ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 31 டிசம்பர், 2025

விடை பெற காத்திருக்கும் ஒரு வருடத்தின் பயணத்தில் நானும் எமது நிகழ்வும்...2025

 


#கடந்து செல்ல #காத்திருக்கும் இந்த ஆங்கில வருடத்தின் #பயணம் #2025:-

இந்த வருடத்தின் சாதனை கூகுள் எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது தான்... மற்ற படி இந்த வருடம் நான் வழக்கமாக கொடுத்து வந்த வானொலி ஒலிபரப்பு சேவை கடுமையான சூழல் (தந்தை தாய் உடல் நலன் காரணமாக)காரணமாக தொடர்ந்து கொடுக்க இயலவில்லை..

ஆனால் அதற்கு பதிலாக சிறுகதைகள் நிறைய எழுத ஆரம்பித்து இருக்கிறேன்...

கவிஞர்களை சிறப்பிக்கும் வகையில் அப்போதைக்கு அப்போது எமது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்தேன்..

கதைகள் மற்றும் சில நிகழ்வுகள் எமது சேனலில் வாசித்து இருக்கிறேன்...

மற்ற படி இந்த வருடம் எனது இயல்பான கலைப் பயணத்தை கொஞ்சம் பதம் பார்த்தது என்பது தான் உண்மை...

மற்ற படி நிறைய பயணங்கள் செய்தேன்...

இந்த டிசம்பர் மாதத்தில் பத்து பதினைந்து நாட்களுக்கு மேலாக அலைபேசி வேலை செய்யாமல் அதை அப்படியே விட்டு விலகி அந்த தருணத்தை ரசித்தேன்...

அதுவும் மிகவும் அற்புதமான தருணம் தான்...

எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு செய்து கொண்டு இருக்கும் போதே விலகி இருக்கவும் என்னால் முடியும் என்பதை நான் உணர்ந்த தருணம் என்று சொல்வேன்...

எது எப்படியோ மீண்டும் எமது ஒலிபரப்பு சேவையை நான் தொடங்கி பல புதிய கவிஞர்களை சிறப்பிக்க வேண்டும்...

மற்ற படி நான் நானாக இருப்பதில் எனக்கு எந்த இடையூறும் இல்லாமல் காலம் என்னை அற்புதமாக நகர்த்தி செல்கிறது கொஞ்சம் ரசனையோடே...🙌👣😉❤️.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/25.

இன்றைய தலையங்கம்//வெற்று ஆராவாரங்கள் இளைஞர்களின் உரிமையை மீட்டெடுக்குமா?


 #இன்றைய #தலையங்கம்:- இளைஞர்களை நல்வழியில் கொண்டு செல்லும் களத்தில் பொதுமக்கள்:-

மக்களாகிய நாங்கள் கேட்டு கொள்வதெல்லாம் இளைஞர்களை மோசமான போதை சீரழிவில் இருந்து காப்பாற்றுவது தான்...

தமிழகத்தின் தற்போதைய தேவை அது மட்டுமே...

தமிழக மக்கள் தற்போது இது பற்றிய சிந்தனையோடு தான் இருக்கிறார்கள் மதிப்பிற்குரிய #முதல்வர் அவர்களே...

ஒட்டுமொத்த இளைஞர்கள் சீரழிந்து விட்ட பிறகு இங்கே எந்த உரிமையை நீங்கள் மீட்க போராடுகிறீர்கள் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்...

தமிழ் நாட்டின் பராம்பரியம் கலாச்சாரம் எல்லாமே போய் விட்டது..

தற்போது அதை மீட்டெடுக்க போராடுங்கள்...

ஒரு நல்லாட்சி என்பது அனைத்தையும் (அதாவது மக்களின் நலன்களை) உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்...

வெற்று கூச்சல் கேட்டு கேட்டு நாங்கள் சலித்து விட்டோம் என்று சொல்வதை விட சோர்ந்து விட்டோம்...

நீங்கள் கல்விக்காக ஆசிரியர் ஊதியத்திற்காக மக்கள் வரிப்பணத்தை செலவு செய்வதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போகிறதே இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால்...

அதனால் எது எதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

எதுஎதை மிகவும் அமைதியாக அதே சமயத்தில் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும்...

வெறும் வார்த்தை ஜாலங்கள் தேவையில்லை...

திருத்தணியில் நடந்த சம்பவம் உங்கள் உடன்பிறப்புகளுக்கே நிச்சயமாக மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தான் உண்மை..

தேவை தற்போது அரசாங்கத்திற்கு சுய பரிசோதனை...

இந்த ஆண்டின் இறுதி பகுதியில் இப்படியொரு சம்பவம் நடந்து உங்களுக்கு கரும் புள்ளியை திடீரென வாங்கி கொடுத்து இருக்கிறது என்று நினைக்காதீர்கள்...

இது போதை வஸ்துக்கள் நெடுங்காலமாக சமூகத்தில் புரையோடியதன் விளைவுகள் தான் இப்படி பெரும் பூதமாக கிளம்பி இருக்கிறது...

இதற்கு முழு முதற் காரணம் போதை வஸ்துக்கள் மாநிலத்தில் எங்கேயும் உலவாமல் இருக்க தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் விட்டது தானே காரணம்...

தமிழ் நாட்டில் #இரவு #எட்டு மணிக்கு பிறகு பொதுமக்கள் சாலையில் போகவே அஞ்சுகிறார்கள்... அதுவும் #கிராமம் உட்பட..இது பற்றி நான் முன்பே ஒரு தலையங்கம் எழுதி இருக்கிறேன்...

இது பற்றி இனியேனும் அரசாங்கம் ஒரு நல்ல முடிவை எடுக்கட்டும்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:31/12/25.

செவ்வாய், 30 டிசம்பர், 2025

இன்றைய தலையங்கம்:சமுதாயத்தை கட்டமைப்பது யார் பொறுப்பு?


#இன்றையதலையங்கம் :-

#சமுதாயத்தை #கட்டமைப்பது #யார்?மிகவும் அருவருக்கத்தக்க சமுதாயத்தை உருவாக்குவதில் எப்போதும் நமது பங்கு உண்டு என்பதை மறவாதீர்கள்... கல்வி என்பதற்கு முன்னால் சுய ஒழுக்கம் முக்கியம் என்பதை மறந்து நெடுநாட்களாகிவிட்டது என்பதற்கு அடையாளமாக தான் திருத்தணி சம்பவம்...

கேரளா சினிமா பாருங்கள்... நமது சினிமாவையும் பாருங்கள்...

சமுதாய நிகழ்வை பெரும்பாலும் வெட்டு குத்து என்று வளர்த்தெடுத்த சினிமாவை கொஞ்சம் கூட கத்தரிக்காமல் அங்கீகாரம் கொடுத்தது யார் என்று யோசித்து பாருங்கள்..

இளைஞர்கள் முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எத்தனை சதவீத பெற்றோர்களுக்கு அக்கறை இருக்கிறது? எல்லாவற்றையும் பணத்தால் மதிப்பிட நாம் தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம்...

முதலில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுங்கள் என்று பெற்றோர்கள் பள்ளிகளில் போய் சொல்லி இருக்கிறார்களா?

இல்லை அவர்கள் தான் தமது பிள்ளைகளை கண்டித்து இருக்கிறார்களா..

இங்கே மிகவும் தரம் தாழ்ந்த சமுதாயத்தை கட்டமைத்து விட்டு அரசியல்வாதிகளையும் அனுமதித்து விட்டு மீண்டும் நாம் அதே சமுதாயத்தையும் நாமே பணத்தை வாங்கிக் கொண்டு கொஞ்சமும் பொறுப்பில்லாமல் அரசியல்வாதிகளையும் தேர்ந்தெடுத்து விட்டு அதை பார்த்து நாமே குறை கூறுவது நமது முகத்தில் நாமே உமிழ்ந்து கொண்டதற்கு நிகரானது...

இனியேனும் இளைய தலைமுறையினரை நாம் மோசமான பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க பெரும் பிரயத்தனங்கள் செய்வோம்...

அனைவரும் கூடி இளைய சமுதாயத்தை ஒழுக்க நெறியில் மீட்டெடுக்க நமது வீட்டில் இருந்து தொடங்குவோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:30/12/25.

#இன்றையதலையங்கம்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

நெடுஞ்சாலை வாழ்க்கை..


 விவேகா ஒரு அற்புதமான இளம் வயது பதினான்கு வருடம் நிறைந்த சிறுமி... பெற்றோர் இறந்த பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் சுற்றி திரிந்த அந்த சிறுமியை அந்த வயதான கிழவர் தான் பராமரித்தார்... அவரும் வீட்டினரால் கைவிடப்பட்ட வயது முதிர்ந்த குழந்தை...

அவர் அந்த நெடுஞ்சாலையில் சிறிய அளவில் கைத்தறி துண்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருபவர்..

ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு போதுமானதாக இருந்தது என்று சொல்லி விட முடியாது என்றாலும் அந்த நெடுஞ்சாலையில் விலையுயர்ந்த கார்களில் போவோர் எவராகிலும் இவரிடம் கைத்தறி துண்டு வாங்கிக் கொண்டு உணவு வாங்க காசும் கொடுத்து விட்டு போவார்கள்...அதை வைத்து தான் அவர் தினசரி வாழ்வும் சென்றது...

ஆனால் அவருக்கு துண்டு தினமும் விற்பனை செய்து தீர்ந்து விடும்.. ஏனெனில் அவரது சிரித்த முகமே அவருக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவ மனிதர்களை இறைவன் அனுப்பி வைத்தார் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்... ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்கிறார்களே அது இவருக்கு முற்றிலும் பொருந்துவதாக இருந்தது...

மேலும் அந்த விவேகாவின் முகமும் கள்ளம் கபடம் இல்லாமல் இருந்ததால் இருவருக்கும் பணத்தை கொடுத்து விட்டு போவார்கள் ஒரு சிலர்..

விவேகா தாத்தா இந்த பணத்தை கொடுத்து சாப்பிட என்ன உங்களுக்கு வாங்கி வரட்டும் என்று ஆவலாக கேட்பாள்..

இவரோ உனக்கு என்ன பிடிக்குதோ வாங்கி வா தாயி... என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..

அவளும் சரி தாத்தா என்று சொல்லி விட்டு சிட்டாக பறந்து அருகில் உள்ள சிறிய ஹோட்டலில் தோசை ஆளுக்கு மூன்று என்று கட்டிக் கொண்டு ஓடி வந்து வேகமாக பிரித்து சாப்பிடுங்கள் தாத்தா என்று சொல்லி விட்டு அவருக்கு டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைப்பாள்..

அவர் சாப்பிடுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கும் போது தாத்தா அவளை பார்த்து நீ சாப்பிடு தாயி.. உனக்கு பசிக்கல என்று கேட்பார் வாஞ்சையாக...

இல்லை தாத்தா.. நீங்கள் சாப்பிட்டவுடன் சாப்பிடுகிறேன் என்று சொல்லி கொண்டே உங்களுக்கு இன்னும் ஒரு தோசை வைக்கட்டுமா என்று தனது தோசை பார்சலை பிரிப்பாள்.. இல்லை தாயி.. இதுவே போதும்..நீ சாப்பிடு என்று சிரித்துக்கொண்டே சொல்வார்..

அந்த சிறுமியும் சிரித்துக்கொண்டே சரி சரி தாத்தா என்று தலையாட்டி விட்டு தனது பார்சலில் உள்ள தோசையை ஆவலாக சாப்பிடுவாள்...

இப்படி தான் அவர்கள் தினசரி பொழுதுகள் போனது... கைத்தறி துண்டுகளை நெடுஞ்சாலையில் போவோரிடம் விற்பனை செய்வதும் அந்த வருமானத்தை சேகரித்து ஒரு பக்கம் துண்டுகளை வாங்கி விற்பதும் மறு பக்கம் அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதுமாக இருந்தது...

துண்டு விற்பனை செய்வதற்கு இடையே இருவரும் பல கதைகளை பேசிக் கொண்டு இருப்பார்கள்..

அங்கே இருந்த பாலத்தின் அடியில் தான் இருவரும் உறங்குவார்கள்... தற்போதைய குளிர் காலத்தில் அவர்களுக்கு உதவியது அங்கே ஒரு நாள் எந்த புண்ணியவானோ கொடுத்த ஸ்வர்ட்டர்..

மீதம் உள்ள கைத்தறி துண்டுகள் அடங்கிய பையை தலைக்கு தலையணையாக வைத்துக் கொண்டு உறங்கி போவார்கள்...

இங்கே எளியவன் வதைப்பட்டு கொண்டு கொசுக் கடியில் கிடக்க அங்கே நாட்டை ஆள்பவர்கள் நேரத்திற்கு ஒரு உடை மாற்றி அழகு பார்ப்பது மற்றும் இந்த நிலையில் இருக்கும் மக்கள் வாழும் பகுதிகளை எவரேனும் அயல் தேசத்து அரசர் வந்தால் தட்டிகள் வைத்து மறைப்பதும் இந்த நாட்டில் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் நடக்கும் செயல்கள்...

இவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல அரசியல் பேசும் ஒரு கூட்டம்.. இதற்கு அவர்கள் வாங்கி வந்த தலையெழுத்து என்று ஒரு கூட்டம்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...

எது எப்படியோ இந்த நாட்டில் அவர்களும் ஒரு பிரஜைகள் என்பது எழுதப்படாத சட்டம்.. பாம்பை அடித்து பரணில் போட்டால் ஒரு உதவும் என்று நம்மூரில் ஒரு பழமொழி உண்டு.. அதைப் போல அப்போதைக்கு அப்போது அதான் இந்த தேர்தல் வருகிறது இல்லையா.. அந்த நிகழ்வுகளில் கூட்டம் காண்பிக்க இந்த மனிதர்களை கூப்பிட்டுக் கொள்வார்கள்... ஆனால் அவர்களுக்கு ஓட்டு உரிமை இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் நினைக்கிறேன்.. ஏனெனில் அவர்களுக்கு சொல்லி கொள்ள முகவரி இல்லையே.. மேலும் இவர்கள் ஓட்டு போட்டு தான் அவர்கள் ஆட்சி அதிகார கட்டிலில் அமர வேண்டும் என்று விதி ஏதும் இல்லையே.. அதற்கு தான் பல்வேறு வழிகள் இருக்கிறதே...

சரி இந்த ஏழைகளுக்கு அரசியல் எதற்காக.. அன்றாடம் வயிற்றுப் பிழைப்புக்கு யாரையோ நம்பிக் கொண்டு இருக்கும் போது...

சரி அதை விடுங்கள்..

இதோ இங்கே விடிவதற்கு தயாராக இருக்கிறது இயற்கை..

வழக்கம் போல தாத்தா தான் முதலில் எழுந்தார்.. பக்கத்தில் சிறுமியை காணவில்லை... எங்கே என்று விவேகா விவேகா என்று குரல் கொடுக்கிறார்.. ஆனால் அவளை காணவில்லை..

தாத்தா மனம் அந்த அதிகாலையில் கருக்கென்று இருந்தது..இன்று நான் இவ்வளவு அசதியாக உறங்கி விட்டேனே என்று வேகமாக எழ முயற்சி செய்கிறார்.. அவசரத்தில் கீழே விழுகிறார்.. மீண்டும் தட்டு தடுமாறி எழுந்து இங்கும் அங்கும் வேகமாக போகிறார்.. அந்த சிறுமியின் பெயரை உச்சரித்துக் கொண்டே...

அவள் அங்கே அந்த கார் அருகில் நின்று கொண்டு அதிகாலை வேளையில் கைத்தறி துண்டிற்கு விலை பேசிக் கொண்டு இருக்கிறாள்.. அவர்கள் அதை வாங்கிக் கொண்டு அதற்கான விலையைக் கொடுத்து விட்டு இவளை பற்றி விசாரிக்கிறார்கள்.. இவளும் தனது கதையை சுருங்க சொல்லி தன்னோடு ஒரு தாத்தா இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவள் சாலையின் மறு பக்கத்தில் நிற்பதை பார்த்து விட்டு தாத்தா அந்த சாலையை கடக்க முயல்கிறார்..

அவளை அடைந்து விட்டார் ஒரு வழியாக..ஏம்மா இந்த குளிரில் இப்படி வந்து நிற்கிறாய்... பிறகு விற்பனை செய்து கொள்ளலாம் அல்லவா என்று அவள் கையை பிடித்துக் கொண்டார்..இதை எல்லாம் கவனித்து வந்த அந்த காரில் இருந்த மனிதர்.. தாத்தா உங்கள் தாத்தாவா என்று கேட்கிறார்கள்.. இவளும் ஆமாம் இவர் எனது தாத்தா என்று சிரித்துக்கொண்டே அவர் கையை பிடித்துக் கொள்கிறாள்..

அவர்கள் அந்த பெரியவரிடம் உங்கள் பேத்தியை நாங்கள் கூட்டிச் சென்று படிக்க வைக்கிறோம் என்று சொல்கிறார்கள்.. அதை கேட்ட தாத்தாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.. ஆனால் அந்த சிறுமி உடனே இல்லை இல்லை வேண்டாம்.. நான் உங்களோடு வர மாட்டேன்.. நான் வந்து விட்டால் தாத்தா மிகவும் சிரமமாக உணர்வார் என்று சொல்கிறாள்..நீ படித்து பெரிய ஆளாக வந்தால் தானே உங்கள் தாத்தாவிற்கு பெருமை என்று சொல்லி பார்த்தார்.. இல்லை இல்லை வேண்டாம்.. எனக்கு எந்த பெருமையும் வேண்டாம்.. நான் தாத்தாவோடு இருப்பதை தவிர இந்த உலகத்தில் எந்த பெருமையும் இல்லை என்று சொல்லி விட்டு வேக வேகமாக தாத்தா கையை பிடித்துக் கொண்டு வாங்க தாத்தா போகலாம் என்று சொல்லி சாலையை கடக்க முயல்கிறாள்..

அதை பார்த்த அந்த மனிதருக்கு ஏதோ பொறி தட்டுகிறது.. இந்த முகத்தை எங்கோ பார்த்து இருக்கிறேனே.. சட்டென்று நினைவு வந்தவராக பெரும் குரலெடுத்து அழுகிறார்... இப்படி ஒரு நல்ல மனிதரை இந்த நெடுஞ்சாலையில் தவிக்க விட்டு விட்டேனே என்று...

திடீரென காரை அந்த நெடுஞ்சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு அப்பா அப்பா என்று ஓடுகிறார்.. அவர்கள் இவர் கூப்பிவது காதில் விழாத தூரத்திற்கு சாலையின் மறுபக்கத்தில் சென்று விட்டார்கள்.. அவரோ இவர்களை சந்திக்க வரும் ஆவலில் அங்கிருந்து வெகு வேகமாக வந்த காரின் சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்...இதை உள்ளுணர்வில் உணர்ந்து கொஞ்சம் திரும்பி பார்க்கிறார்கள் தாத்தாவும் அந்த சிறுமியும்...

அந்த நிகழ்வை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நிற்கிறாள் அந்த சிறுமி..

அந்த பெரியவரோ என்னம்மா ஆச்சு...என்று சிறுமியை உலுக்கிய உலுக்கில் தாத்தா அவர் அங்கே பாருங்கள் என்று கையை நீட்டி சொல்கிறாள்...

அவரோ தினமும் இப்படி ஏதோவொரு நிகழ்வு இந்த நெடுஞ்சாலையில் நடந்து விடுவது கொடுமை மா..நீ அதை பார்க்காதே...வா நமது இடத்திற்கு போய் விடலாம் என்று அந்த சிறுமியை பாதுகாப்பாக கையை பிடித்துக் கொண்டு போகிறார்.. அங்கே அவர்கள் எப்போதும் இருக்கும் இடத்தில் ஒரு நாய் படுத்து இருக்கிறது...

அதை விரட்ட இருவருக்கும் மனம் இல்லாமல் அதன் அருகில் அமர்ந்து கொண்டார்கள்... சிறிது நேரம் அமைதியாக இருந்த அந்த சிறுமி திடீரென தாத்தா ஏன் தாத்தா நல்லவர்களை இறைவன் சோதிக்கிறார் என்று கேட்கிறாள்..

அதற்கு அவரோ தெரியலையே மா...ஏதோ காரணம் இருக்கும்.. சரி அதை விடு தாயி..

சூரியன் மேலே வந்து விட்டான்.. தனது மெல்லிய சுருக்கு பையில் உள்ள பணத்தை கொடுத்து இந்தா போய் உனக்கு பிடித்த காலை சிற்றுண்டி வாங்கி வா.. எனக்கு பசிக்கிறது தாயி என்கிறார்...

இதோ தாத்தா..என்று அந்த பணத்தை வாங்கிக் கொண்டு சிட்டாக பறக்கிறாள் அந்த சிறுமி...

இங்கே ஆதரவற்றவர்கள் என்று நெடுஞ்சாலையில் யாரும் இல்லை.. ஒரு வேளை கோடிக் கணக்கில் சேர்த்து ஊர் மெச்ச பெரிய பங்களாவில் ஒரு வேளை இருக்கலாமோ என்னவோ... அறிந்தவர்கள் சொல்லுங்கள்...

சுபம் 🎉💫

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:05/11/25.

வெள்ளிக்கிழமை. 


வியாழன், 4 டிசம்பர், 2025

இராஜேந்திர சோழனை கடற் படை தினத்தில் நினைவுகூறுவோம் 💫


 வணக்கம் அன்பு நேயர்களே 🎉🙏.

தற்போது ராஜேந்திர சோழனின் அற்புதமான வரலாற்று நிகழ்வுகளை கடற் படை தினத்தில் நினைவுகூறுவோம் 💫

கீழேயுள்ள லிங்கில் அவரது அற்புதமான செயல்களை குரல் பதிவாக கேட்டு விட்டு தங்களது மேலான கருத்துக்களை பதிவிடுங்கள் நேயர்களே நன்றி 🙏🎉🍂

https://youtu.be/1ksF6KSVF_E?si=C5J_c__XA7oUJNq3

இன்றைய தலையங்கம்:-கோயில்அரசியல் நல்லதல்ல


 #இன்றையதலையங்கம்:-

#கோயில் #அரசியல்:-

உங்கள் அரசியலுக்கு தயைக் கூர்ந்து கோயிலை பயன்படுத்தாதீர்கள் 🙏

ஏனெனில் இங்கே ஆத்மார்த்தமான உணர்வோடு தான் அந்த காலத்தில் கோயில் கட்டப்பட்டு இருக்கிறது...

எதை எடுத்தாலும் அரசியலாக்குவது அறநிலையத்துறைக்கு நல்லது அல்ல...

இந்நேரத்தில் கலைஞர் இருந்து இருந்தால் நிச்சயமாக இப்படியான நிகழ்வுகள் நடக்க விட்டு இருக்க மாட்டார்... ஏன் ஜெயலலிதா இருந்திருந்தாலும் இப்படி நடந்து இருக்காது...

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அரசு இருப்பது தான் கோயில் விசயத்தில் காட்டுகிறது என்று தோன்றுகிறது...

மரபு என்பது கோயில் மசூதி தேவசபை இப்படி ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் இருப்பதை அனைவரும் மதிக்க வேண்டும்...

மேலும் பழைய காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அந்த கோயில் தொடர்பான தகவல்களை வாசித்து விட்டு பிறகு வாருங்கள் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...

அரசியல் செய்ய இங்கே ஆயிரம் ஆயிரம் விசயங்கள் உள்ளது...

பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் சமூக சீர்கேடுகள் அவ்வளவு நடக்கிறது..அதை அரசியல் ஆக்குங்கள்...

எத்தனையோ பேருந்துகள் காய்லாங்கடைக்கு போகும் நிலையில் உள்ளது..அதை மாற்ற வேண்டும் என்று போராடுங்கள்...

சாலை விரிவாக்கம் என்கின்ற போர்வையில் சாலையோரம் உள்ள அற்புதமான பயண உணர்வை தரும் புளிய மரத்தை வெட்டாமல் அதை வேறு இடத்திற்கு மாற்றி நட முடியுமா என்று தானே முன்வந்து நீதிபதிகள் வழக்கு போடுங்கள்...

இங்கே இயற்கை சுரண்டல்கள் அவ்வளவு நடக்கிறது..அதை தடுக்க ஏதாவது அரசியல் கட்சிகள் தினம் தினம் சாலையில் அமர்ந்து போராடுங்கள்...

இதற்கு மேல் ஒரு விஷயம்.. இங்கே எந்த அரசாங்க பணிகளாக இருந்தாலும் அது நீதிமன்றம் உட்பட மக்கள் வரிப்பணத்தில் தான் வாழ்க்கை உங்களுக்கு... அந்த மக்களுக்கு துரோகம் செய்யலாமா என்று ஒரு நிமிடம் ஒரேயொரு நிமிடம் யோசித்தால் இங்கே டாஸ்மாக் கடையில் இருந்து ஒரே உத்தரவில் எல்லா சமூக சீர்கேடுகளையும் முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்ற நிலை இருக்க எல்லாவற்றையும் பணத்தை வைத்து நடத்தினால் அந்த கர்மா சும்மா விடுமா?

கொஞ்சம் யோசியுங்கள் 🍂

இங்கே மாற்ற முடியாத விசயங்கள் என்று எதுவும் இல்லை...

அதிகாரிகள் தனது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் அரசாங்கம் திருத்தும்...

அது அரசு ஊழியர்கள் எல்லோருமாக சேர்ந்து இருந்தால் இங்கே எதுவும் சாத்தியமே...

ஆனால் ஊதிய உயர்வுக்காக போராடும் ஒற்றுமை சமூக அக்கறையில் இல்லையே...😏.

இங்கே தன்னில் இருந்து மாற்றம் தொடங்க வேண்டும்...

மக்களும் கொஞ்சம் துட்டுக்கு ஓட்டு போடாமல் ஒற்றுமையாக இருந்தால் இந்த சமூகம் உருப்படும்... இல்லை என்றால் தமிழ் நாட்டை எந்த பிரம்மா விஷ்ணுவாலும் சிவனாலும் காப்பற்ற முடியாது...

விட்டு போன கடவுளை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள்...

#கோயில்அரசியல்

#தலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:04/12/25

வியாழக்கிழமை.

கழுதையும் நானும்...

 #கழுதையும் #நானும்:- *************************** அங்கே எனதருகில் ஓர் கழுதை வெகுநேரமாக என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது.. நான் அது ஏதோ பார...