பக்கங்கள்

சனி, 22 நவம்பர், 2025

அந்த ரசிக்கப் படாத இரவொன்று...


அந்த ரசிக்கப் படாத இரவொன்று 

மெல்ல மெல்ல சத்தம் இல்லாமல்

விடைபெறுகிறது...

இங்கே அதன் முடிவில் நான்

எனக்கான அத்தியாயம் எழுத

அமர்ந்து விட்டேன்...

இன்னும் நம்பிக்கை இழக்காமல்

அந்த இரவின் எச்சம்

அது பற்றிய அழகிய நொடிகளின் 

குறிப்புகளை

எனக்காக அனுப்பிக் கொண்டே

இருக்கிறது...

தீராத எழுத்தின் மீதான

அதீத மோகம் கொண்ட

இளம் எழுத்தாளனை போல...

அந்த குறிப்புகளை நான்

எந்த பக்கத்தில் சேர்த்தாலும்

அதன் சுவை குறைந்து விடும் என்று

தனியாக சேகரித்து வைக்கிறேன்...

இது தெரியாமல் அதுவோ

என் மீது ஊடல் கொண்டு

குறிப்புகளை அனுப்பி வைப்பதை

நிறுத்தி விட்டது...

நான் என் அத்தியாயங்கள்

எழுதுவதையும் அது குறிப்புகள்

அனுப்பும் வரை தற்காலிகமாக

நிறுத்தி வைக்கிறேன்...

இது பற்றி அதனிடம் தூது செல்ல

இங்கே இந்த அதிகாலை வேளையை

கெஞ்சி கூத்தாடி அனுப்பி வைக்கிறேன்...

இதோ அதுவும் அதன் சுழற்சியில் 

இருந்து

தற்காலிகமாக விடுப்பட்டு 

இரவின் எச்சத்தின் வாசலில்

நிற்கிறது மெல்லிய கூப்பாடு

போட்டுக் கொண்டு...

அங்கே இப்போது தான் விழித்த 

பறவைகள்

அந்த கூப்பாட்டின் ஓசையில்

சிறிது பயந்து சிறகை சிலிர்த்து

மெலிதாக முணகுகிறது...

எப்படியேனும் இன்று அந்த இரவின்

ரசனை மொழிகளை 

தனி புத்தகமாக பதிவேற்றம் செய்து

அதனை கொண்டாடி விட வேண்டும்

என்று அந்த தூதுவராக பொழுதை

எதிர் பார்த்து காத்திருக்கிறேன்...

இன்னும் சில பல குறிப்புகள்

எப்படியேனும் அதனிடம் உரிமையோடு

சண்டைப் போட்டு

வாங்கி விடுவான் என்று...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:23/11/25

ஞாயிற்றுக்கிழமை.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக