கே நடக்கும் மோசமான நிகழ்வுகளை இன்றைய ஊடகங்கள் சுட்டிக் காட்டட்டும்...

இடித்துரைப்பவர்கள் இல்லாமல் போனால் இந்த நாட்டை ஆள்பவர்கள் மட்டும் அல்ல குடிமக்களுக்கும் நாசமாக தானே போவார்கள்...

இனியொரு விதி செய்வோம் 

அதை எந்த நாளும் காப்போம்...

#இனியொருவிதிசெய்வோம்

#இளையவேணிகிருஷ்ணா.

#இன்றையதலையங்கம்.

நாள்:04/10/25/சனிக்கிழமை.

வியாழன், 2 அக்டோபர், 2025

இங்கே மரணிக்காத இரவொன்று இருந்தால் சொல்லுங்கள்...


எனக்காக காத்திருந்து களைத்து 

சிதைந்து போன 

நொடிகளை தேடினேன் 

திடீரென ஞாபகம் வந்தவனாக..

அதுவோ கோபித்து 

கரைந்து போனது 

காலத்திற்குள் என்று 

அந்த வாழ்வின் சாட்சி என்னிடம் 

கொஞ்சமும் இரக்கமின்றி 

சொல்லி விட்டு 

விடுவிடுவென்று பயணிக்கிறான்...

நான் அப்படியே அந்த 

வாழ்வெனும் சாலையில் உறைந்து 

நிற்பதை பார்த்து 

பொறுக்காமல் என் மீது சிறிது 

அன்பு கொண்ட ஒருவர் 

சீட்டு கட்டில் ஜோக்கர் இல்லாமல் 

வெற்றி அடைவதும் 

சாத்தியமான ஒன்று தானே என்று 

சமாதானம் செய்து 

அங்கே இருந்த தேநீர் விடுதியில் 

ஒரு கோப்பை தேநீர் வாங்கி 

தருகிறார்...

அந்த தேநீரின் சில நிமிட சுவையில் 

நான் சகலமும் மறந்து 

பயணிக்கிறேன்...

இங்கே மரணிக்காத இரவு என்று 

ஒன்று இருந்தால் சொல்லுங்கள்...

நான் அதில் மறைந்துக் கொள்ள 

கேட்கிறேன் என்று 

நினைத்து விடாதீர்கள்...

அந்த இரவிடம் எந்தவித 

இடையூறும் இல்லாமல் 

இடைவெளி இன்றி 

நான் சில பாடங்களை 

கற்றுக் கொள்ள வேண்டும் ...

இப்படிக்கு இரவை நேசிப்பவன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:03/10

/25/வெள்ளிக்கிழமை.


திங்கள், 29 செப்டம்பர், 2025

பாட்டி வீடெனும் சொர்க்க கூடு

 

 


வயலில் இருந்து கிளம்பி வரும் போது வழியில் அந்த அற்புதமான ஆலமரத்தின் அடியில் நண்பகல் வேளையில் அமர்கிறேன்...கொஞ்சம் களைப்பாக இருந்தது...பையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து பருகி விட்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தேன்...நல்ல வெயில் என்பதால் அந்த மரத்தின் இலைகள் அசைந்து என் மேனியை வருடியது மிகவும் இதமாக இருந்தது...ஆம் நான் உங்களிடம் என்னை பற்றி சொல்ல மறந்து விட்டேன் அல்லவா...நான் ஒரு கணிப்பொறியாளர்...இதோ சில நாட்கள் விடுமுறை கிடைத்ததால் எனது பாட்டி வீட்டிற்கு வந்து இருக்கிறேன்...காலையில் எழுந்து காலை உணவை முடித்துக் கொண்டு பாட்டி வயலுக்கு வந்தேன்...பாட்டி வீடு புழக்கடையோடு உள்ள வீடு..மிகவும் நேர்த்தியாக அதே சமயத்தில் கலை நுணுக்கங்களோடு அந்த வீடு அமைந்து இருந்தது எனக்கு எப்போதும் பிடிக்கும்..எப்போதெல்லாம் எனக்கு விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இங்கே வந்து விடுவேன்..தாயார் வருவதற்கு இயலாது..தந்தை ஒரு மத்திய அரசு துறையில் பணியாற்றும் அதிகாரி என்பதால்... அந்த நகரத்தின் மத்தியில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இடத்தில் ஓரளவு பெரிய வீடு அது.எமது தந்தை பார்த்து பார்த்து கட்டிய வீடு தான் என்றாலும் எப்போதும் எனக்கு பாட்டி வீட்டின் இந்த அமைதியான சுற்றுச்சூழல் உள்ள வீடு தான் மிகவும் பிடிக்கும்...அந்த நகர கூட்டின் அலங்காரங்களை விட இந்த பாட்டி வீட்டின் பின்புறம் செடிகொடிகள் தலையசைத்து என்னை உற்சாகமாக வரவேற்கும் இந்த வீடு தான் உயிரோட்டம் நிறைந்ததாக என் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்...அப்படியே அமைதியாக இப்படி எண்ணற்ற எண்ணங்கள் மனதில் ஓட அந்த மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தேன்... சில பல குருவிகளின் கீச் கீச்சென்று சத்தம் எனது செவிகளுக்கு இனிமையான இசையாக இருந்தது... அப்படியே நான் வாழ்ந்து வந்த நகரத்தினை மனதில் ஓட விட்டேன்... இந்த சூழலுக்கு மாறாக சாலையில் நெருக்கமான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் டயர்களின் ஓடும் ஓசை கேட்டு கொண்டே இருக்கும் இருபத்தி நான்கு மணி நேரமும்..சாலையில் சில சமயங்களில் நான் நடந்து செல்லும் போது ஆபத்தான அமைதியை சீர்குலைக்கும் டயர்களின் கீறிச் சத்தங்கள் என் அருகில் வந்து உரசியது போல போகும் போதெல்லாம் என் இதயத்தின் துடிதுடிப்பை அதிகரிக்கும்... என்ன இது வாழ்க்கை என்று நான் நினைத்து கொண்டு சாலையில் அவர்களை ஒரு முறை முறைத்து பார்த்து விட்டால் கூட அவர்கள் வாயில் இருந்து வரும் வசவுகளை சொல்லி மாளாது...

இப்படியே ஒப்பீடு தொடர்ந்த நினைவலைகளுக்கிடையே என் திறன் பேசி சிணுங்கியது... பாட்டி தான் அழைக்கிறார்... அலைபேசியை எடுத்து சொல்லுங்கள் பாட்டி என்றேன்...மதிய சாப்பாடு தயார் ஆகி விட்டது கண்ணா...வா சாப்பிட என்றார்... சரி பாட்டி நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் நீங்கள் சாப்பிடுங்கள் என்றேன்... இல்லயடா கண்ணா நீயும் நானும் சேர்ந்து சாப்பிடலாம் நீ பொறுமையாக வா என்றார்...

நான் சரி பாட்டி என்று சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு மீண்டும் அந்த ஆழ்ந்த அமைதியான சூழலை அனுபவிக்கிறேன்...இதோ நான் இளைப்பாறும் இந்த மரத்தின் அடியில் தான் வயல் வேலை இல்லாத நாள்களில் தாத்தாவும் பாட்டியும் பெரும்பாலான கதைகளை பேசி ஆனந்தமாக பொழுதை கழித்து வந்தோம் என்று வெட்க சிரிப்போடு அடிக்கடி என்னிடம் சொல்லி இருக்கிறார்... எவ்வளவு அற்புதமான வாழ்வை அவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மனம் சொல்லொணா ஆனந்தம் அடையும்... பிறகு எப்படி இப்படி மாறியது வாழ்க்கை என்று யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியாமல் தலைவலி வந்தது தான் மிச்சம்...இதை பற்றி அம்மாவிடம் கேட்டால் ஏன் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறாய் கண்ணா... இந்த வாழ்க்கைக்கு என்ன... உனக்கு தகுந்த வயது வரும் போது எல்லாம் புரியும் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார்... ஆனால் இது வரை நான் அன்று கேட்ட கேள்விக்கான விடை தான் இன்னும் கிடைக்கவில்லை...

இப்படி யோசிக்கும் போதே அந்த மரக்கிளையில் இருந்த இரண்டு குருவிகள் கீழே வந்து அங்கே கிடந்த பழங்களை கொத்தி கொத்தி தின்றது... பிறகு அப்படியே அந்த மரத்தடியில் மண்ணில் கிடந்த பூச்சிகளை சாப்பிட தொடங்கியது...அதை அப்படியே ரசித்து பார்த்து இருந்தேன்...

பிறகு கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்ததோ இரண்டும் பறந்து போனது...

நான் அது போன திசையையே ஒரு வித ஆச்சரியமாக பார்த்து இருந்தேன்... பிறகு இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் எங்கோ இருக்கும் இந்த பறவைகள் ஏதோவொரு வகையில் நிம்மதியாக ஆனந்தமாக வாழ்வதற்கு எது காரணமாக இருக்கும்...இதோ இப்போது மண்ணில் கிடந்த பழங்கள் மற்றும் பூச்சிகள் அதற்கு உணவாக இருக்கும் இடத்தில் கிடைத்ததா அல்லது இந்த பரந்து விரிந்து கிடந்த மரக்கிளையில் எது பற்றியும் கவலைக் கொள்ளாமல் வாழ்ந்து விட இயற்கை கொடுத்த இந்த கொடையா என்று ஆச்சரியமாக யோசித்துக் கொண்டே இருக்கும் போதே அந்த இரண்டு குருவிகளும் வேகமாக ஒன்றொடொன்று சிறகை உரசி கீச் கீச்சென்று சத்தம் போட்டுக் கொண்டே அங்கே வந்து அது கட்டிய அழகான பின்னலோடு கூடிய கூட்டில் புகுந்து கொண்டு கொஞ்சம் தலையை நீட்டி என்னை பார்த்து மீண்டும் கீச் கீச்சென்று கத்தியது... நான் எனது யோசனையை விட்டு விட்டு கொஞ்சம் தலையை உயர்த்தி பார்த்தேன்... அந்த ஜோடி குருவிகள் என்னை பார்த்ததும் தனது சிறகை படபடவென்று அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தியது... நான் அதை பார்த்து சிறிது சிரித்தபடி உற்சாகமாக கையசைத்தேன்...

மீண்டும் அலைபேசி ஒலித்தது... நான் திரையில் தோன்றிய பெயரை பார்த்து விட்டு எடுத்து இதோ வருகிறேன் பாட்டி என்று சொல்லி விட்டு அலைபேசியை எனது சட்டைப்பையில் வைத்து விட்டு அந்த குருவி இருக்கும் கூட்டை பார்த்து நான் வருகிறேன் என்று கையசைத்தேன்... அந்த குருவிகளும் சரி நாளை பார்க்கலாம் என்று தனது மொழியில் மெலிதான குரலில் கீச் கீச்சென்றது...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள சூட்சுமங்கள் எவ்வளவு அற்புதமானது... இவ்வளவு அற்புதங்கள் இருந்தும் எந்தவித அகங்காரமும் இல்லாமல் எப்படி இவ்வளவு அடக்கமாக மௌனமாக இருக்க முடிகிறது என்று நினைத்து மிகுந்த ஆச்சரியத்தை அடைந்துக் கொண்டே நடக்கும் போது மீண்டும் அலைபேசி சிணுங்கல்...யார் என்று பார்த்தால் தாயார் ... சொல்லுங்கள் அம்மா எப்படி இருக்கிறீர்கள் என்றேன்... நான் நலமாக தான் இருக்கிறேன்... அங்கே நீயும் பாட்டியும் எப்படி இருக்கிறீர்கள் நீயும் பாட்டியும் என்ன செய்கிறீர்கள் சாப்பிட்டு விட்டீர்களா இருவரும் என்று படபடவென்று கேட்டார்.. கொஞ்சம் பொறுங்கள்.. ஏன் இத்தனை கேள்விகள்... நான் தற்போது தான் வயலில் இருந்து வீட்டுக்கு போகிறேன்.. போய் தான் சாப்பிட வேண்டும் என்றேன்...

ஓ அப்படியா ஏன் இவ்வளவு நேரம்.. விரைவில் போய் சாப்பிடு என்று சொல்லி விட்டு கண்ணா ஒரு விஷயம் சொல்ல தான் உன்னை அழைத்தேன்..நீ எப்போது கிளம்பி வருகிறாய் என்று கேட்டார்..

ஏன் இந்த அவசரம்.. நான் கிளம்பி வர இன்னும் ஒரு வாரம் ஆகும் ஏன் என்று கேட்டேன்...

அதில்லைடா உன் பெயரில் உனக்கு ஒரு வீடு அப்பா இங்கே வாங்குவதாக பேசினார் அல்லவா...அது தற்போது பேரம் முடிந்தது... அந்த வீட்டின் ரெஜிஸ்ட்ரேஷன் வரும் வெள்ளிக்கிழமை வைத்துக் கொள்ளலாம் என்று வீட்டை விற்றவர் சொன்னார்..அந்த வேலைக்காக தான் உன் வருகையை பற்றி கேட்டேன் என்றார்...

அம்மா இப்போது எனக்கு அந்த வீடு தேவையில்லை எனக்கு தற்போது அங்கே நீங்கள் வசித்து வரும் வீடே போதும்... மேலும் நான் அடுத்த வருடத்தில் இருந்து இங்கே பாட்டி வீட்டில் தான் வசிக்க போகிறேன் என்றேன்..

ஏ என்னடா கண்ணா சொல்கிறாய்... சும்மா விளையாடாதே என்று பதட்டமாக கேட்கிறார்...

நான் விளையாடவெல்லாம் இல்லை அம்மா.. நான் மிகவும் தெளிவாக தான் சொல்கிறேன் என்றேன்...

ஏன் கண்ணா... அங்கே இருந்து என்ன செய்வாய் உன் திருமணம் முடிந்ததும் நீ உனது வாழ்க்கை இனிமையாக துவங்க தானே அந்த வீடு அப்பா ஆசையாக வாங்கினார் நீ ஏன் இப்படி...

அம்மா எனக்கு வசிக்க மிகவும் அற்புதமான கூடு இங்கே பாட்டி வாழ்ந்த இயற்கை சூழ்ந்த பெருங் கூடாக இந்த வீடு உள்ளது... நான் இதில் தான் பாட்டியோடு எனக்கு மிகவும் பிடித்த விவசாயம் செய்துக் கொண்டு அற்புதமான வாழ்க்கை வாழ போகிறேன் என்றேன்...

என்னடா சொல்கிறாய் எனக்கு தலை சுற்றுகிறது என்றார் அம்மா...

அம்மா இதெல்லாம் உனக்கு இப்போது புரியாது... காலம் உங்களுக்கு புரிய வைக்கும் என்று சொல்லி விட்டு அலைபேசியை துண்டிக்கவும் பாட்டி வீடு வரவும் சரியாக இருந்தது...

பாட்டி திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வாய் நிறைய சிரிப்போடு வாடா கண்ணா சாப்பிடலாம்... உனக்கு பிடித்த கத்தரிக்காய் கூட்டு வத்தல் குழம்பு வடகம் கார வடை தயிர் பச்சடி செய்து இருக்கிறேன் என்று சொல்லி கொண்டே வேகமாக வீட்டின் தாழ்வாரத்தை தாண்டி கூடத்திற்கு சென்று புழக்கடையில் உள்ள வாழையிலையை பறித்து வந்து கூடத்தில் பரிமாற ஆயத்தமாகிறார்...

நான் அவர் இலையில் பறிமாறிய அழகை ரசித்தபடியே சாப்பிட்டு முடித்து புழக்கடையில் கை கழுவ சென்றேன்.. அங்கிருந்த மரங்களின் கிளைகளில் இருந்த என்னை வந்த நாளில் இருந்து பார்த்து பழகிய ஒரு குருவி என்னை பார்த்து கீச் கீச்சென்று சிறகை அடித்து உற்சாகத்தை காட்டியது...

நான் அதற்கு பதிலுக்கு உற்சாகமாக ஒரு கையை ஆட்டி விட்டு உள்ளே சென்று எனக்கான அறையில் ஓய்வெடுத்தேன்... நிம்மதியாக எனது கண்களை தூக்கம் தழுவியது... எனது அறையில் உள்ள அந்த வானொலியில் சூழலுக்கு தகுந்தபடி தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என்று பாடவும் அந்தி மயங்கவும் சரியாக இருந்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:29/09/25/திங்கட்கிழமை.

சனி, 27 செப்டம்பர், 2025

பகுத்தறிவு இருக்கிறதா நமது மக்களிடம்?

 


இன்றைய தலையங்கம்:- அரசியல் புரிதல் என்பது சிறிதும் இல்லாத நன்கு படித்து மேலை நாடுகளில் வேலை பார்க்கும் ஆற்றல் மிக்க இளைஞர்கள் கொண்ட நாடு தமிழ் நாடு என்று ஒரு பக்கம் பெருமையாகவும் மறு பக்கம் மிகவும் வருத்தமாகவும் தான் எண்ண தோன்றுகின்றது ...

அரசியல் என்பது மக்களின் சேவைக்காக என்பதை அரசியல்வாதிகளோ மக்களோ புரிந்துக் கொள்ளாதவரை இப்படி தான் தாம் பலியாவதே தெரியாமல் பலியாவார்கள்...

அந்த காலத்தில் அறிவார்ந்த இலக்கிய பேச்சை ரசிக்க கூடும் ஒரு கூட்டம்... தற்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட பிறகு யார் கூட்டத்தை கூட்டினாலும் போகவே அவசியமே இல்லையே... ஏதோவொரு வகையில் நமக்கு செய்திகள் வந்து சேர்ந்து விடும் காலத்தில் ஒரு திரை நட்சத்திரத்தின் அரசியல் பிரவேஷத்தின் சாதாரண பேச்சிற்காக ஏன் இத்தனை பேர் சென்றார்கள்...

இனி எந்த அரசியல் கட்சிகளும் இப்படி மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் கூட்டத்தை கூட்டுவதற்கு பேனர்கள் வைப்பது உட்பட அனைத்திற்கும் தீவிர கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும்...அது ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட...

மக்களும் ஏன் இப்படி எவர் பின்னேயும் போக வேண்டும் என்று யோசிக்க வேண்டும்... தேர்தல் நெருங்கி வருவதால் இப்படி நிறைய காட்சிகள் அரங்கேறும்... இப்படியான சோக காட்சிகளுக்கு மக்கள் தமது விலை மதிப்பற்ற உயிரை கொடுத்து விட்டால் அந்த குடும்பம் நிர்க்கதியாக நிற்க வேண்டி வரும் என்று யோசித்து செயல்பட வேண்டும்..

யோசியுங்கள் மக்களே... இங்கே உங்களுக்கு நீங்களே தான் பாதுகாப்பு கொடுத்து கொள்ள முடியும்... உங்கள் உயிர் விலை மதிப்பற்றது 🙏.

#இன்றையதலையங்கம்.

நாள்:28/09/25/ஞாயிற்றுக்கிழமை.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

யார் பைத்தியக்காரர்?

 


அவன் அந்த நகரத்தின் மேம்பால ஒரு மூலையை தனது இருப்பிடமாகக் கொண்டு அந்த சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஒரு நசுங்கிய பிச்சை பாத்திரத்தை மட்டும் உடமையாக கொண்டு வேடிக்கை பார்க்கும் மனிதனாக வாழ்பவன்.. உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் அவன் ஒரு பைத்தியக்காரனாக அடையாளம் காணப்படுகிறான் இந்த சமூகத்தில்... இப்படி உங்களிடம் புரிவதற்காக சொல்கிறேனே தவிர அவனை போல வாழ்வை புரிந்து கொண்டவர்கள் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்..அப்படி தான் அன்று அந்தி மங்கிய வேளையில் தனது பிச்சை பாத்திரத்தில் விழுந்த சில்லறையை எடுத்துக் கொண்டு அப்படியே பிராக் பார்த்து கொண்டு மெதுவாக அந்த தெருவோர தள்ளுவண்டியை நோக்கி தனது இரவு உணவை முடித்துக் கொள்வதற்காக நடக்கிறான்..அப்படி போகும் வழியில் தான் அங்கே ஒரு கட்சி பிரமாண்டமாக நடத்தி கொண்டு இருக்கும் கூட்டத்தை பார்க்கிறான்..இதை கவனித்த அந்த கூட்டத்தை கூட்டிய அரசியல் பொறுப்பாளர் இவரை வேகமாக விரட்டி அடிக்கிறார்..இவரும் பதிலேதும் சொல்லாமல் கூட்டத்தை விட்டு சற்று விலகி கொஞ்ச தூரம் தள்ளி நின்று அந்த நிகழ்வை கூர்ந்து கவனித்து பார்க்கிறார் .. அங்கே பரபரப்பாக இங்கேயும் அங்கேயும் ஓடி ஏதேதோ வேலைகளை செய்து வரும் கட்சி அடிபொடிகளை பார்த்து விட்டு சமூகத்தால் மனம் பிறழ்ந்த மனிதன் என்று அடையாளம் காணப்பட்ட அவன் சிரித்து வைக்கிறான்...

இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது அந்த தள்ளுவண்டியில் இரவு சிற்றுண்டி கிடைக்க.. அதனால் அவன் இந்த நிகழ்வை மெய் மறந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான்... அங்கே கூட்டத்திற்கு இடையில் தற்போது யாரோ ஒரு முக்கியஸ்தர் எழுந்து வந்து  மைக் அருகே நின்று தனது குரலை செறுமி மைக் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்து விட்டு பேரன்பு கொண்ட மக்களே வணக்கம்..தற்போது இந்த கூட்டம் கூட்டப்பட்டது எதற்காக என்றால் நமது  ஆட்சியை  சிறப்பிக்கும் வகையில் கல்வி கண் திறந்து இளைஞர்களை நல்ல பாதையில் கூட்டி செல்லும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டுவதற்காகவும் தான் இந்த கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது.. இரத்தத்தின் இரத்தங்களே! உடன்பிறப்புகளே! தாய்மார்களே! மற்ற மாநிலங்களே நமது அரசாங்கத்தின் கல்வி துறை சார்ந்த செயல்களை கூர்ந்து கவனித்து பாராட்டுகிறது...மேலை நாடுகளில் ஒன்று நமது அரசாங்கத்திற்கு விருது தர திட்டமிட்டு இருக்கிறது என்று சொல்லி முடிப்பதற்குள் அங்கே காசுக்கு கூடி இருந்த கூட்டம் கைத்தட்டி ஆராவாரம் செய்து அடங்கிய போது சமூகத்தின் பார்வையில் இந்த மனம் பிறழ்ந்த மனிதனோ இவற்றை எல்லாம் கேட்டு விட்டு ஓஹோ என்று வேகமாக சத்தமிட்டு சிரித்தது மட்டுமல்லாமல் பையில் புத்தக அடுக்குகள்  மத்தியில் குவார்ட்டர் பாட்டில் மற்றும் போதை பொட்டலங்களை எவருக்கும் தெரியாமல் திணித்து கொண்டு பள்ளிக் கூடம் போகும் வழியில் போதையை ஏற்றிக் கொண்டு அங்கே பள்ளிக்குள் அடாவடி செய்து வரும் மாணவர்கள் இந்த மாநிலத்தின் மாணவர்கள் இல்லையோ..நான் நேற்று கூட ஒரு பள்ளி சிறுவனை அருகில் அழைத்து அவனிடம் ஒரு சாதாரண கேள்வி கேட்டால் அவன் என்னை மானாவாரியாக திட்டி விட்டு தனது புத்தக பையில் கையை விட்டு எதையோ எடுத்து வாயில் போட்டுக் கொள்வதை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்து அவன் பையை பிடுங்கி பையை பார்த்தால் அதில் கஞ்சா மற்றும் குவார்ட்டர் பாட்டில் என்று பார்த்தேனே என்று சத்தமாக சிரித்தான்...இதை கவனித்த அங்கிருந்த மக்கள் பலரும் இந்த மனிதரை திரும்பி பார்த்தார்கள்..மேலும் அங்கிருந்த கூட்டத்தில் இருந்த பலரும் இவனை திரும்பி பார்த்ததை பார்த்து மிகவும் கடுப்பான அந்த கட்சி பொறுப்பாளர் வேக வேகமாக வந்து அவனை தரதரவென இழுத்து அந்த கூட்டத்தில் இருந்து அகற்றியதை அங்கே இருந்த மீடியா அனைத்தும் படம் பிடித்துக் கொண்டதை அந்த மோசமான நிலையிலும் அந்த மனிதன் பிடியுங்கள் நன்றாக படம் பிடியுங்கள்... நீங்கள் எடுத்த படம் நாளை உங்கள் பத்திரிகையில் வெளியாகிறதா என்று பார்ப்போம் என்று மேலும் மேலும் சத்தமாக சிரித்தான்...

இதென்னடா பெரும் தலைவலியாக போய் விட்டது என்று அந்த கட்சி பொறுப்பாளர் சோர்ந்து உட்கார்ந்து விட்டார்...

அங்கிருந்த நடுநிலையாளர்கள் அந்த பொறுப்பாளரை சூழ்ந்துக் கொண்டு அந்த மனிதர் அப்படி என்ன தவறு செய்து விட்டார் என்று அவரை அசிங்கப்படுத்தி இழுத்து சென்று வெளியே தள்ளி இருக்கிறீர்கள்... இங்கே அவர் சொன்னது தானே நிஜம் என்று ஆளுக்கொரு புறம் பேசவும் அங்கே மேடையில் இருந்த தலைவர் கீழே இறங்கி வர எத்தனிக்கும் போது அங்கிருந்த தீவிர கட்சி விசுவாசி தலைவரே நீங்கள் ஏன் அங்கே சென்று கொண்டு.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் என்று முகத்தில் வியர்வை படர வேக வேகமாக தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்... ஆனால் தலைவர் கேட்காமல் போய் அந்த பொறுப்பாளரை என்ன இங்கே நடக்கிறது என்று கோபமாக கேட்டார்.. அதற்கு அந்த பொறுப்பாளரோ தலைவரே நாம் கூட்டம் போடும் போதெல்லாம் இந்த எதிர் கட்சிகள் சேர்ந்து ஏதாவது அசிங்கப்படுத்த இப்படி சதி செய்கிறார்கள் என்று பரபரப்பாக வியர்வை வழிய தயங்கி தயங்கி சொல்லி முடிப்பதற்குள் அங்கே வெளியே தள்ளி விட்ட மனிதர் நொண்டி நொண்டி காலில் வழியும் இரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அந்த தலைவரை பார்த்து ஐயா இங்கே நடக்கும் பல விசயங்களை உங்கள் கவனத்திற்கு எடுத்து வரவில்லை என்று நினைக்கிறேன்... அதனால் தான் இவர்கள் பயப்படுகிறார்கள்... நான் இவர்கள் சொல்வது போல எதிர் கட்சி ஆளும் இல்லை...பைத்தியக்காரனும் இல்லை... நான் சொன்ன விசயத்தை எத்தனையோ ஊடகங்கள் சொல்லி கொண்டே தான் இருக்கிறது... ஆனால் நீங்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் என்று சொல்ல சொல்ல அவனை பேச விடாமல் அங்கிருந்த கட்சிக்காரர்கள் இழுத்து செல்கிறார்கள்... அந்த கட்சி தலைவரோ இந்த மனிதர் சொன்ன விசயத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் மேடையேறி தனது இருப்பிடத்தில் உட்கார்ந்துக் கொண்டு பேச்சை தொடர சைகை செய்கிறார்.. அந்த முக்கியஸ்தரும் பேச்சை தொடர்கிறார் இப்படியாக அதாகப்பட்டது மக்களே இங்கே உண்மை எது பொய் எது என்று புரியாத யாரோ ஒரு மனம் பிறழ்ந்த மனிதனின் பேச்சைக் கூட மதித்து நமது முதல்வர் எந்தவித ஆராவாரமும் இல்லாமல் நிதானமாக அவரது பேச்சை கேட்கிறார்..இந்த எளிமை எதிர் கட்சி தலைவருக்கு வருமா என்று தொடர்கிறார்...

அந்த பிச்சைக்காரரோ சரிதான் இந்த பைத்தியக்கார காசுக்கு கூட்டம் கூட்டி பிழைக்கும் அரசியல்வாதிகள் உண்மைவாதிகளாம் என்று கடகடவென்று சிரித்துக்கொண்டே போகிறார்.. காலில் வழியும் இரத்ததை கூட பொருட்படுத்தாமல்... அங்கே எப்போதும் அவர் வாங்கும் சிற்றுண்டி தள்ளுவண்டி கடையில் இட்லி சூடாக காத்திருக்கிறது..அவர் தனது கையில் உள்ள சில்லறைகள் கொடுத்து இட்லியை வாங்கிக் கொண்டு ஒரு ஓரமாக அமர்ந்து சாப்பிடுவதற்கு ஆயத்தமாக எங்கிருந்தோ வந்த அவரோடு இட்லியை பங்கு போட்டு சாப்பிடும் ஜீவனான தெருவோர நாய் அவர் காலில் வழியும் இரத்த வாடையை பார்த்து விட்டு வேகமாக ஓடி வந்து அவரது இரத்ததை தனது நாவால் வருடி துடைத்து விடுகிறது ...அவரோ அதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் வா இந்தா இந்த இட்லியை ஆறுவதற்குள் சாப்பிட்டு விடு என்று சட்னி சாம்பார் தோய்த்து அதனிடம் போடுகிறார்... அதுவும் ஆவலாக சாப்பிட்டு விட்டு அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை அவரை பாவமாக பார்த்து கொண்டு வாலை ஆட்டிக் கொண்டு படுத்து இருக்கிறது... இந்த நிலையில் அங்கிருந்த மீடியாக்காரர்கள் ஓடோடி வந்து அந்த கட்சி தலைவர் உங்களை அழைக்கிறார் என்று சொல்ல அந்த நாயோ எவரையும் அந்த பிச்சைக்கார மனிதனிடம் அண்ட விடாமல் குரைத்து விரட்டி அடிக்கிறது...

அந்த மனிதரும் சாப்பிட்டு முடித்து அங்கிருந்த குடத்தில் உள்ள தண்ணீரை பருகி விட்டு தனது இருப்பிடமான பாலத்தின் அடிப் பகுதிக்கு செல்கிறார்.. இப்போது அந்த நாயும் வாலை ஆட்டிக் கொண்டு அவர் பின்னால் செல்கிறது விசுவாசியாக... அவர்களோடு சற்று முன் தரதரவென இழுத்து இவரை வெளியே தள்ளிய அந்த கட்சி முக்கியஸ்தரும் ஐயா நில்லுங்கள் நில்லுங்கள் உங்களை முதல்வர் அழைக்கிறார் என்று கூக்குரலிட்டுக் கொண்டு வேக வேகமாக ஓடி வருகிறார்...

அவரது குரலை கேட்டு திரும்பிய அந்த நாயோ தற்போது அவரை துரத்தி வேகமாக வர அவரோ மிரண்டு போய் அந்த சாலையில் தடுக்கி விழுந்து எழுந்து ஓடுவதை எதேச்சையாக அந்த பிச்சைக்கார மனிதர் பார்த்து விட்டு கடகடவென்று சிரித்துக்கொண்டே முன்னே போகிறார்... அந்த நாய் அந்த கட்சி முக்கியதஸ்தரிடம் தனக்கு சோறு போட்டு காத்த மனிதரை காப்பாற்றிய திருப்தியில் மீண்டும் இவரோடு கம்பீரமாக நடக்கிறது...

இங்கே யார் பிச்சைக்காரர்கள் யார் பைத்தியக்காரர்கள் என்று ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு தனது கிழிந்த கம்பளியை அந்த தரையில் விரித்து வா ராமா... இன்றைய பொழுது மிகவும் வேடிக்கையாக போனதல்லவா நாளைய பொழுதை உற்சாகமாக வரவேற்க தற்போது கொஞ்சம் இளைப்பாறுவோம் என்று சொல்ல அந்த ராமு ஜீவனும் கிழிந்த கம்பளியின் மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டதை அங்கே வழக்கமாக போய் வரும் வாகனங்களின் இரைச்சலை கண்டுக் கொள்ளாமல் உறங்கியது இரண்டு ஜீவன்கள் எந்த கவலையும் இல்லாமல்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:27/08/25

சனிக்கிழமை.


வியாழன், 25 செப்டம்பர், 2025

அந்த அலைபேசியின் ன் கவலை...


கூக்கூ என்று அலாரம் ஒலித்தது...பிரபு மெதுவாக அந்த அலைபேசியின் அலார சிணுங்கலை அணைத்து விட்டு தனது போர்வையை விலக்கி எழ ஆரம்பித்தான்...

எழுந்ததும் முதல் வேலையாக தனது மொபைலில் உள்ள வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அம்மா என்னடா பிரபு இன்று சீக்கிரம் அலுவலகம் செல்ல வேண்டும் என்று சொன்னாயே எழுந்திரு டா என்று வேகமாக அறைக்கு வெளியே குரல் கொடுத்து விட்டு வேகமாக வேகமாக சமையலறைக்குள் புகுந்து கொண்டாள் அவன் எழுந்தது தெரியாமல்... கொஞ்சம் சத்தம் போடுவதை நிறுத்துமா இதோ வருகிறேன் என்று சொல்லி கொண்டே அலைபேசியில் இன்னும் மூழ்கி போனான்... நேரம் ஆவது எப்படி தெரியும்... அது தான் ஒரு மாய திரையாயிற்றே...

அம்மாவும் அவளது வேலைகளில் மூழ்கி போனதால் அவனும் அவனது அலைபேசியில் மூழ்கி போனான்... அவன் அதில் வரும் ரீலீஸ் ஒவ்வொன்றையும் காதில் ஹெட் போன் மாட்டிக் கொண்டு ரசித்துக் கொண்டு இருந்தான்... காதில் ஹெட்போன் இருந்ததால் அம்மா கூப்பிட்ட சத்தமும் காதில் விழவில்லை அவனுக்கு...

பின்னர் அம்மா கதவை உடைக்கும் அளவுக்கு தட்டியது அவனுக்கு அந்த கதவை எதேச்சையாக பார்த்ததும் தான் தெரிந்தது...வேக வேகமாக ஹெட் போனை காதில் இருந்து கழற்றி விட்டு கதவை திறந்தான்...

என்னம்மா என்றான் எரிச்சலாக...

நான் இவ்வளவு நேரம் கதவை இடி போல தட்டுகிறேன்.. உனக்கு என்னடா அப்படி கும்பகர்ணன் தூக்கம்...

சரி சரி இதோ எழுந்து விட்டேன் அல்லவா... சொல் என்றான்.. உனது அப்பாவும் கிளம்பி விட்டார் இன்று ஏதோ கொஞ்சம் வெளியே வேலை என்று... வந்து தான் அலுவலகம் கிளம்ப வேண்டும் என்றார்.. சிலிண்டர் தீர்ந்து விட்டது வந்து மாற்றி கொடு என்று உன்னை அழைத்தால் நீ என்னடான்னா இப்படி தூங்குகிறாய் என்று கடிந்து கொண்டு வா வந்து சிலிண்டர் மாற்று... நான் பொறியலுக்கு காயை நறுக்குகிறேன் என்று சலிப்பாக சொல்லி விட்டு எனது பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாக சமையலறைக்கு சென்று விட்டாள்... அவனுக்கு அப்போது தான் இன்று மேலதிகாரி கொஞ்சம் விரைவில் அலுவலகம் வர சொல்லி இருந்தது ஞாபகம் வந்தது...மணியை பார்த்தால் மணி ஏழரையை காட்டியது... அவனுக்கு அட கடவுளே நமக்கு இன்று அலுவலகத்தில் ஏழரை தான்... நான் என்ன தான் கரடி போல கத்தினாலும் அந்த மனிதர் மண்டையில் ஏறாதே என்று வேக வேகமாக சிலிண்டர் மாற்றி அடுப்பு எரிகிறதா என்று பார்த்து விட்டு அம்மா சிலிண்டர் மாற்றி விட்டேன்... கொஞ்சம் சீக்கிரம் சமையல் செய்.. நான் தான் சீக்கிரம் போக வேண்டும் என்று நேற்றே சொன்னேனே என்று அம்மா மீது எரிந்து விழுந்து விட்டு பரபரப்பாக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்...பைப்பை திருகி விட்டு நாலு குவளை தண்ணீர் மேலே ஊற்றிய பிறகு தான் துண்டை எடுக்காமல் குளியலறைக்குள் சென்றது ஞாபகம் வந்தது.. இதற்காக அம்மாவை கூப்பிட்டால் நிச்சயமாக கையில் எது இருக்கிறதோ அதில் நாலு என்ன பத்து மொத்து மொத்தி எனது முதுகில் வாலி இராமன் அம்பால் வாங்கிய ரணத்தின் தழும்பையே உண்டு செய்து விடுவாள் என்று எதையும் யோசிக்காமல் நனைந்த உடலோடு அங்கே இருந்த அழுக்கு கைலியை கன்னாபின்னாவென்று சுத்திக் கொண்டு கதவை திறந்து வேகமாக அவனது அறையை நோக்கி ஓடினான்... எதிர் பாராத விதமாக காலில் இருந்த ஈரம் அவனை நேரம் பார்த்து வழுக்கி கீழே விழ வைத்தது...ஐயோ அம்மா என்று கத்தினான்...என்னவோ ஏதோ என்று ஓடி வந்து அம்மா பார்த்தாள்... என்னடா செய்துக் கொண்டு இருக்கிற என்று தலையால் அடித்துக் கொண்டு அவனை கை கொடுத்து தூக்கி விட்டாள்... அம்மா துண்டு என்று முணகினான்...

என்னடா துண்டு என்று புரியாமல் விழித்து என்னை மேலும் கீழும் பார்த்தாள்...ஓ இதுவா சங்கதி... என்று ஒரு முறை முறைத்து விட்டு அவனது அறையில் சென்று துண்டை எடுத்து வந்து கையில் கொடுத்து விட்டு வேகமாக சென்று விட்டாள்.. சீக்கிரம் வாடா உன்னை அனுப்பி விட்டு தான் நான் பக்கத்து தெருவில் உள்ள மங்கை வீட்டு நிச்சயதார்த்தத்துக்கு  போக வேண்டும்...நீ வழக்கம் போல குளியலறையில் நேரம் கடத்துவது போல கடத்தாதே நான் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று வேகமாக சொல்லி விட்டு நகர்ந்தாள்...

அவனோ காலை பிடித்துக் கொண்டே குளியலறைக்கு மெதுவாக போய் குளித்து விட்டு வந்து தயாராகி ஏதோ சாப்பிட்டு அம்மா போய்ட்டு வரேன் என்று கத்தினான்...ஏன்டா இப்படி வானம் இடிக்கிற மாதிரி கத்துற..நான் என்ன செவிடா பார்த்து பத்திரமாக போய் விட்டு வா...போகும் போது அந்த ஹெட்போனை காதில் மாட்டாமல் போடா...உனக்கு பின்னால் வரும் வண்டி உன் மீது இடித்து வீட்டில் விழுந்தது போல விழுந்து எழுந்து வந்தாய் என்றால் நான் அப்புறம் மனுஷியாகவே இருக்க மாட்டேன் என்று சத்தமாக சொன்னாள்..அதுவும் சரிதான் என்று ஹெட்போனை தனது பைக்குள் போட்டு விட்டு வண்டியை வேகமாக ஸ்டார்ட் செய்தான்...வண்டி உடனே ஸ்டார்ட் ஆகவில்லை... இரண்டு மூன்று முறை நாலு உதை உதைத்தான் ஸ்டார்ட் ஆனது.. தனது கை கடிகாரத்தில் மணியை பார்த்தான்..தலையே சுற்றி விட்டது...மணி எட்டே முக்கால் என்று சத்தம் இல்லாமல் சொன்னது..சே என்ன இது என்று தன்னை தானே கடிந்துக் கொண்டு இனி காலையில் இந்த மொபைல் மூஞ்சியில் முழிக்கவே கூடாது..என்று சபதம் எடுத்துக் கொண்டு டாப் கியரில் சாலையில் பறந்தான்.. அவன் போகும் வேகத்தை சாலையில் பார்த்த சிலர் கன்னாபின்னாவென்று திட்டி தீர்த்தது அவன் காதில் விழவே இல்லை... இது மட்டும் தான் அவனுக்கு இன்று கிடைத்த வரமோ என்னவோ... ஏனெனில் அலுவலகத்தில் அவனுக்கு மேலதிகாரியிடம் அச்சில் ஏற்ற முடியாத வசவுகள் காத்திருக்கிறது...அதை அவன் எப்படி எதிர்கொள்வானோ என்று அவன் பேண்ட் பாக்கெட்டில் உள்ள மொபைல் கவலைப்பட்டது வேறு கதை...

இளையவேணி கிருஷ்ணா 

நாள்:26/09/25

வெள்ளிக்கிழமை.


புதன், 24 செப்டம்பர், 2025

வேடிக்கை மனிதர்கள் -சிறுகதை


 எத்தனையோ ஆட்டங்கள் ஆடி முடித்தும் ஓயாமல் முற்றுகையிடும் கூட்டம் ஒரு பக்கம் என்னை வருந்தி இழுக்கிறது... என் ஆட்டத்தின் அருமை புரிந்து இழுக்கும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் என்னை கேலி செய்வதற்காக என்னை பொதுவெளியில் ஆட வைத்து கை கொட்டி சிரிக்க ஒரு கூட்டம்... இப்படி கூட்டத்தின் பல வகையான சுவைகளை நான் இங்கே ஓயாமல் ருசித்து கிடக்கிறேன்...

நான் என்னை ரசிப்பவர்களையோ கேலி செய்பவர்களையோ ஒரு போதும் ஊதாசீனப்படுத்தியதே இல்லை... ஏனெனில் இங்கே என்னை பொறுத்தவரை எல்லாமே ஒரு வித ரசனையான விளையாட்டு தான்...

நான் அவர்களின் ரசனை எனும் சுவைக்கு அடிமை... அவர்கள் எனது ஆட்டத்திற்கு அடிமை...

இங்கே எதுவும் நிரந்தரம் இல்லை என்ற புரிதல் எனக்கு மிகவும் தெளிவாக உள்ள போது என்னை எவரும் காயப்படுத்தவோ துன்புறுத்தவோ முடியாது தானே...

அப்படி தான் நான் வாழ்வை மதிக்கிறேன்.ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு முகமூடி தாங்கி என்னை அணுகும் போதெல்லாம் அந்த முகமூடிக்குள் இருக்கும் முகம் எப்படி இருக்கும் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்தது இல்லை.. மாறாக அந்த முகமூடியில் மறைந்து இருக்கும் அழகை ரசிக்கிறேன்...

எனது சம்பாத்தியத்தை வைத்து தான் இந்த உலகம் என்னை எடை போடும் என்று தெரிந்தும் நான் ஒரு போதும் என் அடிப்படை தேவைகளுக்கு தவிர அதை உயர்த்தி கொள்வதற்கான முயற்சியில் இது வரை நான் ஈடுபட்டதே இல்லை..ஏனெனில் இந்த உலகம் ஒரு நாடக மேடை..அதில் நான் ரசித்து வாழ ஒரு அற்புதமான பாத்திரம் எனக்கு கிடைத்து இருக்கிறது...அந்த அற்புதமான பாத்திரத்தை உடைத்து விட்டு எனக்கு ஒவ்வாத தங்க பாத்திரத்தை எப்படி என்னால் ஏற்றுக் கொண்டு நடிக்க முடியும் என்று எனக்குள் எப்போதும் கேள்வி எழுந்துக் கொண்டே இருக்கும்..பிறகெப்படி நான் அதை ஏற்றுக் கொள்ள முடியும்?

பலர் இந்த உலகில் போட்டுக் கொண்ட முகமூடிகள் கிழிந்து தொங்கிய போது தாங்கொணா துயரம் அடைந்து உடைந்தழும் மனிதர்களுக்கு நான் ஒரு போதும் ஆறுதல் சொல்வதில்லை...எது உண்மையோ அதில் பயணிக்கும் காலம் வந்துவிட்டது என்று அவர்களை பார்த்து ஒரு வேடிக்கை சிரிப்பு சிரித்து விட்டு நகர்ந்து விடுவேன்...எல்லாமே ஒரு நாடகம்... அவர்கள் நாடகம் அலங்கோலமாக வந்த வேகத்தில் கிழிந்து சுக்கு நூறாக ஆகி அவர்களின் அடுத்த பரிமாணத்திற்கு அழைத்து செல்கிறது அவ்வளவு தான்...

ஒன்றும் இங்கே கெட்டு போகவில்லை...

அப்படி தான் பாருங்கள் அன்றொரு நாள் நான் வழக்கமாக சாப்பிடும் தெருவோர கடையில் மிகவும் நிதானமாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன்.. என்னை சுற்றி நிறைய மனிதர்கள் வேக வேகமாக சாப்பிட்டு கொண்டே தங்களது அலைபேசியில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வந்து இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறார்கள்... நான் அங்கே எனது அருகில் வாலை ஆட்டிக் கொண்டு காத்திருந்த நாய்க்கு ஓரிரு இட்லி போடுவதை பார்த்து விட்டு அந்த கடைக்காரர் என் மீது மிகுந்த கோபம் கொள்கிறார்... சார் நீங்கள் இப்படி போடுவதால் அந்த நாய் எனது தொழிலை கெடுக்கும் வகையில் இங்கேயே சுற்றிக் கொண்டு இருக்கிறது.. உங்களுக்கு என்ன நீங்கள் இரண்டு இட்லி போட்டு விட்டு உங்கள் வேலையை பார்க்க போய் விடுவீர்கள்... நான் தான் அந்த நாய் இன்னும் என்ன என்ன செய்யுமோ என்று அதை கவனித்துக் கொண்டே வேலை செய்வதாக இருக்கிறது.. இந்த சமயத்தில் ஒரு வயதான மூதாட்டி தனது கைப் பையில் சில சில்லறைகள் தேடுகிறார்.. ஓரிரு இட்லி சாப்பிட்டால் தான் அந்த ஜீவன் உயிரை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற தொனியில்... காலை பசி என்பது மிகவும் மோசமான கொடுமையான விஷயம்..அதை அனுபவித்தவர்களுக்கே தெரியும் அதன் அருமை பெருமை எல்லாம்...

அவர் என்னிடம் வந்து எவ்வளவு சில்லறைகள் இருக்கிறது என்று பார்க்க சொல்கிறார்... நான் அதை எண்ணி விட்டு ஒரு பத்து ரூபாய் இருக்கிறது என்றேன்.. இதற்கு இங்கே எத்தனை இட்லி வாங்க முடியும் என்று கேட்கிறார்.. இரண்டு இட்லி கிடைக்கும் என்றேன்... அவரது முகத்தில் ஒரு அற்புதமான சிரிப்பு... போதும் போதும் எனக்கு இரண்டு இட்லி போதும் என்று சொல்லி விட்டு இரண்டு இட்லி கடைக்காரரிடம் சொல்லி விட்டு காத்திருக்கிறார்... அவர் அருகில் மோப்பம் பிடிக்க அந்த நாய் வந்து அருகில் நிற்கிறது.. அந்த மூதாட்டி அதை வருடி கொடுத்து ஏதோ பேசுகிறார்.. அதற்கு அந்த மொழி புரிந்து இருக்கிறது போலும்.. மிகவும் உற்சாகமாக வேகமாக வாலை ஆட்டிக் கொண்டு அவர் அருகிலேயே நிற்கிறது..இட்லி தயாராகி கடைக்காரர் அந்த மூதாட்டியை பார்த்து கொடுக்க அவர் அதை மெதுவாக இரண்டு கைகளில் ஏந்தி வந்து அங்கே இருந்த மர பலகையில் அமர்ந்து சாப்பிடுகிறார்... கடைக்காரர் கருணையால் வைத்த மூன்றாவது இட்லியை தனது தட்டில் பார்த்து விட்டு என்னை கூப்பிட்டு சொல்கிறார்.. இங்கே பாருங்கள் எனக்கு மூன்று இட்லி பத்து ரூபாய்க்கு கிடைத்து இருக்கிறது என்று பொக்கை வாயை காட்டி சிரிக்கிறார்.. அந்த நாயை கூப்பிட்டு இங்கே வா உனக்கு யோகம் இருக்கிறது போலும்...இந்தா என்று ஒரு இட்லியை சாம்பார் சட்னி தொட்டு போட இதை அவ்வளவு வேலைகளிலும் கவனித்து விட்டார் கடைக்காரர்.. நான் எனக்கு கிடைத்த திட்டு அவருக்கும் கிடைத்து விடக் கூடாதே என்று கவனிக்கிறேன் மிகவும் உன்னிப்பாக...

கடைக்காரரோ அந்த மூதாட்டியின் இந்த செயலில் நெகிழ்ந்து ஏ பாட்டி நான் நீ பாவம் என்று ஒரு இட்லி சேர்த்து வைத்தால் நீ தர்மம் செய்கிறாயா அதுவும் நாய்க்கு என்று கேட்கிறார்...

அந்த மூதாட்டி கோபம் கொள்ளாமல் அதே புன்னகை மாறாமல் ஏ பேராண்டி அதனிடம் காசு இல்லயடா உன் கடையில் இட்லி வாங்கி சாப்பிட என்று சொல்கிறார் சிரித்தபடியே...

ஓ ஓ... அப்படியா..நீ அதற்கு காசு கொடுக்க வேண்டியது தானே இட்லி சாப்பிட... என்கிறார்.

அந்த மூதாட்டியோ இந்த இயற்கை அதற்கு உணவை சாப்பிட தான் கற்றுக் கொடுத்து இருக்கிறது...இட்லி சாப்பிட காசு கொடுக்க வேண்டும் என்று இந்த இயற்கை கற்றுக் கொடுக்கவில்லையடா பேராண்டி...அதை அதாவது உணவுக்கு காசு என்பதை நாம தானேடா உருவாக்கி வைத்து இருக்கிறோம் என்று சொல்ல அங்கே அலைபேசியில் மூழ்கிக் கொண்டே சாப்பிட்டவர்களோடு நானும் கேட்டு அதிசயித்தேன்...

அந்த நிகழ்வை ஓரிரு நிமிடங்கள் அசைப் போட்டுக் கொண்டே தான் சாப்பிட்டு முடித்த இட்லி எண்ணிக்கைக்கு காசு கொடுக்க கடைக்காரருக்கு முயன்றார்கள்... அந்த கடைக்காரர் அவர்களிடம் வாங்கிய காசில் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் சேகரித்து எடுத்து வந்து அந்த மூதாட்டியிடம் கொடுக்கிறார்... இது எதற்காக எனக்கு அட போடா பேராண்டி... அந்த நாய் தினமும் இங்கே தானே வரும் அதற்கு ஓரிரு இட்லி போட்டு விட்டு அதோ அங்கே தெருவோரத்தில் நிற்கதியாக எதையோ யோசித்துக் கொண்டு இருக்கும் அந்த தாடி வைத்த பிச்சைக்காரருக்கு காலை உணவை கொடு... அது போதும்... இங்கே அவர்களா பிச்சைக்காரர்கள் நம்மை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டு ஓட்டம் பிடிக்கும் பிச்சைக்காரர்கள் எத்தனை எத்தனை என்று சொல்லி சிரித்து கொண்டே விடை பெறுகிறார் அந்த மூதாட்டி... நான் இத்தனை நிகழ்வையும் கவனித்து கொண்டே விடை பெறுகிறேன் கொஞ்சம் ஆறுதலாக...

இங்கே இந்த உலகம் ஒரு நாடக மேடை தானே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு..

இங்கே நான் உலகத்தவர் மத்தியில் பைத்தியக்காரன்... அந்த மூதாட்டியோ ஞானி... இங்கே எத்தனை எத்தனை விதமான மனிதர்கள்... எல்லோருமே ஒவ்வொரு விதமான ரசனை மனிதர்கள் தான் என்று உள்ளுக்குள் ரசித்துக் கொண்டே சாலையில் நடந்து செல்கிறேன்... அங்கே அந்த மூதாட்டியை விட்டு விட்டு என்னை விடாமல் துரத்தி வருகிறது அந்த நாய்... என்ன சூட்சமமோ யார் அறிவார் இந்த உலகில்?🦅🤷💫.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:25/09/25/வியாழக்கிழமை.


திங்கள், 22 செப்டம்பர், 2025

தேநீர் கவிதைகள்...

 


வணக்கம் நேயர்களே 🎉🙏🎻.

இன்றைய கவிதை நேரம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நிழலி அவர்களின் அற்புதமான கவிதை தொகுப்போடு கீழேயுள்ள லிங்கில் இணைத்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🙏 .

https://youtu.be/iq1tNNX8xnE?si=JOIGCMWade5E2jZO

நிகழ்ச்சி கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நன்றி நேயர்களே 🎉 🙏 🎻 

உயிர் பூவின் வாசம்: அத்தியாயம்:2


கதவை வேகமாக போய் திறந்தேன்.அங்கே நான் நினைத்தது போல ராதை தான் நின்றிருந்தாள்..உள்ளே வா ராதா என்றேன் புன்னகையோடு..

உள்ளே சிரிப்போடு வந்த ராதா அந்த வரவேற்பறையில் இருந்த சோபா மீது ஆசுவாசமாக அமர்ந்தாள்.. கொஞ்சம் பருக நீர் கொண்டு வா கிருஷ்ணா என்று சொல்லி முடிப்பதற்குள் அருகே நீரோடு வந்து நின்று இந்தா எடுத்து மெதுவாக பருகு என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்...

அவள் அந்த நீரை பருகி விட்டு அப்படியே சுற்றும் முற்றும் பார்த்தாள்... அவளது முகம் கொஞ்சம் ஆச்சரியம் மற்றும் சிறு முறுவல் என்று பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததை நான் மிகவும் ரசனையோடு பார்த்தேன்...

வாவ்... எவ்வளவு அற்புதமான கலை உணர்வோடு இந்த வீட்டை நீ வைத்து இருக்கிறாய் கிருஷ்ணா என்றாள்...

அதெல்லாம் ஒன்றும் இல்லை.. நான் ரசித்த விஷயத்தை இங்கே அமலுக்கு கொண்டு வந்து இருக்கிறேன் அவ்வளவு தான் என்று சொல்லி விட்டு சரி போய் குளித்து விட்டு வா நான் அதற்குள் இரவு உணவை தயார் செய்து வைக்கிறேன் என்று சொல்லி விட்டு சமையல் அறைக்கு சென்றேன் மீதமுள்ள பணிகளை முடிக்க...

சரி கிருஷ்ணா எங்கே குளியலறை என்று சொல்லி விட்டு போ என்றாள் கொஞ்சம் சத்தமாக... நான் அதோ என்று கை காட்டிய திசையில் நடந்து சென்றாள்...

நான் இரவு தயாரிக்க வேண்டிய உணவாக சப்பாத்திக்கு குருமா தயார் செய்ய முனைந்து ஒரு புறம் அதை ஒரு அடுப்பில் வைத்து விட்டு மறுபுறம் சப்பாத்தி போடுவதற்காக தோசை கல்லை போட்டு விட்டு சப்பாத்தி தேய்க்க ஆரம்பித்தேன்.... சிறிது நேரத்தில் ராதா தயாராகி என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு நான் தேய்த்துக் கொண்டு இருந்த சப்பாத்தி கட்டையை என்னிடம் இருந்து பறித்து தேய்க்க ஆரம்பித்தாள்... இருவரும் பள்ளி நாட்களில் நடந்த விசயங்களை பேசிக் கொண்டே வேலையை முடித்து விட்டு சாப்பிட தயாரானோம்... அந்த வரவேற்பறையில் இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம்... சப்பாத்தி குருமா எவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கிறது.... இதெல்லாம் உனக்கு எப்படிடா என்று ஆச்சரியமாக பார்த்தாள்... அதெல்லாம் அப்படி தான்... வேறு வழி இல்லையே.. நேரம் வந்து விட்டால் வயிறு எனக்கு ஏதாவது போடுடா என்று உரிமையுடன் சண்டை போடுகிறதே என்றேன் சிறிது சிரித்தபடி... அதற்காக தினமும் நீதான் சமைத்து அலுவலகம் எடுத்து செல்வாயா என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.. ஆமாம் வேறு யாரும் சூட்சமமாக இங்கே எனக்கு உதவ ஆள் இல்லை ராதா நீ நம்பி தான் ஆக வேண்டும் என்றேன் கொஞ்சம் வேடிக்கையாக...

அட போடா எப்போதும் உனக்கு வேடிக்கை தான்...என்று சொல்லி சிரித்தாள்...

ஒரு வழியாக பேசிக் கொண்டே நாங்கள் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு சமையல் அறையை இருவரும் சுத்தம் செய்து விட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக சோஃபாவில் அமர்ந்தோம்... மறுநாள் விடியற்காலையில் கிளம்ப சிறு சிறு வேலைகள் இருந்தது எனக்கு... அதற்கு ராதா உதவி செய்தாள்... தற்போது மணி இரவு எட்டு மணி காட்டியது... கிருஷ்ணா மணி எட்டு தான் ஆகிறது.. கொஞ்ச நேரம் மொட்டை மாடிக்கு போகலாமா என்றேன்... சரி வா போகலாம் என்று மாடிக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றேன்...

அங்கே இருந்த அறையில் இருந்து வெளியே இரு நாற்காலியை எடுத்து வந்து போட்டேன்... அங்கே நிலவு கொஞ்சம் கிழக்கில் மேலே எழுந்து இருந்து எங்களை வேடிக்கை பார்ப்பதற்காக எட்டி 

பார்த்தது...

கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அந்த நிலவை அங்கே தவழும் மேகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தோம்.. தென்றல் எங்களை மெதுவாக தீண்டியது...

ராதா என்றேன் மிகவும் மெதுவாக...

என்ன என்று என்னை நோக்கி திரும்பி பார்த்தாள்... எப்படி வேலை போகிறது உனக்கு என்றேன்...

ம்ம் ஏதோ போகிறது...வாழ்க்கையை ஓட்ட தேவைக்கு அதிகமான பணத்தோடும் கொஞ்சம் வாழ்வின் ருசியை அனுபவிக்க முடியாத சக்கையாகவும் போகிறது..

ஆனால் நான் இந்த சமூகத்தின் கட்டமைப்பில் இல்லை..

அதனால் பெரிதாக சலிப்பு என்றும் சோர்வும் என்று சொல்லி விட முடியாதபடி போகிறது...இதோ இப்போது உன்னோடு மிகவும் சுதந்திரமாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் அளவுக்கு என்றாள் சிரித்துக்கொண்டே...

அதெல்லாம் சரி உனது அண்ணா அம்மா அப்பா எல்லோரும் நலம் தானே என்றேன்..

அதெல்லாம் நலம் தான் கிருஷ்ணா.. வயோதிகம் காரணமாக கொஞ்சம் அயற்சியாக இருக்கிறார்கள்.. அண்ணி மிகவும் பொறுப்புடனும் பொறுமையுடனும் மூன்று பேரையும் விட்டுக் கொடுக்காமல் அழகாக வாழ்வை நகர்த்தி செல்கிறார்.. அதனால் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறேன் என்றேன்...

மிகவும் மகிழ்ச்சி...நீ அப்போது பள்ளி நாட்களில் எப்படி இருந்தாயோ அப்படியே தான் இருக்கிறாய்...நீ அழைத்து எங்காவது போகலாமா என்று கேட்ட போது நான் கூட உனக்கு ஏதோ நிம்மதியாக இல்லாத சூழலில் இருக்கிறாயோ என்று பயந்து விட்டேன் என்றேன் கொஞ்சம் கவலையாக...

அப்படியா.. அதெல்லாம் ஒன்றும் இல்லை கிருஷ்ணா... நான் அந்தளவுக்கு மன தெளிவு இல்லாத மனுஷி இல்லை.. உனக்கு எனது நன்றியையும் பேரன் பையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாள் சிரித்துக்கொண்டே...

நன்றி எல்லாம் வேண்டாம் நீ நன்றாக இருந்தாலே போதும் ராதா என்றேன் ஆறுதலாக...

அப்படியே நான் கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை இப்போது கேட்டு விடலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவள் கிருஷ்ணா அங்கே பார் இரண்டு பறவைகள் வானில் தனது கூட்டிற்கு இவ்வளவு தாமதமாக செல்கிறதே அதற்கு வழி தெரியுமோ இந்த இருட்டில் என்று கவலையுடன் கேட்டாள்...

அதெல்லாம் அதற்கு இந்த பிரபஞ்சத்தின் காம்பஸ் மிகவும் அழகாக வழி காட்டி கூட்டி செல்லும் என்றேன்...

அதுவும் சரிதான் கிருஷ்ணா என்று சொல்லி விட்டு 

நாம் காலையில் எத்தனை மணிக்கு இங்கே இருந்து கிளம்ப வேண்டும் என்று கேட்டாள்..

முதலில் எங்கே செல்ல வேண்டும் என்று நீ சொல்லவே இல்லையே என்றேன் சிறிது ஆச்சரியமாக..

அப்படி என்றால் நீ எதுவும் திட்டம் எதுவும் வைத்து இருக்கவில்லையா என்றாள் கொஞ்சம் ஆவலாக...

இல்லை ராதா...நீ எங்கே என்று சொன்னால் அங்கே போகலாம் என்று தான் அப்படியே விட்டு விட்டேன்... நீ அழைத்த போது எங்காவது செல்லலாம் என்று கேட்டபோது நான் உன்னிடம் ஏன் எதுவும் கேட்கவில்லை என்று தெரியுமா...நீ ஏதாவது திட்டம் வைத்து இருப்பாய் அதற்காக தான் என்னை அழைத்தாய் என்று மௌனமாக இருந்து விட்டேன் என்றேன்...

சரி பரவாயில்லை கிருஷ்ணா...

ஒன்றும் பிரச்சினை இல்லை பார்த்துக் கொள்ளலாம் எங்கே என்று தற்போது முடிவெடுக்க வேண்டாம்.. காலையில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டு அங்கே பார் நிலவை எவ்வளவு ரம்மியமான காட்சி என்றாள்...

நானோ இவளால் எப்படி அடுத்த நிகழ்விற்கு எந்த சலனமும் இல்லாமல் நகர முடிகிறது என்று ஆச்சரியத்துடன் அவள் காட்டிய திசையில் அந்த நிலவை பார்த்தேன்...நிலவோ என்னை கண்டுக் கொள்ளாமல் அவளோடு மட்டும் உரையாடுவது போலவே எனக்கு தோன்றியது...

அடுத்து என்ன அடுத்த 

அத்தியாத்திற்காக காத்திருங்கள் 🤷.

#இளையவேணிகிருஷ்ணா

நாள் 22/09/25

திங்கட்கிழமை.

சனி, 20 செப்டம்பர், 2025

உயிர் பூவின் வாசம்... அத்தியாயம் (1)

 


ஒரு உயிர் பூவின் வாசம்: அத்தியாயம்:(1)

நான் ஒரு கணினி பொறியாளர்..ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்...மதியம் தொடங்கி இரவு வெகுநேரம் உட்கார்ந்த நிலையிலேயே மடிகணினியை ஒரு குழந்தையை போல கூடவே வைத்துக் கொண்டு இருக்கும் வேலை...எனது ஊதியம் தற்போது அதிகம் தான்...மறுக்கவில்லை...ஆனால்எனது ஆன்மாவிற்கான ஊதியமா என்று கேட்டால் அங்கே நான் ஆழ்ந்த அமைதியை தான் உங்களுக்கு பகர முடியும்.. சும்மா எதையாவது உளறிக் கொண்டு இருக்காதீர்கள் பாஸ்...பணம் மட்டும் இருந்தால் போதும் இங்கே எதையும் சாதிக்கலாம்.. என்று என்னிடம் பெரும்பாலானவர்கள் உரிமையோடு சண்டை இடவும் கூடும்...ஆனால் உங்களுக்கு எப்படியோ எனக்கு அது மட்டும் மன நிறைவை தரவில்லை என்று மிகவும் ஆணித்தரமாக சொல்வேன்...மேலும் நான் ஒரு திருமண பந்தத்தில் இணையாத சாதாரண மனிதன்...ஆயிரம் ஆயிரம் ஜாதகங்கள் மற்றும் என்னை திருமணம் செய்து கொள்ள ஆசை தெரிவித்த பெண்கள் இப்படி பட்டியல் நீண்டுகொண்டே போகும்...ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை...சரி எனது கதையை கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்..ஏதாவது திரைப்படம் எடுக்க வா போகிறீர்கள்...இதோடு அதை முடித்துக் கொள்ளலாம்...🙅

விஷயத்திற்கு வருவோம்..அலுவலக மேலதிகாரியிடம் விடுப்பு கேட்டு இருந்தேன் அல்லவா அதை நான் ஒரு நீண்ட விடுமுறை நாட்களை

பெரும் பாடுபட்டு மேலதிகாரியிடம் போராடி வாங்கி இருந்தேன்... அந்த நாளும் இதோ வந்தே விட்டது எனது கனவுகளை நிறைவேற்ற ...

அலுவலகத்தின் எனக்கான இப்போதைய பணி வரை எல்லா முடித்து விட்டு கிளம்பி விட்டேன்... அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியர் என்னை பார்த்து சார் நீங்கள் பெரிய ஆள் தான் சார்.. எப்போதும் விடுப்பு என்றாலே முகத்தில் அஷ்ட கோணலை காட்டி நம்மை வெறுப்பேற்றும் வசைவுகளை பாடி அனுப்பி வைப்பார்...ஆனால் நீங்கள் எப்படியோ அந்த அதிகாரியிடம்

போராடி விடுப்பு அதுவும் நீண்ட விடுப்பு வாங்கி இருக்கிறீர்கள்..வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்றார்... அவரது பேச்சை கேட்டு விட்டு அதெல்லாம் ஒன்றும் இல்லை சார் நீங்கள் நினைத்தாலும் விடுப்பு அவரிடம் வாங்கலாம்... ஆனால் உங்கள் பணியில் இதுவரை எந்த தோய்வும் இல்லாமல் சென்று இருக்க வேண்டும்... மேலும் அவரது கோபத்தை நீங்கள் மனதிற்குள் ரசிக்க தெரிந்து இருக்க வேண்டும் என்றேன்...அவரோ சார் நீங்கள் வேற லெவல் சார்... எனக்கு அதெல்லாம் வராது என்றார் கொஞ்சம் சிரித்து... சரி அலுவலகத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்... நான் வரும் வரை அவர் என்ன திட்டினாலும் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்... ஏனெனில் உங்களுக்கு ஆறுதல் சொல்லி புலம்ப நான் இங்கே இல்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது என்று தோளில் தட்டி சொன்னதை அவர் ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் சார்... நீங்கள் இந்த அலுவலகத்தை பற்றி நினைக்காமல் எல்லாவற்றையும் மறந்து விட்டு தங்களது விடுமுறை நாளை மகிழ்ச்சியாக முடித்துக் கொண்டு வாருங்கள் என்று கை குலுக்கி விடை பெற்றார்...

நானும் அவரிடம் இருந்து விடை பெற்று எனது புல்லட் சாவியை விரலில் சுழற்றிக் கொண்டு உலகம் பிறந்தது எனக்காக என்று வாய் விட்டு பாடிக் கொண்டே போவதை அங்கே ஏதேதோ ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டு இருந்த சிலர் தனது உரையாடலை நிறுத்தி விட்டு வாழ்றான் சார் என்று சொல்வதை நான் தலையசைத்து ஆமோதிக்கிறேன் கொஞ்சம் இதழ் வழியாக புன்னகையை காற்றில் அவர்களுக்கு பரிசளித்தபடி... 

எனக்கு எனது புல்லட் ஏதோ ஒரு புதிய நண்பனாக இன்று காட்சி கொடுத்தது...அதை ஸ்டார்ட் செய்து சாலையில் மிகவும் நிதானமாக பயணிக்கிறேன்..

அடர்ந்த காற்று என்னை தழுவி தழுவி விலகி செல்வதை ரசித்தபடியே இல்லம் வந்து சேர்ந்தேன்...

அந்தி மாலைப் பொழுதை எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ரசித்துக் கொண்டு வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்தி விட்டு இறங்கி அப்படியே சுற்றுச்சூழலை நிதானமாக ரசனையோடு பார்வையிட்டேன்...

நான் வீட்டின் முகப்பில் ஆர்வமாக நட்டு வைத்த ஓரிரு மரங்கள் மற்றும் பூச்செடிகள் என்னை மௌனமாக பார்த்தது... இன்று காலையில் தானே தண்ணீர் நமக்கு விட்டான்... பிறகு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது ஏன் இப்படி ஒரு ஆழ்ந்த பார்வை என்று புரியாமல் பார்த்தது... நான் அருகில் சென்று ஒரு செடியை மெதுவாக வருடிக் கொடுத்தேன்... அந்த வருடலின் வாஞ்சையில் நெகிழ்ந்த அந்த செடி இவனுக்குள் இப்படி ஒரு மென்மையான உணர்வா என்று கிறங்கி தான் போனது.. அருகில் இருந்த செடிகள் எல்லாம் இந்த நிகழ்வை நெகிழ்ந்து வேடிக்கை பார்த்தது... என்னை பார்த்து அங்கே இருந்த ஒரு குருவி தனது சிறகை படபடத்து அருகில் உள்ள மரக்கிளையில் லாவகமாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது...

அந்த செடியிடம் மிகவும் கிசுகிசுப்பாக நான் நாளை வெளியூர் போகிறேன்... உங்களுக்கு தேவையான நீரை விட ஒருத்தரை நியமித்து விட்டு தான் போகிறேன்... தாங்கள் அனைவரும் இந்த இல்லத்திற்கு காவலாக இருக்க வேண்டும் என்று சொல்ல மாட்டேன்... நமது வீட்டை நீங்கள் அனைவரும் மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன அதிர்வை அந்த குருவி உணர்ந்ததோ என்னவோ தெரியவில்லை.. தமது சிறகை லேசாக படபடத்து கீச் கீச்சென்று கத்தியது உற்சாகமாக... அப்போது அதன் அசைவில் இருந்து உதிர்ந்த ஒரு இலை எனது தலையில் பறந்து வந்து விழுந்தது...அதை நான் இயற்கையின் சூட்சம ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டேன்..

பிறகு அவைகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு வீட்டை எமது சாவியை கொண்டு திறந்தேன்...உள்ளே நுழைந்ததும் ஒரு பல்லியின் சத்தம் என்னை மிகவும் இயல்பாக வரவேற்றது...

இத்தனை நாட்கள் இதே வீட்டில் தான் நான் வசித்தேனா என்று எனக்கே சந்தேகம் வந்து விட்டது.. ஏனெனில் இந்த நிகழ்வுகளை எல்லாம் நின்று நிதானமாக ரசிக்க முடியாத அளவிற்கு நான் உணர்வுகளும் இருந்தும் ஒரு உணர்வற்ற மனிதனாக இல்லை இல்லை எந்திரமாக வாழ்ந்து இருக்கிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு மின் விளக்கோடு மின்விசிறியையும் சுழல விட்டு 

அங்கிருந்த சோஃபாவில் அமரவும் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது...

அதில் ஒளிரும் பெயரை பார்த்தேன்... நான் நினைத்ததை போல எனது பள்ளி தோழி ராதை தான் அழைத்து இருந்தாள்... அலைபேசியை காதில் வைத்து சொல் ராதா... இப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தேன்...நீ பயணத்திற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறாயா என்றேன்... ஆமாம் கிருஷ்ணா... முக்கால்வாசி வேலைகள் முடிந்தது... நான் அங்கே கிளம்பி கொண்டு இருக்கிறேன்.. எனக்கும் சேர்த்து சப்பாத்தி செய்து வை என்றாள் சிரித்துக்கொண்டே...

நிச்சயமாக.. எமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை பசியோடு எப்படி வைத்து இருப்பேன் என்றேன் லேசாக சிரித்தபடியே...

சரி அலைபேசியை வை..

எனக்கு இன்னும் சில பல வேலைகள் உள்ளது என்று அலைபேசியை துண்டித்து விட்டு நான் முதல் வேலையாக குளிப்பதற்கு சென்றேன்...

குளித்து முடித்து விட்டு முதல் வேளையாக சப்பாத்தி போட மாவு பிசைந்து வைத்து விட்டு வானொலியை கேட்பதற்காக அதை உயிர்ப்பித்தேன்... அப்போது அதில் நேற்று இல்லாத மாற்றம் என்னது என்ற பாடல் ஒலித்தது... உண்மை தான் சூழலுக்கு தகுந்தபடி பாடல் கூட அமைகிறதே என்று சிறுமுறுவலோடு குருமா வைப்பதற்காக தக்காளி கேரட் உருளை பெரிய வெங்காயம் என்று நான் நறுக்கிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பு மணி ஒலித்தது...கைகளை கழுவி விட்டு போய் வாசல் கதவை திறந்தேன்...

காத்திருங்கள் அடுத்த பகுதிக்காக...🏃🙋

இளையவேணி கிருஷ்ணா 

நாள் 21/09/25

ஞாயிற்றுக்கிழமை.



இந்த தொடரின் இந்த முதல் பகுதி பற்றிய தங்களது மேலான கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி

 வாசக நெஞ்சங்களே ✍️🎉🤝.


புதன், 17 செப்டம்பர், 2025

மழைக்கால நேரமொன்றில் ஒரு கோப்பை தேநீரோடு...


ஒரு கோப்பை தேநீரோடு

இந்த மழைக் கால தொடக்கத்தில்

இளம் காலை வேளையில்

எழுதிக் கொண்டுசில இதமான இசையோடு இருக்கும் நொடிகளில் உருகிக் கொண்டே இருக்கிறது வாழ்வின் சுவை...

அதை அப்படியே பருகி முடித்து மீண்டும் எழுதிக் கொண்டே இருக்கிறேன் ...

சில தூறல்கள் மெல்லிய இசையோடு 

இந்த பூமியை 

குளிர்விக்கும் நேரத்தில்

அதோ அங்கே சிறகடித்து 

பறக்கும் பறவை

அந்த தூறலில் 

நனைந்துக் கொண்டே 

எனது அறையின்

சாளரத்தின் வழியே

என்னை தலை உயர்த்தி பார்க்கிறது...

நான் அதை பார்த்து 

புன்னகைக்கும் நேரத்தில்

அது தனது மெல்லிய குரலில் 

பிரியத்தோடு

ஒரு சுவாரஸ்யமான இசையை 

என் செவிகளுக்கு விட்டு 

சென்றது தான்

இந்த நாளின் பொக்கிஷமாக..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

இனிது இனிது ஏகாந்தம் இனிது..

 


அந்த இரவின் சூழல் எனக்கு புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தது... திடீரென கனத்த மழை இடியோடு பல மணி நேரங்கள் நிற்காமல் தொடர்ந்து பெய்து தனது வலிமையை இங்கே வாழும் ஜீவராசிகளுக்கு காட்டி விட வேண்டும் என்ற முனைப்பாக தான் இருந்தது அந்த மழை பொழிவு...மின்சாரம் தடைப்பட்டு ஒளி இல்லாத இரவை ரசிக்க கிடைத்த தருணமாகவே அதை நான் நினைத்தேன்...

நான் ஒரு படைப்பாளி என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள விழைகிறேன்... ஏனெனில் நான் என்னை இங்கே வேறு எந்த முகமாகவும் அறிமுகம் செய்து கொண்டால் அது உங்களுக்கு துயரமாக கூட இருக்கலாம் அல்லவா அதற்காக தான்... ஏனெனில் நான் இங்கே அடையாளங்கள் ஏதுமற்ற ஜீவனாக என்னை காட்டிக் கொள்ளவே எனக்கு பிடித்தமான விஷயம் என்று சொன்னால் நீங்கள் நான் தற்போது இங்கே எழுதி வரும் படைப்பை தற்போது நிறுத்தி விட்டு வேறு செயல்கள் செய்து விட போய் விடுவீர்கள் அல்லவா அதற்காக தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

மெதுவாக போய் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி நான் தற்போது இருக்கும் அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மாலைப் பொழுதில் நான் தயாராக வைத்திருந்த சப்பாத்தி குருமாவை மிகவும் நிதானமாக ரசித்து சாப்பிட்டேன்... சன்னல் கதவு நன்றாக திறந்து இருந்ததால் அந்த மழையின் சலசல ஓசை மட்டும் நுண்ணியமாக எனது காதுகளில் விழுந்தது... நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா... மின்சாரம் தடைப்பட்டு இப்படி ஒரு மழை வந்து உங்கள் சன்னல் கதவை இலேசாக நனைத்த நாட்களை... அந்த மழையின் ஓசையை எந்தவித இடையூறும் இல்லாமல் ரசிக்க ஒரு தனிப்பட்ட ரசனையான மனம் வேண்டும்... எங்கே இதை எல்லாம் ரசிப்பது... இங்கே ஆயிரம் ஆயிரம் சம்சார வேலைகள் என்னை அலைகழிக்கிறது... நீங்கள் வேறு என்று நீங்கள் அங்கே புலம்புவது என் காதில் விழாமல் இல்லை... அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களை புறக்கணிக்கவும் மனம் இல்லை... ஏனெனில் எனக்கு சம்சாரிகளை பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும்.. முழுவதும் தெரியாது... ஏனெனில் நான் சம்சாரி அல்ல... அதனால் அது பற்றி ஓரளவு ஞானம் இருந்ததால் உங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி நினைக்கிறேன்...இதோ எனது படைப்பின் இடுக்கின் வழியே உங்களை வந்தடைந்த இந்த மழையையாவது கொஞ்சம் அலட்சியம் செய்யாமல் பிடித்துக் கொள்ளுங்கள்...ஏதோ சில ரசனைகளாவது உங்களோடு பயணிக்க இதை விட்டால் வேறு வழி இல்லை...

இருக்கட்டும் அதை விடுங்கள்...

நான் உங்களுக்கு அந்த மழையின் ரசனையை உணர்த்திக் கொண்டே இதோ எனது இரவு உணவை முடித்துக் கொண்டேன்... கொஞ்சம் இந்த மழைக்கு இதமாக இஞ்சி சாறோ மற்றும் எழுமிச்சை சாறு கலந்த தேநீர் தயாரித்து பருகினால் நன்றாக இருக்கும் என்று எனது மனம் ஏங்கியது... சரி என்று மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு சமையல் அறையில் சென்று தேநீர் தயாரித்து அதை எனது நீல நிற கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு எனது அறைக்கு வந்து மிகவும் நிதானமாக ரசித்து ஆவி பறக்க பறக்க மிடறு மிடறாக பருகினேன்..

அந்த மிடறு உள்ளே இறங்க இறங்க ஒரு இதத்தை கொடுத்தது... உங்களுக்கு தெரியுமா ஒரு தேநீர் கோப்பை ஒரு கனத்த மழை போதும் வாழ்வின் பெரும் ஆனந்த அதிர்வை உங்களுக்குள் உணர முடியும்... அது தரும் ஆனந்தம் எப்படி இருக்கும் என்றால் தில்லையில் ஆனந்த கூத்தாடி சிரிக்கிறானே அந்த தாண்டன் அவனை போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

அந்த மெழுகுவர்த்தி ஒளியில் தான் நான் உங்களுக்கு இந்த வர்ணனையின் ரசனையில் நனைய வைக்கிறேன்...

இதோ அலைபேசியில் தாயாரின் அழைப்பு வருகிறது... எடுத்து காதில் வைத்தேன் சொல்லுங்கள் அம்மா...

அங்கே மழையா என்று கேட்டேன்...

எதிர் முனையில் அம்மா இங்கே மழை இல்லைடா கண்ணா... அங்கே அதிகமான மழை என்று தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்... மின்சாரம் பல பகுதிகளில் இல்லை என்று சொன்னார்கள்.. உனது பகுதியில் எப்படி என்று கேட்டார்..

ஆமாம் அம்மா இங்கே கடும் இருள் சூழ்ந்த நிலையில் மழை அடர்ந்து பொழிகிறது...

நான் இந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உங்களோடு பேசுகிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்...

அடடா என்ன கொடுமை இது.. ஏதேனும் சாப்பிட்டாயா இல்லையா என்று கேட்டார் கொஞ்சம் கவலையோடே..

நான் நன்றாக இந்த மழையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு சுட சுட தேநீர் பருகி முடித்து விட்டு தான் உங்களோடு பேசுகிறேன் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றேன் சிறிது சிரித்துக்கொண்டே...

நான் கவலைப்படாமல் எப்படிடா இருக்க முடியும்... உனக்கென்று ஒரு வாழ்க்கை துணை இருந்தால் நான் இங்கே இப்படி அமைதி இல்லாமல் உன்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்க மாட்டேன்..

நீ தான் பிடிவாதமாக திருமண பந்தமே வேண்டாம் என்கிறாய் என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார்...

அம்மா இப்போது உங்களுக்கு வேறு ஏதாவது என்னோடு பேச வேண்டும் என்று நினைத்தால் பேசுங்கள்...மழையை பற்றி ஏதாவது பேசுங்களேன் நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றேன் சிறிது புன்முறுவலோடு...மழையை பற்றி என்ன பேச... என் பிள்ளையை அங்கே படாய் படுத்துகிறதே என்று சலிப்போடு சொல்லி விட்டு பார்த்து பத்திரமாக இருடா கண்ணா.. விடிந்ததும் அங்கே உள்ள நிலையை சொல் என்று வைத்து விட்டார்...

இந்த சம்பாஷணைகள் எல்லாம் தினமும் ஏதோவொரு வகையில் நடப்பது தான்...

சரி அதை விடுங்கள்...

ஒரு மனிதன் தனியாக பயணித்து இறப்பது ஒரு குற்றமா என்று எனக்கு தெரியவில்லை... அந்த காலத்தில் மனித இனம் அழிந்து போகாமல் இருக்க மற்றும் தான் செய்து வந்த தான் தருமங்கள் அழியாமல் தொடர சந்ததி அவசியம் என்று சாஸ்திரம் சொன்ன விஷயத்தை இந்த காலத்தில் எந்தளவுக்கு மதிக்கிறார்கள்... மனித இனம் தான் கணக்கற்ற வகையில் பெருகுகிறதேயொழிய தனது சொத்தை அடுத்தவர்கள் எந்த வழியிலும் அனுபவித்து விடக் கூடாது தனது சந்ததியை தவிர என்று கணக்கு போட்டு அல்லவா இந்த காலத்தில் மனித இனம் ஓடிக் கொண்டு இருக்கிறது...இதை பற்றி பேசினால் நம்மை ஒரு கூட்டம் சரியான கிறுக்கு பிடித்த ஆள் இவன் என்று ஒதுக்கி விட்டு மீண்டும் விட்ட பாதையில் பயணிக்க தொடங்கி விடுமே தவிர இதை பற்றி கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசிப்போம் என்று எவரும் யோசிக்க மாட்டார்கள்... இந்த மக்களின் குறை ஞானத்தை எப்படியோ அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடை செய்து கொண்டு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி விடுகிறார்கள்... இது கூட புரியாமல் தானே இந்த சன கூட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது... இது பற்றியும் பேசினால் இன்னும் கிறுக்கு பட்டம் நமக்கு கூடுமே தவிர குறையாது...

சரி அதை விடுங்கள்...

இதோ ஏதோவொன்றை எழுத வந்து ஏதோவொரு பாதையில் பயணித்து இப்பொழுது உங்களுக்கு ஏதோவொரு வகையில் வாசிக்கும் ரசனையை கொடுத்து கொண்டு இருக்கும் போது அந்த கனத்த மழை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்துக் கொண்டு இருந்தது...

இதோ நான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியும் நான் ஏதோவொரு வகையில் உலகத்தின் ஒரு மூலையில் வசிக்கும் யாரோவொவரின் வாசிப்பு அனுபவித்திற்காக எழுதி கொண்டு இருப்பதை அது அதன் பாணியில் உருகி எனக்கு ஆறுதலாக மேசையில் என்னை வேடிக்கை பார்க்கிறது...

நான் இந்த அபூர்வ இரவை கழிக்க உதவி செய்த மழைக்கும் இந்த மெழுகுவர்த்திக்கும் அந்த தேநீர் ருசிக்க தந்த தேநீர் கோப்பைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு எழுகிறேன்...

இதோ மணி பத்தை கடந்ததாக எனது கைக் கடிகாரம் சொல்கிறது... அனைத்தையும் அதனதன் இடத்தில் வைத்து விட்டு படுக்கை விரிப்பை சரி செய்து உறங்க ஆயத்தம் ஆகும் போது எனக்காக மௌனமாக ஒளி உமிழ்ந்து இந்த படைப்பை எழுத உதவிய மெழுகுவர்த்தி தனிமையில் இவ்வளவு ஆனந்தம் அமிர்தமாக கிடைக்குமா என்று ஆச்சரியமாக பெருமூச்சு விட்டதில் எங்கோ இருந்த மழை நனைத்த காற்று சாரலாக வந்து அதை நடனம் ஆட வைக்கவும் அங்கே சுவரில் இருந்து பல்லி ஒன்று இதனை ஆமோதித்து சத்தம் போடவும் சரியாக இருந்தது...

இங்கே இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொல்லி கொண்டே மழை நனைத்த இரவிற்கு ஒரு வணக்கம் தெரிவித்து விட்டு விடை பெற்றுக் கொண்டு உறக்கம் எனும் உலகத்திற்கு செல்கிறேன்... அங்கே இந்த விழிப்பு நிலையில் விட்டு போன இந்த ரசனையான நிகழ்வு கொஞ்சமும் சிதறாமல், கனவில் கூட தனிமையின் இந்த மழை ரசனை தொடர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக் கொண்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/09/25/செவ்வாய்க்கிழமை.

வியாழன், 11 செப்டம்பர், 2025

அந்த பெரும் காதலின் அடையாளமாக_சிறுகதை.


அந்த அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து இருந்தேன்.. அங்கே பறவைகள் இங்கும் அங்கும் பறந்து திரிந்துக் கொண்டு இருந்தது...இதை எல்லாம் எந்தவித சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்... இங்கே வேடிக்கையை தவிர வேறு எதுவும் மிச்சம் இல்லை அல்லவா நமது வாழ்க்கை உட்பட வேடிக்கை தான்...இது புரியாமல் பல பேர் பல விசயங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்கள்..நாமே ஒரு வேடிக்கை மனிதராக பல பேருக்கு இருக்கிறோம் என்று தெரியாமல் என்று நினைக்கும் போது மிகவும் நகைப்பாக தான் இருக்கிறது...

அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் இங்கும் அங்கும் எதையோ பரபரப்பாக பேசிக் கொண்டே அலைகிறார்கள்... அங்கங்கே விடுமுறை நேரம் இன்னும் சற்று நேரத்தில் விடை பெற போகிறது என்று உணர்ந்து குழந்தைகள் மணலில் வீடு கட்டி மகிழ்கிறார்கள்...அதை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு பெரும் அலை வந்து அதை தீண்டி அழித்து சென்றதில் அந்த குழந்தையின் மனம் சிறுத்தது... பாவம் அந்த குழந்தைக்கு என்ன தெரியும்... இங்கே வளர்ந்த பிறகும் பல பல விசயங்கள் தான் நமக்கு நடக்க போகிறது என்று...

இந்த நிகழ்வுகளை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே எனது நினைவுகளை அசைப்போடுகிறேன்...

இதோ இதே மாதிரி ஒரு மாலைப் பொழுதில் தான் நீயும் நானும் கணக்கற்ற பொழுதுகள் பல பல கதைகளை பேசி திரிந்தோம்... நான் ஏதேதோ சொல்ல சொல்ல நீ வாய் விட்டு சிரிக்கிறாய்... அந்த கள்ளமற்ற சிரிப்பில் அங்கே இருந்த மனிதர்கள் மட்டும் அல்ல அலைகளும் உருகி தான் உனது பாதத்தை முத்தமிட்டு சென்றது..

அந்த பொழுதின் அடையாளத்தை இங்கே நான் தற்போது சத்தம் இல்லாமல் தேடிக் கொண்டு இருக்கிறேன்...

ஏன் என்னை பிரிந்தாய் என்று எனக்கு நீ உணர்த்தாமலேயே சென்று விடவும் இல்லை...

உனது சூழலின் அழுத்தத்தை எனக்கு சொல்லி தான் பிரிந்தாய்...பிறகேன் என்னோடு பெரும் காதல் கொண்டு பித்து நிலையை அடைய வைத்தாய் என்றும் நான் சராசரி மனிதனை போல கேட்கவும் மாட்டேன்... ஏனெனில் அந்த மாதிரியான காதலை இது வரை இந்த கடற்கரை சந்தித்தது கூட இல்லை என்று எத்தனையோ முறை அதன் முத்த மொழியில் அலைகள் எனக்கு உணர்த்தியதை நான் உணர்ந்துக் கொண்டு தான் இருந்தேன்...

என்றாலும் அந்த உன் சூழலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நம் பெரும் காதலின் உணர்வை நீ மதித்து இருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது... இது பிரிவின் தீயில் தகிக்க முடியாத எண்ணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட போதும் உன்னை குற்றம் சொல்ல என் ஆழ்மனம் ஒத்துக் கொள்ளவில்லை... இங்கே ஆழ்ந்த காதலின் உணர்வுகள் எல்லாம் இப்படி தான் கடற்கரை மணலிலோ அந்த நீலவானத்திலோ அங்கே வருடும் காற்றிலோ கரைந்து உருகுகிறது...

நீ என்னை நினைப்பாயா என்று நான் மலினமாக தற்போது மட்டும் அல்ல எப்போதும் நினைக்க மாட்டேன்... அது ஒரு ஆழ்ந்த புரிதல்... இங்கே நான் நினைக்கும் வேளையில் அதோ அந்த அலைகள் வேகமாக வந்து என் கால்களை கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்லி மௌனமாக நமது காதலுக்கு அஞ்சலி செலுத்துகிறது...அதை பொறுத்தவரை நமது காதல் கல்லறை காதலாக நினைத்து விட்டது போலும்...

இப்படி உன் நினைவுகளை நான் அசைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் தலையை உயர்த்தி மேலே பார்த்தேன்... அந்த நீல வானமும் நீ என்ன அலை கடற்கரை மணல் மட்டும் தான் உன் காதலை கொண்டாடுகிறது என்று நினைத்தாயா... இங்கே நீங்கள் அறியாமல் நானும் தான் ரசித்துக் கொண்டு இருந்தேன் என்றது மெல்லிய குரலில்...

நான் அதை பார்த்து என் கண்களில் வழியும் கண்ணீரோடு கை கூப்பி கும்பிட்ட போது என்னை கடந்து சென்ற ஒரு காதல் ஜோடி என்னை பார்த்து வேடிக்கை மனிதன் போல என்று கேலி செய்து சிரித்தார்கள்... அவர்கள் உண்மையில் பெரும் காதலின் உணர்வை உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை... ஏனெனில் இங்கே அபூர்வ காதலின் அடையாளங்கள் எல்லாம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை... அப்படியே கிடைத்தாலும் அதன் அருமை புரியாமல் அந்த காதல் ஜோடியில் யாரோவர் குப்பையில் தூக்கி வீசி எறிந்து விட்டு நடைமுறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு கடனே என்று சம்சாரியாக வாழ்ந்து விட்டு காணாமல் போனவர்கள்... ஆனால் இங்கே என் உயிர் காதலியே நீயும் அப்படி இல்லை நானும் அப்படி இல்லை...நீ இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் என்னோடு பயணித்த நினைவை அசை போட்டுக் கொண்டு இருப்பாய் அங்கே உள்ள கடற்கரையில்... ஏனெனில் நீ உன் சூழலை பகிர்ந்த போது என் வாழ்வின் மொத்தமும் நீதான்... சராசரி வாழ்வில் வேறொருவரோடு பந்தம் இல்லை என்றாய்... ஆனால் என் பெற்றோருக்கு மதிப்பளித்து உன்னோடும் இணைந்து வாழ்வை தொடங்க முடியாது என்றாய்...

அந்த பேச்சை நீ முடிக்க முடியாமல் திணறி கண்களில் தாரை தாரையாய் வழிந்த கண்ணீரோடு இதே கடற்கரையில் விடை பெற்று அயல் தேசத்திற்கு சென்று பணி செய்து வாழ முடிவெடுத்து விட்டதாக சொன்ன போது நான் அதை மறுத்து பேசக் கூட வாய்ப்பு அளிக்காமல் என் கைகளில் இறுக பிடித்துக் கொண்டு உன் பெரும் காதலின் அடையாளமாக ஒரேயொரு முத்தத்தை அழுத்தமாக பதித்து வேகமாக சென்றாய்... பதில் பரிசு எதையும் எதிர்பாராமல்...

இதை எப்படி ஒரு அல்ப காதலாக நினைக்க முடியும்... அந்த கண்ணீரின் அடையாளத்தை அப்போது உன் காலை இறுதியாக முத்தமிட போகிறோம் என்று தெரியாமல் வந்த அலையில் கலந்தது... இதற்கு சாட்சி அந்த நீல வானம் தானே என்று இப்போது தான் புரிகிறது...

இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பெரும் காதலின் அடையாளமாக இந்த கடற்கரையில் 

அந்த பறவைகளோடு பறவைகளாக திரிந்து கிடப்போம் என் பெரும் காதலின் அடையாளமான உயிரே....என்று நான் பெரும் மூச்சோடு கடற்கரையின் மணலில் இருந்து விடைபெறும் போது இருள் நெருங்கி போய் வா என் அருமை புதல்வனே என்று காதோடு கிசுகிசுத்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/09/25/வெள்ளிக்கிழமை.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

அந்த மலையின் உச்சியில் இருந்து பார்க்கிறேன்...


அந்த மலையின் உச்சியில் 

இருந்து பார்க்கிறேன் 

நான் வாழ்ந்து வரும் 

பூமியின் இருப்பிடத்தை...

அங்கே நெடிதுயர்ந்து வளர்ந்த 

கட்டிடங்கள் எல்லாம் 

சிறு அட்டை பெட்டி போல 

காட்சியளிக்கிறது 

என் பார்வைக்கு...

அங்கே போய் வரும் மக்கள் 

எல்லோரும் சிறுசிறு பூச்சிகள் 

இங்கும் அங்கும் நகர்வது போல் 

என் கண்ணுக்கு விருந்தளிக்கிறது...

ஒரு கணப் பொழுதில் 

இங்கே எல்லாம் மாறி விட்டதா என்று 

புன் முறுவலோடு 

யோசித்துக்கொண்டே 

அங்கே நிகழும் 

அத்தனை காட்சிகளையும் வேடிக்கை 

பார்க்கிறேன்...

இங்கே நான் மட்டும் என்ன 

அங்கே போவோர் வருவோர் 

சிறிது உற்று நோக்கினால் 

நானும் ஒரு சிறு புள்ளி தானே..

இங்கே காட்சிபிழையில் தான் 

இந்த உலகம் சுழலுகிறது

அதற்குள் எத்தனை எத்தனை மாயைகள் என்னை நிதானமாக 

மென்று தின்று தீர்க்க அலைகிறது என்று 

யோசித்துக் கொண்டு 

இருக்கும் போதே என் அருகில் 

மிகவும் நிதானமாக 

ஒரு பட்டாம்பூச்சி 🦋 

தன் சிறகால் உரசி 

தன் மெல்லிய மொழியில் 

ஆமோதித்து சென்றதை 

நானும் அந்த 

நுண்ணிய காலமும் 

இந்த பிரபஞ்சத்தின் 

சூட்சம விதியும் மட்டுமே உணர்ந்து 

புன்னகையுடன் கை 

குலுக்குகிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/09/25/திங்கட்கிழமை.



அந்த பெருநகரத்தின் அகோர பசி...


அந்த பெருநகர வீதியில் 

மூச்சு திணற பிரயாணம் 

செய்கிறேன்...

என் மொத்த சக்தியையும் 

அந்த பெருநகரம்

ஒரு மோசமான அரக்கன் 

இரத்தத்தை ரசித்து உறிஞ்சி 

குடிப்பதை போல 

தனிப்பட்ட ரசனையோடு 

நின்று நிதானமாக உறிஞ்சி 

குடிக்கிறது என் உடலை 

கிழித்து ரத்தத்தை ...

இங்கே பெரும்பாலானவர்கள் கதியும் 

அதேதான் என்றாலும் 

நான் மட்டும் அதனிடம் 

கெஞ்சி மன்றாடுகிறேன்

என்னை மட்டும் விட்டு விடு என்று 

என் கண்களில் வழியும் 

கண்ணீரோடு...

அந்த பெருநகரமோ 

நீ உன் இச்சையின் படி தானே 

எனக்கு பலியாகிறாய் 

பிறகேன் இவ்வளவு கதறல் என்று கேட்டது...

நானோ தேன் கூட்டில் உள்ள தேனின் ருசியை உணர 

உன்னை தேடி வந்தேன்...

இங்கே தேன் ஒரு துளியும் இல்லாத 

வெறும் வறண்ட தேன் கூடு 

தான் இருக்கும் என்று 

இங்கே வந்தவர்கள் சொல்லவில்லை என்றேன் 

குரலில் அழுகை தோய்ந்து...

அந்த பெருநகரமோ 

என்ன நினைத்ததோ

என் வர்ணனையை கேட்டு 

பெரும் சத்தத்துடன் என்னை 

பலம் கொண்ட மட்டும் 

தூக்கி எறிந்தது

நானோ அந்த பெருநகரத்தின் 

எல்லையில் வீழ்ந்தேன்...

வீழ்ந்த கணத்தில் என் உடலில் 

அங்கங்கே வழியும் ரத்தத்தையும் 

துடைக்கவும் தோன்றாமல் 

எழுந்து வேகமாக 

அந்த சாலையில் ஓடுகிறேன்...

என் நிலையின் பரிதாபத்தை பார்த்து 

அங்கே காலம் 

கண் கலங்கியது...

பாவம் 

அதை தவிர அதனால் வேறு 

என்ன செய்ய இயலும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


கிரகண கவிதை


தனக்கென்று இருக்கும் 

பூரணத்துவத்தை தனித்துவத்தை 

இழந்துக் கொண்டு இருக்கும் 

துக்ககரமான நிலையில் 

அந்த சபையில் பாஞ்சாலியின் 

துகில் உரிப்பை வேடிக்கை பார்த்ததை போல ஒரு கூட்டம் 

இங்கே வெட்டவெளியில் வேடிக்கை பார்க்கிறது...

அந்த நிலவோ தன் கௌரவத்திற்காக அந்த பெரும் மேகக் கூட்டத்திடம் 

போராடும் போது 

எங்கிருந்தோ வந்த காற்று 

இன்னும் சிறு சிறு மேகக் கூட்ட படைகளை சேர்த்து 

பெரும் மழை பொழிவித்து 

அந்த நிலவின் கௌரவத்தை 

காப்பாற்றியதில் 

நான் பெரும் மூச்சோடு 

நிம்மதியடைந்து 

கண்ணீர் மல்க சூட்சமமாக 

வருணனுக்கு நன்றி சொல்கிறேன்...

அங்கே பலபேர் அதே வருணனை 

இப்படி காரியத்தை 

கெடுத்து விட்டாயே என்று 

வசை பாடி செல்கிறார்கள் 

பலர்...

இங்கே ஒரு கிரகணம் 

சாகடிக்கப்பட்டது...

பாரத போரில் இறந்த 

துச்சாதன் போல...

கிரகண கவிதை..

இளையவேணி கிருஷ்ணா 

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

சில வயதிற்கு பிறகு வாழ்க்கை ஒரு வேடிக்கை..

 


சில வயதுக்கு பிறகு

வாழ்க்கை ஒரு வேடிக்கை!

தனிமையில்

பழைய நினைவுகள்

நிழலாக தொடர அதன் அடியில் வலுக்கட்டாயமாக

இளைப்பாறுகிறேன்!

சன்னல் வழியே பார்வை

செலுத்தும் போது

அங்கங்கே சீறி பாயும் வாகனங்களை வறட்சியான

சிரிப்போடு வேடிக்கை பார்க்கிறேன்!

நானும் அந்த சாலையில்

இப்படி தான் ஒரு நாள்

பரபரப்பாக அந்த சாலையில்

ஓடி இருக்கிறேன்...

மனதில் ஆயிரம் ஆயிரம் கோபத்தையும் சஞ்சலத்தையும்

சுமந்துக் கொண்டு...

சற்றே திரும்பி பார்க்கும் போது எனது ஓட்டம் எல்லாம் 

வெற்று ஆராவாரமாகவே

எனக்கு தோன்றுகிறது!

தற்போது நினைத்து பார்க்கிறேன்...

இன்னும் கொஞ்சம் ஆசுவாசமாக ரசித்து வாழ்ந்து இருக்கலாமோ என்று...

நான் அமர்ந்து இருக்கும் நாற்காலியும் எனக்கு காட்சிக்கு வழி விட்ட

இந்த சன்னலும்

என்னை பார்த்து புன்னகைக்கிறது...

நீ அன்றொரு நாள் ஓடிய போதும் நாங்கள் இங்கே தான் இருந்தோம் என்று...

வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான நகர்வு என்பதை நாள் கடந்து உணர்கிறேன் என்றாலும்

இதோ எனக்காக பொறுமையாக காத்திருந்த இந்த நாற்காலிக்கும்

அந்த சன்னலுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்வதில் தான் இப்போது

எனது மனம் ஆனந்த கூத்தாடுகிறது...

வயதின் நகர்வில் தொலைந்து விட்ட

என் வாழ்க்கை பயணத்தை

மீதி இருக்கும் காலத்தில் தொலைத்து விடாமல்

நொடிகள் தோறும் ஆனந்த ஸ்பரிசத்தை அனுபவித்து தொலைக்கிறேன்...

இப்போது என் மனம் ஆழ்ந்த அமைதியடைகிறது...

இழந்து விட்ட வாழ்வின் சுவாரஸ்யத்தை மீட்டு விட்ட மகிழ்வில்...

#வயதின்நகர்வில்...

#வாழ்வின்சுவை(6).

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் காலை 8:00மணி.

05/09/2023.

மீள் பதிவு.

வியாழன், 4 செப்டம்பர், 2025

கட்சி தப்பி பிழைக்குமா?



 #இன்றையதலையங்கம்:-

சரி ஏதோ தமாக உருவாவதை போல ஒரு கட்சி உருவாக போகிறதோ என்று திரு.செங்கோட்டையன் பேச்சை நேரம் ஒதுக்கி கேட்டால் கட்சியில் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற சாராம்சத்தோடு அந்த உரையை முடித்துக் கொண்டார்... இதற்கு பொதுவெளி தேவையில்லையே...இதை சொல்வதற்கு ஏதோ பெரிய எதிர்பார்ப்பை தொண்டர்களுக்கு கொடுத்து மனம் திறக்கிறேன் என்று ஆவலை தூண்டி அட இதற்கு தானா இந்த முன்னோட்டம் என்று சாதாரண மக்களை நினைக்க வைத்து விட்டது.. ஒரு கட்சியை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு தவறு என்று சொல்லவில்லை.. ஆனால் ஏதோ திட்டமிட்டு காய் நகர்த்துவது போல அல்லவா உள்ளது... நேற்று டிடிவி தினகரன் பிஜேபியில் இருந்து விலகுகிறார்.. இவர்கள் எல்லாம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை எப்படியாவது வழிக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை... ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலையில் இருந்து மாறாமல் இருந்தால் இவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைப்பார்களா என்று தெரியவில்லை... கடந்த தேர்தல் தோல்விகள் எல்லாம் கட்சி நிர்வாகிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பாட்டு தேர்தல் பணியாற்றி இருந்தால் இந்த நிலை வந்து இருக்காது...எவ்வளவோ எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துச் சொல்லியும் அவர்கள் தேர்தல் பணியாற்றவில்லை அல்லது தேர்தல் பணியாற்றும் வகையில் கட்சி நிர்வாகிகளை கவனிக்கவில்லை என்று தான் தோன்றுகிறது...எது எப்படியோ ஜெயலலிதா இருந்து இருந்தால் இப்படி கட்சி பணியாற்றாமல் இருந்து இருப்பார்களா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழாமல் இல்லை... எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி உணர்ச்சிவசப்பட்டு சமீபமாக பேசி விடுவதையும் நாம் இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.. மொத்தத்தில் ஒரு கட்சி தலைமைக்கு அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்தும் சக்தி கட்சி நிர்வாகிகளை தொண்டர்களை தட்டிக் கொடுத்து அவர்களை நல்ல முறையில் பண்டிகை காலங்களில் பணம் சார்ந்த பலன் கொடுத்து உள்ளூரில் தவிர்க்க முடியாத கட்சி பணியாற்றும் தொண்டர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களின் மனம் நோகாமல் கவனித்து அவர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் பணியை விரைவாக இப்போதிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும் கட்சி தலைமை...அதை விளையாட்டு ஒன் மேன் ஆர்மியாக தான் நான் வலம் வருவேன் நான் எவர் சொல்வதையும் காதில் வாங்க மாட்டேன் என்று இருந்தால் அது தொண்டர்களுக்கு ஒரு வித சலிப்பையும் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவற விடுவதிலும் போய் முடியும்... இனியும் தாமதிக்காமல் கட்சி யோசிக்குமா இப்போது மூத்த தலைவர் செங்கோட்டையன் வேண்டுக்கோளை கட்சி எப்படி அணுகுகிறது என்பதற்கான பதில் இன்று மாலையோ அல்லது நாளையோகட்சி தலைமையிடமிருந்து கிடைத்து விடும் என்று அரசியல் விமர்சகர்கள் காத்திருக்கிறார்கள்... பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

05/09/25/வெள்ளிக்கிழமை.

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை...

அர்த்தங்களற்று பிடிபடாமல் திரிகிறது வாழ்க்கை... அதன் ருசிக்கொரு எல்லை இங்கே எவரும் அப்படி வகுத்து விட  முடியாது... இங்கே எந்த ருசியும் தேவைய...