ஆனந்தமாக வாழுங்கள்

வாழ்க்கை பற்றிய புரிதல்

புதன், 17 செப்டம்பர், 2025

மழைக்கால நேரமொன்றில் ஒரு கோப்பை தேநீரோடு...


ஒரு கோப்பை தேநீரோடு

இந்த மழைக் கால தொடக்கத்தில்

இளம் காலை வேளையில்

எழுதிக் கொண்டுசில இதமான இசையோடு இருக்கும் நொடிகளில் உருகிக் கொண்டே இருக்கிறது வாழ்வின் சுவை...

அதை அப்படியே பருகி முடித்து மீண்டும் எழுதிக் கொண்டே இருக்கிறேன் ...

சில தூறல்கள் மெல்லிய இசையோடு 

இந்த பூமியை 

குளிர்விக்கும் நேரத்தில்

அதோ அங்கே சிறகடித்து 

பறக்கும் பறவை

அந்த தூறலில் 

நனைந்துக் கொண்டே 

எனது அறையின்

சாளரத்தின் வழியே

என்னை தலை உயர்த்தி பார்க்கிறது...

நான் அதை பார்த்து 

புன்னகைக்கும் நேரத்தில்

அது தனது மெல்லிய குரலில் 

பிரியத்தோடு

ஒரு சுவாரஸ்யமான இசையை 

என் செவிகளுக்கு விட்டு 

சென்றது தான்

இந்த நாளின் பொக்கிஷமாக..

#இளையவேணிகிருஷ்ணா.

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

இனிது இனிது ஏகாந்தம் இனிது..

 


அந்த இரவின் சூழல் எனக்கு புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தது... திடீரென கனத்த மழை இடியோடு பல மணி நேரங்கள் நிற்காமல் தொடர்ந்து பெய்து தனது வலிமையை இங்கே வாழும் ஜீவராசிகளுக்கு காட்டி விட வேண்டும் என்ற முனைப்பாக தான் இருந்தது அந்த மழை பொழிவு...மின்சாரம் தடைப்பட்டு ஒளி இல்லாத இரவை ரசிக்க கிடைத்த தருணமாகவே அதை நான் நினைத்தேன்...

நான் ஒரு படைப்பாளி என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள விழைகிறேன்... ஏனெனில் நான் என்னை இங்கே வேறு எந்த முகமாகவும் அறிமுகம் செய்து கொண்டால் அது உங்களுக்கு துயரமாக கூட இருக்கலாம் அல்லவா அதற்காக தான்... ஏனெனில் நான் இங்கே அடையாளங்கள் ஏதுமற்ற ஜீவனாக என்னை காட்டிக் கொள்ளவே எனக்கு பிடித்தமான விஷயம் என்று சொன்னால் நீங்கள் நான் தற்போது இங்கே எழுதி வரும் படைப்பை தற்போது நிறுத்தி விட்டு வேறு செயல்கள் செய்து விட போய் விடுவீர்கள் அல்லவா அதற்காக தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

மெதுவாக போய் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி நான் தற்போது இருக்கும் அறையில் உள்ள மேசை மீது வைத்து விட்டு மாலைப் பொழுதில் நான் தயாராக வைத்திருந்த சப்பாத்தி குருமாவை மிகவும் நிதானமாக ரசித்து சாப்பிட்டேன்... சன்னல் கதவு நன்றாக திறந்து இருந்ததால் அந்த மழையின் சலசல ஓசை மட்டும் நுண்ணியமாக எனது காதுகளில் விழுந்தது... நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா... மின்சாரம் தடைப்பட்டு இப்படி ஒரு மழை வந்து உங்கள் சன்னல் கதவை இலேசாக நனைத்த நாட்களை... அந்த மழையின் ஓசையை எந்தவித இடையூறும் இல்லாமல் ரசிக்க ஒரு தனிப்பட்ட ரசனையான மனம் வேண்டும்... எங்கே இதை எல்லாம் ரசிப்பது... இங்கே ஆயிரம் ஆயிரம் சம்சார வேலைகள் என்னை அலைகழிக்கிறது... நீங்கள் வேறு என்று நீங்கள் அங்கே புலம்புவது என் காதில் விழாமல் இல்லை... அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களை புறக்கணிக்கவும் மனம் இல்லை... ஏனெனில் எனக்கு சம்சாரிகளை பற்றி ஏதோ கொஞ்சம் தெரியும்.. முழுவதும் தெரியாது... ஏனெனில் நான் சம்சாரி அல்ல... அதனால் அது பற்றி ஓரளவு ஞானம் இருந்ததால் உங்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றி நினைக்கிறேன்...இதோ எனது படைப்பின் இடுக்கின் வழியே உங்களை வந்தடைந்த இந்த மழையையாவது கொஞ்சம் அலட்சியம் செய்யாமல் பிடித்துக் கொள்ளுங்கள்...ஏதோ சில ரசனைகளாவது உங்களோடு பயணிக்க இதை விட்டால் வேறு வழி இல்லை...

இருக்கட்டும் அதை விடுங்கள்...

நான் உங்களுக்கு அந்த மழையின் ரசனையை உணர்த்திக் கொண்டே இதோ எனது இரவு உணவை முடித்துக் கொண்டேன்... கொஞ்சம் இந்த மழைக்கு இதமாக இஞ்சி சாறோ மற்றும் எழுமிச்சை சாறு கலந்த தேநீர் தயாரித்து பருகினால் நன்றாக இருக்கும் என்று எனது மனம் ஏங்கியது... சரி என்று மெழுகுவர்த்தி எடுத்துக் கொண்டு சமையல் அறையில் சென்று தேநீர் தயாரித்து அதை எனது நீல நிற கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு எனது அறைக்கு வந்து மிகவும் நிதானமாக ரசித்து ஆவி பறக்க பறக்க மிடறு மிடறாக பருகினேன்..

அந்த மிடறு உள்ளே இறங்க இறங்க ஒரு இதத்தை கொடுத்தது... உங்களுக்கு தெரியுமா ஒரு தேநீர் கோப்பை ஒரு கனத்த மழை போதும் வாழ்வின் பெரும் ஆனந்த அதிர்வை உங்களுக்குள் உணர முடியும்... அது தரும் ஆனந்தம் எப்படி இருக்கும் என்றால் தில்லையில் ஆனந்த கூத்தாடி சிரிக்கிறானே அந்த தாண்டன் அவனை போல இருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்களேன்...

அந்த மெழுகுவர்த்தி ஒளியில் தான் நான் உங்களுக்கு இந்த வர்ணனையின் ரசனையில் நனைய வைக்கிறேன்...

இதோ அலைபேசியில் தாயாரின் அழைப்பு வருகிறது... எடுத்து காதில் வைத்தேன் சொல்லுங்கள் அம்மா...

அங்கே மழையா என்று கேட்டேன்...

எதிர் முனையில் அம்மா இங்கே மழை இல்லைடா கண்ணா... அங்கே அதிகமான மழை என்று தொலைக்காட்சி செய்தியில் பார்த்தேன்... மின்சாரம் பல பகுதிகளில் இல்லை என்று சொன்னார்கள்.. உனது பகுதியில் எப்படி என்று கேட்டார்..

ஆமாம் அம்மா இங்கே கடும் இருள் சூழ்ந்த நிலையில் மழை அடர்ந்து பொழிகிறது...

நான் இந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உங்களோடு பேசுகிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்...

அடடா என்ன கொடுமை இது.. ஏதேனும் சாப்பிட்டாயா இல்லையா என்று கேட்டார் கொஞ்சம் கவலையோடே..

நான் நன்றாக இந்த மழையை ரசித்துக்கொண்டே சாப்பிட்டு விட்டு சுட சுட தேநீர் பருகி முடித்து விட்டு தான் உங்களோடு பேசுகிறேன் நீங்கள் கவலைப்படாதீர்கள் என்றேன் சிறிது சிரித்துக்கொண்டே...

நான் கவலைப்படாமல் எப்படிடா இருக்க முடியும்... உனக்கென்று ஒரு வாழ்க்கை துணை இருந்தால் நான் இங்கே இப்படி அமைதி இல்லாமல் உன்னை தொந்தரவு செய்து கொண்டு இருக்க மாட்டேன்..

நீ தான் பிடிவாதமாக திருமண பந்தமே வேண்டாம் என்கிறாய் என்று கவலை தோய்ந்த குரலில் சொன்னார்...

அம்மா இப்போது உங்களுக்கு வேறு ஏதாவது என்னோடு பேச வேண்டும் என்று நினைத்தால் பேசுங்கள்...மழையை பற்றி ஏதாவது பேசுங்களேன் நான் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் என்றேன் சிறிது புன்முறுவலோடு...மழையை பற்றி என்ன பேச... என் பிள்ளையை அங்கே படாய் படுத்துகிறதே என்று சலிப்போடு சொல்லி விட்டு பார்த்து பத்திரமாக இருடா கண்ணா.. விடிந்ததும் அங்கே உள்ள நிலையை சொல் என்று வைத்து விட்டார்...

இந்த சம்பாஷணைகள் எல்லாம் தினமும் ஏதோவொரு வகையில் நடப்பது தான்...

சரி அதை விடுங்கள்...

ஒரு மனிதன் தனியாக பயணித்து இறப்பது ஒரு குற்றமா என்று எனக்கு தெரியவில்லை... அந்த காலத்தில் மனித இனம் அழிந்து போகாமல் இருக்க மற்றும் தான் செய்து வந்த தான் தருமங்கள் அழியாமல் தொடர சந்ததி அவசியம் என்று சாஸ்திரம் சொன்ன விஷயத்தை இந்த காலத்தில் எந்தளவுக்கு மதிக்கிறார்கள்... மனித இனம் தான் கணக்கற்ற வகையில் பெருகுகிறதேயொழிய தனது சொத்தை அடுத்தவர்கள் எந்த வழியிலும் அனுபவித்து விடக் கூடாது தனது சந்ததியை தவிர என்று கணக்கு போட்டு அல்லவா இந்த காலத்தில் மனித இனம் ஓடிக் கொண்டு இருக்கிறது...இதை பற்றி பேசினால் நம்மை ஒரு கூட்டம் சரியான கிறுக்கு பிடித்த ஆள் இவன் என்று ஒதுக்கி விட்டு மீண்டும் விட்ட பாதையில் பயணிக்க தொடங்கி விடுமே தவிர இதை பற்றி கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசிப்போம் என்று எவரும் யோசிக்க மாட்டார்கள்... இந்த மக்களின் குறை ஞானத்தை எப்படியோ அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடை செய்து கொண்டு அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டு மக்களை முட்டாளாக்கி விடுகிறார்கள்... இது கூட புரியாமல் தானே இந்த சன கூட்டம் ஓடிக் கொண்டு இருக்கிறது... இது பற்றியும் பேசினால் இன்னும் கிறுக்கு பட்டம் நமக்கு கூடுமே தவிர குறையாது...

சரி அதை விடுங்கள்...

இதோ ஏதோவொன்றை எழுத வந்து ஏதோவொரு பாதையில் பயணித்து இப்பொழுது உங்களுக்கு ஏதோவொரு வகையில் வாசிக்கும் ரசனையை கொடுத்து கொண்டு இருக்கும் போது அந்த கனத்த மழை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்துக் கொண்டு இருந்தது...

இதோ நான் ஏற்றி வைத்த மெழுகுவர்த்தியும் நான் ஏதோவொரு வகையில் உலகத்தின் ஒரு மூலையில் வசிக்கும் யாரோவொவரின் வாசிப்பு அனுபவித்திற்காக எழுதி கொண்டு இருப்பதை அது அதன் பாணியில் உருகி எனக்கு ஆறுதலாக மேசையில் என்னை வேடிக்கை பார்க்கிறது...

நான் இந்த அபூர்வ இரவை கழிக்க உதவி செய்த மழைக்கும் இந்த மெழுகுவர்த்திக்கும் அந்த தேநீர் ருசிக்க தந்த தேநீர் கோப்பைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு எழுகிறேன்...

இதோ மணி பத்தை கடந்ததாக எனது கைக் கடிகாரம் சொல்கிறது... அனைத்தையும் அதனதன் இடத்தில் வைத்து விட்டு படுக்கை விரிப்பை சரி செய்து உறங்க ஆயத்தம் ஆகும் போது எனக்காக மௌனமாக ஒளி உமிழ்ந்து இந்த படைப்பை எழுத உதவிய மெழுகுவர்த்தி தனிமையில் இவ்வளவு ஆனந்தம் அமிர்தமாக கிடைக்குமா என்று ஆச்சரியமாக பெருமூச்சு விட்டதில் எங்கோ இருந்த மழை நனைத்த காற்று சாரலாக வந்து அதை நடனம் ஆட வைக்கவும் அங்கே சுவரில் இருந்து பல்லி ஒன்று இதனை ஆமோதித்து சத்தம் போடவும் சரியாக இருந்தது...

இங்கே இனிது இனிது ஏகாந்தம் இனிது என்று சொல்லி கொண்டே மழை நனைத்த இரவிற்கு ஒரு வணக்கம் தெரிவித்து விட்டு விடை பெற்றுக் கொண்டு உறக்கம் எனும் உலகத்திற்கு செல்கிறேன்... அங்கே இந்த விழிப்பு நிலையில் விட்டு போன இந்த ரசனையான நிகழ்வு கொஞ்சமும் சிதறாமல், கனவில் கூட தனிமையின் இந்த மழை ரசனை தொடர வேண்டும் என்று பிரார்த்தனை செய்துக் கொண்டு...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 16/09/25/செவ்வாய்க்கிழமை.

வியாழன், 11 செப்டம்பர், 2025

அந்த பெரும் காதலின் அடையாளமாக_சிறுகதை.


அந்த அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து இருந்தேன்.. அங்கே பறவைகள் இங்கும் அங்கும் பறந்து திரிந்துக் கொண்டு இருந்தது...இதை எல்லாம் எந்தவித சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன்... இங்கே வேடிக்கையை தவிர வேறு எதுவும் மிச்சம் இல்லை அல்லவா நமது வாழ்க்கை உட்பட வேடிக்கை தான்...இது புரியாமல் பல பேர் பல விசயங்களை வேடிக்கை பார்த்து ரசிக்கிறார்கள்..நாமே ஒரு வேடிக்கை மனிதராக பல பேருக்கு இருக்கிறோம் என்று தெரியாமல் என்று நினைக்கும் போது மிகவும் நகைப்பாக தான் இருக்கிறது...

அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் இங்கும் அங்கும் எதையோ பரபரப்பாக பேசிக் கொண்டே அலைகிறார்கள்... அங்கங்கே விடுமுறை நேரம் இன்னும் சற்று நேரத்தில் விடை பெற போகிறது என்று உணர்ந்து குழந்தைகள் மணலில் வீடு கட்டி மகிழ்கிறார்கள்...அதை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு பெரும் அலை வந்து அதை தீண்டி அழித்து சென்றதில் அந்த குழந்தையின் மனம் சிறுத்தது... பாவம் அந்த குழந்தைக்கு என்ன தெரியும்... இங்கே வளர்ந்த பிறகும் பல பல விசயங்கள் தான் நமக்கு நடக்க போகிறது என்று...

இந்த நிகழ்வுகளை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே எனது நினைவுகளை அசைப்போடுகிறேன்...

இதோ இதே மாதிரி ஒரு மாலைப் பொழுதில் தான் நீயும் நானும் கணக்கற்ற பொழுதுகள் பல பல கதைகளை பேசி திரிந்தோம்... நான் ஏதேதோ சொல்ல சொல்ல நீ வாய் விட்டு சிரிக்கிறாய்... அந்த கள்ளமற்ற சிரிப்பில் அங்கே இருந்த மனிதர்கள் மட்டும் அல்ல அலைகளும் உருகி தான் உனது பாதத்தை முத்தமிட்டு சென்றது..

அந்த பொழுதின் அடையாளத்தை இங்கே நான் தற்போது சத்தம் இல்லாமல் தேடிக் கொண்டு இருக்கிறேன்...

ஏன் என்னை பிரிந்தாய் என்று எனக்கு நீ உணர்த்தாமலேயே சென்று விடவும் இல்லை...

உனது சூழலின் அழுத்தத்தை எனக்கு சொல்லி தான் பிரிந்தாய்...பிறகேன் என்னோடு பெரும் காதல் கொண்டு பித்து நிலையை அடைய வைத்தாய் என்றும் நான் சராசரி மனிதனை போல கேட்கவும் மாட்டேன்... ஏனெனில் அந்த மாதிரியான காதலை இது வரை இந்த கடற்கரை சந்தித்தது கூட இல்லை என்று எத்தனையோ முறை அதன் முத்த மொழியில் அலைகள் எனக்கு உணர்த்தியதை நான் உணர்ந்துக் கொண்டு தான் இருந்தேன்...

என்றாலும் அந்த உன் சூழலை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நம் பெரும் காதலின் உணர்வை நீ மதித்து இருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது... இது பிரிவின் தீயில் தகிக்க முடியாத எண்ணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்ட போதும் உன்னை குற்றம் சொல்ல என் ஆழ்மனம் ஒத்துக் கொள்ளவில்லை... இங்கே ஆழ்ந்த காதலின் உணர்வுகள் எல்லாம் இப்படி தான் கடற்கரை மணலிலோ அந்த நீலவானத்திலோ அங்கே வருடும் காற்றிலோ கரைந்து உருகுகிறது...

நீ என்னை நினைப்பாயா என்று நான் மலினமாக தற்போது மட்டும் அல்ல எப்போதும் நினைக்க மாட்டேன்... அது ஒரு ஆழ்ந்த புரிதல்... இங்கே நான் நினைக்கும் வேளையில் அதோ அந்த அலைகள் வேகமாக வந்து என் கால்களை கட்டிக் கொண்டு ஆறுதல் சொல்லி மௌனமாக நமது காதலுக்கு அஞ்சலி செலுத்துகிறது...அதை பொறுத்தவரை நமது காதல் கல்லறை காதலாக நினைத்து விட்டது போலும்...

இப்படி உன் நினைவுகளை நான் அசைப் போட்டுக் கொண்டே கொஞ்சம் தலையை உயர்த்தி மேலே பார்த்தேன்... அந்த நீல வானமும் நீ என்ன அலை கடற்கரை மணல் மட்டும் தான் உன் காதலை கொண்டாடுகிறது என்று நினைத்தாயா... இங்கே நீங்கள் அறியாமல் நானும் தான் ரசித்துக் கொண்டு இருந்தேன் என்றது மெல்லிய குரலில்...

நான் அதை பார்த்து என் கண்களில் வழியும் கண்ணீரோடு கை கூப்பி கும்பிட்ட போது என்னை கடந்து சென்ற ஒரு காதல் ஜோடி என்னை பார்த்து வேடிக்கை மனிதன் போல என்று கேலி செய்து சிரித்தார்கள்... அவர்கள் உண்மையில் பெரும் காதலின் உணர்வை உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை... ஏனெனில் இங்கே அபூர்வ காதலின் அடையாளங்கள் எல்லாம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை... அப்படியே கிடைத்தாலும் அதன் அருமை புரியாமல் அந்த காதல் ஜோடியில் யாரோவர் குப்பையில் தூக்கி வீசி எறிந்து விட்டு நடைமுறை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு கடனே என்று சம்சாரியாக வாழ்ந்து விட்டு காணாமல் போனவர்கள்... ஆனால் இங்கே என் உயிர் காதலியே நீயும் அப்படி இல்லை நானும் அப்படி இல்லை...நீ இந்த பிரபஞ்சத்தின் ஒரு மூலையில் என்னோடு பயணித்த நினைவை அசை போட்டுக் கொண்டு இருப்பாய் அங்கே உள்ள கடற்கரையில்... ஏனெனில் நீ உன் சூழலை பகிர்ந்த போது என் வாழ்வின் மொத்தமும் நீதான்... சராசரி வாழ்வில் வேறொருவரோடு பந்தம் இல்லை என்றாய்... ஆனால் என் பெற்றோருக்கு மதிப்பளித்து உன்னோடும் இணைந்து வாழ்வை தொடங்க முடியாது என்றாய்...

அந்த பேச்சை நீ முடிக்க முடியாமல் திணறி கண்களில் தாரை தாரையாய் வழிந்த கண்ணீரோடு இதே கடற்கரையில் விடை பெற்று அயல் தேசத்திற்கு சென்று பணி செய்து வாழ முடிவெடுத்து விட்டதாக சொன்ன போது நான் அதை மறுத்து பேசக் கூட வாய்ப்பு அளிக்காமல் என் கைகளில் இறுக பிடித்துக் கொண்டு உன் பெரும் காதலின் அடையாளமாக ஒரேயொரு முத்தத்தை அழுத்தமாக பதித்து வேகமாக சென்றாய்... பதில் பரிசு எதையும் எதிர்பாராமல்...

இதை எப்படி ஒரு அல்ப காதலாக நினைக்க முடியும்... அந்த கண்ணீரின் அடையாளத்தை அப்போது உன் காலை இறுதியாக முத்தமிட போகிறோம் என்று தெரியாமல் வந்த அலையில் கலந்தது... இதற்கு சாட்சி அந்த நீல வானம் தானே என்று இப்போது தான் புரிகிறது...

இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பெரும் காதலின் அடையாளமாக இந்த கடற்கரையில் 

அந்த பறவைகளோடு பறவைகளாக திரிந்து கிடப்போம் என் பெரும் காதலின் அடையாளமான உயிரே....என்று நான் பெரும் மூச்சோடு கடற்கரையின் மணலில் இருந்து விடைபெறும் போது இருள் நெருங்கி போய் வா என் அருமை புதல்வனே என்று காதோடு கிசுகிசுத்தது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/09/25/வெள்ளிக்கிழமை.

ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

அந்த மலையின் உச்சியில் இருந்து பார்க்கிறேன்...


அந்த மலையின் உச்சியில் 

இருந்து பார்க்கிறேன் 

நான் வாழ்ந்து வரும் 

பூமியின் இருப்பிடத்தை...

அங்கே நெடிதுயர்ந்து வளர்ந்த 

கட்டிடங்கள் எல்லாம் 

சிறு அட்டை பெட்டி போல 

காட்சியளிக்கிறது 

என் பார்வைக்கு...

அங்கே போய் வரும் மக்கள் 

எல்லோரும் சிறுசிறு பூச்சிகள் 

இங்கும் அங்கும் நகர்வது போல் 

என் கண்ணுக்கு விருந்தளிக்கிறது...

ஒரு கணப் பொழுதில் 

இங்கே எல்லாம் மாறி விட்டதா என்று 

புன் முறுவலோடு 

யோசித்துக்கொண்டே 

அங்கே நிகழும் 

அத்தனை காட்சிகளையும் வேடிக்கை 

பார்க்கிறேன்...

இங்கே நான் மட்டும் என்ன 

அங்கே போவோர் வருவோர் 

சிறிது உற்று நோக்கினால் 

நானும் ஒரு சிறு புள்ளி தானே..

இங்கே காட்சிபிழையில் தான் 

இந்த உலகம் சுழலுகிறது

அதற்குள் எத்தனை எத்தனை மாயைகள் என்னை நிதானமாக 

மென்று தின்று தீர்க்க அலைகிறது என்று 

யோசித்துக் கொண்டு 

இருக்கும் போதே என் அருகில் 

மிகவும் நிதானமாக 

ஒரு பட்டாம்பூச்சி 🦋 

தன் சிறகால் உரசி 

தன் மெல்லிய மொழியில் 

ஆமோதித்து சென்றதை 

நானும் அந்த 

நுண்ணிய காலமும் 

இந்த பிரபஞ்சத்தின் 

சூட்சம விதியும் மட்டுமே உணர்ந்து 

புன்னகையுடன் கை 

குலுக்குகிறோம்...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/09/25/திங்கட்கிழமை.



அந்த பெருநகரத்தின் அகோர பசி...


அந்த பெருநகர வீதியில் 

மூச்சு திணற பிரயாணம் 

செய்கிறேன்...

என் மொத்த சக்தியையும் 

அந்த பெருநகரம்

ஒரு மோசமான அரக்கன் 

இரத்தத்தை ரசித்து உறிஞ்சி 

குடிப்பதை போல 

தனிப்பட்ட ரசனையோடு 

நின்று நிதானமாக உறிஞ்சி 

குடிக்கிறது என் உடலை 

கிழித்து ரத்தத்தை ...

இங்கே பெரும்பாலானவர்கள் கதியும் 

அதேதான் என்றாலும் 

நான் மட்டும் அதனிடம் 

கெஞ்சி மன்றாடுகிறேன்

என்னை மட்டும் விட்டு விடு என்று 

என் கண்களில் வழியும் 

கண்ணீரோடு...

அந்த பெருநகரமோ 

நீ உன் இச்சையின் படி தானே 

எனக்கு பலியாகிறாய் 

பிறகேன் இவ்வளவு கதறல் என்று கேட்டது...

நானோ தேன் கூட்டில் உள்ள தேனின் ருசியை உணர 

உன்னை தேடி வந்தேன்...

இங்கே தேன் ஒரு துளியும் இல்லாத 

வெறும் வறண்ட தேன் கூடு 

தான் இருக்கும் என்று 

இங்கே வந்தவர்கள் சொல்லவில்லை என்றேன் 

குரலில் அழுகை தோய்ந்து...

அந்த பெருநகரமோ 

என்ன நினைத்ததோ

என் வர்ணனையை கேட்டு 

பெரும் சத்தத்துடன் என்னை 

பலம் கொண்ட மட்டும் 

தூக்கி எறிந்தது

நானோ அந்த பெருநகரத்தின் 

எல்லையில் வீழ்ந்தேன்...

வீழ்ந்த கணத்தில் என் உடலில் 

அங்கங்கே வழியும் ரத்தத்தையும் 

துடைக்கவும் தோன்றாமல் 

எழுந்து வேகமாக 

அந்த சாலையில் ஓடுகிறேன்...

என் நிலையின் பரிதாபத்தை பார்த்து 

அங்கே காலம் 

கண் கலங்கியது...

பாவம் 

அதை தவிர அதனால் வேறு 

என்ன செய்ய இயலும்?

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


கிரகண கவிதை


தனக்கென்று இருக்கும் 

பூரணத்துவத்தை தனித்துவத்தை 

இழந்துக் கொண்டு இருக்கும் 

துக்ககரமான நிலையில் 

அந்த சபையில் பாஞ்சாலியின் 

துகில் உரிப்பை வேடிக்கை பார்த்ததை போல ஒரு கூட்டம் 

இங்கே வெட்டவெளியில் வேடிக்கை பார்க்கிறது...

அந்த நிலவோ தன் கௌரவத்திற்காக அந்த பெரும் மேகக் கூட்டத்திடம் 

போராடும் போது 

எங்கிருந்தோ வந்த காற்று 

இன்னும் சிறு சிறு மேகக் கூட்ட படைகளை சேர்த்து 

பெரும் மழை பொழிவித்து 

அந்த நிலவின் கௌரவத்தை 

காப்பாற்றியதில் 

நான் பெரும் மூச்சோடு 

நிம்மதியடைந்து 

கண்ணீர் மல்க சூட்சமமாக 

வருணனுக்கு நன்றி சொல்கிறேன்...

அங்கே பலபேர் அதே வருணனை 

இப்படி காரியத்தை 

கெடுத்து விட்டாயே என்று 

வசை பாடி செல்கிறார்கள் 

பலர்...

இங்கே ஒரு கிரகணம் 

சாகடிக்கப்பட்டது...

பாரத போரில் இறந்த 

துச்சாதன் போல...

கிரகண கவிதை..

இளையவேணி கிருஷ்ணா 

நாள் 08/09/25/திங்கட்கிழமை.


வெள்ளி, 5 செப்டம்பர், 2025

சில வயதிற்கு பிறகு வாழ்க்கை ஒரு வேடிக்கை..

 


சில வயதுக்கு பிறகு

வாழ்க்கை ஒரு வேடிக்கை!

தனிமையில்

பழைய நினைவுகள்

நிழலாக தொடர அதன் அடியில் வலுக்கட்டாயமாக

இளைப்பாறுகிறேன்!

சன்னல் வழியே பார்வை

செலுத்தும் போது

அங்கங்கே சீறி பாயும் வாகனங்களை வறட்சியான

சிரிப்போடு வேடிக்கை பார்க்கிறேன்!

நானும் அந்த சாலையில்

இப்படி தான் ஒரு நாள்

பரபரப்பாக அந்த சாலையில்

ஓடி இருக்கிறேன்...

மனதில் ஆயிரம் ஆயிரம் கோபத்தையும் சஞ்சலத்தையும்

சுமந்துக் கொண்டு...

சற்றே திரும்பி பார்க்கும் போது எனது ஓட்டம் எல்லாம் 

வெற்று ஆராவாரமாகவே

எனக்கு தோன்றுகிறது!

தற்போது நினைத்து பார்க்கிறேன்...

இன்னும் கொஞ்சம் ஆசுவாசமாக ரசித்து வாழ்ந்து இருக்கலாமோ என்று...

நான் அமர்ந்து இருக்கும் நாற்காலியும் எனக்கு காட்சிக்கு வழி விட்ட

இந்த சன்னலும்

என்னை பார்த்து புன்னகைக்கிறது...

நீ அன்றொரு நாள் ஓடிய போதும் நாங்கள் இங்கே தான் இருந்தோம் என்று...

வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான நகர்வு என்பதை நாள் கடந்து உணர்கிறேன் என்றாலும்

இதோ எனக்காக பொறுமையாக காத்திருந்த இந்த நாற்காலிக்கும்

அந்த சன்னலுக்கும் ஆத்மார்த்தமான நன்றியை தெரிவித்துக் கொள்வதில் தான் இப்போது

எனது மனம் ஆனந்த கூத்தாடுகிறது...

வயதின் நகர்வில் தொலைந்து விட்ட

என் வாழ்க்கை பயணத்தை

மீதி இருக்கும் காலத்தில் தொலைத்து விடாமல்

நொடிகள் தோறும் ஆனந்த ஸ்பரிசத்தை அனுபவித்து தொலைக்கிறேன்...

இப்போது என் மனம் ஆழ்ந்த அமைதியடைகிறது...

இழந்து விட்ட வாழ்வின் சுவாரஸ்யத்தை மீட்டு விட்ட மகிழ்வில்...

#வயதின்நகர்வில்...

#வாழ்வின்சுவை(6).

#இளையவேணிகிருஷ்ணா.

நேரம் காலை 8:00மணி.

05/09/2023.

மீள் பதிவு.

மழைக்கால நேரமொன்றில் ஒரு கோப்பை தேநீரோடு...

ஒரு கோப்பை தேநீரோடு இந்த மழைக் கால தொடக்கத்தில் இளம் காலை வேளையில் எழுதிக் கொண்டுசில இதமான இசையோடு இருக்கும் நொடிகளில் உருகிக் கொண்டே இருக்...