சுமைப் பொதிகளாக
ஆயிரம் ஆயிரம் பந்தங்களை
சுமந்து திரிகிறேன்
இந்த பிரபஞ்சத்தின் காலவெளிதனிலே...
என்றோ என்னை அழைக்கும் காலனுக்கு நான் எளிதாக
பணிந்து விட முடியாமல்
திமிறிக் கொண்டு
அழைக்கிறேன்...
நான் சேர்த்து வைத்த பந்தங்களின்
செவிகளோ செவிடாக
சுயமற்று பயணித்து
என்னை ஒரு சவமாக
கடந்து செல்கிறது...
நான் அந்த எமனின் வாயெனும்
குகையில் கொஞ்சம் கொஞ்சமாக
உள்ளே செல்கிற போது
என்னில் இருந்து வழிந்த
அந்த இரத்தத்தின் சிறுதுளியின்
நாற்றத்தை பொறுக்க முடியாமல்
வேகமாக ஓட்டமெடுத்து
ஓடுகிறது அந்த பந்தமெனும்
பெரும் கூட்டம்...
இது வரை என் கதறலுக்கு
செவிடாக நடித்த கூட்டம்
என்னில் இருந்து பயணித்த
இரத்தத்தின் நாற்றத்தில்
உயிர்ப்பித்து ஓடுகிறதே என்று
நான் சூட்சம உடலில்
கவனிக்க தொடங்கிய போது
என்னோடு காலம் காலமாக
பயணித்து வந்த அந்த பந்தத்தின்
நாற்றத்தை உதிரமாக வெளியேற்றி
என்னை இலேசாக்கி அந்த பிரமாண்டமான சூட்சம உலகில் சுகமாக மிதந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து
காலமும் கொஞ்சம் கரைந்து தான் போகிறது...
#இப்படிக்கு காற்றை நேசிப்பவள் ❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/06/25/சனிக்கிழமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக