பக்கங்கள்

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

என்னோடு பயணிக்கும் சில சுவைகள் 💫

 


நான் அப்படியே ஹெட் செட்டில் பாடல் கேட்டு கொண்டே தனது பணியில் மூழ்கி இருந்தேன்.. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சுதா அதிகாலையிலேயே கிளம்பி சென்று விட்டாள்.. அவளோடு எழுந்து அவளுக்கு தேவையான உதவிகளை செய்ததில் இருந்து அவளை அனுப்பி விட்டு உறக்கம் வராததால் அலுவலக பணியை செய்யலாம் என்று தனது லேப்டாப்பை ஆன் செய்து வேலை செய்துக் கொண்டு இருந்தேன்.. மணி பார்த்தால் ஆறாகி இருந்தது.நான் ஏதோவொரு யோசனையில் இருக்கும் போதே பால்க்காரர் அழைப்பு மணியை அழுத்தினார்.. போய் பால் வாங்கி விட்டு வந்து வேலை பார்க்கலாம் என்று போய் கதவை திறந்தேன்.. என்னம்மா இன்று ஞாயிற்றுக்கிழமை தானே.. நீங்கள் எப்போதும் வர தாமதமாகும்.. ஆனால் அழைப்பு மணியை அழுத்தியவுடன் வந்து விட்டீர்களே என்று ஆச்சரியமாக கேட்டார்..

நானும் எனது தோழி நேற்று மாலையில் வந்து இருந்தாள்.. அவள் இன்று அதிகாலை கிளம்பியதால் நானும் கொஞ்சம் சீக்கிரமாக எழு வேண்டிய அவசியம் வந்து விட்டது.. என்றேன் புன்னகையோடே..

சரிங்க அம்மா.. மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு பாலை ஊற்றி விட்டு சென்று விட்டார்..

நான் அந்த பாலை எடுத்துக் கொண்டு சமையலறையில் சென்று எனக்கு பிடித்த தேநீரை தயாரிக்க ஆயத்தம் ஆனேன்.. மீதி பாலை பிரிட்ஜில் வைத்து விட்டு இணைய வானொலியில் பாடல் கேட்டு கொண்டே நான் தயாரித்த தேநீரை பருகினேன்..

மிகவும் நிதானமாக தேநீரை பருகுவதில் இருக்கும் ஆனந்தமானது ஈரேழு உலகத்திலும் இல்லை..

அதை பருகும் போது அதில் மட்டுமே கவனம் செலுத்தி பருகி பாருங்கள்.. அப்போது தான் தேநீர் அல்ல அது ஓர் அமிர்தம் என்று உங்களுக்கு புரியும்..

இந்த பரபரப்பான உலகத்தில் எவரை கேட்டாலும் சாப்பிட தானே சம்பாதிக்கிறோம் என்று பெரும்பாலான மக்கள் சொல்வார்கள்.. ஆனால் ஓர் தேநீரை கூட ரசித்து பருக மாட்டார்கள்.. என்ன ஓர் விசித்திரமான குணம்..என்று உங்களுக்கு கூட சிரிப்பு தான் வருகிறது இல்லையா..

சரி தேநீர் பருகி முடித்தாயிற்று.. உங்களோடு தேநீரின் சுவையை சிலாகித்து பேசிக் கொண்டே..

இப்போது சிஸ்டத்தில் அமரலாமா என்று யோசனை வந்தது.. வேண்டாம் என்று அந்த முடிவை மாற்றிக் கொண்டேன்..

சிஸ்டத்தை சட் டவுன் செய்து விட்டு போய் குளிக்க சென்று விட்டேன்.. குளித்து முடித்து வந்தவுடன் அப்படியே இஷ்ட தெய்வமான நடராஜருக்கு ஓர் விளக்கை ஏற்றி விட்டு கண் மூடி தியானம் செய்து முடிக்கும் போது அழைப்பு மணி அழைத்தது..

நெற்றியில் திருநீறு வைத்துக் கொண்டு வேகமாக சென்று கதவை திறந்தேன்..

அங்கே கிருஷ்ணா நின்று இருந்தான்..புன்னகையோடே..

எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..கிருஷ் நீயா.. என்ன இந்த காலை நேரத்தில் என்றேன்.. ஆச்சரியம் குறையாமலேயே..

ஏன் நான் உன்னை பார்க்க உன்னிடம் இந்த வீட்டிலும் எல்லாம் பர்மிஷன் கேட்டு விட்டு தான் வர வேண்டுமா என்றான் குறுஞ்சிரிப்போடே..

அப்படி எல்லாம் இல்லை.. ஆனால் ஓர் அலைபேசி குறுந்தகவல் கூட இல்லாமல் இவ்வளவு காலையில் உன்னை பார்த்தவுடன் எனக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி என்றேன்..

நதி இங்கே அதிசயங்கள் எல்லாம் எவரையும் கேட்டு விட்டு வருவதில்லை.. அதனால் தான் அது அதிசயம் என்றான்..

போதும் போதும் உனது வசீகரமான பேச்சு என்று சொல்லி அவனை வீட்டிற்குள் அனுமதித்தேன்..


சரி கிருஷ் என்ன சாப்பிடுகிறாய் என்றேன்..

நீ என்ன செய்தாலும் அது அமிர்தம் தான்.. அதனால் உனது விருப்பம் என்றான் மிகவும் உற்சாகமாக..

நான் போய் காலை சிற்றுண்டி தயாரிக்க செல்வதற்கு முன் அவனிடம் ஓர் வார இதழை திணித்து விட்டு சமையலறையை நோக்கி சென்றேன்..

அவனும் அதை புரட்டி ஆவலாக படிக்க துவங்கினான்..

நான் அவனுக்கு பிடித்த தோசை மற்றும் தக்காளி சாம்பார் கொஞ்ச நேரத்தில் தயாரித்து அவனை சாப்பிட அழைத்தேன்..

கிருஷ்..வா.. உனக்கு பிடித்த சிற்றுண்டி தயார் என்று சொல்லிக் கொண்டே மேசையில் கொண்டு வந்து வைத்தேன்..

அவனும் மிகவும் ஆவலாக இதோ வந்து விட்டேன் நதி என்று சொல்லி ஆவலாக வந்தான்..

நானும் அவனும் சேர்ந்து சாப்பிட்டோம்..சில பல விசயங்களை பேசிக் கொண்டே...

சாப்பிட்டு கை கழுவி முடித்தவுடன் நதி..உனது கைமணத்தில் உனது காதல் தேநீரை கொஞ்சம் எடுத்து வா என்றான்..

இதோ.. கொண்டு வந்து தருகிறேன் என்று இஞ்சி மணத்தோடு நான் கொண்டு வந்த தேநீரை மிகவும் ரசித்து அவன் பருகிய விதத்தை ரசித்தேன்..

நான் கண் கொட்டாமல் பார்ப்பதை பார்த்து என்ன என்றான் புருவங்களை கொஞ்சம் உயர்த்தி..

அப்போது தான் நான் அவனையே பார்த்துக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன்.. ஒன்றும் இல்லை..நீ என் காதல் தேநீரை என்னை போல ரசித்து பருகுவதை கொஞ்சம் என்னை மறந்து ரசித்தேன்.. என்றேன் கொஞ்சம் சிரிப்போடு..

ம்ம்..ரசனை எப்போதும் உன்னிடம் குறைவதில்லை நதி என்றான்..

பிறகு கொஞ்ச நேரம் எங்கள் பணிகளை பற்றி பேசிவிட்டு சமூகத்திடம் எங்கள் பார்வை திரும்பியது..

கிருஷ்.. இங்கே இந்த வார இதழை முழுவதும் படித்து விட்டாயா என்றேன் மேசையில் இருந்த அந்த வார இதழை காட்டி..

ஆமாம்.. படித்து விட்டேன் என்றான்..

அதில் ஓர் சிறப்பு கட்டுரை வாசித்தாயா.. அதில் சமீபத்தில் பள்ளியில் ஓர் மாணவி எழுதிய உருக்கமான கடிதத்தை படித்து விட்டு என்னால் கடந்த சில நாட்களாக உறக்கமே இல்லை என்று சொன்னேன்..

ஆம் நதி.. எனக்கும் அந்த கட்டுரையை படித்து விட்டு மனம் கனத்தது என்றான்..

ஏன் இப்படி படித்த மேதைகள் தான் பல தவறுகளை செய்கிறார்கள்.. என்றான்.

அதுவும் கல்வி துறையில் இப்படி அசிங்கங்கள் நடப்பது தான் மிகவும் வேதனையான விசயமாக உள்ளது என்றேன்..

இப்படியான அவலங்களுக்கு ஓர் முடிவே இல்லையா கிருஷ் என்றேன்.

ஏன் இல்லாமல்.. மாணவிகளின் பெற்றோர்கள் தீவிரமாக இந்த விசயத்தை பள்ளி நிர்வாகத்திடம் சென்று கூட்டமாக முறையிட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு சட்ட ரீதியாக தண்டனை வாங்கி தர முயற்சி செய்ய வேண்டும்.. பள்ளி பெயர் கெட்டு விடக் கூடாது என்று சுயநலமாக யோசிக்கக் கூடாது..

இங்கே கல்வி கூடம் தொழில் ரீதியாக பார்க்கப்படும் உச்ச கட்டமாக தான் இப்படி எல்லாம் அவலங்கள் நடக்கிறது.. என்றான்.

கொஞ்ச நேரம் அமைதிக்கு பிறகு கிருஷ் என்ன விசயமாக இவ்வளவு காலையில் வந்தாய் என்று சொல்லவே இல்லையே என்றேன்..

சும்மா தான் நதி.. ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது..சரி உன்னிடம் கொஞ்ச நேரம் பேசி விட்டு போகலாம் என்று வந்தேன் என்றான்..

அப்படியா மகிழ்ச்சி கிருஷ்..

நாளை மீண்டும் அலுவலகம் போக வேண்டும் இல்லையா என்றேன்..

ஆம் நதி.. இந்த தொடர் சுழற்சி ஓர் அலுப்பை ஏற்படுத்துகிறது.. வாழ்க்கை என்றால் இவ்வளவு தானா.. இந்த சுழற்சியில் வாழ்க்கை தொலைந்து விடுமா.. இல்லை நாம் தொலைந்து விடுவோமா என்று தெரியவில்லை என்றான் மிகவும் சோர்வாக..

நான் சிரித்தபடியே அப்படி எல்லாம் இல்லை கிருஷ்.. நாம் எந்த வேலையை தொடர்ந்து செய்தாலும் இப்படி தான் சோர்ந்து போய் விடுவோம்... அதனால் தான் இடை இடையே நமக்கு பிடித்த விசயத்தை செய்துக் கொண்டு மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றேன்.

ம்ம்..நீ சொல்வது சரிதான்..நதி என்றான்..

பிறகு கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தோம்..

சரி நதி வா கொஞ்சம் வெளியே காலாற நடந்து வரலாம் என்று எழுந்து வாசல் பக்கம் வந்தான்.. நானும் சரி கிருஷ்.. இதோ போகலாம் என்று வாசல் கதவு சாவியை எடுத்துக் கொண்டு நடந்தேன்..

கதவை பூட்டி விட்டு சாலையில் இறங்கி நடந்தோம்..

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் அவ்வளவு கூட்டம் இல்லை.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடந்துக் கொண்டு இருந்தார்கள்.. எட்டு மணிக்கு எவர் எழுந்து விட போகிறார்கள் என்று சாலையும் கிடைத்த இடைவெளியில் மிகவும் அழகாக ஓய்வெடுத்துக் கொண்டது..

நாங்கள் அந்த மனிதர்களின் நெருக்கம் இல்லாத  சாலையில் அந்த பனியை ரசித்து காலாற நடந்தோம்.. வேடிக்கை பார்த்தபடியே..

அங்கே பல பெரியவர்கள் குளிர் தாங்க முடியாமல் வைராக்கியத்தோடு நடந்து கொண்டு இருந்தார்கள்.

கிருஷ் அங்கே பார் எத்தனை பெரியவர்கள் இந்த குளிரிலும் அதை பொருட்படுத்தாமல் நடக்கிறார்கள்.. மிகவும் உற்சாகமாக.. ஆனால் நமது தலைமுறை இன்னும் போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டு இருக்கிறோம் என்றேன்..

ஆம் நதி.. ஆனால் நமது வாழ்வியல் முறையே மாறி விட்டதே... அதுவும் கூட காரணமாக இருக்கலாம்.பெரும்பாலும் இரவில் நிறைய பணிகள் கணினி துறையில் இருப்பவர்களுக்கு..இரவு பணிக்கு செல்பவர்கள் இங்கே அதிகரித்து விட்டது.. அதுவும் இல்லாமல் ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு பணிக்கு செல்பவர்கள் என்று இப்படி.. என்றான்..

அப்படியே அந்த இளங்காலைப் பொழுதை ரசித்தபடியே மிகவும் நிதானமாக நடந்தோம்..

ஏன் கிருஷ் இப்படியே வாழ்வை சுவை இல்லாமல் வாழ்வது நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்ற போதும் நடைமுறை வாழ்வில் செலவினங்களை, வாழ்வை எதிர்கொள்ள எத்தனை போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி உள்ளது இன்றைய மனித இனத்திற்கு என்று கவலைப்பட்டு சொன்னேன்.

ஆமாம் நதி..நமது முன்னோர்கள் எவ்வளவு அழகாக வாழ்வை ரசித்து வாழ்ந்து விட்டு சென்று இருக்கிறார்கள்.. நாம் வாழ்வை பற்றிய சிறு புரிதல் கூட இல்லாமல் வாழ்ந்து சக்கையாக நாட்களை நகர்த்துகிறோம் இல்லையா என்றான்..


ஆமாம் கிருஷ்..தேவைகளை பெருக்கிக் கொண்டே செல்கிறோம்.. ஒரு பக்கம் ஜடபொருட்களை குவித்து குவித்து வைக்கிறோம்..அது தேவையோ இல்லையோ .. எல்லாமே இங்கே இயந்திரத்தனமாக போய் கொண்டு இருக்கிறது இல்லையா.. என்றேன்..

சரி நதி.. பேசிக் கொண்டே நிறைய தூரம் வந்து விட்டோம்..இதோ அருகே தான் பூங்கா உள்ளது.. அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு செல்லலாமா என்றான்..

ஓ..தாராளமாக என்று சொல்லி விட்டு உற்சாகமாக சென்றோம்.

அங்கே உள்ள சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தோம்.கொஞ்ச நேரம் அமைதியாக அங்கே இங்கும் அங்கும் சுற்றி திரிந்த பறவைகளை ரசித்தோம்.

கிருஷ்.. இங்கே சிறகடித்து பறக்கும் பறவைகளை பார்.. எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது.. நம்மையும் உற்சாகப்படுத்தும் அதன் துடிப்பான சிறகை பார்த்து நமக்கும் உற்சாகமாக இருக்கிறது இல்லையா.. என்றேன்..

ஆமாம் நதி.. அந்த பறவைகள் மட்டுமே எப்போதும் போல தனது இயல்பை மாற்றிக் கொள்ளாமல் அன்றில் இருந்து இன்று வரை இருக்கிறது..

ஆனால் நாமோ நமது இயல்பை தொலைத்து வெகு தூரம் வந்து விட்டோம் இல்லையா என்றான்.

ஆம் கிருஷ்.. இந்த மாதிரி மற்ற ஜீவராசிகளை பார்க்கும் போது நாம் வெட்கி தலைகுனிய தான் வேண்டி உள்ளது.. சின்னஞ் சிறு ஜீவராசிகள் கூட வாழ்வை அதன் இயல்பை சிதைக்காமல் வாழும் போது ஆறறிவு உள்ள நாமோ நமது வாழ்வியல் அமிர்தத்தை தொலைத்து விட்டு ஏதோவொரு சுவையை தேடி அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறோம் என்றேன்..

சரி நதி நாம் கிளம்பலாமா..வெகு நேரம் ஆகிவிட்டது என்றான்.. கிருஷ்.

நதியும் ஆம் கிருஷ்.. இப்படி மிக இயல்பாக பேசி மகிழ்ந்து வாழ்வின் சுவையை நிதானமாக ரசித்து சுவைத்து நாட்களாகி விட்டது..

இன்றைய விடியல் எனக்கு புது உற்சாகத்தை கொடுத்தது என்றேன்..

எனக்கு கூட நதி.. மீண்டும் இதேபோல் ஓர் தருணத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

என்றான்..

நாங்கள் அந்த பூங்காவை விட்டு கிளம்பும் போது எங்களை சுற்றி சில பறவைகள் அதன் பாஷையில் ஏதோ பேசி எங்களை வட்டமிட்டது..

நாங்களும் அதை கவனித்து ஒருவரையொருவர் பார்த்து சிறு முறுவல் செய்து கொண்டு அந்த பறவைகளுக்கு கையசைத்து விடை பெறுவதை பார்த்து அந்த பூங்காவில் இருந்த சில மனிதர்கள் கவனித்து எங்களை பார்த்து புன்னகைத்ததை கவனித்து அவர்களுக்கும் கையசைத்து சாலையில் இறங்கி நடந்தோம்..

பூங்காவும், மீண்டும் எங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மௌனமொழி பேசியது...

#இளையவேணிகிருஷ்ணா.

நாள்:26/01/26.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக