பக்கங்கள்

சனி, 29 ஜூன், 2024

இரவு கவிதை:இமையும் நானும் 🤷


 ஒரு நாள் ஒரு பொழுதேனும்

இப்படி தன்னை மறந்து உறங்க துடிக்கும் இமைகளுக்கு இங்கே 

ஆயிரம் ஆயிரம் கவலைகளை போற போக்கில் அள்ளித் தெளித்து விட்டு போகிறது காலம்...

நானும் மனதும் தான் இங்கே 

இமைகளை கெஞ்சிக் கூத்தாடி உறங்க வைக்கிறோம்...

மீண்டும் கொஞ்சம் எல்லாம் மறந்து இமைகள் மூடும் போது அங்கே தலை வாசல் வழியே தலையை எட்டி பார்த்து காலம் தனது கைகள் நிறைய கவலைகளை கொண்டு வந்து வீடு முழுக்க இறைத்து விட்டு ஓடோடி போகிறது நொடிப்பொழுதில்...

நான் இமைகளை கை கூப்பி கேட்டுக் கொண்டு 

அங்கே இறைந்து கிடந்த கவலைகளை ஒரு மெலிதான துணியை வைத்து சத்தம் இல்லாமல் 

தூய்மை செய்து முடிக்கும் போது நடுநிசி இரவு 

என்னையும் என் இமைகளையும் கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் சிரித்து வைத்து போனதில் 

எனது இல்லம் அங்கே சத்தம் இல்லாமல் கண்ணீர் வடிப்பதை யார் அறியக் கூடும்???.

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

#இமையும்நானும்.

நாள்:29/07/24/சனிக்கிழமை.

முன்னிரவுப் பொழுது 10:32.

உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨


அந்த தந்திரக்காரனின் 

பிச்சை பாத்திரம் ஏனோ 

இன்று அவன் நினைத்த அளவு 

நிறையவில்லை...

அவனோ அந்த ஊரை 

சுற்றி சுற்றி வருகிறான் 

எப்படியேனும் அந்த 

பிச்சை பாத்திரத்தை 

அவன் நினைத்த மாதிரி 

நிறைத்து விட வேண்டும் என்று...

ஊரை சுற்றி சுற்றி வந்து களைத்து ஒரு மரத்தின் அடியில் படுத்து உறங்கி விடும் போது 

எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்த மயிலிறகு 

தஞ்சம் அடைந்த போது 

அந்த பிச்சை பாத்திரம் நிரம்பி வழிகிறது...

கண் விழித்து பார்த்த அந்த தந்திரக்காரன் அந்த மயிலிறகை வைத்து ஏராளமான வித்தை காட்ட பேராசை கொண்ட போது 

அது அந்த பிச்சை பாத்திரத்தில் இருந்த கண்ணுக்கு தெரியாத துளை வழியே மறைந்து சென்று விட்டது...

இங்கே பெரிய பெரிய தந்திரங்கள் தேவையில்லை...

இலேசான விகாரமற்ற மனதின் அடையாளமான 

மயிலிறகின் சிறு தீண்டல் போதும்...

நம் பேராசை எனும் தீயை 

அணைத்து விட... என்று அந்த தந்திரக்காரன் உணர்ந்த தருணத்தில் மீண்டும் அந்த மயிலிறகு 

அதே கண்ணுக்கு தெரியாத துளையின் வழியாக உள்ளே நுழைந்தது...

#உறங்கும் முன் ஒரு சிந்தனை கதை ✨ 

✍️ #இளையவேணிகிருஷ்ணா.

நாள் 29/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு பொழுது 10:09.

இரவு கவிதை:விடை பெறுதல் 🍁


அத்தனை பேரும் 

என்னை சுற்றி 

நின்றுக் கொண்டு ஏதேதோ 

பேசிக் கொண்டே இருக்கிறார்கள்...

நான் மட்டும் விடை பெறுதல் 

ஒன்றில் மட்டும் தீவிரமாக 

இருக்கிறேன்...

விடை பெறுதல் அவ்வளவு எளிதல்ல 

என்பதை 

அங்கே அவர்கள் உணர்த்தி 

விடும் போது 

நான் நிரந்தர விடை பெறுதலை 

நினைத்து 

கொஞ்சம் மலைத்து தான் 

போகிறேன்...

#இரவுகவிதை🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 29/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு 9:44.

புதன், 26 ஜூன், 2024

வாழ்வியல் (1).

 


ஒரே மாதிரியான வாழ்வு சலித்து விட்டது என்று கூறுபவர்கள் அதிகம்.. ஆனால் அதிலிருந்து வெளியே வருபவர்கள் எத்தனை பேர் என்று விரல் விட்டு எண்ணி விடலாம்... முதலில் இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று அடிக்கடி நாம் உணர வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எங்கேயாவது உங்களுக்கு அறிமுகமே இல்லாத ஊரில் இறங்கி அங்கே வாழும் மக்களின் வாழ்வியல் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்... உங்கள் கூடவே ஆதார் அட்டை எடுத்து செல்வது நல்லது... ஏனெனில் தற்போதைய உலகியல் சூழலில் உங்களை சந்தேகமாகவே பார்ப்பவர்கள் அதிகம்... நமது பாரதத்திலேயே அத்தனை அழகான ஊர்கள் உள்ளது... மக்களின் மனதில் மனிதத்தன்மை இன்னும் வற்றி விடவில்லை என்பது நமக்கு கூடுதல் பலம்... பயணத்திற்கு என்று தனியாக சேமித்து 

வைத்துக் கொள்ளுங்கள்... அதில் இருந்து எடுத்து பயண செலவிற்கு செலவிடுங்கள்... அங்கே எதிரில் தெரியும் மனிதர்கள் வயலில் வேலை செய்யும் மனிதர்களிடம் அவர்கள் வேலை கெடாமல் உரையாடுங்கள்.. முடிந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.... இப்படி வருடத்தில் எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் பயணத்தை மேற்கொள்ளுங்கள்... இந்த பிரபஞ்சம் உங்களை அரவணைத்துக் கொள்ளும்... நமக்கு மேலேயுள்ள சக்தி நம்மை கடனே என்று வாழ சொல்லவில்லை என்பதை மனதில் வையுங்கள்... வாழ்க்கை ஆனந்தமாக வாழுங்கள்...

#வாழ்வியல்(1).

#இளையவேணிகிருஷ்ணா.

இரவு சிந்தனை ✨


இந்த பிரபஞ்சத்தில் 

நாம் ஒரு பிரயாணி 

நாம் ஒரு பிரயாணி...

இதை மட்டும் மனதில் 

வைத்துக் கொள்ளுங்கள்...

உங்கள் வாழ்வில் நடப்பது 

எல்லாம் 

உங்களை தாக்காமல் 

இருக்கிறது என்றால் 

நீங்கள் நிச்சயமாக 

ஒரு சுமையற்ற பயணத்தை 

இங்கே ஆனந்தமாக 

அனுபவிக்கலாம்...

#இரவு சிந்தனை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/06/24/புதன் கிழமை.

முன்னிரவு 9:30.

திங்கள், 24 ஜூன், 2024

இரவெனும் நதிக் கரையில்...


இப்படியே நேரத்தை 

கடத்தி விடுவேன்...

இந்த இரவெனும் 

நதிக் கரையில் ...

என்னோடு பிரபஞ்சத்தின் 

ரகசியத்தை பற்றி 

உரையாட ஒரு நிலவு...

யாரை பற்றியும் 

குறைப்பட்டுக் கொள்ளாத நட்பாக 

சில விண்மீன்கள் ...

 பேரன்பின் ஊற்றை பொழியும் 

இளம் தென்றல்...

காதிற்கு தேனமதுமாக 

இரவு பூச்சிகளின் 

ரகசிய மொழிகள்...

இது போதும் எனக்கு 

பகல் எனும் பொழுதில் 

பெரும் அரக்கர்கள் என் மீது பொழிந்த 

வன்மத்தின் ரணத்தின் 

வலியை மறக்க!

#இரவு கவிதை 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் :24/06/24/திங்கட்கிழமை.

முன்னிரவு 9:37.

இரவு கவிதை 🍁


மறையும் சூரியனுக்கு தெரியாது ...

இரவெனும் பெருவெளியை 

ஒரு சாளரத்தின் கூட்டில்

அடைப்பட்டு அவதிப்பட்டு 

ஒரு யுகமாக கடக்க இருக்கும் 

கோடான கோடி மனிதர்களின் 

சின்னஞ்சிறு மனவெளியின் 

வேதனையின் ரணங்கள்!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 24/06/24/திங்கட்கிழமை.

முன்னிரவு 9:03.

சனி, 15 ஜூன், 2024

காலமும் நானும்...

 


காலம் என் ஆனந்தமான 

முகத்தை பார்த்து கேட்டது...

என்ன அவ்வளவு மகிழ்ச்சியான 

விஷயம் நடந்து விட்டது 

உன் வாழ்வில் 

இவ்வளவு உற்சாகமாக இருக்கிறாய் 

என்று கேட்டது.. 

இந்த துயரம் நிறைந்த பாதையில் 

கிடைத்த சுவாரஸ்யங்கள் விட 

என் வாழ்வில் அனுபவித்து வந்த 

மகிழ்ச்சி நிறைந்த பாதையில் 

சென்ற போது 

நிச்சயமாக சுவையற்ற 

ஒரு கனியை போல 

சுகமற்ற பயணமாகவே இருந்தது 

காலமே ...என்றேன் காலத்திடம்...

காலமோ எப்போதும் உன் 

பார்வையும் பாதையும் 

தனித்துவமானது என்று 

சொல்வதை தவிர 

வேறு என்ன சொல்ல என்று 

சொல்லி விட்டு 

ஒரு சுவையான தேநீர் கொண்டு வா 

உன் கைகளால் என்றது...

நானும் மகிழ்வோடு 

தேநீர் கோப்பையோடு வந்து 

அதனிடம் ஒன்று கொடுத்து விட்டு 

நானும் அதன் சுவையை 

மிச்சம் இல்லாமல் 

பருகினேன் அங்கே சிறகை விரித்து 

வானத்தை அளந்து திரிந்த 

பறவையை பார்த்து...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு பொழுது 10:10.

காலத்தின் பேரன்பு


அந்த துயருற்ற சாலையில் 

நான் என்னை மறந்து பயணிப்பதை 

பார்த்த காலம் மனம் கலங்கி 

இருக்க வேண்டும்...

என் கடுமையான அந்த சூழலை 

மாற்றும் படி கிரகங்களிடம்

நான் செய்த தர்ம செயல்களை முன் வைத்து 

கண்ணீரோடு மன்றாடியது...

அதை பார்த்த கிரகங்கள் 

என் அந்த கடினமான 

சூழலை மாற்றியமைக்க 

முன் வந்ததை 

நான் குறிப்பால் உணர்ந்தேன்...

வேகமாக கிரகங்களின் 

காலில் விழுந்து 

என் இந்த சூழலை மாற்ற வேண்டாம் 

நான் இந்த பெரும் துயரத்தை 

பேரானந்தமாக அமைதியாக 

விருப்பத்தோடு தான் 

அனுபவிக்கிறேன்...

காலம் என் மீது கொண்ட 

சிநேகத்தால் 

உங்களை நாடி இருக்கக் கூடும் 

என்றேன் ...

இதை கேட்டு கிரகங்கள் என்னை 

விசித்திரமாக 

பார்த்து விட்டு காலத்தோடு 

நான் கொண்ட 

சிநேகத்தை பார்த்து 

பொறாமை கொண்டு 

என்னை கடந்து சென்றது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24/சனிக்கிழமை.

முன்னிரவு பொழுது 09:40.

வெள்ளி, 14 ஜூன், 2024

ஜனித்துக் கொண்டே இருக்கிறது இரவும் பகலும்...


ஜனித்துக் கொண்டே இருக்கிறது 

இரவும் பகலும்...

என் நிகழ்வுகள் எல்லாம் 

இரையாகின்றன அவைகளுக்கு...

அதன் பசியாற்றி விட்டு 

நான் பசியாறலாம் என்று 

யுகம் யுகமாக காத்திருக்கிறேன்...

என் தோளில் கை போட்டு 

அந்த காலம் மெது மெதுவாக 

என்னை சமாதானப்படுத்தி 

அழைத்துச் சென்றது...

இங்கே எதையும் 

திருப்தி செய்ய இயலாது என்று 

 புரிந்துக் கொண்டு 

நான் பசியாற சில கனிகளை 

சுவைக்க ஆவலோடு எடுக்கும் போது 

அந்த காலம் கொஞ்சமும் 

இரக்கம் இல்லாமல் 

என்னை தரதரவென 

அழைத்துச் சென்ற போது 

என் வாயில் இருந்து கீழே விழுந்த 

அந்த கனியின் 

சிறு துண்டில் இந்த பூமி பசியாறி 

என்னை ஆசீர்வதித்தது..

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 15/06/24.

ஆத்ம விசாரம் 🍁

 


பற்றுகளற்ற அந்த பயணத்தின் 

சூட்சுமத்தை இங்கே 

அவ்வளவு எளிதாக எவராலும் 

புரிந்துக் கொள்ள இயலாது...

எத்தனையோ கோடான கோடி 

சலசலப்புகள் 

மத்தியில் பயணிக்கும் 

சாதாரண மனிதர்கள் 

அந்த பற்றுகளற்ற 

நுண்ணிய துகளின் சுகந்தத்தை 

இங்கே அவர்களின் நாசி 

எவ்வாறு அறியக் கூடும்???

#ஆத்ம தத்துவம் 🍁

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:15/06/24/சனிக்கிழமை.

எந்த உரையாடலும் மற்ற தனிமை...


எந்த உரையாடலும் அற்ற 

அந்த தனிமை அற்புதமானது...

அத்தனை சலசலப்புகளிடமிருந்தும் 

ஒரு நிரந்தர விடுதலை அதுவாக இருந்து விட்டு போகட்டுமே என்று கூட 

நான் நினைத்தது உண்டு...

ஆசைகள் இச்சைகள் எப்போதும் நம்மை வேறொரு பாதையில் அழைத்துச் செல்ல உறங்காமல் காத்திருக்கும் அந்த நிலையின் இடையூறுகள் என்று சொன்னால் அது மிகையல்ல...

எது எப்படியோ இப்போது கிடைத்த இந்த தனிமை எனும் அமிர்தத்தை நான் அந்த தேவர்களோடும் பகிர்ந்து கொள்ள மனமின்றி 

சத்தம் இல்லாமல் பருகுகிறேன்...

எது எப்படியோ 

யுகம் யுகமாக இதற்காகவே காத்திருக்கும் 

நான் இந்த வாய்ப்பை 

நழுவி விடாமல் இருக்க 

போராடுவதை கூட தவிர்க்கிறேன்...

ஏனெனில் அந்த போராட்டம் கூட என் அனுபவித்தலை கெடுத்து விடக் கூடாது என்று...

அது நழுவி எங்கே சென்று விட போகிறது...

நான் தீர்மானமாக ஒரு நீண்ட மௌனத்தை 

கடைபிடித்து விடும் போது...

எது எப்படியோ அநாதையாக்கப்பட்ட எனது பந்துக்கள் தான் அந்த சூழலை எதிர்த்து போரிட்டு கொண்டு இருக்கிறார்கள்...

அது மகாபாரத போரை விட 

கடுமையான சூழ்ச்சி நிறைந்ததாக இருந்தது என்று நான் அந்த அமிர்தத்தை பருகி முடித்து ஒரு யுகம் கடந்த பிறகு 

அந்த பார்வையாளர்களிடம் தெரிந்துக் கொண்டேன்...

நல்ல வேளையாக நான் அந்த யுத்தத்தில் பங்கேற்கவில்லை என்று 

என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டு 

மீண்டும் அந்த தனிமை எனும் அற்புத உலகில் பயணிக்கிறேன்...

#தனிமை

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 14/06/24/வெள்ளிக்கிழமை.

முன்னிரவு பொழுது 8:55.

வியாழன், 13 ஜூன், 2024

இசையோடு ஒரு பயணம் 🎻

 


வணக்கம் நேயர்களே 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் 🎻.

இன்றைய படைப்பாளி #பாலாசனீஷ் அவர்களின் படைப்புகளோடு இனிமையான பாடல்கள் கேட்டு இளைப்பாறலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையை கேட்டு ரசிக்கலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

உதிர்ந்த இலையின் பயணம்...

 


தன் இறுதி பயணத்தை 

தொடங்கிய அந்த இலையை 

பிரிய மனமில்லாமல் 

கிளை எனும் கையை கொண்டு 

முடிந்தளவு 

தன்னோடு அணைத்துக் கொள்ள 

பார்க்கிறது ...

அந்த மரம் எனும் தாய்...

அதுவோ சுக பிரம்மம் போல 

எந்த உணர்வுகளையும் 

வெளிப்படுத்தாமல் பயணிக்கிறது...

மண்ணோடு புதைந்துக் கொள்வதற்கு முன் 

ஒரேயொரு செய்தியை 

தகுதி வாய்ந்தவரிடம் 

பகிர்ந்து விட வேண்டும் என்று 

தீவிரமாக தேடும் போது அங்கே ஒரு குயிலின் சிறகு தன் மீது 

உராய்ந்த அதிர்வில் 

அதன் மீது அந்த செய்தியை 

கடத்தி விட்டு 

மண்ணில் புதைந்து ஆனந்தலயமாக 

எத்தனிக்கும் போது 

அந்த இலையின் இறுதி சடங்கை 

எங்கிருந்தோ வந்த 

அதன் மூதாதையரின் 

தென்றல் காற்றில் 

சிறு அசைவை மட்டும் வெளிப்படுத்தி அமைதிக் கொள்கிறது அந்த இலை...

#உதிர்ந்த #இலையின் #பயணம் 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:13/06/23

வியாழக்கிழமை.

அந்தி மாலைப் பொழுது 6:07.

சுயங்கள் ...


சுயங்கள் எப்போதும்

எந்தவித சாயங்களை பூசிக் கொண்டும் அலைவதில்லை !

சொல்லப்போனால்

சாயங்களின் தேவைகளே

அதற்கு இல்லை!

இப்படி தான் நான்

என்னை அடையாளப்படுத்திக் கொண்டு அலையும் போது

அங்கே பல வண்ணங்கள் பரிதாபமாக பார்க்கிறது!

#இரவுகவிதை.

#இளையவேணிகிருஷ்ணா.

நானும் நானும்...


தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு

வந்துக் கொண்டே இருந்தது....

அழைத்தவர்கள் பெரும்பாலும் நேற்று நீங்கள் காதலுக்கு சொன்ன பெரும் உரையில் லயித்து விட்டேன் என்றார்கள்...

எனக்கு ஒன்றும் புரியவில்லை..

நானா காதலை பற்றியா சிலாகித்து பேசினேன் என்றேன்..

ஆம் தாங்கள் தான் என்றார்கள் விடாப்பிடியாக...

ஓ அப்படியா நன்றி என்று சொல்லி விட்டு எந்தவித சலனமும் இல்லாமல் நகர்கிறேன் நான்..அவர்களோ ஒன்றும் புரியாமல் ஒருவரையொருவர் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டார்கள்.. எனக்கு மட்டும் தான் தெரியும் நான் காதலை பற்றி சிலாகித்து பேசி இருக்கலாம்.. அது ஒரு அடர்த்தியான மழை பொழியும் சில மணி நேரம் போன்றது எனக்கு என்று அவர்களுக்கு தெரிய நியாயமில்லை.. அடர்த்தியான மழை பொழிந்து விட்டு ஒரு பேரமைதி நிலவுமே அப்படி தான் எனக்கும் காதலுக்கும் உள்ள புரிதல்.. நல்ல வேளையாக இப்போது இன்னும் அதைப் பற்றி விரிவாக பேசுங்கள் என்று என்னை தொந்தரவு செய்யாமல் நகர்ந்து விட்டார்கள்.. உண்மையில் தற்போது அப்படி கேட்டு இருந்தால் நான் காதலை பற்றி ஏதேதோ உளறி இருப்பேன்.. அவர்கள் எனது நேற்றைய உரையை மீண்டும் கேட்டு ஒப்பீடு செய்து கொண்டு அதை பெரிய விவாதம் ஆக்கி இருப்பார்கள்... இங்கே எனது அடுத்த உரைக்கு அது மிகவும் பெரும் தடையாக இருந்து இருக்கும்..

#நானும் #நானும்

#இளையவேணிகிருஷ்ணா.

புதன், 12 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்: தரம் தாழ்ந்த அரசியல்

 


மாநில உரிமைகள் நசுக்கப்படுகிறதா:-

நீர் வளத்துறையை கர்நாடகாவிற்கு கொடுத்து தமிழ் நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் எப்போதும் காவிரி பிரச்சினையில் இணக்கம் இருந்து விடக் கூடாது என்பதில் தெளிவாக அதே சமயத்தில் இவ்வளவு தரம் தாழ்ந்த அல்லது வன்மத்தை வைத்து செயல்படும் பிஜேபி உங்களுக்கு தேச நலனில் அக்கறை உள்ள கட்சியாக தோன்றுகிறது என்றால் நீங்கள் தான் முதலில் தேச துரோகி என்று சொல்வேன்... வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்களை நீர் வளத்துறைக்கு போட்டால் எங்கே அவர் பாரபட்சம் இல்லாமல் பணி சமரசம் செய்து விடுவாரோ என்று மனதில் வைத்துக் கொண்டு செயல்படும் ஒரு மத்திய அரசாங்கம் உண்மையில் மாநில உரிமையை குழி தோண்டி பாதாள லோகம் வரை சென்று புதைத்து விட துடிக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல...

என்னை பொறுத்தவரை பிஜேபி உண்மையில் கருணையை மனசாட்சியை ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துக் கொண்டு இருக்கிறது...

இவர்கள் அரசியலை அரசியலாக பார்க்காமல் கலவரத்தை விதைப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்... இவர்கள் மக்களை கொடுமைப்படுத்தி அதில் சுகம் காணும் மனநிலை உள்ளவர்கள் என்று சொன்னால் நிச்சயமாக அது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்...வாழ்க ஜனநாயகம் 😌😌😌.

#மாநில #உரிமைகள் #நசுக்கப்படுகிறதா???

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

பிரபஞ்ச விதிகளுக்கு அப்பாற்பட்டவள்

 


நாளை உனக்கு என்ன நடக்கும் என்று உனக்கு தெரியுமா என்று காலம் என்னிடம் கேள்வி கேட்டு துளைக்கிறது...

நாளை எனக்கு எது நடந்தால் எனக்கென்ன 

எது நடந்தாலும் நீ என்னோடு 

பயணிப்பது மட்டும் உறுதி என்று தெரியும்...

நான் இந்த பூமியில் வாழ்ந்தாலும் இல்லை நீ எங்கே கடத்தி செல்கிறாயோ 

அங்கே சூட்சமமாக எனை இறுக பற்றிக் கொள்வாய் உன் கரங்களால்...

பிறகென்ன பயம் எனக்கு?

என்ன உனக்கு பயம் இல்லையா என்றது ஆச்சரியமாக ஆமாம் பயமில்லை என்றேன்...

நான் உனது கரங்களை செல்லும் வழியில் விடுவித்து விட்டால் என்றது...

அப்போதும் பயமில்லை 

நான் விழுவதும் ஏதோவொரு விண்மீன் கூட்டத்தின் இடையிலோ அல்லது ஏதேனும் ஒரு கிரக வெளியிலோ அல்லது நிலத்திலோ தானே விழ போகிறேன்...

நிச்சயமாக எங்கே விழுந்தாலும் அதற்கும் எனக்கும் உள்ள பந்தத்தை 

ஞாபகப்படுத்தி அதன் அரவணைப்பில் வாழ்ந்து விட்டு போய் விடுவேன்...

இந்த பிரபஞ்சமோ அல்லது அந்த வான் உலகமோ 

எதுவாக இருந்தாலும் எனக்கும் அதற்கும் பூர்வ ஜென்ம பந்தம் ஒன்று எப்போதும் 

பயணிக்கும் வரை நான் பயமற்றவளாகவே சஞ்சரிப்பேன்...

ஏனெனில் நான் இந்த பிரபஞ்ச விதிகளுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பயணி ✨🚣🚣🚣🚣.

#இரவுகவிதை🍁.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 12/06/24/புதன் கிழமை 

முன்னிரவு 10:35.

இரவு கவிதை 🍁

 


காலத்தின் நிழலில் 

இளைப்பாற வழியின்றி 

ஓடிக் கொண்டே இருக்கும் நான் 

கொஞ்சம் கொஞ்சமாக 

நிலத்தின் கைகளின் பேரன்பையும் 

உதறி தள்ளிவிட்டு எங்கோ

மனமுடைந்த நிலையில் 

ஓடிக் கொண்டிருக்கும் போது 

அந்த காலம் கொஞ்சம் 

என் கையை பிடித்து 

இழுத்து ஆர தழுவிக் கொண்டது 

எனது கண்ணீருக்கும் அங்கே 

ஒரு இளைப்பாறுதல் தேவை 

என்பதை 

அந்த காலத்தின் நெஞ்சை 

நனைத்து விட்ட 

எனது கண்ணீர் துளிகள் மூலம் 

உணர்ந்தேன்...

இரவு கவிதை 🍁.

#இளையவேணிகிருஷ்ணா/12/06/24/

புதன் கிழமை/முன்னிரவு 10:15.

இசையோடு ஒரு பயணம் 🎻

 


நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலி ஒலிபரப்பு சேவையில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி 🎻.

இன்றைய படைப்பாளி #எழுத்தாளர்பாலாசனீஷ்.

கீழேயுள்ள லிங்கில் நிகழ்ச்சியோடு இணைந்துக் கொள்ளுங்கள் நேயர்களே 🎻🙏🍁✨.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

திங்கள், 10 ஜூன், 2024

நள்ளிரவின் மெல்லிய குரல்

 


நான் எப்போதும் வெற்றியை பற்றியோ தோல்வியை பற்றியோ கவலைப்பட்டதே இல்லை...

வெற்றியோ தோல்வியோ அது சிறு சலனத்தை ஏற்படுத்தும் என்பதை நான் நிச்சயமாக அறிவேன்... ஆனால் அந்த சலனத்தை சொற்ப வினாடிகளிலேயே கொன்று புதைத்து விட்டு மாற்று வேலைக்கு எந்தவித சஞ்சலமும் இல்லாமல் சென்று விடுவேன்...

இது தான் நான் பயணிக்கும் சாலை என்று எவரிடமும் அகங்காரம் கொண்டு பேசியது இல்லை... ஏனெனில் சில மணித்துளிகளில் என் பயண சாலை மாறும் என்பது எனக்கு நன்றாக தெரியும்...

எனக்கு பிடித்தது என்று எல்லாம் ஒரு காலத்தில் இருந்தது... 

ஆனால் தற்போது இல்லை...

நான் இந்த காலத்தில் 

பயணிக்கிறேன் 

அவ்வளவு தான் ...

இது தான் நான் வாழ்வில் 

கற்றுக் கொண்ட அல்லது காலம் 

கற்பித்த கட்டணம் இல்லாத பாடம் 

என்று சொன்னால் அது மிகையல்ல....

#இளையவேணிகிருஷ்ணா.

#நள்ளிரவின் #மெல்லிய #குரல்.

நாள் 10/06/24/திங்கட்கிழமை/

முன்னிரவு 11:15.

ஆத்ம விசார கவிதை 🍁


என்னோடு பயணிக்கும் 

அந்த அபூர்வமான சிறு துகள் 

என்னுள் இருக்கும் 

ஆயிரம் துளைகளில் 

எங்கேயும் வழிந்து ஓடி விடாமல் 

பயணிக்கிறேன்...

காலமோ எனக்குள் இருக்கும் 

அந்த அபூர்வ துகள் 

 எங்கேயும் சிந்தி சிதறி விடாதா 

என்கின்ற ஏக்கத்தோடு 

என்னை துரத்தி 

பயணிக்கிறது...

நான் அந்த அபூர்வ துகளின் 

உரிமையாளர் இல்லை என்று 

எவரேனும் அந்த காலத்திற்கு 

புரிய வையுங்கள்...

#ஆத்ம தத்துவம் ✨.

#இளையவேணிகிருஷ்ணா/

நாள் 10/06/24/திங்கட்கிழமை/

முன்னிரவு 10:55.

இசையோடு ஒரு பயணம் 🎻 கிருஷ்ணா இணையதள வானொலி


 நேயர்கள் அனைவருக்கும் இனிமையான வணக்கம் 🙏.

இன்று இரவு இந்திய நேரம் ஒன்பது மணிக்கு உங்கள் கிருஷ்ணா இணையதள வானொலியில் இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சியில் எழுத்தாளர் #பாலா சனீஷ் அவர்களின் கவிதை தொகுப்போடு இனிமையான பாடல்கள் கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻🍁✨.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு சேவையை கேட்டு ரசிக்கலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

வெள்ளி, 7 ஜூன், 2024

வாழ்வின் முடிச்சு

 


வாழ்வின் சூட்சமத்தின் 

முடிச்சு எங்கே என்று 

தேடி அலைந்து 

களைத்து விடும் போது 

இந்த பிரபஞ்சம் எனை பார்த்து 

சிரித்து வைக்கிறது...

ஏன் சூட்சுமத்தை தேடி அலைகிறாய்...

இங்கே எனது பேரழகில் உனை 

புதைத்து கொள்...

சூட்சமத்தின் முடிச்சு தானாகவே 

உன் கை வந்து சேரும் என்று...

நானும் அதை ஆமோதித்து 

புதைத்துக் கொள்கிறேன் 

அதனுள் பேரன்பு கசிய...

#இளையவேணிகிருஷ்ணா/07/06/24/வெள்ளிக்கிழமை.

முன்னிரவு 10:30.

செவ்வாய், 4 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்

 


இன்றைய தலையங்கம்:- ரொம்ப அருமையான முடிவுகள்... அகங்காரம் கொண்டவர்கள் எப்படி அடுத்தவர்களை அனுசரித்து ஆட்சி கட்டிலில் அமர்வார்கள் என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழுகிறது மக்கள் மனதில்... எப்போதும் ஒரே சித்தாந்தம் தான் இருக்க வேண்டும் அரசியல்வாதிகளுக்கு... அது அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பதே...

அது சரி இப்போது தான் நான் வாஜ்பாய் கட்டமைத்த கூட்டணி ஆட்சியை நினைவு கூறுகிறேன் இங்கே... எவ்வளவு நல்ல மனிதர்...அவரையே கூட்டணி கட்சிகள் பாடாய்படுத்தி ஒரு வழி செய்து விட்டது அந்த கால கட்டத்தில்... அப்போது எனக்கு பிஜேபி சேர்த்த கூட்டணி கட்சிகள் மீது அவ்வளவு கோபம் இருந்தது... அவர் அவ்வளவு அழகாக அனைவரையும் அனுசரித்து அவரது அரசியல் நகர்வை மிகவும் அருமையாக கட்டமைத்து வழி நடத்தி அந்த கூட்டணி கட்சிகள் கொடுத்த தொல்லைகளுக்கு இடையே நிறைய மக்களுக்காக யோசித்து திட்டங்கள் வகுத்தார்...அவரை போன்ற பொறுமைசாலிகள் அடக்கம் உள்ளவர்கள் தற்போது பிஜேபியில் உறுதியாக இல்லை என்று எங்கே வேண்டும் என்றாலும் வந்து சத்தியத்தை உரைப்பேன்... ஆனால் இப்போது தனிக் காட்டு ராஜாவாக பத்து ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தவர்களுக்கு இந்த அனுபவம் மிகவும் புதிது... அதிலும் நிதிஷ் குமார் சந்திர பாபு நாயுடு இவர்கள் காலில் விழுந்து ஆதரவு தேட வேண்டும் என்று மம்தா சற்று முன் தான் பேட்டி கொடுத்து இருந்தார்.. அது இவர்களுக்கு எப்படி சரி வரும் ஏனெனில் எங்கேயும் தலை வணங்கி பழக்கம் இல்லாதவர்கள் இவர்கள்... குதிரை பேரம் பேசி பேசியே பழக்கப்பட்டவர்கள் இவர்கள்... இந்த முறை ஜனநாயக வழியில் செல்வார்கள் என்றால் அது நிச்சயமாக மக்களாகிய நாம் செய்த புண்ணியம் என்று தான் அறுதியிட்டு சொல்வேன்... பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று...

ஆனால் ஒன்று இப்போது தான் இந்தியா தனது பழைய அரசியல் தன்மையை புதுப்பித்து பயணிக்கிறது என்று சொல்வேன்..

மேலும் இந்தியாவை பொறுத்தவரை கூட்டாட்சி தத்துவம் தான் சரியான விஷயமும் கூட...

#அரசியல்நகர்வுகள்.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

திங்கள், 3 ஜூன், 2024

இன்றைய தலையங்கம்...

 


இன்றைய தலையங்கம்:-

ஒரே இடத்தில் இருந்தால் பற்று வரும் என்று தான் துறவிகள் இந்த பிரபஞ்சத்தில் ஒரே இடத்தில் நில்லாமல் தங்காமல் ஓடிக் கொண்டே இருந்தார்கள்.. ஆனால் அதற்கு ஒரு விதி விலக்கும் இருந்தது... மழைக் காலத்தில் மட்டும் ஒரே இடத்தில் இருக்கலாம் என்று...இதை நான் ஏன் தற்போது சொல்ல வருகிறேன் என்றால் தற்போது வரை பிரதமராக இருக்கும் நமது நரேந்திர மோடி அவர்களுக்கு பதவி மீது பெரும் மோகம் என்று தான் சொல்ல வேண்டும்...அதை அந்த கட்சிக்காரர்கள் தேச பற்றாக காட்ட போராடுகிறார்கள்...எதுவாகவோ இருந்து விட்டு போகட்டும்...நாளை அதாவது விடியும் போது ஜூன் 4 அன்று தேர்தல் முடிவுகள் பொழுது சாயும் போது ஏறக்குறைய தெரிந்து விடும் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்று... ஒரு வேளை தற்போது மத்தியில் ஆளும் வர்க்கத்தினர் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்று விட்டால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகார போதை தலைக்கு ஏறி மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஏதேதோ செய்து விடவும் வாய்ப்பு உள்ளது... ஆனால் எதிர் கட்சிகள் மற்றும் பிராந்திய கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரண மக்களின் பிரார்த்தனை... ஏனெனில் பெரும்பான்மை பிஜேபிக்கு தற்போது கிடைத்து விட்டால் நிச்சயமாக நாடாளுமன்றத்தில் எந்த மசோதாவிற்கும் எதிர் கட்சிகளின் ஒப்புதல் தேவைப்படாது... அவர்கள் ராஜ்ஜியம் தான்... அதனால் எதிர் கட்சிகள் நிறைய இடங்களை பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்துக் கொள்கிறேன்...

ஆனால் காங்கிரஸ்+கூட்டணி கட்சிகள் சில பல பிராந்திய கட்சிகள் வெற்றி பெற்றால் காங்கிரஸுக்கு கை கொடுத்து உதவ வேண்டும்... ஆனால் இதெல்லாம் குதிரை பேரமாக பிஜேபி செய்வதற்கு ஏற்கனவே தயார் நிலையில் தான் இருக்கும்...

ஆனால் விடியும் பொழுது என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்... காத்திருப்போம் 🍁.

#இன்றையதலையங்கம்.

#இளையவேணிகிருஷ்ணா.

நன்றி மறவாதீர்கள்

 


இந்த பிரபஞ்சத்தில் நாம் திருப்தியோடு வாழ வேண்டும் அப்போது தான் நல்ல அதிர்வலையை நாம் பெற முடியும் எனபதை விளக்கும் காணொளி கீழேயுள்ள லிங்கில் கேட்டு மகிழுங்கள் நேயர்களே 🎻✨🎉 

https://youtu.be/QIbpqHjGcfo?si=eD7xy0AoPq4Xl8T7

கிருஷ்ணா இணையதள வானொலி

 


வணக்கம் நேயர்களே 🙏.

தற்போது இந்திய நேரம் ஒன்பது மணி முதல் பத்து மணி வரை இசையோடு ஒரு பயணம் நிகழ்ச்சி கேட்டு ரசிக்கலாம் வாருங்கள் நேயர்களே 🎻✨🎉.

கீழேயுள்ள லிங்கில் வானொலி ஒலிபரப்பு கேட்டு ரசிக்கலாம் 🎻.

https://zeno.fm/amp/radio/krishna-fma76ufetpuy8uv/

ஞாயிறு, 2 ஜூன், 2024

ஆத்ம விசாரம் 🍁


 புதிதாக வாங்கிய சட்டை 

என்றேனும் நைந்து தான் போகும்!

அப்படி நைந்து போகும் போது 

புது சட்டையை வாங்குவதற்கு 

இயல்பான ஆசை இருக்கும்...

அப்படி தான் இந்த நைந்து போன 

உடலில் இருந்து 

விடுபட்டு மீண்டும் ஒரு கருவறையில் 

புகுந்து புத்தம் புது சட்டையாக 

வெளியே வருகிறோம்...

மீண்டும் ஆசையை வளர்த்து 

பிறந்து இறந்து பிறந்து இறந்து.....

தொடர் கதையாக...

அந்த ஆசை உங்களுக்கு 

இருக்கும் வரை 

இந்த பிறப்பு இறப்பு சூழலில் இருந்து 

விடுபட முடியாது!

#இரவு சிந்தனை ✨ 

ஆத்ம விசாரம் 🍁 

#இளையவேணிகிருஷ்ணா.

நாள் 02/06/24.

ஞாயிற்றுக்கிழமை.

முன்னிரவு பொழுது 11:25.