எந்த நோக்குமுமின்றி
இயல்பாக
கடந்து செல்லும் போது ரசிக்கப்படும்
நிகழ்வுகளில் படர்ந்து இருக்கிறது
ஒரு துளி
வாழ்வின் ரசனை...
பெரும் சமுத்திரத்தின்
துயரத்தின் இடையே
இது என்ன மாயம்
செய்து விடப் போகிறது என்று
கேட்பவர்களுக்கு மத்தியில்
நான் அவர்களின்
விட்டேத்தியான பேச்சை
அங்கே தவழ்ந்து வரும்
காற்றில் புதைத்து விட்டு
அந்த ரசனையின் ஆழமான
மௌனம் சூழ்ந்த மொழிகளை
கூர்ந்து கேட்கிறேன்...
அது ஏதோவொரு மாய இசையை
இசைத்து
என் செவிகளுக்குள் இயல்பாக
புகுத்தி
சிறு குழந்தை போல
துள்ளி நகைக்கிறது...
நானும் அதன் நகைப்பில்
இயல்பாக கலக்கிறேன்...
இங்கே
பெரும் பிரபஞ்சத்தின்
மாய வித்தையின் மெல்லிய
நுணுக்கங்களை யார் அறியக் கூடும்
என்னை போன்ற
வாழ்வின் ரசனையின் மீது
பெரும் கிறுக்கு பிடித்தவர்களை
தவிர!
#இப்படிக்குகாற்றைநேசிப்பவள்❤️.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:30/06/25/திங்கட்கிழமை.
அந்தி மயங்கும் வேளை தாண்டிய மெல்லிய இரவில் எழுதியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக