பக்கங்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2026

சமூக நிகழ்வெனும் மாய ஓட்டப்பந்தயத்தில்...

 



நான் எது எதிலோ 

நிம்மதி என்று 

ஓடிக் கொண்டே 

இருக்கிறேன்...

எந்தவித கேள்வியும் 

கேட்க நேரமில்லாமல் 

ஒரு மாய ஓட்டப்பந்தயம் 

எனும் சமூக நிகழ்வில்...


சில குடும்ப உறவுகளில் 

நிம்மதியாக 

உணரும் தருணங்களின் 

அடுத்த சில கால 

இடைவெளியில் 

அதே உறவு...


சில துன்பங்களை 

தூக்கி நம் மீது சுமக்க 

வைத்து விடுகிறது...

அப்போது 

நம்மை நிழலாக 

தொடர்ந்து வந்த நிம்மதி 

எங்கே ஒளிந்துக்கொண்டு 

கண்ணாமூச்சி ஆடுகிறது 

என்று தேடி 

அலைகிறேன்...


சில பிடித்த விஷயங்களில் 

ஆழ்ந்து 

என்னை தொலைக்கும் 

காலங்களில்

என்னை சேரும் புகழில் 

ஆழ் கடல் முத்து 

கிடைத்து விட்டதென

ஆனந்த கூத்தாடி 

களிக்கிறேன்..


அதே பிடித்த விஷயம் 

சில சமயங்களில் 

நானே வெறுத்து ஒதுக்கி 

எதுவும் செய்யாமல் 

காரியமற்ற நிலையில் 

கிடக்கிறேன்...


இங்கே எது உண்மை 

எது பொய்யென 

நுட்பமான தேடலில் 

நான் தொலைந்து 

கால வெளியில் சோர்ந்து 

அமரும் போகும் போது 


காலம் என்னை தேற்றி 

கை பிடித்து 

அழைத்து செல்கிறது... 


இங்கே 'நான்' 

தொலையும் வரை 

பாதி உண்மை

பாதி பொய்யென 

காட்சி கொடுத்து 

காட்சி பிழையாக 

சுற்றும் 

உன் பிறவி சூழலை 

முடிக்கும் வரை 

பாதி உண்மை எனும் 

மாயா சூழல் 

உன்னை விட்டு 

பிரியாது பயணிக்கும் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:12/08/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக