பக்கங்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

சிறுவெளிச்சத்தின் தேடலாக -சிறுகதை..

 


ஒன்றிற்கும் அடங்காத வெளிச்சத்தின் வீரியத்தை இங்கே முழுவதும் அறிந்தவர்கள் எவரும் இல்லை என்ற போதும் இங்கே நான்

அந்த பெரிய வெளிச்சத்தின் வீதியில் உலாவின நாட்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்...

அந்த அற்புதமான நாட்கள் எல்லாம் கடந்த காலங்களாக மாறி விட்டதா என்று ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே நகர்கிறேன்...

இங்கே ஒரு பெண்ணின் சுதந்திரம் எவ்வளவு என்பதை எவராலும் அவ்வளவு துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியாது..

அதை பற்றி உங்களுக்கு ஏதேனும் துல்லியமாக அறுதியிட்டுக் கூற முடியும் என்றால் என்னிடம் ஓடோடி வந்து சொல்லுங்கள்...

ஏன் இப்படி அதிகாலையில் ஒரு புலம்பல் என்று நீங்கள் மட்டும் அல்ல..இதோ இந்த குளிர்ந்த இரவிற்கு விடை கொடுத்து விட்டு பகல் பொழுதிற்கு வழி விட்டு போய் கொண்டு இரவை கேளுங்கள்.. அது என் வேதனையை சொல்லும்...

ஏனெனில் நானும் அதுவும் தான் வெகுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.. தற்போது என் மீது பெரும் பரிவுக் கொண்டு பிரிகிறது.. இப்போது நீங்கள் என்னிடம் மாட்டிக் கொண்டீர்கள்..

ஏன் இத்தனை பீடிகை என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.. ஏனெனில் இரவே இவ்வளவு நேரம் எனது இம்சையை சகித்துக் கொண்டு என் புலம்பலை கேட்டு விட்டு தான் விடை பெற்று செல்கிறது... பிறகு நீங்கள் மட்டும் என்ன விதி விலக்கா என் புலம்பலில் இருந்து தப்பிப்பதற்கு...

சரி விசயத்திற்கு வருகிறேன்...

நான் தமிழ் அரசி..நான் ஒரு படைப்பாளி என்று சொன்னால் நீங்கள் நம்ப போகிறீர்களா என்று எனக்கு தெரியாது.. ஆனால் நான் எனது பார்வையில் ஒரு படைப்பாளி.. நான் ஏதோ எனக்கு தெரிந்த கற்பனையில் கதைகளை கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறேன்..

ஆனால் பாருங்கள் எனக்கு திருமணம் செய்ய வீட்டில் ஏற்பாடுகள் செய்து விட்டார்கள்... நான் முன்பு போல எழுதுவேனா என்று கவலை அதிகமாக இருக்கிறது... இங்கே எழுதுவது என்பது எல்லாம் என்னை பொறுத்தவரை பள்ளி மாணவ செல்வங்கள் போல ஏதோவொன்று எழுதி பக்கத்தை நிரப்பி விடுவதாக நான் நினைப்பதில்லை..

அது ஒரு அற்புதமான வாழ்வியலை பற்றி அசைப்போடும் தருணத்தை எழுத்தில் கொண்டு வரும் கலை..

இதோ நீங்கள் வாசித்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதை முழுவதுமாக என்றால் நான் வாழ்வின் ரசனையை அழகான பார்வையில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வேன்...

திருமண பந்தத்தில் நுழைந்து விட்டால் நான் இதே போல ஒரு கற்பனையை எப்படி வடிப்பேன் என் படைப்புகளில்...

எப்போதும் காலையில் இட்லி தோசை சட்னி மதியம் சாப்பாடு அதை தொடர்ந்த வீட்டில் ஏற்படும் சண்டைகள்.. என் பக்கத்து

வீட்டுக்காரரோடு இருக்கும் அக்கப் போர்கள் எதிர் வீட்டு கணவன் மனைவி சண்டை... இப்படி தான் நான் எழுத உட்காரும் போதெல்லாம் தோன்றும்.. இதெல்லாம் இங்கே நீங்களும் தான் அனுபவித்து வருவீர்கள்..அதே நிகழ்வை எழுத்திலும் வாசிக்கும் போது உங்களுக்கு முதலில் சுவாரஸ்யமாக சிரித்துக்கொண்டே வாசிப்பீர்கள்.. பிறகு...

அதை விடுங்கள்.. நீங்கள் என் எழுத்து பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு படைப்பாளி பக்கத்தில் சென்று உங்களுக்கு பிடித்த எழுத்து நடையை வாசிக்க தான் போவீர்கள்.. அதுவல்ல என் கவலை...

நீங்கள் தற்போது கூட என் படைப்புகளை பெரிதாக வாசித்து விடவில்லை.. அதனால் எனக்கு அதன் பாதிப்பு குறைவு தான்..

மேலும் நான் என் ஆத்ம திருப்தி எனக்காக நான் வடித்து வைத்த வாழ்வியல் ஓவியத்தை என் எழுத்தில் வடித்து எனக்கு ஒரு துன்பம் வரும் போது நானே எனக்கு ஆறுதலாக என் படைப்பில் ஆறுதல் தேடிக் கொள்வேன்.. அப்படி தான் என் படைப்புகள் இருக்க வேண்டும் என்று நான் ஒரு விதி வகுத்து இருக்கிறேன்..

ஆனால் தற்போது நினைத்தாலே தலை சுற்றுகிறது..

நான் பாட்டுக்கு எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கிறுக்கி கொண்டு வாழ்க்கையை ஓட்டி விடலாம் என்று இது நாள் வரை வந்த வரன்களை ஏதோவொரு சாக்கு வைத்து தட்டி கழித்து வந்தேன்..

ஆனால் தற்போது விடாப்பிடியாக ஒரு வரனை காட்டி நல்ல குடும்பம் நல்ல பையன் நன்றாக சம்பாதிக்கிறான் குறிப்பாக அவர்கள் வீட்டில் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து இருக்கிறது என்று பேசி பேசி நீ சம்மதித்து தான் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று இல்லை.. நாங்கள் முடிவு செய்து விட்டோம் என்று அவர்கள் வீட்டில் பேசி நிச்சயதார்த்தமும்  முடித்து விட்டார்கள்..நீ தான் பெரிய எழுத்தாளினி ஆயிற்றே..நீ உன் ரசனையை சொல்லி வரன் தேட சொல்லலாமே வீட்டில் என்று கேட்கலாம்.. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல சுலபமான காரியமல்ல எங்கள் வீட்டில்.. அதுவும் எங்கள் வீட்டில்.. நினைத்துக் கூட பார்க்க முடியாது.. பிறகு எப்படி எழுதுகிறீர்கள் என்று கேட்டால் நான் வீட்டில் அமர்ந்து எதையோ கிறுக்கிக் கொண்டு இருப்பதை அவர்கள் இடத்தில் காட்டினாலும் அதை வாசிக்காமல் போய் சமையல் கற்றுக் கொள்.. அது தான் போகிற வீட்டில் எங்களுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று சொல்லி விடுவார்கள்.. இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பமா என்று கேட்காதீர்கள்.. இப்படி தான் இங்கே சமூகம் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது..

அதை ஒட்டி தான் என் குடும்பமும்..

நான் அதற்காக சமைப்பது பெண் வேலை இல்லை என்று பெண்ணியம் பேசும் கூட்டத்தில் கொடி பிடிப்பவள் அல்ல... ஆனால் அது மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நினைப்பவள்...

சரி அதை விடுங்கள்..இதோ இந்த விடியலில் என்னை பார்த்து விட்டு சென்ற அந்த பையன் இன்று சாதாரணமாக வந்து பார்த்து விட்டு செல்ல வருவதாக தகவல் என் குடும்பத்தாரிடம் இருந்து எனக்கு நேற்று மாலை வந்தது..

நீங்கள் கேட்கலாம்.. இங்கே எங்களிடம் நீங்கள் புலம்புவதற்கு பதிலாக அலைபேசியில் அந்த பையனிடம் உங்கள் எழுத்து கனவை பேசலாம் இல்லையா என்று...

அதில் தான் ஒரு சிக்கல்...

நான் அலைபேசி எண்ணை கூட வாங்கவில்லை.. எனது குடும்பத்தாரும் என்னிடம் கொடுத்து பேசு என்று சொல்லவில்லை.. அதான் நிச்சயதார்த்தம் ஆகி விட்டதே என்று கொடுக்கலாம் இல்லையா..

ஆனால் அவர்களுக்கு ஒரு பயம்.. ஏதாவது பேசி திருமணத்தை இவள் நிறுத்தி விடுவாள் என்று...

பாருங்கள் இந்த விஞ்ஞான உலகில் நான் எந்தளவிற்கு என் குடும்பத்தை நேசித்து அவர்கள் பேச்சிற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் என்று உணர்கிறீர்களா...

இதோ காலை பத்து மணிக்கு வரன் பையன் வர போகிறான்..

நான் அவனிடம் எப்படியாவது நான் இதுவரை எழுதி வைத்த கிறுக்கல்கள் பற்றி அவனிடம் சொல்லி ஒரு புத்தகம் போட்டு விட உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள போகிறேன்... அவனுக்கு அந்த ரசனை இருந்தால் எழுத்தின் மீதான தீராத காதல் இருந்தால் நான் மிகவும் கொடுத்து வைத்தவள் தான்...

அந்த அதிருஷ்டம் மட்டும் எனக்கு கிடைத்து தொடர்ந்து எழுத அந்த வீட்டில் ஒரு சுதந்திரம் நிம்மதியான சூழல் கிடைத்து விட்டால் போதும்.. நான் ஆனந்தமாக உணர்வேன்..

பார்ப்போம்... ஆனால் ஒன்று நிச்சயம்.நான் திருமண பந்தத்தில் நுழைந்தாலும் வீடு சூழலை கதை களமாக ஆக்காமல் எனக்கான தனி தன்மையில் தான் எழுதுவேன்... அதனால் அதை எதிர் பார்த்து வராதீர்கள்...🤷.

இதோ இங்கே நன்றாக வெளிச்சம் பரவுகிறது சூரியனின் கருணையால்.. எனது வாழ்விலும் நான் எனக்கான சிறு வெளிச்சத்தை இங்கே தேடி அலைகிறேன்...

ஆம் நான் சொல்ல மறந்து விட்டேன் வரன் பையனின் பெயர் தமிழ் அன்பன்... நல்ல முறையில் என் கனவு பலிக்க நீங்களும் இந்த விடியலில் எனக்காக பிரார்த்தனை செய்துக் கொள்ளுங்களேன்..புண்ணியபாக போகும்..😌.

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக