அந்த மழைக் கால நேரமொன்றில்
சில பறவைகளின் கீச் கீச் ஒலியோடு
ஒரு அற்புதமான நிகழ்வொன்று
அங்கே நடக்கிறது...
அந்த நிகழ்வை என்னை மறந்து
ரசித்துக் கொண்டு
இருக்கும் போது தான்
யாரோ முகவரியற்ற ஒரு மனிதர்
என் கையில்
ஒரு தேநீர் கோப்பையை
திணித்து விட்டு
நிதானமாக அந்த மழையில்
நனைந்து ரசித்து
விடை பெறுகிறார்...
நான் அவரை கூவி
அழைத்துச் சொல்கிறேன்...
நானும் கூட இந்த பிரபஞ்சத்தில்
ஒரு முகவரியற்ற மனுஷி தான்
என்று...
என் பதிலை சற்றே திரும்பி
உள் வாங்கி கொண்டு
புன்னகைத்து கையசைத்து
செல்கிறார் அவர்...
அங்கே சிலர் தனக்கொரு
முகவரி இல்லை என்று
கூக்குரலிட்டு அழுவதை விட்டு விட்டு
எங்கள் குரல் வந்த திசையை நோக்கி
ஓடி வருகிறார்கள்...
தன் கண்களில் ஒளி மின்ன...
அந்த மழையின் நனைதலில் தான்
இங்கே எத்தனை புரிதலை
கொண்டு வந்து சேர்த்து விடுகிறது
என்று
நான் பெரும் காதலோடு கை
நீட்டினேன்...
அங்கே ஓடோடி வந்து
என் கைகளில் அடைக்கலம்
ஆனது அவர்கள் மட்டும் அல்ல அந்த காலமும் தான்...
#முகவரியற்றவர்கள்..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 19/04/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக