காலமெனும் கதவிடுக்கில்
மாட்டிக் கொண்டு
கண்ணீர் வடிக்கிறேன்...
காலமோ எதுவும் சொல்லாமல்
என் நிலையை ரசித்து
தன் முகத்தில்
புன்னகையை ஏந்தி
கடந்து செல்கிறது...
காலத்தை கொஞ்சம்
பெரும் குரலெழுப்பி
அழைக்கிறேன் நான்...
கொஞ்சம் நில்
எப்போது என்னை
நீ விடுவிப்பாய் என்று
பதில் சொல்லி விட்டு போ
என்கிறேன்
மிகவும் விரக்தியாக...
இது நாள் வரை
எத்தனை கற்பத்தில் பத்தில்
பயணித்தாய் என்று
உன் பிறவியை யோசித்து
கணக்கிட்டு கொண்டே இரு...
அதற்குள் நான்
வந்து விடுகிறேன்
என்றது
மிகவும் நிதானமாக...
நான் அந்த கணக்கீட்டிற்கான
புள்ளி விபரங்களை
எங்கே தேடி சேகரிப்பது என்று
குழப்பமாக பயந்து
கண்ணீர் வடிக்கிறேன்...
அப்போது அங்கே
சில பல மனிதர்கள்
மிகவும் சுதந்திரமாக
ஒருவருக்கொருவர்
பேசி சிரித்து செல்கிறார்கள்...
நான் அவர்களை
எவ்வளவு பிரயத்தனங்கள்
செய்தும் அழைக்க முடியவில்லை...
ஒரு வேளை அவர்கள்
காலத்திடம்
தமது பிறவி கணக்குகளை
ஒப்படைத்து விட்டு
சுதந்திரம் அடைந்து விட்டார்களா
என்று தெளிவுப்படுத்திக் கொள்ள
மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்
காலம் வரும் பாதை பார்த்து...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:12/08/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக