அந்த சதுரங்க ஆட்டத்தில்
ஆடவே தெரியாத என்னை
வலுக்கட்டாயமாக
யாரொவரால்
நிறுத்தி வைக்கப்பட்டு
தோல்வியடைந்து
தலை சாய்ந்து கிடப்பதை
ஜீரணிக்க முடியாத
காலமோ
என்னை இழுத்து அணைத்து
அங்கிருந்து தூக்கி செல்கிறது...
இங்கே எல்லாம் தெரிந்து தான்
வாழ வேண்டும் என்று
பிரபஞ்சம் எழுதாத விதியை
அங்கே யாரொருவர்
யாருக்கும் தெரியாமல்
ஒரு கடினமான திரையால்
அதை மறைத்து பலபேரை
இந்த சதுரங்க ஆட்டத்தில்
காவு வாங்க உதவுகிறார்கள்...
அந்த வழியே என்னை
இழுத்து வந்த காலமோ
அந்த மறைத்த விதியை
கவனித்து
ஒரு பெரும் புயலை வரவழைத்து
அந்த திரையை கிழித்து
எங்கோ சென்று போட்டு விட
தற்போது பல பேரும்
நிம்மதியாக இந்த பிரபஞ்சத்தில்
பயணிக்கிறார்கள்...
நான் தற்போது சற்றே
கண் விழித்து பார்க்கிறேன்...
அருகில் இருந்த காலமோ
இங்கே நிம்மதியாக
சுவாசிப்பது முக்கியமா
சமூகத்தின் துரத்துதலுக்கு
அடிபணிதல் முக்கியமா என்று
காலம் என்னை பார்த்து
கேள்வி கேட்கிறது...
நானோ நிம்மதியாக சுவாசிப்பதே
முக்கியம் இங்கே என்று கூற
அது என் முதுகில் தடவிக் கொடுத்து
சில தின்பண்டங்கள்
பசிக்காக கொடுத்து
அந்த தென்றலை
வழி துணையாக அனுப்பி வைக்க
நான் சற்றே ஆறுதலாக
பயணத்தை தொடர்கிறேன்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:05/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக