அந்த ஒரு மழைக் கால
மாலை நேரம்...
ஒரு கோப்பை
தேநீர் ஒன்றோடு
முற்றத்தில் அமர்ந்து
சிறு மிடறாக பருகிக் கொண்டு
இருக்கிறேன்...
விழும் மழைத் துளியை
வேடிக்கை பார்த்தபடி...
எங்கிருந்தோ வந்த குருவி
கீச் கீச்சென்று சத்தமிட்டு
என்னிடம் ஏதோ சொல்ல
நினைத்தது போல
தோன்றியது...
சட்டென்று திரும்பி பார்த்தேன்...
அது நீயும் நானும் சேர்ந்து
அன்றொரு நாள் பேசி சிரித்த
கைப்பிடி சுவரில் அமர்ந்து
என்னை நோக்கி
சத்தமிட்டுக் கொண்டே
இருந்தது...
நான் மறந்து விடவில்லை
உன்னை...
நீ மறந்து சென்று
ஆண்டு பலவாகி விட்டது...
இதோ இந்த மழை...
உன்னோடு அன்றொரு நாள்
இதே போல தேநீர் கோப்பை...
இவையெல்லாம்
மறக்க தான்
நான் இங்கே இடம் மாறி
அமர்ந்து தேநீரை மிடறு மிடறாக
பருகி உன் நினைவை
அழிக்க பெரும் முயற்சி
செய்துக் கொண்டு இருக்கிறேன்...
மீண்டும் இங்கேயும்
சூட்சம உருவெடுத்து வந்து
என்னை நீ துன்புறுத்தி
ரசிக்காதே காதலே...
நான் இங்கே இந்த பிரபஞ்சத்தின்
ஒரு துளியாக கரைந்து
ஒன்றும் இல்லாமல் ஆகும் வரை
வாழ்ந்து தானே ஆக வேண்டும்...
அந்த வாழ்தலில்
இதோ இங்கே
ஏதோ சில நாட்களில்
பெய்யும் மழை
உன் நினைவுகளை
பெரும் வெள்ளமாக
அடித்துச் சென்று விடும்
காலத்திற்காக தான்
பெரும் ஏக்கம் கொண்டு
ஒரு கோப்பை தேநீர் கோப்பை
துணை எனக்கு தேவைப்படுகிறது...
நீ சற்றே என் நினைவில் இருந்து
விலகி நிற்பாயா...
நான் கொஞ்சம் என்னை
சற்றே நிலைநிறுத்திக் கொள்கிறேன்..
இதோ இந்த கோப்பை தேநீர்
இப்போதும் என்னை
நேசித்துக் கொண்டே
இருக்கிறது...
உன்னை போல கருணை இல்லாமல்
விலகி செல்லாமல்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:21/01/26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக