பக்கங்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

அலைகள்

அன்பர்களே வணக்கம்.
  நாம் இப்போது பார்க்க இருப்பது அலைகள். நாம் அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு விசயம். அலைகளை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் உள்ளார்களா என்ன?.இல்லை தானே.
    சரி நேயர்களே நமக்கும் அலைக்கும் ஏதோவொரு தொடர்பு இருக்கிறது. அதனால் தான் நாம் அலைகளை நேசிக்கிறோம்.என்ன புரியவில்லையா?.ஆம் நேயர்களே. நாமும் ஓயாமல் எண்ண அலைகளால் அவதிப்படுகிறோம்.இந்த அலையும் ஓயாமல் அடித்து அடித்து கரையை பதம் பார்க்கிறது.
      நமது எண்ண அலைகளுக்கும் கடல் அலைகளுக்கும் எப்போதும் ஓய்வே இல்லை. ஆனால் நாம் அமைதியை தேடும் போதெல்லாம் கடல் அலைகளையே ரசிக்கிறோம்.என்ன ஒரு விந்தை?.நமது மனம் அமைதி இழக்கும் போது அமைதியான இடத்தை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் ஏன் எப்போதும் ஆரவாரமாக சத்தத்தை எழுப்பும் அலைகள் அடிக்கும் கடலை தேர்ந்தெடுக்கிறோம்?.யோசியுங்கள் அன்பர்களே.
     கடல்அலைகள் சத்தம் எழுப்பி எழுப்பி கரையை தொட்டாலும் அது மீண்டும் கடலிலியே சென்று சேர்கிறது. அதுப்போலவே நமது மனமும் எண்ண அலைகளால் அவதிப்படும்போது நாம் ஆழ்மனதை சென்று சேர வேண்டும். ஏனெனில் ஆழ்மனது எப்போதும் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கும். மேல் மனது தான் அதிக கூச்சலிட்டு கொண்டே இருக்கும்.
   கடலிலும் மேற்பரப்பில் தான் அதிக ஆவாரங்கள் சத்தங்கள். ஆனால் கடலின் ஆழம் எப்போதும் அமைதியானது.அதனால் தான் நாம் நமது உணர்வை ஒத்த கடலில் எப்போதெல்லாம் அமைதியை இழக்கிறோமோ அப்போதெல்லாம் கடலில்  தஞ்சம் அடைகிறோம்.
   நாம் கடலில் கற்றுக்கொள்ள ஏராளமான விசயங்கள் இருக்க மேம்போக்காக ரசித்து வந்து விடுகிறோம். உண்மையிலேயே கடல் நமது தாயை ஒத்தவள்.ஏனெனில் நாம் அமைதி இழந்து தவிக்கும் போது தனது அலைகள் எனும் கரங்களால் நமது காலை வருடி வருடி ஆதரவு கொடுக்கிறாளே!காயம் பட்ட நமது மனதிற்கு ஒத்தடம் கொடுக்கிறாளே.இவைகளை நினைத்து பார்க்கும் போது அவள் நமது அன்னை அல்லாமல் வேறென்ன நேயர்களே.
      நாம் நமது எண்ண அலைகளை கட்டுக்குள் கொண்டு வந்தால் ஆழ்கடலின் அமைதியை எப்போதும் பெறலாம். ஆராவரிக்கும் அலைகளைப்போல நாம் நமது எண்ண அலைகளை கொண்டு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க இயலாது.
      ஓயாமல் மோதும் அலைகள் என்ன சுகத்தை கண்டது?.அதுபோல ஓயாமல் எண்ண அலைகளை கொண்ட மனமும் நிறைய வடுக்களையும் நிம்மதியின்மையையுமே பெறும். அதனால் நாம் என்ன சுகத்தை அடைந்தோம்?.சிந்தியுங்கள்.
      எண்ண அலைகளை அடக்கி ஆழ்மனதின் அமைதியை நாம் உணர்ந்தால் நமது வாழ்க்கை ஆனந்தம் அடைய தடை ஏது?
    அமைதியான மனமே எப்போதும் ஆனந்தமாக இருக்கும். அமைதியான ஆழ்கடலே அனைத்து ஜீவராசிகளுக்கு அடைக்கலத்தை கொடுப்பது போல.
     ஆனந்தத்தை தேடி கோயில் கோயிலாக சுத்தாதீர்கள்.ஆனந்தத்தை எந்த கோயிலோ மடங்களோ எப்போதும் உங்களுக்கு கொடுக்காது உங்கள் மனதை நீங்கள் கடிவாளம் போல இழுத்து பிடித்து அமைதி அடைய செய்யும் வரை எந்த இடமும் உங்களுக்கு ஆனந்தத்தை கொடுக்காது.உங்கள் எண்ண அலைகளை எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போதே உங்கள் மனதில் நீங்கள் தேடும் இறைவன் அமர்வான்.அதுவரை நீங்கள் இந்த உடலை அலையடிப்பதுதான் மிச்சம் ஆகும்.
   இப்போதே திரும்பி விடுங்கள் அன்பர்களே.மனம் எனும் அலையை அடக்கி ஆழ்மனதில் அமைதியை தேட.
  என்ன நேயர்களே நீங்கள் எண்ண அலைகளை அடித்து துரத்தி விட துணிந்து விட்டீர்கள் தானே.மீண்டும் ஒரு பதிவில் தங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.மிகவும் ஆனந்தம்.😍😃😍🖐️🖐️🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக