ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2025

அந்த ஏதோவொரு தேடலில் தான் நான் தொலைந்து போய் இருக்க வேண்டும்...


அந்த ஏதோவொரு 

தேடலில் தான் 

நான் தொலைந்து 

போய் இருக்க வேண்டும்...

ஒரு முறை அந்த வழியில் 

சென்றதற்காக இவ்வளவு 

பெரிய தண்டனை வேண்டாம் என்று 

என்னை நேசித்தவர்கள் 

அங்கே கதறிக் கொண்டு 

தன் நிலை மறந்து 

கணத்த இதயத்தோடு 

என் நிலைமையை 

நினைந்து நினைந்து 

உருகுகிறார்கள் வெகுநாட்களாக...

நானோ அங்கே யாரோ 

ஒருவரால் வீசப்பட்ட 

அழுதுக் கிடக்கும் சிறு குழந்தை 

பொம்மையின் நிலையை நினைத்து 

அதனை சமாதானப்படுத்த 

அதை எங்கெங்கோ வேடிக்கை காட்டி 

பரந்த பிரபஞ்சத்தில் ஓடிகளைப்பதை 

பார்த்து காலம் 

என் கால்களை கட்டிக் கொண்டு 

பாசமழையை பொழிந்து 

அணைத்துக் கொண்டு 

பரிதவிக்கிறது...

இங்கே புரிதலின் 

பல்வேறு நுணுக்கங்களின் 

அதிசயத்தை கண்டு 

சில நிமிடங்களில் சுதாரித்து 

மீண்டும் தொலைந்து போகிறேன்...

அதோ அங்கே ஏதோவொரு தேடலில் 

மீண்டும் நான்...

என்னை தேடுபவர்கள் 

என்னை தேடுவதை 

விட்டு விட்டு அதோ அங்கே நடக்கும் 

தெருக் கூத்தில் 

தன் மனதை பறிக் கொடுத்து விட்டு நாளைய பணி நாளுக்கான 

ஓய்வை தேடி 

அந்த இரவில் தொலைந்து 

போகிறார்கள்...

இங்கே நிலையாமையின் 

நிழல் மட்டுமே அழியாத 

கோடாக தொடரும் என்பது 

இந்த பிரபஞ்சத்தின் விதி என்று 

அங்கே காலம் முணுமுணுப்பதை 

யாரும் கேட்க நாதிகளற்று 

காற்றில் கரைகிறது அதன் மொழி...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 27/04/25/ஞாயிற்றுக்கிழமை.

அந்தி மயங்கி இரவு தொடரும் வேளையில்..

இந்த பிரபஞ்சத்தின் பிறழாத சுழலில் எங்கோவொரு புள்ளியாக நான்...


இந்த பிரபஞ்சத்தின் 

வரைமுறைகள் எது 

என்று 

சரியாக புலப்படவில்லை எனக்கு...

ஏதோவொரு விதியின் 

வரைமுறையில் தான் 

இந்த பிரபஞ்சத்தின் 

பிறழாத சுழல்தல் நிகழ்கிறது 

என்பது மட்டும் எனக்கு 

நன்றாக தெரியும்...

அந்த பிறழாத சுழல்தலில் 

எங்கோ ஒரு புள்ளியாக நான் 

நின்றுக் கொண்டு இருக்கிறேன்...

நான் எந்த அசைவும் இல்லாமல் 

வெறுமனே 

நின்றுக் கொண்டு 

என் பிறவி வேரை அறுத்து 

விடை பெற்று பறந்து 

செல்லும் போது 

கீழே உள்ள பல சம்சாரிகள் 

என் இறகின் நிழல் ஏதோவொரு வகையில் பட்டு விடாதா என்று 

ஏங்கி என் பின்னால் ஓடி வருகிறார்கள்...

நான் அவர்களுக்காக 

என்னில் இருந்து 

வெகு பிரயணத்தோடு 

ஒரு சிறு இறகை உதிர்க்கிறேன்...

அதை பிடிக்க ஆயிரம் ஆயிரம் பேர் 

ஓடோடி வருகிறார்கள்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:-27/04/25/சனிக்கிழமை.

சனி, 19 ஏப்ரல், 2025

அந்த வெறுமையோடு கூடிய பயணத்தில் ஒரு துணையாக...


அந்த வெறுமையோடு கூடிய 

பயணத்தை 

நான் பயணித்துக் கொண்டு 

இருக்கிறேன்...

ஒரு ஆழ்ந்த அமைதியும் என்னோடு 

சத்தம் இல்லாமல் பயணிக்கிறது...

நான் அந்த ஆழ்ந்த அமைதியிடம் 

சற்றே 

என்னை தனியாக பயணிக்க விடு 

என்கிறேன்...

நானும் உன்னை போல 

அந்த வெறுமையை நேசிக்கும் பயணி தான்...

ஒரு துணையும் இல்லாமல் பயணிக்கும் உனக்கு ஒரு துணையாக உன்னோடு 

நான் பயணிக்கக் கூடாதா 

என்றது சற்றே 

முகத்தை சோகமான 

பாவனையில் வைத்து...

நான் கொஞ்சம் தடுமாறி 

பின்னர் தலையசைத்து 

அதனோடு கொண்ட பற்றை 

வேகமாக அழித்து விட்டு  

விறுவிறுப்பாக நடக்கிறேன்...

இதை வேடிக்கை பார்த்து கொண்டு 

இருந்த காலமோ 

சற்றே எனது சிறுபிள்ளைத்தனமான 

பிடிவாதத்தை ரசித்து 

சிரித்து எங்களை நிழலாக 

தொடர்வதை நாங்கள் அறியாமல் 

பயணிக்கிறோம் 

அந்த வெட்டவெளியில்...

#நானும்வெறுமையும்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/05/25/சனிக்கிழமை.

இந்த அந்தி சாயும் நேரத்தில்...


இந்த அந்தி சாயும் நேரத்தில் நான் 

ஏதேதோ வழக்கமான 

நிகழ்வை பூரணமாக 

முடித்து விட்டு காத்திருக்கும் போதும் 

ஏதோ ஒன்று எனை 

குறையாக நினைக்க வைத்து 

என்னை தடுமாற 

செய்தது...

அது என்ன என்று யோசித்து 

யோசித்து களைத்து விட்டபோது 

எங்கிருந்தோ சன்னல் வழியாக வந்த 

அந்த காற்று என் மேசை மீது இருந்த 

அந்த வெற்று காகிதத்தை 

என் காலை 

உரசி போட்டு விட்டு போனது...

இதோ அந்த வெற்றுத் தாள் மீது 

எனது தீவிரமான கிறுக்கல்கள் 

தொடங்கி விட்டது...

இப்போது நான் விடுதலையாகிறேன் 

ஏதோ ஒன்றாக இருந்து என்னை 

இதுவரை இம்சையடைய செய்த 

அந்த குறைப்படுதலில் இருந்து...

மெல்ல மெல்ல...

#அந்தஏதோவொரு #குறைப்படுதலிலிருந்து

#விடுபடுகிறேன்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/04/25/சனிக்கிழமை.

நான் ஒரு வேடிக்கை மனுஷி என்று காலம் சொன்னது...


நான் வாழ்கிறேன் என்று அங்கே 

பலபேர் கூச்சலிட்டு 

ஆடி பாடி போகும் போது நான் 

அமைதியாக அந்த நிகழ்வை 

ரசித்து விட்டு 

நான் எனது பார்வையை 

திருப்புகிறேன்...

நீ அப்படி ஒன்றும் பெரிதாக 

வாழ்ந்து விடவில்லை என்று 

நினைத்து அந்த நிகழ்வில் இருந்து 

விடுபட்டு கொண்டாயோ என்று 

காலம் என்னை கேலி செய்தபோது 

நான் புன்வறுவலோடு 

நீ சொல்வது ஒரு வகையில் 

சரி தான் காலமே...

நான் எனக்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் 

சிறிதும் மிச்சமில்லாமல் 

ரசித்து விடுவதை தவிர 

வேறொன்றும் செய்வதில்லை 

என்றேன் 

மிகவும் நிதானமாக...

காலமோ நீ எப்போதும் 

வேடிக்கை மனுஷி தான் என்று இரு பொருள் பட 

பேசி விட்டு கலகலவென்று 

சிரித்து கொண்டே நகர்ந்தது...

#நான்வேடிக்கைமனுஷி 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:19/04/25/சனிக்கிழமை.

அந்த முகவரியற்றவர்களும் பெரும் மகிழ்வும்...


அந்த மழைக் கால நேரமொன்றில் 

சில பறவைகளின் கீச் கீச் ஒலியோடு 

ஒரு அற்புதமான நிகழ்வொன்று 

அங்கே நடக்கிறது...

அந்த நிகழ்வை என்னை மறந்து 

ரசித்துக் கொண்டு 

இருக்கும் போது தான் 

யாரோ முகவரியற்ற ஒரு மனிதர் 

என் கையில் 

ஒரு தேநீர் கோப்பையை 

திணித்து விட்டு 

நிதானமாக அந்த மழையில் 

நனைந்து ரசித்து 

விடை பெறுகிறார்...

நான் அவரை கூவி 

அழைத்துச் சொல்கிறேன்...

நானும் கூட இந்த பிரபஞ்சத்தில் 

ஒரு முகவரியற்ற மனுஷி தான் 

என்று...

என் பதிலை சற்றே திரும்பி 

உள் வாங்கி கொண்டு 

புன்னகைத்து கையசைத்து 

செல்கிறார் அவர்...

அங்கே சிலர் தனக்கொரு 

முகவரி இல்லை என்று 

கூக்குரலிட்டு அழுவதை விட்டு விட்டு 

எங்கள் குரல் வந்த திசையை நோக்கி 

ஓடி வருகிறார்கள்...

தன் கண்களில் ஒளி மின்ன...

அந்த மழையின் நனைதலில் தான் 

இங்கே எத்தனை புரிதலை 

கொண்டு வந்து சேர்த்து விடுகிறது 

என்று 

நான் பெரும் காதலோடு கை 

நீட்டினேன்...

அங்கே ஓடோடி வந்து 

என் கைகளில் அடைக்கலம் 

ஆனது அவர்கள் மட்டும் அல்ல அந்த காலமும் தான்...

#முகவரியற்றவர்கள்..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 19/04/25/சனிக்கிழமை.

திங்கள், 14 ஏப்ரல், 2025

சங்க இலக்கியம்//நற்றிணை பாடல் (5)

 


நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் 

கால்யாப்ப,

குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,

பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி 

தெற்கு ஏர்பு இரங்கும் 

அற்சிரக் காலையும்,

அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்

இளையர்த் தரூஉம் வாடையொடு

மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.


தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

பாடல் எழுதியவர்:- பெருங்குன்றூர்கிழார். பாடல்https://youtu.be/6Md4pYjOjCY?si=yinS39I189kLUA8o

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

எனக்கென்று சிருஷ்டிக்கப்பட்ட விஷேச உலகம்...


இங்கே குடும்பத்தோடு 

ஏதோவொரு நிகழ்வில் 

பிணைத்துக் கொண்டு 

கொண்டாடும் சம்சாரிகளின்

ஒரு உலகம்...

அங்கே ஐபிஎல் ரசிப்பதை தவிர 

இங்கே வேறு ஒரு நிகழ்வும் 

பெரிதாக இல்லை என்று 

சிலாகித்து எழும் இளைஞர்கள் 

கூட்டத்தின் ஒரு உலகம்...

கடற்கரை மணற்வெளியில் 

தனக்கு பிடித்த வீடொன்றை 

கட்டி விட்டு அந்த வீட்டின் அருகே 

ஏதோவொரு மரத்தின் 

உடைந்த கிளையை 

மரமாக பாவித்து நட்டு 

வைத்து விட்டு தனக்கு பிடித்த 

ஒரு சிருஷ்டியை உருவாக்கி விட்ட 

பெருமிதத்தில் கை கொட்டி 

குதித்து அந்த அலையில் 

கால் நனைத்து 

தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி

குதூகலித்து கொண்டாடும் 

அந்த சிறுமியின் உலகம்...

இப்படி ஆயிரம் ஆயிரம் உலகங்கள் 

நொடிதோறும் சிருஷ்டிக்கப்பட்டு 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லப்படுவதை

பிரமிப்போடு வேடிக்கை மட்டுமே 

பார்த்து விட்டு 

என்னால் சிருஷ்டிக்கப்பட்ட 

அந்த அதி அற்புதமான 

விசேஷமான உலகத்தை 

காலத்தின் பார்வைக்கு 

எடுத்துச் செல்லாமல் 

பெரும் பிரயனத்தோடு 

மறைத்து வைக்கிறேன் நான்...

இங்கே எனது உலகத்தின் 

விசேட பார்வை ஒன்று 

அந்த காலத்தால் 

சிருஷ்டிக்கப்பட்டு 

களவாடப்படும் வரை 

அதை தினமும் 

நினைத்த போதெல்லாம் 

எடுத்து ரசித்து 

அதை என் சட்டை பைக்குள் 

பெருமிதத்தோடு 

சொருகி கொண்டு பயணிக்கும்

வாழ்க்கை பயணியாக ...

இல்லை இல்லை 

விசேஷ வாழ்க்கை பயணியாக

அந்த காலத்தின் சாலையில் 

இந்த பிரபஞ்சத்தின் வாசத்தை 

உணர்ந்து மெது மெதுவாக 

பயணிக்கிறேன் நான்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:14/04/25/திங்கட்கிழமை.




சனி, 12 ஏப்ரல், 2025

வாழ்வின் பேராசை பசியில் சிக்காமல் பயணிக்கும் பயணி நான்...


ஒரு அற்புதமான விடியல் எப்போதும் 

சில பறவைகளின் 

மெல்லிய சத்தத்துடன் தான் 

துவங்குகிறது...

இலேசான குளிர் காற்றில் 

முழு வாழ்வின் பேரானந்த 

சுவையையும் 

இங்கே நாம் உணர்ந்து விடும் 

தருணத்தில் தான் 

ஜென் நிலைக்கு நம்மையும் 

அறியாமல் கடத்தப்படுகிறோம்...

அதோ அங்கே கத்திக் கொண்டே 

பறக்கும் பறவையின் 

இறகின் நிழலில் நான் இளைப்பாற 

முடிகிறது ஏதோரு தொந்தரவும் 

இல்லாமல் 

இங்கே...

வாழ்வின் பேராசை பசியின் 

அகப்படாமல் பயணிக்கும் நான் 

எப்போதும் என்னை...

என்னை சுற்றி நடக்கும் 

இயற்கையின் 

அசைவை அசைப்போட்டு 

பயணிக்கும் விஷேச பயணி நான்...

காலை கவிதை 🎉.

நாள் 13/04/25/ஞாயிற்றுக்கிழமை.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 7 ஏப்ரல், 2025

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம்...


காற்றில் தன் தேகத்திற்கு 

எந்த பிடிமானமும் கிடைக்காதா 

என்று 

தேடி அலைகிறது 

அந்த சிறிய கொடி...

வெகுநேரம் அந்த கொடியின் 

தேடலில் 

புரிந்துக் கொண்டது 

ஒன்றேயொன்று தான்...

அந்த காற்றின் சூட்சம தழுவலே 

தனக்கான பிடிமானம் என்று...

வாழ்வின் சூட்சுமங்கள் எல்லாம் 

கட்புலனாகாத

அந்த காற்றில் 

ஒளிந்துக் கொண்டு 

நமக்கு காட்டும் 

வேடிக்கையை இங்கே 

யார் அறியக் கூடும்??

#இளையவேணிகிருஷ்ணா.

#காலைகவிதை.

நேரம்:பகலவனின் உதய வேளையில்...

வாழ்க்கை ஒரு சமன்பாடு தான் -சூபிஞானி கதை 🎉🦋

  வணக்கம் நேயர்களே 🎻🙏  இன்றைய சிறுகதை உலகம் நிகழ்ச்சியில் சூபி ஞானி கதை கீழேயுள்ள லிங்கில் கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிட...