ஓடிக் கொண்டே
இருக்கிறேன்..
ஒன்றும் இல்லாத
விஷய சுகஙங எனும்
பறக்கும் சருகுகளை
நோக்கி...
அந்த சருகின் மதிப்பு
ஒன்றும் இல்லை என்று
தெரிந்தும்
மற்றவர்கள் கைக்கு
அந்த சருகு கிடைத்து விடக் கூடாது
என்ற அகங்காரம்
மனதில் பசைப் போட்டு
ஒட்டிக் கொண்டு
என் ஓட்டத்தை தீவிரமாக்கி
ஏதோவொரு தீவிர விசையை
மனதில் இயக்கி
ஓட வைக்கிறது...
எப்படியோ அந்த ஒன்றுக்கும்
உதவாத சருகு
என் கைகளில் கிடைத்து விட்ட
திருப்தியில்
வெற்றிக் களிப்போடு
நான் திரும்பி பார்க்கும் போது
என் பின்னால் எவரும் இல்லை
எங்கே என்று சற்றே
சுற்றும் முற்றும் பார்த்தேன்...
அவர்கள் வேறொரு
விஷய சுகங்கள் எனும்
சருகின் பின்
ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்!
நான் மீண்டும்
இந்த கையில் கிடைத்த சருகை
அங்கேயே நழுவ விட்டு விட்டு
அவர்கள் துரத்தி செல்லும்
சருகை நோக்கி
இன்னும் தீவிரமாக
ஓடுகிறேன்...
அந்த சருகை
மற்றவர்கள் கைக்கு
செல்லாமல்
எப்படியோ பிடித்து விட்டேன்..
அந்த சருகின் மகிமையை
ஆவலோடு பார்த்தால்
அது எதற்கும் உதவாததாக
உள்ளதை நினைத்து
மனம் வெதும்பி
அப்படியே சிறிது நேரம்
மூச்சு வாங்க அமர்கிறேன்...
இப்போது அவர்கள்
என்னை ஒரு முறைப்பு
முறைத்து விட்டு
வேறொரு விசய சுகங்களை
நோக்கி செல்கிறார்கள்...
இதை எல்லாம் சற்றே
தூர இருந்து
வேடிக்கை
பார்த்து கொண்டிருந்த
காலமோ என்னை
வாரியணைத்து
பேரமைதியில்
வாழ்வின் மேலான
விலை மதிப்பு இல்லாத
தாத்பரியத்தை
தனது மௌனமொழியால்
உபதேசத்தை
என் ஆழ் மனதிற்கு
கடத்துவதை
இந்த பிரபஞ்சம்
கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறது...
இதோ இந்த பிரபஞ்சத்தில்
ஒருவனை பக்குவப்படுத்தி விட்டோம்
என்ற திருப்தியில்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:31/01/26.
சனிக்கிழமை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக